பக்கங்கள்

செவ்வாய், 27 டிசம்பர், 2016

தனிமை என்னும் கொடிய நோயை விரட்டுங்கள்!

மனித வாழ்க்கையே கூட்டு வாழ்க்கையில் மகிழ்வதும், குலாவுவதும், குதூகலிப்பதும், கும்மாளம் அடிப் பதும்தான்!

அறிவியல் குறிப்பாக நுண்ணறி வியல், மின்னணுவியல் முதலிய அறிவியலின் வியக்கத்தக்க கண்டு பிடிப்புகளால் மனித குலம் பெரிதும் வளர்ச்சி அடையும் வாய்ப்பைப் பெற்றி ருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மைதான் என்றாலும்கூட, அதன் மறுபக்கத்தையும் நாம் பார்க்கத் தவறிவிடக் கூடாது!

அது சற்று பரிதாபகரமானதுதான்! கைப்பேசி வைத்திருக்கும் குடும்ப உறுப்பினர்கள் பலரும் - குறிப்பாக இளசுகள், பிள்ளைகள், பேரன், பெயர்த்திகள் - சதா சர்வகாலமும் அக் கைப்பேசியுடன்தான் ஒரு நாளில் விழித்திருக்கும் நேரத்தின் பெரும் பகுதியைச் செலவு செய்து, குடும்பத்துப் பெரியவர்களான தாத்தா, பாட்டி, அப்பா, அம்மாவிடம்கூட பேசாமல், கண்கள் பூத்தாலும், கழுத்து வலி கண்டாலும், ‘ஒரே பொசிஷனில்’ அதையே கட் டிக் கொண்டு அலைகிறார்கள். வேத னையும், வருத்தமும் ஏற்படுகின்றது!

நாலு பேர் ஒரு இடத்தில் இருந் தால், உரையாடல் இந்த நாலு பேரில் எவருடனும்இல்லை!மாறாக,வேறு வெளிநபருடனோ,5ஆம்நபரிடமோ தான் சளசளவென்றோ, கலகல வென்றோ உரையாடுகின்றனர்!

நாலு பேரும் நாலு திசை நோக்கி - இவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளுவதே இல்லாத ஒரு விசித்திர சூழ்நிலை!

முன்பெல்லாம்வீட்டில்உணவு சாப்பிடும்போது-வீட்டில்உள்ள கூட்டுக் குடும்பத்தவர் அனைவரும் அமர்ந்து கலகலப்புடன் கலந்துரை யாடிக்கொண்டே உணவு உண்ணும் பழக்கம் இருந்தது.

அதுவும் இந்த கைப்பேசி கலாச் சாரத்தால் காணாமற்போனது!

இதை இளைய தலைமுறை தவிர்க்க வேண்டும். அடிப்படையில் மனிதன் ஒரு சமூகப் பிராணி.

தந்தை பெரியார் அழகான விளக் கத்தைத் தருவார்:

‘‘ஒரு குருவி இன்னொரு குருவிக்குக் கூடு கட்டித் தராது! ஆனால், மனிதன்தான் அடுத்தவனுக்கு வீடு கட்டித் தருகிறான்; துணி நெய்து தருகிறான்; கல்வி கற்றுக் கொடுக்கின்றான்!’’ அப்படியிருந்தும் தனிமை - ஏகாந்தம் என்பது மிகவும் இல்லறத்தாருக்கும், தொண்டறம் புரி வோருக்கும் எப்போதும் ஆகாத ஒன்று!

கலந்து உறவாடுதலும், உரையாடி மகிழ்வதிலும்,  ஒருவருக்கொருவர் மாறு பட்டு, நாகரிகமாக விவாதிப் பதிலும்கூட எத்தனை இனிமை! எவ்வகையான சுகம்!

இதை உணர்ந்தோரே வாழ்வைப் புரிந்தோர்!

தனிமை ஒருபோதும் இனிமை தராது - சிற்சில நேரங்களைத் தவிர!

சிறைச்சாலைகளில் தனியே நம்மைப் பூட்டி வைக்கும்போது, தனித்துச் சிந்திக்க மட்டுமே - நம்மைப்பற்றி நாமே - சுயபரிசோதனை செய்து மெரு கேற்றிக் கொள்ளவேண்டுமானால், இப் படிப்பட்ட தனிமை விரும்பத்தக்கது.

மற்றபடி பல நேரங்களில் அது தண்டனைக்குரியதே!

‘‘யாரும்நம்மைவீட்டில்கண்டு கொள்ளவில்லையே, அலட்சியப்படுத்து கிறார்களே....’’ இப்படித்தான் தனிமை யாக ஒதுக்கப்பட்ட பலரும் மனநோய் பாதிக்கப்பட்டவர்களாகி, மனம் வெந்து நொந்து நோயாளிகள் ஆகி விடுகிறார்கள்.’’

அவர்கள் தங்களது மன அழுத்தத்தை வென்று, தனிமைச் சிறையிலிருந்து  வெளியே வர குடும் பத்தவர்களில்லாவிட்டாலும், நண்பர்கள் உதவிட முன்வரவேண்டும்.

அவர்களிடம் அன்போடு உரை யாடுங்கள்; பாசம் கலந்த பேச்சுகளை பன்னீர் தெளிப்பதைப்போல பேசுங்கள்!

நலம் கேளுங்கள்; நாட்டு நடப்பு களில் சிலவற்றைப் பரிமாறி - அவர்தம் மவுனத்தை, விரதத்தைக் கலையுங்கள்!

கலகலப்பும், சிரிப்பும், கலந்துறவாட லும்தான் இதற்குக் கைகண்ட மருந்து!

வேறு மருத்துவர்களிடம் போகா தீர்கள்! நம்பிக்கைக்குரிய நண்பர்களை நாடுங்கள்! அன்பை விதையுங்கள்; மகிழ்ச்சியை அவர்களின் உள்ளத்தில் அவர்களே அறுவடை செய்ய தூண்டு கோலாக அமையுங்கள்!

காசு, பணம் தரவேண்டாம் - பாச நேசத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள். பலன் அதனால் ஏராளம் உண்டு.

மனித உறவுகள் மாண்பாக மாறும்!

- கி.வீரமணி
-விடுதலை,27.12.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக