பக்கங்கள்

செவ்வாய், 24 ஏப்ரல், 2018

இதோ ஒரு வாழ்க்கைப் பாட நூல்!


உலகப் புத்தக நாள் - உலகப் புத்தக வாரம் - இவற்றை இவ்வாண்டு சிங்கப்பூர் நாட்டின் சிறந்த புத்தகக் கடைகளுக்குப் படையெடுத்து நல்ல - அல்லது எனக்குப் பிடித்த, அறிந்துகொண்டு மேலும் பக்குவப்படக் கூடிய பல நூல்களை வாங்கினேன் - சில நாட்களுக்கு முன்பே! ஒரு சில நூல்களைப் படித்துப் பயன் பெற்றேன் - பாடம் கற்றேன்.

எடுத்துக்காட்டாக 'Man's  Search For Meaning' என்னும் நூலின் ஆசிரியர் Viktor E. Frankl 
மனநலம் மற்றும் நரம்பியல் துறைகளில் டாக்டர் ஆகி, பல மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைகளில் பேராசிரியராக வியன்னா, ஜெர்மனி நாடுகளில் பல ஆண்டு காலம் பணிபுரிந்தவர். இவர் ஒரு யூதர்; அந்தக் காரணத்தால் ஹிட்லர் ஆண்ட காலத்தில் இரண்டாம் உலகப் போரில் அந்த சர்வாதிகாரியின் வெற்றிக் கொடி பறந்தபோது - வரலாற்றின் மிகப் பெரிய கறுப்பு அத்தியாயம் ஒன்று படைக்கப்பட்டு இணைக்கப்பட்டது.

Holo caust  என்ற யூத இன அழித்தல் என்பதுதான் அது. பல லட்சக்கணக்கான யூத இருபாலரையும் கைது செய்து, அவர்களை கடும் பனி, குளிர் உறைப் பிரதேசங்களுக்குப் பல லட்சக்கணக்கில் சிறைச்சாலை (Concentration Camps  Prisons) 
அமைத்து அடைத்தும், அரைப் பட்டினி, கால் பட்டினி உணவு மட்டுமே தந்து மிருகங்களை எப்படி, மனிதர்கள் அடித்து, ஓட்டி வேலை வாங்குகிறார்களோ அப்படிச் செய்த சிறைச் சாலை என்ற சித்ரவதை முகாம்கள் அமைக்கப்பட்டு, வலிவிழந்த, கடுமையான வேலைக்கு ஆகாத யூத வயதானவர்கள், எலும்பும் தோலுமாய் ஆக்கப்பட்டபின், அவர் களின் உயிர்களைப் போக்கிடுவதற்கு அவர்கள் தனி லாரிகளில் ஏற்றப்பட்டு அனுப்பப் படுவார்கள். அவர்களை மனிதநேயமின்றி நடத்திட அவர்களிலேயே உடல் வலிவுள்ளவர்களைத் தேர்வு செய்து, அவர்களை (சிறைச்சாலையில் 'கான்விக்ட் வார்டன்கள்' மற்ற கைதிகளை மேய்ப்பது போல) மேய்ப்பது, கொடுமையான தண்டனைகளை அளித்தல், உணவு கால் வயிற் றுக்கும் குறைவு,  கடுங் குளிர் தாங்கும் போர் வைகளைக் கூட தராமல் தரைகளில் படுக்க வைத்தல், அவர்களிடம் எந்தப் பொருளும் இல் லாதாவாறு அனைத் தையும் பறிமுதல் செய்து சித்ரவதை முகாமுக்கு (Concentration Camp) சென்றவுடன் அத் துணைப் பேர்களும் நிர்வாணமாக்கப்பட்டு, உடைகளைத் தராமல் மொட்டை அடித்து, சிரைத்து விடுவது முதல் வேலையாம்!

இப்படிப்பட்ட கொடு மையான சிறைவாசம் 4லு ஆண்டு காலம் கழிந்தபோதும், தனது வாழ்நாள் லட்சியமான தனது துறையான மன நலத்தில், 'லோகோ தெரப்பி' (Logotherapy) என்ற ஒரு புதுவகை சிகிச்சை பற்றிய ஆய்வு, அதன் கூறுகள், விழுமிய பயன்பற்றி சிந்தித்து, பயனுறு வாழக்கையாக ஆக்கிக் கொள்வது எப்படி என்பதற்கான ஒரு புத்தகத்தை அந்த கொடுஞ்சூழலிலும், குறிப்புகளை எழுதி வைத்துக் கொண்டு எல் லாத் துன்பங்களையும் பொறுத்துக் கொண்டு - வாழ்ந்தவர் டாக்டர் விக்டர் இ.பிராங்கல் ஆவார்!

'லோகோ' (Logo) என்ற கிரேக்கச் சொல்லுக்கு 'அர்த்தம்'  'புரிந்து கொள்ளுதல்' என்பதுதான் அதன் பொருள். வாழ்க்கை என்பது வெறும் சூழ்நிலைகளால் மட்டுமே உருவாகக் கூடியது என்று மட்டுமோ அல்லது வாழ்க்கையில் நாம் இன்பத்தைத் தேடி அனுபவிப்பது மட்டுமே அதன் குறிக்கோள் என்றோ கருதக் கூடாது.

வாழ்க்கை என்பது கஷ்ட, நஷ்டங்கள், துன்பங்கள், துயரங்களின் தொகுப்பும் ஆகும். அதனை ஒரு குறிக்கோளுக்காகவும், துணிவுடன் துன்பங்களை எதிர் கொண்டு, நம்பிக்கையுடன் வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதற்கு, பல்வேறு துன்பங்களை அகற்ற சிகிச்சை முறைகளால் (மனோதத்துவ - அல்லது உளவியல் பூர்வமாக) 'லோகோ தெரப்பி' என்ற புதிய ஆய்வு தத்துவத்தைப் பற்றி இவர் எழுதிய நூல்கள் பிறகு பிரபலமாகியுள்ளன!

அவர் சித்ரவதை முகாம்களில் பட்ட துன்பத்தைவிட, எதிர் கொண்ட மனோதிடம், நம்பிக்கை இவை ஒரு புது வெளிச்சத்தை நமக்குக் கற்றுக் கொடுப்பதாக  இந்த 165 பக்கங்கள் கொண்ட ஆங்கில மொழி பெயர்ப்பு நூல் 100 பதிப்புகளுக்கு மேல் (ஆங்கிலப் பதிப்புகள் மட்டுமே) வெளியாகி உள்ளது. 30 லட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ளன.

1959இல் இதன் முதல் பதிப்பு வெளியாகியது. 15 லட்சம் (யூத) மக்கள் அந்த Holocaust இல் கொல்லப் பட்டனர்.

மேலும் 24 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட நூல் இது! 120 லட்சம் - ஒரு கோடியே  இருபது லட்சம் மொத்தம் விற்பனையாகி உள்ளது.

1902இல் பிறந்த டாக்டர் விக்டர் இ. பிராங்கல் அவர்கள் 1994இல் இறந்தார்!  'நெருக்கடி கால' - மிசா கைதியாக (1976) இருந்து சிறைச்சாலை, சித்ரவதை, அடியைத் தாங்கி, அவமானச் சொற்களைச் செரிமானம் செய்து, சிறையில் எப்படிப்பட்ட ஒரு பயங்கொள்ளித்தன சூழ்நிலை அலைகளால் அடிக்கடி அடித்துச் சென்று, லட்சிய நம்பிக்கையில் மீண்ட எம்மைப் போன்றவர்கள் அனுபவித்த கொடுமை எனும் துன்பம் பத்தாயிரத்தில் ஒன்று அல்ல அந்த யூத சித்ரவதை உயிர்க் கொல்லி முகாம் நிலைகளோடு ஒப்பிடும்போது!

வாழ்க்கை என்பதை துன்பத்தைத் துணிவுடன் எதிர் கொண்டு, போராடி வெற்றி கொள்ளும் களம் என்ற திடசித்தத்துடன், போராடியும், சகித்தும், துன்ப, துயரங்கள் ஏற்றுப் பழகி, 'காப்புக் காய்ந்த' அனுபவத்தைச் சுவைத்தால், துன்பம் எவ்வளவு பெரிதாக நம்மைத் தாக்கினாலும், மாமலையும் ஓர் கடுகாகி விடும் என்பதைக் கற்றுத் தரும் நல்லதோர் வாழ்க்கைப் பாட நூல் இது!

'கற்க அந்நூலை; நிற்க அதற்குத் தக!'

- விடுதலை நாளேடு, 24.4.18

வெள்ளி, 6 ஏப்ரல், 2018

தோழர் பாண்டியன் படைத்த அமுது!



நேற்று முன்னாள் (4.4.2018) ஆய்வறிஞ ரான மானமிகு தோழர் புலவர் பா. வீரமணி அவர்கள், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மானமிகு தோழர் தா. பாண்டியன் அவர்கள் எழுதி முடித்து இம்மாத வெளி யீடாக வந்துள்ள "பெரியார் என்னும் இயக்கம்" என்ற நூலைக் கொடுத்தார். அவர்தான் அந்நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ளார்! அணிந்துரை, மிகவும் சுருக்கமாகவும் செறிவானதாகவும் அமைந் துள்ளது.

நியூ செஞ்சுரி புக் அவுஸ் (பி)லிட் வெளியிட்டுள்ள இந்நூல் 92 பக்கங்கள் கொண்டது, விலையும் குறைவு 80 ரூபாய்தான்.

நேற்று இரவே இதனைப் படிக்க எடுத்து முழுவ தையும் ஒரே அமர்வில் தொடர்ந்து படித்து முடித்தேன். சுவைத்தேன் - கொம்புத்தேன் போன்று சுவைத்தேன்.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பற்றி எத்தனையோ நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளன. என்றாலும் மிகவும் தனித்த சுவையுடனும், கருத்தாழத் துடன், பெரியார் பற்றிய நுனிப்புல் மேயும் பலதரப்பட்ட விமர்சகர்களுக்கும் தக்க பதிலுரைகளும் அடங்கிய, இன்றைய இளைஞர்கள் படித்து முடித்து அசை போட்டுச் சிந்திக்க வைக்கும் அற்புத அறிவுக் கருவூலம்.

ஒரு மாறுபட்ட அணுகுமுறையில் அய்யாவை பல் வேறு கோணங்களில் படம் பிடித்துக் காட்டுவதோடு, அவர் எப்படி ஒரு தனித்த சாதனை செய்த புரட்சியாளர் - ஒப்பாரும், மிக்காரும் இல்லாதவர் என்பதை அவர் தொகுத்துச் சொல்லும் முறை - எடுத்த நூலை கீழே வைக்கவே மனமின்றி தொடர்ந்து படித்து வைக்கின்ற ஈர்ப்பினை உருவாக்குகிறது!

1967இல் அறிஞர் அண்ணா முதல் அமைச்சராகிய பின், தந்தை பெரியார்தம் 89ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் திருச்சியில் கலந்து கொண்டு - 18 ஆண்டு பிரிவுக்குப் பின் ஒரே சாரட் வண்டியில் ஊர்வலமாக வந்தகாலை நிகழ்த்திய வரலாற்றுப் பெருமை வாய்ந்த வாய்மைப் பேருரையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

"ஆங்கிலத்தில் 'Putting Centuries into a capsule' பல நூற்றாண்டுகளை ஒரு சிறு குளிகை மருந்துபோல, உள்ளடக் கியது தந்தை பெரியாரின் தன்னிகரற்ற தொண்டு" என்றார்.

அதுபோல 95 ஆண்டு காலம் வாழ்ந்து, எதிர் நீச்ச லடித்து, அவரது லட்சிய வெற்றிக் கனிகளை அவரே சுவைத்த ஒரு வீர காவியமான  "தந்தை பெரியார் ஒரு தனி மனிதரல்ல, ஒரு சகாப்தம் ஒரு கால கட்டம், ஒரு திருப்பம்" என்றவர் அவரது தலைமாணாக்கர் அறிஞர் அண்ணா.

'மண்டைச் சுரப்பை உலகு தொழும் ' ஒரு ஒப்பற்ற புரட்சியாளர்பற்றி தோழர் பாண்டியன் படைத்துள்ள இந்நூல் ஒரு புதுமை படைப்பு, சீர்மை நிறைந்த சிற்றிலக்கியம் ஆகும். எட்டு வடிவம் என்பதுபோல எட்டு அத்தியாயப் (Octagonal) பரிமாணத்தில் பெரியார் பற்றிய ஓர் உயிரோவியமான கருத்தோவியம் இது!

தோழர் பாண்டியனின் பேச்சு சிறந்ததா? எழுத்து மிகுந்ததா என்ற தலைப்பிட்டு வாதிட்டால் இரண்டும் தான் என்று எந்த நடுவரும் தீர்ப்பளிப்பர்.

எடுத்துக்காட்டாக ஒரே ஒரு அரிய கருத்து முத்து இதோ

"...அவர் உயிருடன் வாழ்ந்த காலம் முழுவதிலும், அவரைப் பலரும் சந்தித்து மடக்கிக் கேள்வி கேட்டு, அவரை பதில் கூற முடியாது தடுக்க முயல பார்த்தனர். ஆனால் கேள்விகளைக் கேட்கத் துண்டியே பதில் கூறும் வகையில், பாடமே கற்பித்து வந்த பேராசான்தான் தந்தை பெரியார். அவரது மறைவுக்குப் பின் அவரது குரல் கேட்பது இல்லை ஆனால், அவருக்குப் பதிலாக விஞ்ஞானிகள் அவர் கூறிய அரியக் கருத்துக்களை நிறுவிக் காட்டி வருகின்றனர்.

விஞ்ஞானம் மனிதனை வளர்க்கும் பாதை ஆகும். ஏற்றுக் கொள்பவர்களை, விஞ்ஞானம் வளரும்போது அவர்களையும் வளர்க்கும். அதை ஏற்காவிட்டால், விஞ்ஞானம் அத்தகையோரை உதறித் தள்ளி விட்டு, முன்னேறிச் செல்லும்.

எதிர்த்து நிற்போரை, விஞ்ஞானம் மிதித்து நசுக்கி விட்டு அது தன் வழியே செல்லும். ஏனெனில், விஞ்ஞானம் அறிவை அடிப்படையாகக் கொண்டது.  அந்த விஞ்ஞானத்தைத் தன் அறிவுக்கான கைத்தடியாய் பிடித்தவர் பெரியார்.

எனவே கும்பமேளா கூட்டத்தைப் பார்த்து, பெரியார் தோற்றுவிட்டார் எனும் சிந்திக்க மறுக்கும் சிறியரை மன்னிப்பதே நமக்கு வேலையாகிவிட்டது...."

... என்னே கருத்து. 'Liberation is the record of best thoughts' என்றார் எமர்சன் என்ற அறிஞர்.

'இலக்கியம் என்பது சிறந்த கருத்துக்களின் உயர்ந்த ஆவணம்' என்றார்.

தோழர் பாண்டியன் படைத்த தக்கதோர் அமுது ஓர் இலக்கிய ஆவணம் ஆகும். படியுங்கள், பயன் பெறுங்கள்!

- விடுதலை நாளேடு, 6.4.18