பக்கங்கள்

சனி, 1 ஜூன், 2024

அனைவரும் வெல்ல வேண்டிய மூன்று எதிரிகள் (1,2.3)

அனைவரும் வெல்ல வேண்டிய மூன்று எதிரிகள் (1)

 அனைவரும் வெல்ல வேண்டிய மூன்று எதிரிகள் (1)

2a

மனிதர்களாகிய நமக்குள்ள பெரிய வாய்ப்பு ஆறாம் அறிவாகிய  "பகுத்தறிவு" என்ற சிறந்த தனித்தன்மை அறிவாயுதம்!

அதன் காரணமாக அறிவியல்- தொழில் நுட்பப் படைப்பாற்றலில் மனிதர்கள் வரலாற்றுப் பெருமைக்குரிய சாதனையாளர்களாக மாறி, நிலைத்து என்றும் வாழுகின்றனர்!

அவ்வளவு பெருமை வாய்ந்த மனிதர்கள்  - அவர்கள் வெல்ல வேண்டிய முக்கிய எதிரியை சரியாக அடையாளம் காணவே தவறக் கூடாது.

இத்தகைய மனிதர்களின் எதிரிகளை வெளியில் அவர்கள் தேட வேண்டாம்; சற்று அமைதியாக தனித்து அமர்ந்து, சிந்தித்துப் பார்த்தால் அவை புலப்படும்.

உண்மை எதிரிகள் - அல்லது பதுங்கியுள்ள எதிரிகளான அவர்கள் ஏவுகணையாகி அதே மனிதர்களை அழிக்கப் பயன்படும். எதிரிகளை சரியாக அடையாளம் கண்டுவிட்டால் போரின் வெற்றி அய்ம்பது விழுக்காடு உறுதியாகி விடுவது உறுதி!

அந்த மூன்று எதிரிகளை வெளியில் தேடாதீர்கள், உங்களுக்குள்ளேயே 'திரிசூலம்' போன்று அந்த மூன்று எதிரிகள் உள்ளனர்.

(1) தன் முனைப்பு 

(2) பொறாமை

(3) புகழ் வேட்டை

தனி வாழ்க்கையிலும் சரி, பொது வாழ்க்கையிலும் சரி இந்த மூன்று எதிரிகளை வென்று விட்டால் அவர்கள் வெற்றி பெற்ற மனிதர்களாக உயர்ந்து நிற்பது உறுதியிலும் உறுதி!

முதல் எதிரி - நமக்குள்ளே கிருமிபோல ஊடுருவி நம்மையறியாமலேயே நம்மை வீழ்த்தும் எதிரிதான் இந்த தன்முனைப்பு (Ego) என்ற நம் எதிரி!

தன்னை எதிலும் முன்னிலைப்படுத்தி, தகுதிக்கு மேல் பெருமை அல்லது பதவிகள், பொறுப்பிற்கு வர வேண்டும் என்று நினைப்பவர்கள் அது 'கணவன் - மனைவி'யாக இருந்தாலும், நண்பர்கள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும்  வளர்ந்து வருகிறவர்கள் ஆனாலும் சரி, தன்னுடைய உழைப்பும், நாணயமும் தன்னை எப்போதும் உயர்த்தும் என்று எண்ணி நிம்மதியாக இல்லாது -  குறுக்கு வழியில் 'பரமபத விளையாட்டு' விளையாட முனைந்தால்...  (இதை ஆங்கிலத்தில் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்துள்ள - Snake and Ladder - 'பாம்பும் ஏணியும்' விளையாட்டு என்றும் கூறுவர்). ஏணியில் திடீரென்று ஏறி உயர நினைத்து 'நானே அறிவாளி', 'நானே ராஜா', 'எனக்கே எல்லாம்' என்ற அகம்பாவத்தினால் உந்தப்படும் பலர் "பாம்பு கடித்து" கீழே வர வேண்டியதாகி விடும். மனிதர்கள்  இப்படி வீணே தேவையற்ற இழப்புகளைத்தான் சந்தித்து சரிந்து போகிறார்கள்!

உழைப்பும், உண்மையும் எப்போதும் நம்மை உயர்த்தவே செய்யும். சிற்சில நேரங்கள் இதற்குக் காலதாமதம் ஆனாலும், நிச்சயம் என்றோ ஒரு நாள் அது வந்தே தீரும். வராவிட்டால் தான் என்ன? நம் மனத் திருப்திக்கு நாம் உழைத்துக் கொண்டே இருந்தால் அதன் பலன் கனிந்து நமக்குக் கிடைக்காவிட்டாலும்   நாமடையும் இன் பத்திற்கு ஈடு இணை உண்டா? மனித மகிழ்ச்சிக்கு அடிப்படை திருப்தியும் நிம்மதியும்தானே!

2) பொறாமை என்ற எதிரியைவிட மிக மோசமான எதிரி மனிதனுக்கு வேறு கிடையாது!

இது எப்படி வருகிறது? ஏன் வருகிறது? என்பதை பல மனோ தத்துவ நிபுணர்கள்கூட கண்டறியவில்லை! முடியவில்லை!

ஓடுகிற சில வாகனங்களில் திடீர் நெருப்புப்பற்றி எரிந்து வாகனத்தை மட்டுமல்ல; உள்ளே இருந்து பயணம் செய்தவர்களையும் பலி கொள்ளு கிறதல்லவா? அதுபோல மின்னல் தாக்கி சிலர் மரணிப்பதில்லையா அவைபோலவே இது! அதை வள்ளுவர் எவ்வளவு நாசூக்காக எடுத்துத் துரைக்கிறார் பார்த்தீர்களா!

'அழுக்காறு உடையவர்களுக்கு அது சாலும்' இந்த ஒரு வரியை நின்று நிதானித்து அசைபோட்டு சிந்தித்துப்பாருங்கள்.

யார்மீது பொறாமை ஏற்படுகிறதோ - அவர்கள் இதில் குற்றம் இழைக்காமலேயே தண்டனைக் காளானவர்களாவது ஒரு வினோதம் போன்ற கொடுமையல்லவா?

என் நண்பர் கார் வாங்கினால், நடந்து அல்லது பேருந்தில் செல்லும் எனக்கு ஏன் 'பொறாமை' வர வேண்டும்?

மகிழ்ச்சி அடைய வேண்டிய முதல் நபர் நானாகத்தானே இருக்க வேண்டும்? காரணம் "அவர் ஏழையாக இருந்தால் என்னிடம் கடன் கேட்பார்; நான் மறுத்தால், எங்கள் நட்பு முறியும் வாய்ப்பு உள்ளதே, இதன் மூலம் அத்தகைய ஒரு இக்கட்டு, இடர்ப்பாடு தவிர்க்கப்படுகிறது" என்று மகிழத்தானே வேண்டும்.

பின் ஏன் வீணான பொறாமை? அது அர்த்தமற்று ஏற்படும் காரணம் கண்டறிய வேண்டுமா?

கண நேர 'ஊடுருவல்' பொறாமை உணர்ச்சி தான்.

(மேலும் வரும்) 

 அனைவரும் வெல்ல வேண்டிய மூன்று எதிரிகள் (2)

2a

'பொறாமை' என்பதற்கு உருவம் கிடையாது; அது ஒரு வகையான நோய். இந்த நோயின் கிருமிகள் மனநல மருத்துவர்களின் ஆய்வில்தான் - அதுகூட 'பளிச்' சென்று தெரியாத வகையில் புலப்படக் கூடும்!

மனிதர்களின் வாழ்க்கையில் சீர்கேடுகள் மலிவதற்கும், செயற்கையான துன்பங்களும், கவலைகளும் மின்னலைப் போல், இடியைப் போல் தாக்குவதுபோலும் இந்த பொறாமை உணர்வு!

இந்த பொறாமை நோய் - மற்ற நோய்களைப் போலவே அனைவருக்கும் அனைத்து இடங் களிலும், நேரங்களிலும் உருவாகக் கூடும்!

'ஒரு மனதாயின' கணவன் - மனைவிக்கும் இடையில்கூட இந்த நோய் புகுந்து இணைப்பு களைத் துண்டிக்கும் அளவுக்குத் தொல்லை தரக் கூடும்.

எடுத்துக்காட்டாக, எத்தனையோ குடும்பங் களில் படித்த மனைவிமார்கள் - அவர்களை - பல ஆண்கள், துணைவியராக, வாழ்விணையராகவே கருதிடாமல் நடத்தும் ஆதிக்க மனப்பான்மை யாளர்களாக இருப்பதால், எஜமான் - அடிமை என்பதைப் பிரதிபலிக்கும் 'கணவன் - மனைவி' என்ற சொற்களையே இங்கு பயன்படுத்துகிறேன்.

அவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் கிடைக்கும் கூடுதல் ஊதியம், கூடுதல் பெருமை  - புகழ் கண்டு பூரிக்க வேண்டிய கணவர்களேகூட, அவர்களை அறியாமல் தன்னைவிட தன் மனைவிக்கு இவ்வளவு புகழா என்று எண்ணிப் புழுங்கிடுவதும், நாளடைவில் அந்தப் புழுக்கம் பல மனப்புண்களையும், அந்தப் புண்களிலிருந்து சில பொறாமைப் புழுக்கள் முழு வடிவம் எடுத்து 'ஆட்கொல்லி' ஆவதும் - வாழ்வு வெறும் கானல் நீர் வேட்டையாவதும்  - நம் கண்முன் கண்ணாலே காணும் காட்சிகள்தானே!

மகிழ்ந்து கொண்டாட வேண்டியவர்களே அதற்கு நேர் எதிரான மன நிலையைப் பெறுவதுடன், தேவையற்ற துன்பத்தைத் தாங்களே வரவழைத்து அல்லல் உறுவதும் கண் முன்னே காணும் அன்றாடக் காட்சிகள் - பல குடும்பங்களிலிருந்து...

"என்னைவிட நீ பெரிய ஆளா?"

"என்னைவிட அதிகம் சம்பாதிக்கிறாயா"

"என்னை அலட்சியப்படுத்திப் பார்க்க வைக்கிறதா?" என்று தாங்களே கற்பித்துக் கொண்ட ஓர் இல்லாத நோயினால், பொல்லாத துன்பத்தை இலை போட்டு அழைக்கிறார்கள்!

என்னே வேதனை வெட்கம்!

தன் முனைப்பு பொறாமையாகவும் மாறிவெடிக்கிறது  - பொறாமையோடு, தனக்கு வராத பெருமை வேறு யாருக்கோ வருவதா என்று ஒரு தவறான எதிர்பார்ப்பு - தப்புக் கணக்கு!

இவை இரண்டையும் சிறிய கோடுகளாக்கி விடும் மிகப் பெரிய மற்றொரு அவலம் - தனி மனிதர்களின் புகழ் வேட்டை!

எப்போதும் எதிலும் தாங்களே 'முன்னால் என்ற பெயர் நாளும் தவறாமல் செய்தி ஏடுகளில் வர வேண்டும் என்பதற்காக கூலி எழுத்தாளர்களை வைத்து அறிக்கை சாம்ராஜ்யம் நடத்தும் அரசியல்வாதிகள்  - கட்சித் தலைவர்கள் பலர் உண்டு!

தற்கொலை செய்ய முயற்சித்து தோற்ற ஒருவர் மீது கிரிமினல் சட்டப்படி வழக்கு விசாரணை வந்தது!

"'என் பெயர் பேப்பரில் வர வேண்டும்' என்ற ஆசையினால் இப்படிச் செய்தேன்" என்று அந்தநபர் நீதிபதிமுன் சொன்னார்!

 இந்தியன் பீன்ல்கோட் (I.P.C.) - இ.பி.கோ. என்ற குற்றவியல் சட்டத்திலேயே இந்த தற்கொலைக்கான தண்டனைபற்றிய ஒரு பிரிவு - ஒரு விசித்திர சட்டப் பிரிவு ஆகும்! எப்படி?

ஒரு குற்றத்தினை செய்ய முயற்சித்தால் சட் டப்படி தண்டனை,  முயற்சியில் வெற்றி - அதாவது தற்கொலை முயற்சி நிறைவேறி விட்டால், எந்தத் தண்டனையும் கிடையாது. காரணம் வெளிப்படை - இறந்தவருக்கு எப்படி தண்டனையைக்  கொடுக்க முடியும்!

வேடிக்கையான சட்டப்பிரிவு! 

ஊடக வெளிச்சம் என்பது தாங்கள் பெறும் புகழ் விளம்பரத்திற்கு முக்கியம் என்பதால் சிலர் வலிய சென்று ஊடகவியலாளர்களின் நட்புற வுக்காக எதையும் செய்வார்கள்!

சட்டமன்ற - நாடாளுமன்றங்களில் தலைவர் களைப் புகழ வார்த்தைக் கோர்வைகளை எழுதிக் கொடுத்து அதை ஒரு  வருவாய்க் களமாகவே ஆக்கிய வேடிக்கையான 'வருவாய்த்துறை'க்கும் கூட நம் நாட்டில் பஞ்சமில்லை. புகழ் வரலாம்; வரட்டும். அது தானே சுயமாக வந்து மூடிய உங்கள் வீட்டுக் கதவைத் தட்ட வேண்டும்.

(மேலும் வரும்) 

 அனைவரும் வெல்ல வேண்டிய மூன்று எதிரிகள் (3)

13

புகழ் வேட்டை என்பது புலி வேட்டையை விடக் கடுமையானது! ஏன் சில நேரங்களில் கொடுமையானதும்கூட!  

பொதுவாக 'வேட்டையாடுதல்' என்பதற்குள் பொதிந்துள்ள பொருளே, தேடிச் சென்று பிடித்துக் கொண்டு வருதல் என்பதுதானே!

தானே வந்தால் தான் அது உண்மையாகவே 'புகழ்!'

இன்றேல் இடையில் வந்தால் 'இகழ்' அது!

தேடிப் பிடித்து வருதல் என்பது கொச்சையாக சொல்ல வேண்டுமானால் ஒருவகை வன்புணர்ச்சி இன்பமாகும்!

'புகழ்' என்பது தானே கனிந்த பழத்தின் ருசியாக இருக்க வேண்டுமே தவிர, மருந்து.. போட்டு செயற்கை முறைகளால் பழுக்க வைத்த விரும்பத்தகாத பழம் போன்று இருக்கலாமா?

தேடி, தானே வரும் புகழ் நிலைத்த புகழ்! செயற்கையாக 'நாமாவளி' பாட வைத்து கேட்டு ரசிக்கும் புகழ் கூலிக்கு மாரடித்தவர்களின் ஒப்பாரியின் எதிர் நிலை உவமையாகும்!

சில கட்சிகள் - திடீர்த் தலைவர்கள் தங்க ளுக்குப் "புகழ்" சம்பாதிக்க சில கூலிப் படைகளை 'கூவும் படைகளாக்கி' சில இடங்களில் "வாழ்க, வாழ்க" முழக்கம் போட்டு கடைசியில் காணாமல் போன செலவுக் கணக்குகள் ஏராளத்தைக் கண்டு சுவைத்தது உண்டா?

நல்ல வேடிக்கை நகைச்சுவைகள் இவை. சிலர் -  போலிப் பட்டங்களை விலைக்கு வாங்கி (200 டாலர் 'டாக்டர்' பட்டங்கள்கூட உலகெங்கும் உள்ள போலிப் பல்கலைக் கழகங்களால் தரப் படுகின்றன!)  அப்படி டாக்டர்களாகும் மன நோயாளிக்கு இறுதியில் மிஞ்சுவது துயரமோ, துன்பமோ தானே!

உண்மையாகவே ஆய்வு மூலம் பெற்ற பட்டங்களின்மீதுகூட சாயம் அடித்து, விஷமத் தனப் பிரச்சாரம் செய்யும் கோயபெல்சின் குருநாதர்கள் இந்த பித்தலாட்டத்தைக் கண்டும் காணாத கனவான்கள்!

'தோன்றிற் புகழொடு தோன்றுக' என்ற குறளைக் கூட சிலர் தவறாக, 'பிறக்கும்போதே புகழுடன் பிறக்க வேண்டும்' என்று பொருளுரை கூறியபோது, பகுத்தறிவாளர்கள் தான், ஒரு குறுக்குக் கேள்வியை கேட்டு சரியான விளக்க வுரையை அக்குறளுக்குத் தந்தார்கள்!

ஒருவர் தோன்றும்போது, - பிறக்கும்போது என்று பொருள் கொண்டால், பிறக்கும்போது ஒருவர் எப்படி புகழோடு பிறக்க முடியும்? வாழும்போதுதானே அவர்தம் சீரிய சிந் தனைகளால், செயல் திறன் - சாதனைகளால் பெருமை, புகழ் எல்லாம் அடைய முடியும்? அதற்குச் சரியான பொருள் "தோன்றிற் புகழ் என, எந்த அவையில், அரங்கில்  நிற்கும்போது அவர்தம் ஆற்றல் என்பது புகழ் ஈட்டித்தரத் தக்க வகையிலான களச் செயலாக அமைதலே காரணமாக வேண்டும்" என்ற பொருள் விளக்கமே சரியான, பொருத்தமான விளக்கமாக இருக்கிறது.

புகழ் வெளிச்சத்தின்கீழ்... (சில விளக்கொளி களைக் கற்பனை செய்து பாருங்கள்)

மற்ற இடங்களில் எல்லாம் பரவி ஒளி விடும் வெளிச்ச விளக்கைச் சுற்றி ஒருவகை சிறு நிழல் வட்ட இருள் போன்ற ஒன்று இருக்கச் செய்யும்!

இதனை எதற்கு, உவமையாக கூறினால் பொருத்தம்? சற்றே எண்ணிப் பாருங்கள்.

பெரிய பெரிய தலைவர்கள், ஆய்வாளர்கள், செயல் திறனால் புகழ் வெளிச்சம் பெற்றவர்களின் அருகில் அவர்களுக்கு உதவியாளராக உள்ளவர்கள்தான் அந்த சிறு வட்ட - வெளிச்சம் பாயாத இருள் பகுதி.

அவர்களில் யார் யார் அவசரப்படாமல் - தன் கடன் தலைமைக்கு உதவுவதே, ஆய்வுப் புலமை அருகில் இருக்க மேலும் கற்று தானே வெளிச்சம்  தரும் விளக்காய் ஆகும் தகுதி பெறும் வரை பொறுமை காத்து நிற்பதே அவர்களின் நிரந்தரப் புகழ் ஈட்டுதலுக்கு - நீடு புகழ் நிலைத்த புகழ் தங்கும் புகழாக அமைந்து தகத்தாய ஒளியுடன் இறங்கி சிறக்கும் தரணி முழுவதும்!

விலை கொடுத்து வாங்கும் புகழ், காலையில் பூத்து மாலையில்கூட அல்ல - மதியத்திலேயே உதிரும் மண மற்ற மலர்போலும் ஆகி விழும்!

எனவே புகழுக்காக கதவைத் தட்டாதீர்கள்!

புகழ் வந்து உங்கள் கதவை தட்டித் திறக்கட்டும்

அதன் பிறகுதானே வாசனையும் நிரந்தரம் ஆகும்  - இல்லையா?

போலி அறிவியலைப் புரிந்து கொள்வீர்!


 போலி அறிவியலைப் புரிந்து கொள்வீர்!

6

பல்வேறு தொடர் பணிகளுக்கிடையிலும் எனது 'இளைப்பாறல்' (Relaxation) பல்வேறு புத்த கங்களைப் படித்துப் புத்துணர்ச்சி பெறுவதுதான்!

இப்போதெல்லாம் புத்தக வாசிப்பு பெருகி வருகிறது என்பது நமக்கு மகிழ்ச்சி தருவதாக இருந்தாலும் - நமது இளைஞர்கள், மாணவச் செல்வங்கள், புத்தகங்களைப் படித்து, தங்க ளுடைய சிந்தனை - செயலாக்கத் திறனை  (Creativity) வளர்த்துக் கொள்வதற்குப் பதிலாக, அளவுக்கு அதிகமான நேரம் இணையத்தில் - அதிலும் குறுஞ்செய்தி, தேவையற்ற அக்கப் போர் - சிலரின் டைரிக் குறிப்பான சுய புராணப் பெருமைப்படலங்கள் மூலம் தங்களது அரிய நேரத்தை வீணடித்து வருவது வேதனைக்குரியது.

நல்ல நூல்களைப் படித்துப் பயன் பெற வேண்டும். 'கசடுஅற கற்பதும் அதன்படி நிற்பதும்' இணைந்து நடந்தால் மனித குலம் மகத்தான ஞானம் பெறுவதோடு, ஞாலமும் பயனுள்ளோரின் கூட்டாகக் காட்சியளிக்கும்.

சென்ற மாதத்தில் நடந்த, தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைபற்றி ஆய்வு செய்த - ஸ்காட்லாந்து பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர் பிச்சைமுத்து அவர்களது அந்நூல் வெளியீட்டு ஆய்வில் கலந்துகொண்டேன்.

அப்போது அந்நூல் வெளியீட்டாளர்களான நிகர் மொழி பதிப்பகத்தார் நண்பர்கள் அ. பிரபா கரன், ஜெ. ஜோன்சன் மேடையில் புத்தகங்களை எங்களுக்கு வழங்கி 'அறிவுக்குளியலுக்கு' வாய்ப் பளித்தனர்.

4

பல அருமையான பயனுறு புத்தகங்கள்

குறைந்த விலை; நிறைந்த சரக்கு மிடுக்கு

அறிவை விரிவு செய்து அகண்டமாக்கும் அற்புத விளக்கங்கள்.

இன்றைய உலகில் குறிப்பாக நம் நாட்டில் சனாதனத் தொற்று பழைமைவாதம், புதிய கோப்பையில், விஞ்ஞான விளக்க போலி 'லேபிள்' ஒட்டப்பட்டு பரப்பப்படும் இன்றைய கால கட்டத்தில் எது அறிவியல்? எது போலி அறிவியல் என்பதை டாக்டர் சட்வா MBBS DA DNB  அவர்களின் "போலி அறிவியல், மாற்று மருத்துவம்  மூடநம்பிக்கை ஒரு விஞ்ஞான உரையாடல்" என்ற புத்தகம் மூலம் அருமையான கருத்துச் செறிவுடன் கூடிய நூலாக உருவாக்கப்பட்டுள்ளது. 120 பக்கங்கள் - 44 தலைப்புகள் - விலை 100 ரூபாய்தான்.

அறிவியல் - Science,  போலி அறிவியல்       - Pseudo Science  என்பனவற்றை  விளக்கி வேறு படுத்திக் காட்டும்.   நிகர்மொழி பதிப்பகத்தாரின் பணி பாராட்டப்பட வேண்டிய அரும்பணி! அறிவுத் திருப்பணி. 'ஏன் இந்நூல்?' என்ற முதல் தலைப்பில் உள்ளவற்றை அப்படியே தருகிறோம்.

படியுங்கள் - பிறகு ஈர்ப்பு தானே வரும்.

"ஏன் இந்த நூல்?"

5

'ஒரு விஞ்ஞான உரையாடலை நிகழ்த்துவோம்'

"நோய்களை எதிர்த்து மனித இனம் தொடர்ந்து பல்லாயிரம் வருடங்களாகப் போராடி வருகிறது. நோய்கள் வருவதற்கான காரணம் என்னவென்று தெரியாமல் மாயா ஜால அமானுஷ்ய கதைகளை நம்பி யிருந்த காலத்தில் இருந்து, எதிர் காலத்தில் என்ன விதமான நோய் ஒரு மனிதனுக்கு வரும் என்று ஒருவரது 'ஜீன்களை' ஆய்வுசெய்து, பிறக்கும் போதே கணிக்கும் மரபியல் விஞ்ஞான உலகுக்குள் நாம் பரிணமித்து வந்திருக்கிறோம்.

இவ்வுலகின் மொத்த மக்கள்தொகை இரு நூற்று அய்ம்பது கோடியாக கி.பி. 1950இல் இருந் தது. அது கி.பி. 2000த்தில் அய்ந்நூறு கோடிக்கும் மேல் உயர்ந்தது. மேலே குறிப்பிட்டுள்ள வெறும் அய்ம்பது ஆண்டுகால இடைவெளியில் உலகின் மக்கள் தொகை இருமடங்காக உயர்ந் தமைக்குக் காரணம் நவீன விஞ்ஞான மருத்துவம் ஆகும்.

குறிப்பாகப் பெரியம்மை, தட்டம்மை, காலரா, தொண்டை அடைப்பான், பொன்னுக்கு வீங்கி, பிளேக், இன்புளூயன்சா முதலிய தொற்று நோய்களானது, தடுப்பூசிகள் மற்றும் இதர பொதுச் சுகாதார நடவடிக்கைகளின் மூலம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதே இவ்வாறான திடீர் மக்கள் தொகை உயர்வுக்குக் காரணமாக அமைந்தது. 

ஜேரட் டைமண்ட் எனும் ஆய்வாளர் எழுதி யுள்ள 'கிருமி, துப்பாக்கி மற்றும் இரும்பு' (Guns, Germs and Steel) எனும் நூலில் 'கிருமிகளின் வழியே பரவும் நோய்கள் உலக வரலாற்றையே தலைகீழாக மாற்றிவிட்டது' என்று குறிப்பிடுகிறார். கிறிஸ்டோபர்  கொலம்பஸ் 1492 இல் அமெரிக்கக் கண்டத்தில் நுழைந்த போது அவரது குழு பல்வகை தொற்று நோய்களையும் சேர்த்தே அமெரிக்கக் கண்டத்தில் நுழைத்தது. விவசாய சமூகமாக ஓரிடத்தில் குவிந்து வாழ்ந்த அய்ரோப்பியர்கள், அமெரிக்கப் பழங்குடிகளுக்கு முன்னரே பல்வகையான பரவும் நோய்களுக்கு எதிரான எதிர்ப்புச் சக்தியைப் பெற்று இருந்தனர். ஆனால், வேட்டை சமூகமாக இருந்த பழங்குடிகள் இந்த எதிர்ப்புச் சக்தியைப் பெற்று இருக்கவில்லை . இந்த ஒரு காரணம் அய்ரோப்பியர்கள் எளிமையாக அமெரிக்கப் பழங்குடிகளை வீழ்த்த ஒரு வாய்ப்பை உருவாக்கித் தந்தது. 

இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 1947இல் முப்பத்து ஒன்று வயதாக இருந்தது. அது 2015இல் அறுபத்து எட்டு வயதாக உயர்ந்துள்ளது. இவ்வாறு நோய்களும், அதற்கு எதிரான விஞ்ஞான மருத்துவமும் மனித இனத்தின் வரலாற்றை மாற்றி எழுதும் வல்லமை பெற்றவையாக இன்றும் உள்ளன.

அதே சமயத்தில் நவீன விஞ்ஞான மருத்துவம் வியாபாரமாகிப் போனது பற்றியும் நாம் ஆழ்ந்த கவலை கொள்ள வேண்டியுள்ளது. சேவைத் துறையில் வியாபாரம் செய்யலாம் என்ற உலக மயமாக்கலின் உபவிளைவு மருத்துவத்தையும் ஒரு வியாபாரப் பண்டமாக மாற்றியுள்ளது. சந்தை பொருளாதாரமே சிறந்தது என்ற ஆபத்தான முதலாளித்துவ கருத்தும் மேல்தட்டு மக்களி டையே விதைக்கப்படுகிறது.

இந்தப் புத்தகத்தின் வழியே நாம் நோய்களின் வரலாறு, விஞ்ஞான மருத்துவத்தின் அடிப்படை, போலி அறிவியல் செயல்படும் விதம், மாற்று மருத்துவம் எனும் நிரூபிக்கப்படாத மருத்துவ முறைகள், அனைவருக்கும் தரமான சுகாதாரம் ஆகியவற்றைப் பற்றி பல்வகை தலைப்புகளில் ஒரு விஞ்ஞான உரையாடலை நிகழ்த்துவோம்."

அறிய வேண்டிய அரிய செய்திகள் அல்லவா?


அறிவியல் வளர்ச்சியும் - அர்த்தமில்லா மூடப் பழக்கமும்!


2a
அறிவியல் மனப்பாங்கு (Scientific Temper) என்பது ஏன், எதற்கு, எப்படி, எப்போது, எதனால் என்ற கேள்விகளைக் கேட்டு வளர்ச்சிக்கு வித்திடுவதேயாகும்!

ஆராய்ந்து அறிந்ததினால்தான் உலகம் இன்று செயற்கை அறிவுத் திறன் (Artificial Intelligence)  வரை வெகு வேகமாக வளர்ந்து உயர்ந்து நிற்கிறது! 

'வெறும் சடங்கு, சம்பிரதாயம், கண்ணை மூடிக் கொண்டு நம்பு, கேள்வி கேட்காதே என்பதே சனாதனம்  - என்றும் மாறாதது; மாறவே கூடாதது' என்பதே அதன் தத்துவம், இயற்கைக்கும், அறிவுக்கும் மாறான ஒன்று.

சிலவற்றினை விஞ்ஞானம் (அறிவியல்) போல் சித்தரிப்பார்கள். அது போலி அறிவியல் (Pseudo Science), உண்மை அறிவியல் அல்ல!

நம்புவது காரண காரியத்தோடு இருக்க வேண்டும் அல்லவா?

காரண காரியம் பற்றிக் கவலைப்படாமலே "என் முன்னோர் - தாத்தா, அவரின் கொள்ளுத் தாத்தா செய்தது. ஆகவே, அதனை நானும் எந்தக் கேள்விக்கும் உட்படுத்தாமல் நம்புகிறேன்; பின்பற்றுகிறேன்" என்றால் அது ஒரு போதும், வளர்ச்சிக் கண்ணோட்டத்தில், பகுத்தறிவின் அடிப்படையில் ஏற்கத்தக்கது அல்ல! 

ஒரு உதாரணம்: தந்தை பெரியார் சொல்வார்: "சந்தைக்குப் போய் விட்டு வருபவன் குளிக்க வேண்டும் என்றால் - அது ஏன்? என்ற கேள்விக்கு, சரியான பதில் சொல்லாமல் 'என் தாத்தா அப்படித் தான் குளித்தார், என் தந்தையார் குளித்தார்; எனவே, நானும் குளிக்க வேண்டும் என்ற அய்தீகத்தைப் பின்பற்றுகிறேன்' என்றால் அது மூடநம்பிக்கை; வெறும் சடங்காச்சாரம்".

மாறாக சந்தையில் பல பேரை சந்திப்போம். தொற்று நோயும் பரவிட வாய்ப்பு அதிகம்; எனவே நம்மைப் பாதுகாத்து நல்வாழ்வு வாழ குளிக்க வேண்டியது அவசியம் என்று ஒருவர் விளக் கினால் அது அறிவு பூர்வமாக ஏற்க வேண்டிய ஒன்றாகும்.

அப்படியே கண் மூடித்தனமாக நம்புவதே 'ஆத்திகம்'; ஏன் எதற்கு என்று கேள்வி கேட்டு விளக்கும் அறிவு பொருந்தியதே என்பதை அறிந்த பின்பு, பின்பற்றுவதே 'நாத்திகம்' என்றும் சரியான விளக்கம் தந்தார்!

எனது தந்தையார் (சி.எஸ். கிருஷ்ணசாமி) வைதீக நம்பிக்கையாளர்; வியாழன் மாலை தையற் கடையை விட்டு வெளியே கிளம்பி பல மணித்துளிகள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருப்பார். பறக்கும் கருடன் கண்ணுக்குப்பட வேண்டும். கன்னத்தில் போட்டுக் கொண்டு ('கிருஷ்ணா, கிருஷ்ணா' என்று கூறிக் கொண்டு) திரும்புவார்!

மின்னல் இடி இடித்தால், "அர்ச்சுனனை மின்னல் ஒளியாள் என்ற பெண் துரத்துகிறாள்.  அந்த சத்தமே இடி, வெளிச்சம்" என்று ஒரு விசித்திர விளக்கம் தருவதோடு, 'அர்ச்சுனா, அர்ச்சுனா' என்று முகவாய் கட்டை, தாடை பக்கம் போட்டுக் கொள்வார்!

அறிவியல் ரீதியாக ஒலி, ஒளி பற்றிய விளக்கம் என்பதைச் சொன்னால் அது அவருக்கு விளங்காது!

எங்கள் வீட்டின் கீழ் பகுதியைச் சுற்றி சுமார் 30, 40 நிமிடங்கள் நாள்தோறும் காலையில் நடைபயிற்சி செய்வேன். எங்கள் வீடு அடையாறு - சென்னை மீனாம்பாக்கம் விமான நிலையத்திற்கு 10, 20 மணித் துளிகளில் செல்லும் தூரம் என்பதால், மேலே பறக்கும் விமானங்கள் தாழ்ந்து, எங்கள் வீட்டு மேலே பறந்து சென்றுதான் விமான தளத்தில் தரையிறங்கும்.

கரோனா கொடுந்தொற்று (Covid 19) கால ஊர் முடக்கத்தினால் எல்லோரும்  வீட்டில் இருந் தார்கள். விமான சர்வீஸ் ரத்து, எந்த விமானமும் பறக்கவில்லை.

ஆனால், அந்த முடக்கத்தை நீக்கிக் கொண்ட போது, சில மாதங்கள் கழித்து உள்நாட்டு, வெளி நாட்டு விமானப் பயணச் சேவைகள் திரும்பவும் செயல்படத் துவங்கின.

அத்தி பூத்ததுபோல ஒரு விமானம் மேலே பறந்தாலே வியப்புத்தான். ஏறத்தாழ ஒரு ஆண்டு இந்த நிலைதான். அதனால் பொருளாதாரச் சீர்கேடு - பின்னடைவு எல்லாம்!

நடை பயிற்சியின்போது, காலையில் குறைந் தது 2 முதல் 3 வரை விமானங்கள் பறக்கின்றன. வானத்தைப் பார்த்து - கன்னத்தில் போட்டுக் கொள்ளாமல் மகிழ்ச்சியுடன்... காரணம் பொருளா தாரம் மீண்டு வருவதற்கு சுற்றுலா - விமானங்கள் சேவையின் தேவை எல்லாம் அதன் வெளிப் பாடுகள் அல்லவா?

என் தந்தை கருடனைப் பார்த்தார். நானோ விமானத்தைப் பார்த்து மகிழ்கிறேன்.

திங்கள், 2 அக்டோபர், 2023

புரட்சிக் கவிஞர் - சில நினைவுகளும் நிகழ்வுகளும் (9)


4

புரட்சிக் கவிஞரிடம் மற்றவர் வியக்கும் ஒரு தனிப் பண்பு - எளிதில் எவரது அய்யத்தையும் தீர்க்கும், விளக்கம் தரும் வியத்தகு கொள்கை விளக்க முறை!

'கேட்டலும் கிளத்தலும்' என்ற 'கேள்வி பதில்' என்று ஏடுகளில் வருவதைப்போல அவர் நடத்திய "குயில்" வார ஏட்டில் வாராவாரம் கேள்விகளுக்கு அருமையான விடையளித்து கொள்கை பரப்பியதோடு, செம்மொழி தமிழில் இதற்கு முன் இருந்த புதையல் போன்ற புதுமையும் புத்தாக்கமும் நிறைந்த கருத்தியல்களை எளிமை யாக எவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்கவும் தவறவில்லை.

அவர் எத்தனை ஆண்டுகள் புதுவையில் அந்த பிரெஞ்சு அரசாங்கத்தில் இலக்கணம் - இலக்கியப் புலியாகத் திகழ்ந்து நல்லாசிரியராக உயர்ந்து தனது அறிவு வளத்தை ஒப்பற்ற கடல் போல் பெருக்கியதோடு அதனைப் பலருக்கும் கற்பித்தும் மகிழ்ந்தார்!

புதுவையில் மாநில திராவிடர் கழகத் தலைவராக, கண்ணாடிக் கடை உரிமையாளர் தோழர் ப.கனகலிங்கம் அவர்கள் இருந்தார்; குடும்பம் முழுவதையும் சுயமரியாதைக் குடும்ப மாக வைத்திருந்த கொள்கையாளர்  - பெரு வணிகரும்கூட! கடலூர் எஸ்.எஸ். சுப்பராயன் - ராஜேஸ்வரி ஆகியோருக்கு நெருக்கமான உறவு என்பதைவிட நெருக்கமான கொள்கை உறவும் கொண்டவர்! பல நிகழ்ச்சிகளில் இரு குடும்பத்தினரும் இணைந்தே வந்து அய்யாவை, அம்மாவை அவர்கள் வந்து சந்திப்பர். கனகலிங்கம் அவர்களது தந்தையார் - பட்டை போட்டிருக்கும் பசவலிங்கனார் என்ற பெரியவர் அய்யாவை அவர்கள் இல்லத்தில் கண்டுபேசி அய்யாவின் பகுத்தறிவு உரை கேட்டு முதுமையில் பட்டையை  கழித்து - கொள்கை மாறி கருஞ்சட்டைக்காரரானார்!

புதுவை செஞ்சாலைத் திடல் அன்று ஒரு பகுதியில் உண்டு. அதன் பக்கத்தில்தான் கழகத் தலைவர் கனகலிங்கம் அவர்களது வீடு - அங்கே தங்கியிருந்தபோது, செஞ்சாலைத் திடலில் ஒரு பொதுக் கூட்டம். அதில் தந்தை பெரியாரும், புரட்சிக் கவிஞரும் என்னையும் அழைத்திருந்தனர். கலந்துகொள்ளச் சென்றேன்.

புரட்சிக் கவிஞரும், தந்தை பெரியாரும் ஒரே மேடையில் அருகருகே அமர்ந்துள்ள படம் (தந்தை பெரியார் தலையில் -பனி காரணமாக ஒரு 'ஸ்கார்ப்!" மூலம் தலையில் கழுத்தைச் சுற்றிப் போட்டிருக்கும் படம் அந்த மேடையில்தான் எடுக்கப்பட்ட படம்!

மேடையில் - 'இராமாயணப் புரட்டு' என்பது தான் கூட்டத்தில் பேசப்படும் தலைப்பு -

நான், பண்டித ஜவகர்லால் நேரு சிறையில் இருந்தபோது தனது மகள் இந்திரா (10,12 வயது குழந்தை)வுக்கு எழுதிய கடிதங்கள் தொகுப்பு ஆங்கில நூலைக் கையில் வைத்து, "இராமாயணம் உண்மையில் நடந்தது அல்ல; அக்கால ஆரிய - திராவிடப் போராட்டத்தை மய்யப்படுத்தி எழுதப்பட்ட ஒரு கற்பனைக் கதை. திராவிடர்கள் என்பவர்கள் இன்று சென்னையிலும், அதன் பகுதி முழுவதிலும் வாழுபவர்களேயாவர்" என்று நேரு எழுதியதைப் பேசியவுடன் (ஆதாரம் காட்டி) பிறகு புரட்சிக் கவிஞர், "சாங்கியம் என்ற தத்துவ நூல்' - 'எண்ணூல்' என்று தமிழில் கூறுவர். அதுபோல சிவஞானபோதம், சுபக்கம், பரபக்கம் என்று இரண்டு தத்துவங்கள் மதங்களையொட்டி நிறைய பாடல்கள் இருக்கின்றன. எடுத்துக்காட் டாக, 'மாயமான்' தன்னை உண்மை மான் என்று நினைத்து போனவன் எப்படி கடவுளாக இருக்க முடியும்? என்று அக்காலத்திலேயே செய்யுள் மூலம் அப்பகுதிகளில் உள்ள பாட்டுக்களை மேடையில் பாடிக்காட்டினார். சிவஞான போதம் என்று கூறினார் என்று நினைவு. கவிஞர் பேசி முடித்தவுடன் அக்கவிதை பற்றி அப்போதுதான் முதன் முறையாக அறிந்ததால் கேட்டேன். அந்த "இந்திரா காந்திக்கு கடிதங்கள்" நூலின் மேல் சாணிக் கலரில் நான் அட்டை போட்டு வைத் திருந்த அந்தப் புத்தகத்தினை வாங்கி அதிலேயே அப்பாட்டினை தனது முத்து முத்தான, அழகான கையெழுத்தில் பொறுமையாக எழுதி எனக்கு மேடையிலே தந்தார் அந்த பெருங்கவிஞர் ஏறு!

பல காலம் பாதுகாத்து வைத்தேன். பிறகு எப்படியோ காணாமற் போனது!

என்னே அறிவுப் பரப்புதலில் ஆர்வம்! இளைய தலைமுறைக்குப் போதிக்கும் 'வாத் தியாராக' எப்படி கவிஞர் இறுதி வரையில் இருந்தார் பார்த்தீர்களா?

அதனால்தான் "பாரதிதாசன் பரம்பரை" என்று ஒன்று இத்தலைப்பில் உருவாகி அவர்கள் அடையாத புகழ் நாளில்லை என்றாக அமைந்து உயர்ந்துள்ளனர் போலும்!

பிரபலமான கவிஞர்கள் உவமைக் கவிஞர் சுரதா, முடியரசன், தமிழ்ஒளி, பட்டுக்கோட்டையார் போன்ற கவிஞர்கள் - பெரும் புலவர் நா. இராமநாதன், ஈரோடு தமிழன்பன் போன்ற ஆய்வறிஞர்களுக்கும் பஞ்சமில்லை. அந்த 'ஊருணி' இன்றும் என்றும் பயன்படுவதும், அறிவுத் தாகம் தீர்க்கும் என்பதிலும் எவ்வித மறுப்பும் கிடையாதே!

புரட்சிக் கவிஞர் - சில நினைவுகளும் நிகழ்வுகளும் (7)(8)

 புரட்சிக் கவிஞர் - சில நினைவுகளும் நிகழ்வுகளும் (7)

3

ஈரோட்டில் கோடை விடுமுறையின்போது தந்தை பெரியார் அவர்களது பழைய ஜங்ஷன் சாலையில் உள்ள, ஒரு பெரிய வீட்டில் (தந்தை பெரியாரது சொத்துக்களில் ஒன்று அது) அதில் ஏறத்தாழ, 2 வாரங்கள் பயிற்சி வகுப்பு - திராவிட மாணவர்களாகிய எங்களுக்கு எடுத்து முடிந்த வுடன் - சுமாராகவும், நன்றாகவும் கொள்கை களைப் புரிந்து பேசும் பக்குவம் படைத்த மாணவர்களில் ஒரு பகுதியினரை அய்யாவும் மற்ற பயிற்சி தந்த அடுத்த நிலை கழகப் பிரச்சாரகர்களும், 3 பேர்களைத் தேர்வு செய்து, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அனுப்பி, பல ஊர்களில் பிரச்சாரம் செய்ய அனுப்புவார்கள்  - ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அந்த மாணவக் குழுவினர் மாவட்ட அமைப்பாளர் முதுபெரும் பெரியார் பெருந் தொண்டரின் ஆணைக்குக் கட்டுப்பாடாக கீழ்பட்டே   மாணவர்கள் நடப் பார்கள்; கழகக் கூட்டங்கள் ஏற்பாடு செய்வதையும் மேற்பார்வை இடுவர்கள். எங்கள் நலம், பாதுகாப்பு எல்லாம் மாவட்ட அமைப்பாளர் பொறுப்பிலேயே விட்டு விடுவர். அவர்கள் மாணவப் பிரச் சாரகர்களான எங்களை சிறப்பாக கவனித்து சுமார் 20,25 கூட்டங்களை நாள் ஒன்றுக்கு ஒன்று வீதம் ஏற்பாடு செய்து பேச வைத்து; பிறகு ஊருக்கு அனுப்புவார்கள்!

அப்படி நான் - 1945 என்று நினைவு - சேலம் மாவட்டம் (பழைய சேலம் மாவட்டம் - பிரிக்கப் படுவதற்குமுன்பு கிருஷ்ணகிரி வரை இந்தப் பக்கம் பரமத்திவேலூர் வரை என்ற பெரிய மாவட்டம்).

பரமத்திவேலூர் அருகே பொத்தனூரில் இன் றைய நூற்றாண்டு கண்ட நம்முடன் மகிழச்சியாக வாழும் அய்யா மானமிகு க.சண்முகம் அவர்கள் இல்லத்தில் தங்கி, பொத்தனூரில் மாலை கூட்டம் முடித்து, அடுத்த நாள் தவிட்டுப்பாளையம் கூட்டம் - காவிரி ஆற்று மணலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது - கட்டிப்பாளையம் (தாடி) கண்பதி, 'ஆச்சிக்கண்ணு' என்றழைக்கப்பட்ட பழனிமுத்து போன்ற முதுபெரும் பெரியார் தொண்டர்கள், பலரும்  இருந்தனர். வேலூர் (பரமத்திவேலூர்) புரட்சிக் கவிஞர் தனது மூத்த மருமகன் புலவர் கண்ணப்பனார் அவர்கள் வீட்டில் தன் மகன் கோபதி (பிறகு மன்னர்மன்னன்) மகள் சரஸ்வதி அம்மையாருடன் தங்கியிருந்தார்.

அவரையும் கூட்டத்திற்கு வந்து பேசுமாறு அழைத்தார்கள் உள்ளூர் கழக ஏற்பாட்டாளர்கள்! மிகுந்த மகிழ்ச்சியுடன் கவிஞர் அவர்களது அழைப்பை ஏற்றார். அப்போது இரண்டு பகுதிகளையும் இணைப்பதற்கு இப்போது இருப்பதுபோல பாலம் கட்டப்படாததால் 'பரிசல்' மூலமே அக்கரைக்குச் செல்ல முடியும்.

ஆற்று மணலில் மாலை கூட்டம்  - 6.30 மணி அளவில் துவங்கி மற்றவர்கள் எல்லாம் பேசி முடித்து விட்டனர். இறுதியில் சுமார் இரவு 9 மணியளவில் புரட்சிக் கவிஞர் பேச ஆரம்பித்தார். நின்று கொண்டு வேட்டியை எடுத்து இரண்டு கால்களிடையே சொருகிக் கொண்டு வலது கைகளின் விரல்களையும் பயன்படுத்தி இடி முழக்கம் செய்கிறார்!

ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம், மூன்று மணி நேரம் ஓடியது. இரவு 12 மணி அளவில்- ஆற்று மணல் பரப்பில் கூடியிருந்த கூட்டத்தின் பெரும் பகுதி வீட்டுக்கு சென்று விட்டனர்! ஒரு சிலரே கேட்கின்றனர்! புரட்சிக் கவிஞர் இடியோசை நின்ற பாடில்லை - நெருப்புத் தெறிக்கும் சீர்திருந்த பகுத்தறிவுக் கருத்துக்கள் எரிமலை என வீழ்ந்து கொண்டே இருந்தது. கேட்டு ரசிக்கத்தான் போதுமான கூட்டம் இல்லை.

அய்யா க.சண்முகமும் மற்ற தோழர்களும் சேர்ந்து ஒரு சீட்டு எழுதி, இரவு மணி 12 என்று நினைவூட்டி பேச்சைமுடிக்க எழுதியபடி துண்டு சீட்டு - அதை அவரது மகன் மன்னர்மன்னன்  மூலம் கொடுத்தனுப்பினர்.

அவர் சிறிது நேரம் கவிஞர் பின்னாலேயே நின்ற வண்ணம் உள்ளார். இவர் ஆவேசத்தில் அவரைக் கவனிக்கவில்லை; அவர் கவிஞர் அவர்களை வருடி 'அப்பா, அப்பா' என்றார்.

கவிஞர் சற்று கோபமாக? பெருத்த குரலில் என்ன? என்றபடியே திரும்பிட - அவர் இரவு 12 மணி ஆகின்றது பெரும்பாலானோர் கலைந்து விட்டனர்.  சிலரே உள்ளனர். எனவே, சீக்கிரம் முடியுங்கள் - என்று கழக முக்கியத்  தோழர்கள் கூறுகின்றனர் என்று தயங்கித் தயங்கிக் கூறினார்.

உடனே திரும்பி, "அட, போறவன் போறான் இருக்கிறவன் இருக்கின்றான். நீ போய் உட்கார்ந்து கேள்! என்று கூறி விட்டு பேச்சை முடிக்காமல் தொடர்ந்து மேலும் ஒரு அரை மணி நேரம் எடுத்து முடித்தார்!

நாங்கள் சிலரே ஒற்றைப் படை எண் 'பட்டாள மாய்' கடைசிவரை கேட்டு - மணற்பரப்பில் ஆழ்ந்து    "தூங்கிய தமிழனை தமிழ் கொண்டு எழுப்பி" விட்டு பிறகு அனுப்பினோம்!

அது ஒரு மறக்க முடியாத அனுபவம். ஒரு சிலர் திருந்தினால் போதும் என்றே கருதிய பிரச்சாரம் அந்நாளில்....

(வளரும்)

வாழ்வியல் சிந்தனைகள் -கி.வீரமணி

 புரட்சிக் கவிஞர் - சில நினைவுகளும் நிகழ்வுகளும் (8)

5

முன்பு சட்டக் கல்லூரியில் படித்த மாணவர் களுக்கென தனி மாணவர் விடுதி (Hostel) கிடையாது. 

சென்னை பிராட்வே சாலையில் 'University Students Club'  - 'யுனிவர்சிட்டி ஸ்டூடெண்ட்ஸ் கிளப்' என்ற அமைப்பு நடத்திய விடுதியில்தான் பெரும்பாலான மாணவர்கள் தங்கிப் படிப்பது வழமை. (சில மாணவர்கள் திருவல்லிக்கேணி அய்ஸ் அவுஸ் அருகில் இருந்த வெங்கடேசுவரா விடுதியிலும் சேர்ந்து படிப்பார்கள்).

நான் சட்டக்கல்லூரியில் சேர்ந்த ஆண்டில் (1957-59) பிராட்வேயிலிருந்த அந்த விடுதியில்தான் தங்கிப் படித்தேன். முதலாண்டு பெரும்பாலும் ஜாதி ஒழிப்புக் கிளர்ச்சி  - போராட்டங்கள் இவை களை அன்னையார் உடன் இருந்து பார்க்கும் பணியை அய்யா, சிறைக்குப் போகுமுன் எனக்கு ஆணையாக இட்டதால் அதிலே செலவு செய்தேன்.

(எனக்குப் பதிலாக நண்பர் கோ. சாமிதுரைதான் வருகைப் பதிவை "Proxy- பிராக்சி" கொடுத்தவர்.)

கடைசி ஒரு வாரத்தில் நானே புத்தகங்கள் வாங்கி ஒவ்வொரு பாடத்தையும் படித்துத் தேர்வு எழுதி F.L. என்ற முதலாண்டில் 5 மார்க்குகள் குறைவானதால் ('ஃபெயில்') தோல்வி அடைந்தேன். அதுவும் ஒரு தேவையான அனுபவமே  - வாழ்க்கையில் என்று தேற்றிக் கொண்டு அடுத்தத் தேர்வில் மூன்று - நான்கு மாதங்களில் - வெற்றி பெற்றேன். எனது நண்பர் கோ. சாமிதுரையும் எனக்குத் 'துணையாக' தேர்வு எழுதும் வாய்ப்பு - 'பெயில்' ஆனதால் பெற்றார். இருவரும் வெற்றி பெற்றோம் - அடுத்த கல்வியாண்டில்  B.L.  வகுப்பில் தொடர்ந்தோம்.

அந்த விடுதி மாணவர் தலைவர் தேர்தலுக்கு எங்களால் நிறுத்தி வைக்கப்பட்ட கோ. சாமிதுரை அவர்கள் வெற்றி பெற்றார். அவரை'Mess Captain'  - என்று அழைப்பார்கள். விடுதி நிர்வாகம் பெரிதும் மாணவர் தலைவர் மேற்பார்வையில் நடைபெறும் முறை அதனால் உண்டு.

இரண்டாம் ஆண்டு (B.L. வகுப்பு மாணவர்கள்) அந்த விடுதியில் தங்கியிருந்த போது, புரட்சிக் கவிஞர் அவர்கள் பிராட்வே அருகில் உள்ள அவரது புத்தக பதிப்பகங்களான பாரி நிலையம் (திரு. செல்லப்பன் அதன் உரிமையாளர்) - செட்டி நாட்டுக்காரர்களே பெரிதும் பதிப்பகச் செம்மல்கள் அப்போதும் இப்போதும்! வணிகத்தைவிட இயல் பான தமிழ்ப் பற்றே அதற்கு முக்கிய காரணம். 

எங்களுடன் விடுதியில் வந்து ஓரிரு நாள்கள் மகிழ்ச்சியுடன் தங்கி, எங்களது அன்பான வரவேற்பினை - உபசரிப்பினை - உரையாடிப் பெற்று திரும்புவார் நமது புரட்சிக் கவிஞர் அவர்கள். பல நேரங்களில் அவருடன் அவரது மருமகன்களில் ஒருவரும் (தோழர் தண்டபாணி என்று நினைவு) உடன் வருவார். எங்கள் அறைகளில் அவர்களைத் தங்க வைப்போம்.

எங்கள் விடுதியில் புலால் உணவை மிகச் சிறப்புடன் தயார் செய்ய - (இயல்பாகவே சிறப் பான சுவையுடன் கூடியது) தனி ஏற்பாட்டினை Mess Captain' கோ.சாமிதுரை மூலம் நாங்கள் செய்விப்போம்.

புரட்சிக் கவிஞர், விடுதியில் உணவு பரிமாறப்படும் பகுதிக்கே எங்களோடு வந்து அமர்ந்து உண்டு கலந்துரையாடிக் கொண்டே சாப்பிடுவார். இவரது கம்பீரமானத் தோற்றம், மிடுக்கான பார்வை, உரையாடல் கண்டு பிற மாநிலத்திலிருந்து வந்து படிக்கும் சட்டக் கல்லூரி மாணவர்கள் விசாரித்துத் தெரிந்து, தனியே அவரிடம் வந்து மரியாதை செலுத்துவர்.

வயதான பெரியவர் சமையல் 'நளன்களில் ஒருவர்! அவருக்குப் பெயரே 'ஆம்லெட் நாயர்' என்பது - அவ்வளவு சுவையாக, விரைவாக அதனை வியந்து சுவைக்கும் வண்ணம் பல ஆண்டுகளாக சமைத்துத் தரும் முதியவர்!

அதையும்  சுவைத்துச் சாப்பிடுவார்!  அருகில் ஓரிரு கிலோ மீட்டர் தூரத்தில்தான் பாரி நிலையப் பதிப்பகம். செல்ல 'ரிக்ஷா' ஏற்பாடு செய்ததுண்டு சில நேரங்களில் - கவிஞருக்கு.

அங்கே 'ஒட்டல் கிரசெண்ட்' என்று ஒரு உணவகம் உண்டு.

சுவையான புலால் வகையறாக்கள் கிடைக்கும். அதில் நாங்கள் மாணவ நண்பர்கள் -  என்னுடன் கோ. சாமிதுரை, வேலூர் வழக்குரைஞர் செந்தாமரை முதலியோர் சென்று கூட்டாக அவருக்கு அன்பு 'விருந்து' ஏற்பாடு செய்வோம். 'மூளை வறுவல்' அதன் ஸ்பெஷாலிட்டி அதைச் சுவைத்து சுவைத்துச் சாப்பிடுவார். விடுதியி லிருந்து எங்களுடன் பேசிக் கொண்டே நடந்தே வருவார். இருமருங்கிலும் நடந்து செல்பவர்கள் சிலர் புரட்சிக் கவிஞரை அடையாளம் கண்டு வணக்கம் செலுத்துவர்!

ஓட்டல் கிரசெண்ட்டில் புலால் உணவு சாப்பிடும்போது, வேடிக்கையாகப் பேசுவார் கவிஞர். "'உன் உடம்புலே எது எது வீக்கா இருக்கோ' அதனை ஈடுகட்ட அந்தந்த பாகம் வாங்கி சாப்பிடு, சரியாயிடும்!" என்பார் சிரித்துக் கொண்டே!

எங்களுடன் உணவு  - விருந்து சாப்பிடுவதில் அவருக்கு ஏற்பட்ட அளவற்ற மகிழ்ச்சியில் மாளும் புரட்சிக் கவிஞர் எங்கள் அறையில் எளிமையாய் தங்கி- பழகி, உடன் உண்ணல் முதலியவற்றை நடத்தியது, எங்கள் வாழ்நாளில் நாங்கள் பெற்ற பெருமை மட்டுமல்ல - எல்லையற்ற உரிமையும் கூட.

('யுனிவர்சிட்டி ஸ்டூடெண்ட்ஸ் கிளப்' விடுதி பிராட்வேயில் பழைய  'ஜனசக்தி' அலுவலகம் எதிரில் தான்!) புரட்சிக் கவிஞருக்கு எங்களிடம் அளவற்ற பாசம் உண்டு!

புரட்சிக் கவிஞர் - சில நினைவுகளும் நிகழ்வுகளும் (5)(6)

புரட்சிக் கவிஞர் - சில நினைவுகளும் நிகழ்வுகளும் (3),(4)

வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

 புரட்சிக் கவிஞர் - சில நினைவுகளும் நிகழ்வுகளும் (3)

2

புரட்சிக் கவிஞர் மாணவர்களிடமும், இளை ஞர்களிடமும் அளவளாவுவதில் மிகுந்த ஆர்வ மும், மகிழ்ச்சியும் கொள்வார்!

புதுமையானதும் வினோதமானதுமான எதனையும் பார்த்தால், சிறு குழந்தையாகவே மாறி விடுவார்! வாயைப் பொத்திக் கொண்டு, கையை ஒருவகையாகக் காட்டி அதிசயமானதை ரசிக்கும் அவரது பார்வையும், உடல் அசைவுகளும் தனி அலாதி ரகம்!

மற்ற நேரங்களில் - மேடைகளில், கர்ஜிக்கும் சிங்கமா இப்படி சிறு குழந்தை ஒரு புது பொம்மையைப் பார்த்துப் பூரிப்பும் மகிழ்ச்சியும் அடைவதுபோல் மாறுகிறார் என்பதை எளிதில் எவராலும் எண்ணிப் பார்க்கவே முடியாது!

சில நேரங்களில் அவர் தனது வியப்பினை வெளியிட்டு, பாராட்டின் உச்சத்திற்கும் சென்று வெளியிடும் அந்த குழைவு நிறைந்த மகிழ்ச்சியை அருகில் இருந்து காணுவோருக்கு ஓர் அரிய அற்புதக் காட்சியேயாகும்!

"..... ஏம்ப்பா, நம்ம இராமநாதன் ஒரு புத்தகம் எழுதியிருக்கான் - என்னைப் பற்றி - என் கவிதை களைப் பற்றி! ("கவிஞரும் காதலும்") என்னம்மா எழுதியிருக்கான்! எனக்கே தெரியலே - நாம் இப்படி எழுதியிருக்கோமான்னு! அப்பப்பா சொல்... எப்படி சொல்றது! நீ படிச்சிருக்கியா? படி அதை.

இந்தப் புள்ள எழுதனதைப் படிச்சப் பிறகுதான் இப்படி நான் எழுதியிருக்கேனான்னு எனக்கே புரிஞ்சுது!"

நெஞ்சத்தின் அடியிலிருந்து பீறிட்டுக் கொண்டு வந்த பெரும் பாராட்டு எப்படிப் பொங்குகிறது பார்த்தீர்களா? 

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மாணவனாக அப்போதே இண்டர்மீடியட் வகுப்பில் (தற்போதுள்ள 11, 12ஆம் வகுப்புக்குச் சமம் அது) சேர்ந்தேன் - அதில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பாடத் திட்டப்படி தமிழ் வகுப்பு உண்டு. அதற்கு மதிப்பெண் உண்டு. புலவர் கா.வெள்ளை வரணானார், பண்டித அருணா சலம் பிள்ளை, புலவர் பூவ ராகவன் பிள்ளை (இவர் சிதம் பரத்திலிருந்து ஒரு மாட்டு வண் டியை அவரே ஓட்டிக் கொண்டு வரும் பெரும் (வைதிக) புலவர்), புலவர் சோமசுந்தரம் பிள்ளை - துறைத் தலைவர் டாக்டர் 

அ. சிதம்பரநாதனார், பண்டித லெ.பெ.கரு. இராமநாதன்  பிள்ளை, ஜி. சுப்ரமணிய பிள்ளை போன்றவர்கள் அருமையான பேராசிரியர்கள். 

அவர்களது தமிழ் வகுப்பு மிகவும் ஈர்ப்பு நிறைந்ததாக இருக்கும். பல்கலைக் கழகப் பாட நூலை - இண்டர்மீடியட் இடைநிலை வகுப்புத் தமிழுக்குரியதைத் தயாரித்து வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு விலைக்கு - வழங்கப்படும்.

அதேபோல் பிரெஞ்சு மொழிக்கும்கூட அதற்குப் பதிலாக எடுக்க விரும்புகிறவர்கள் எடுத் துக் கொள்ளும் உரிமையும் வழங்கப்பட்டிருந்தது.

பிரெஞ்சுப் படிக்க 2, 3 மாணவர்கள் அதிகபட்ச 5 மாணவ  - மாணவிகளே சேர்வர். வாரத்தில் இரண்டு வகுப்புகள் - இரண்டு நாள்கள் "அபெல் குளோவி" என்ற பிரெஞ்சு கற்பிக்கும் பேராசிரியர் புதுச்சேரியிலிருந்து வந்து தங்கிக் கொண்டு  (வருகைப் பேராசிரியர் போல் இருந்து) பாட வகுப்பு எடுத்து சொல்லிக் கொடுப்பார்.

புதுச்சேரிக்கு அடிக்கடி போய் அங்கே பிரெஞ்சு மொழி பேசும் "மிஸி" (சார் என்று பொருள்)களின் பேச்சைக் கேட்டு வியந்தவன் நான். சிறந்த இலக்கிய மொழி பிரெஞ்சு மொழி என்ற பெருமையும் அதற்கு உண்டு!

ஆதலால் இண்டர்மீடியட் வகுப்பில் புதிதாக பிரெஞ்சு மொழி வகுப்பில் சேர்ந்து படித்தால் என்ன? மற்றொரு உலக மொழியை நாம் கற்றிருக்கும் வாய்ப்பும் கிட்டுமே என்று கருதி யோசித்தேன்.

நாள்தோறும் கடலூரிலிருந்து 30 மைல் தொலைவு ரயிலில் சென்று வந்திடும் நிலையில், பிரெஞ்சு வகுப்பினால், வாரத்தில் இரண்டு நாள் 'லெஷர்' வகுப் பிலாத ஓய்வு. அதனால் மற்ற பாடங்களில் அதிக கவனம் செலுத்தவும் அது உதவுமே என்று யோசித்துக் கொண்டே இருந்தேன்.

என்றாலும் அது நம் தமிழ் மொழி வகுப்பை நாமே புறக்கணிப்பதுபோல ஆகாதா என்று எனது மற்றொரு கேள்வியும் மனப் போராட்டத்தை உருவாக்கி விட்டது!

மனக் குழப்பம் - மனப் போராட்டத்தை எப்படித் தீர்ப்பது - என்ன முடிவு காணுவது - என்று சிலநாள் யோசித்துக் கொண்டே தமிழ் வகுப்பிற்கு வழக்கம் போல் சென்று படித்துக் கொண்டே இருந்தேன்.

அப்போது ஒரு நாள் புரட்சிக் கவிஞர், புதுச்சேரியிலிருந்து கடலூர் வழியே வெளியூர் ரயிலுக்குச் செல்ல வந்தவர், முதுநகரில் வந்து வழக்கமாக ஒரு நாள் தங்கினார். நாங்கள் மகிழ்ச்சியோடு வரவேற்று அவருக்குப் பணிவிடை செய்தோம்.

அப்போது கவிஞர் தனியே அமர்ந்து எதோ யோசனையில் இருந்தார். நான் மட்டும்தான் அவருடன் இருந்தேன். திடீரென எனக்கொரு யோசனை! பிரெஞ்சு மொழி படிக்கும் வகுப்பில் சேரும் மனக் குழப்பம் தீர கவிஞரையே ஆலோசனை, அறிவுரை கூறக் கேட்டால் என்ன என்று முடிவு செய்து அவரிடம் பேசினேன்.

என்ன சொன்னார் கவிஞர்?

(தொடரும்)

வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

 புரட்சிக் கவிஞர் - சில நினைவுகளும் நிகழ்வுகளும் (4)

3

புரட்சிக் கவிஞர் தான் கூறினார்: நன்கு ஆழ்ந்து கேட்டார். அதன்பிறகு "உன் முடிவு சரியானதுதான்; பிரெஞ்ச் மொழி இருக்கிறதே - அது இலக்கியத்தில் மிகுந்த மொழி மட்டுமல்ல... உலக சமாதான உடன்படிக்கைகளில் அந்த நாளில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது. பிரெஞ்ச் மொழிதான் - அவரவர்கள் மொழியில் இருந்தாலும்கூட. காரணம் அந்த மொழியில் பல மாற்றப்பட முடியாததாக இருக்கும் வசதியை அது உள்ளடக்கியது; அஃறிணைப் பொருள் என்று நாம் அழைக்கும் கட்டில், மேஜை போன்றவைகள் ஒவ்வொன்றையும் ஆண் பாலா, பெண் பாலா எனப் பகுத்துப் பார்த்து பெயர் வைத்துப் புழங்கும் மொழி" என்று அதன் பெருமையை, முக்கியத்தை, அதனைக் கற்று, அறிவை பெறுவதின் தேவையை எனக்கு சில மணித்துளிகள் பாடம் எடுப்பதைப்போல் சொல்லியதோடு,

"நீ உன் வகுப்பில் சொல்லிக் கொடுக்கும் தமிழைவிட, கழகத்தினரால், நம்ம ஏடுகள், நம்ம பேச்சாளர்கள், எழுத்தாளர்களால் அறிந்து கற்கும் தமிழ் கூடுதலாக - "தூக்கலானது" (இது அவர் மொழி). எனவே நீ தமிழ் வகுப்புக்குப் போய்தான் அதனைக் கற்று வரப்போவதில்லை - அதிகம் தானே கற்றுக் கொள்ள முடியும். அதனால் நீ பிரெஞ்ச் எடுத்துப்படி - புதுச்சேரியில் இருந்து வரும் அந்த பிரெஞ்ச் வாத்தியார் அபெல் குளோவியை எனக்குத் தெரியும்; நானும் அவரைப் பார்த்துச் சொல்லுகிறேன்" என்று பிரெஞ்ச் மொழி வகுப்பில் சேர என்னை மிகவும் ஊக்கப்படுத்தி சேரச் சொன்னார்!

சிறிதும் தயக்கமின்றி நான் பிரெஞ்ச் வகுப்பில் அந்த வாரமே சேர்ந்து, பாட புத்தகங்களைப் பெற்று படிக்கத் துவங்கி விட்டேன்.

என் பிரச்சினைக்குத் தீர்வு எவ்வளவு எளிதாக, எவ்வளவு பெரிய மேதையிடமிருந்து, தமிழ்ப் பெய்த தனிப்பெரும் இமயப் புலவரிடமிருந்து கிடைத்தது என்பது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியைத் தந்தது!

மற்றொரு செய்தி. புரட்சிக் கவிஞருக்கு சிகெரெட் பிடிக்கும் பழக்கம் உண்டு. பிரெஞ்ச் முப்பட்டை வண்ணம் போட்ட நேஷனல் சிக ரெட்டு தான் பிடிப்பார்; ‘நேசுனால்‘ என்ற பிரெஞ்ச் உச்சரிப்பை அவர் கூறுவார்.

கடலூர் வந்து தோழர் பி.ஏ.இளங்கோவன் சக்தி சீயக்காய் தொழிற்சாலையில் தங்கும்போது அவரிடம் பேச, பழக, விருந்தில் கலந்துகொள்ள ஒரு பெரிய “ஜமாவே‘ சேர்ந்து விடும்!

இறைச்சி உணவு, மீன், நண்டு, கோழி - இவைகள் எல்லாம்  விருந்து இலைகளில் அணி வகுத்து அடுத்தடுத்து வரும்.

அவருக்கு மது அருந்தும் பழக்கமும் உண்டு என்பதால் அதனையும் தோழர் இளங்கோ நன்றாக (உயர்வகை) ஏற்பாடு செய்து, பக்கவாத்தியங்களும் இருக்கும். என்னைப் போன்றவர்கள் கண்டும் காணாதது போல் ஒதுங்கி நின்று அல்லது உணவுப் பந்தி வரிசையில் தள்ளி அமர்ந்து உண்போம்.

எவ்வளவு அருந்தினாலும் நிலை தடுமாற்றறமோ, அதிகமான குரல் உயர்த்தியோ, சில ‘குடிமக்கள்' உளறுவதைப்போல எதையுமே அவரிடம் காணவே முடியாது. கண்டதில்லை - அமைதி, புலால் உணவை சுவைத்துச் சுவைத்து நிதானமாக, பொறுமையாகச் சாப்பிடுவார்.

ஆங்கிலத்தில் "Mindfulness" (எதைச் செய்தாலும் அதிலேயே லயித்து ஈடுபாடு கொண்டு செய்வது) - (புத்தரின் அறிவுரைகளில் இதுவே முதன்மை) மனதை முழுமையாக அதற்கே அப்போது கொடுத்ததில் - வேறு கவனச் சிதறல் இல்லாத நிலை - அப்படியே உண்ணுவார் - அளவறிந்தே எல்லாம்!

பரிமாறிய ஒரு நண்பர் - அவரை ‘நாயிடு நாயிடு' என்றே தோழர்கள் கூப்பிடுவார்கள். அவர் மதுவைக் கூடுதலாக அருந்தி விட்டு, கவிஞருக்குப் பரிமாற தட்டை எடுத்து, இலையில்  உணவு வகைகளைப் போடத் துவங்க, ‘போதும்' என்றார் மெதுவாகக் கவிஞர். அவரோ "இல்லிங்கோ - இன்னும் கொஞ்சம்" என்று இளித்தபடி தள்ளாடி மேலும் எடுத்து வைக்க முனைந்தார். 

"ஏய், போதுன்னேன், போதுன்னேன், என்ன பரிவு என் மேலே? அறைவேன், அறைவேன் தெரியுமா?" என்று எச்சில் கையோடு குரலை உயர்த்திக் கூறினார். அவர் - அத்தனை பேரும் நடுங்கிவிட்டனர் - அவரை (நாயுடுவை) மற்றவர் அழைத்துச் சென்றனர். "ஏம்பா இவன் சாதாரண நேரத்தில் இப்படி உபசரிப்பானா? அவன் மேலே தப்பில்லை; அது பேசுகிறது அய்யா!" என்று தலை யில் அடித்துக் கொண்டு சிரித்தபடியே கூறினார். 

- (தொடரும்)