பக்கங்கள்

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2026

செலவில்லாது சிக்கனமான உடல் நலப் பாதுகாப்பு – இதோ! (3)

 

ஒரு முக்கிய உணவுப் பழக்கம், உணவை நாம் எடுத்துக் கொள்ளுவதில்   – சத்துக்காக புரதத்தை  – ‘Protein’ அதிகமாக சேர்ப்பது முக்கியம் என்றாலும் ஊட்டச்சத்து மருத்துவ நிபுணர்கள் அறிவுரைப்படி எப்படி அதை ஒழுங்குபடுத்துவது என்பதை அறிந்து, குறிப்பாக முதுமையாளர்களும் அக்கறையோடு கடைப்பிடித்தொழுக வேண்டிய அறிவுரை ஒன்று.

‘‘ஒரு நாளின் மூன்று வேளை உணவில் பெரும்பாலோர், காலைச் சிற்றுண்டியின்போது புரதத்தினை தவிர்த்து விடுவது, மதியம் அதை கூடுதலாக எடுத்துக் கொள்வது, இரவு உணவில்  – மலை நாட்டில் இரவு உணவு Diningதான் பொதுவாக 6 மணி – 6.30 மணிக்குள் முக்கிய உணவாகப் பழகிப் போன ஒன்று. ஆதலால், அதிகமாக மற்ற இரண்டு வேளைகளில் சேர்க்காத புரதச் சத்தினை (Protein)   கூடுதலாக எடுத்துக் கொள்ளும் பழக்கம் உள்ளது!

நமது உடலுக்கு 1.2லிருந்து 1.6g  வரை அல்லாமல் அதைவிட கூடுதல் எடுத்துக் கொள்ளும் பழக்கத்தில் இருக்குமானால் நல்லது. அதை மூன்று வேளைகளில் சமமாக நிரவி உணவில் அமைத்துக் கொண்டு உணவை எடுப்பது அவசியம் (Equal Distribution)  என்று மருத்துவ நிபுணர்  டாக்டர் ராபின் பெர்சின் (Dr. Robin Berzin M.D.) குறிப்பிடுகிறார். அந்த அம்மையார் மேலும் கூறுவதாவது: ஒவ்வொரு உணவிலும் ஓர் உச்ச வரம்பை நிர்ணயித்துக் கொண்டு 30 முதல் 35 கிராம் புரதச் சத்தினை சேர்த்து, சம விநியோகமாக்கி விடுவது அவசியம் என்கிறார்!

இரவிலேயே பெரும் அளவுக்கு, புரதச் சத்து மிகுந்த இரவு சாப்பாட்டை (Dinner) மற்ற இரண்டில் சமமற்று கூடுதலாகவும்,  குறைவாகவும் சாப்பிடுவது விரும்பத்தக்கதல்ல; காரணம் இது நமது தசைகளுக்கும், ‘மெட்டபாலிசம்’ என்ற உடலின் வளர்ச்சிக்குமான கெமிஸ்ட்டிரிக்கு – செரிமானத்திற்கு சரியானதாக அமைய முடியாது என்று நம்மை எச்சரிக்கை செய்து ‘ஜெர்னல் ஆஃப் நியூட்டிரிஷன்’ (Journal of Nutrition) என்ற ஆய்வு ஏட்டில் 2014லேயே எழுதியுள்ளது – சுட்டிக் காட்டப்படுகிறது.

மற்றொரு முக்கியச் செய்தியையும் டாக்டர் பெர்சின் அம்மையார் குறிப்பிடுகிறார், ‘‘‘மெனோபாஸ்’ என்ற ஒரு பருவம், பெண்களுக்கு (நடு வயதில் அல்லது சற்று கூடுதலான வயதில்) மிக முக்கியம். அப்போது அவர்கள் உடலால் இளைத்து, மனதால் களைத்து, சிற்சில திடீர் கோபதாபங்கள் உருவாவது தவிர்க்க முடியாத நிலை என்பதால், அப்போது  அவர்கள் மூன்று வேளை உணவில் இந்த புரதச் சத்தினை  சம நிலையில் எடுத்துக் கொள்ளுவது முக்கியம்’’ என்று அறிவுறுத்துகிறார்! ஏனென்றால் அந்தப் பருவத்தில் ஈஸ்ரோஜன் (Estrogen)  மாற்றம் அடையும் கால கட்டமாகும்.

அந்த வயது அளவு வருகின்ற (அதாவது ‘மெனோபாஸ்’ – மாத விடாய் நிரந்தரமாக நின்று போகும்) உடல் பருவம் – இளமைக்கும், முதுமைக்கும் இடைப்பட்ட வாழ்வின் ஒரு கால கட்டம் என்பதாகும்.   இதில் மகளிர் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது முக்கியம் என்கிறார் டாக்டர் பெர்சின் அவர்கள்!

எனவே ‘‘ஒவ்வொரு வேளையும் 30 கிராம் புரதச் சத்து விதி (’30 Gram Rule’) என்பதை நிரவி உணவை அமைத்துக் கொள்ளுவது சிறப்பு’’ என்று அறிவுறுத்துகிறார் அவர்!

மேலை நாட்டு வழமைப்படி அவர்கள் உணவை மய்யப்படுத்திய கருத்துப்படி,

காலை ‘கிரீக் தயிர்’ (Greek yogurt), முட்டைகள் (இரண்டுகூட), மதிய உணவுக்கு கோழிக் கறியோடு,  அதுபோல இரவு உணவு மூன்றாவது வரிசைக் கட்டமாகட்டும் என்கிறார்.

III. அடுத்து பொதுவாக நாள் ஒன்றுக்கு 10,000 அடிகள் என்ற இலக்கு (இது வயதுக்கு ஏற்ப மாறக் கூடும் – மூத்த முதியவர்களுக்கு இதுபொருந்தாது!)

(இம்மாதிரி சில விதிகள் பெரிதும் வணிக நோக்கத்தில் செய்யப்பட்டது என்பது இப்போது பரவிடும் புதிய சிந்தனையாகும்).

‘‘உணவுக்குப்பின் ஒரு பத்து 10 நிமிட பொடி நடையால் உணவில் – செரிமானமுண்டாகும் – ரத்தத்தில் சர்க்கரை  அதிகம் (Blood Sugar) ஏற்படுவதைத் தடுக்க உதவும்’’ என்கிறார் மருத்துவ ஆய்வாளர்.

அந்தப் படிக்காக  நடைப்பயிற்சி (அதிவேகம் தேவையில்லை) உணவில் ஏற்படும் குளுக்கோஸ் – சர்க்கரையாக மாறும் நிலைக்கு இந்த  10 நிமிட நேர இரவு சிறு நடைப் பயிற்சி (உணவு முடித்தபின்) பெரிதும் உதவும்.

‘‘உணவு முடித்து, நேரம் கழித்து 30 நிமிடம் நடைப்பயிற்சி செய்வதைவிட, உடனடியாக நடக்கும் 10 நிமிட  நேர நடைப் பயிற்சி பெரிதும் பலனளிக்கும்’’ என்றார் டாக்டர் பெர்சின் அவர்கள்.

களைப்பையும், சோர்வையும் நீக்க உதவிகரமாக இருக்கும். இன்சுலின் சுரப்பதற்கும் இந்த சிறுநடை பெரிதும் தூண்டுவதாகவும் அமையும். நாளா வட்டத்தில், வெளி நோய்த் தடுப்பாற்றலையும் நமது உடல் பெற்றுக் கொள்ளப் பெரிதும் அது உதவும் என்ற கருத்தும் அதனுடன் வழங்கப்படுகிறது! ‘‘Short post – Meal’’  இதன் மூலம் நற்பலன் விளையும்!

  1. தட்டைக் காலிசெய்யுங்கள்…!
  2. உங்கள் பார்க்கைச் சுற்றி நடந்து செல்லுங்கள் (10 நிமிடம்)
  3. வீடு திரும்பி உங்கள் பணியில்கேளிக்கை சாதனையாளராகத் திகழ்ந்து இளைப் பாருங்கள்!

7000 அடிகள் நடப்பதுஎன்பது ஒரு நல்ல இலக்கு என்றார்!

முதியவர்களும் முடிந்தவரையில்  – அவரது உடல் நிலையைப் பொறுத்து!

உடல் என்ன உத்தரவிடுகிறது – அது முக்கியம் என்பதை மறவாதீர்!

(தொடரும்)

-விடுதலை நாளேடு,4.08.06

வியாழன், 13 ஆகஸ்ட், 2026

செலவில்லாது சிக்கனமான உடல் நலப் பாதுகாப்பு – இதோ! (1)(2)


வாழ்வியல் சிந்தனைகள்

பல நாடுகளில் உள்ள வயதாகும் பலருக்கும், உள்ள ஒரு பெரும் கவலை என்ன தெரியுமா?

ஓய்வூதியத்தில் வாழும் நமக்கு முதுமை அதிகமானால், மருத்துவக் காப்பீட்டு வசதிகளும் குறைவு என்பதே.

அடிக்கடி உடல் நலம் குறைதல் – காரணம் நம் மனம் இளமையாகவே இருக்க வேண்டும் என்று விரும்பினாலும், அதற்கேற்ப உடல் உறுப்புகள் ஒத்துழைக்க வேண்டுமே! அதற்கு மருத்துவர், மருந்துச் செலவினங்களும் அதிகரிக்கும். முதுமையில் – தற்போதுள்ள வேகமான வாழ்க்கை முறையில்,  முந்தைய நாள்களைப்போல குடும்பத்தில் எல்லோரும் கலகலப்பாக அமர்ந்து பேசி மகிழும் வாய்ப்பு நாளும் குறைந்து வருகிறது!

இயந்திரம் போல் வாழந்து வருபவர்கள் ஒரு புறம் – தனிமையால் தள்ளப்பட்டு உரையாடக் கூட இயலாமல் ‘அவரவரது பணி அவரவர்களுக்கு!’ என்பதாலும் – அப்படி இல்லாத நிலையில் கூட, ஆளாளுக்கு கையில் வைத்திருக்கும் கைத்தொலைபேசி, கூடிப் பேசிடும் வாய்ப்பைப் பறித்துக் கொண்டு போன சூறைக்காற்றாகிய பரிதாப நிலை!

ஓர் இணையதளத் தகவலை நமக்கு வேண்டியவர்கள் நம் பார்வைக்கு அனுப்பினார். அதில் ஓர் அருமையான மாற்று வழி, ஆலோசனைகளைத் தரும் ஏழு வழிமுறைகள் – புதிய சிந்தனைகள் தரப்பட்டுள்ளன. (சில யோசனை பழையன என்றாலும் புதுமை மெருகுடன் புதுச் சிந்தனை நமக்கு அதன் மூலம் கிடைக்கிறது).

மகிழ்ச்சியோடு வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ளுவோமா?

உடல் நலம் பேணுதல் என்றால் பளு தூக்கிப் பழகுதல், கீரை வகைகளைச் சாப்பிடுவது, மன அழுத்தத்தை குறைத்தல் வழிமுறை, சரியான 8 மணி நேரம் தூக்கம் மேற்கொள்ளும் முறை போன்றவைகள் பற்றி அறிவோம்.

ஆனால் ‘ஆயுள் வளர்ச்சி’ என்பது இவற்றை மட்டும் பொறுத்ததல்ல – அந்தத் தூண்களால் மட்டுமே உடல் நலப் பாதுகாப்பு முழுமை அடைந்து விடுவதில்லை.

ஆய்வு செய்த ஆய்வாளர்கள் சிலர் வியக்கத்தக்க சிறு சிறு விஷயங்களை நமக்கு – உடல் நலத்தைக் காக்கவும், ஆயுளைப் பெருக்கவும் கற்று, எளிய மாற்றத்தினைச் செய்வதன் மூலம் அடைய முடியும் என்று நமக்கு நம்பிக்கை மாத்திரையைக் கருணை உள்ளத்தோடு வழங்குகிறார்கள்!

  1. உடல் பற்றி நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய அடிப்படைக் கருத்து ஒன்று.

நமது உடலைப் பாதுகாக்க உணவு, பணிகள், உடற்பயிற்சி மற்றும் அவ்வப்போது நோய் போக்கிகளாக மருந்துகள் என்று உடல் நலத்தைப் பேணும் ‘Health’ – நலவாழ்வு என்பது எவ்வளவு முக்கியமோ,  அதைவிட முக்கியம் நமது உடலில் அந்தந்த உறுப்புகள் அவ்வவற்றின் பணிகளைத் தடையில்லாமல் செய்து அதன்மூலம் நமது உடலில் ஏற்படும் வளர்ச்சிக்குரிய என்சைம்களின் பங்களிப்பு – அவற்றின் பயன் ஒருவகை Body Chemistry – உடலில் ஏற்படும் ரசாயன மாறுதல் வெகு முக்கியமானது.

இதையேதான் மெட்டபாலிக் ஹெல்த் (Metabolic health) என்று கூறுகிறார்கள் மருத்துவர்கள். மருந்துகள் மூலமும், மற்ற வகைகள் மூலமும் பாதுகாப்பது ஒரு வகை என்கின்றனர். இது மிகவும் முக்கியம்.

‘Prevention is better than cure’ – சிகிச்சையை விட முன்தடுப்பு முக்கியம், அதற்குத் தேவையே ஏற்படாத அளவுக்கு உடல் உறுப்புகள் இயற்கையாக அவற்றின் பணிகளைத் தடுப்பு ஏதுமின்றி சிறப்பாக அமைவதே!

“வந்தபின்’ என்பதைவிட ‘வருமுன்னரே’ என்பது Metabolic health care மூலமே எளிதாகும்.

இம்முறை உடல் நலம் பேண அடிப்படை யானதும் தேவையானதும் ஆகும்.

உடலின் நோய்த் தடுப்பாற்றலை வளர்த்துக் கொள்ள ‘Physical Immunity’ என்பது மிக மிக அவசியமாகக் கண்காணிக்கப்பட வேண்டிய தாகும்.

‘கோவிட்-19′ ஏற்படுத்திய படுபயங்கர மரணங்களில் இருந்து தப்பித்தவர்களுக்கு அதற்கான  முக்கிய காரணமாகத் திகழ்ந்தது அவர்களது உடலின் நோய் தடுப்பாற்றல் சக்தியேயாகும்.

அதற்கு Metabolic health முக்கியம். அதனைச் சீர்படுத்தி சிறப்பாக வாழவும், அவை செலவில்லாதவைகளாகவும் நமது மன உறுதியுடன் அந்தச் சின்னச் சின்ன விஷயங்களைப் பின்பற்றுவதன் மூலமே சாத்தியப்பத்தலாம் எளிமையாக!

(தொடரும்)

- விடுதலை நாளேடு, 12.08.2026

எளிய வாழ்வே என்றும் இனிமை (2)


பல்கலைக் கழகத்தில் இடைநிலை வகுப்பு படிக்கும்போது, எனது  ஆங்கிலப் பாட புத்தகம் ஒன்றில் இடம் பெற்ற ஒரு கதை.மனிதனின் பேராசைக்கு மிக விளக்கம் தந்த பாடம் – ரஷ்ய அறிஞர் லியோ டால்ஸ்டாய் அவர்களது சிறுகதை…

‘ஒரு மனிதனுக்கு எவ்வளவு நிலம் (காணி) தேவை?’ என்ற தலைப்பில் (How much land does a man require?)

ஒரு நாட்டின் அரசர் ஓர் அறிவிப்பு தருகின்றார்.

காலை சூரிய உதயம் முதல் மாலை சூரியன் மறையும் வரை, எனது நாட்டில் நிலங்களைச் சுற்றிச் சுற்றி அயராமல் ஓடுபவருக்கு அந்த நிலப்பரப்பு முழுவதும் இலவசமாக தரப்பட்டு, உரிமையாக்கப்படும் என்ற தண்டோரா போட்டு அறிவிக்கச் செய்தார்.

பேக்காம் என்ற ஒரு (ரஷ்ய) விவசாயி இதைக் கேட்டு மகிழ்ச்சியுடன் மற்றவர்களோடு சேர்ந்து ஒடத் தொடங்கினார். பலரால் முடிந்தஅளவு ஓடி முடித்துக் கொண்டனர்; ஆனால் பேக்காம்  ‘அதிக அளவு பரப்பு நமக்கு கிடைக்க, நிறுத்தாமல் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருந்தால் மேலும், மேலும் அதிகப் பரப்புள்ள நிலத்தைப் பெறலாமே’ என்ற பேராசையில் தண்ணீர்கூட அருந்தாமல் மாலை வரைஓடி, சூரியன் மறையும்போது ஓடுவதை நிறுத்தியவுடன், கீழே சாய்ந்து விட்டார்.

எல்லோரும் கைதட்டினர்; அந்த வெற்றி வீரனை எழுப்பிவிட நடுவர் சென்றார். மூச்சுப் பேச்சில்லை; மரணம்தான் அவருக்குக் கிடைத்த பரிசு!

அவரை 6 அடி நிலத்தில் ஒரு குழி தோண்டி புதைக்கிறார்கள் – துக்கத்துடன்!

இப்போது சொல்லுங்கள் விடையை!

ஒரு மனிதனுக்கு எவ்வளவு தேவையான நிலம்?

அவன் ஓடி ஓடிச் சேர்த்த நிலமா? ஆறடி மண்ணா?

வாசக நண்பர்களே,

அதுகூட பழைய கதை. இப்போது அந்த ஆறடி கூடத் தேவையில்லை! எரித்த பிறகு கிடைக்கும் சாம்பலை நம்பிக்கையாளர்கள் சிலர் ‘‘அஸ்தி’’யாகச் சின்ன பாத்திரத்தில் வைத்து அவற்றை கும்பிடுகின்றார்.

பகுத்தறிவுவாதிகளோ, அதற்கும் தேவையின்றி மருத்துவமனைக்குப் பயன்படுவதற்கு மருத்துவர் களுக்கு பாடக் கருவியாகத் தங்கள் உடலை நன்கொடை வழங்குகின்றனர்!

1976இல் மிசா கைதியாக சென்னை சிறைகளில் நான் இருந்தபோது, பல ஆயுள் தண்டனைக் கைதிகள்  – எங்களுக்குச்சேவை செய்யும் வகையில் பழகுவார்கள்; அவர்களில் கோவில்பட்டியைச் சார்ந்தஒரு பெரியவர் என்னிடம் புத்தகங்களைப் பெற்று, படித்து விட்டு, திரும்ப நன்றிகூறி கொடுப்பார். பண்புடன், பணிவுடன் நடந்து கொள்வார். ‘சிறை மொழியில் காணிக்கை வார்டன்’  – ‘Convict Warden’ என்ற சொல்லின் மருவு அது!

நான் ஒரு நாள் கேட்டேன்… ‘‘ஏங்க நீங்க இவ்வளவு நல்ல மனிதராக இருப்பதை என்னால் தெரிந்துகொள்ள முடிகிறது… பின் எப்படி, ‘என்ன குற்றம் செய்து  கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றீர்கள் என்று சொல்ல முடியுமா?’’ என்று கேட்டேன்.

அதற்கு அவர் சொன்னார் ‘‘எல்லாம்  ‘க்ஷணநேரக் கோபம்’ தான்! என் மனைவியைப்பற்றி ஒருவன் என் முன்னாலே இழிவுச் சொல் சொன்னதால் வந்த கோபம், ஆத்திரத்தினால் குத்தி விட்டேன்;  செத்து விட்டான்’ என்ற கதையை கண்ணீர் ‘பொலபொல’வென விழும் நிலையில் கூறினார். அதன் பிறகு திருக்குறளை இங்கே வந்து படித்து வருகிறேன்’’ என்றார்.

இப்படிப் பல. எனவே நமது இன்பமும், துன்பமும் நமக்கு நாமே உருவாக்கிக் கொள்ளும் மனநிலையைப் பொறுத்ததே!

தீதும் நன்றும் ‘பிறர் தரவாரா’. எனவே மூன்று ‘‘நஞ்சுகளை’’ முறிப்பதற்கு முயன்று பாருங்கள். நானும்கூட முயன்று கொண்டே இருக்கிறேன். மறந்து விடாதீர்கள்; அதே சமயம்

கோபப்படுவதில்கூட இரண்டு வகை உண்டு.

தேவையான கோபம் (நியாயமான கோபம்)

தேவையற்ற கோபம் (அர்த்தமற்ற கோபம்)

ஒரு மனிதனின் நியாயங்கள் அநியாயமாகப் பறிக்கப்படும்போது,  அது தனி மனிதக் கோபமாக இல்லாமல் சமூகக் கண்ணோட்டத்தில் இருக்கும் அநியாயங்களை எதிர்க்கும் சமூகக் கோபமாக உருமாறினால், அதைவிட மனித சமூகத்திற்கு வேறு விடியல் ஏது?

யோசியுங்கள்!

 - விடுதலை நாளேடு, 13.08.2026

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2026

எளிய வாழ்வே என்றும் இனிமை (2) -ஆசிரியர் கி.வீரமணி

 

பல்கலைக் கழகத்தில் இடைநிலை வகுப்பு படிக்கும்போது, எனது  ஆங்கிலப் பாட புத்தகம் ஒன்றில் இடம் பெற்ற ஒரு கதை.மனிதனின் பேராசைக்கு மிக விளக்கம் தந்த பாடம் – ரஷ்ய அறிஞர் லியோ டால்ஸ்டாய் அவர்களது சிறுகதை…

‘ஒரு மனிதனுக்கு எவ்வளவு நிலம் (காணி) தேவை?’ என்ற தலைப்பில் (How much land does a man require?)

ஒரு நாட்டின் அரசர் ஓர் அறிவிப்பு தருகின்றார்.

காலை சூரிய உதயம் முதல் மாலை சூரியன் மறையும் வரை, எனது நாட்டில் நிலங்களைச் சுற்றிச் சுற்றி அயராமல் ஓடுபவருக்கு அந்த நிலப்பரப்பு முழுவதும் இலவசமாக தரப்பட்டு, உரிமையாக்கப்படும் என்ற தண்டோரா போட்டு அறிவிக்கச் செய்தார்.

பேக்காம் என்ற ஒரு (ரஷ்ய) விவசாயி இதைக் கேட்டு மகிழ்ச்சியுடன் மற்றவர்களோடு சேர்ந்து ஒடத் தொடங்கினார். பலரால் முடிந்தஅளவு ஓடி முடித்துக் கொண்டனர்; ஆனால் பேக்காம்  ‘அதிக அளவு பரப்பு நமக்கு கிடைக்க, நிறுத்தாமல் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருந்தால் மேலும், மேலும் அதிகப் பரப்புள்ள நிலத்தைப் பெறலாமே’ என்ற பேராசையில் தண்ணீர்கூட அருந்தாமல் மாலை வரைஓடி, சூரியன் மறையும்போது ஓடுவதை நிறுத்தியவுடன், கீழே சாய்ந்து விட்டார்.

எல்லோரும் கைதட்டினர்; அந்த வெற்றி வீரனை எழுப்பிவிட நடுவர் சென்றார். மூச்சுப் பேச்சில்லை; மரணம்தான் அவருக்குக் கிடைத்த பரிசு!

அவரை 6 அடி நிலத்தில் ஒரு குழி தோண்டி புதைக்கிறார்கள் – துக்கத்துடன்!

இப்போது சொல்லுங்கள் விடையை!

ஒரு மனிதனுக்கு எவ்வளவு தேவையான நிலம்?

அவன் ஓடி ஓடிச் சேர்த்த நிலமா? ஆறடி மண்ணா?

வாசக நண்பர்களே,

அதுகூட பழைய கதை. இப்போது அந்த ஆறடி கூடத் தேவையில்லை! எரித்த பிறகு கிடைக்கும் சாம்பலை நம்பிக்கையாளர்கள் சிலர் ‘‘அஸ்தி’’யாகச் சின்ன பாத்திரத்தில் வைத்து அவற்றை கும்பிடுகின்றார்.

பகுத்தறிவுவாதிகளோ, அதற்கும் தேவையின்றி மருத்துவமனைக்குப் பயன்படுவதற்கு மருத்துவர் களுக்கு பாடக் கருவியாகத் தங்கள் உடலை நன்கொடை வழங்குகின்றனர்!

1976இல் மிசா கைதியாக சென்னை சிறைகளில் நான் இருந்தபோது, பல ஆயுள் தண்டனைக் கைதிகள்  – எங்களுக்குச்சேவை செய்யும் வகையில் பழகுவார்கள்; அவர்களில் கோவில்பட்டியைச் சார்ந்தஒரு பெரியவர் என்னிடம் புத்தகங்களைப் பெற்று, படித்து விட்டு, திரும்ப நன்றிகூறி கொடுப்பார். பண்புடன், பணிவுடன் நடந்து கொள்வார். ‘சிறை மொழியில் காணிக்கை வார்டன்’  – ‘Convict Warden’ என்ற சொல்லின் மருவு அது!

நான் ஒரு நாள் கேட்டேன்… ‘‘ஏங்க நீங்க இவ்வளவு நல்ல மனிதராக இருப்பதை என்னால் தெரிந்துகொள்ள முடிகிறது… பின் எப்படி, ‘என்ன குற்றம் செய்து  கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றீர்கள் என்று சொல்ல முடியுமா?’’ என்று கேட்டேன்.

அதற்கு அவர் சொன்னார் ‘‘எல்லாம்  ‘க்ஷணநேரக் கோபம்’ தான்! என் மனைவியைப்பற்றி ஒருவன் என் முன்னாலே இழிவுச் சொல் சொன்னதால் வந்த கோபம், ஆத்திரத்தினால் குத்தி விட்டேன்;  செத்து விட்டான்’ என்ற கதையை கண்ணீர் ‘பொலபொல’வென விழும் நிலையில் கூறினார். அதன் பிறகு திருக்குறளை இங்கே வந்து படித்து வருகிறேன்’’ என்றார்.

இப்படிப் பல. எனவே நமது இன்பமும், துன்பமும் நமக்கு நாமே உருவாக்கிக் கொள்ளும் மனநிலையைப் பொறுத்ததே!

தீதும் நன்றும் ‘பிறர் தரவாரா’. எனவே மூன்று ‘‘நஞ்சுகளை’’ முறிப்பதற்கு முயன்று பாருங்கள். நானும்கூட முயன்று கொண்டே இருக்கிறேன். மறந்து விடாதீர்கள்; அதே சமயம்

கோபப்படுவதில்கூட இரண்டு வகை உண்டு.

தேவையான கோபம் (நியாயமான கோபம்)

தேவையற்ற கோபம் (அர்த்தமற்ற கோபம்)

ஒரு மனிதனின் நியாயங்கள் அநியாயமாகப் பறிக்கப்படும்போது,  அது தனி மனிதக் கோபமாக இல்லாமல் சமூகக் கண்ணோட்டத்தில் இருக்கும் அநியாயங்களை எதிர்க்கும் சமூகக் கோபமாக உருமாறினால், அதைவிட மனித சமூகத்திற்கு வேறு விடியல் ஏது?

யோசியுங்கள்!

-விடுதலை நாளேடு, 11.8.26


திங்கள், 10 ஆகஸ்ட், 2026

எளிய வாழ்வே என்றும் இனிமை (1)

 

வாழ்வியல் சிந்தனைகள்

‘ஜென்’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ள புத்தகத்தினை – ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மிக அருமையாக – தமிழின் தலைசிறந்த மொழியாக்க வல்லுநர் திருமதி நாகலட்சுமி சண்முகம் அவர்கள். ‘எளிமையாக வாழும் கலை’ என்ற தலைப்பில் 2021இல் வெளியிடப்பட்ட (இந்நூலின் ஆங்கிலப் பதிப்பு 2019இல் வெளிவந்தது) நூலை மறுவாசிப்புச் செய்து மகிழ்ந்தேன்.

அன்றாட வாழ்வியல் புத்தரது அறிவுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.  (பின்னால் அவரையே கடவுளாகி வழிபாட்டுக்குரியவராக்கி சடங்கு, சம்பிரதாய சிறைக்குள் ‘பவுத்தம்’ என்ற புத்த மார்க்கத்திற்குள் அடைத்து விட்டனர்.  அதற்கு மூலகாரணம் யார், எது என்பது உலகறிந்த செய்தி).

பெரிதும் தெம்பூட்டும் வகையில் நமது வாழ்க்கைப் பாதை அமைய வேண்டுமானால் அதற்கு பெரிய பெரிய திட்டங்களைத் தீட்டிட வேண்டாம்.

நமது மனதை நாம் சீர்படுத்தி செப்பனிட்டுக் கொண்டாலே போதும்;

அதற்கு முக்கியம் – அடிப்படை தன்னம் பிக்கையாகும்.

‘எளிமையான வாழ்க்கையே நமக்கு என்றும் ஏற்றம் தரும் என்பதை நம்மில் பலரும் மறந்து விடுகிறோம்.

‘படாடோபம்’, ‘பிறர் மெச்ச வாழ வேண்டும்’ என்ற பேைதமை நம்மை அலைபாயும் மனதாக அலைக்கழிக்க வைக்கிறது.

இந்த நூலில் அதன் ஆசிரியர் ஷன்மியோ மசுனோ, ஜப்பானின் 450 ஆண்டுகள் பழைமையான ஜென் புத்தக்  கோவிலின் தற்போதைய  தலைமைத் துறவியாக இருந்து வருகிறார்.

பல பரிசுகளைப் பெற்றுள்ள அவர்  உலகெங்கும் உள்ள பிரபல பல்கலைக் கழகங்களில், குறிப்பாக ஹார்வேடு கிராஜூவேட் ஸ்கூல்  ஆஃப் டிசைன், கார்னெல் பல்கலைக் கழகம், பிரவுண் பல்கலைக் கழகம் ஆகிய   கல்வி நிலையங்களில்  நிகழ்த்திய சொற்பொழிவுகள் குறிப்பிடத்தக்கவையாகும்.

‘‘உங்களுடைய வாழ்க்கை முறையை மாற்றுவது கடினமாக இருக்க வேண்டியதில்லை. அதற்கு உங்களுடைய பழக்கங்களிலும், உங்களுடைய கண்ணோட்டத்திலும் ஒரு சில நுண்ணிய மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டால் போதும்’’.

‘‘அடுத்தவர்களுடைய விழுமியங்களால் நீங்கள் அலைக்கழிக்கப்படாமல் இருக்க முயற்சி செய்யுங்கள்.

தேவையற்ற கவலைகள் உங்களை வதைக்க அனுமதிக்காதீர்கள் – மாறாக, பயனற்ற அனைத்து விஷயங்களையும் உதறித் தள்ளி விட்டு,  மிக எளிமையான வாழ்க்கை வாழ முயற்சியுங்கள்’’ என்கிறார்.

வாசகத் தோழர்களே, நமது எளிமை நமக்கானது. அது விளம்பர வெளிச்சத்திற்குப் பயன்படும் எளிமையாக ஆகவே கூடாது!

இன்றைய நவீன வாழ்க்கைச் சூழலில் நம் வாழ்க்கை,  நாம் முடிவு செய்து, வாழ்ந்து காட்டும் வாழ்க்கையாக இல்லாமல், பெரிதும் ‘பிறருக்காகவோ’, ‘ஊருக்காகவோ’, ‘உலகத்திற்காகவோ’ நம்மை, நமது ‘சுயத்தை’ இழந்து – சொக்கட்டான் ஆட்டத்தில் காய்களை உருட்டுவது போன்று உருட்டப்படும் தன்மையில் உள்ளது. தெரிந்தோ தெரியாமலோ, புரிந்தோ புரியாலோ, அறிந்தோ அறியாமலோ வாழ்ந்து கொண்டிருக்கும் மன நிம்மதியற்ற வாழ்க்கை.

அதற்குப் பல காரணங்கள் உண்டு என்றாலும், பிறருடன் ஒப்பிடும் முறை என்ற ‘பலி பீடத்தில்’ நம்மை நாமே நிறுத்திக் கொண்டு, பிறர் நம்மை பலியிடாமலே நாமே நம்மை பலியிட்டுப் பாழாகிறோம்.

நுகர்வோர் கலாச்சார காலத்தின் உச்சத்தின் விளைவாக, கடன் வாங்கியாவது,  பிறரை வியப்படைய வைக்க, நமக்குத் தேவையில்லாவிட்டாலும்கூட ஒரு ‘டாம்பீக வாழ்க்கை’ என்ற வெளிச்சத்தில் நின்று காட்டப் படுகின்றது.

அந்த நூலில், ஓர் எளிய அறி வுரையை ‘ஜென்மாஸ்டர்’ கூறுகிறார்.

அறவுரைகளாகவும் அவை பளிச்சிடுகின்றன!

‘மூன்று நஞ்சுகளுக்கு’ முழுக்குப் போடுங்கள்! என்ற தலைப்பில் குறிப்பிடுகையில்…

மூன்று நஞ்சுகள்:

  1. பேராசை
  2. கோபம்
  3. அறியாமை

நாம் பேராசையால் தாக்கப்படும் போது, நாம் விரும்புகின்றவற்றை நாம் கைவசப்படுத்திய பிறகும்கூட, நமக்கு இன்னும் அதிகமானவை வேண்டும் என்ற எண்ணம்தான் நமக்கு ஏற்படுமேயன்றி, நமக்கு ஒருபோதும் மனநிறைவு ஏற்படாது.

இரண்டாவது, கோபம் தலைக்கேறும்போது நாம் அதைப் பிறர்மீது காட்டுகிறோம்.

(அதன் மூலம் பாதிக்கப்பட்ட ஒருவர், நாம் பாதிக்கப்பட்டது போல் நமக்குப் புரியாமலே மற்றொருவரையும்  பாதிப்புக்கு உள்ளாக்குகிறோம்).

மூன்றாவது, அறியாமை – தந்தை பெரியார் போன்ற ஒப்பற்ற சிந்தனையாளர் – அதனால் அதை ஒழிப்பதற்கென்ற ஒரு தனி இயக்கம் உருவாக்கினார்.

பகுத்தறிவு வீரர் அமெரிக்க நாட்டு ராபர்ட் ஜி. இங்கர்சால் சொன்னார்: ‘‘அறியாமையைவிட  உலகின் மனித குலத்திற்கு பெரிய நோய் வேறொன்றுமில்லை.’’

உலகின் பழம் பெரும் சிந்தனைப் புரட்சியாளரான கிரேக்கத்து சாக்ரட்டீஸ்,   தன்னுடைய அறிவு மொழிகளில் கூறிய,  வரலாற்றில் இடம் பெற்ற ஓர் அறிவு மொழி என்ன தெரியுமா?

‘‘நான் அறிந்ததெல்லாம் அறியாமை ஒன்றுதான்’’ என்றார் – மிகுந்த தன்னடக்கத்துடன்.

ஆம். நாம் நம் அறியாமையை  எப்போது புரிந்துகொள்ளுகிறோமோ அப்போதுதான் நாம் அறிவைப் பெறத் தொடங்குகிறோம் என்று பொருள்.

‘‘அறிதொறும் அறியாமை….’’ என்பது வள்ளுவரின் பார்வை.

(தொடரும்)

-விடுதலை நாளேடு, 10.08.26

சனி, 1 ஜூன், 2024

அனைவரும் வெல்ல வேண்டிய மூன்று எதிரிகள் (1,2.3)

அனைவரும் வெல்ல வேண்டிய மூன்று எதிரிகள் (1)

 அனைவரும் வெல்ல வேண்டிய மூன்று எதிரிகள் (1)

2a

மனிதர்களாகிய நமக்குள்ள பெரிய வாய்ப்பு ஆறாம் அறிவாகிய  "பகுத்தறிவு" என்ற சிறந்த தனித்தன்மை அறிவாயுதம்!

அதன் காரணமாக அறிவியல்- தொழில் நுட்பப் படைப்பாற்றலில் மனிதர்கள் வரலாற்றுப் பெருமைக்குரிய சாதனையாளர்களாக மாறி, நிலைத்து என்றும் வாழுகின்றனர்!

அவ்வளவு பெருமை வாய்ந்த மனிதர்கள்  - அவர்கள் வெல்ல வேண்டிய முக்கிய எதிரியை சரியாக அடையாளம் காணவே தவறக் கூடாது.

இத்தகைய மனிதர்களின் எதிரிகளை வெளியில் அவர்கள் தேட வேண்டாம்; சற்று அமைதியாக தனித்து அமர்ந்து, சிந்தித்துப் பார்த்தால் அவை புலப்படும்.

உண்மை எதிரிகள் - அல்லது பதுங்கியுள்ள எதிரிகளான அவர்கள் ஏவுகணையாகி அதே மனிதர்களை அழிக்கப் பயன்படும். எதிரிகளை சரியாக அடையாளம் கண்டுவிட்டால் போரின் வெற்றி அய்ம்பது விழுக்காடு உறுதியாகி விடுவது உறுதி!

அந்த மூன்று எதிரிகளை வெளியில் தேடாதீர்கள், உங்களுக்குள்ளேயே 'திரிசூலம்' போன்று அந்த மூன்று எதிரிகள் உள்ளனர்.

(1) தன் முனைப்பு 

(2) பொறாமை

(3) புகழ் வேட்டை

தனி வாழ்க்கையிலும் சரி, பொது வாழ்க்கையிலும் சரி இந்த மூன்று எதிரிகளை வென்று விட்டால் அவர்கள் வெற்றி பெற்ற மனிதர்களாக உயர்ந்து நிற்பது உறுதியிலும் உறுதி!

முதல் எதிரி - நமக்குள்ளே கிருமிபோல ஊடுருவி நம்மையறியாமலேயே நம்மை வீழ்த்தும் எதிரிதான் இந்த தன்முனைப்பு (Ego) என்ற நம் எதிரி!

தன்னை எதிலும் முன்னிலைப்படுத்தி, தகுதிக்கு மேல் பெருமை அல்லது பதவிகள், பொறுப்பிற்கு வர வேண்டும் என்று நினைப்பவர்கள் அது 'கணவன் - மனைவி'யாக இருந்தாலும், நண்பர்கள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும்  வளர்ந்து வருகிறவர்கள் ஆனாலும் சரி, தன்னுடைய உழைப்பும், நாணயமும் தன்னை எப்போதும் உயர்த்தும் என்று எண்ணி நிம்மதியாக இல்லாது -  குறுக்கு வழியில் 'பரமபத விளையாட்டு' விளையாட முனைந்தால்...  (இதை ஆங்கிலத்தில் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்துள்ள - Snake and Ladder - 'பாம்பும் ஏணியும்' விளையாட்டு என்றும் கூறுவர்). ஏணியில் திடீரென்று ஏறி உயர நினைத்து 'நானே அறிவாளி', 'நானே ராஜா', 'எனக்கே எல்லாம்' என்ற அகம்பாவத்தினால் உந்தப்படும் பலர் "பாம்பு கடித்து" கீழே வர வேண்டியதாகி விடும். மனிதர்கள்  இப்படி வீணே தேவையற்ற இழப்புகளைத்தான் சந்தித்து சரிந்து போகிறார்கள்!

உழைப்பும், உண்மையும் எப்போதும் நம்மை உயர்த்தவே செய்யும். சிற்சில நேரங்கள் இதற்குக் காலதாமதம் ஆனாலும், நிச்சயம் என்றோ ஒரு நாள் அது வந்தே தீரும். வராவிட்டால் தான் என்ன? நம் மனத் திருப்திக்கு நாம் உழைத்துக் கொண்டே இருந்தால் அதன் பலன் கனிந்து நமக்குக் கிடைக்காவிட்டாலும்   நாமடையும் இன் பத்திற்கு ஈடு இணை உண்டா? மனித மகிழ்ச்சிக்கு அடிப்படை திருப்தியும் நிம்மதியும்தானே!

2) பொறாமை என்ற எதிரியைவிட மிக மோசமான எதிரி மனிதனுக்கு வேறு கிடையாது!

இது எப்படி வருகிறது? ஏன் வருகிறது? என்பதை பல மனோ தத்துவ நிபுணர்கள்கூட கண்டறியவில்லை! முடியவில்லை!

ஓடுகிற சில வாகனங்களில் திடீர் நெருப்புப்பற்றி எரிந்து வாகனத்தை மட்டுமல்ல; உள்ளே இருந்து பயணம் செய்தவர்களையும் பலி கொள்ளு கிறதல்லவா? அதுபோல மின்னல் தாக்கி சிலர் மரணிப்பதில்லையா அவைபோலவே இது! அதை வள்ளுவர் எவ்வளவு நாசூக்காக எடுத்துத் துரைக்கிறார் பார்த்தீர்களா!

'அழுக்காறு உடையவர்களுக்கு அது சாலும்' இந்த ஒரு வரியை நின்று நிதானித்து அசைபோட்டு சிந்தித்துப்பாருங்கள்.

யார்மீது பொறாமை ஏற்படுகிறதோ - அவர்கள் இதில் குற்றம் இழைக்காமலேயே தண்டனைக் காளானவர்களாவது ஒரு வினோதம் போன்ற கொடுமையல்லவா?

என் நண்பர் கார் வாங்கினால், நடந்து அல்லது பேருந்தில் செல்லும் எனக்கு ஏன் 'பொறாமை' வர வேண்டும்?

மகிழ்ச்சி அடைய வேண்டிய முதல் நபர் நானாகத்தானே இருக்க வேண்டும்? காரணம் "அவர் ஏழையாக இருந்தால் என்னிடம் கடன் கேட்பார்; நான் மறுத்தால், எங்கள் நட்பு முறியும் வாய்ப்பு உள்ளதே, இதன் மூலம் அத்தகைய ஒரு இக்கட்டு, இடர்ப்பாடு தவிர்க்கப்படுகிறது" என்று மகிழத்தானே வேண்டும்.

பின் ஏன் வீணான பொறாமை? அது அர்த்தமற்று ஏற்படும் காரணம் கண்டறிய வேண்டுமா?

கண நேர 'ஊடுருவல்' பொறாமை உணர்ச்சி தான்.

(மேலும் வரும்) 

 அனைவரும் வெல்ல வேண்டிய மூன்று எதிரிகள் (2)

2a

'பொறாமை' என்பதற்கு உருவம் கிடையாது; அது ஒரு வகையான நோய். இந்த நோயின் கிருமிகள் மனநல மருத்துவர்களின் ஆய்வில்தான் - அதுகூட 'பளிச்' சென்று தெரியாத வகையில் புலப்படக் கூடும்!

மனிதர்களின் வாழ்க்கையில் சீர்கேடுகள் மலிவதற்கும், செயற்கையான துன்பங்களும், கவலைகளும் மின்னலைப் போல், இடியைப் போல் தாக்குவதுபோலும் இந்த பொறாமை உணர்வு!

இந்த பொறாமை நோய் - மற்ற நோய்களைப் போலவே அனைவருக்கும் அனைத்து இடங் களிலும், நேரங்களிலும் உருவாகக் கூடும்!

'ஒரு மனதாயின' கணவன் - மனைவிக்கும் இடையில்கூட இந்த நோய் புகுந்து இணைப்பு களைத் துண்டிக்கும் அளவுக்குத் தொல்லை தரக் கூடும்.

எடுத்துக்காட்டாக, எத்தனையோ குடும்பங் களில் படித்த மனைவிமார்கள் - அவர்களை - பல ஆண்கள், துணைவியராக, வாழ்விணையராகவே கருதிடாமல் நடத்தும் ஆதிக்க மனப்பான்மை யாளர்களாக இருப்பதால், எஜமான் - அடிமை என்பதைப் பிரதிபலிக்கும் 'கணவன் - மனைவி' என்ற சொற்களையே இங்கு பயன்படுத்துகிறேன்.

அவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் கிடைக்கும் கூடுதல் ஊதியம், கூடுதல் பெருமை  - புகழ் கண்டு பூரிக்க வேண்டிய கணவர்களேகூட, அவர்களை அறியாமல் தன்னைவிட தன் மனைவிக்கு இவ்வளவு புகழா என்று எண்ணிப் புழுங்கிடுவதும், நாளடைவில் அந்தப் புழுக்கம் பல மனப்புண்களையும், அந்தப் புண்களிலிருந்து சில பொறாமைப் புழுக்கள் முழு வடிவம் எடுத்து 'ஆட்கொல்லி' ஆவதும் - வாழ்வு வெறும் கானல் நீர் வேட்டையாவதும்  - நம் கண்முன் கண்ணாலே காணும் காட்சிகள்தானே!

மகிழ்ந்து கொண்டாட வேண்டியவர்களே அதற்கு நேர் எதிரான மன நிலையைப் பெறுவதுடன், தேவையற்ற துன்பத்தைத் தாங்களே வரவழைத்து அல்லல் உறுவதும் கண் முன்னே காணும் அன்றாடக் காட்சிகள் - பல குடும்பங்களிலிருந்து...

"என்னைவிட நீ பெரிய ஆளா?"

"என்னைவிட அதிகம் சம்பாதிக்கிறாயா"

"என்னை அலட்சியப்படுத்திப் பார்க்க வைக்கிறதா?" என்று தாங்களே கற்பித்துக் கொண்ட ஓர் இல்லாத நோயினால், பொல்லாத துன்பத்தை இலை போட்டு அழைக்கிறார்கள்!

என்னே வேதனை வெட்கம்!

தன் முனைப்பு பொறாமையாகவும் மாறிவெடிக்கிறது  - பொறாமையோடு, தனக்கு வராத பெருமை வேறு யாருக்கோ வருவதா என்று ஒரு தவறான எதிர்பார்ப்பு - தப்புக் கணக்கு!

இவை இரண்டையும் சிறிய கோடுகளாக்கி விடும் மிகப் பெரிய மற்றொரு அவலம் - தனி மனிதர்களின் புகழ் வேட்டை!

எப்போதும் எதிலும் தாங்களே 'முன்னால் என்ற பெயர் நாளும் தவறாமல் செய்தி ஏடுகளில் வர வேண்டும் என்பதற்காக கூலி எழுத்தாளர்களை வைத்து அறிக்கை சாம்ராஜ்யம் நடத்தும் அரசியல்வாதிகள்  - கட்சித் தலைவர்கள் பலர் உண்டு!

தற்கொலை செய்ய முயற்சித்து தோற்ற ஒருவர் மீது கிரிமினல் சட்டப்படி வழக்கு விசாரணை வந்தது!

"'என் பெயர் பேப்பரில் வர வேண்டும்' என்ற ஆசையினால் இப்படிச் செய்தேன்" என்று அந்தநபர் நீதிபதிமுன் சொன்னார்!

 இந்தியன் பீன்ல்கோட் (I.P.C.) - இ.பி.கோ. என்ற குற்றவியல் சட்டத்திலேயே இந்த தற்கொலைக்கான தண்டனைபற்றிய ஒரு பிரிவு - ஒரு விசித்திர சட்டப் பிரிவு ஆகும்! எப்படி?

ஒரு குற்றத்தினை செய்ய முயற்சித்தால் சட் டப்படி தண்டனை,  முயற்சியில் வெற்றி - அதாவது தற்கொலை முயற்சி நிறைவேறி விட்டால், எந்தத் தண்டனையும் கிடையாது. காரணம் வெளிப்படை - இறந்தவருக்கு எப்படி தண்டனையைக்  கொடுக்க முடியும்!

வேடிக்கையான சட்டப்பிரிவு! 

ஊடக வெளிச்சம் என்பது தாங்கள் பெறும் புகழ் விளம்பரத்திற்கு முக்கியம் என்பதால் சிலர் வலிய சென்று ஊடகவியலாளர்களின் நட்புற வுக்காக எதையும் செய்வார்கள்!

சட்டமன்ற - நாடாளுமன்றங்களில் தலைவர் களைப் புகழ வார்த்தைக் கோர்வைகளை எழுதிக் கொடுத்து அதை ஒரு  வருவாய்க் களமாகவே ஆக்கிய வேடிக்கையான 'வருவாய்த்துறை'க்கும் கூட நம் நாட்டில் பஞ்சமில்லை. புகழ் வரலாம்; வரட்டும். அது தானே சுயமாக வந்து மூடிய உங்கள் வீட்டுக் கதவைத் தட்ட வேண்டும்.

(மேலும் வரும்) 

 அனைவரும் வெல்ல வேண்டிய மூன்று எதிரிகள் (3)

13

புகழ் வேட்டை என்பது புலி வேட்டையை விடக் கடுமையானது! ஏன் சில நேரங்களில் கொடுமையானதும்கூட!  

பொதுவாக 'வேட்டையாடுதல்' என்பதற்குள் பொதிந்துள்ள பொருளே, தேடிச் சென்று பிடித்துக் கொண்டு வருதல் என்பதுதானே!

தானே வந்தால் தான் அது உண்மையாகவே 'புகழ்!'

இன்றேல் இடையில் வந்தால் 'இகழ்' அது!

தேடிப் பிடித்து வருதல் என்பது கொச்சையாக சொல்ல வேண்டுமானால் ஒருவகை வன்புணர்ச்சி இன்பமாகும்!

'புகழ்' என்பது தானே கனிந்த பழத்தின் ருசியாக இருக்க வேண்டுமே தவிர, மருந்து.. போட்டு செயற்கை முறைகளால் பழுக்க வைத்த விரும்பத்தகாத பழம் போன்று இருக்கலாமா?

தேடி, தானே வரும் புகழ் நிலைத்த புகழ்! செயற்கையாக 'நாமாவளி' பாட வைத்து கேட்டு ரசிக்கும் புகழ் கூலிக்கு மாரடித்தவர்களின் ஒப்பாரியின் எதிர் நிலை உவமையாகும்!

சில கட்சிகள் - திடீர்த் தலைவர்கள் தங்க ளுக்குப் "புகழ்" சம்பாதிக்க சில கூலிப் படைகளை 'கூவும் படைகளாக்கி' சில இடங்களில் "வாழ்க, வாழ்க" முழக்கம் போட்டு கடைசியில் காணாமல் போன செலவுக் கணக்குகள் ஏராளத்தைக் கண்டு சுவைத்தது உண்டா?

நல்ல வேடிக்கை நகைச்சுவைகள் இவை. சிலர் -  போலிப் பட்டங்களை விலைக்கு வாங்கி (200 டாலர் 'டாக்டர்' பட்டங்கள்கூட உலகெங்கும் உள்ள போலிப் பல்கலைக் கழகங்களால் தரப் படுகின்றன!)  அப்படி டாக்டர்களாகும் மன நோயாளிக்கு இறுதியில் மிஞ்சுவது துயரமோ, துன்பமோ தானே!

உண்மையாகவே ஆய்வு மூலம் பெற்ற பட்டங்களின்மீதுகூட சாயம் அடித்து, விஷமத் தனப் பிரச்சாரம் செய்யும் கோயபெல்சின் குருநாதர்கள் இந்த பித்தலாட்டத்தைக் கண்டும் காணாத கனவான்கள்!

'தோன்றிற் புகழொடு தோன்றுக' என்ற குறளைக் கூட சிலர் தவறாக, 'பிறக்கும்போதே புகழுடன் பிறக்க வேண்டும்' என்று பொருளுரை கூறியபோது, பகுத்தறிவாளர்கள் தான், ஒரு குறுக்குக் கேள்வியை கேட்டு சரியான விளக்க வுரையை அக்குறளுக்குத் தந்தார்கள்!

ஒருவர் தோன்றும்போது, - பிறக்கும்போது என்று பொருள் கொண்டால், பிறக்கும்போது ஒருவர் எப்படி புகழோடு பிறக்க முடியும்? வாழும்போதுதானே அவர்தம் சீரிய சிந் தனைகளால், செயல் திறன் - சாதனைகளால் பெருமை, புகழ் எல்லாம் அடைய முடியும்? அதற்குச் சரியான பொருள் "தோன்றிற் புகழ் என, எந்த அவையில், அரங்கில்  நிற்கும்போது அவர்தம் ஆற்றல் என்பது புகழ் ஈட்டித்தரத் தக்க வகையிலான களச் செயலாக அமைதலே காரணமாக வேண்டும்" என்ற பொருள் விளக்கமே சரியான, பொருத்தமான விளக்கமாக இருக்கிறது.

புகழ் வெளிச்சத்தின்கீழ்... (சில விளக்கொளி களைக் கற்பனை செய்து பாருங்கள்)

மற்ற இடங்களில் எல்லாம் பரவி ஒளி விடும் வெளிச்ச விளக்கைச் சுற்றி ஒருவகை சிறு நிழல் வட்ட இருள் போன்ற ஒன்று இருக்கச் செய்யும்!

இதனை எதற்கு, உவமையாக கூறினால் பொருத்தம்? சற்றே எண்ணிப் பாருங்கள்.

பெரிய பெரிய தலைவர்கள், ஆய்வாளர்கள், செயல் திறனால் புகழ் வெளிச்சம் பெற்றவர்களின் அருகில் அவர்களுக்கு உதவியாளராக உள்ளவர்கள்தான் அந்த சிறு வட்ட - வெளிச்சம் பாயாத இருள் பகுதி.

அவர்களில் யார் யார் அவசரப்படாமல் - தன் கடன் தலைமைக்கு உதவுவதே, ஆய்வுப் புலமை அருகில் இருக்க மேலும் கற்று தானே வெளிச்சம்  தரும் விளக்காய் ஆகும் தகுதி பெறும் வரை பொறுமை காத்து நிற்பதே அவர்களின் நிரந்தரப் புகழ் ஈட்டுதலுக்கு - நீடு புகழ் நிலைத்த புகழ் தங்கும் புகழாக அமைந்து தகத்தாய ஒளியுடன் இறங்கி சிறக்கும் தரணி முழுவதும்!

விலை கொடுத்து வாங்கும் புகழ், காலையில் பூத்து மாலையில்கூட அல்ல - மதியத்திலேயே உதிரும் மண மற்ற மலர்போலும் ஆகி விழும்!

எனவே புகழுக்காக கதவைத் தட்டாதீர்கள்!

புகழ் வந்து உங்கள் கதவை தட்டித் திறக்கட்டும்

அதன் பிறகுதானே வாசனையும் நிரந்தரம் ஆகும்  - இல்லையா?

போலி அறிவியலைப் புரிந்து கொள்வீர்!


 போலி அறிவியலைப் புரிந்து கொள்வீர்!

6

பல்வேறு தொடர் பணிகளுக்கிடையிலும் எனது 'இளைப்பாறல்' (Relaxation) பல்வேறு புத்த கங்களைப் படித்துப் புத்துணர்ச்சி பெறுவதுதான்!

இப்போதெல்லாம் புத்தக வாசிப்பு பெருகி வருகிறது என்பது நமக்கு மகிழ்ச்சி தருவதாக இருந்தாலும் - நமது இளைஞர்கள், மாணவச் செல்வங்கள், புத்தகங்களைப் படித்து, தங்க ளுடைய சிந்தனை - செயலாக்கத் திறனை  (Creativity) வளர்த்துக் கொள்வதற்குப் பதிலாக, அளவுக்கு அதிகமான நேரம் இணையத்தில் - அதிலும் குறுஞ்செய்தி, தேவையற்ற அக்கப் போர் - சிலரின் டைரிக் குறிப்பான சுய புராணப் பெருமைப்படலங்கள் மூலம் தங்களது அரிய நேரத்தை வீணடித்து வருவது வேதனைக்குரியது.

நல்ல நூல்களைப் படித்துப் பயன் பெற வேண்டும். 'கசடுஅற கற்பதும் அதன்படி நிற்பதும்' இணைந்து நடந்தால் மனித குலம் மகத்தான ஞானம் பெறுவதோடு, ஞாலமும் பயனுள்ளோரின் கூட்டாகக் காட்சியளிக்கும்.

சென்ற மாதத்தில் நடந்த, தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைபற்றி ஆய்வு செய்த - ஸ்காட்லாந்து பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர் பிச்சைமுத்து அவர்களது அந்நூல் வெளியீட்டு ஆய்வில் கலந்துகொண்டேன்.

அப்போது அந்நூல் வெளியீட்டாளர்களான நிகர் மொழி பதிப்பகத்தார் நண்பர்கள் அ. பிரபா கரன், ஜெ. ஜோன்சன் மேடையில் புத்தகங்களை எங்களுக்கு வழங்கி 'அறிவுக்குளியலுக்கு' வாய்ப் பளித்தனர்.

4

பல அருமையான பயனுறு புத்தகங்கள்

குறைந்த விலை; நிறைந்த சரக்கு மிடுக்கு

அறிவை விரிவு செய்து அகண்டமாக்கும் அற்புத விளக்கங்கள்.

இன்றைய உலகில் குறிப்பாக நம் நாட்டில் சனாதனத் தொற்று பழைமைவாதம், புதிய கோப்பையில், விஞ்ஞான விளக்க போலி 'லேபிள்' ஒட்டப்பட்டு பரப்பப்படும் இன்றைய கால கட்டத்தில் எது அறிவியல்? எது போலி அறிவியல் என்பதை டாக்டர் சட்வா MBBS DA DNB  அவர்களின் "போலி அறிவியல், மாற்று மருத்துவம்  மூடநம்பிக்கை ஒரு விஞ்ஞான உரையாடல்" என்ற புத்தகம் மூலம் அருமையான கருத்துச் செறிவுடன் கூடிய நூலாக உருவாக்கப்பட்டுள்ளது. 120 பக்கங்கள் - 44 தலைப்புகள் - விலை 100 ரூபாய்தான்.

அறிவியல் - Science,  போலி அறிவியல்       - Pseudo Science  என்பனவற்றை  விளக்கி வேறு படுத்திக் காட்டும்.   நிகர்மொழி பதிப்பகத்தாரின் பணி பாராட்டப்பட வேண்டிய அரும்பணி! அறிவுத் திருப்பணி. 'ஏன் இந்நூல்?' என்ற முதல் தலைப்பில் உள்ளவற்றை அப்படியே தருகிறோம்.

படியுங்கள் - பிறகு ஈர்ப்பு தானே வரும்.

"ஏன் இந்த நூல்?"

5

'ஒரு விஞ்ஞான உரையாடலை நிகழ்த்துவோம்'

"நோய்களை எதிர்த்து மனித இனம் தொடர்ந்து பல்லாயிரம் வருடங்களாகப் போராடி வருகிறது. நோய்கள் வருவதற்கான காரணம் என்னவென்று தெரியாமல் மாயா ஜால அமானுஷ்ய கதைகளை நம்பி யிருந்த காலத்தில் இருந்து, எதிர் காலத்தில் என்ன விதமான நோய் ஒரு மனிதனுக்கு வரும் என்று ஒருவரது 'ஜீன்களை' ஆய்வுசெய்து, பிறக்கும் போதே கணிக்கும் மரபியல் விஞ்ஞான உலகுக்குள் நாம் பரிணமித்து வந்திருக்கிறோம்.

இவ்வுலகின் மொத்த மக்கள்தொகை இரு நூற்று அய்ம்பது கோடியாக கி.பி. 1950இல் இருந் தது. அது கி.பி. 2000த்தில் அய்ந்நூறு கோடிக்கும் மேல் உயர்ந்தது. மேலே குறிப்பிட்டுள்ள வெறும் அய்ம்பது ஆண்டுகால இடைவெளியில் உலகின் மக்கள் தொகை இருமடங்காக உயர்ந் தமைக்குக் காரணம் நவீன விஞ்ஞான மருத்துவம் ஆகும்.

குறிப்பாகப் பெரியம்மை, தட்டம்மை, காலரா, தொண்டை அடைப்பான், பொன்னுக்கு வீங்கி, பிளேக், இன்புளூயன்சா முதலிய தொற்று நோய்களானது, தடுப்பூசிகள் மற்றும் இதர பொதுச் சுகாதார நடவடிக்கைகளின் மூலம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதே இவ்வாறான திடீர் மக்கள் தொகை உயர்வுக்குக் காரணமாக அமைந்தது. 

ஜேரட் டைமண்ட் எனும் ஆய்வாளர் எழுதி யுள்ள 'கிருமி, துப்பாக்கி மற்றும் இரும்பு' (Guns, Germs and Steel) எனும் நூலில் 'கிருமிகளின் வழியே பரவும் நோய்கள் உலக வரலாற்றையே தலைகீழாக மாற்றிவிட்டது' என்று குறிப்பிடுகிறார். கிறிஸ்டோபர்  கொலம்பஸ் 1492 இல் அமெரிக்கக் கண்டத்தில் நுழைந்த போது அவரது குழு பல்வகை தொற்று நோய்களையும் சேர்த்தே அமெரிக்கக் கண்டத்தில் நுழைத்தது. விவசாய சமூகமாக ஓரிடத்தில் குவிந்து வாழ்ந்த அய்ரோப்பியர்கள், அமெரிக்கப் பழங்குடிகளுக்கு முன்னரே பல்வகையான பரவும் நோய்களுக்கு எதிரான எதிர்ப்புச் சக்தியைப் பெற்று இருந்தனர். ஆனால், வேட்டை சமூகமாக இருந்த பழங்குடிகள் இந்த எதிர்ப்புச் சக்தியைப் பெற்று இருக்கவில்லை . இந்த ஒரு காரணம் அய்ரோப்பியர்கள் எளிமையாக அமெரிக்கப் பழங்குடிகளை வீழ்த்த ஒரு வாய்ப்பை உருவாக்கித் தந்தது. 

இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 1947இல் முப்பத்து ஒன்று வயதாக இருந்தது. அது 2015இல் அறுபத்து எட்டு வயதாக உயர்ந்துள்ளது. இவ்வாறு நோய்களும், அதற்கு எதிரான விஞ்ஞான மருத்துவமும் மனித இனத்தின் வரலாற்றை மாற்றி எழுதும் வல்லமை பெற்றவையாக இன்றும் உள்ளன.

அதே சமயத்தில் நவீன விஞ்ஞான மருத்துவம் வியாபாரமாகிப் போனது பற்றியும் நாம் ஆழ்ந்த கவலை கொள்ள வேண்டியுள்ளது. சேவைத் துறையில் வியாபாரம் செய்யலாம் என்ற உலக மயமாக்கலின் உபவிளைவு மருத்துவத்தையும் ஒரு வியாபாரப் பண்டமாக மாற்றியுள்ளது. சந்தை பொருளாதாரமே சிறந்தது என்ற ஆபத்தான முதலாளித்துவ கருத்தும் மேல்தட்டு மக்களி டையே விதைக்கப்படுகிறது.

இந்தப் புத்தகத்தின் வழியே நாம் நோய்களின் வரலாறு, விஞ்ஞான மருத்துவத்தின் அடிப்படை, போலி அறிவியல் செயல்படும் விதம், மாற்று மருத்துவம் எனும் நிரூபிக்கப்படாத மருத்துவ முறைகள், அனைவருக்கும் தரமான சுகாதாரம் ஆகியவற்றைப் பற்றி பல்வகை தலைப்புகளில் ஒரு விஞ்ஞான உரையாடலை நிகழ்த்துவோம்."

அறிய வேண்டிய அரிய செய்திகள் அல்லவா?