பக்கங்கள்

திங்கள், 2 அக்டோபர், 2023

புரட்சிக் கவிஞர் - சில நினைவுகளும் நிகழ்வுகளும் (7)(8)

 புரட்சிக் கவிஞர் - சில நினைவுகளும் நிகழ்வுகளும் (7)

3

ஈரோட்டில் கோடை விடுமுறையின்போது தந்தை பெரியார் அவர்களது பழைய ஜங்ஷன் சாலையில் உள்ள, ஒரு பெரிய வீட்டில் (தந்தை பெரியாரது சொத்துக்களில் ஒன்று அது) அதில் ஏறத்தாழ, 2 வாரங்கள் பயிற்சி வகுப்பு - திராவிட மாணவர்களாகிய எங்களுக்கு எடுத்து முடிந்த வுடன் - சுமாராகவும், நன்றாகவும் கொள்கை களைப் புரிந்து பேசும் பக்குவம் படைத்த மாணவர்களில் ஒரு பகுதியினரை அய்யாவும் மற்ற பயிற்சி தந்த அடுத்த நிலை கழகப் பிரச்சாரகர்களும், 3 பேர்களைத் தேர்வு செய்து, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அனுப்பி, பல ஊர்களில் பிரச்சாரம் செய்ய அனுப்புவார்கள்  - ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அந்த மாணவக் குழுவினர் மாவட்ட அமைப்பாளர் முதுபெரும் பெரியார் பெருந் தொண்டரின் ஆணைக்குக் கட்டுப்பாடாக கீழ்பட்டே   மாணவர்கள் நடப் பார்கள்; கழகக் கூட்டங்கள் ஏற்பாடு செய்வதையும் மேற்பார்வை இடுவர்கள். எங்கள் நலம், பாதுகாப்பு எல்லாம் மாவட்ட அமைப்பாளர் பொறுப்பிலேயே விட்டு விடுவர். அவர்கள் மாணவப் பிரச் சாரகர்களான எங்களை சிறப்பாக கவனித்து சுமார் 20,25 கூட்டங்களை நாள் ஒன்றுக்கு ஒன்று வீதம் ஏற்பாடு செய்து பேச வைத்து; பிறகு ஊருக்கு அனுப்புவார்கள்!

அப்படி நான் - 1945 என்று நினைவு - சேலம் மாவட்டம் (பழைய சேலம் மாவட்டம் - பிரிக்கப் படுவதற்குமுன்பு கிருஷ்ணகிரி வரை இந்தப் பக்கம் பரமத்திவேலூர் வரை என்ற பெரிய மாவட்டம்).

பரமத்திவேலூர் அருகே பொத்தனூரில் இன் றைய நூற்றாண்டு கண்ட நம்முடன் மகிழச்சியாக வாழும் அய்யா மானமிகு க.சண்முகம் அவர்கள் இல்லத்தில் தங்கி, பொத்தனூரில் மாலை கூட்டம் முடித்து, அடுத்த நாள் தவிட்டுப்பாளையம் கூட்டம் - காவிரி ஆற்று மணலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது - கட்டிப்பாளையம் (தாடி) கண்பதி, 'ஆச்சிக்கண்ணு' என்றழைக்கப்பட்ட பழனிமுத்து போன்ற முதுபெரும் பெரியார் தொண்டர்கள், பலரும்  இருந்தனர். வேலூர் (பரமத்திவேலூர்) புரட்சிக் கவிஞர் தனது மூத்த மருமகன் புலவர் கண்ணப்பனார் அவர்கள் வீட்டில் தன் மகன் கோபதி (பிறகு மன்னர்மன்னன்) மகள் சரஸ்வதி அம்மையாருடன் தங்கியிருந்தார்.

அவரையும் கூட்டத்திற்கு வந்து பேசுமாறு அழைத்தார்கள் உள்ளூர் கழக ஏற்பாட்டாளர்கள்! மிகுந்த மகிழ்ச்சியுடன் கவிஞர் அவர்களது அழைப்பை ஏற்றார். அப்போது இரண்டு பகுதிகளையும் இணைப்பதற்கு இப்போது இருப்பதுபோல பாலம் கட்டப்படாததால் 'பரிசல்' மூலமே அக்கரைக்குச் செல்ல முடியும்.

ஆற்று மணலில் மாலை கூட்டம்  - 6.30 மணி அளவில் துவங்கி மற்றவர்கள் எல்லாம் பேசி முடித்து விட்டனர். இறுதியில் சுமார் இரவு 9 மணியளவில் புரட்சிக் கவிஞர் பேச ஆரம்பித்தார். நின்று கொண்டு வேட்டியை எடுத்து இரண்டு கால்களிடையே சொருகிக் கொண்டு வலது கைகளின் விரல்களையும் பயன்படுத்தி இடி முழக்கம் செய்கிறார்!

ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம், மூன்று மணி நேரம் ஓடியது. இரவு 12 மணி அளவில்- ஆற்று மணல் பரப்பில் கூடியிருந்த கூட்டத்தின் பெரும் பகுதி வீட்டுக்கு சென்று விட்டனர்! ஒரு சிலரே கேட்கின்றனர்! புரட்சிக் கவிஞர் இடியோசை நின்ற பாடில்லை - நெருப்புத் தெறிக்கும் சீர்திருந்த பகுத்தறிவுக் கருத்துக்கள் எரிமலை என வீழ்ந்து கொண்டே இருந்தது. கேட்டு ரசிக்கத்தான் போதுமான கூட்டம் இல்லை.

அய்யா க.சண்முகமும் மற்ற தோழர்களும் சேர்ந்து ஒரு சீட்டு எழுதி, இரவு மணி 12 என்று நினைவூட்டி பேச்சைமுடிக்க எழுதியபடி துண்டு சீட்டு - அதை அவரது மகன் மன்னர்மன்னன்  மூலம் கொடுத்தனுப்பினர்.

அவர் சிறிது நேரம் கவிஞர் பின்னாலேயே நின்ற வண்ணம் உள்ளார். இவர் ஆவேசத்தில் அவரைக் கவனிக்கவில்லை; அவர் கவிஞர் அவர்களை வருடி 'அப்பா, அப்பா' என்றார்.

கவிஞர் சற்று கோபமாக? பெருத்த குரலில் என்ன? என்றபடியே திரும்பிட - அவர் இரவு 12 மணி ஆகின்றது பெரும்பாலானோர் கலைந்து விட்டனர்.  சிலரே உள்ளனர். எனவே, சீக்கிரம் முடியுங்கள் - என்று கழக முக்கியத்  தோழர்கள் கூறுகின்றனர் என்று தயங்கித் தயங்கிக் கூறினார்.

உடனே திரும்பி, "அட, போறவன் போறான் இருக்கிறவன் இருக்கின்றான். நீ போய் உட்கார்ந்து கேள்! என்று கூறி விட்டு பேச்சை முடிக்காமல் தொடர்ந்து மேலும் ஒரு அரை மணி நேரம் எடுத்து முடித்தார்!

நாங்கள் சிலரே ஒற்றைப் படை எண் 'பட்டாள மாய்' கடைசிவரை கேட்டு - மணற்பரப்பில் ஆழ்ந்து    "தூங்கிய தமிழனை தமிழ் கொண்டு எழுப்பி" விட்டு பிறகு அனுப்பினோம்!

அது ஒரு மறக்க முடியாத அனுபவம். ஒரு சிலர் திருந்தினால் போதும் என்றே கருதிய பிரச்சாரம் அந்நாளில்....

(வளரும்)

வாழ்வியல் சிந்தனைகள் -கி.வீரமணி

 புரட்சிக் கவிஞர் - சில நினைவுகளும் நிகழ்வுகளும் (8)

5

முன்பு சட்டக் கல்லூரியில் படித்த மாணவர் களுக்கென தனி மாணவர் விடுதி (Hostel) கிடையாது. 

சென்னை பிராட்வே சாலையில் 'University Students Club'  - 'யுனிவர்சிட்டி ஸ்டூடெண்ட்ஸ் கிளப்' என்ற அமைப்பு நடத்திய விடுதியில்தான் பெரும்பாலான மாணவர்கள் தங்கிப் படிப்பது வழமை. (சில மாணவர்கள் திருவல்லிக்கேணி அய்ஸ் அவுஸ் அருகில் இருந்த வெங்கடேசுவரா விடுதியிலும் சேர்ந்து படிப்பார்கள்).

நான் சட்டக்கல்லூரியில் சேர்ந்த ஆண்டில் (1957-59) பிராட்வேயிலிருந்த அந்த விடுதியில்தான் தங்கிப் படித்தேன். முதலாண்டு பெரும்பாலும் ஜாதி ஒழிப்புக் கிளர்ச்சி  - போராட்டங்கள் இவை களை அன்னையார் உடன் இருந்து பார்க்கும் பணியை அய்யா, சிறைக்குப் போகுமுன் எனக்கு ஆணையாக இட்டதால் அதிலே செலவு செய்தேன்.

(எனக்குப் பதிலாக நண்பர் கோ. சாமிதுரைதான் வருகைப் பதிவை "Proxy- பிராக்சி" கொடுத்தவர்.)

கடைசி ஒரு வாரத்தில் நானே புத்தகங்கள் வாங்கி ஒவ்வொரு பாடத்தையும் படித்துத் தேர்வு எழுதி F.L. என்ற முதலாண்டில் 5 மார்க்குகள் குறைவானதால் ('ஃபெயில்') தோல்வி அடைந்தேன். அதுவும் ஒரு தேவையான அனுபவமே  - வாழ்க்கையில் என்று தேற்றிக் கொண்டு அடுத்தத் தேர்வில் மூன்று - நான்கு மாதங்களில் - வெற்றி பெற்றேன். எனது நண்பர் கோ. சாமிதுரையும் எனக்குத் 'துணையாக' தேர்வு எழுதும் வாய்ப்பு - 'பெயில்' ஆனதால் பெற்றார். இருவரும் வெற்றி பெற்றோம் - அடுத்த கல்வியாண்டில்  B.L.  வகுப்பில் தொடர்ந்தோம்.

அந்த விடுதி மாணவர் தலைவர் தேர்தலுக்கு எங்களால் நிறுத்தி வைக்கப்பட்ட கோ. சாமிதுரை அவர்கள் வெற்றி பெற்றார். அவரை'Mess Captain'  - என்று அழைப்பார்கள். விடுதி நிர்வாகம் பெரிதும் மாணவர் தலைவர் மேற்பார்வையில் நடைபெறும் முறை அதனால் உண்டு.

இரண்டாம் ஆண்டு (B.L. வகுப்பு மாணவர்கள்) அந்த விடுதியில் தங்கியிருந்த போது, புரட்சிக் கவிஞர் அவர்கள் பிராட்வே அருகில் உள்ள அவரது புத்தக பதிப்பகங்களான பாரி நிலையம் (திரு. செல்லப்பன் அதன் உரிமையாளர்) - செட்டி நாட்டுக்காரர்களே பெரிதும் பதிப்பகச் செம்மல்கள் அப்போதும் இப்போதும்! வணிகத்தைவிட இயல் பான தமிழ்ப் பற்றே அதற்கு முக்கிய காரணம். 

எங்களுடன் விடுதியில் வந்து ஓரிரு நாள்கள் மகிழ்ச்சியுடன் தங்கி, எங்களது அன்பான வரவேற்பினை - உபசரிப்பினை - உரையாடிப் பெற்று திரும்புவார் நமது புரட்சிக் கவிஞர் அவர்கள். பல நேரங்களில் அவருடன் அவரது மருமகன்களில் ஒருவரும் (தோழர் தண்டபாணி என்று நினைவு) உடன் வருவார். எங்கள் அறைகளில் அவர்களைத் தங்க வைப்போம்.

எங்கள் விடுதியில் புலால் உணவை மிகச் சிறப்புடன் தயார் செய்ய - (இயல்பாகவே சிறப் பான சுவையுடன் கூடியது) தனி ஏற்பாட்டினை Mess Captain' கோ.சாமிதுரை மூலம் நாங்கள் செய்விப்போம்.

புரட்சிக் கவிஞர், விடுதியில் உணவு பரிமாறப்படும் பகுதிக்கே எங்களோடு வந்து அமர்ந்து உண்டு கலந்துரையாடிக் கொண்டே சாப்பிடுவார். இவரது கம்பீரமானத் தோற்றம், மிடுக்கான பார்வை, உரையாடல் கண்டு பிற மாநிலத்திலிருந்து வந்து படிக்கும் சட்டக் கல்லூரி மாணவர்கள் விசாரித்துத் தெரிந்து, தனியே அவரிடம் வந்து மரியாதை செலுத்துவர்.

வயதான பெரியவர் சமையல் 'நளன்களில் ஒருவர்! அவருக்குப் பெயரே 'ஆம்லெட் நாயர்' என்பது - அவ்வளவு சுவையாக, விரைவாக அதனை வியந்து சுவைக்கும் வண்ணம் பல ஆண்டுகளாக சமைத்துத் தரும் முதியவர்!

அதையும்  சுவைத்துச் சாப்பிடுவார்!  அருகில் ஓரிரு கிலோ மீட்டர் தூரத்தில்தான் பாரி நிலையப் பதிப்பகம். செல்ல 'ரிக்ஷா' ஏற்பாடு செய்ததுண்டு சில நேரங்களில் - கவிஞருக்கு.

அங்கே 'ஒட்டல் கிரசெண்ட்' என்று ஒரு உணவகம் உண்டு.

சுவையான புலால் வகையறாக்கள் கிடைக்கும். அதில் நாங்கள் மாணவ நண்பர்கள் -  என்னுடன் கோ. சாமிதுரை, வேலூர் வழக்குரைஞர் செந்தாமரை முதலியோர் சென்று கூட்டாக அவருக்கு அன்பு 'விருந்து' ஏற்பாடு செய்வோம். 'மூளை வறுவல்' அதன் ஸ்பெஷாலிட்டி அதைச் சுவைத்து சுவைத்துச் சாப்பிடுவார். விடுதியி லிருந்து எங்களுடன் பேசிக் கொண்டே நடந்தே வருவார். இருமருங்கிலும் நடந்து செல்பவர்கள் சிலர் புரட்சிக் கவிஞரை அடையாளம் கண்டு வணக்கம் செலுத்துவர்!

ஓட்டல் கிரசெண்ட்டில் புலால் உணவு சாப்பிடும்போது, வேடிக்கையாகப் பேசுவார் கவிஞர். "'உன் உடம்புலே எது எது வீக்கா இருக்கோ' அதனை ஈடுகட்ட அந்தந்த பாகம் வாங்கி சாப்பிடு, சரியாயிடும்!" என்பார் சிரித்துக் கொண்டே!

எங்களுடன் உணவு  - விருந்து சாப்பிடுவதில் அவருக்கு ஏற்பட்ட அளவற்ற மகிழ்ச்சியில் மாளும் புரட்சிக் கவிஞர் எங்கள் அறையில் எளிமையாய் தங்கி- பழகி, உடன் உண்ணல் முதலியவற்றை நடத்தியது, எங்கள் வாழ்நாளில் நாங்கள் பெற்ற பெருமை மட்டுமல்ல - எல்லையற்ற உரிமையும் கூட.

('யுனிவர்சிட்டி ஸ்டூடெண்ட்ஸ் கிளப்' விடுதி பிராட்வேயில் பழைய  'ஜனசக்தி' அலுவலகம் எதிரில் தான்!) புரட்சிக் கவிஞருக்கு எங்களிடம் அளவற்ற பாசம் உண்டு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக