பக்கங்கள்

வெள்ளி, 28 டிசம்பர், 2018

'கணினி உலகும்' நமது வாக்கு பறிப்பும்! (1),(2)&(3)



உலக மனித குல வளர்ச்சியை பல பருவங்களாக பற்பல உலக எதிர்கால நோக்காளர்களான சிந்தனை யாளர்கள் பார்த்தனர்; பகுத்தனர்!

ஆல்வின் டாஃப்ளர் (Alwin Toffler) என்ற சிந்தனையாளர் 'மூன்று அலைகள்' ஒன்று விவசாய அலை (Agricultural Wave),  இரண்டு  தொழில் அலை  (Industrial Wave), மூன்றாவது மின்னணுக் கால அலை (Electronic Age Wave) என்றார். ''Third Wave''  மூன்றாம் அலை என்ற நூலில்!

இதை மேலும் பெருக்கியதுபோல, புகழ் வாய்ந்த நிர்வாக இயல் பரப்புரையாளரும், பல ஊக்கமூட்டும் நூல்களை எழுதி பல லட்சக்கணக்கில் பரப்பியவரும் அமெரிக்க நாட்டு ஸ்டீபன் கோவி (Stephan Covey)  அவர்கள் ஒரு நூலில்,

(1) வேட்டையாடி சேகரிக்கும் பருவம்

(2) விவசாய பருவம்

(3) தொழிற் புரட்சி பருவம்

(4) மின்னணு பரவிய தகவல் தொழில் நுட்ப பருவம்

(5) கூர்த்த  அறிவு பருவம் (Age of Wisdom)  என்று பகுத்தார்.

மின்னணுவியல் காரணமாக மனித குலம் அடைந் துள்ள நன்மைகள் மிகப் பல.

ஆயுள் விருத்தி, டிஜிட்டல் தொழில் நுட்பம், மருத் துவத் துறையில் ஸ்கேன், துல்லிய ஒளி, ரோபொட்டிக் அறுவை - வென்ட்டிலேட்டர் - போன்ற பற்பல வசதிகள்!

தொழில் நுட்பக் கருவிகளும், மருத்துவ அறிவும், அனுபவமும் மனித வாழ்வின் சராசரி ஆயுளை வெகுவாக நீட்ட உதவியுள்ளன!

உடனடியாக உலகத்தோடு தொடர்பு கொள்ள மின் அஞ்சல் - மின் வர்த்தகம், இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

இது ஒரு பக்கம்; இதற்கு  மறுபக்கமும் உண்டே!

தனி மனித அந்தரங்கம், தனி மனித ரகசிய காப்பு  (Right of Privacy, Personal Datas) எல்லாவற்றையும் இழந்து விட்டோம். நமது குளியல் அறையில் குளிக்கும் பெண்களைக்கூட படம் எடுத்து, பார்க்கும் கயவர்களின் கீழ்த்தர ரசிகத் தீனியும் இதன்மூலம் கிடைக்கிறது!

எல்லாவற்றிற்கும் இரண்டு முனைகள் உண்டுதானே! காய்கறி வெட்டும் கத்தியால்தானே கொலைகளும் நடக்கின்றன!

சமைக்க உதவும் நெருப்புதானே  'திடீர்த் தீ' மூலம் பல உயிர்களைப் பலி வாங்குகிறது.

மூச்சுமூலம் வாழ வைக்கும் காற்றுதானே தனது "விஸ்வரூபத்தால்" பல நூறு உயிர்களைப் பலி வாங்குகிறது!

எனவே எல்லாவற்றிலும் நன்மை - தீமைகள் இணைந்தே உள்ளன!

ஆனால் இந்தத் தகவல் தொழில் நுட்பம் நமது கையில் உள்ள ஒரே உரிமையை - வாக்களிக்கும் உரிமையை பறிக்கும் கொடுமையையும் நிகழ்த்துகிறது.

நமது மாணவர் கழகச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் அறிமுகப்படுத்திய சீரிய சிந்தனை யாளரும், இளம் எழுத்தாளரும், பொறியாளர், மனோ தத்துவமும் படித்துப் பயன்படுத்தும் பயனுறு சமூகச் சிந்தனையாளர், சமூக நலனைப் பாதுகாக்கும் எழுத்துப் போராளியுமாகிய நண்பர் வினோத்குமார் ஆறுமுகம் இரண்டு நாட்களுக்கு முன்பு வந்து பெரியார் திடலில் சந்தித்து அவர் எழுதிய 'டிஜிட்டல் மாஃபியா - நீங்கள் டிஜிட்டல் உலகில் சோதனை எலிகள்' என்ற 132 பக்கங்கள் கொண்ட ஓர் அற்புதமான நூலைத் தந்தார்.

உடனே படித்தேன். நம்மில் பலரும் கணினி அறிவு உலகத்தைப் பொருத்து வெறும் 'தற்குறிகளே!'

பல வீடுகளில் நமது பேரக் குழந்தைகளும், பேத்திகளும், பேரன்களும் தான் தொலைக்காட்சி  முதல் கணினியை நமக்குச் சொல்லிக் கொடுக்கும் 'குமரகுரு' போன்ற ஆசிரியப் பெருமகன்கள்.

அது வயதைப் பொருத்தது அல்ல

அறிவைப் பொருத்தது!

கணினி உலகின் 'தற்குறிகளாகிய' நமக்கு அவர்கள் பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள்; நாம் கற்றுக் கொள்கிறோம்; நல்லதுதானே!

வினோத்குமார் என்ற கணினி ஆசிரியருடைய பாட வகுப்பில் சேர்ந்தேன் கற்றுக் கொண்டு வருகிறேன். நீங்களும் வாரீர்களா?

முதல் அறிமுகம் இதோ:

இந்த நூலிலிருந்து  மேலும் வகுப்பைத் தொடரலாம்.

ஏன் நீங்களேகூட இந்த நூலை வாங்கி வைத்துக் கொண்டு கணினி பற்றிய திடுக்கிடும் அதிர்ச்சியூட்டும் அதிசயத் தகவல்களை அறிந்து பிறருக்குப் பரப்பலாம்.

விலை : ரூபாய் 120.

வீ கேன் புக்ஸ் (We can) (அலுவலகம்), சென்னை

பெரியார் திடலிலும் கிடைக்கும். நாளை மறுநாள் வாங்கலாம்!

(தொடரும்)

- விடுதலை நாளேடு, 22.12.18

'கணினி உலகும்' நமது வாக்குப் பறிப்பும்! (2)

'டிஜிட்டல் மாபியா' என்ற நூலில் அறிமுகம் என்பதில் தோழர் வினோத்குமார் விளக்குகிறார்.

"2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தின் ஒரு மாலை நேரம். இந்தியர்கள் பயன்படுத்தும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். மக்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். இப்படியெல்லாம் கூட நடக்குமா? என அனைவரும் மலைத்துப்போய் நின்றார்கள். பூமியில் இந்தியாவின் எதிர்ப்புறம் உள்ள அமெரிக்காவில் மாலை வேளை. இந்தியர்களைப் போல அமெரிக்க மக்களும் அதிர்ச்சியில் உறைந்திருந்தனர். அமெரிக்கா வின் அதிபர் தேர்தல் முடிவுகள் அப்போது வந்து கொண்டிருந்தன. அமெரிக்காவின் புதிய அதிபராக டோனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றிருந்தார். இந்தச் செய்தி பரவத் தொடங்கியதும் உலகமே சற்று அதிர்ச்சி யுடன் அமெரிக்காவைப் பார்த்துக் கொண்டிருந்தது.

ட்ரம்பின் வெற்றி யாருமே எதிர்பாராதது. அவர் வெற்றியை அனைவரும் அதிர்ச்சியுடன் பார்க்கக் காரணம், உலகின் இரண்டாவது ஜனநாயக நாடான அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் ட்ரம்ப் ஒரு முடிவுடன்தான் பரப்புரைகள் செய்தார். அவரின் பரப்புரை முழுவதுமே இனவெறுப்பு கருத்துகளைக் கொண்டிருந்தது. முஸ்லிம்களை, மெக்ஸிகர்களை, ரஷ்யாவை, சீனாவை என பட்டியலிட்டுத் திட்டினார். ஜனநாயகவாதிகளை, தாராளவாதிகளை, கம்யுனிஸ்ட் டுகளை என ஒருவரையும் விட்டுவிடாமல் திட்டித் தீர்த்தார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஹிலாரி க்ளிண்ட்டன் மீது அவதூறுகளை அள்ளி வீசினார். இவ்வளவு வெறுப்பை அதுவரை அமெரிக்க அரசி யலில் யாரும் கண்டதில்லை . அதனால், அனைத்துக் கருத்துக்கணிப்புகளும் முடிவுகளும் ஹிலாரிக்கு ஆதரவாகவே இருந்தன. ட்ரம்பை யாரும் பொருட்படுத்தவில்லை.

ஆனால், தேர்தல் முடிவுகள் வேறு மாதிரி இருந்தன. குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ட்ரம்ப் வெற்றிபெற்றார். கருத்துக்கணிப்புகளைப் பொய்யாக்கி ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஹிலாரி க்ளிண்ட்டன் தோல்வியடைந்தார். கண்டிப்பாக வெல் லுவார், அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையுடன் ஆட்சியைப் பிடிப்பார் என்று எதிர் பார்க்கப்பட்ட ஹிலாரியின் தோல்வி அமெரிக்காவில் இருந்த ஜனநாயகவாதிகளையும், தாராளமயவாதி களையும் நன்றாகக் கிளறிவிட்டது. தோல்விக்கு ஆளுக்கொரு காரணம் அதற்கொரு கோட்பாடு எனக் கிளம்பினார்கள். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அறிவு ஜீவிகள், ஆய்வாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் ஹிலாரியின் தோல்விக்குக் காரணத்தை அடுக்கிக் கொண்டே சென்றனர். விவாதம் அமெரிக்காவில் மட்டு மல்ல, உலகம் முழுவதும் நடந்தது. ட்ரம்ப் எப்படி வெற்றிபெற்றார் என்ற மர்மத்தின் விடை தேடி அனைவரும் கிளம்பினார்கள்.

அமெரிக்கா முழுவதும் நடந்த விவாதங்கள் மெல்ல ஒரு திசையை நோக்கி நகர்ந்தது. ட்ரம்ப் சும்மா எல்லாம் ஜெயிக்கவில்லை. கணிசமான ஓட்டை அறுவடை செய்திருந்தார். இதனைக் கணக்கில் கொண்டு முதல் குற்றச்சாட்டு ரஷ்யா மீது வைக்கப்பட்டது. கருத்துக் கணிப்புக்கள் ஹிலாரிக்கு ஆதரவாக இருக்க ட்ரம்பிற்கு எப்படி ஓட்டுகள் குவிந்தன. அப்படியென்றால், ட்ரம் புக்கு ஆதரவாக ரஷிய நாட்டைச் சேர்ந்த கணிப்பொறி ஹேக்கர்கள் அமெரிக்கத் தேர்தல் முடிவுகளைச் சேமிக் கும் கணிப்பொறிகளை ஹேக் செய்து முடிவுகளை ட்ரம்பிற்கு ஆதரவாக மாற்றியிருக்க வேண்டும். இப்படி யான ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது (ஆனால், இந்தக் குற்றச்சாட்டுப் பின்னால் ஏஜென்சிகளால் ஆதாரப் பூர்வமாக மறுக்கப்பட்டுவிட்டது).

அடுத்து, இன்னொரு சாரார் முன் வைத்த குற்றச் சாட்டு, ட்ரம்ப் பல பொய்களைச் சொல்லி மக்களை ஏமாற்றித் தன் பக்கம் திசைதிருப்பியிருக்கிறார் (பொய் சொல்லாத அரசியல்வாதிகளா?). அப்படி ட்ரம்புக்கு ஆதரவாகப் பொய்யான செய்திகளைக் குவிக்கக் காரணமாக இருந்தது பேஸ்புக் என்னும் சமூக வலைதளம். ஃபேஸ்புக் மீது வைத்த இந்தக் குற்றச்சாட்டு அனைவரையும் ஆச்சரியமடையச் செய்தது, பணம் கொடுத்தார், பயமுறுத்தினார் என்பது மாதிரியான காரணங்களை ஏற்றுக்கொள்ளலாம், அல்லது இலவசப் பொருட்களைக் கொடுப்பதாக அறிவித்தார் என்றால் கூட நம்பும் படியாக இருந்திருக்கும். ஆனால், சற்றும் தொடர்பில்லாத மக்களின் பொழுதுபோக்கு வலை தளமான ஃபேஸ்புக் அமெரிக்க அதிபரைத் தேர்ந் தெடுக்கக் காரணமாக இருக்கிறதென்றால்... அதை எப்படி எடுத்துக்கொள்வது? நம்ப முடியுமா!

ட்ரம்பின் வெற்றியை விட அதற்குக் காரணமாக ஃபேஸ்புக்கைக் குறிப்பிடும்போது அனைவரின் புருவமும் உயர்ந்தது. இந்தக் குற்றச்சாட்டை ஃபேஸ்புக் மறுக்கவில்லை என்பதுதான் சுவாரஸியம். (நாமும் பொழுதுபோக்குக்காக அதிகம் பயன்படுத்தும் சமூகவலைதளமான ஃபேஸ்புக் இருப்பதை நினைவில் கொள்க).

ஒரு சில நாட்களில் ட்ரம்ப் தன் சாகசத்தைத் தொடங்க ஃபேஸ்புக் பற்றிய இந்தக் குற்றச்சாட்டை அனைவரும் மறந்துவிட்டார்கள். செய்திகளில் இருந்து இது காணாமல் போய்விட்டது. பல மில்லியன் டாலர் நிறுவனமான ஃபேஸ்புக்கின் தலைவரும், அதை உருவாக்கியவருமான மார்க் ஜுக்கர்பர்க் நிம்மதிப் பெருமூச்சு விட்டார். ஆனால், எல்லாம் சில மாதங்கள்தான்.

சில மாதங்கள் கழித்து...

2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம். அமெரிக்காவில் சனிக்கிழமை இரவு நேரம். இன்னும் சில மணி நேரங்களில் ஞாயிறு உதயமாகப் போகிறது.

'தி சன்டே அப்சர்வர்' பத்திரிகையின் தலைப்புச் செய்தி அனைவரையும் அதிர்ச்சியாக்கப் போகிறது என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். சனிக்கிழமை முடிந்து தனக்கு சனிதோஷம் பிடிக்கும் என்று ஜுக்கர்பர்க்கும் எதிர்பார்த்திருக்க மாட்டார். அன்றைய தலைப்புச் செய்தியில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலை உருட்டப்பட்டிருந்தது.

அந்தச் செய்தியின் சுருக்கம் இதுதான்.

(தொடரும்)

- விடுதலை நாளேடு, 24.12.18

'கணினி உலகும்' நமது வாக்குப் பறிப்பும்! (3)

ஃபேஸ்புக் பயனாளர்களின் தகவல்களைப் பயன்படுத்தி கேம்பிரிட்ஜ் அனாலிடிக்கா (cambridge analytica) என்னும் நிறுவனம் அமெரிக்க அதிபர் தேர்தலில் பல அமெரிக்க வாக்காளர்களை ட்ரம்புக்கு ஆதரவாக வாக்களிக்க, வாக்காளர்களைத் திட்டமிட்டு ஏமாற்றியிருக்கிறது.

"ஃபேஸ்புக் தகவல்களின் உதவியுடன் பல வாக்காளர்களை ட்ரம்புக்கு ஆதரவாக ஓட்டுப்போட அவர்கள் முடிவெடுக்க தாக்கம் செலுத்தினோம், அவர்களைக் குழப்பினோம், தூண்டினோம்" என ஒருவர் சாட்சியம் அளித்திருந்தார். ஆங்கிலத்தில் அவரை "விசில் ப்ளோவர்" (Whistle blower) என்று அழைப்பார்கள். ஆபத்து வரும் முன் காவலர் விசி லடித்து எச்சரிக்கை செய்வார் அல்லவா! அதைப்போல அரசு, அல்லது தனியார் நிறுவனங்கள் செய்யும் தகிடுத் தனங்களை மக்களுக்கு முன்னெச்சரிக்கையாக வெளிப் படுத்துபவர்களை விசில் ப்ளோவர் என்று அழைப் பார்கள். அப்படிப்பட்ட விசில் ப்ளோவர்தான் கிறிஸ் டோபர் வையலி. அவர் "கேம்பிரிட்ஜ் அனா லிடிகா" (Cambridge Analytica) நிறுவனத்தில் பணிபுரிந்தவர்.

சில மணி நேரத்தில் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் உலகம் முழுவதிலும் நடக்கும் பல தேர்தல் களில் சமூக, வலைதளங்கள் மற்றும் இதர டிஜிட்டல் தகவல்களின் உதவியுடன் இத்தகைய "வாக்காளர்களை வசியப்படுத்தும்" (Persuading Voters)  வேலைகளைச் செய்திருப்பது அம்பலமானது. குறிப்பாக இந்தியத் தேர்தல்களிலும். இந்தச் செய்திகள் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க செனட்கள் கொண்ட குழு மார்க் ஜுக்கர்பெர்கை விசாரணைக்கு அழைத்தது. கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்தின் முதன்மை மேலாளர் ராஜினாமா செய்தார். தேர்தல்களில் சமூக வலைதளங்கள் வக்காளர்களை வசியப்படுத்தவும், அவர்களை திசைத்திருப்பவும், குழப்பவும் பயன்படும் என்பது அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது. அனைவரின் மத்தியிலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இந்தியாவின் தகவல்தொடர்புத் துறை அமைச்சரான ரவிசங்கர் பிரசாத் அனைத்துச் சமூக வலைதள நிறுவனங்களுக்கும் எச்சரிக்கை விடுத்தார். இந்திய தேர்தல்களில் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அந்த நிறுவனங்களும், வலை தளங்களும் தடை செய்யப்படும் என எச்சரித்தார். ஆனால் பீதி விட்டபாடில்லை. தேர்தல் நடக்கும் போதெல்லாம் சந்தேகத்துடனேயே பார்க்க வேண்டியுள்ளது.

குழப்பமாக இருக்கிறதா? மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல் தெரிகிறதா?

ஃபேஸ்புக் பயன்படுத்தும் ஒருவரை எப்படி ஒரு கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க வைக்க முடியும்? தேர் தலுக்கும் ஃபேஸ்புக்குக்கும் என்ன சம்மந்தம்? அட... தேர்தலுக்கும் இணையத்திற்கும்தான் என்ன சம்மந்தம்? நான் வரிசையில் நின்று வாக்களிப்பதை அவர்களால் எப்படி மாற்ற முடியும்? முதலில் இது சாத்தியமா? என்று பல கேள்விகள் உங்களுக்கு எழலாம்.

முதலில் இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லி விடுகிறேன்.

ஆம், இதெல்லாம் முடியும்தான். விடை இதோடு முடிவதல்ல. ஃபேஸ்புக் பயன்படுத்தும் உங்களைத் தங்களுக்கு ஏற்றாற்போல் பல நிறுவனங்கள் வளைத்துப் போட முடியும். உங்களைக் குறிப்பிட்ட பொருட்களை வாங்க வைக்கமுடியும். உங்களுக்குத் தேவையே இல்லை என்றால் கூட, தேவையைச் செயற்கையாக உருவாக்க முடியும். உங்களைத் தங்களுக்கு ஆதரவாக வசியப்படுத்த முடியும். அதுவும் தொழில்நுட்ப ரீதியாக, அறிவியல் பூர்வமாக... உங்கள் மனநிலையை மாற்ற முடியும்.

நீங்கள் இணையத்தைப் பயன்படுத்துபவரா? எதற் கெல்லாம் பயன்படுத்துவீர்கள்? (கணினி அல்லது ஸ்மார்ட் ஃபோனில் எதில் வேண்டுமானாலும் இருக்கலாம்)

பொருட்கள் வாங்க, சாப்பாடு ஆர்டர் செய்ய, நண் பர்களுடன் தொடர்பில் இருக்க, பொழுதுபோக்கிற்காக, சினிமா பார்க்க, பில் கட்ட, பயணச் சீட்டு வாங்க என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். போதும்... நீங்கள் பல நிறுவனங்களின் அடிமை; உண்மையைச் சொன்னால் நீங்கள் ஒரு சோதனை எலி; அதே நேரம் யாரோ ஒருவர் கோடி கோடியாக லாபம் குவிக்க உதவும் ஓர் அப்பாவி அடிமை.

என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா?

உங்கள் பழைய நண்பர்களுடன் தொடர்பில் இருக்க  நீங்கள் சமூகவலைதளங்களைப் பயன்படுத்த லாம். உங்களின் முன்னால் காதலியைப் பற்றித் தெரிந்து கொள்ளக்கூடப் பயன்படுத்தலாம், மீம்கள் பார்த்து ரசித்திருக்கலாம், இணையப் போராளியாக இருக்கலாம், நீங்கள் இதில் எந்தக் காரணத்தைச் சொல்லி சமூக வலைதளங்களைப் பயன்படுத்தினாலும் சரி, நீங்கள் அவர்களுக்கு ஒரு எலிதான்.

நீங்கள் இந்தச் சமூகவலைதளங்களைப் பயன்படுத் துவதால் பெறும் நன்மைகளை விட உங்களைப் பயன்படுத்தி அவர்கள் பெறும் நன்மைகள் அதிகம். ஆனால், மறுபக்கம் இந்தச் சமூகவலைதளங்களால் உங்களுக்கு வரும் பிரச்சனைகளும் அதிகம்.

நீ ங் க ள் ஃபேஸ் புக்கைப் பயன்படுத்துகிறீர்கள். நிச்சயம் அய்ந்து பைசா அதற்காகச் செலவு செய்திருக்க மாட்டீர்கள். ஃபேஸ்புக்கின் பயனாளராக இலவசமாகத் தான் சேர்ந்திருப்பீர்கள். உங்களைப் போன்று பல லட்சம் பேருக்குச் சேவை தர ஃபேஸ்புக் தொழில்நுட்ப ரீதியாகப் பலமான கட்டமைப்பைப் பெற்றிருக்க வேண்டுமல்லவா? ஒரு சின்ன உதாரணம் பாருங்கள். பல கோடிப் பயனாளரின் வருகை, பகிர்வுகளின் படங்கள், வீடியோக்கள் என சகலத்தையும் ஃபேஸ்புக் சேமித்து வைத்திருக்கிறது. இவையெல்லாம் பல  Terabyte டேட்டாக்கள். அப்படியென்றால் அவ்வளவு தகவல்களைச் சேமிக்க எவ்வளவு பணம் செலவாகும் என்று யோசித்துப் பாருங்கள்? நாம் ஃபோனுக்குப் போட்டிருக்கும் 4 ஜிபி டேட்டா கார்டின் விலை சுமார் 500 ரூபாய். அப்படியென்றால் ஃபேஸ்புக் பயனாளர் களின் பல லட்சம் ஜிபி டேட்டாவைச் சேர்த்துவைக்கப் பணம் வேண்டாமா? இப்படியாக ஃபேஸ்புக் இயங்க பற்பலத் தொழில்நுட்ப உதவிகள் தேவை. அவை யனைத்தும் செலவுகள் பிடிப்பவைதான். அதுவும் கோடிக்கணக்கில் செலவுகள் செய்ய வேண்டும்.

அப்படியிருக்க ஃபேஸ்புக் சமூக சேவை செய் கிறதா? இல்லை சமூக சேவை செய்யத்தான் அவர்கள் பிறந்திருக்கிறார்களா?

ஃபேஸ்புக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கணக்குப் படி அந்நிறுவனத்தின் சர்வர்களைப் பராமரிக்க ஒரு மாதத்திற்குச் சுமார் 30 மில்லியன் டாலர்களைச் செலவு செய்கிறார்கள் (இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் 1800). கோடி மாதத்திற்கு 1800 கோடி ரூபாயைச் செலவுசெய்து இலவசமாக நம்மை பயன் படுத்த விடும் ஃபேஸ்புக் எப்படித் தன் செலவுகளைச் சமாளிக்கிறது? அது மட்டுமா அந்நிறுவனம் லாபத்தில் இயங்குவதாகச் சொல்கிறது.

லாபக் கணக்கு ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்த படியேதான் இருக்கிறது?

இது எப்படிச் சாத்தியம்?

ஃபேஸ்புக் செலவு செய்வதைவிடப் பல கோடி டாலர்களுக்கு மேல் லாபம் சம்பாதிக்கிறார்கள். அந்த வருமானத்திற்குக் காரணம் எல்லாம் நம் மூலமாகத்தான். அதாவது பயனாளர்கள் மூலமாகத்தான்.

நீங்கள் எப்படியெல்லாம் இந்நிறுவனங்களுக்குச் சோதனை எலியாக இருக்கிறீர்கள்? அவர்களின் வருமா னத்திற்கு எப்படி உரமாக இருக்கிறீர்கள்? அவர்கள் உங்களை எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள் கிறார்கள்? இதனால் ஏற்படும் சமூகப் பிரச்சனைகள், அறம் சார்ந்த பிரச்சனைகள் என அனைத்தையும் பற்றி அறிந்துகொள்வோம். விவாதிப்போம்.

இது ஒரு வெறும் தொடக்கம்தான்..."

உள்ளே பாடம் எடுப்பதைப் போல அருமையாக பல்வேறு செய்திகளை எளிதில் புரியும்படி விளக்கி எழுதியுள்ளார்.

நம் கையில் உள்ள வாக்குச் சீட்டை 'மயக்க பிஸ்கட்டுகள்' கொடுத்து ஏமாற்றிப் பறிப்பதுபோன்ற ஒரு வித்தை, இப்போது நடைபெறும், இனிவரும் - தேர்தல்களில் உண்டு என்பது அதிர்ச்சிக்குரியதாகும்.

-  விடுதலை நாளேடு, 25.12.18


திங்கள், 17 டிசம்பர், 2018

மனிதர்கள் மரணத்தைத் தழுவும் வேளையில்....!



இவ்வார 'சங்கொலி' (வைகோவின்) வார ஏட்டில் ஒரு பெட்டிச் செய்தி - அது பல ஏடுகளில் வருவதைப் போன்ற 'வெட்டிச் செய்தி' அல்ல. பயனுறு வாழ்வியல் சிந்தனைக்கான அனுபவ பாடம்!

கரூர் - பவித்திரத்தைச் சார்ந்த நண்பர் 'விஜய்' அவர்களால் தமிழாக்கம் செய்து தரப்பட்ட செய்தி1

"என் வாழ்க்கை எனக்கு அளவிட முடியாத அரசியல் மரியாதையை கொடுத்துள்ளது. என் பெயருடன் இணைந்த அடையாளமாகிப் போனது. கூர்ந்து யோசித்தால், நான் செய்யும் பணியை விட வேறு மகிழ்ச்சியான தருணங்களை, நான் அனுபவிக்கவில்லை என்றே தோன்றுகிறது. இன்று உடல் நலிவுற்று, படுக்கையில் நான் வீழ்ந்த நிலையில், நான் இதுவரை வாழ்ந்த வாழ்வினை சுயபரிசோதனை செய்து பார்க்கிறேன். புகழ், பணம் (சொத்து), கண்டிப்பு இவையே, வாழ்வில் நாம் அடைய வேண்டிய மைல்கல் என்று நினைத்தேன், ஆனால் மரணத்தின் வாயிலில் நிற்கும் எனக்கு இப்போதெல்லாம் அர்த்தமற்றதாகவே தெரிகிறது.

மரணத்தை நான் நெருங்கும் ஒவ்வொரு நொடியும், மருத்துவமனையில் என் படுக்கையை சுற்றி ஒளி, ஒலியிடும் உயிர் காக்கும் கருவிகள் நான் மரணத்தின் அருகாமையில் இருப்பதை உணர்த்துகின்றன. இந்த சிக்கலான தருணத்தில் நான் உணர்ந்தது என்னவென்றால் வாழ்க்கையில், பணத்தையும், புகழையும் குவிப்பதை விட இன்னும் அடைய வேண்டியது நிறைய உண்டு. சமூக சேவையும், நமக்குப் பிடித்தமான நபர்களோடு சரியான உறவு முறை பேணுதலும் மிக அவசியம். அரசியலில் எவ்வளவோ வெற்றி பெற்று இருந்தாலும், போகும் போது எதையும் எடுத்துப் போகப் போவதில்லை என்பதை நன்கு உணர்கிறேன்.

மரணப்படுக்கை மிகவும் தனித்துவம் வாய்ந்தது. காரணம் அந்த படுக்கையை பிறரோடு பகிர முடியாது. உங்கள் ஏவலுக்கு கட்டுப்பட, எத்தனை வேலைக் காரர்கள், டிரைவர்கள், பணியா ளர்கள் என்று இருந்தாலும் உங்கள் வியாதியை யாரோடும் பகிர முடியாது. எதை தொலைத்தாலும் தேடி கண்டுபிடித்துவிடலாம், ஆனால் தொலைத்த வாழ்நாளை மீட்டெடுக்க முடியாது. எனவே அர்த்தமுள்ள வாழ்வை வாழுங்கள்.

வாழ்நாள் முழுவதையும், வெற்றியைத் துரத்துவ திலேயே கழிக்காதீர்கள். வாழ்க்கை என்னும் நாடகத்தில், மரணம் என்னும் கிளைமேக்ஸ் காட்சி வந்தே தீரும்.  எனவே நண்பர்களே, உங்கள் மீது அக்கறை செலுத் துங்கள். உங்கள் பணத்தை அர்த்தமுள்ள முறையில் செலவு செய்ய பழகிக் கொள்ளுங்கள். உங்களை சுற்றி இருப்பவரிடம் பாசத்தைப் பொழிய பழகி கொள் ளுங்கள். பிறக்கும் போது நாம் அழுகிறோம், இறக்கும் போது நம்மை சுற்றி உள்ளவர்கள் அழுவார்கள். எனவே இந்த இரண்டு அழுகைக்கும் உட்பட்ட காலத்தை, மரணத்தை நாம் தொடும் முன்பு மகிழ்ச்சி யாகவும், அர்த்தமுள்ளதாகவும் வாழ்வோம்."

- இந்தியாவின் இராணுவ அமைச்சராக இருந்த வரின், தற்போதும் (கோவாவின்) முதலமைச்சராகவும் உள்ள  - பா.ஜ.க.வைச் சேர்ந்தவர் தான் மனோகர் பாரிக்கர் என் றாலும், மரணம் அனைவரையும் அழைத்துக் கொள்வதே - சம பார்வையுடன் அணைத்துக் கொள் ளும் ஒரு இயற்கையின் தொழில் நுட்பம் அல்லவா? அதனால் கட்சிக் கண்ணோட்டமின்றி 'விடுதலை'யில் அவரது கருத்து வெளி வருகிறது. மனிதம் எங்கே தெரிந்தாலும் வரவேற்க வேண் டியதுதானே மனிதர்களின் நேயம்! - அதன் அடிப்படையில்

இந்த மரண ஓலையின் கடைசி முத்தாய்ப்பான வரிகளை, ஓடி ஓடி - குறுக்கு வழிகளையும் கூடப் பயன்படுத்தி, உங்கள் உடல் நலத்தைக் கூடத் துறந்து விட்டு பணத்தைத் தேடி அலையும் மானிடர்களே - இதைப் படிப்பதோடு, மனதில் செதுக்கி வைத்துக் கொள்ளுங்கள்!

"எனவே நண்பர்களே, உங்கள்மீது அக்கறை செலுத்துங்கள்; பணத்தை அர்த்தமுள்ள முறையில் செலவு செய்யப் பழகிக் கொள்ளுங்கள்; உங்களைச் சுற்றியிருப்பவர்களிடம் பாசத்தை பொழிய பழகிக் கொள்ளுங்கள்!

திரண்ட அல்லது திரட்டப்பட்ட செல்வத்தைப் பொதுத் தொண்டறத்திற்கே பயன்படுத்துங்கள்.

பிள்ளைகள் உட்பட உங்கள் இரத்த உறவுகளுக்குக் கல்வி அறிவை - எளிய வாழ்வின் தேவைக்கு மட்டுமே தந்து, அவர்களை உழைத்து முன்னேற - பொது நலப் பணியாளர்களாக, சமுதாயத்திற்கு நாம் ஒவ்வொருவரும் பட்ட கடனைத் தீர்க்க அவர்களது வருவாயையும் செலவழித்து மகிழக் கற்றுக் கொள்ளுங்கள்!

- விடுதலை நாளேடு, 17.12.18

வியாழன், 13 டிசம்பர், 2018

பெற்றோர்களே, பெற்றோர்களே! கேளுங்கள்

அன்பார்ந்த பெற்றோர்களே, வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது  அகத்திலிருந்து - நம் உள்ளிருந்து - பெற வேண்டிய ஒன்று. வெளியிலிருந்து - கடைகளில் பொருள்கள் வாங்கி வருவது போன்றதல்ல - பெறுவது முடியாத ஒன்று!

கஷ்டம், சோதனை வந்தால் "மகிழ்ச்சி" போய் விடுகிறது என்பது சாதாரண, சராசரி மனிதர்களுக்கு மட்டுமே; சற்று தெளிந்தவர்களானால் நம் வாழ்க்கைக்கு குறிக்கோள் உண்டு; இலட்சிய இலக்கு - கொள்கைகள் உண்டு என்று நினைக்கும் அளவுக்கு சராசரி மனிதர்களைவிட சற்று 'உயரமாக' இருப்பவர்களுக்கு கஷ்ட, நஷ்டங்கள், கடும் சோதனைகள் துன்பத்தைத் தராது. மாறாக, நெருப்பில் போட்ட பொன்னைப் போல தகத்தகாய ஒளியாகவே மிளிரும்!

'சங்கு சுட்டாலும் வெண்மை தரும்' - இல்லையா?

ஜாதி வெறி, மத வெறி மற்றும் மூடநம்பிக்கைகளும், சடங்கு சம்பிரதாயம் என்ற செல்லரித்த பழக்க வழக்கங் களும் மூளையில் சேர்ந்த குப்பைகளாக இருப்பதால் மனதில் தூய்மை இருக்க முடியாத நிலையே ஏற்படும்!

எடுத்துக்காட்டாக,

"ஆஸ்திக்கு ஒரு ஆண்; ஆசைக்கு ஒரு பெண்" என்பது பத்தாம் பசலித்தனமானது அல்லவா? ஆசைக்கு மட்டும் தான் பெண் மகளா? ஆஸ்தி - சொத் தில் அவருக்குப் பங்கு கிடையாதா? இன்றுள்ள சட்டத் திருத்தப்படி (தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், கலைஞர் அரசு - காரணமாக) இன்று பெண்களுக்கு மகனைப் போல மகளுக்கும் பெற்றோர் 'ஆஸ்தி"யில் பங்குண்டே, சட்டப்படி!

இன்று அப்பழமொழி அர்த்தமற்றதாகி விட வில்லையா? 'புத்' என்ற நரகத்திற்குத் தகப்பன் போகாமல் இருக்கவே ஆண் பிள்ளை பிறக்க வேண்டும்; 'புத்திரி' ஆனாலும் அவரால் தடுக்க முடியாது என்பது காலாவதியான கருத்தல்லவா?

காலத்திற்கேற்ப பெற்றோர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டாமா?

குழந்தையாக இருந்த அந்தப் பெண் குழந்தையை - மகளிரை - பெற்றோர்களான தாய் - தந்தையர்களே எப்படியெல்லாம் பாசத்தைக் கொட்டிக் கொட்டி வளர்க்கிறீர்கள்; (பெண்) அவர் கேட்ட பொம்மை, அது கேட்கும் நகை 'நட்டுக்கள்'! துணிமணிகள்!  அதிலும் புடவை அணிந்தவர்களைவிட சுரிதார், கால்சட்டை, சட்டை அணியும் உடைமாற்றத்தைக்கூட!  பூப்பெய்தி, பெண்களை வீட்டிலா இப்போது பூட்டி வைக்கிறீர்கள்? - இல்லையே! நீங்கள் ஒப்புக் கொண்டுதானே வாங்கித் தருகிறீர்கள்?

அதுபோல உணவு வகையாறாக்களும்கூட அப் பெண் விரும்புவது போலத்தானே வாங்கித் தருகிறீர்கள். படிப்புக்கூட விருப்பம் அறிந்துதானே படிக்க கல்விக் கான பள்ளி, கல்லூரிகள்கூட அழைத்துச் சென்று சேர்க்கிறீர்கள்! 18 வயது வந்துள்ளதால் வாக்குரிமை உள்ளதால் பிள்ளைகள்  - மகன் - மகள் - யாருக்கு, எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று வற்புறுத்த முடியுமா? இன்றைய சூழ்நிலையில் முடியாதே!

ஆனால் அவர்கள் படித்துப் பட்டம் பெற்று, வேலையும் தேடி சம்பாதித்து தனி வாழ்க்கை நடத்தும் அளவுக்கு முதிர்ந்து முற்றிய நிலையில் அவ்விருவரும் ஒருவரை ஒருவர் விரும்பி காதலித்துப் பழகி மண மக்களாக வாழ விரும்பும் நிலையில், ஜாதி, மத, மூடப் பழக்க வழக்கங்கள் என்பது மூளைக் குப்பைகளாக ஏற்றப்பட்ட ஒரே காரணத்திற்காக, நமது பெண்களை கொலைக்கோ, தற்கொலைக்கோ ஆளாக்கலாமா?

அதிலும் கொடுமை, கூலிப்படைகளை ஏவி நாம் கண்ணும் கருத்துமாய் வளர்த்த நமது செல்வங்களை கொன்று விடவோ, எரித்து விடவோ, விஷங் கொடுத்து சதி வலை பின்னிக் கொல்லத் துணியலாமா?

நம் இரத்தத்தின் இரத்தம்; சதையின் சதை - "உன்கண்ணில் நீர் வழிந்தால் எம் நெஞ்சில் உதிரம் கொட்டுதம்மா!" என்று வளர்த்து, ஆளாக்கிய அருஞ்செல்வங்களை ஜாதி வெறி, மதவெறி, பண வெறி காரணமாக சாகடிக்க எப்படித்தான் முடிகிறது?

நாம் ஆறறிவு படைத்த மனிதர்கள் அல்லவா? மனிதத்தை மரணப் படுகுழியில் தள்ள எப்படித்தான் மனம் வரும்? அருமை பெற்றோர்களே, ஒரு கணம் சிந்தியுங்கள்;  கொன்ற பின் வாழ்நாள் முழுவதும் குற்றமுள்ள நெஞ்சத்தோடு உங்களால் எப்படி வாழ முடியும்?

கண்தானம், இரத்த தானம், உடல் உறுப்புக் கொடைகளை தரும்போது என் ஜாதியனுக்கு, என் மதத் தவருக்கும் மட்டும்தான் அதைப் பொருத்த வேண்டும் என்று நிபந்தனை விதிக்க முடியுமா உங்களால்?

இப்போது புரிகிறதா? ஜாதிக்கு, மதத்திற்கு எந்த விஞ்ஞான அடிப்படையும் இல்லாத, இடையில் வந்த   சதியாளர்களது சூழ்ச்சி அது என்று!

டாக்டர்களிடம் போகிறீர்கள். சொந்த ஜாதி பார்த்தா போகிறீர்கள்? என் ஜாதிக்காரன் தான் என் நோய் தீர்க்க அனுமதிப்பேன் என்று கூற முடியுமா உங்களால்?

பின் ஏன் 18 வயது தாண்டி, 21 வயது தாண்டி - நம் காலத்தை விட உலக அறிவு இணையதளம், டிவிட்டர், பேஸ்புக், கூகுள் என்ற காலத்தில் அவர்கள் நம்மை விட அறிவாளிகள் - முடிவு செய்து கொள்ளும் திறன் படைத்தவர்கள் என்று ஏன் ஒப்புக் கொள்ள மறுக் கிறீர்கள்?

திருமண வாழ்க்கை சரியாக அமைய வேண்டுமே என்ற கவலை தான் என்று ஒரு பொய்யான - போலிக் காரணத்தைக் கூறுகிறீர்கள் - மனச்சாட்சியை மறைத்து விட்டு!

பெற்றோர்கள் பார்த்து நடத்திய திருமணங்கள் எல்லாம் தோல்வியே அடைவதில்லையா? எல்லாம் வெற்றியா?

தவறானால் அதைத் திருத்தி மாற்றுவழி கண்டறிய அச்செல்வங்களுக்கு உரிமையும் தருவதும் உண்டே; அதை ஏன் மறந்து விடுகிறீர்கள்?

தாராள மனதுடன் மனிதாபிமானத்தைக் கொன்ற 'மிருக அவதாரம்' எடுத்து விடாதீர்! மனிதர்களாக வாழ்ந்து, பிள்ளைத் தோளுக்கு மேல் வளர்ந்த பிறகு தோழர்களாக நடத்தி மகிழ்ச்சியை அறுவடை செய்யுங்கள்!

(அச்சிட்டும் வழங்கலாம்)

- விடுதலை நாளேடு, 13.12.18

திங்கள், 3 டிசம்பர், 2018

யாம் பெற்ற பெரும் பேறுகள் (3)



சேலத்தில் எனது உரையைப் பாராட்டி என்னை மிகவும் ஊக்கப்படுத்தியது பற்றி நேற்று குறிப்பிட்டேன்.

அதுபோல அய்யா தந்தை பெரியார் அவர்கள் நடத்திய தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டில் அய்யா அவர்கள் உரைக்கு முன்னால் முற்பகல் சுமார் 12 மணிக்கு மேல் (1973 டிசம்பர் 8,9) பேசினேன். அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கி அதன்மூலம் ஒரு சமத்துவத்தை ஏற்படுத்த அறிவித்துள்ள அறப் போரின் ஆழமான கருத்து, ஒரு மனித உரிமைப் போரின் மறுவடிவமே, ஒரு மீட்டெடுப்பு இயக்கமே! கொள்கை வேறு; உரிமை வேறு என்பதையெல்லாம் விளக்கி சட்ட சூழல் - அறப்போரின் தேவை பற்றி அய்யாவின் அறிக்கைக்கான விளக்கம் பற்றி விரிவாகப் பேசினேன். அய்யா கேட்டுக் கொண்டிருந்து, அடுத்து பேச்சைத் துவக்கும்போது, "வீரமணியின் இந்தப் பேச்சோடு இந்த மாநாட்டின் முற்பகுதி முடிந்திருந்தால் நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்; காரணம் அவ்வளவு விளக்கமாகவும், தெளிவாகவும், ஆதாரப் பூர்வமாகவும் அவர் பேசி விட்டார். சுவையுள்ள விருந்துக்குப் பிறகு நான் பரிமாற என்ன மிச்சமிருக்கிறது? என்றாலும் நானும் அதைப் பின்பற்றியே சில கருத்துக்களை உங்கள் முன்கூறிட ஆசைப்படுகிறேன்" என்றார். (இந்த உரை பதிவாகி நம்மிடம் உள்ளது). இந்த அய்யாவின் நம்பிக்கை பொய்த்துப் போய் விடக் கூடாதல்லவா? அதற்காகவே கூடுதல் கவனத்தோடு மேடைகளையும் சரி, எழுத்துக் களத்தையும் சரி இன்றுவரை அக்கறையுடன் பயன்படுத்துகின்றேன்.

பழைய ஆசிரியர், ஆற்றல் வாய்ந்த எழுத்தாளர் குத்தூசி கா. குருசாமி அவர்கள் சிற்சில நேரங்களில் சில கருத்துக்களை அய்யாவின் எண்ணம், அணுகு முறைக்கு விரோதமாக இருக்கும்படி தலையங்கங்களில் எழுதி விடுவதுண்டு.

தந்தை பெரியார், 'விடுதலை' தலையங்கத்தின் கருத்து தன் கருத்து அல்ல; அதற்கு மாறாக வெளிவந்துள்ளது என்று குறித்து, வாசகர்கள் பெரியார் கருத்து அல்ல - தலையங்கக் கருத்து என்று புரிந்து வைக்கவே அப்படி ஒரு அறிக்கை, அறிவிப்பு! இது 3,4 தடவை  வந்து விட்டது.

தலையங்கம் எழுதும்போது தத்துவங்களையும், கொள்கைகளையும் தான் கருத்தில் கொண்டு எழுத வேண்டுமே தவிர, தன்னை உயர்த்திக் கொள்ளவோ, தனது எதிரிகளை அல்லது மாஜி நண்பர்களைத் தாக்குவதற்கான தளமாக அதைக் கருதிவிடக் கூடாது. பிரச்சினைதான் நம் பேனாவுக்குத் தெரிய வேண்டுமே தவிர, மற்றபடி எதிரிகளைத் தாக்க இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்ற அடிமன வெறுப்பு காழ்ப்பு வெளியாகும் வகையில் அமைந்து விடக் கூடாது என்ற பாடம்தான் அய்யாவின் மறுப்பு அறிக்கையின் தத்துவம் ஆகும். "ஒரு முறை விழுந்தவன் அதே இடத்தில் மீண்டும் மீண்டும் விழக் கூடாது" என்பார் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள்.

அதுமட்டுமல்ல; அப்பாடத்தை அடுத்து வருபவர்களும் கற்றுக் கொள்ள வேண்டுமல்லவா? அதனை நான் திடப்படுத்திக் கொண்டுதான் பொறுப்பில் அமர்ந்தேன் - இல்லை இல்லை அமர்த்தப்பட்டேன்.

இறுதிவரை எனது தலையங்கத்திற்கு அய்யா அவர்கள் மாறுபட்டோ அல்லது அவரது மறுப் பறிக்கையோ வரவில்லை; வராமல் கவனத்துடன் எழுத, முன் எச்சரிக்கை மணியாக அவை - தக்க வழிகாட்டும் பாடங்களாகவே அமைந்ததால் நான் "பிழைத்தேன்"

அய்யாவை சென்னை மற்றும் வெளியூருக்குச் சென்று பயணத்தில் சந்திக்கின்ற பல நேரங்களில் "நான் இந்தப் பிரச்சினை குறித்து எழுதுங்கள் என்று கூற நினைத்தேன். 'விடுதலை'யில் அதுவே தலையங்கமாக வந்து விட்டது. நேற்றுகூட உங்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளேன். அது சேரும் முன் இன்று அதே கருத்துள்ள தலையங்கம் வந்துள்ளது" என்பார்; இதைவிட எனக்குப் "பெரு ஊதியம்" வேறு எது? - இப்படிப் பல இனிய நினைவுகள், நிகழ்வுகள்!

(பிறகும் தொடரலாம்)

- விடுதலை நாளேடு, 3.12.18

ஞாயிறு, 2 டிசம்பர், 2018

யாம் பெற்ற பெரும் பேறுகள் (2)

தந்தை பெரியார் அவர்கள்  எனது பேச்சை முடிக்கும் படியான அவரது கட்டளை மற்றபடி எப்போதும் ஏற்பட்டதே இல்லை.
மற்றொரு வேடிக்கையான அனுபவம்! சென்னை மயிலாப்பூர் வீரப் பெருமாள் கோயில் தெருவில் சென்னை மாவட்டச் செயலாளர் மறைந்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் எம்.கே. காளத்தி, வாழும் தோழர் இராமமூர்த்தி போன்ற தோழர்கள் ஏற்பாட்டில் ஒரு மாபெரும் திராவிடர் கழகப் பொதுக் கூட்டம்.
அய்யாவுடன் சென்றேன். அய்யா பேசுமுன் என்னைப் பேச அழைத்தார்கள். பேச்சைத் துவங்கி ஒரு பத்து மணித்துளிகள் பேசிய நிலையில் அய்யா தனது கைத்தடியைத் தட்டுவது போன்ற ஓசை கேட்டவுடன், 'டப்' என்று மேலே அதிகம் பேசாமல் பேச்சை முடித்து விட்டேன். கூட்டத்தினருக்கும், மேடையிலிருந்த நமது முக்கியப் பொறுப்பாளர்களுக்கும் கூட ஒரு சிறு மனக் குழப்பம். ஏன் இவர் உடனடியாகப் பேச்சை முடித்து விட்டார்; ஒரு வேளை அவருக்கு உடல் நலக் குறைவோ என்ன காரணம் என்று ஊகித்தபடியே இருந்தனர்.
அய்யா இராமாயணப் புரட்டுபற்றி விரிவாக சுமார் 2 மணி நேரம் பேசி முடித்து விட்டு, வேனில் அனைவரும் புறப்பட்டோம். வேன் புறப்பட்ட சிறிது நேரத்தில் அய்யாவிடம் தோழர்கள் புத்தக விற்பனைத் தொகைபற்றிக் கூறினார்கள்; மகிழ்ந்தார்! பார்ப்பனர்களும், பல கட்சி நண்பர்களும்கூட புத்தகம் வாங்கிச் சென்றனர் என்பதை அறிய மேலும் மகிழ்ந்தார்.
அடுத்து என்னை பார்த்து, "ஏம்பா நீங்க பேச்சை உடனே அவசரமாக முடித்தீர்கள்?" என்று கரிசனத்துடன் கேட்டார்.
நான் "அய்யா தடியைத் தட்டியதைப் பார்த்தேன். பட்டென்று முடித்து விட்டேன்" என்றவுடன், அய்யா கலகலவென்று சிரித்து விட்டு "அட பைத்தியக்காரா, நான் சீட்டா நாயை மேடைக்குக் கீழே போகச் சொல்லி ஜாடை காட்டிடவே தடியைத் தட்டினேன். அதை நீ உனக்காக என்று எடுத்துக் கொண்டாயோ" என்றார்! எல்லோரும் சிரித்தார்கள்!!
தலைமையின் கட்டளைக்காக காத்திருந்து குறிப்பறிந்தே நடந்து கொள்ளுபவர்களே முதன்மைத் தொண்டர்கள் ஆவார்கள்; இல்லையா?
எனக்கு வியப்புடன் கூடிய கொள்ளை மகிழ்ச்சியும், அதே நேரத்தில் பொறுப்புடன் பேச, எழுத நாம் எவ்வளவு கவனமாக உள்ள பெரியார் மாணவனாக, தொண்டர்க்குத் தொண்டனாக நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் உணர்த்திய - "யான் பெற்ற பேறு" என்று வாழ்நாள் முழுவதும் அசை போட்டு மகிழ வைத்த வாய்ப்பை அறிவு ஆசான் ஒரு முறை அல்ல இரண்டு முறை தந்தார்கள்.
ஆச்சாரியார் (ராஜாஜி) சுதந்திரா கட்சி ஆரம்பித்து சில மாதங்கள் ஆன நிலையில் அது பணக்கார ருக்காகவும், பார்ப்பன வர்ண தர்ம பாதுகாப்பு நலன் இவற்றை உத்தேசித்தே துவக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்ற ஒரு அரசியல் கட்சி; மேலும் பச்சைத் தமிழர் காமராசரிடம் தனக்குள்ள காழ்ப்புணர்வு காரணமாக அவரை எதிர்க்க மட்டுமல்லாமல், அவரை கவர்னர், மத்திய அமைச்சர், கவர்னர் - ஜெனரலாக்கிய காங்கிரஸ் கட்சியை ஒழித்துக் கட்டும் வேலையையும் தொடங்கி வஞ்சினத்தோடு நடத்தி வருகிறார்; முன்பு 'அபேத வாதம்' (சோஷலிசம்) பற்றி எழுதியவர் இப்போது முதலாளிகளுக்கு ஆகப் பேசத் துவங்கி விட்டார் என்பதை பல ஆதாரங்களோடு அடுக்கடுக்காகப் பேசிக் கொண்டே இருந்து, "அடுத்து அய்யா பேச விருப்பதால் எனது உரையை மேலும் தொடர விரும்பவில்லை" என்று கூறியபோது, அய்யா இடைமறித்து, "பேசுங்கள், பேசுங்கள் - எல்லா தகவல்களையும் சொல்லுங்கள்" என்று மகிழ்ச்சியுடன் தலையாட்டி கூறினார். மேடையில் ஒலி பெருக்கியில் கேட்ட அவ்வளவு கூட்டத்தினரும் கைதட்டினர். மேலும் அரை மணி நேரம் பல புள்ளி விவரங்கள், முன்பு அவர் எழுதியதற்கு நேர் முரணானப் போக்கு என்று விளக்கி முடித்தேன். ஏறத்தாழ ஒரு மணி நேரம்.
இந்தக் கூட்டம் பெருங்கூட்டம். சேலம் செவ்வாய் பேட்டை அல்லது அரிசிபாளையத்தில்... இறுதியாக அய்யா அவர்கள் பேசத் துவங்கி,
"நண்பர் ஆசிரியர் வீரமணி, மிகவும் விளக்கமாக, தெளிவாகவும், ஆதாரங்களைக் காட்டியும், மிக விரிவாகப் பேசி, உங்களையெல்லாம் வெகுவாக சிந்திக்கும்படி ஒரு உரையை நிகழ்த்தியுள்ளார். அவர் உங்கள் அனைவர் மனதில் வரைந்த ஓவியத்தை நான் கலைத்து விடக் கூடாதே என்பதால் இதோடு இக்கூட்டம் முடிந்தால் நல்லது; நீங்கள் அனைவரும் அதே சிந்தனையோடும், ஒரு நல்ல முடிவோடும் வீட்டிற்குப் போவீர்கள். என் பேச்சு அதிலிருந்து உங்களை திசை மாற்றிடுமோ என்று அஞ்சுகிறேன். என்றாலும் நீங்கள் என் பேச்சைக் கேட்பதற்காகவே வந்திருப்பதால், ஏமாற்றம் அடையக் கூடாது என்பதால், அவரைத் தொடர்ந்து நான் மேலும் சில வார்த்தைகளைக் கூற விரும்புகிறேன்" என்ற பீடிகையுடன் தொடர மேலும் ஒன்றரை மணி நேரம் ஆழமான உரை யாற்றினார்!
நண்பர் பேராசிரியர் சி.வெள்ளையன் போன்றோர் மெத்த பூரிப்புடன் (அவர் அக்கூட்டத்தில் இருந்தார்) "அய்யா இப்படி யாருக்கும் சொன்னதாகத் தெரியவில்லை; உங்களுக்கு எவ்வளவு பெரிய வாய்ப்பு" என்றார்.
தன்னடக்கத்துடன் மகிழ்ந்தேன். இதுபோல் சென் னையிலும் மற்றொரு வாய்ப்பு ஏற்பட்டது!
(வளரும்)
- விடுதலை நாளேடு, 2.12.18

யாம் பெற்ற பெரும் பேறுகள் (1)

எனக்கு 86 வயது பிறக்கிறது என்ற ஒரு 'வசதியற்ற உண்மையை'  (an  inconvenient  truth)  நினை வூட்டுகிறார்கள் நம் தோழர்கள்!
பெரியாரின் பெரும் பணியின் ஒருசிறு துளியாக சிலவற்றை நிறைவேற்றினேன்; அய்யா பெரியாரும், அன்னையாரும், அவர்களையொட்டி நமது குருதி உறவுகளை விட மேலான எம் அரும் தோழர்களும் இந்தத் தொண்டர்க்குத் தோழனான வனிடத்தில் வைத்த  நம்பிக்கையை நியாயப்படுத்த இன்னமும் உற்சாகத்தோடு உழைப்பதில் எல்லையற்ற மகிழ்ச்சி காணுகிறேன். பொது வாழ்வில் உள்ள பலருக்கும் எளிதில் கிட்டாத வாய்ப்பு, என்னால் எனது உறவுக் குடும்பத்திற்கு எந்த லாபமும் இல்லையானாலும், அவர்களால் எனக்கு நிரம்ப லாபம் உண்டு; காரணம் அவர்கள் என் பணிக்கு உறுதுணையானவர்களே எனது வாழ்விணையர் முதல் அனைவரும்; இன்னும் கேட்டால் நேரடியாக இல்லா விட்டாலும் மறைமுகமாகவும் உரமிட்டுக் கொண்டி ருப்பது - குடும்பத்தில் ஒரு சிறு பிரச்சினையும் ஏற் பட்டதில்லை என்பதே எனக்கு மகத்தான உதவி அல்லவா?
வயதான நிலையில் பலர் 'இதை அடைய வில்லையே;' 'அது கிட்டாமற் போய் விட்டதே' என்று மனச் சஞ்சலம் அடைவது உண்டு. அது போன்ற எந்தக் கவலையும் எனக்கு ஏற்பட்டதில்லை; நம்மீது அன்பும், நட்புறவும், நம்பிக்கையும் கொண்ட இத்தனை தோழர்கள் உலகம் முழுவதும் உள்ளார்களே என்ற மகிழ்ச்சியே ஊற்றெடுக்கிறது! சீரிளமைத் திறத்தினை வழங்குகிறது.
பெரியவற்றுள்ள எல்லாம் பெரிது பெரியாரை தமராக் கொள்ளல் என்பது நம் அனைவருக்கும் கிடைத்த அரியதோர் நல்வாய்ப்பு.
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது
(- குறள் 7)
இதற்கு தனக்குவமை இல்லாத நம் தலைவரை பின்பற்றியது (தாள் சேர்ந்தார்க்கல்லால்) என்பது உண்மைப் பொருள் - 'நல்ல தலைமையைத் தேர்ந் தெடுத்துப் பின்பற்று', என்பதல்லாமல் அது வேறு என்ன?
குறிப்பாக யாம் பெற்ற பேறு - யாருக்கும் கிட்டாத தனிப்பேறு என்று காலமெல்லாம் எண்ணி எண்ணி இறும்பூதெய்துவது எந்த பேறு குறித்து தெரியுமா?
அக்காலத்தில் சில பேச்சாளர்கள் அய்யாவை வைத்துக் கொண்டு "அதிகப் பிரசங்கம்" செய்யும்போது தடியைத் தட்டிடுவார்; அதற்குப் பொருள் உடனே முடியுங்கள்; பேச்சை நீட்டாதீர்கள் என்பதேயாகும்!
உங்களுக்கு அப்படி ஒரு அனுபவம் அய்யா தடியைத் தட்டி (மறைமுகமாக) பேச்சை முடிக்க குறிப்புக் காட்டிய அனுபவம்  - ஏற்பட்டது உண்டா என்றுதானே கேட்க நினைக்கிறீர்கள்?
இதோ பதில் சொல்லி விடுகிறேன், எனக்கும் ஒரு முறை ஏற்பட்டது உண்டு!
திருவண்ணாமலை அருகில் உள்ள செங்கம் பக்கத்தில் உள்ள புதுப்பாளையம் (செங்கம் - புதுப் பாளையம் என்றே அழைப்பர்) ஒரு கழக முக்கியஸ்தரின் வீட்டுத் திருமணம் - பல ஆண்டுகளுக்கு முன்பு.
அய்யா அவர்களும், அன்னையாரும் முதல் நாள் இரவே சென்று தங்கி, காலை 9 மணிக்கெல்லாம் திருமணம் துவங்கி விட்டது; நான் சென்னையிலிருந்து செங்கம் - புதுப்பாளையம் சென்றேன்; சற்றுதாமதம்; அய்யா தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்துப் பிறகு பேச இருக்கிறார்; சில தோழர்கள் வாழ்த்துரை வழங்கினர்; என்னையும் பேசுமாறு பணித்தார்கள்.
நான் சுயமரியாதைத் திருமணம் - அதன் சிறப்புகள், சடங்கு, சம்பிரதாயங்களைத் தவிர்த்தலின் நன்மை இவைகளைப்பற்றி 'சிலாகித்துப்' பேசத் துவங்கி, சில நிமிடங்கள் ஆன நிலையில், அய்யா (தலைவர்) தடியைத் தட்டினார். எனக்கு ஒரே அதிர்ச்சி. மிக அதிக நேரமும்கூட பேசவில்லை. உடனே பேச்சை முடித்து உட்கார்ந்து விட்டேன்; பிறகு அய்யா பேசி மணவிழா முடிந்தது. அய்யா வேனில் ஏறி அய்யாவுடன் பயணம்.  வேனில் அன்னையார், புலவர் இரா. இமயவரம்பன் மற்றும் சில கழக முக்கியப் பொறுப்பாளர்கள் மட்டும் இருந்தனர்.
வேன் சிறிது தூரம் சென்றவுடன் அய்யா என்னைப் பார்த்து "நீங்கள் பேசும்போது ஏன் முடிக்கச் சொன்னேன் தெரியுமா? அந்த வீட்டு சம்பந்தியை திருப்தி செய்திட இரவு சில சடங்குகளைச் செய்ய வேண்டிய 'இக்கட்டுக்கு' நமது முக்கியஸ்தர் ஆளாகி, பிறகு என்னிடம் வந்தவுடன் மன்னிப்புக் கேட்டு நான் சமாதானம் சொன்னேன் அவருக்கு.
நீங்கள் நேரே இப்போதுதான் மேடைக்கு வந்ததால் உங்களுக்கு அது தெரிய நியாயமில்லை - வழக்கம்போல் எல்லா சுயமரியாதைத் திருமணங்களிலும் பேசும் முறை போல பேச ஆரம்பித்து விட்டீர்கள்; கேட்பவர்கள் நம் இயக்கத்தைப்பற்றி தவறாக நினைக்கக் கூடும் அல்லவா?
செய்து விட்டு செய்யாததுபோல் கூறுகிறார்களே இவர்கள் என்பார்களே; அதற்காகத்தான் 'சட்'டென்று முடிக்கச் சொன்னேன் - புரிகிறதா?" என்று எனக்கு விளக்கம் கூறினார்கள்.
அய்யா தட்டினால் அதற்கு ஏதோ காரணம் இருக்க வேண்டும் என்று தான் நான் நினைத்தேன். இப்போது புரிந்தது. "நன்றி, அய்யா, மன்னித்துக் கொள்ளுங்கள்" என்றேன். "பரவாயில்லை,  தாமதமாக வந்த உங்களுக்கு எப்படி அங்கு முன்பு நடந்தது தெரியப் போகிறது என்பதால் அது ஒன்றும் தவறல்ல" என்று என்னையும் "தேற்றினார்"
எப்படிப்பட்ட தலைமை - பார்த்தீர்களா?
விடுதலை நாளேடு, 1.12.18