பக்கங்கள்

சனி, 24 பிப்ரவரி, 2018

முதுமையும் - முதிர்ச்சியும்: ஒரு விளக்கம் (1)



முதுமை என்பது நம்மால் தவிர்க்க முடியாதது. எதைத் தவிர்க்க முடியாதோ, அதை ஏற்கப் பழகவேண்டும் - இன்முகத்துடன்!

உலகின் அழகுப் போட்டியில் முதற்பரிசு பெற்று உலகம் முழுவதும் விளம்பர வெளிச்சம் - ஏராளமான பண வரவு, அடுத்து பணக்கார வாழ்க்கைத் துணையேற்றல் எல்லாம் கிடைக்கும்; கிடைத்திருக்கிறது. ஆனால், அந்தப் பெண்ணும், அதைப் பெரிதும் மதித்துப் போற்றிப் பெருமிதத்தால் விம்மிய ஆணும்கூட, வயது ஏற ஏற முதுமையைத் தானே ஏற்கவேண்டும்.

முதுமையை தள்ளிப் போ(ட)க எவ்வளவு ‘லஞ்சம்' கொடுத்தாலும், கொடுக்கப் பேரம் பேசினா லும்கூட, அது போகுமா? போடவும் முடியாதே!

எனவே, காலம் நமக்கு அளித்துள்ள பரிணாம வளர்ச்சியில் முதுமையும், மரணமும் (இன்று வரையில் - நாளை அறிவியல் இதை மாற்றும் வாய்ப்பு இருக்கலாம்) தவிர்க்க இயலாதவை அல்லவா! எனவே, கவலைப்படாமல் ஏற்று, அந்த முதுமையைப் பயன் உள்ளதாக்க, அதையே மகிழ்ச்சியுடன் அனுபவிக்க, மனித குலத்தவராகிய நாம் ஆயத்தமாகிடுவதே அறிவுடைமை - இல்லையா?

முதுமை நாம் ஏற்றாலும், ஏற்காவிட்டாலும் அது இயற்கை நம்மீது திணிக்கும் கட்டாயக் காதல்தானே! வேறு வழி இல்லையே!

ஆனால், முதிர்ச்சி என்பது அப்படி அல்ல. அது முதுமையடைந்தாலே தானே கதவைத் திறந்துகொண்டு வருவதல்ல. முதிர்ச்சி என்பது, நமது பண்புகள், பழக்கங்கள்மூலம் செதுக்கிப் பொலிவும், வலிவும் பெறவேண்டிய ஒரு அருங் குணம்! முதிர்ச்சி உடையோர் என்றும் இகழ்ச்சிக்கு ஆளாகார்!

அம்முதிர்ச்சி என்பது எப்படி வரும் - எது முதிர்ச்சியின் அடையாளம் என்று கேட்கிறீர்களா?

கீழ்வரும் 11 குணங்களை குறளில் உள்ள குறட் பாக்களைப் போல் படித்து, செரித்து, நடைமுறைப் படுத்துங்கள். மகிழ்ச்சியின் உச்சத்திற்கே உலகம் உங்களைக் கொண்டு சென்று நிறுத்தும்.

1. மற்றவர்களைத் திருத்துவதை விட்டுவிட்டு, நம்மை நாமே முதலில் திருத்திக் கொள்வது. மற்றவருக்கு அறிவுரை வழங்காதீர்; உங்களுக்கு நீங்களே அறிவுரை, அறவுரை வழங்கி, நடைமுறை யில் செயலுருவில் மாற்றத்திற்கு ஆளாகுங்கள்.

2. எவரிடமும் முழுமையான குணாதிசியங்களை (பூரணத்துவம் - Perfection அய்) எதிர்பார்க்காதீர்கள். குறைகளுடன் அவர்களை ஏற்றுக்கொள்வது அவசியம். ஊனமுற்ற நம் குழந்தைகளை நாம் நேசிக்கவில்லையா? கொன்றா போட்டு விடுகி றோம்? இல்லையே! இன்னுங்கேட்டால் அவர் களிடம்தானே அதிகப் பரிவும், பாசமும் காட்டு கிறோம்.

3. மற்றவர்களின் கருத்துகளை அவர்கள் கோணத்திலிருந்து புரிந்துகொள்ள முயலுங்கள். நீங்கள் உங்கள் கண்ணோட்டத்தில் பார்க்கும் பார்வைக்கும், அவர்களது பார்வைக்கும், நடத் தைக்கும் மிகப்பெரிய வேறுபாடுகளும், காரண காரியங்களும் இருக்கும்; அந்த மறுபக்கத்தை ஆழமாக அலசி - மனிதநேயத்துடன் இதைப் பார்த்தால், நமது நோக்கும் - போக்கும் அவர்பற்றிய (அவசர) முடிவும் தவறு என்று தெரியும்.

ஜப்பானில் ஒரு ஏழைப் பெண் குழந்தை தவ றாமல் வகுப்புக்கு வந்தவர்; திடீரென காலதாமதமாக சில நாள் தொடர்ந்து வந்தார்; பிறகு விடுமுறை போட்டு, பள்ளிக்கு விட்டு விட்டு வந்து அபராதம் - தண்டனை பெற்றார்.

பிறகு ஒரு நாள் திடீரென பள்ளிக்கு வழமை போல் முன்கூட்டியே நேரத்திற்கு வந்தார். ஆசிரி யர்கள் மீண்டும் இவரைச் சேர்த்துக் கொள்ள மறுத்தனர்.

அப்போது அவர் சொன்னார்,

‘‘எனது ஊனமுற்ற தாயும், பாட்டியும் இருந்து என்னை பள்ளிக்கு அனுப்பினர். பிறகு தாய் நோயினால் இறந்துவிட்டார். பாட்டியைக் கவனிக்க மருந்து, உணவு தர எல்லாவற்றையும் ஏற்பாடு செய்துவிட்டு வருவதற்குத் தாமதமாகியது. பிறகு பாட்டிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், அவரை மருத்துவமனையில் சேர்த்து, நானும் உடனிருந்தேன். பாட்டி இறந்ததால், ஈமச்சடங்குகள் நேற்றுதான் முடிந்தன. இப்போது பள்ளிக்கு வந்துள்ளேன். நான் கவனிக்க, உதவிட யாரும் இனி எனக்கு இல்லை. எனவே, காலந்தவறமாட்டேன்'' என்று கண்ணீர் மல்க சொன்னார் அந்த மாணவி. ஆசிரியர்கள் அழுதார்கள்; பள்ளியில் அவரைச் சேர்த்துப் படிக்க வைத்தார்கள்.

இதுபோல நாம் நமது கோணத்தில் மட்டுமே பார்த்தால் உண்மை புரியாது. அவர்கள் நிலையில் இருந்து பாருங்கள். ‘‘ஒத்தறிவு'' (Empathy) என்பது மிகவும் தேவை. அது வந்தால் முதிர்ச்சி வந்துவிட்டது என்று பொருள்.

(தொடரும்)
- விடுதலை நாளேடு, 24.2.18

வியாழன், 15 பிப்ரவரி, 2018

அந்த 70 சதவிகிதத்தைத் துறந்து 30 சதவிகிதத்தைக் கவனியுங்கள்!



நாம் இறக்கும்போது நமது பணம் வங்கியில் இருக்கும்!

என்றாலும் நம்மில் பலருக்கு உயிருடன் உள்ளபோது செலவழிக்கப் போதிய பணமோ, மனமோ இருக் காது!

நாம் மறைந்த பிறகு செலவழிக்கப் படாத பணம் மிகுதியாக வங்கியில் இருக்கும்; இருக்கவே செய்யும் உண்மையில்!

சீனாவில் ஒரு பெருந்தொழிலதிபர் இறந்துவிட்டார். அவரது மனைவி யான அந்த விதவைக்கு அவர் விட்டுச் சென்றது 1900 கோடி யு.எஸ். டாலர்கள்!

அந்த விதவை, அந்தத் தொழில திபரின் காரோட்டியை மறுமணம் செய்துகொண்டார்!

அந்தக் காரோட்டி சொன்னார்:

‘‘இதுவரை நான் எனது முதலா ளிக்குத்தான் (Boss) வேலை செய் தேன் என்று நினைத்துக் கொண்டி ருந்தேன். இப்போதுதான் எனக்குப் புரிந்தது எல்லா வேளைகளிலும் எனக்காகத்தான் எனது முதலாளி உழைத்துக் கொண்டே இருந்தார் என்பது!''

இதிலிருந்து ஒரு கசப்பான உண் மையை அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டும்.

அதிகமான செல்வம், சொத்து சேர்ப்பதில் கவனமாக, குறியாக இருப்பதைவிட மிக முக்கிய நல்ல ஆயுளை திடகாத்திரமாக இருக் கும்படி பார்த்துக் கொள்ள உழைப் பதே முக்கியம் என்பதாகும்!

எனவே, நாம் அனைவரும் நல்ல ஆரோக்கியம், பலம் வாய்ந்த உடல்கட்டினையே நிலை நிறுத்துவது மிக அவசியம் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

யார் யாருக்கு உழைக்கிறார்கள் என்பது முக்கியமல்ல; எதற்காக உழைக்கிறோம் - எதை நோக்கி நம் வாழ்க்கை அமைகிறது என்பதே முக்கியம் ஆகும்!

மிக விலை உயர்ந்த நவீன அதிக தொழில்நுட்ப வசதிகளை உள்ளடக் கிய கைப்பேசியை (செல்போனை) வாங்கிப் பெருமையும், மகிழ்ச்சியும் அடையும் நமது நண்பர்களில் பல ருக்கும் புரிய வேண்டிய முக்கிய செய்தி:

அதில் உள்ள 70 சதவிகித நவீன வசதியான தொழில்நுட்பங்களை நாம் பயன்படுத்துவதில்லை - நமக்கு அது வெறும் ‘வேஸ்ட்' தான்!

அதேபோல அதிக விலை உயர்ந்த நவீன மாடல் காரினை பல புதிய பணக்காரர்கள் -  தொழிலதிபர்கள் - அரசியல்வாதிகள் - திரைப்பட நடிகர் நடிகைகள் வாங்கி மகிழ்கின்ற னர். அவர்கள் தங்களைத் தாங்களே  கேட்டுக்கொள்ள வேண்டிய ஒரு கேள்வி. அதில் உள்ள 70 சதவிகித வேக மற்றும் நுட்ப மின் கருவிகள் (Gadgets) நமக்குத் தேவையா? அவற்றை நாம் பயன்படுத்துகிறோமா? இல்லை என்பதுதானே உண்மையான பதில்!

அதேபோல, ஆடம்பரமான மாட மாளிகை வீடுகள் - அம்பானியின் வீடும், மைக்ரோ சாஃப்ட் முதலாளி பில்கேட்ஸ் வீடும்  நவீன வசதியான பங்களாவில் உள்ள அத்தனை வசதிகளையும் அவரோ, அவரது துணைவியாரோ அன்றாடம் முழுமையாக அனுபவிக்கின்றனரா? அனுபவிக்க முடிகிறதா? இடங்கள் காலி தானே! 70 சதவிகிதம் வெட்டியாகத் தானே இருக்கின்றது?

அதேபோல், வசதி படைத்தவர் வீட்டில் உள்ள அலமாரிகளில் எத்தனைத் துணி மணிகள், உடைகள்! விதவிதமான நகைகள், செருப்பு கள்கூட எத்தனை எத்தனை விதங்கள் - இத்தியாதி! இத்தியாதி!!

இவற்றில் 70 சதவிகிதம் பயன்பாட்டில் அன்றாடம் உள்ளதா? பரிதாபகரமான பதில், ‘இல்லை; இல்லவே இல்லை' என்பதுதானே!

சேமித்து வைப்பவர்களில் பலரும் மற்றவர்களுக்காகவே 70 சவிகிதத்தைச் சேமித்து வைத்து விட்டுச் செல்கிறார்கள் என்பது அப்பட்டமான உண்மை!

எனவே, இதிலிருந்து அறிந்து, புரிந்துகொள்ள வேண்டிய உண்மைகளும், அதற்கு மேற்கொண்ட வாழ்வியல் கவனங்களும் எவை என்பதை எண் ணிப் பாருங்கள்!

அந்த 30 விழுக்காட்டை முழுமை யாகப் பயன்படுத்தி, நலவாழ்வு வாழுங்கள்!

எளிதான இளமையில் நாம் கற்ற பாடம் - மறந்துவிட்ட பாடம் - நினைவிற்கு வருகிறதா?

‘‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!''

எப்படி அதைச் செய்வது என்று கேட்கிறீர்களா?

1. நீங்கள் நலமுடன் உள்ளபோதும், நோய் வராத போதும் முறையாகக் குறிப்பிட்ட காலந்தோறும் உடற்பரி சோதனை மருத்துவரிடம் சென்று செய்துகொள்ளுங்கள்.

(Go for medical checkup even if not sick)..

2. நிறைய தண்ணீர் குடியுங்கள் - தாகம் இல்லாதபோதும் கூட!

3. மனதை வாட்டும் பிரச்சினைகள் வரும்போதுகூட அதைக் கண்டு பதற்றம் அடையாமல், அதன்படி நடக்கும்போது எப்படித் தீர்வு காணவேண்டும் என்பதற்கு அதையே ஒரு வாய்ப்பாகக் கொள்ளுங்கள்!

4. விட்டுக் கொடுத்துப் பழகுங்கள். உங்களது வாதம் சரியானது என்றாலும், மற்றவருக்கு மகிழ்ச்சித்தர உங்களை, நீங்கள் தோற்றதுபோல காட்டிடும் பெருந்தன்மை பேணுங்கள்!

5. எப்போதும் எளிமையாக இருங்கள். உங்களுக்கு நிறைய பணம் இருந்தாலும், அதிகாரம் இருந்தாலும்கூட! (இவ்வகையில் ராமச்சந்திரா மருத் துவப் பல்கலைக் கழக நிறுவனர் - மதிப்பிற்குரிய நினைவில் வாழும் ராமசாமி உடையாரின் எளிமை, அடக்கம் என்னை வியக்க வைத்தது!)

6. உடலுக்கும், உள்ளத்திற்கும், மனதிற்கும், மூளைக்கும் அன்றாடம் - நீங்கள் அதிக வேலைப் பளுவைச் சுமப்பவராக இருப்பினும், உடற்பயிற்சி தரத் தவறாதீர்கள்!

Exercise both for body & mind

7. நீங்கள் மதிக்கும் நண்பர்கள், பெரியவர்கள், அறிஞர்களுக்கு என உங்கள் நேரத்தில் கொஞ்சம் ஒதுக்கி அவர்களிடம் உரையாடி மகிழுங்கள்.

இவை அனைத்தும் உங்கள் வாழ்வில் ‘வசந்தங்களாகும்!'

70 சதவிகிதத்தைப் புறந்தள்ளி, 30 சதவிகிதத்திற்கே மிகுந்த முக்கியத் துவம் தாருங்கள்!

- விடுதலை நாளேடு, 13.2.18