பக்கங்கள்

செவ்வாய், 21 நவம்பர், 2017

இளைஞர்களுக்கான இனிப்பும் - கசப்பும்!

நேற்று (15.11.2017) உலக நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி அதைத் தடுக்கும் நாளாகும்.

இந்தியா உலகத்தின் நீரிழிவு நோயின் தலைமை நாடு என்பதோ, தமிழ்நாடும் இதில் முன்னணி பங்கு வகிக்கிறது என்பதோ பெருமைப்படத்தக்கதா? வேதனையுடன் கூடிய பதில் இல்லை என்பதே!

நான் ஏற்கெனவே பல முறை இப்பகுதியில் எழுதியுள்ளதைப் போன்று, இந்த நோய் - சர்க்கரை நோய், ஒரு முறை நமக்குள் படையெடுத்து இடம் பிடித்து விட்டால், பிறகு என்ன செய்தாலும் அதை முழுவதும் விரட்டி அடித்து விடவோ, ஓட்டி விடவோ முடியாது - இன்று வரை, நாளை எப்படியோ!

வயது முதிர்ந்தவர்களை மட்டுமே  தாக்கி, படை யெடுத்து ஆக்கிரமித்துக் கொண்ட இந்த ஆட் கொல்லி - மெல்ல மெல்ல பல உறுப்புகளைப் பழுதாக்கி தாக்கிக் கொல்லும் நோய் இந்நோய் ஆகும்! அதனால் தான் டாக்டர்கள் இதை ஒரு சந்திப்பு நிலைய நோய் (Junction Disease) என்று பொருத்தமாக வர்ணிக்கிறார்கள் போலும்!

ஆம்! இந்த சந்திப்புத் தொடர் வண்டி நிலையத் திலிருந்து பல தொடர் வண்டிகள் புறப்படுவது போல, அதன் தாக்குதல் கண்களை நோக்கி  இருக்கும். விழித்திரைகளைப் பாதித்து, குளுக்கோமா என்பதன் மூலம் படிப்படியாக பார்வையை இழக்கும் தண் டனையை - அது நமக்கு அளிக்கும் (இத்தண்டனைக்கு மேல் முறையீடு -  அப்பீல்கள் - கிடையாது என்பதை நாம் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்!)

கால் விரல்கள் - புண்கள், பிறகு 'கேங்கரின்' மூலம் கால்களையோ, விரல்களையோ வெட்டி விடும் நிலை.

இதய நோய் அதிகமாகி முக்கியமாக நம்மை மரணபுரியை நோக்கி அழைத்துச் செல்லும்; சாவின் சாகாத தூதுவன் ஆகவும் இருக்கும்.

'ஸ்ட்ரோக் (Stroke) என்ற பக்கவாத நோயையும் அளிக்கும் கொடுமையை இந்நோய் அளிக்கலாம்!

இப்படி எத்தனை எத்தனையோ...

இவை உங்களை பயமுறுத்த அல்ல. தக்கப் பாதுகாப்புடன் - வருமுன்னர் காத்து நீங்கள் - ஏன் நாம் - வாழ வேண்டும் என்பதற்காக!

தடுத்துக் கொள்ள - அடிக்கடி ஆண்டுக்கு ஒரு முறை அல்லது  இரு முறை உடற்பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

"முதியோர்கள் - அல்லது 70, 80 வயது தாண்டிய முதுகுடி மக்கள்தான் இப்படிப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்  - நாங்கள் இளைஞர்கள்,  வாலி பர்கள் தானே! நாங்கள் எதைச் சாப்பிட்டாலும் செரிமானம் ஆகக் கூடிய வயதுதானே" என்ற அலட்சிய பதிலைக் கூறாதீர்கள், இளைஞர்களே!

இக்காலத்தில் உங்கள் வயதினரும் அதிகம் பாதிக்கப்பட்டு, சிறுநீரகம் பழுதடைந்து வாழ்நாளின் பல்வேறு வாய்ப்புகள், இன்பத் துய்ப்புகளைக்கூட இழந்திடும் பரிதாப நிலை ஏற்பட்டு விடும்.

மருத்துவச் செலவை பின்பு பல்லாயிரக்கணக்கில் செய்து, வேதனையை, வலியை, இழப்பை அனுப விப்பதற்குப் பதில் 'வருமுன்னர் காத்தல்' அறி வுடைமை அல்லவா?

இளைஞர்கள் பலரும் நம் வீடுகளில் கவலை யோடும், பொறுப்போடும் சமைக்கும் நம் அம்மாக் களின் உணவை அலட்சியப்படுத்தி விட்டு, வெளி  நாட்டு உணவகங்களின் - வேக உணவுகளை (Fast Food) தின்பது, Coke - கொக்கோகோலா மற்றும் சுவையூட்டப்பட்ட போத்தல் குடிநீர்களை - அவை களின் தற்காலிக சுவைக்காக, நிரந்தர உடல் வலிமையை விலைபேசி வீணாவதைப்பற்றிக் கவலைப்பட மறுக்கின்றனரே!

எப்போதோ ஒரு முறை சாப்பிடுவதை நாம் தடுக்கவில்லை; அன்றாடம் - அனுதினமும் இந்த வெளிநாட்டு வேக உணவுகளைக் கொண்டு வயிற்றை நிரப்புவது - பரோட்டா, முட்டை பரோட்டா, கொத்து பரோட்டா என்று மைதா என்ற உடல் நலனைப் பாழ்படுத்தும் வகையறாக்களை உண்ணும் வாடிக்கை என்றால் அதன் விளைவு வருங்காலத்தில் 'தீராத நோயாக' நமக்குத் திரும்பி வந்தே தீரும்!

எனவே உணவால் எச்சரிக்கை, நாக்குக்கும், மூளைக்கும் (ஏன் பற்பல நேரங்களில் வயிற்றுக்கும் கூட) ஏற்படும் மனப் போராட்டத்தில் நாக்கு(ச்சுவை)தான் வெற்றி பெறும் தற்காலிகமாக!

'இறுதிச் சிரிப்பு' போல இறுதி வெற்றி மூளைக் குத்தான் நண்பர்களே, மறவாதீர்! காலந்தாழ்ந்து உணர்ந்து, வருந்தி என்ன பயன்?

எனவே உணவில் மிகுந்த கவனத்துடன். கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து, வளமை என்பது பணம் சம்பாதிப்பதில்லை; நோயற்ற வாழ்வில்தான்  உள்ளது என்ற 'குறைவற்ற செல்வம்' அதுவே என்பதை உணருங்கள்!

இனிப்புச் சுவையை எப்போதும் தள்ளிட வேண்டாம் - அன்றாடப் பழக்கமாக்கிக் கொள்ளாமல் உடல் நலம் பேணுங்கள்!

 

-கி வீரமணி, வாழ்வியல் சிந்தனைகள்

-விடுதலை நாளேடு, 16.11.17

வியாழன், 9 நவம்பர், 2017

அம்பேத்கர் - 'புத்தப் பிரியர்' மட்டுமல்ல; புத்தகப் பிரியரும்கூட! (11)&(12)



டாக்டரின் பல்லாயிரக்கணக்கான புத்தகங்களைக் கவனித்து ஒழுங்குபடுத்தியும், அவரது மிகப் பெரிய வீட்டு நூலகத்தை -  டில்லியில் அவரது குடியிருப்பிலும் சரி, பம்பாயின் இராஜ கிருகம்' என்ற அவரது சொந்த வீட்டிலும் சரி, வீடு முழுவதும் புத்தகங்களே இருக்கும். தேவிதயாளுக்கு அதனை அடுக்குவது, அவர் விரும்பும் அதே இடத்தில் மாறாமல் வைப்பது, அவர் எழுதிக் கொண்டோ, சிந்தித்துக் கொண்டோ இருக்கும் போது திடீரென்று தேவைப்படும் புத்தகங்களையோ, பாதுகாக்கப்பட்ட பத்திரிக்கை துணுக்குகளையோ (Press Cuttings) 
உடனுக்குடன் எடுத்துத் தர வேண்டிய மிக கடினமானப் பொறுப்பு - இவைகள்தான் முக்கியப் பணியாக இருந்தது.

எனவே அவருடைய தேவையைக் குறிப்பறிந்து இவர் செய்வார்; அவர் அம்பேத்கரின் வீட்டு நூலகம் பற்றிக் குறிப்பிடுகையில்,

"நம் எல்லாருக்கும் வீடு - நம் வசதிக்காக; ஆனால்  டாக்டருக்கோ, புத்தகங்களுக்காகத்தான் வீடு; பிறகே இவரது வசதிக்காக என்று இறுதி வரை வாழ்ந்தவர்" என்று கூறிவிட்டு, தேவிதயாளிடம் பாபாசாகேப் ஒரு முறை தனியே இருக்கும்போது கூறினாராம் - ஓர் உரையாடலில்.

"நான் மிகவும் ஏழை. எனது தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு எனக்குத் தாராளமான வருவாய் இல்லை. எனது முதுமைக் காலத்தில் என் நிலை எப்படி இருக்கும் -எனக்கு ஆதரவு வசதிகளுக்குரிய வருவாய் இல்லை.

எனக்கு வரும் வருமானத்தில் பெரும் பகுதியை; நான் புத்தகங்களுக்கே செலவழித்து விடுகிறேன். என்னால் அதைத் தவிர்க்க முடியாது. மாற்றிக் கொள்ள முடியாது.

எனது  இந்த நூலகத்தை - கிடைத்தற்கரிய  நூல் களையெல்லாம் நான் சேகரித்து வைத்துள்ள இந்த நூலகத்தினை தனியார் யாருக்காவது கொடுத்தால் 5 லட்சம் ரூபாய் (அப்போது  அது பெரிய தொகை என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுவோம்) ஆனால் அப்படிச் செய்ய எனக்கு விருப்பமில்லை; நான் இந்த நூலகத்தை சித்தார்த்தா கல்லூரிக்கு (டாக்டர் துவக்கிய கல்லூரி) அளித்துவிட முடிவு செய்து விட்டேன்" என்று உருக்கத்துடன் தனது நிலையைப் பகிர்ந்து கொண் டுள்ளார்! அவரது மிக நெருக்கமான பல நண்பர்கள் தேவிதயாளிடம்  கூறுவார்களாம்! "என்ன டாக்டர் தனக்கு 100 ரூபாய் கிடைத்தால் அதில் 50 ரூபாய்க்குப் புத்தகம் வாங்கிவிடுகிறார், 200 ரூபாய் என்றால் அதில் ரூ.100க்கு புத்தகம் வாங்கி விடுகிறாரே!" என்று கவலையுடனும், வியப்புடனும் கூறுவார்களாம்.

புத்தகங்களை - அவை விலை உயர்ந்தவைகளாக - அப்போது 150 ரூபாய் 200 ரூபாய் விலையுள்ளவை மிக அதிக விலையுள்ள நூல்கள்; அதுபற்றிக் கவலைப்படாமல் அவர் புத்தகங்களுக்கே 'துணிந்து' செலவழித்து விடுகிறார் என்பார்களாம்.

தேவிதயாள் மேலும் கூறுகிறார்: "எனது சக்திக்கு அப்பாற்பட்டதாகவும்கூட அந்த நூலகப் பராமரிப்பு பற்பல நேரங்களில் இருந்ததை நானே உணர்ந்துள்ளேன். மிகவும் கடினமான பணி. அந்தந்த நூல்களை டாக்டர் எந்த இடத்தில் வைத்தாரோ, அவை எடுக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்பட்ட பிறகுகூட, குறிப்பிட்ட அதே இடத்தில் அதே வடிவத்தில் இருக்க வேண்டும் என்றுதான் டாக்டர் விரும்புவார்!

சுமார் 4 ஆண்டுகள் நான் டில்லி வீட்டில், புத்தகம் பராமரிப்பு, மேற்பார்வை என்ற பணிகளைச் செய்த போது பெற்ற அனுபவங்கள் சிற்சில நேரங்களில் கடுமையாக அமைந்ததும் கூட உண்டு.

அவர் கேட்டவுடனேயே சிறிது தாமதம்கூட இல்லாமல் உடனடியாக குறிப்பிட்ட அந்த புத்தகத்தை அவருக்கு எடுத்துத் தர வேண்டும். ஒரு நிமிடத்திற்கு மேல் தயக்கம் என்றால், எனக்கு ஏராளமான 'திட்டுகள்' டாக்டரிடமிருந்து சரசரவென்று வந்து வெடித்து விழும்!

ஒரு குறிப்பிட்ட கட்டுரையைக் கேட்கிறார்; தேடு கிறேன்; உடனே கிடைக்கவில்லை டாக்டர் என்னைப் பார்த்து, உன்னால் உடனே அதனை எடுக்க முடிய வில்லையா? "நீ இத்தனை ஆண்டுகள் இதனைப் பராமரித்து வைத்துள்ள லட்சணமா இது?" என்று கேட்டு அவரே குறிப்பிட்ட நூல் அல்லது கட்டுரை இருக்கும் இடத்தையும் குறித்து தனது குறையாத நினைவு  ஆற்றலைப் புரட்டி விட்டுச் சொல்வார் 'அங்கிருக்கும் எடுத்து வா' இந்த வண்ணத்தில் இந்த மூலையில் இருக்கும் என்று 'லொக்கேஷனோடு' (Location) கூறுவார்.

பிறகு அவரது வசைமொழிகள் மழைத் துளிகளைப் போல கொட்டும்.

"முட்டாள் கழுதை' நீ இருந்து என்ன பயன்?"

சில நேரங்களில் எல்லை தாண்டிய கோபத்தில் எனக்கு அறைகள் விழுந்ததும் உண்டு. காரணம் அவரது சிந்தனை ஓட்டத்தின் வேகம் குறையாமல் - பணிகளை நடத்திட்ட பாங்கு; அதற்கு நான் இப்படி பயன்பட்டதுண்டு!

அப்போதுள்ள அவருக்குரிய புத்தகக்காதல், புத்தக உலகத்திலேயே மூழ்கித் திளைத்தவர் அவர் என்பதை அறிந்ததால் நான் அதற்காக வருந்தியதில்லை.

தாங்க முடியாத கால் வலி - பல நேரங்களில் டாக்டருக்கு வந்தால், அவர் அதைப் போக்கிக் கொள்ள மருத்துவ டாக்டரிடம் செல்லுவதற்குப் பதிலாக, மருந் தினைத் தேடி எடுத்துக் கொள்ளுவதற்குப் பதிலாக, சில புத்தங்களை எடுத்துப் படிக்க ஆரம்பித்து விட்டு, பிறகு சொல்வர்; புத்தகப் படிப்பு எனக்கு வலி தெரியாமல் செய்து விட்டது என்று புத்தகம் அவருக்கு நன் மருந்தாம்! என்னே ஆர்வம் - அதிசயம்!

டாக்டர் அம்பேத்கரின் புத்தக உதவியாளர் தேவி தயாள் அவர்கள் டாக்டருக்கு உடல்வலியைக் கூட மறக்கச் செய்வது இந்த புத்தக வாசிப்புதான் என்று குறிப்பிட்டுள்ளார். அதை ஒரு உரையாடலில் டாக்டரே தன்னிடம் கூறியதைப் பதிவும் செய்துள்ளார்.

‘‘ஒரு நாள் காலை நான் அவர் அறைக்குச் சென்று நேற்றிரவு கால் வலி பற்றிக் கூறினீர்களே, அது இப்போது எப்படி இருக்கிறது’’ என்று விசாரித்தேன். அதற்கு டாக்டர், ‘‘நேற்றிரவு அவ்வலி 12.30 மணி யளவில் ஆரம்பித்தது; என்னால் தூங்கவே முடிய வில்லை. ஒரு புத்தகத்தை எடுத்தேன். அதை விடியற் காலை 5 மணிவரை தொடர்ந்து படித்துக் கொண்டே இருந்தேன். வலியே தெரியவில்லை’’ என்றார்.

தேவிதயாள் அசந்து போய்விட்டார்!

என்னே விசித்திரமான மருத்துவம்!!

‘‘கவலையை மறப்பது நாட்டியக் கலையே!’ என்று ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் ‘சிவகவி’ என்ற ஒரு திரைப்படத்தில் பாடியதை எனது இளமைக் காலத்தில் கேட்டுள்ளேன். ஆனால், தேவி தயாளின் இந்த டாக்டர் கூறியது கேட்டு,

‘‘வலியை மறப்பது புத்தக வாசிப்பே’’ என்ற புதிய பாட்டு வரியை எழுதவேண்டும் போலும்! புத்தக வாசிப்பில் அவர் ஈடுபட்டால் வேறு எதுவும் அவ ரைப் பாதிக்காது என்பது இதிலிருந்து புரிகிறதல்லவா?

டாக்டர் அம்பேத்கரின் உதவியாளர் நானக்சந்த் ராட்டு (1922-2002) என்பவர் டாக்டருக்கு தனிச் செயலாளராகவும், டைப்பிஸ்ட்டாகவும், டாக்டர் எழுதிய பலவற்றை ஒழுங்குபடுத்தி, தொகுத்து, புத்தக வடிவத்திற்குரிய வகைப்படுத்துதல் போன்ற பல பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டு இறுதிவரையில் டாக்டருக்கு நிழல்போல் இருந்தவர்.

‘புத்தமும் தம்மமும்‘, ‘இந்து மதத்தின் புதிர்களான இராமன் - கிருஷ்ணன்’ போன்ற டாக்டரின் அரிய கருத்துக் கருவூலங்களை ஒழுங்குபடுத்திய உதவி யாளர்.

‘அம்பேத்கரின் கடைசி சில ஆண்டுகள்’ (1995), ‘அம்பேத்கர்பற்றிய பலரும் அறியாத பல்வேறு வாழ்க்கை அம்சங்கள்’ (1996), ‘நினைவுகளும், நிகழ்வுகளும் அம்பேத்கர் பற்றியவை’ (1996) என்ற பல நூல்களை அவர் எழுதியுள்ளார்.

ராட்டு அவர்கள் எழுதுகிறார்:

‘‘பல நாட்கள் தொடர்ந்து தனது அறையை - புத்தக நூலக அறையை விட்டு டாக்டர் வெளியே வராமலேயே - வெளியுலகின் வெளிச்சமே படாம லேயே புத்தகப் படிப்பு - எழுதும் பணியில் அலுப்பு, சலிப்பின்றி ஈடுபடுவார்! நான் அப்போது அவருக்குக் காலை உணவு, பகல் உணவு, தேநீர், காஃபி, இரவு உணவு இவைகளை அங்கேயே கொண்டு போய்க் கொடுத்து வந்துள்ளேன்!

அவரது மெயின் வராண்டாவின் ஒரு பகுதியான நூலகம், அவரது வாசிப்பு அறை - படுக்கை அறை இதில்தான் அவர் தன்னை ‘சிறைப்படுத்திக் கொண்டு’ தொடர்ந்து படிப்பதோ, எழுதுவதோ ஆகியவற்றில் ஈடுபட்டார்’’ என்பது அதிசய மானதல்லவா?

முக்கிய பார்வையாளர்கள் வந்துள்ளார்கள் என்பதை நாங்கள் தெரிவித்த நிலையில், அவர் களைப் பார்த்து, ஓரிரு வார்த்தைகளே பேசி, உடனே வழியனுப்பி விட்டு, தன் பணியைத் தொடர்வார். பல பார்வையாளர்களுக்கு இது வருத்தத்தைத் தருவதானாலும்கூட, பிறகு அவர்களே, ‘டாக்டரை அவரது மும்முரமான எழுத்து அல்லது வாசிப்புப் பணியில் நாம் குறுக்கிட்டு இருக்கக் கூடாது’ என்று உணர்ந்தவர்களும் உண்டு!

அதில் பலர், ‘அம்பேத்கர் வாழ்க’ என்று முழக்க மிட்டு விடைபெற்றுக் கொள்வது வாடிக்கைதான்!

தனது புத்தக வாசிப்புக் காதல் - கடமைபோல, மக்களிடம் சென்றால்தான் - அனைவரும் நூல் களைப் பயன்படுத்தினால்தான் மனித குலம் முன்னேறும் என்ற அவரது கருத்து, அவரது இளமைக் காலத்தில் - மாணவப் பருவத்திலேயே அவரைப் பற்றிக்கொண்ட ஒன்று என்பதை டாக்டர் அம்பேத்கரின் அரிய தோழர், சீடர்களில் ஒருவரும், மகராஷ்டிரா அரசு வெளியிட்ட அம்பேத்கரின் எழுத்தும், பேச்சும் - பல தொகுதிகளின் மூல ஆசிரி யருமான வசந்த்மூன் அவர்கள் மராத்தி மொழியில் தனது சுய சரிதையில் குறிப்பிட்டுள்ளார். அதனை திருமதி.கெயில் ஆம்வெட் அவர்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து, ‘Growing up untouchable in India A Dalit Autobiography’’ (2001) என்னும் நூல் வெளிவந்துள்ளது!

தனது 24 வயதில் டாக்டர் அம்பேத்கர் தனது எம்.ஏ., படிப்பை முடித்து, பிஎச்.டி. ஆய்வினை அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் மேற்கொண்ட நிலையில், பாம்பே கிரானிக்கள் (‘Bombay Chronicle’)  என்ற பிரபல நாளேட்டிற்கு எழுதிய ஒரு கடிதம், அவர் எத்தகைய புத்தகப் பிரியர் என்பதற்குச் சான்று ஆவணமாகும்!

பிரபலமான பம்பாய் பிரமுகர் சர் பெரோஷ் மேத்தா அவர்கள் மறைந்தார் என்ற செய்தி வந்தது. அதையொட்டி பம்பாயில் அவருக்குச் சிலை ஒன்று நிறுவிட வேண்டுமென அவ்வேட்டில் பலர் எழுதி யிருந்தனர். அதனைப் படித்த டாக்டர், அவ் வேட்டிற்கு ஒரு கடி தம் எழுதினார்; அதில் அவருக்குச் சிலை எழுப்புவதைவிட, அவர் பெயரால் ஒரு தலைசிறந்த நூலகம் ஒன்றை பம்பாயில் ஏற்படுத் தினால், அது சமூக முன்னேற்றத் திற்குப் பெரிதும் துணை புரியக் கூடும்.

பம்பாயில் பெரிய ஆய்வுகளுக்கு உதவக்கூட பெரிய பொது - அரசு நூலகம் இல்லை. பல தனியார், சிறு நூலகங்கள்தான் உள்ளன. இப்படி ஒரு பொது நூலகம் அமைந்தால், அது பொதுமக்களுக்கும், கல்வியாளர்களுக்கும் பெரிதும் பயன்படும் என்று ஆசிரியருக்குக் கடிதத்தை  நியூயார்க்கிலிருந்தபடியே 1916 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளிநாட்டில் மாணவராக இருந்தபோதே எழுதினார்.

இது பாபா சாகேபின் புத்தகக் காதலும், புத்தகங்களால்தான் அறியாமை இருள் மறைந்து, அறிவொளி பரவிட முடியும் என்ற கருத்தும் எத்தகைய உறுதி வாய்ந்த ‘சீரிளமைத் திறன்’ கொண் டவை என்பது புரிகிறதல்லவா?

- விடுதலை நாளேடு,7,8.11.17

அம்பேத்கர் - 'புத்தப் பிரியர்' மட்டுமல்ல; புத்தகப் பிரியரும்கூட! (9)&(10)



தேவி தயாள் என்பவர் சிறுவயதிலிருந்தே டாக்டர் அம்பேத்கரிடம் பணி புரிந்த இளைஞன் - உதவியாளர். இவரது பணி அவரது (வீட்டு) நூலகத்தைப் பார்த்துக் கொள்வதும், வீட்டில் சிறுசிறு வேலைகளைப் பார்ப் பதும் ஆகும்.

"டாக்டர் அறையில் காலை 7 மணி அளவில் சென்று அவர்கள் வாசிக்கும் செய்தித்தாள்களை அவரது சிறு ஸ்டூல் ஒன்றின்மேல் வைத்து விடுவேன். அவர் உறக்கத்தில் இருப்பார். பக்கவாட்டில் இருபுறங்களிலும், 2,3 நூல்கள் கிடக்கும். அவர் உறங்கும்போது மார்பில் புத்தகம் திறந்த நிலையில் இருக்கும்; சில நேரங்கள் அவை பக்கத்தில் விழுந்து கிடக்கும்" என்கிறார் தேவி தயாள். இரவு 1.30 மணிக்கு அவரை விட்டு இந்த தேவி தயாள் வெளியேறுவார்! சில புத்தகங்களை எடுத்து வைத்து விட்டு நீங்கள் படுக்கைக்குச் செல்லுங்கள் என்று அவரிடம் கூறுவாராம். அப்படி அவர் கேட்ட சில புத்தகங்கள் புருஷார்த்தா, ரிக்வேத சம்ஹிதை, தாமஸ்மூர் ஆகிய புத்தகங்கள். அவைகளை எடுத்து அவர் அருகில் வைத்து விட்டு அவரைக் கும்பிட்டு விட்டு நான் விடை பெறுவேன்; அவர் பக்கத்தில் எப்போதும் எட்டு, பத்து புத்தகங்கள் இருக்க வேண்டும்; காரணம் கண் விழித்துக் கொண்டால் அவற்றில் ஒன்றை எடுத்துப் படித்துக் கொண்டேயிருப்பார். அந்த வசதிக்காகத்தான் அந்த எட்டு, பத்து புத்தகக் குவியல். அவர் எப்போது உறங்குவார் படித்து முடித்து என்பது தேவி தயாளுக்கே கூடத் தெரியாது.

'Burning the midnight oil' ீ' நடு இரவு விளக்கெரித்தல் மூலம் எண்ணெயைச் செலவு செய்தல் என்று நேரடி பொருள் கொண்டால், இரவெல்லாம் கண் விழித்துப் படிப்பவர்களைப் பற்றியதே இச்சொற்றொடர் ஆகும்!

அவரது படுக்கை அறை 12 சதுர அடி, நாலு கதவுகள் (டில்லி பங்களா); ஒரு கதவு மட்டும் திறந்திருக்கும்; மற்ற மூன்று கதவுகளும் மூடியே இருக்கும்; காரணம் அவைகளுக்குப் பக்கத்தில் பெரிய பெரிய அலமாரிகள். அதில் வரிசையாக அடுக்கப்பட்ட புத்தகங்கள்தான், பக்கத்திலும் மேஜையில் புத்தகக் குவியல், எழுதும் தாள், பலவித பேனா, பென்சில்கள், அவர் உட்கார்ந்து படிப்பதேகூட வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு டாக்டர் அந்த அறையில் இருப்பதோ, படிப்பதோ தெரியாது; காரணம் புத்தகங்கள் மறைத்துக் கொள்ளும்! அவரது நண்பர்களில் ஒருவர் (ரமேஷ்) டாக்டர் எங்கே இருக்கிறார் என்று தன்னைக் கேட்டதாகவும், அதற்கு தேவி தயாள், அங்கே அறையில் தானே படித்துக் கொண்டிருக்கிறார் என்று பதில் கூறிய பிறகே, புத்தகக் குவியலில் புதைந்து படித்துக் கொண்டிருக்கும் அம்பேத்கரை அந்த நண்பர் ரமேஷ் கண்டார்!

அவரால் தேர்வு செய்யப்பட்ட புத்தகங்கள் மட்டும்தான் அந்தக் குவியலில் இருக்கும். அவர் அமர்ந்து படிக்கும் நாற்காலிக்குப் பின்னே அலமாரியில் 4 அறைகளில் அவர் எழுதிய கையெழுத்து (நூல் களுக்காக) பிரதிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். அவைகளில் பல புத்தகமாக அச்சுக்குச் செல்ல வேண்டியவைகளாகவும் இருக்கும். பென்சில் சீவும் கூர் தீட்டும் கருவியும் அருகில் அம்மேஜையில் இருக்கும்!

அவரது படுக்கைக்குப் பக்கத்தில்  பல ஸ்டூல்கள் வரிசையாக எப்படித் திரும்பினாலும் இருக்கும். அவற்றில் புத்தகக் குவியல் - அவர் மாறி மாறிப் படிப்பதற்கு வசதியாக தேவி தயாள் அடுக்கி வைப்பார். அவர் ஒரு முறை தேவி தயாளிடம் கூறினார்.  "தனது படுக்கையறை தான் எனது கல்லறையாகும்" என்றார்!

எதேச்சையாக சொன்னது நடந்ததே! 1956 டிசம்பர் 5 இரவு 'புத்தமும் தம்மமும்' (Buddha & Dhamma) 
நூலின் முன்னுரையை எழுதி இறுதி வடிவம் கொடுத்து, உறங்கப் போனவர் நீடுதுயிலில்  - மரணத்தினை அடைந்து விட்டார்!

மேலும் தேவிதயாள் கூறுகிறார்:

அவரது உதவியாளர் தேவி தயாள் காலையில் அவரது படுக்கைக்குப் பக்கத்தில் செய்தித்தாள்கள் கட்டினை வைத்து, மின் விளக்குப் பொத்தானைப் போடுவார். எழுந்தவுடன் படுக்கையில் அமர்ந்தவர் ஓரிரு ஏடுகளைப் படித்து விட்டு, எஞ்சியவைகளை அவர் கழிப்பறைக்கு (Toilet) செல்லுகையில் கையில் எடுத்துச் சென்று படித்து முடித்து விடுவார்.

இம்மாதிரி கழிப்பறைக்கு வெறும் பத்திரிக்கைகளை மட்டுமல்ல; சில சில நேரங்களில் புத்தகங்களைக்கூட எடுத்துச் சென்று விடுவார்!

அவர் எழுதும்போது அருகில் தள்ளி அமர்ந் திருப்பேன்; அவருக்கு அப்போது தேவையான புத்தகங்களை எடுத்துத் தருமாறு என்னைப் பணிப்பார். நான் உடனே தாமதமின்றித் தர வேண்டும்; தருவேன்.

அவர் எழுந்து கழிப்பறைக்குப் போன பின்னர் என்ன புத்தகம் அவர் அப்போது படித்து மேற்கோள் காட்டி எழுதுகிறார் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் என்னை உந்தித் தள்ளும். அது  H.H. வில்சனின் "வேதங்களின் மொழிபெயர்ப்பு" நூல் என்பதை அறிந்தேன்.

பத்திரிக்கைகளைப் படிக்கும்போது கோடிட்டு அத்துணை செய்திகளையும் படித்துவிட்டு தேவையான வைகளை கத்தரித்துப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளச் சொல்வார்!

இதுபற்றி வியப்புடன் கூடிய ஒரு தகவலை நாளை படிப்போமா?

தேவிதயாளின் அன்றாடப் பணிகளில் ஒன்று, டாக்டர் பார்த்து கோடிட்ட பத்திரிக்கைகளின் (நாளே டுகள் தான் பெரிதும்) பகுதிகளை வெட்டி கத்தரித்து அவைகளை தேதி, குறிப்பிட்ட ஏடு சம்பந்தமான கோப்புகளாக ஆக்கி வைத்து அவருக்கு உதவுவது.

தேவிதயாள் கூறுகிறார்:

"இது எனக்குப் புதிய பணி அல்ல. டாக்டர் துவக்க காலத்திலிருந்தே அவரே அதனைச் செய்து வந் துள்ளார். அவரது நூலகத்தில் ஒரு பகுதி இத்தகைய வெட்டி சேகரித்து வைக்கப்பட்ட பத்திரிக்கை கத்தரிப்பு கோப்புகளும் ஆகும்.

நான் பம்பாயில் இருந்தபோது அவரது நூலகத்தில் 1907, 1908, 1909 போன்ற ஆண்டுகளின் பத்திரிக்கை கத்தரிப்புகளும் பத்திரமாகப் பாதுகாத்து வைக்கப்பட்டி ருப்பதை நானே பார்த்திருக்கிறேன். நூலகத்தில் ஒழுங்குபடுத்தியிருக்கிறேன்.

என்னிடம் ஒரு நாள் தடித்த ஒரு கோப்பினை டாக்டர் காட்டினார். அது பத்திரிக்கை கத்தரிப்புச் சேகரிப்புகள். அவர் கொடுத்தது 1917 முதல் 1929 வரை வந்த முக்கிய செய்திகள் - தகவல்கள், கருத்துரைகளின் தொகுப்புகளைக் கொண்ட கோப்பு - அக்கால அரசியல், சமூக, நிலவரத்தை உள்ளது உள்ளபடித் தெரிவிப் பவையாக அவைகள் இருந்தன. இதில் வியப்புக்குரிய செய்தி என்ன தெரியுமா?

இவைகளின் சேகரிப்புகளில் உள்ளதைவிட, டாக்டரின் மூளையில் அவைகளை ஒரு ஆவணக் காப்பகம் போல பதிந்து வைத்துள்ளார். எதை  எப்போது எப்படிப் பயன்படுத்துவது என்பதை அவர் அறிவார்; பயன்படுத்தவும் தயங்க மாட்டார். இதற்கு எடுத்துக் காட்டான ஒரு நிகழ்வு.

1944இல் அப்போது திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் "திவானாக" இருந்த சர் சி.பி. இராமசாமி அய்யர் டாக்டரைச் சந்திக்க வருகிறார்; சில விஷயங்கள் பற்றிய கருத்துப் பரிமாற்றத்திற்கான சந்திப்பு அது. டாக்டர் கூறுகிறார்:

"தேவிதயாள், எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. அவர் (சர் சி.பி. ராமசாமி அய்யர்) முன்பு 'தீண்டாத மக்களுக்கு' எதிராகப் பேசினார். அப்பேச்சு வெளிவந்த பத்திரிக்கைச் செய்தியை வெட்டி பாது காப்பாக வைத்துள்ளேன். அதைத் தேடிப் பிடி" என்றார்!

அய்யா, அது எத்தனை ஆண்டுகளுக்கு முன் என்று டாக்டரைக் கேட்டேன்! '12 ஆண்டுகளுக்கு முன்பிருக்கும்' - டாக்டர் பதில். 3,4 அங்குல நீளமுள்ள தாள் எனவும், அதை ஒரு காகிதப் பையில் போட்டு வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்".

இவர் தேடிய போது அப்படியே சரியாக அதே பையில் தாள் இருந்ததை கண்டுபிடித்து டாக்டரிடம் கொடுத்த போது, டாக்டர் "You see I told you that rogue was once against temple entry'' என்று கோபம் கொப்பளிக்கக் கூறியுள்ளார்!

கோயில் நுழைவுக்கு எதிராக இந்த யோக்கியப் பொறுப்பற்ற மனிதர் பேசியுள்ளார் என்று கூறினாராம்! (இதைப்பற்றி "காந்தியும் காங்கிரசும் தீண்டப்படாத வருக்குச் செய்தது என்ன?' என்ற நூலில் எழுதியுள்ளார்).

1932ல் குருவாயூர் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்ட வர்களை அனுமதிப்பதை அங்குள்ள வைதிக நம் பூதிரிகளும், பார்ப்பனர்களும் எதிர்த்தபோது சர். சி.பி. இராமசாமி அய்யர் கோயில் நுழைவுக்கான எதிர்ப் பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை விடுத்தார். அந்த அறிக்கையை 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' நவம்பர் 10 - 1932இல் வெளி வந்துள்ளதை டாக்டர் கத்தரித்து வைத்துப் பாதுகாத்துள்ளார். பிறகு ஏதோ மிகப் பெரிய மனமாற்றத்தின் விளைவால் திருவாங்கூர் கோயில் நுழைவுக்குத் தானே காரணம் என்பதாக சர்.  சி.பி. இராமசாமி அய்யர் வர்ணித்துக் கொண்ட "இரட்டை வேட நிலை" பற்றியதால் டாக்டருக்கு அவ்வளவு கோபம்! கடுமையான அச்சொல் அவர் வாயிலிருந்து வெளி வந்துள்ளது.

பொழுதுபோக்கு, சினிமா, கிளப்புகளுக்கு நண் பர்கள் இவரை  வற்புறுத்தி அழைத்துப் போய் சில மணி நேர மாற்றத்தை "இவருள் திணிக்க - மாறி இளைப் பாறட்டும்" என்ற நோக்கில் முயற்சி செய்தபோது அம்பேத்கர்தான் அப்போதும் வெற்றி பெற்றுள்ளார்; நண்பர்கள் தோற்றுப் போயினர்!

சினிமா அல்லது வெளியே சுற்றுலா மாதிரி அழைத் துச் செல்லப்பட்டார். இரண்டு முறை சினிமாவுக்கும், நான்கு முறை நண்பர்களுடன் சேர்ந்து செலவழிக்கும் கேளிக்கைக்கும் (Picnic)  சென்றதாக தேவி தயாள் கூறுகிறார்.

அதுபற்றி அவர் மேலும் கூறும்போது,

"அங்கே இருக்கும்போது அவர் மனம் சதா பல சிந்தனைகளைத் தேக்கி வைத்தபடியே இருக்கும். எதை எழுதுவது அல்லது சில பிரச்சினைகளுக்கு எப்படித் தீர்வு காணுவது என்பதையே அவர் மனம் அசைபோட்டுக் கொண்டே இருந்திருக்கும் என்பதை எப்படிக் கண்டுபிடித்தோம் என்றால் - அங்கே இருந்து திரும்பும்போது நேரே மேஜைக்குச் சென்று உடனே அவசர அவசரமாக எழுதிட முனைவார். உடை களைக்கூட மாற்றிடும் எண்ணமே அப்போது அவருக்கு வந்ததே இல்லை! திரைப்படங்களில் பாதியில் திரும்பி வீட்டிற்கு வந்ததும் உடனே எழுதிட முனைவார்; காரணம் தேக்கிய எண்ணங்கள் கருத்துருவாக எழுத்தில் புத்தாக்கம் கொள்ளுவதை தாமதிக்கவே கூடாது என்பது அவரது பழக்கங்களில் ஒன்று."

முகமன் - முகஸ்துதி அவருக்குப் பிடிக்காத ஒன்று. அதைப் புரிந்து மறுத்திட தயங்கியதே இல்லை புரட்சியாளர் அம்பேத்கர்.

(நீளலாம்)

-விடுதலை நாளேடு,3,4.11.17

அம்பேத்கர் - ‘புத்தப் பிரியர்’ மட்டுமல்ல; புத்தகப் பிரியரும்கூட! (7)&(8)

டாக்டர் அம்பேத்கரின் மிக நெருங்கிய நட்புற வுடன் இருந்த சீடரான நாம்தேவ் நிம்காடே ஓர் அரிய தகவலை - டாக்டரின் தனி நூலகம் எப்படிப் பட்ட பெருமைகளைக் கொண்ட அரிய சேகரிப்பு - மேற்கோள் பார்த்து அறியும் ஆய்வகம் போன்றது என்பதை விளக்கும் ஒரு சம்பவத்தைச் சுட்டிக் காட்டுகிறார்!

ஒரு பிரிட்டிஷ் கமிஷன் - பிரிட்டிஷ் அரசால் நியமனம் பெற்றது; ஆய்வு செய்து அறிக்கையைத் தரும் பணி செய்யும் கமிஷன் - குறிப்பிட்ட ஓர் அறிக்கை (ரிப்போர்ட்) தேவை என்று இந்திய நாட் டின் நூலகங்கள், அரசு ஆவணக் காப்பகங்கள் எங்கெங்கும் தேடினர்; கிடைக்கவே இல்லை. அவர்களுக்கு அக்குறிப்பிட்ட தாங்கள் தேடும் அறிக்கை ஆவணம் டாக்டர் அவர்களது நூலகத்தில் இருக்கக் கூடும்; காரணம், இதுபோல், பல அரியவை களை சேகரித்துப் படித்து,  பின்பு பாதுகாப்புடன் இருப்பது அங்கேதான்; எதற்கும் அங்கு போய்க் கேட்டுப் பார்ப்போம் என்று டாக்டரை நாடி வந்து கேட்டனர்.

அவர்களுக்கு ஆச்சரியம்...!

அது அங்கே கிடைத்தது. டாக்டரிடம் கேட்டார் கள். அந்த பிரிட்டிஷ் கமிஷனின் பொறுப்பாளர்கள் - ஆய்வு செய்வதற்காக.

டாக்டர் அம்பேத்கர் உடனே இசைவு தந்தார். (பொதுவாக தனது புத்தகங்களை யாருக்கும் இரவ லாகக்கூட தருகின்ற பழக்கம் டாக்டர் அம்பேத் கருக்குக் கிடையாது). ஏனெனில், அவை திரும்பி வருமோ என்ற சந்தேகம் ஒருபுறம் என்றாலும், எதை, எப்போது எடுத்து அவர் ஆராய்வார் என் பதை அறுதியிட்டுக் கூற முடியாதே! தேடும்போது அது அங்கே இல்லை; கிடைக்கவில்லை என்றால், பணி - எழுத்துப் பணி அல்லது உரைக்கான ஆயத் தப் பணி அல்லது அவ்வப்போது கூடி விவாதிக்கும் நண்பர்களிடம் குறிப்பிட்ட அத்தகவல்களை மேற் கோளாகக் காட்டும் நூலை உடனே சுட்டிக்காட்டும் வாய்ப்பும் இருக்காதல்லவா? அதனால்தான் புத்தகங் களை இரவல் கொடுப்பது கூடாது என்ற அவரின் கொள்கைத் திட்ட நடைமுறை நமக்கும் ஏற்பு டையதே!

அவர் ஒரு நிபந்தனை விதித்தார். ‘‘இந்த அறிக் கையை எவ்வளவு விரைவில் உங்களால் திருப்பித் தர முடியுமோ அவ்வளவு விரைவில் கொண்டுவந்து கொடுத்துவிட வேண்டும்‘’ என்பதே அந்நிபந்தனை.

இப்போதுள்ள நகலக வசதிகள் அக்காலத்தில் கிடையாதே!

புத்தகங்களைப்பற்றிய - அவர் படித்த கொலம் பியா பல்கலைக் கழக நூலகத்தின் புத்தகங்கள்பற்றி டாக்டருக்கு மனதில்  அத்துப்படி டாக்டருக்கு. அவரது நினைவும், ஆற்றலும் அபாரமானது!

தான் எழுதிக் கொண்டிருந்த ஒரு நூலுக்குரிய மேற்கோள் (Reference) 
வேண்டியிருந்ததால், ஒரு குறிப்பிட்ட புத்தகம் அவருக்குத் தேவைப்பட்டது. இந்தியா முழுவதிலும் உள்ள நூலகங்களில் கேட்டுப் பார்த்தார். கிடைக்கவில்லை. பிறகு, தான் படித்த அமெரிக்கப் பல்கலைக் கழகமான கொலம்பியா பல்லைக் கழகத்தில் அப்போதிருந்த ஒரு மாணவரை - நூலகத்தை அதிகமாகப் பயன்படுத்தும் மாண வராக அவர் இருந்திருக்கக்கூடும் என்பதால், குறிப் பிட்ட அந்த புத்தகத்தை நூலகத்தில் தேடிக் கண்டு பிடித்து எடுத்து அனுப்புமாறு கேட்டுக்கொண்டார்.

அம்மாணவர் அங்கு தேடியபோது கிடைக்க வில்லை; இதை டாக்டரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு மறுமொழியாக டாக்டர், ‘‘எனக்கு Card Catalogue  நூலக புத்தக எண் வரிசை அட்டை நினைவில் இல்லை என்று கூறி, நூலகத்தின் அலமாரிகளில் ஓர் அடையாளம் சொல்லி அந்த மூலைப் பகுதிக்குச் சென்று தேடிப் பாருங்கள் என்று சொன்னதும், அம்மாணவர் அந்தப் புத்தகத்தை குறிப்பிட்ட அவ்விடத்தில் கண்டுபிடித்தார்!

என்னே, யானை நினைவு இந்த சிங்கத் தலைவருக்கு!

இரவெல்லாம் கண் விழித்துப் படிப்பது டாக்டரின் வழக்கம்; அவர் எப்போது எத்தனை மணிக்கு உறங்கப் போவார் என்பது அவருடைய உதவியாளர் ராட்டுவுக்குக்கூட சரியாகத் தெரியாது.

அப்படி படிப்பு! வாசிப்பு!! வாசிப்பு!!! சில அமெ ரிக்க பத்திரிகை நிருபர்கள் டாக்டரைத் தொடர்பு கொண்டு தங்களைச் சந்திக்க - பேட்டி காண - வசதியான நேரத்தை எங்களுக்குச் சொல்லுங்கள் என்று கேட்டனராம். அப்போது இரவு நடுநிசி! நீங்கள் எப்போது வேண்டுமானாலும், இரவிலும் வந்து என்னைப் பார்க்க வரலாம்; உங்களுக்கு அனுமதி உண்டு என்றவுடன், நடுநிசி நேரத்தில் சென்று - அதிசயத்துடன் அவரைச் சந்தித்துள்ளனர்.

அவர்கள் கேட்ட முதல் கேள்வியும், அதற்கு டாக்டர் அம்பேத்கர் அளித்த சமூகப் பொறுப்பு மிகுந்த பதிலும் வரலாற்றுப் புகழ் வாய்ந்த ஒன்றாகும். (இதை நாம்தேவ் நிம்காடே  தனது நூலில் பதிவு செய்துள்ளார்).

‘‘காந்தியையும், நேருவையும் பார்க்க வேண்டு மென்று கேட்டோம். அதற்கு இது நடுநிசி, அவர்கள் உறக்கத்தில் உள்ளார்கள். விடிந்த பிறகே அனுமதி பெற்று வாருங்கள் என்றே பதில் கிடைத்தது. ஆனால், இங்கே நாங்கள் வந்து பார்த்தால், நீங்கள் இந்த நடு இரவிலும் படித்துக் கொண்டும், எழுதிக் கொண்டும் இருக்கிறீர்களே!’’ என்று அந்த நிருபர்கள் கேட்டதற்கு,

பாபா சாகேப், ‘‘காந்தியும், நேருவும் வாய்ப்பானவர்கள் (Luckly Leaders) 
அவர்களைப் பின்பற்று வோர் எப்போதும் விழித்திருக்கிறார்கள். எனவே, இவர்கள் தூங்குகிறார்கள்.

எனது நிலை அப்படியில்லையே! என்னைப் பின்பற்றுபவர்கள் எப்போதும் தூங்கிக் கொண்டே உள்ளதால், அவர்களுக்காக இந்த நடுநிசியிலும் விழித்திருப்பதைத் தவிர எனக்கு வேறு கடமை இல்லையே!’’ என்று கூறினார்.

அவர்கள், டாக்டரின் சமூக உணர்வும், ஈடுபாடும், உறுதிப்பாடும் கண்டு வியப்புக் கடலில் வீழ்ந்தனர்!

அதுமட்டுமா?

டாக்டருக்கு ஏற்பட்ட அதிர்ச்சிக்குரிய விபத்து பற்றி கவலையுடன் டாக்டர் அம்பேத்கர், நாம்தேவ் விடம் கூறியதில் பொங்கிய கொள்கை உறுதிப்பாடு - அதிர வைக்கக் கூடியது.

அடுத்துப் பார்ப்போமே!



டாக்டர் அம்பேத்கரின் நட்புறவு வட்டத்தின் நெருங்கிய சீடரான நாம்தேவ் நிம்காடே, ஓர் நாள் மாலை டாக்டரை அவரது இல்லத்தில் சந்திக்கிறார். வழமைக்குமாறாக டாக்டர் அம்பேத்கர் சற்றுப் பதற்றத்துடன் கவலையும், அதிர்ச்சியும் உறைந்த நிலையில் உள்ளதைப் புரிந்து கொண்ட நாம்தேவ் "என்ன நடந்தது, ஏன் இன்று இப்படி இருக்கிறீர்கள்?" என்றுகேட்கிறார்.

அதற்கு டாக்டர் பதிலளிக்கிறார். "நேற்று நான் ஒரு விபத்தில் சிக்கி மீண்டேன். புத்தகம் வாங்குவதற்காகச் சென்று கொண்டிருந்தபோது ஒரு விபத்து நடந்தது;  கடுமையான மழை பெய்து கொண்டிருந்ததால், சாலைகள் வழுக்கிடும் நிலையில் இருந்திருக்கிறது. அப்படி கார் ஓடும்போது ஏற்பட்ட அந்த விபத்து, கார் வழுக்கிச் சென்று விபத்தை உருவாக்கிடும் பேரபாயம் ஏற்பட்டது; எப்படியோ எனது காரோட்டி (டிரைவர்) மிகவும் சாமர்த்தியமாக ஓட்டி, காரை தனது கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்து என்னைஅந்த ஆபத்தி லிருந்து காப்பாற்றினார். நான் அவருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தேன். அதோடு ஒரு சிறு தொகையை அன்பளிப்பாகவும்  தந்தேன். ஒரு வேளை அப்போது அந்த விபத்து ஏற்பட்டு நான் செத்திருந்தால்  என்னவாகும்?"

இப்படி அவர் சொன்னதைக் கேட்கும் எவரும், டாக்டர் தனது உயிரின்மீது எவ்வளவு ஆசை வைத் துள்ளார்; அல்லது சாவு கண்டு எவ்வளவு பயப்படுகிறார் என்றுதான் அவசரப்பட்டு, நம் கருத்தைச் சொல்லி விடுவோம்.

'நான் செத்திருந்தால் என்னவாகியிருக்கும்?' என்பதோடு மற்றொன்றையும் சேர்த்துச் சொன்னார் அம்பேத்கர்.

'நான் ஹிந்துவாக அல்லவா செத்திருப்பேன்! அதுதான் எனது கவலை!' என்பதுபோல் அப்படிக் கூறியிருக்கிறார்.

அப்படி ஒரு விபத்து ஏற்பட்டு தான் செத்திருந்தால் ஓர் ஹிந்துவாகவல்லவா செத்திருப்பேன் என்று கூறியது எவ்வளவு ஆழமான கொள்கை உறுதியையும், சொன்னதை செயலில் நாட்டுவதில் அவருக்கு இருந்த லட்சிய உறுதியையும் அல்லவா இது காட்டுகிறது.

"பிறக்கும்போது நான் ஒரு ஹிந்துவாகப் பிறந்து விட்டேன். அது எனது விருப்பமோ, அல்லது தேர்வோ அல்ல; ஆனால் இறக்கும்போது நான் ஒரு ஹிந்துவாகச் சாக மாட்டேன்என்பது உறுதி!" என்று பல மேடைகளில் முழங்கியவர் ஆனபடியால் அதற்குரிய வாய்ப்பு இல்லாமல் விபத்து காரணமாக மரணம் ஏற்பட்டிருந்தால், தான் சொன்ன சொல்லை - லட்சியத்தை - காப்பாற்ற முடியாமல் போயிருக்குமே என்று கூறியுள்ளார்.

இதிலிருந்து அவருக்கு அவரது உயிரின்மீதிருந்த பற்றைவிட, அவரது கொள்கைப் பிரகடனமான "நான் சாகும்போது ஒருக்காலும் ஹிந்துவாக சாக மாட்டேன்!" என்ற உறுதியைச் செயல்படுத்த முடியாத வரலாற்றுப் பழிக்குத் தான் ஆளாகி விட்டிருப்போமே என்ற கவலை தான் டாக்டரை அதிர்ச்சிக்குரிய தாக்கியது!

உயிரைவிட இலட்சியம் - கொள்கை - சொன்ன உறுதிமொழியைக் காப்பாற்றுதல் என்பவை முன் னுரிமை பெற்று முதல் இடத்தில் உள்ளன அவரது வாழ்வில் என்பதைப் பார்த்தீர்களா?

இதைப் படித்தவுடன் அம்பேத்கர் என்ற ஒரு நாணயத்தின் மறுபக்கமான தந்தை பெரியார் அவர்கள் வாழ்வில் நிகழ்ந்த இதே போன்ற கவலையும், அதிர்ச்சியும் எமது நினைவில் நிழலாடியது!

திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள கச்சனம் என்ற ஊரில் 1964இல் நடைபெற்ற 'ஜாதி ஒழிப்பு மாநாட்டில்' தந்தை பெரியார் பேசும்போது, (அம்மாநாட்டில் தோழர்கள் ஈ.வெ.கி. சம்பத், பாலதண்டாயுதம் கலந்து கொண்டனர், நானும் கலந்து கொண்டேன்!) "சில வருஷங்களுக்குமுன் எனக்கு நாக்கில் ஒரு புண் வந்து, ரத்தம் சீழ் வடியத் தொடங்கியது. உடனே சென்னை சென்று டாக்டர் சுந்தரவதனம் அவர்களிடம் காட் டினேன். அவர் என்னை டாக்டர் ராய் என்பவரிடம் அனுப்பி சிகிச்சை பெற பரிந்துரைத்தார். டாக்டர் ராய்  - எக்ஸ்ரே எடுத்து நோய் வாய்ப் புண்பற்றி ஆய்வு செய்து விட்டு,  'அட உங்களுக்கு இப்படி ஒரு நோயா வர வேண்டும்? இது புற்றுநோய் - நாக்கில் ஏற்பட் டுள்ளது; என்றாலும் சிகிச்சைகளை உடனே துவக்கி விடுகிறோம்' என்று கூறி ஏதோ சிகிச்சைகளை மேற்கொண்டார்.

அப்போது எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சி, துன்பம், கவலை ஏற்பட்டு விட்டது.

"நாம் சாவதைப் பற்றி நமக்கு கவலை இல்லை. வாயில் புற்று நோய் வந்தல்லவா இந்த இராமசாமி நாயக்கன் செத்தான். கடவுள் இல்லை என்று பிரச்சாரம் செய்த அவனுக்கு கடவுள் என்ன தண்டனை, எப்படித் தந்தார் பார்த்தீர்களா? என்று அல்லவா எதிரிகள் பிரச்சாரம் செய்வர். அதை சிலரும் நம் மக்கள் முட்டாள்களாக இருப்பதால் நம்பித் தொலைப்பார்களே என்று கருதி அப்படி நடப்பதைவிட தற்கொலையாவது செய்து கொள்வது மேல் என்றுகூட நான் யோசித்த துண்டு" என்று கூறினார்.

அவருக்கு மரண பயம் இல்லை; மாறாக அய்யாவுக்கு கவலையை ஏற்படுத்தியது - தனது கொள்கைக்கு ஓர் பின்னடைவு பாமர மக்கள் மத்தியில் ஏற்பட்டு விடுமே என்ற கவலைதான் அவரை இந்த ஒரு விபரீத முடிவுக்குக்கூட தள்ளிவிட்டது!

டாக்டர் அம்பேத்கரும் சரி, தந்தை பெரியாரும் சரி -  மரணத்தைவிட தமது கொள்கை, லட்சிய, வெற்றிக்காக எவ்வளவு கவலையெடுத்தனர், அதற்காக உழைத் துள்ளனர் என்பதைப் பாருங்கள்.

இலட்சிய வீரர்கள் எப்படிப்பட்டவர்கள்; அவர்களது இலக்கணம் எப்படி என்பது இதன்மூலம் புரிகிற தல்லவா?

இப்படிப்பட்ட அரிய தகவலைக் கூறும் நாம்தேவ் அவர்கள் தனது சைக்கிளில் சென்று, அண்மையில் அம்பேத்கரின் புத்தகம் வெளிவந்திருந்தால் அதைக் கொடுங்கள் என்று (1956 டிசம்பர் 6ஆம் தேதி) காலை குறிப்பிட்ட நாளன்று புத்தக விற்பனையாளரிடம் கேட்கிறார்.

அவர் ஒரு புத்தகத்தை இவருக்கு எடுத்துக் கொடுக் கும்போது, "இந்த நூலாசிரியர் டாக்டர் அம்பேத்கர் இன்று காலை காலமானார் என்று வானொலியில் செய்தி சொல்லப்படுகிறது; தலைவர்களும், மக்களும் அவரது (டில்லி இல்லம்) நோக்கிச் செல்கின்றார்களே" என்று இவரிடம் கூறிட இடி தாக்கியதுபோல உணர்ந்து   - "இருக்காது நிச்சயம், அது உண்மையாக இருக்காது; இருக்கவும் கூடாது" என்று தலையில் அடித்துக்  கொண்டே சென்று செய்தி உறுதியான பிறகு அம் பேத்கர் எழுதிய புதிய புத்தகம் ஒருகையில்; மறுகையில் மாலையும் அவரது சடலத்தின் மீது வைத்து, தேக்கிய கண்ணீர் ஏரியை உடைத்து விட்டுத் திரும்பினார்.

என்னே கொடுமை! இயற்கையின் கோணல் புத்தி.

(நதி மீண்டும் ஓடும்)

- விடுதலை நாளேடு,1,2.11.17