பக்கங்கள்

வியாழன், 9 நவம்பர், 2017

அம்பேத்கர் - 'புத்தப் பிரியர்' மட்டுமல்ல; புத்தகப் பிரியரும்கூட! (9)&(10)



தேவி தயாள் என்பவர் சிறுவயதிலிருந்தே டாக்டர் அம்பேத்கரிடம் பணி புரிந்த இளைஞன் - உதவியாளர். இவரது பணி அவரது (வீட்டு) நூலகத்தைப் பார்த்துக் கொள்வதும், வீட்டில் சிறுசிறு வேலைகளைப் பார்ப் பதும் ஆகும்.

"டாக்டர் அறையில் காலை 7 மணி அளவில் சென்று அவர்கள் வாசிக்கும் செய்தித்தாள்களை அவரது சிறு ஸ்டூல் ஒன்றின்மேல் வைத்து விடுவேன். அவர் உறக்கத்தில் இருப்பார். பக்கவாட்டில் இருபுறங்களிலும், 2,3 நூல்கள் கிடக்கும். அவர் உறங்கும்போது மார்பில் புத்தகம் திறந்த நிலையில் இருக்கும்; சில நேரங்கள் அவை பக்கத்தில் விழுந்து கிடக்கும்" என்கிறார் தேவி தயாள். இரவு 1.30 மணிக்கு அவரை விட்டு இந்த தேவி தயாள் வெளியேறுவார்! சில புத்தகங்களை எடுத்து வைத்து விட்டு நீங்கள் படுக்கைக்குச் செல்லுங்கள் என்று அவரிடம் கூறுவாராம். அப்படி அவர் கேட்ட சில புத்தகங்கள் புருஷார்த்தா, ரிக்வேத சம்ஹிதை, தாமஸ்மூர் ஆகிய புத்தகங்கள். அவைகளை எடுத்து அவர் அருகில் வைத்து விட்டு அவரைக் கும்பிட்டு விட்டு நான் விடை பெறுவேன்; அவர் பக்கத்தில் எப்போதும் எட்டு, பத்து புத்தகங்கள் இருக்க வேண்டும்; காரணம் கண் விழித்துக் கொண்டால் அவற்றில் ஒன்றை எடுத்துப் படித்துக் கொண்டேயிருப்பார். அந்த வசதிக்காகத்தான் அந்த எட்டு, பத்து புத்தகக் குவியல். அவர் எப்போது உறங்குவார் படித்து முடித்து என்பது தேவி தயாளுக்கே கூடத் தெரியாது.

'Burning the midnight oil' ீ' நடு இரவு விளக்கெரித்தல் மூலம் எண்ணெயைச் செலவு செய்தல் என்று நேரடி பொருள் கொண்டால், இரவெல்லாம் கண் விழித்துப் படிப்பவர்களைப் பற்றியதே இச்சொற்றொடர் ஆகும்!

அவரது படுக்கை அறை 12 சதுர அடி, நாலு கதவுகள் (டில்லி பங்களா); ஒரு கதவு மட்டும் திறந்திருக்கும்; மற்ற மூன்று கதவுகளும் மூடியே இருக்கும்; காரணம் அவைகளுக்குப் பக்கத்தில் பெரிய பெரிய அலமாரிகள். அதில் வரிசையாக அடுக்கப்பட்ட புத்தகங்கள்தான், பக்கத்திலும் மேஜையில் புத்தகக் குவியல், எழுதும் தாள், பலவித பேனா, பென்சில்கள், அவர் உட்கார்ந்து படிப்பதேகூட வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு டாக்டர் அந்த அறையில் இருப்பதோ, படிப்பதோ தெரியாது; காரணம் புத்தகங்கள் மறைத்துக் கொள்ளும்! அவரது நண்பர்களில் ஒருவர் (ரமேஷ்) டாக்டர் எங்கே இருக்கிறார் என்று தன்னைக் கேட்டதாகவும், அதற்கு தேவி தயாள், அங்கே அறையில் தானே படித்துக் கொண்டிருக்கிறார் என்று பதில் கூறிய பிறகே, புத்தகக் குவியலில் புதைந்து படித்துக் கொண்டிருக்கும் அம்பேத்கரை அந்த நண்பர் ரமேஷ் கண்டார்!

அவரால் தேர்வு செய்யப்பட்ட புத்தகங்கள் மட்டும்தான் அந்தக் குவியலில் இருக்கும். அவர் அமர்ந்து படிக்கும் நாற்காலிக்குப் பின்னே அலமாரியில் 4 அறைகளில் அவர் எழுதிய கையெழுத்து (நூல் களுக்காக) பிரதிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். அவைகளில் பல புத்தகமாக அச்சுக்குச் செல்ல வேண்டியவைகளாகவும் இருக்கும். பென்சில் சீவும் கூர் தீட்டும் கருவியும் அருகில் அம்மேஜையில் இருக்கும்!

அவரது படுக்கைக்குப் பக்கத்தில்  பல ஸ்டூல்கள் வரிசையாக எப்படித் திரும்பினாலும் இருக்கும். அவற்றில் புத்தகக் குவியல் - அவர் மாறி மாறிப் படிப்பதற்கு வசதியாக தேவி தயாள் அடுக்கி வைப்பார். அவர் ஒரு முறை தேவி தயாளிடம் கூறினார்.  "தனது படுக்கையறை தான் எனது கல்லறையாகும்" என்றார்!

எதேச்சையாக சொன்னது நடந்ததே! 1956 டிசம்பர் 5 இரவு 'புத்தமும் தம்மமும்' (Buddha & Dhamma) 
நூலின் முன்னுரையை எழுதி இறுதி வடிவம் கொடுத்து, உறங்கப் போனவர் நீடுதுயிலில்  - மரணத்தினை அடைந்து விட்டார்!

மேலும் தேவிதயாள் கூறுகிறார்:

அவரது உதவியாளர் தேவி தயாள் காலையில் அவரது படுக்கைக்குப் பக்கத்தில் செய்தித்தாள்கள் கட்டினை வைத்து, மின் விளக்குப் பொத்தானைப் போடுவார். எழுந்தவுடன் படுக்கையில் அமர்ந்தவர் ஓரிரு ஏடுகளைப் படித்து விட்டு, எஞ்சியவைகளை அவர் கழிப்பறைக்கு (Toilet) செல்லுகையில் கையில் எடுத்துச் சென்று படித்து முடித்து விடுவார்.

இம்மாதிரி கழிப்பறைக்கு வெறும் பத்திரிக்கைகளை மட்டுமல்ல; சில சில நேரங்களில் புத்தகங்களைக்கூட எடுத்துச் சென்று விடுவார்!

அவர் எழுதும்போது அருகில் தள்ளி அமர்ந் திருப்பேன்; அவருக்கு அப்போது தேவையான புத்தகங்களை எடுத்துத் தருமாறு என்னைப் பணிப்பார். நான் உடனே தாமதமின்றித் தர வேண்டும்; தருவேன்.

அவர் எழுந்து கழிப்பறைக்குப் போன பின்னர் என்ன புத்தகம் அவர் அப்போது படித்து மேற்கோள் காட்டி எழுதுகிறார் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் என்னை உந்தித் தள்ளும். அது  H.H. வில்சனின் "வேதங்களின் மொழிபெயர்ப்பு" நூல் என்பதை அறிந்தேன்.

பத்திரிக்கைகளைப் படிக்கும்போது கோடிட்டு அத்துணை செய்திகளையும் படித்துவிட்டு தேவையான வைகளை கத்தரித்துப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளச் சொல்வார்!

இதுபற்றி வியப்புடன் கூடிய ஒரு தகவலை நாளை படிப்போமா?

தேவிதயாளின் அன்றாடப் பணிகளில் ஒன்று, டாக்டர் பார்த்து கோடிட்ட பத்திரிக்கைகளின் (நாளே டுகள் தான் பெரிதும்) பகுதிகளை வெட்டி கத்தரித்து அவைகளை தேதி, குறிப்பிட்ட ஏடு சம்பந்தமான கோப்புகளாக ஆக்கி வைத்து அவருக்கு உதவுவது.

தேவிதயாள் கூறுகிறார்:

"இது எனக்குப் புதிய பணி அல்ல. டாக்டர் துவக்க காலத்திலிருந்தே அவரே அதனைச் செய்து வந் துள்ளார். அவரது நூலகத்தில் ஒரு பகுதி இத்தகைய வெட்டி சேகரித்து வைக்கப்பட்ட பத்திரிக்கை கத்தரிப்பு கோப்புகளும் ஆகும்.

நான் பம்பாயில் இருந்தபோது அவரது நூலகத்தில் 1907, 1908, 1909 போன்ற ஆண்டுகளின் பத்திரிக்கை கத்தரிப்புகளும் பத்திரமாகப் பாதுகாத்து வைக்கப்பட்டி ருப்பதை நானே பார்த்திருக்கிறேன். நூலகத்தில் ஒழுங்குபடுத்தியிருக்கிறேன்.

என்னிடம் ஒரு நாள் தடித்த ஒரு கோப்பினை டாக்டர் காட்டினார். அது பத்திரிக்கை கத்தரிப்புச் சேகரிப்புகள். அவர் கொடுத்தது 1917 முதல் 1929 வரை வந்த முக்கிய செய்திகள் - தகவல்கள், கருத்துரைகளின் தொகுப்புகளைக் கொண்ட கோப்பு - அக்கால அரசியல், சமூக, நிலவரத்தை உள்ளது உள்ளபடித் தெரிவிப் பவையாக அவைகள் இருந்தன. இதில் வியப்புக்குரிய செய்தி என்ன தெரியுமா?

இவைகளின் சேகரிப்புகளில் உள்ளதைவிட, டாக்டரின் மூளையில் அவைகளை ஒரு ஆவணக் காப்பகம் போல பதிந்து வைத்துள்ளார். எதை  எப்போது எப்படிப் பயன்படுத்துவது என்பதை அவர் அறிவார்; பயன்படுத்தவும் தயங்க மாட்டார். இதற்கு எடுத்துக் காட்டான ஒரு நிகழ்வு.

1944இல் அப்போது திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் "திவானாக" இருந்த சர் சி.பி. இராமசாமி அய்யர் டாக்டரைச் சந்திக்க வருகிறார்; சில விஷயங்கள் பற்றிய கருத்துப் பரிமாற்றத்திற்கான சந்திப்பு அது. டாக்டர் கூறுகிறார்:

"தேவிதயாள், எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. அவர் (சர் சி.பி. ராமசாமி அய்யர்) முன்பு 'தீண்டாத மக்களுக்கு' எதிராகப் பேசினார். அப்பேச்சு வெளிவந்த பத்திரிக்கைச் செய்தியை வெட்டி பாது காப்பாக வைத்துள்ளேன். அதைத் தேடிப் பிடி" என்றார்!

அய்யா, அது எத்தனை ஆண்டுகளுக்கு முன் என்று டாக்டரைக் கேட்டேன்! '12 ஆண்டுகளுக்கு முன்பிருக்கும்' - டாக்டர் பதில். 3,4 அங்குல நீளமுள்ள தாள் எனவும், அதை ஒரு காகிதப் பையில் போட்டு வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்".

இவர் தேடிய போது அப்படியே சரியாக அதே பையில் தாள் இருந்ததை கண்டுபிடித்து டாக்டரிடம் கொடுத்த போது, டாக்டர் "You see I told you that rogue was once against temple entry'' என்று கோபம் கொப்பளிக்கக் கூறியுள்ளார்!

கோயில் நுழைவுக்கு எதிராக இந்த யோக்கியப் பொறுப்பற்ற மனிதர் பேசியுள்ளார் என்று கூறினாராம்! (இதைப்பற்றி "காந்தியும் காங்கிரசும் தீண்டப்படாத வருக்குச் செய்தது என்ன?' என்ற நூலில் எழுதியுள்ளார்).

1932ல் குருவாயூர் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்ட வர்களை அனுமதிப்பதை அங்குள்ள வைதிக நம் பூதிரிகளும், பார்ப்பனர்களும் எதிர்த்தபோது சர். சி.பி. இராமசாமி அய்யர் கோயில் நுழைவுக்கான எதிர்ப் பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை விடுத்தார். அந்த அறிக்கையை 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' நவம்பர் 10 - 1932இல் வெளி வந்துள்ளதை டாக்டர் கத்தரித்து வைத்துப் பாதுகாத்துள்ளார். பிறகு ஏதோ மிகப் பெரிய மனமாற்றத்தின் விளைவால் திருவாங்கூர் கோயில் நுழைவுக்குத் தானே காரணம் என்பதாக சர்.  சி.பி. இராமசாமி அய்யர் வர்ணித்துக் கொண்ட "இரட்டை வேட நிலை" பற்றியதால் டாக்டருக்கு அவ்வளவு கோபம்! கடுமையான அச்சொல் அவர் வாயிலிருந்து வெளி வந்துள்ளது.

பொழுதுபோக்கு, சினிமா, கிளப்புகளுக்கு நண் பர்கள் இவரை  வற்புறுத்தி அழைத்துப் போய் சில மணி நேர மாற்றத்தை "இவருள் திணிக்க - மாறி இளைப் பாறட்டும்" என்ற நோக்கில் முயற்சி செய்தபோது அம்பேத்கர்தான் அப்போதும் வெற்றி பெற்றுள்ளார்; நண்பர்கள் தோற்றுப் போயினர்!

சினிமா அல்லது வெளியே சுற்றுலா மாதிரி அழைத் துச் செல்லப்பட்டார். இரண்டு முறை சினிமாவுக்கும், நான்கு முறை நண்பர்களுடன் சேர்ந்து செலவழிக்கும் கேளிக்கைக்கும் (Picnic)  சென்றதாக தேவி தயாள் கூறுகிறார்.

அதுபற்றி அவர் மேலும் கூறும்போது,

"அங்கே இருக்கும்போது அவர் மனம் சதா பல சிந்தனைகளைத் தேக்கி வைத்தபடியே இருக்கும். எதை எழுதுவது அல்லது சில பிரச்சினைகளுக்கு எப்படித் தீர்வு காணுவது என்பதையே அவர் மனம் அசைபோட்டுக் கொண்டே இருந்திருக்கும் என்பதை எப்படிக் கண்டுபிடித்தோம் என்றால் - அங்கே இருந்து திரும்பும்போது நேரே மேஜைக்குச் சென்று உடனே அவசர அவசரமாக எழுதிட முனைவார். உடை களைக்கூட மாற்றிடும் எண்ணமே அப்போது அவருக்கு வந்ததே இல்லை! திரைப்படங்களில் பாதியில் திரும்பி வீட்டிற்கு வந்ததும் உடனே எழுதிட முனைவார்; காரணம் தேக்கிய எண்ணங்கள் கருத்துருவாக எழுத்தில் புத்தாக்கம் கொள்ளுவதை தாமதிக்கவே கூடாது என்பது அவரது பழக்கங்களில் ஒன்று."

முகமன் - முகஸ்துதி அவருக்குப் பிடிக்காத ஒன்று. அதைப் புரிந்து மறுத்திட தயங்கியதே இல்லை புரட்சியாளர் அம்பேத்கர்.

(நீளலாம்)

-விடுதலை நாளேடு,3,4.11.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக