பக்கங்கள்

செவ்வாய், 28 மார்ச், 2017

மருத்துவர்களின் சரியான எச்சரிக்கை - "நா (சுவை) காக்க!"




நமது உடலின் ஒவ்வொரு உறுப்புகளும் - இருதயம், மூளை போன்றே மிகவும் இன்றியமையாதவை. எப்போதும் நலமுடன் இயங்க வேண்டியவை.

நாம் எந்த உறுப்பின் நலத்தையும் குறைத்து மதிப்பிடவோ, சற்று அலட் சியமாகக் கருதி மருத்துவ ஆலோசனை பெறாமலிருப்பதோ விரும்பத்தக்கதல்ல.

விழிப்புணர்வை அத்தனை பேரிட மும் உருவாக்க வேண்டியது, சமூக நல விரும்பிகளின் தவிர்க்க இயலாத கடமையாகும்.

கடந்த சில நாள்களுக்குமுன் அமெரிக்காவின் பிரபல மருத்துவ மனையான 'மவுண்ட் சினாய்' என்பதும், சென்னை 'அப்போலோ மருத்துவமனை'யும் இணைந்து கல்லீரல் பற்றிய விழிப்புணர்வுபற்றி விரிவாக விவாதித்து பல பயனுள்ள அறிவுரைகளை மக்களுக்கு வழங்கி யுள்ளனர்!

கல்லீரல் நோய் சம்பந்தப்பட்ட அந்த இரு மருத்துவமனைகளின் பிரபல மருத்துவர்கள் கருத்துப் பரிமாற்றம் செய்ததோடு, நோயாளிகளுக்கு தக்க விழிப்புணர்வு  மற்றும் தடுப்பு நடவடிக்கைக்கான கருத்துரைகளையும் சிறப்பாகத் தந்துள்ளனர்.கல்லீரல் (Liver)  - நமது உடலில் மிகவும் சிறியதுதான் என்றாலும் அதனைக் காப்பது மிகவும் தேவையான ஒன்று.

மிக அதிகமான குடிப் பழக்கம் உள்ளவர்களுக்கு கல்லீரல் வீக்கம் நோய்  (Cirrhosis)தாக்கி, கல்லீரல் சிதைந்து வயிறு பெருக்கம் அதிகம் என்பது "பீர் தொப்பையாளர்" ஆவது சர்வ சாதாரணம்!

அண்மையில் இந்த கல்லீரல் நோய்  - அழற்சி வீக்கம் - பாழ்படுதல் கடந்த 10 ஆண்டுகளில் 40 விழுக்காடு கூடியுள்ளதாம்!

குடிப் பழக்கம் இல்லாதவர்களுக்குக் கூட இந்த கல்லீரல் நோய் (சிரோசிஸ்) ஏன் வருகிறது? புரியவில்லையே! அவர் குடிப் பழக்கம் இல்லாதவராயிற்றே என்று நம்மில் பலர் இந்நோயினால் தாக்குண்டவர்களைப்பற்றி பேசி ஆயாசப்படுவதுண்டு.

வயிறு மற்றும் கல்லீரல் அழற்சி மருத்துவத்தில் சிறந்தவரான நமது பிரபல டாக்டர் கே. பழனிச்சாமி மற்றும் கல்லீரல் அழற்சி (Hepatologist)

மருத்துவரான டாக்டர் என். முருகன்  NAFLD (Non - alchoholic tally liver disease)

பற்றிய அரிய எச்சரிக்கை களைத் தந்துள்ளனர்.

உணவு முறையில் நாம் அனைவரும் விழிப்புடன் இல்லாததே, மதுப் பழக்கம் இல்லாமல் இருப்பவர்களும் கல்லீரல் நோயினால் தாக்கப்படுவதற்கு முக்கிய காரணம் என்று கூறியுள்ளனர்.

2 லட்சத்து 50 ஆயிரம் பேர் இந்தக் கல்லீரல் நோயினால் மரணத்தைத் தழுவும் பரிதாபம் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படுகிறதாம்!  மது குடிப்பதால் இந்த நிலை என்பது ஒரு தகவல். ஹெபடிட்டிஸ்  B,C மற்றும் தொற்று (Viral infection)

போன்றவை இதற்கு மற்ற முக்கிய காரணிகள் ஆகும்.

இருதயம், சிறுநீரகம் மாற்றுச் சிகிச்சைப் போலவே  கல்லீரல் மாற்று பொருத்திடும் சிகிச்சையும் (Transplantation of Liver

நடைபெறு கின்றது என்றாலும் வருமுன்னர் காப்பது தானே அறிவுடமை?

ஆரோக்கிய உணவைத் தேர்ந்து அதனைச் சாப்பிடுங்கள்; அத்துடன் அவ்வப்போது உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று மருத் துவர்கள் கூறுகின்றனர்.

கொழுப்பு, நிறைய மாவுச் சத்துடன் பல சுவை தரும் உணவுப் பண்டங்களை கண்டபடி நாக்குக்கு அடிமையாகி சாப்பிடுவதால் இப்படி கல்லீரல் பாதிப்புக்கு ஆளாகக்கூடும்; எனவே எச்சரிக்கை தேவை என்று அறிவுறுத்துகின்றனர். புரதக் குறைவான உணவைச் சாப்பிடுவதும் கல்லீரல் நோய்க்கு ஒரு முக்கிய காரணம் - அதிலும் கவனஞ் செலுத்துங்கள்.

சர்க்கரை நோய், பெருத்த எடை இவைகளும் இந்நோயைத் துரிதப் படுத்தும் கருவிகளாகி விடுகின்றனவாம்!

எனவே வெறும் நாக்குக்கு அடிமையாகி அப்போதைய சுவைக்காக, எதிர்கால வாழ்வை இழக்காதீர்கள்!

"நா காக்க" என்று வள்ளுவர் சொன்ன நாவை அடக்குதல் என்பதற்கு விரிவான பொருள் காண்க. சுவைக்கு மட்டும் அடிமை ஆகாதீர்! இதனையும் புதுப் பொருளாகக் கொண்டு வாழுங்கள். நோயற்ற வாழ்வு தானே குறைவற்ற செல்வம் - இல்லையா?
-விடுதலை,27.3.17

திங்கள், 13 மார்ச், 2017

அமைதியான திடீர் மாரடைப்புக்கு - ஒரு விடியல் நற்செய்தி!



அண்மைக் காலத்தில் பல இளைஞர்கள், நடுத்தர வயதுள் ளவர்கள், முதியவர்கள் என்று வயது வேறுபாடு இல்லாமல் திடீர் என்று எந்தவித முன் அபாய அறிகுறிகளும் இன்றி மாரடைப்பு (Massive Heart Attack), மிகவும் அமைதியான மாரடைப்பு (Silent Attack) ஏற்பட்டு எதிர்பாராத வகையில் மின்னல் போல் உயிர் பறிப்பு ஏற்படுகிறது!

டாக்டர்களேகூட சிலர் இப்படிப் பட்ட இறப்புக்கு ஆளாகின்றனர்.

இதுபற்றி ஒரு நம்பிக்கையூட்டக் கூடிய செய்தி ஒன்றை பிரபல மருத்துவ நிபுணர் (பேராசிரியர்) டாக்டர் எம்.எஸ்.இராமச்சந்திரன் அவர்கள் நமக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பியுள் ளார்.

அதனை நீங்களும் படிப்பதும், பரப்புவதும் பலருக்கு புதிய தெளிவு - விழிப்புணர்வு ஏற்படக்கூடும் என்பதால், அதை அப்படியே வாச கர்களுக்குப் பயன்படும் வகையில் வெளியிட்டுள்ளோம்.

படியுங்கள்! பயன் பெறுங்கள்!

எச்சரிக்கையை செயல்படுத்த முயலுவோமாக!

மாரடைப்பு பல ரகம். படபடப்பு, மூச்சுத் திணறல், கொட்டும் வியர்வை, நெஞ்சு வலி, நகரும் கை வலி சில அறிகுறிகள்.

எந்த அறிகுறியும் இல்லாமல் தாக்கும் மாரடைப்பும் உண்டு. யாரா லும் கண்டுபிடிக்க முடியாது. திடீரென நெஞ்சடைக்கும். சுருண்டு விழு வார்கள், இதயம் நின்றுவிடும், உயிர் பிரிந்துவிடும்.

சைலன்ட் அட்டாக் என்பார்கள். டாக்டர்களாலும் கண்டுபிடிக்க முடி யாது. ஏகப்பட்ட டெஸ்ட் எடுக்கச் சொல்வார்கள். எதிலாவது அறிகுறி தெரிந்தால் சொல்வார்கள்.

எந்த சோதனையும் செய்யாமல் சைலன்ட் அட்டாக் வரப்போவதை முன்கூட்டியே கண்டுபிடிக்க வழி தெரிந்துவிட்டது இப்போது. வழிகாட்டி பெரிய விஞ்ஞானியோ, நோபல் விருது பெற்றவரோ இல்லை.

நமது ஓசூர் சிறுவன் ஆகாஷ் மனோஜ். பத்தாம் வகுப்பு மாணவன். உலகம் முழுவதும் நாளை அவன் படத்தோடு செய்தி வரப்போகிறது - நமது டாக்டர் வாசகர்களுக்கு இன்றே, இப்போதே!

‘‘எங்க தாத்தா ரொம்ப ஆரோக் கியமாக இருந்தார். அவருக்கு டய பெடிஸ், பிளட் பிரஷர் இருந்தது. ஆனால், ரொம்ப கன்ட்ரோல்ல வச் சிருந்தார். திடீர்னு ஒரு நாள் பேசிட்டு இருந்தப்ப அப்படியே சுருண்டு விழுந்து செத்துப் போனார். நிமிஷத் துல எல்லாம் முடிஞ்சுருச்சு. சைலன்ட் ஹார்ட் அட்டாக்னு டாக்டர்கள் சொன் னாங்க.’’

‘‘அது என்னான்னு படிக்க ஆரம் பிச்சேன். பெங்களூர்ல உள்ள இந்தி யன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் இருக்கிற லைப்ரரிக்குப் போய் இதயம் சம்பந்தமான எல்லா தகவல்களையும் படிக்க ஆரம்பிச்சேன். வெளிநாட்டுப் பத்திரிகைகள், புத்தகங்கள் எல்லாம் அங்கே வரும். எல்லாவற்றையும் படித்தேன். இப்பொழுது எனக்கு 15 வயது. ஆனால், டாக்டர்களுக்கு ஹார்ட்பற்றி வகுப்பு எடுக்கிற அள வுக்குப் பேச முடியும்.

ரத்தத்திலே இருக்கிற FABP3    என்கிற ஒரு புரோட்டீன் அதிக மாகும்போது சைலன்ட் அட்டாக் வருகிறது என்று தெரிந்தது. அது ஒரு நெகடிவ் புரதம். அதனால், பாசிட்டிவ் புரதம் மூலமாக அதை ஈர்க்க முடியும். அதாவது பக்கத்தில் இழுத்து அடை யாளம் காண முடியும். மணிக்கட்டு அல்லது காதுக்குப் பின்னால் ஒட்டிக் கொள்கிற மாதிரி சின்ன ஸ்டிக்கர் மாதிரி ஒரு சிலிக்கான் பேட்ஜ் தயாரித் தேன்.

அதை ஒட்டிக்கிட்ட உடனே அதிலே இருந்து பாசிட்டிவ் எலக்ட்ரிக் இம்பல்ஸ் உற்பத்தியாகி, ரத்த நாளங் களில் ஊடுருவும். அங்கே நெகடிவ் புரதம், அதாவது, FABP3    இருந்தா, உடனே பேட்ஜ் அதனை இழுக்கும். அது எந்த அளவு இருக்குன்னு அந்த பேட்ஜ் காட்டிக் கொடுக்கும். அதிகமாக இருந்தால், அந்த நபருக்கு சைலன்ட் அட்டாக் வரப் போகிறது என்று அர்த்தம். உடனே, டாக்டரை பார்க் கணும்‘’ என்று விவரிக்கிறான் மனோஜ்.

பிளாஸ்திரி மாதிரி இருக்கும் இந்தக் கருவிக்கு தன் பெயரில் காப்புரிமை கேட்டு மனு கொடுத்திருக்கிறான் ஆகாஷ் மனோஜ்.

பன்னாட்டு மருந்து கம்பெனிகள் எத்தனைக் கோடி வேண்டுமானாலும் கொட்டிக் கொடுத்து இதன் உற்பத்தி உரிமையை வாங்கத் தயாராக இருக் கும் நிலையில்,

மனோஜின் சிந்தனை வேறு மாதிரி யாக இருக்கிறது.

‘‘எனக்குப் பணம் பெரிதல்ல. என் தாத்தா மாதிரி இனிமே யாரும் சைலன்ட் ஹார்ட் அட்டாக் வந்து இறக்கக் கூடாது. அதனால், மத்திய அரசு மூலமாக மலிவான விலையில் இதை உற்பத்தி செய்து, எல்லோருக்கும் கிடைக்கும்படி செய்யவேண்டும் அது தான் என்னுடைய ஆசை’’ என்கிறான்.

பூர்வாங்க சோதனைகள் முடிந்து மனிதர்களிடம் சோதிக்கும் கட்டத்தை மனோஜின் சிலிகான் பேட்ஜ் எட்டியிருக்கிறது. குடியரசுத் தலைவர் பிரணாப் இளம் கண்டுபிடிப்பாளர் விருதும், பாராட்டுப் பத்திரமும் அளித் திருக்கிறார். பிளஸ் 2 முடித்ததும் அவன் விரும்பிய கார்டியாலஜி துறையில் சேர்த்துக் கொள்ள டில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி தயாராக இருக்கிறது.

வாழ்க அந்த மனோஜ்!

வெல்க அவரது மனிதநேயம்!!

-விடுதலை,13.3.17

வியாழன், 2 மார்ச், 2017

பகுத்தறிவே சிறந்த வழிகாட்டி- மறவாதீர்!

மனித வாழ்க்கையில் - முற்றிலும் பகுத்தறிவையே பயன்படுத்தித்தான் வாழ்வார்கள்; வாழவேண்டும் என்பது இயற்கையான வாய்ப்பு என்றாலும் கூட, நம்மில் பலரும் அப்படி வாழ் வதில்லை; பெரும்பாலோர் அப்படி வாழ விரும்புவதே இல்லை.

காலங்காலமாக எப்படி மற்றவர்கள் வாழுகிறார்களோ அப்படியே ‘செக்கு மாட்டு வாழ்க்கையே’ வாழுகிறார்கள்!

இன்னும் பலர் பழைய பாதையே பாதுகாப்பானது என்ற பயத்தின் கார ணமாக, ஒருவகை அடிமை வாழ்க்கை யில் வாழுகிறார்கள்! அடிமைத்தனம் என்று இங்கே நாம் குறிப்பிடுவது மூளை அடிமைத்தனத்தைத்தான்!

சிலர் அதைப் பெருமையுடன் கூறி ‘கித்தாப்பு’ அடைகின்றனர்! தன் பெருமை, தன் சக்தி, தன் சாதனை என்று தம்பட்டம் அடித்து மகிழ்வது தான் அவர்கள் சிக்கிய போதையாகும்!

எடுத்துக்காட்டாக, கடை வீதியில் நடந்துகொண்டே வந்தவர், ஒன்று வாங்கினால் மேலும் இரண்டு ‘இலவசம்‘ என்ற விளம்பரம் கண்டு திகைத்தவராக, உடனே அவரது தேவையை உத்தேசித்தோ யோசிக் காமலே, அவரிடம் உள்ள கடன் (கிரெடிட் கார்டு) அட்டையைப் பயன்படுத்தி உடனே அக்கடையில் நுழைந்து வாங்கி வருகிறார். எந்தக் கடைக்காரரும் நட்டத்தில் வியாபாரம் செய்யமாட்டார்களே, இவர் மட்டும் ஏன் இப்படி விளம்பரம் செய்கிறார் என்று ஒருகணம்கூட பகுத்தறிவுக்கு வேலை தருவதில்லை; தான் ஏதோ மற்றவர்களுக்கு இல்லாத ஒரு வாய்ப்பை இதன்மூலம் பெற்றுவிட் டோம் என்ற ஒருவகை போலிப் பெருமையில் (அதுவே ஒரு வகை போதைதான்) மிதந்து வருவார்!

மனித வாழ்வில் உணர்ச்சிகளின் திடீர் ஆக்கிரமிப்பு - படையெடுப்பு - பகுத்தறிவுக்கோ, தர்க்க ரீதியான சிந்தனைக்கோ இடம்பெறுவதில்லை!

கடைகளுக்குச் சென்று வாங்குவது என்பது பகுத்தறிவு அடிப்படையில் பார்த்தால், கண்ணுக்கும், காதுக்கும், தமது பெருமைக்கும் இடம் தருவதற்கான கொள்முதலாக இருக் கக்கூடாது - பகுத்தறிவின்படி பார்த் தால்!

எது நமக்கு இன்றியமையாததோ, அதைக் குறித்து வைத்து, அதற்கான ‘பட்ஜெட்’ நமக்கு உள்ளதா என்று ஆராய்ந்து, கையில் உள்ள சேமிப் பையோ அல்லது சம்பாதனையின் கீழ்வரும் பட்ஜெட்டையோ பற்றி மட்டும் கவலை கொண்டால், நிச்சயம் நாம் ‘கடனாளி’யாகி விடமாட்டோம்!

ஆனால், ஆசையும், வீண் பெருமையும், பதவி ஆசையைவிட மிகவும் கொடுமையானது! சூதாட்டத் தில் வெற்றி பெற்றவனும் எழுவ தில்லை (சிலர் வேண்டுமானால் விதிவிலக்கு) தோற்றவனும் எளிதில் எழுவதில்லை. இருவரையும் ஒன்றே ஈர்த்து எல்லாவற்றையும் இழக்கச் செய்வது பற்றிய யோசனையே இல்லாது இருப்பது உலக இயல்பாகி விட்டது!

பகுத்தறிவு பலவிடங்களில் தோற்று ஒதுங்கிக் கொள்ளுகிறது; உணர்ச்சிகள் கோலோச்சத் தொடங் கிய இடத்தில்! அதன் விளைவு காலங்கடந்த ஞானோதயம்!

அளவுக்கு மீறிய சொத்து சேர்த்துக் கொண்டே செல்வதில் சுவை கண்ட வர்கள் - தங்களது மரண வாக்குமூலத் தில் எதைக் குறிப்பார்கள்?

யான்கண்ட சுகம் ஒன்றுமில்லை உண்மையே! இடையில் ஏற்பட்ட போதை - பண போதை - சொத்து போதையைத் தவிர என்பார்கள்!

எதற்கும் எல்லை உண்டு என்ப வர்கள் பகுத்தறிவைத் தாராளமாகப் பயன்படுத்தியவர்கள், இறுதியில் தொல்லை அடைவதில்லை - இடை யில் இடையூறுகளால் அலைக்கழிக் கப்பட்டாலும்கூட!

எனவே, பகுத்தறிவே சிறந்த வழி காட்டி என்பதை மறவாதீர்!

-விடுதலை,2.3.17