பக்கங்கள்

புதன், 31 அக்டோபர், 2018

சேமிப்பீர் - சிறப்புறுவீர் (1), (2)

சேமிப்பீர் - சிறப்புறுவீர் (1)

1924ஆம் ஆண்டு - இன்றைய தேதியான அக்டோபர் 30 அய் உலக சிக்கன நாளாகக் கடைப்பிடிப்பதென, இத்தாலி நாட்டின் மிலான் நகரில் நடைபெற்ற முதல் பன்னாட்டு சேமிப்புக் காங்கிரஸ் - மாநாட்டில் முடிவு செய்யப்பட்டு, 94 ஆண்டுகளாக அதை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்!
சிக்கனம் - சேமிப்பு என்பது வாழ்வின் பொருளாதார முன்னேற்றத்தில் முக்கிய தேவையான கூறுபாடுகளில் ஒன்றாகும்!
செலவே செய்யக் கூடாது என்று இதைத் தவறாக யாரும் புரிந்து கொள்ள வேண்டாம்.
தேவையானவற்றிற்குச் செலவழித்துத் தான் தீர வேண்டும் என்பது வாழ்க்கையின் தத்துவம் ஆகும் - 'வரவு' என்ற சொல்லுடன் இணைந்தே வரும் மற்றொரு சொல் 'செலவு' என்பதாகும்!
வரவினைக் கொண்டு செலவழித்தல் ஒரு வகை; செலவிற்காக வரவினைத் தேடுவது இன்னொரு முறை.
சென்ற நூற்றாண்டான 20ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய பொருளாதார வல்லுனரான ஜான் மேண்ட் கீன்ஸ் என்ற பிரிட்டிஷ் பொருளாதார அறிஞர் அழகான ஒரு எளிய தத்துவத்தைக் கூறினார்.
'ஒருவரது செலவு, மற்றவரது வரவு' என்று அவர் கூறினார். (One Man's Expenditure  is another man's income)
பணத்தின் பெருமை - முடங்கிக் கிடப்பதில் இல்லை; மாறாக, நடைமுறை புழக்கத்தில் அது எவ்வளவு பேர்களிடம் கை மாறுகிறதோ (Velocity of Circulation of Money) அவ்வளவுக்கவ்வளவு பொரு ளாதார நடவடிக்கை, வளர்ச்சிக்கு வழிகோலும்!
சிக்கனம் - சேமிப்பு என்பதெல்லாம் கூட பொருளா தார வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதவையாகும்!
சேமிப்பு என்பதில்கூட கூர்த்த அறிவும், மிகுந்த நம்பகத் தன்மையுடைய அமைப்புகளான வங்கிகள், நிதி நிறுவனங்களில்தான் போட வேண்டும்.
செய்திதாள்களைத் திறந்தால், 'டெப்பாசிட் இழந்த வர்கள் சங்கத்தின்' தீர்மானங்களையும், போராட்டங் களையும் பற்றி படிக்கும் போது நம் கண்களில் கண்ணீர் அருவியெனக் கொட்டுகின்றது; காரணம், பல முதியவர்கள், ஓய்வூதியதாரர்கள் கடும் உழைப்பு - பல்லாண்டு கால பணிகள் மூலம் கிடைத்த பணிக் கொடை வரவு - இவைகளை தவறானவர்களை நம்பி, கூடுதல் வட்டி கிடைக்குமே என்ற தவறான ஆசை - ('பேராசை' என்ற சொல் அவர்களுக்குப் பொருந்தாது) காரணமாக உள்ளதை இழந்த, திடீர் பூகம்பம் ஏற்பட்டு உயிருடன் தப்பி, வீதியில் நிற்கும் முன்னாள் பணக்காரர்களைப் போல ஒரே நாளில் மீண்டும் அவர்களை வறுமைத் தேள் கொட்டி, விஷத்தை ஏற்றி விட்டதே என்ற அவல நிலை!
எனவேதான் சேமிப்பினைக்கூட சரியான அடை யாளத்துடன் கொண்ட நாணயம் தவறாத அமைப்பில் பண முதலீடு செய்ய வேண்டும் - விழிப்புணர்வுடன் செய்தல் - அவசியம்.
உங்கள் வாழ்வில் சேமிப்பு - மிச்சப்படுத்தல்பற்றிய இலக்குபற்றி தாளை எடுத்து எழுதுங்கள்.
1. குறைந்த காலத் திட்டம் (Short Term)
2. நடுமை காலத் திட்டம் (Medium Term)
3. நீண்ட காலத் திட்டம் (Long Term)
இதற்குமேல் "எதிர்பாராத செலவுகள்" என்பதற்கு உங்களது  வரவு - செலவுத் திட்டத்தில் ஒரு முக்கிய பங்கை ஒதுக்குங்கள். செலவாகாமல் அத்தொகையில் மீதம் ஆனால் பெரு மகிழ்ச்சியை அதுவே தரும் - இல்லையா?
நம் வருமானத்தில் - வரவில் - ஒரு பகுதியை 10 விழுக்காடு, 15 விழுக்காடு, 20 விழுக்காடு என்று வாய்ப்புக்கும், வசதிக்கும் ஏற்ப ஒதுக்கி, சேமிப்பில் போடுங்கள்.
உண்டியலில் போடும் பழக்கத்தை குழந்தைகளுக் குக்கூட சிறு வயதிலேயே உருவாக்கிவிடுங்கள். அந்த தொட்டிற் பழக்கம் பிறகு "சுடுகாடு"  மட்டும் நீடிக்கும்!
இப்படி ஒழுங்கான, முறையான சேமிப்புப் பழக்கம் - என்பது உங்களது நீண்ட காலத் திட்டத்திற்கு உதவிடும் முதல்படி என்பதை உணருங்கள் - மறக்காதீர்கள்!
முதலில் சிறு தொகையிலிருந்தே ஆரம்பியுங்கள்.
இந்த சேமிப்பை "தற்காலிகமாக" "வசதியாக" மறந்து விடுங்கள்! உங்கள் செலவு பட்ஜெட் அயிட்டங்களில் இதனைக் கணக்கில் கொண்டு வராதீர்கள்!
(நாளையும் தொடரலாம்)
-விடுதலை நாளேடு, 30.10.18
சேமிப்பீர் - சிறப்புறுவீர் (2)
நம்முடைய குடும்பத்திலும் சரி, நிறுவனங்கள், அமைப்புகள் எதுவானாலும் தாமே அவற்றிற்கென ஒரு 'பட்ஜெட்' - வரவு செலவு திட்டம் அமைத்துக் கொண்டே செயல்பட்டால் அது வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பெரிதும் உதவக்கூடும்.
'வரவு எட்டணா - செலவு பத்தணா' என்ற திரைப்படம் ஒன்றில் வந்த பாட்டு வரிகளைப் போலவே,
'கடைசியில் கையில் துந்தனா'தான்!
வரவைப் பெருக்குவது என்பதற்கான முக்கிய வழி அதிகமாகச் சம்பாதிப்பது என்பதன் மூலம் தான் என்றல்ல; செலவுகளைக் கட்டுப்படுத்திக் குறைப்பதும் கூட வருவாய்ப் பெருக்க வழிதானே!
வள்ளுவரே சிறந்த பொருளாதார வல்லுநர் போல் உயர்ந்து சொன்ன ஆழமான அறிவுரையே இதற்குத் தக்க சான்றாகும்.
ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை. (குறள் - 478)
வரவு எப்படி இருந்தாலும் செலவுகளைக் குறைத்தால் அதுவே ஒரு புது வகை வரவு - வருமானம் தானே? இல்லையா? 'பட்ஜெட்' போட்டுப் பார்த்தால் தான் - மனதால் எண்ணுவதைவிட ஒரு தாளையோ அல்லது சிறு 'நோட் புக்கையோ அல்லது டைரி எழுதும் பழக்கமுள்ளோராயின் அதில் ஒரு பக்கத்திலோ எழுதி - வரவுகள் ஒரு புறம், செலவுகள் மறுபுறம் - அதில் குறிப்பாக செலவுகளுக்கு எதெதெற்கு முன்னுரிமை தரவேண்டும், என்று செலவினத்தை (ஜீக்ஷீவீஷீக்ஷீவீவீமீ) முன்னுரிமைப்படுத்திப் பார்த்தால் தான் நமது நிதிநிலைமை பற்றி நமக்கே புரியும்.
பல குடும்பங்களில் வாழ்விணையான பெண் தான் சரியான 'நிதியமைச்சர்' ஆக இருப்பார்கள்.
'மின்னனுப் புரட்சி - தகவல் புரட்சி யுகம்' இது ஆன படியால், அவற்றின் உதவியை நாடினால் இது மிகவும் பயன் அளிக்கும் என்றே சம்பந்தப் பட்டவர்கள் உணர்ந்து கொண்டு செயல்பட்டால் காலம் விரையம் தடுக்கப்படவும் கூடும்!
அடுத்து, நமது அன்றாட செலவுகள் கூட நம்மை சிற்சில நேரங்களில் திண்டாட, திக்குமுக் காடும்படிச் செய்து விடக் கூடும். அன்றாட செலவினைக்கூட இப்படி எழுத்தில் வடித்து வார இறுதியில் பார்த்தால் 'ஓகோ இதெல்லாம் நாம் தவிர்த்திருக்கக்கூடிய செலவுதானே! இச்செலவைத் தவிர்த்து அதைச் சேமித்திருக்கலாமே!' என்றுகூட எண்ணி முடிவு எடுத்து நல்ல முறையில் ஒழுங்கு படுத்தி, சிக்கல் இல்லாத  - தலைநிமிர்ந்த - கடன் வாங்காத "சுயமரியாதை வாழ்வே என்ற சுக வாழ்வு" வாழலாமே!
'ஒரே ஒரு முறைதான் செலவழிக்கிறோம்; இது வழக்கமாக செலவுத் திட்டத்தில் இடம் பெறக் கூடிய செலவு அல்ல' என்ற போதிலும் அதுவும் கூட இடம் பெறல் அவசியம்.
எடுத்துக்காட்டாக, நண்பர்களை அழைத்துச் சென்று ஏதோ ஒரு நாள் ஓட்டல்களில் விருந்து கொடுக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதுவும் கூட அடுத்த மாதச் செலவு - வரவை ஒழுங்குபடுத்திட பெரும் அளவுக்கு உதவக்கூடும்!
சில செலவுகளைச் செய்யும்போது இந்த மாத ஒதுக்கீடு என்ற அளவுக்கு மேல் செலவு செய்துவிட்டோம்; இதை அடுத்த மாத பட்ஜெட்டில் செலவைத் தவிர்த்து 'மிச்சப்படுத்தி' வாழ்க்கையில் துன்பச் சுமை ஏற்படாமல் தவிர்த்துக் கொள்ளலாம்!
நடந்து செல்வதற்குப் பதில் 'டாக்சி' எடுத்தது; அடுத்த மாதம் சரிகட்டலாமே! பேருந்து பயணம் செய்தாலோ அல்லது உடல் நலம் - வலிமை கருதி நடந்து சென்றோ பணத்தை மிச்சப்படுத்தி 'சரி கட்டலாமே!'
சேமிப்பில் - எதிர்பாராத அவசர செலவுகள் என்ற நிலை வாழ்க்கையில் எல்லோருக்கும் ஏற்படும் சூழ்நிலை உருவாவது சகஜம்; அதற்கு நமது வீட்டு - குடும்ப வரவு - செலவுத் திட்டத்தில் கட்டாயம் ஒரு பகுதியை சேமிப்பது மிகப் பெரிய அளவில் நமக்குக் கைகொடுக்கும்!
திடீர் உடல் நலக்குறைவு; ஏற்பட்ட விபத்து காரணமாக எதிர்பாராத மருத்துவச் செலவு - மருத்துவக் காப்பீடு - இன்சூரன்சையும் கூடத் தாண்டி செலவழிக்கவேண்டியதும் வரக்கூடும். அதற்கென தனியே மாதம் ஒரு சிறு தொகை "எதிர்பாராமல் வரும் நெருக்கடிக்கான ஒதுக்கீடு" என்ற செலவினத்தையும் கூட (ஒரு தலைப்பில்) ஒதுக்கி வைத்தால் எப்போதும் நமக்குப் பெரிதும் கைகொடுக்கவும் செய்யும்.
எனவே திட்டமிடல் வாழ்க்கைக்கு உதவும். வெளிநாடு, வெளியூர் சுற்றுலாவுக்கு மேல் நாட்டவர்கள் 2, 3 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சேமித்தே, அதைச் செலவழிக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? - அதையும் பின் பார்க்கலாம்!
-விடுதலை நாளேடு, 31.10.18

வெள்ளி, 26 அக்டோபர், 2018

தந்தை பெரியாரும், வரவு-செலவு கணக்கும் (2)


மத்திய அரசின் வருமானவரித் துறையினர் - அவர்களுக்கு, கழகத்தை விட்டுவெளியேறிய தி.பொ. வேதாசலம் அவர்களும், குத்தூசி க. குருசாமி அவர்களும் எழுதியனுப்பிய கடிதம், பெரியாரிடம் உள்ள பணம் பற்றியும், அதற்கு உரிய கணக்கு வரி முதலியன போடவும் தூண்டி எழுதப்பட்டதை வைத்தே 1956-57 முதல் 1963-64; 1965-66, 1966-1967, 1967-68 இப்படி பல ஆண்டுகளுக்கான வருமான வரி செலுத்தவில்லை - வருமானத்தை மறைத்தார் என்று குற்றஞ் சுமத்தி பெரியார் அறக்கட்டளையான, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் என்பதற்கும், அதே தொகை ஈ.வெ. ராமசாமி நாய்க்கர் என்று தனிப்பட்ட நபர்  ஹோதாவிலும் என்று வரி, அபராத வட்டி இப்படி அய்யா காலத்தில் 15 லட்சம் ரூபாய்; அம்மா பொறுப் பேற்ற பிறகு 60 லட்சம் ரூபாய்;  எனது பொறுப்பில் வந்த வழக்கு I.T. Tribunal என்ற மேல் முறையீட்டு டிரிபியூனல் நடுவத்தில் 80 லட்சம்  ரூபாய் என்றும் வந்தது. இவ்வழக்கு விசாரணையில் நிறுவனம் சார்பில் வாதாடிய பிரபல வழக்குரைஞர் உத்தம்ரெட்டி (ஏற்கெனவே வருமான வரித்துறை பெரிய அதிகாரியாக இருந்து பிறகு வழக்குரைஞர் தொழிலை மேற்கொண் டவர்) "பெரியார் எந்தத் தொழிலையும் 1919க்குப் பின்  செய்யவே இல்லை; பொது வாழ்வில் தான் இருந்தார். அவருக்குத் தனிப்பட்ட முறையில் அளிக்கப்பட்ட அன் பளிப்புகள், நன்கொடைகளைக்கூட, அவர் சொத்துக்கள்  மூலம் வந்த வருமானம் உட்பட வங்கியில் தான் போட்டு நிறுவனத்திற்குத்தான் அளித்து வந்துள்ளார்!

அவர் வருமானத்தை மறைத்தார் என்பது சரியல்ல.

வழிச் செலவிற்குக் கொடுக்கப்பட்ட - ஒரு கூட்டத்திற்கு 50 ரூபாய் என்றால் அதைத் தோழர்கள் கொடுத்தபோதுகூட பெயருடன், தேதியுடன் வங்கிக் கணக்கில் போட்டு, டைரியில் குறித்து வைத்துள்ளார். இதோ அந்த சில டைரிகள்" என்று இரண்டு நடுவர்களுக்கும் காட்டினார்.

அய்யாவின் எழுத்துக் குறிப்புகளை சரியாக விளங்கிக் கொண்டு படித்துக் காட்ட, நடுவர்கள், நீதிபதிகள் என்னையே படித்துக் காட்டச் சொன்னார்கள். நான் படித்து முன் எழுத்து -சுருக்கியுள்ளதையும் அவர்களுக்கு விளக்கியபோது தந்தை பெரியாரின் பொறுப்பு மிகுந்த நிதி மேலாண்மையைக் கண்டு வியந்து, இதில் வருமானத்தை மறைத்தார் என்ற குற்றச்சாற்றுக்கு ஏது இடம் என்றே கேட்டார்கள். பிறகு தீர்ப்பு ஆணையும், எழுதி, அந்த வரி விதிப்பு முழுவதையும் தள்ளுபடி செய்து, அறக்கட்டளைத் தகுதியை வழங்கினார்கள்!

அய்யா பெரியார் அவர்களுக்கு லெட்ஜர், குறிப்பு, பேரேடு எல்லாம் அவரது பையில் உள்ள டைரியும், 'செக்  புத்தகங்களின் அடிக்கட்டையும்' (Counterfoil) தான். அதில் யாருக்கு இந்த காசோலை கொடுக்கப்பட்டது - என்பதற்கான குறிப்பை அவரது கையிலேயே எழுதி வைத்திருப்பார்கள். அந்த பழைய 'செக்' புத்தகங்களை, அடிக்கட்டைகளையும்கூட அந்த நீதிபதிகளான நடுவர்கள் பார்த்து வியந்தனர்.

சில நேரங்களில் அவருக்கு அவரது டைரிக் குறிப்பின் முன் எழுத்துள்ள நபர் யார் என்பது நினைவுக்கு வராவிட்டால் வலிந்து அதை நினைவூட்டிக் கொள்வார்; முடியாதபோது அன்னை மணியம்மை யாரையோ, தனிச் செயலாளர் புலவர் இமயவரம் பனையோ, எங்களைப் போன்றவர்களையோ கேட்பார். நாங்கள் "அய்யா, இன்னார் இந்த ஊருக்கு தேதி கேட்டு முன் பணமாக பாதி 25 ரூபாய் தந்தார். மற்ற 25 ரூபாய் தங்களைப் பார்க்க வந்த இந்த ஊர் கழகப் பொறுப்பாளர் இன்னார் கொடுத்தார்" என்றவுடன் திருப்தி அடைவார்!

சில்லறை நோட்டுகள் ரூபாய் 90, 95 சேர்ந்தவுடன் அதை 100 ரூபாய் நோட்டாக மாற்றிடவே விரும்புவார். சிக்கனம் சேமிப்புக்காக அவர் கடைப்பிடித்த வழி அது! பக்கத்தில் அம்மாவிடம் கேட்பார். "ரூ.5 இருந்தால் கொடு" என்று! 95+5 = ரூ.100 நோட்டு வாங்கி வா என்பார். மற்றவர் எவரும் வந்து புதிதாக பணம் கொடுத்தால் நினைவு தப்பிய - வாங்கிய 5 ரூபாய், 10 ரூபாய் கடனை அம்மாவிடம்கூட பைசல் செய்து விடுவார்!

100 ரூபாய் நோட்டை சேமிப்பாக்கி வங்கிக் கணக்கில் போடுவார்.

இப்படித்தான் நண்பர்களே, தந்தை பெரியாரின் சிக்கனம் தமிழ் நாட்டின் பொக்கிஷம் ஆகியது. இன்று குழந்தைகள் விடுதி,  ஏராளமான கல்வி நிலையங்கள், நூலகம், படிப்பகம், பகுத்தறிவுப் பிரச்சாரப் பணி, ஏடுகள் என்றெல்லாம் மக்களுக்கே திருப்பி (அவை மூலம்) தரப்படுகின்றன!

எளிமை, சிக்கனம், ஆடம்பரத்தை இயல்பாகவே ஏற்காத மனம் - அவருடைய வாழ்வியல்!

திருச்சியில் மாளிகையில் தங்கியிருந்து  சாப்பிடும் உணவுகூட மிகவும் எளிமை,  ஏராளம் பல காய்கறி வகைகள் சமைக்காது - ஒன்று இருந்தாலே போதும் என்ற நோக்கு!

இப்படிப்பட்ட எளிய, மக்கள் தலைவரை எங்கே காண முடியும்?

விளம்பரப்படுத்திக் கொள்ளாத எளிமை, விரும்பி வாழ்ந்த சிக்கனம், வெறுக்கப்பட்ட ஆடம்பரம் - இவைதாம் பெரியார்! நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களும்கூட! இல்லையா?

- விடுதலை நாளேடு, 26.10.18

வியாழன், 25 அக்டோபர், 2018

தந்தை பெரியாரும், வரவு-செலவு கணக்கும் (1)

'ஆற்றில் கொட்டினாலும் அளந்து கொட்டு' என்பது பழமொழி.


எதையும் அளவிட்டு, அளவறிந்து, திட்டமிட்டு வாழ்வில் செய்தால் நமது வாழ்க்கை பயனுள்ள தாகவும், பிறகு வருந்தத்தகாததாகவும் கூட அமையக்கூடும்!

செலவழிப்பதில்கூட திட்டமிட்டு, கணக்குப் பார்த்துச் செலவழிப்பது, செலவழித்ததை மறந்து விடாமல் செலவு கணக்கில் ஒரு சிறு குறிப்பில் எழுதி வைப்பதும் நம்மை மேலும் செம்மையுறச் செய்யும்!

நம்மில் பலரும் செலவழித்துப் பழக்கப்பட்ட வர்களே! திட்டமிட்டு செலவழித்தோ அல்லது முன்னுரிமை எதற்கு - எந்த அளவு இதற்கு நம்மிடம் உள்ள நிதியை ஒதுக்கிட முடியும் என்று ஆழ்ந்து யோசித்துச் செலவழிப்பதில்லை. அப்படிப்பட்ட வர்கள் வாழ்க்கை கடனாளி வாழ்க்கையாகவும், வாங்கிய கடனை முறையாகத் திருப்பிச் செலுத்த இயலாமல், சாக்குப் போக்கு கூறி ஓடி ஒளியும் தலைமறைவுக்காரராக ஆக்கி, தமது நாணயத்தை இழந்தவர்களாகிவிடும் மிகப் பெரிய சமூக அவலத் திற்கு ஆளாகி விடும் விரும்பத்தகாத நிலையும்கூட உள்ளது!

பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் படித்த ஷேக்ஸ்பியரின் ஒரு வரி அறிவுரை வசனத்தை, அவர் படைத்த ஒரு பாத்திரம் கூறுவதாக நமக்குக் கற்பித்தார் நமது பேராசிரியர்!

'Neither a lender nor a borrower be' 

கடனும் கொடுக்காதே, கடனும் வாங்காதே'

- இந்த அறிவுரையை பெரிதும் - நான் அறிந்த வகையில் - வாழ்வில் கடைப்பிடித்து ஒழுகிய தலைவர் தந்தை பெரியார் அவர்களாவார்கள்!

'மண்டிக்கடை ஈ.வெ.ராமசாமி நாயக்கராக' இருந்த காலத்திலேயே அவர் இதனைக் கற்றவர் என்றாலும் தொழில் வாழ்க்கைக்குப் பொருந்தாது; தனி வாழ்க்கைக்கு மட்டும்தான் என்பதையும் நன்கு புரிந்தவர்!

அய்யா தந்தை பெரியார் அவர்களிடம் யாராவது கடன் கேட்டால் - கூடுமானவரை மறுத்து விடுவார் - முகதாட்சண்யம் பார்க்காமலேயே கூட. இப்படி தன்னிடம் வந்து கேட்பவர்களிடம் முகத்திற்கு நேரே சொல்வார்.

"என்னிடம் கடனாக நீங்கள் பெற்று, உறுதி யளித்தபடி திருப்பிக் கொடுக்க இயலாது போகும் போது உங்களுக்கும் தர்மசங்கடம்; எனக்கும் மன வேதனை - இரண்டும் வேண்டாம்! இதோ ஒரு சிறு தொகை - இதை நான் தங்களுக்கு நன்கொடை யாகவே தந்துவிடுகிறேன்; பெற்றுக் கொள்ளுங்கள். இதை எனக்குத் திருப்பித் தர வேண்டாம்" என்றே கூறுவார்கள்!

தனது நண்பர்களின் வேண்டுகோள் காரணமாக, சில மில்களில் முதலீடு செய்து அந்த வட்டித் தொகையைப் பெருக்கி, இயக்கப் பணத்தில் சேர்த்துப் பெருக்கியே மகிழ்ந்திருக்கிறார்!

அந்த மில் நிர்வாகத்திடமிருந்து, குறிப்பிட்ட (3 மாத வட்டித்தொகை) தேதியில் டி.டி.யாக வரவில்லை என்றால் ஓரிரு நாள் பொறுப்பார்; உடனே கடிதம் எழுதி உடன் தொகையை அனுப்ப நினைவூட்டுவார்; அதன் மேலும் தாமதமானால், சிக்கனத்திற்கே பேர்போன தந்தை பெரியார் அந்த 'பாக்கியாளருக்கு' தந்தியே அனுப்புவார். (இதில் தந்தி செலவு பார்க்க மாட்டார்) அவர் வியாபாரப் பாரம்பரியத்தில் வந்ததால், வந்த வட்டித் தொகையை உடனே வங்கியில் போட்டு வைத்து, அதன்மீது வட்டி இழப்பு ஏற்படாமல் பெருக்க வேண்டுமென்றே விரும்புவார்!

பலருக்கு உதவும் போது கூட, சிறுதொகை ரூ.50, ரூ.100 போன்றவைகளுக்குக்கூட, 'செக்' காசோலை யாகவே கொடுப்பார். செலவு கணக்குப் பார்ப்பதற்கு அது வசதியாக இருக்கும். என்றாலும் அதையும் மறக்காமல் தனது டைரியில் குறித்து வைப்பார்.

வழிச்செலவுக்குப் பணத்தை (50 ரூபாய்தான் அப்போது) வாங்கி - சுருக்கெழுத்தில் கொடுத்தவர் முன் எழுத்தைப் போட்டு - வீ(ரமணி) க(டலூர்) கூட்டத்திற்கு அழைத்து அய்யாவிடம் 25 ரூபா தந்து 25 ரூபாய் பாக்கி என்பதையும் மற்றொரு பக்கத்தில் (கடைசிப் பக்கத்தில்) குறித்து வைத்து, நினைவாக அவ்வூரில் கூட்டம் முடித்தோ, முன்போ கேட்பார் - இப்படிச் சிக்கனமாகச் சேர்த்துத்தான் மக்களுக்கே விட்டுச் சென்றார்.

Time Management என்பது எவ்வளவு முக் கியமோ அவ்வளவு முக்கியம் பணத்தை சேமிப் பதும், செலவழிப்பதும் Money Management ஆகும்!

ஒரே ஒரு வேறுபாடு இரண்டிற்கும் எது என்றால் பணத்தைச் செலவழித்தால் மீண்டும் சம்பாதிக்க முடியும்; நேரத்தைச் செலவழித்து விட்டால் செல வழிக்கப்பட்ட நேரத்தை - காலத்தை - மீண்டும் வாழ்நாளில் திரும்பப் பெறவே முடியாது!

தந்தை பெரியாரின் பொது வாழ்க்கையிலிருந்து கற்க வேண்டிய பாடங்கள் அநேகம்; அதைவிட அய்யாவின் தனி வாழ்விலிருந்தும் கற்க வேண்டிய பாடங்கள் ஏராளம் உண்டு. அவர்களைப் பொறுத்த வரை தனிவாழ்வு - பொது வாழ்வு என்ற இரண்டும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதவை; இரண்டறக் கலந்தவையாகும்!

என்றாலும் இப்படி எதையும் கணக்கிட்டுச் செலவழிப்பது,  வரவு-செலவுகளைப் பதிய வைத்து அசைபோட்டுப் பார்ப்பது ஒவ்வொருவரின் வாழ்க் கையிலும் உயர்வைத் தரும்!

அய்யா தந்தை பெரியாரின் 'டைரிக் குறிப்பு' எப்படி வருமான வரித்துறை கீழமை அமைப்பு அவர்மீது சாட்டிய ஆதாரமற்ற குற்றம் - "வரு மானத்தை மறைத்தார்" என்பது! (அவரால் ஆளாக் கப்பட்டவர்கள் ஆதாரமற்ற புகார்களை எழுதிப் போட்டதன் விளைவு) அழிக்கப்பட வொன்னாத சரியான மருந்தாகி, வழக்கை வென்றது எப்படி என்பதை நாளை பார்ப்போம்!

- நாளையும் வரும்
- விடுதலை நாளேடு, 25.10.18

செவ்வாய், 23 அக்டோபர், 2018

'கவிக்கோவின் காக்கை சோறு' எழுப்பும் கேள்விகள் (3)

கவிக்கோ அப்துல்ரகுமான் எழுதுகிறார்:




"நான் கல்லூரி ஆசிரியனாகப் பணியாற்றிய போது ஓர் ஆண்டு இளங்கலை முதலாண்டு மாணவர் களுக்கு வைக்கப்பட்டிருந்த செய்யுள் பாடப் புத்தகத்தில் தொடர்ந்து இடம் பெற்ற முதல் மூன்று பாடங்கள் 'வாழ்வாவது மாயம், இது மண்ணாவது திண்ணம்' என்ற கருத்தைப் போதிக்கிற சாமியார்ப் பாடல்கள்.

வாழ்க்கையை நேசிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டிய வயதில் வாழ்க்கையை வெறுக்கக் கற்றுக் கொடுப்பதா?

பூக்கின்ற பருவத்தில் மலர்ச் செடிகளுக்கு வெந்நீர் ஊற்றும் வேலையல்லவா இது?

உயர்ந்த சிகரங்களைத் தொட வேண்டும் என்ற ஆசையில் சிறகுகளை விரிக்கும் பறவைகளை உற்சா கப்படுத்துவது கல்வியா? இல்லை, ஊனப்படுத்துவது கல்வியா?

'பித்தன்' என்ற என் கவிதைத் தொகுப்பில் நான் எழுதியிருந்தேன்:

பித்தன் வெயிலுக்காகப் பள்ளிக் கூடத்தில் ஒதுங் கினான். குழந்தைகளின் கையிலிருந்த புத்தகங்களைப் பார்த்து அவன் சொன்னான்:

புத்தகங்களே! சமர்த்தாயிருங்கள். குழந்தைகளைக் கிழித்து விடாதீர்கள்.

ஆனால் நடப்பதென்ன?

குழந்தைகளைப் புத்தகங்கள் கிழித்துக் கொண் டிருக்கின்றன அல்லவா?

விஞ்ஞான வெளிச்சத்தைப் போதிக்க வேண்டிய புத்தகங்களில் அஞ்ஞான இருட்டுகளைப் போதிக்கும் பாடங்கள் உண்டா? இல்லையா?

மனித நேயத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டிய புத்தகங்களில் பேத உணர்வுகளை உண்டாக்கும் நச்சு விதைகள் உண்டா? இல்லையா?

சில கதைகள் நெடுங்காலமாகச் சொல்லப்பட்டு வருகின்றன. அதனாலேயே அந்தக் கதை களுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்பட்டு விடுகின்றன. இந்த மதிப்பு அக்கதைகளை விமர்சனப் பார் வையோடு பார்க்க விடாமல் தடுத்து விடுகிறது.

புகழ் பெற்ற கதைகள் என்றா லும் அவற்றால் தவறான விளை வுகள் ஏற்படும் என்றால் சமூக நலன் கருதி ஒன்று அவற்றை நிரா கரிக்க வேண்டும் அல்லது மாற்ற வேண்டும்.

சீன நாட்டில் தவறான கருத்துக் களை உண்டாக்கும் பழங் கதை களை மாற்றும் முயற்சி நடக்கிறது.

அப்பத்திற்காகச் சண்டையிட்டுக் கொண்ட பூனைகளிடம் மத்தியஸ்தம் செய்வதாக வந்த குரங்கு, பூனைகளை ஏமாற்றி அப்பம் முழுவதையும் தானே உண்ட கதையை அவர்கள் மாற்றியிருக்கிறார்கள்.

மத்தியஸ்தம் செய்வதாக வந்த குரங்கு தங்களை ஏமாற்றி அப்பத்தைத் தானே உண்டு கொண்டிருப்பதைப் பார்த்த பூனைகள் குரங்கின் வஞ்சகத்தை அறிந்து கொண்டன. உடனே இரண்டும் கோபத்தோடு குரங்கின் மீது பாய்ந்து பிறாண்ட ஆரம்பித்தன. குரங்கு பயந்து போய் அப்பத்தைப் போட்டு விட்டு ஓடி விட்டது. நமக்குள் சண்டையிட்டுக் கொண்டதால்தானே அந்நியன் இடையில் புகுந்து நம் அப்பத்தை உண்ண நினைத்தது? இனிமேல் நாம் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது என்று உறுதி எடுத்துக் கொண்டு இரண்டு பூனைகளும் அப்பத்தைத் தாமே பகிர்ந்து உண்டன என்று கதையை மாற்றி விட்டார்கள்.

காக்கை நரிக் கதையையும் இப்படி மாற்றலாம் என்று நினைக்கிறேன்.

நரி வடையை எடுத்துக் கொண்டு ஓடுவதோடு கதை முடியக் கூடாது. மேலும் கொஞ்சம் சேர்க்க வேண்டும்.

அப்போது அந்தப் பக்கம் பாட்டியின் பேரன் வந்தான். காக்கை பாட்டியின் வடையைத் திருடிக் கொண்டு பறந்ததையும், அதை ஏமாற்றி நரி வடையை அபகரித்துக் கொண்டு ஓடுவதையும் பார்த்தான்.

அவனுக்குக் கோபம் வந்தது. அவன் கையில் உண்டிவில் இருந்தது. அவன் ஒரு கல்லை எடுத்து உண்டிவில்லில் வைத்து நரியின் முகத்தைப் பார்த்து அடித்தான். நரி வலி பொறுக்க முடியாமல் அலறியபடி வடையைப் போட்டு விட்டு ஓடியது. அவன் காக்கை யையும் கல்லால் அடித்தான். அதுவும் கத்திக்கொண்டு பறந்து போய்விட்டது. அதற்குப் பிறகு திருட்டுக் காக்கைகளும், வஞ்சக நரிகளும் அந்தப் பக்கம் வருவதில்லை, என்பதாகக் கதை இருக்க வேண்டும்.

அப்போதுதான் பிள்ளைகளுக்கு அக்கிரமத்தை எதிர்க்கும் துணிவு வரும். 'காக்கை'களும் 'நரி'களும் பயப்படும். 'வடை 'கள் பத்திரமாக இருக்கும்.

பாடப் புத்தகங்கள் பாலூட்டும் தாய்கள். ஆனால் சில நேரங்களில் பூதகிகளும் பாலூட்ட வரலாம்.

கண்ணன் சிறு பிள்ளையாக இருந்த போது அவனைக் கொல்வதற்காக மார்பகங்களில் நச்சுப் பாலோடு வந்தாளே பூதகி, அதைப் போல.

கண்ணன் "தெய்வத்தின் அவதாரம்". எனவே பூதகியைப் பற்றி அறிந்து கொண்டான். பாலோடு சேர்த்துப் பூதகியின் உயிரையும் உறிஞ்சிக் கொண்டான் என்பது கதை.

நம்முடைய பிள்ளைகள் "தெய்வ அவதாரங்கள்" அல்ல. எனவே நச்சுப் பாலோடு வரும் "பூதகிகளிட மிருந்து" அவர்களை நாம்தான் காப்பாற்ற வேண்டும்."

- நெற்றியடி - பொறி தட்டும் கேள்விகள், புத்தாக்கச் சிந்தனைகள். பாட திட்டக் குழுவினர்களே, புத்தகங் களிடமிருந்து - குழந்தைகள் கிழிபடாமல் இருக்க அவர்களைக் காப்பாற்றுங்கள்.

(முடிந்தது)

-  விடுதலை நாளேடு, 23.10.18

'கவிக்கோவின் காக்கை சோறு' எழுப்பும் கேள்விகள் (2)

தாய்ப்பறவையின் கரிசனம்!




'கவிக்கோ' அப்துல் ரகுமான் அவர்கள் கஸபியான்கா பாடம் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படுத் தும் தாக்கம் எப்படிப்பட்டது என்பதை சுட்டிக் காட்டியதை (19.10.2018) 'வாழ்வியல் சிந்தனை'க் கட்டுரையில் 'காக்கைச் சோறு' என்ற அவரது கட்டுரைகள் தொகுப் பிலிருந்து எடுத்துக் காட்டியிருந் தோம். அதே கட்டுரையின் மற் றொரு பகுதி! (அந்த கட்டுரையின் தலைப்பு 'பூதகியின் பால்' என்ப தாகும்).

"காக்கை நரிக் கதை"யை எடுத்துக் கொள்வோம்.

"பாட்டி வடை சுட்டுக் கொண்டி ருந்தாள். அவள் அசந்திருந்த நேரம் பார்த்தது ஒரு காக்கை ஒரு வடையைத் திருடிக் கொண்டு பறந்தது. அது மரக் கிளையில் உட்கார்ந்து வடையைத் தின்னப் போகும்போது நரி ஒன்று அதைப் பார்த்தது. உடனே "காக்கையே! நீ மிக இனிமையாகப் பாடுவாயாமே? எங்கே ஒரு பாட்டுப் பாடேன்" என்று கேட்டது. முகஸ்துதியில் மயங்கிய காக்கை பாடுவதற்கு வாயைத் திறந்தது. வடை கீழே விழுந்தது. நரி அதை எடுத்துக் கொண்டு ஓடி விட்டது" என்று கதை முடிகிறது.

"நீ ஒருவனை ஏமாற்றினால் இன்னொருவன் உன்னை ஏமாற்றுவான்" என்ற நீதி இந்தக் கதையில் இருப்பது உண்மைதான். ஆனால் ஏமாற்றிய நரிக்கு வடை கிடைத்து விட்டதே! அதனிடமிருந்து வடையை யாரும் பறிக்கவில்லையே?

'வடை வேண்டுமென்றால் கஷ்டப்பட்டுச் சுட வேண்டிய தில்லை. வடை சுடுகிறவர் அசந் திருக்கும் நேரம் பார்த்துத் திருடி னால் வடை சுலபமாகக் கிடைத்து விடும். அதைவிட ஏமாறும் சோண கிரியாகப் பார்த்து முகஸ்துதி செய்து மயக்கினால் வடை மிகச் சுலபமாகக் கிடைத்து விடும்' என்று ஒருவன் நினைப்பதற்கும் இந்தக் கதையில் இடமிருக்கிறதா? இல்லையா?

அப்படி நினைத்ததால் தானே 'வடை' வேண்டு மென்றால் கஷ்டப்பட்டுச் சுட வேண்டியதில்லை என்ற எண்ணம் பரவி வருகிறது.

அப்படி நினைத்ததால் தானே நாட்டில் 'காக்கை' களும், 'நரி'களும் பெருகி வருகின்றன.

கள்ளமில்லாத பிள்ளைகளின் உள்ளங்களில் இத்தகைய கதைகளின் மூலம் நச்சு விதைகளை நாம் தூவுகிறோமா? இல்லையா?

திருடுதல், ஏமாற்றுதல் என்ற 'பெரிய மனிதக் கலைகளை' அவற்றை அறியாத தூய உள்ளங்களுக்கு இதன் மூலம் நாம் கற்றுத் தருகிறோமா? இல்லையா? பாடப் புத்தகங்களைத் தயாரிப்போர், பிள்ளை களைக் கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தயாரிக்கிறார்கள் என்று நான் சொல்லவில்லை.

இன்றைய பிள்ளைகளே இந்நாட்டின் நாளைய குடிமக்கள். வருங்காலத்தில் இந்த நாட்டின் விதியை எழுதப் போகிறவர்கள் அவர்களே. கல்விப் பருவத்தில் அவர்களுக்கு ஊட்டப்படும் கருத்துக்களால் தான் அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.

அவர்களுக்கு ஊட்டப்படும் கருத்துகள் பற்றி நாம் எச்சரிக்கையாகச் செயல்படுகிறோமா? பொறுப்புணர் வோடு தீவிரமாகச் சிந்திக்கிறோமா? என்பதுதான் கேள்வி.

பறவைகள் தங்கள் குஞ்சுகளுக்கு இரையூட்டுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். தாய்ப் பறவை குஞ்சுகளுக்கு ஊட்ட வேண்டிய இரையை முதலில் தானே தின்னும். பிறகு அதைக் கக்கிக் குஞ்சுகளுக்கு ஊட்டும்.

ஏன் தெரியுமா? இரையில் ஏதேனும் நஞ்சு இருக்கலாம். அதனால் தான் செத்தாலும் பரவாயில்லை. தன் குஞ்சுகள் செத்துவிடக் கூடாது என்பதற்காகவே அவை அப்படிச் செய்கின்றன.

அய்ந்தறிவுப் பிராணிகளுக்கு இருக்கும் உணர்வு கூட ஆறறிவு படைத்த நமக்கு இல்லையென்றால் என்ன அர்த்தம்?"

- சரியான புதிய சிந்தனை இது! புத்துலகம் - கல்வி உலகம் படைக்க இத்தகைய ஆக்கபூர்வ புதுமைகள் பாட திட்டங்களில் இடம் பெற வேண்டாமா?

(நாளையும் ரகுமான் வருவார்)

- விடுதலை நாளேடு, 22.10.18