பக்கங்கள்

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018

3,4 மணி நேரம் தொடர்ந்து அமர்ந்து பணியாற்றுவோர் கவனத்துக்கு



நீண்ட நேரம்  - 3 மணி, 4 மணி, (2 மணி நேரத்திற்கு மேல்) இருக்கையில் அமர்ந்தே பணிபுரிவோர் - அது எத்தகைய பணியாக இருந்தாலும், கணினியின் முன் அமர்ந்து வேலை செய்தல் மற்றும் எழுத்தர் பணிகள் அல்லது அமர்ந்து தொலைக்காட்சி என்ற தொல்லைக் காட்சிகளை பார்த்து, ஒரு 'சீரியலை' அடுத்து அடுத்த சீரியல் அல்லது பார்த்துப் புளித்துப் போன பழைய திரைப்படங்களானாலும் 3 மணி நேரம் எழுந்திருக் காமலேயே  லயித்து விடுவது ஆகிய இத்தருணங் களில் நமது மூளைக்குச் செல்லுகின்ற இரத்த ஓட்டம் என்பது மிகவும் மெதுவாகச் சென்று, ரத்த ஓட்டம் அதற்கு குறையும் - நிலையும், வாய்ப்பும் ஏற்படுகிறது.

இதன் விளைவு மூளையின் பலமும் நலமும் நீண்ட கால கண்ணோட்டத்தில் பாதிக்கப்படக் கூடிய வாய்ப் புகள் மிகவும் அதிகமாகிறது என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

நமது மூளை என்பதுதான் நமது உடல் இயக்கத்தின் 'கட்டுப்பாட்டு அறை' அலுவலகமாகும். அதன் ஆணைப்படி தான் உடலின் அத்தனை உறுப்புகளும் இயங்குகின்றன என்பது  அனைவரும் அறிந்த ஒன்று.

அந்த மூளைக்குத் தேவையான ரத்த ஓட்டம், தங்கு தடையின்றிச் சென்று, எவ்வித நிறுத்தமும் இல்லாமல் அது நடந்தால்தான் நமது உடல் நலம் சீராக இருக்கும்; பக்கவாதம், இதயத் தாக்குதல் (Heart Attack) போன்றவைகள் ஏற்படாது இருக்கும். ரத்த ஓட்டம் என்பது எப்போதும் சதா ஓடிக் கொண்டேயிருக்கும் (Shuttling)  போது, நமது நினைவாற்றல், மூளையில் நிகழ்வுகள் பதிவுகள் போன்றவைகளை உடலின் பல வகையான அறிகுறிகள், ஆணைகள், செயலாக்கங்கள் நடைபெற்று வருகின்றன.

அறிவியல் வளராத காலத்தில் மனிதர்கள் மற்றும் அய்ந்தறிவு பிராணிகளுக்கும்கூட இப்படி மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தில் ஏற்றம், இறக்கம் (Fluctuations)   ஏற்படுவதால் பல மாற்றங்களும் உடல் உறுப்பு சீற்றங் களும் கூட ஏற்பட்டு வந்தன.

மனிதர்களுக்கு இது நீண்ட காலம் (இந்த இரத்த ஓட்டக் குறைவு) தொடர்ந்தால், அது மூளை நரம்பு சம்பந்தப்பட்ட குறைபாட்டு நோய்களுக்கு (Nero degenertive diseases) துவக்க மறதி நோயான (Dementia) வரை கொண்டு போய் விட்டுவதில் முடியக் கூடும்.

தொடர்ந்து பல மணி நேரம் உட்கார்ந்து வேலை செய்வதன் மூலம், மூளைக்கு மட்டுமல்ல, நமது உடலின் பல உறுப்புக்களுக்கும் போய்ச் சேர வேண்டிய இரத்த ஓட்டக் குறைவு வேறு பல தொந்தரவுகளை உருவாக்கி பல நோய்களுக்கு காரணமாக அமையவிடக் கூடும். கடந்த ஜூன் மாதம் (2018) வெளிவந்த (Journal of Applied Physiology) என்ற ஆய்வு ஏட்டில்  லிவர்பூலில் (இங்கிலாந்து) உள்ள ஜான்மூர்ஸ் பல்கலைக் கழகத்தில் ஓர் ஆய்வு நடைபெற்றது.

நல்ல உடல் நலத்துடன் உள்ள 18 வயதுக்கு மேற் பட்ட ஆண்கள் - பெண்கள் ஆகிய அலுவலகப் பணியாளர்கள் 15 பேரை வைத்து ஆராய்ச்சி செய்து அறிக்கை தயாரித்தனர்.

இவர்களை பல்கலைக்  கழகத்தின் பரிசோதனைக் கூடத்திற்கு அழைத்துச் சென்று, தலையில் இதற்கென உள்ள கருவிகளைப் பொருத்தி - ரத்த ஓட்டம் எப்படி உள்ளது - ரத்தக் குழாய்கள் எப்படி வேலை செய்கின்றன என்று ஆராய்ந்துள்ளனர்!

முகமூடிகளை அணிவித்து, மூச்சு விடுவதில்  வெளியாகும் கரியமில வாயு (Carbon Dioxide) அளவு எவ்வளவு, இந்த வாயுக்கள் எப்படி உடலினை மாற்று கின்றன? என்றெல்லாம் கண்டறிந்தனர்.

மூச்சுவிடும் முறைகள் மூலம் இந்த கரியமில வாயுவையும் தக்க முறையில் மாற்றி ஒழுங்குபடுத்தலாம் என்கிற விவரத்தை கண்டறிந்தனர்!

அவர்களது மேஜைகளுக்கு அருகே உள்ள (Treadmill) களில் 30 நிமிடம் அவர்களை ஓட விட்டு (ஒரு மணிக்கு 2 மைல் வேகத்தில் ஓட விட்டு)  ஏற்படும் மாறுதல்களைக் கண்டு ஒருங்கிணைத்து  முடிவுகளை அறிவித்தனர்.

ஒரு அரை மணி நேரத்திற்கு ஒரு முறையாகவே, இருக்கையிலிருந்து எழுந்து, தண்ணீர் குடித்தல் (நீண்ட நேரம் அமர்ந்து பணியாற்றுவோர்) கழிப்பறைக்குச் சென்று திரும்புதல், கூடங்களிலேயே சற்று கால் ஆற நடந்து திரும்புதல் போன்றவற்றை செய்தால் அது நல வாழ்வுக்கு ; மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை சீராக்கி நம் வாழ்வு நல்வாழ்வாக வாழ்ந்திட உதவி செய்யும்.

நமது அலுவலகங்களில் இடையில் எழுந்து சென்று மீண்டும் இருக்கையில் அமர்ந்து பணி செய்ய அனுமதி அளிப்பது நல்லது!

3, 4 மணி நேரம் தொடர்ந்து படித்தல், எழுதுதல் பணி செய்யும்போது நான் எழுந்து கழிப்பறை அல்லது வீட்டு முற்றத்தில் சிறு நடை நடந்து மீண்டும் அமர்ந்து பணி தொடருவது உண்டு - இது தெரியாமலேயே -

இதை எளிதில் எல்லோரும் செய்யாமல் - ஒரே இடத்தில்  அமரும் போது ரத்தம் ஓட்டம் குறைந்து மரத்துப் போவது நமக்கேகூட பல நேரங்களில் ஏற்பட்ட துண்டே - இல்லையா? எனவே, இதைக் கடைப் பிடியுங்கள்.

- விடுதலை நாளேடு, 21.8.18

திங்கள், 20 ஆகஸ்ட், 2018

"உங்கள் நாடித் துடிப்பு - இதயத் துடிப்பு அறிவீர்" (3)

15.8.2018 அன்று 'பெரியார் மெடிக்கல் மிஷன்' நடத்திய நல வாழ்வு சிறப்புக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய மூத்த மருத்துவப் பேராசிரியரும், சிறந்த கருத்தாளருமான டாக்டர் எம்.எஸ். இராமச்சந்திரன் அவர்கள் தனது சுருக்கமான தலைமை உரையில் பல்வேறு அரிய தகவல்களை கேட்டோருக்குப் பாடம் நடத்துவது போலக் கூறினார்.


"தமிழ்நாடு - 'மருத்துவத்தின் மெக்கா' என்று அழைக்கப்படுவதுண்டு.


அரசு பொது மருத்துவமனையில் (தனியார் அல்லாதவை) ஒவ்வொரு நாளும் வெளிப்புற சிகிச்சை நோயாளிகள் (o.p.) 12000 பேர் ஆவார்கள். 2400 பேர் உள் நோயாளிகள் சிகிச்சை (எந்த செலவுமில்லாமல், அல்லது மிகக் குறைந்த செலவில்) பெற்று வருகின்றனர். இன்ஷுரன்ஸ் என்ற காப்பீட்டுத் திட்டம் காரணமாகவே பல தனியார் மருத்துவமனைகள் கொழுத்து வளருகின்றன.


நிஞிறி  என்றெல்லாம் பொருளாதார வளர்ச்சி பற்றி பல நாடுகளில் அரசுகள் பெருமையாகக் குறிப்பிடுகின்றனவே -  அதைவிட முக்கியம் குடிமக்களின் மகிழ்ச்சி Happiness index அளவுகோல்தான் மிகவும் முக்கியமானது.


சுற்றுச்சூழல் தூய்மை, மாசுக்கட்டுப்பாடு மற்றும் அமைதி இவைகளுக்கெல்லாம் இந்தியாவிற்கு நெருக்கமாக உள்ள பூட்டான் நாடு எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது. ஒரு அரசரின் கீழ் நடைபெறும் அந்த ஆட்சியில் ஊழலோ, முறைகேடுகளோ நடைபெறவில்லை. நாம் காணும் பல ஜனநாயக நாடுகள்  எப்படி இந்த குற்றச் சாட்டுகளின் உறைவிடமாக உள்ளன என்பது நாம் அனைவரும் அறிந்ததே" என்று புதுமையான தகவலைக் கூறினார்.


தந்தை பெரியார் அடிக்கடி மேடைகளில் கூறுவார், அரசர்கள் ஆண்ட காலம், இந்த ஜனநாயக  வாக்கு வங்கியால் ஆளப்படுவதைவிட உயர்ந்த சிறந்த காலம்; எப்போதோ எங்கோதான் அந்த அரசன் கொடுமைக்காரனாக இருந்திருப்பான் மற்றபடி தவறு நடந்தாலும் ஒரு குறிப்பிட்ட நபர், குறிப்பிட்ட இடத்தோடு முடிந்து விடும்; இப்போது ஜனநாயகம் என்ற பெயரில் காலித்தனத்தின் நாயகம் அல்லவா பரவலாக எங்கும் காணப் படுகிறது என்று  மேடைகளில் கூறியதை நினைவு படுத்துவது போல இருந்தது நமக்கு!


உடல் உறுப்புகளை கொடையாக வழங்கும் பழக்கம் பலருக்கும் ஏற்படுவது மிக நல்லது.


விழிக்கொடை தருவதன்மூலம் அந்த கண் வேறொருவருக்கு பொருத்தப்பட்டு, பார்வை இழந்தவர் பார்வை பெற்று மகிழும்போது, இறந்தவர் மீண்டும் வாழ்கிறார் என்பதுதானே பொருள் என்று, பலத்த கை தட்டலுக்கு இடையே கூறினார்.


மேலும், ஒருவருக்குக் கொடையாக அளிக்கப்படும் ஒரு உடல் உறுப்பினால்! (சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்ற உறுப்புகள்); உடற் கொடையால் குறைந்தபட்சம் 7 பேர் மீள் பயன் அடைகிறார்கள். நீங்கள் பகுத்தறிவாளர்கள், பெரிதும் இந்த முயற்சிகளில் ஈடுபடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.


அரசு பொது மருத்துவமனையில் பிரபல மானவர்கள், முக்கிய தலைவர்கள் போன்றவர்கள் சென்று சிகிச்சை எடுத்தால், வெகு மக்களுக்கு அங்கு அளிக்கப்படும் சிகிச்சையின்மீது நம்பிக்கை ஏற்படும்.


(இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர் தா. பாண்டியன் போன்றவர்கள் தான் அரசு பொது  மருத்துவ னையில் சேர்ந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளும் பிரபலத் தலைவர் ஆவர்!) ஏராளமான நோயாளிகள் வருவதால், தூய்மைப் பராமரிப்பு கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கும். என்றாலும் அங்கு செல்ல வேண்டும். சிகிச்சை அளிப்பதில் தரமானதாகவே உள்ளது  என்று அறிவுரை கூறினார்.


ஜஸ்டீஸ் A.K ராஜன் அவர்கள், சுருக்கமாக தமது உரையில், இதய வலி, நெஞ்சில் ஒரு மாதிரியான கனத்த உணர்வு ஏற்படுகையில் அது ஏதோ வாயுத் தொல்லை என்று அலட்சியமாக இருந்து வெறும்2'ஜெலுசில்' சாப்பிட்டால் போதுமென்று சிலரும், வாயுத் தொல்லையாகவே இருப்பதை, இதய மாரடைப்பு என்று பயப்படும் பலரும் உள்ள நிலையில் அவ்வப்போது உடற்பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்று நல்ல அறிவுரை கூறினார்.


சிறு நீரகவியல் துறையில் தலை சிறந்த பிரபல மருத்துவர் டாக்டர் ஏ. இராஜசேகர் அவர்கள் வெகு சுருக்கமாகப் பேசி, முன்பு தொடர்ந்து பிரபல மருத்துவர்களைக் கொண்டு அவ்வப்போது பெரியார் திடலில் நலவாழ்வுச் சொற்பொழிவுகளை நாங்கள் ஏற்பாடு செய்து பலருக்கும் பயன்படுமாறு செய்த முயற்சியின் தொடர்ச்சியே இது என்பதை எடுத்துக்காட்டி, இவர் போன்ற (டாக்டர் கார்த்திகேசன்) - மருத்துவ நிபுணர்களின் விளக்கம் பலருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, வரும்முன்னர் காப்பதற்கும் பயன்படுவதாகும் என்று விளக்கினார்.


அக்கூட்டம் நல்லதோர் அறிவு விருந்தாகும் என்று ஊக்கப்படுத்தினார்.


- விடுதலை நாளேடு, 18.8.18

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

"உங்கள் நாடித் துடிப்பு - இதயத் துடிப்பு அறிவீர்" (2)

"உங்கள் நாடித் துடிப்பு - இதயத் துடிப்பு அறிவீர்" (2) முக்கிய தலைப்பு: டாக்டர் ஏ.எம். கார்த்திகேசன் அவர்கள் பேசிய தலைப்பு. "உங்கள் நாடித்துடிப்பை அறிவீர்



இதயத் துடிப்பில் மாறுபாடுகள்" என்பதாகும்.

மிக அருமையான உரை; சிக்கலான பொருள் - மருத்துவர்கள் சிகிச்சையில் நிபுணர்களாக இருப்ப வர்கள்கூட, மற்றவர்களுக்கு விளங்கும் வகையில் உரைகள் மூலம் விளக்குவது  அவ்வளவு எளிதானதல்ல; அதில் டாக்டர் அவர்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றார் இந்த அரங்கத்தில் அவர் விளக்கிய முறை - உரை மூலம்!

வந்திருந்தோர் கேட்போர் நன்றாக உள்வாங்கி, புரிந்துகொள்ளும் வகையில் அமைந்திருந்தது; அவர் படங்களை போட்டு, ஓவியம் வரைந்து விளக்கிய சிறந்த முறை அருமை.

'டாக்டர்' என்றால் teacher (கற்றுத் தருபவர்) என்று பொருள் என்று டாக்டர் எம்.எஸ். இராமச்சந்திரன் அவர்கள் தலைமை உரையில் குறிப்பிட்டது. இவரது உரை மூலம் மிகவும் துல்லியமாக விளங்கியது!

உரையின் முக்கிய சுருக்கிய பகுதிகள் இதோ:

"இந்தியா வெகு விரைவில் உலகின் சர்க்கரை நோயின் தலைமை இடமாகி விடக் கூடிய அபாயம் இருக்கிறது. எனவே இதயத் துடிப்பு - நாடித் துடிப்பு என்றால் சர்க்கரை நோய் - இரத்த அழுத்தம் (B.P) போன்றவைகளில் அலட்சியம் காட்டுவதே இந்த இதயத் நோய் துடிப்புகளில் மாறுபாடுகள் ஏற்படுவதற்கு மூல காரணம் ஆகும்.

இதயத் துடிப்பு என்றால் எல்லோரது மனதில் டாக்டர்களில் பதிய வைத்திருக்கும் ஒன்று 72 துடிப்பு நிமிடத்திற்கு இருக்க வேண்டும். அது கூடினாலும் குறைந்தாலும் உடனே பலர் மிகுந்த கவலை யடைகின்றனர்.

60 முதல் 100 வரை கீழும் மேலும் சென்றாலும் அதுபற்றி உடனே பயம் கொள்ளத் தேவையில்லை. ஏற்றத் தாழ்வுகள் ஏற்ற இறக்கம் பல காரணங்களால் இருக்கலாம் - நரம்புகளில் ஏற்படும் சுருங்கி விரிதல். எனவே நாடித் துடிப்பு -இப்போதே நீங்கள் பார்க்க பழகுங்கள் அல்லது உங்கள் கைத் தொலைபேசியில்  ((Mobile) Pulse Heart Rate Monitor ஒரு App மூலம் பின்னால் விரலை அழுத்தி வைத்தால் தெரிந்து கொள்ளலாம். உடனே பயப்பட்டு விட வேண்டாம்!

1. பல அறிகுறிகள் பற்றி அறிந்து கொள்ள நெஞ்சு படபடப்பு, தலை சுற்றல், மயக்கம் - இவை மூளைக்குச் சரியான இரத்த ஓட்டம் இல்லாததால் ஏற்படும் மாறுதல்கள் ஆகும்.

2. உணர்ச்சி பூர்வ பாதிப்புகள் Emotional Disturbances) வயது காரணம் அல்லது  துக்கச் செய்தி அதிர்ச்சி செய்திகளால்கூட அந்த மயக்கம்.

3. களைப்பு (Fatigue) காரணமாகவும் இருக்கலாம்.

இதயத் துடிப்பு  பல விளையாட்டு வீரர்களுக்கு. 45-50 தான் இருக்கும். அது அவர்களது நரம்பு - விளையாட்டுப் பயிற்சி காரணமாக இருக்கும். அதை கண்டு பயப்படுதல் தேவை இல்லை. அது அவரது விளையாட்டுக் காரணமாகவே அமைந்த ஒன்றாக இருக்கக் கூடும். மயக்கம் வந்தவுடன் பலரும் உடனே நரம்பியல் நிபுணரான டாக்டரிடம் (Neuro) தான் காட்ட வேண்டும் என்று நினைக்கிறார்கள். மயக்கம் முதுமை யினால்கூட இருக்கும் - இதயத்திற்கு தேவையான ரத்தம் செல்லாமலும், அசுத்த ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, தூய்மையற்ற இரத்தம் ஒரு புறம் வெளியேற்றப்பட்டு, தூய்மையான இரத்தத்தை உடல் முழுவதும் ஓடச் செய்யும் வேலையை இதயம் இடைவிடாமல் செய்கிறது.

இதை மாற்றிட மருந்து மாத்திரை என்று உடனே செலுத்தி குணப்படுத்தி விட முயலுவதை விட, இதய நோய் சம்பந்தப்பட்டவர்களிடம் காட்டி இதய படபடப்பு அதி வேகத் துடிப்பு இதனையொட்டி கண்டறிய முயற்சிக்க வேண்டும்.

கருவில் வளரும் குழந்தையின் இருதயம்கூட சரியாக இயங்குகிறதா இல்லையா என்பதை  Ultrasonic Scan 
மூலம் - கருவிகள் மூலம் - கண்டறிந்து சரி செய்து, பிறந்த பிறகும் குறிப்பிட்ட காலத்திற்குப் பின் சரி செய்யலாம். அந்த அளவுக்கு மருத்துவத் தொழில் நுட்பம் இப்போது வளர்ந்து விட்டது.

'பேஸ் மேக்கர்' (Pace Maker) என்ற கருவி மூலம் இதயத் துடிப்புகளை ஒழுங்குபடுத்திட முடியும்; அதைப் பொருத்தி விட்டால், அது இதயத் துடிப்பை ஒழுங்கு படுத்தும் வேலையைச் செய்கிறது. பல காரணங்களால் இதயம் சுருங்கி விரியும், துடிப்புகளில் வேறுபாடுகள் வரக்கூடும். அக்கருவி எப்போது கூடுகிறதோ அதைக் குறைத்து ஒழுங்குபடுத்த, எப்போது குறைகிறதோ அதை போதிய அளவுக்கு ஒழுங்குபடுத்தி Balance மூலமாக ஒழுங்குபடுத்துகிறது.

இதயத் துடிப்புகள் உடலில் உள்ள மின்சக்தியைத் தூண்டி, ஒழுங்குபடுத்தி, இப்பணிகள் நடத்திட கருவிகள் உதவுகின்றன.

AV Nodel Reentrant TachyCardia (AVNRT)  என்பதை சிகிச்சை முறை மூலம் ElectroPhisology என்பதன் மூலம் Radio Freqeuncy (R.F.) சிகிச்சை முறை (Ablation) உடனடியாக இரத்த ஓட்டத்தில் உறைதல் (Clot) ஏற்படாமல் தடுக்கும் பல வாய்ப்புகளை ஏற்படுத்த முடியும்.

ரத்தம் உறைந்தால் ரத்த ஓட்டத்தில் (Clot) ஏற்பட்டால் உடனே (stoke) பக்கவாதம் வர வாய்ப்பு உண்டு. அதைத் தடுத்து மேற்கண்ட சிகிச்சை மூலம் சரி செய்துவிட முடியும்.

இதையும் தாண்டி (பேஸ்மேக்கர் கருவியையும் தாண்டி) மேலும் சக்தி வாய்ந்த இன்னொரு கருவி CRT முறைமூலம் இதயத்திற்குள் பொருத்தி, துடிப்பை ஒழுங்குபடுத்தவும் Chips sகளைப் பயன்படுத்தி - நமக்கே - டாக்டர்களுக்கேகூட நோயாளியின் இதயத் துடிப்புக் குறைந்தால் அறிவிக்கும் நிலையும்கூட, இன்று வளர்ந்துள்ளது.

இந்தக் கருவி, வீட்டில் மின்சாரம் நின்றவுடன்  எப்படி இன்வெர்ட்டர் உடனே இயங்கி, வெளிச்சம் தருகிறதோ, மின்சாரம் மீண்டும் வந்துவிட்டால் தானே இயங்காமல் நின்று விடுகிறதோ அது போல் இக்கருவி வேலை செய்யும்" என்று விளக்கினார் டாக்டர் கார்த்திகேசன் - பலரும் புரிந்து கொள்ளும் வகையில்.

இதன் மூலம் இதயத்தில் இதய வலி, மாரடைப்பு வந்தவர்கள், தக்க சிகிச்சை எடுத்துக் கொண்டு நன்றாக வாழவும் வாய்ப்பு உண்டு என்பதை விளக்கிக் கூடியிருந்தவர்கள் பலரின் அய்யங்களை கேள்விகள் மூலம் கேட்டபோதும், எல்லாவற்றையும் தெளிவாக விளக்கினார், சரியாகத் தந்துள்ளார்.

நமது பெரியார் வலைக்காட்சியில் (கணினி மூலம்) திரும்பத் திரும்ப அவர்கள் ஒளிபரப்பும்போது அதைக் கேட்டும், பார்த்தும் கூட்டத்திற்கு வராதவர்கள்கூட பயன் பெறலாம்.

இந்த நிகழ்ச்சி - ஒரு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்திய நிகழ்ச்சியாகும். என்றாலும் வருமுன்னர் காக்கும் வகையில் ஆண்டுக்கு ஒரு முறை அல்லது இரு முறை முழு உடற்பரிசோதனை செய்து கொள்ளுவதில் யாரும் அலட்சியம் காட்டாமல், முறையாக செய்தால் நல வாழ்வு பெறலாம்.

'நோயற்ற வாழ்வு தானே குறைவற்ற செல்வம்' - அதனைச் சேமிக்க அனைவரும் முயற்சிப்பது நல்லது.

(நாளையும் தொடரும்)

- விடுதலை நாளேடு 17. 8. 18

வியாழன், 16 ஆகஸ்ட், 2018

"உங்கள் நாடித் துடிப்பு - இதயத் துடிப்பு அறிவீர்" (1)



பெரியார் மெடிக்கல்மிஷன் என்ற அமைப்பினை, ஓய்வு பெற்ற பல் மருத்துவர் டாக்டர் இரா. கவுதமன், ஓய்வு பெற்ற மருத்துவ நலத்துறை இணை இயக்குநர் டாக்டர் பிறைநுதல்செல்வி மற்றும் பல மருத்துவர்கள் பெரியார் மருத்துவ சேவை அணியுடன் இணைந்தும், பெரியார் மணியம்மை நிகர் நிலைப் பல்கலைக் கழக கிராமப்புற வளர்ச்சித் துறையின்கீழ் இயங்கும் "புரா" கிராமங்களிலும் நல்ல மருத்துவ முகாம்களும், மகளிருக்குப் புற்று நோய் ஆய்வுப் பரிசோதனை களையும், திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி - திருச்சி ஹர்ஷமித்ரா புற்று நோய் தடுப்புமனையின் டாக்டர்கள் க. கோவிந்தராஜ், சசிபிரியா கோவிந்தராஜ் அவர்களுடன் இணைந்தும் மாநிலம் தழுவிய முகாம்களையும், தொண்டறத்தையும் மிகச் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

பெரியார் உடல் உறுப்புக் கொடைக் கழகம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப் பெற்று, குருதிக்கொடை, விழிக்கொடை  மற்றும் இறந்தபின் உடலை மருத்துவக் கல்லூரிகளுக்கே அளித்த 'செத்தும் சாகாத' மனிதநேயர்களாக பகுத்தறிவாளர்கள் பலரும் வாழ்ந்து காட்டுகிறார்கள் என்பதை, விளம்பரங்கள் அதிகம் செய்யாமலேயே தன்னடக்கத்துடன் தகை சான்ற இந்த ஈகையைச் செய்து வருகின்றனர்.

சென்னை பெரியார் திடலில், 'வருமுன்னர் காப்பதே உண்மையான உடல் நலப் பாதுகாப்பின் தலை சிறந்த முறை' என்பதை மனதிற் கொண்டு, பிரபலமான பல்துறை டாக்டர்களை அவ்வப்போது அழைத்து, நலவாழ்வின் அவசியத்தை வலியுறுத்தி பல்வேறு உடல் உறுப்புகளில் சிறந்த அனுபவமும், ஆராய்ச்சிப் பட்டமும் பெற்று பணிபுரியும் அல்லது பணி ஒய்வு பெற்றும் மருத்துவ சிகிச்சையில் மேலோங்கியுள்ள மருத்துவ அறிஞர்களின் விளக்கவுரை, தெளிவுரை களுக்கு ஏற்பாடு  செய்து எளிய பாமர மக்கள் தொடங்கி, நல்ல பெரும் பதவி, நற்கல்வி பெற்றோர் வரை அனைவரும் கேட்டுப் பயன் பெறும் வண்ணம் பல சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்து (3-4 மாத இடைவெளிகளில்) வருகிறார்கள் பெரியார் மெடிக்கல் மிஷன், தமிழ்நாடு முதறிஞர் குழு, பெரியார் நூலக வாசகர் வட்டத்துப் பெரு மக்கள் குழு ஆகியவை இணைந்து நடத்தி வருகின்றன.

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்


பேரறி வாளன் திரு.           (குறள் 215)


இதன் பொருள்: மக்களால் விரும்பப்படும் பேரறி வாளன் செல்வமானது மக்கள் விரும்பும் ஊரின் குடிநீர் கிணறு நிறைந்தது போலாகும்.

- இதில் 'செல்வம்' என்பதை வெறும் பணத்தோடு மட்டும் என்ற பொருள் கொள்ளுவதைவிட அறிவுச் செல்வம், கல்விச் செல்வம், ஆற்றல் - தலைமைச் செல்வம் என்பதையும் இணைத்து விரிவாக்கிக் கொள்ளல் வேண்டும். அது - 'அறிவை விரிவு செய்' - 'அகண்டமாக்கு

விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை' என புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் அறிவுரையை செயலாக்கிக் காட்டுவதாகும் எனலாம். தாகம் எடுத்தவர் களுக்கு தரும் தண்ணீர் பந்தல் போல இப்பணிகள் நடப்பதும், பலரும் அதில் பங்கேற்று மனிதநேயத் தொண்டறம் புரிதலும் மிகவும் போற்றத்தக்க ஒன்றல்லவா?

நேற்று (15.8.2018) மாலை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கில் பெரியார் மெடிக்கல் மிஷன் நடத்திய நலவாழ்வுச் சிறப்புச் சொற் பொழிவினை, பிரபல இதய நோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் ஏ.எம். கார்த்திகேசன் MBBS, MD, DNB (Gen), DNB [Card), FHRS, Fellowship in Electrophysiology, Certified Electrophysiology Specialist [IBHRE, USA), Certified Cardiac Device Specialist (IBHRE, USA]   அவர்கள் மிக அருமையாக  நிகழ்த்தினார்.

அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையின் இதய நோய் நிபுணர் ஆவார்!

அரங்கம் நிரம்பி, பக்கத்து ஹாலிலும் T.V. Screen ஏற்பாடு செய்யப்பட்டு பலர் அங்கிருந்தே பார்த்து கேட்டு மகிழும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டி ருந்ததும், கணினி மூலம் விளக்கப் படங்கள், அவரே வகுப்பறைகளில் விளக்குவது போல வெள்ளைப் பலகையில் வரைபடங்களாக இதயத்தைப் போட்டு, அதில், இதயத் துடிப்பை எப்படியெல்லாம் சரி செய்து நலவாழ்வு வாழலாம் என்ற விளக்கவுரையினை வந்திருந்த அனைத்து தரப்பும், படித்த பட்டதாரிகள் மருத்துவர்கள், மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்கள், இல்லறவாசிகள், மகளிர், முதியோர், இதய நோய் தாக்கி, சிகிச்சை பெற்று மீண்டோர், அறிவார்ந்த முதியவர்கள், ஓய்வு பெற்ற அறிஞர்கள் முதல் ஒரு பொதுமை நிறைந்த மக்கள்  (A Good Group Section & Society)  கொண்டதாக இருந்த அனைத்து தரப்பினர் அறிவார்ந்த விளக்கவுரையினை அள்ளிப் பருகிப் பயன் அடைந்தனர்.

ஆடிட்டர் ஆர். இராமச்சந்திரன், இணைப்புரை நிகழ்த்திய தோழர் வீ. குமரேசன், துவங்கி, தலைமை யேற்ற மூத்த புகழ் பெற்ற டாக்டர் எம்.எஸ். ராமச்சந்திரன், முன்னிலையேற்ற மூதறிஞர் குழத் தலைவர் டாக்டர் ஜஸ்டீஸ் ஏ.கே. ராஜன், பேராசிரியரும் முன்னாள் நேஷனல் மெடிக்கல் போர்டு தலைவருமான டாக்டர் ஏ. ராஜசேகரன் நன்றி உரையாற்றிய, தோழர் இரா. பரஞ்சோதி, ஆகிய அனைவரும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்த அரிய உரைகளை நிகழ்த்தினர்.

இறுதியில் சில வார்த்தைகளைச் சொல்ல எனக்கும் வாய்ப்புத் தந்தார்கள்.

என்னைப் பொறுத்தவரை அறிவுரை கேட்டு மகிழ்ந்த - மற்ற நண்பர்களைப் போல - கற்றலின் கேட்டலே நன்று - மிகு பயன் தருவது என்பதாக அமைந்திருந்தது - மகிழ்ச்சியைத் தந்தது!

சரியாக 6 மணிக்குத் துவங்கி - கேள்வி பதில் விளக்கம் எல்லாவற்றையும் உள்ளடக்கி சரியாக இரவு 8 மணிக்கெல்லாம் முடிவடைந்து, மன நிறைவுடன் வந்தோர் அனைவரும் திரும்பினர்.

(மேலும் வரும்)
- விடுதலை நாளேடு, 16.8.18