பக்கங்கள்

செவ்வாய், 12 டிசம்பர், 2017

சேறும் சந்தனமாக மாறும்; மாற்றலாம் - அது நம் கையில்!


நம் வாழ்வில் அவதூறுகள் நம் எதிரிகளால் எளிதில் பரப்பப்படுவது இயல்பு.

அதுவும் பொதுவாழ்க்கையில் உள்ளவர்கள்மீது சேற்றை வாரி இறைப்பது, ஆதாரமற்ற செய்திகளை அள்ளி விடுதல் - இவைகளை வாடிக்கையாகவே கொண்டு வயிறு நிரப்பும் வம்பர்களுக்கு நமது நாட்டில் குறைவே இல்லை.

அதுவும் பெண்கள்பற்றியோ, சொல்லவேண்டி யதே இல்லை!

பயமுறுத்தி காசு பறிக்கும் கயமைக்கு இது ஒரு வழிமுறைபோல் சிலருக்குப் பயன்படும்.

எதையும் எதிர்கொண்டு பழக்கமில்லாதவர்கள், இல்லாத ‘பேய்’க்கு எப்படி மனிதர்களில் சிலர் அஞ்சி அஞ்சி நடுங்குகிறார்களோ, அதுபோலவே இந்த அவதூறு சேறு கண்டும் மிகவும் பலர் அஞ்சுவர்.

பொதுவாழ்க்கை என்ற முள்படுக்கைமீது உள்ள வர்கள் பதில் கூறவேண்டிய - அதாவது - பொருட் படுத்தவேண்டிய அவதூறுகளுக்குத் தக்க பதில் கூறவேண்டும்; இல்லாத பொல்லாப்பு, பொய் மூட்டைகளைப் புறந்தள்ளியே வாழப் பழகிட வேண்டும்.

சிலர் இதன்மூலம் ‘பிரபலம்‘ ஆவதற்கே இந்த அவதூறு பரப்புதலை ஒரு அன்றாடத் தொழி லாகவே செய்வதுண்டு.

எனது  பொதுவாழ்வில் இரண்டு அவதூறு வழக் குகளை நானே போட்டு, இரண்டிலும் உண்மையை நிலைநாட்டுவதில் வெற்றி பெற்று மகிழ்ந்தேன். மற்ற நண்பர்களையும், கழகக் கொள்கைக் குடும் பத்தவரையும் மகிழச் செய்தேன். மனநிறைவடைந் தேன். இளையவர்கள் தகவலுக்காக இது.

அ.தி.மு.க.வின் நாளேடாக நண்பர் ஜேப்பியார் நடத்திய ஒரு ஏடு, நண்பர் கே.ஏ.கிருஷ்ணசாமி நடத்திய ஏடுகளில், ‘நான்’ கலைஞரை அரசியல் ரீதியாக ஆதரித்ததினால், எரிச்சலுற்று, என்னை ‘‘கூவம் காண்ட்ராக்டர்’’ என்று, ‘சுத்தப்படுத்தாத கூவத்தில்’ தங்கள் பேனாக்களை நனைத்து எழுதி னார்கள். நான் பொருட்படுத்தவில்லை, அலட்சியப் படுத்தினேன்!

பிறகு, ‘மக்கள் குரல்’ நாளேட்டில் டி.ஆர்.ராமசாமி அய்யங்கார் (T.R.R.)    வேறு புனைபெயரில் இதே குற்றச்சாட்டை எழுதினார். பிரபல்யப்படுத்தி னார் - ‘கூவம் காண்ட்ராக்ட் புகழ்’ என்று பெயர் போட்டே எழுதியதை எதிர்த்து நான் ‘மக்கள் குரல்’ நாளேட்டின்மீது அவதூறு வழக்குப் போட்டு (Defamation I.P.C. கீழ்) சென்னை நீதிமன்றத்தில் அவ்வழக்கு விசாரணை நடைபெற்றது.

தன்னிடம் உள்ள நாளேடான ‘மக்கள் குரலில்’ கொட்டை எழுத்துகளில், குறுக்கு விசாரணையில், என்னிடம் அவர்களது வழக்குரைஞர்கள் கேட்ட அதீத கேள்விகளை பெரிதாகவும், நான் கூறிய பதில்களை சிறிதாகவும் வெளியிட்டு மக்களைக் குழப்பிட தொடர்ந்து முயற்சி செய்தார்கள்.

அந்த டி.ஆர்.ஆர்., முதலமைச்சராக அன்று இருந்த எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கம். ஈ.வெ.கி. சம்பத் அவர்களது மகன் பொறியாளர் கவுதமன் திருமணம் பெரியார் திடலில், அவரது தலைமையில், திருமதி சுலோச்சனா சம்பத் அவர்கள் நடத்தினார். அதற்கு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். வந்தார். பெரியார் திடலுக்கு முதன்முதலாக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். வருவதால், வரவேற்பது நமது கடமை என்பதால், நான் வரவேற்றேன்.

மேடையில் என்னை அழைத்து அமர்த்தி, அவர் என்னிடம், ‘‘நீங்கள் திராவிட இயக்கத்திற்கே பொதுச்செயலாளர்; எங்களுக்கு வழிகாட்டிடும் இடத்தில் உள்ளீர்கள். உங்கள்மீது இப்படி அவதூறு புகார் கூறியுள்ளதைப்பற்றி நீங்கள் வழக்குப் போட்டுள்ளதால் பரவுகிறதே’’ என்றார்.  ‘‘நீங்கள் ஏன் அவதூறு வழக்குப் போட்டீர்கள்’’ என்று அவர் கேட்ட தொனி, ‘‘வழக்கை வாபஸ் வாங்குங்கள்’’ என்று சொல்லாமற் சொன்னதாகும்!

காதோடு காதாக மேடையில் நாங்கள் பேசிக் கொள்கிறோம் - மற்ற அனைவரும் கவனிக்கின்றனர்.

நான் அவரிடம் சொன்னேன், ‘‘நீங்கள் முதல மைச்சர்; பொதுப் பணித்துறையின் கோப்புகளை வாங்கி, கூவம் சுத்தப்படுத்துவதுபற்றிய கோப்பில் -  நீங்களே உங்கள் செயலாளர்களை விட்டு ஆராய்ந்து பாருங்கள்; அப்படி என் பெயராலோ, என் தம்பி பெயராலோ ஏதாவது உள்ளதா என்று? எனக்குத் தம்பியே கிடையாது’’ என்றேன்.

முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் சிரித்தார். நிகழ்ச்சி முடிந்து திரும்பியதும் அக்கோப்புகளை வரவழைத்துப் பார்த்து ஆய்வும் செய்துள்ளார் என்பது பிறகு தெரிய வந்தது!

வழக்கு பல வாய்தாக்கள் நடந்தது! எனக்குப் பல வங்கிகளில் கணக்கு இருக்கிறது; அவற்றை எல்லாம் ஆராயவேண்டும் என்று ‘மக்கள் குரல்’ சார்பில் எதிர்மனுதாரர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

நான் மகிழ்ச்சியுடன் ஒப்புதல் அளித்து, பட்டியல் தந்தேன். பிறகு ஒவ்வொரு வங்கிக் கணக்கிலும் 100 ரூபாய், 10 ரூபாய், 5 ரூபாய், 20 ரூபாய்தான் இருப்பு இருந்தன. அதனைப் பார்த்த நீதிபதி, ‘‘அதென்ன இப்படி’’ என்று அதிர்ச்சி அடைந்து கேட்டபோது,

‘‘பெரியார் சிலைகளை ஆங்காங்கு நிறுவிட, D.D. -க்களை (டிராப்ட்) என் பெயருக்கு கழகப் பொறுப்பாளர்கள் அனுப்புவதை டிராப்ட் களானபடியால், பற்பல வங்கிகளில் என் பெயரில் S/B 
சேவிங்ஸ் பேங்க் அக்கவுண்ட் திறந்து போடப் பட்ட D.D. தொகையை எடுத்து அவர்களுக்குக் கொடுத்ததுபோக, குறைந்தபட்ச தொகைகளே இருப்புகள்’’ என்றேன்.

இதைக் கேட்டு நீதிபதி எதிர்மனுதாரர்களைப் பார்த்துச் சிரித்தார்! எதிரணி வக்கீலுக்கும் அதிர்ச்சி! வெட்கம்! தனியே என்னிடம் தனது வருத்தத்தை அப்போதே சொன்னார்.

கூவம் சம்பந்தமாக எந்த ஆதாரத்தையும் துளிகூட காட்ட முடியவில்லை; வழக்கு வழக்கம் போல 2 ஆண்டுகள் நடந்து முடிந்து, ‘மக்கள் குரல்’ ஆசிரியர் சண்முகவேல் அவர்களுக்கு சென்னைப் பெருநகர நீதிமன்றம் ஒன்றரை ஆண்டு தண்டனை அளித்தது! பத்திரிகையாளர் தண்டிக்கப் பட்டது அதுவே இங்கே முதல் முறை. அதில் எனக்கு மகிழ்ச்சியில்லை. காரணம், எழுதியவர் வேறு ஒருவர் - தண்டனை வாங்கி உள்ளே போனவர் வேறு ஒருவர். அதுவும் தமிழர்! எனவே, மேல்முறையீட்டில்கூட உயர்நீதிமன்றத்தில் மிகவும் வற்புறுத்திடவில்லை.

அதன் பிறகு என்னை ‘‘கூவம் காண்ட்ராக்டர்’’ என்று எழுதுவதையே பல ஏடுகளும், மேடைகளில் நாக்கில் நரம்பில்லாமல் பேசி வந்தவர்களும் தங்களுக்குத் தாங்களே வாய்ப்பூட்டுப் போட்டுக் கொண்டனர்!

அவதூறுகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம். பிரபல ‘இந்து’ ஆங்கில நாளேட்டின்மீது திராவிடர் கழகம் சார்பில் 1971 இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கினை பொதுச்செயலாளர் என்ற முறையில் நானே நேரில் சென்று  (Party in person) வாதாடி வென்றோம்.

நாளை அதுபற்றி அறிந்துகொள்வீர்!
1.12.17

சேறும் சந்தனமாக மாறும்; மாற்றலாம் - அது நம் கையில்! (2)

சேலத்தில் தந்தை பெரியார் 1971 ஆம் ஆண்டு ஜனவரியில் 23, 24 ஆகிய இரு நாள்களில் மூடநம் பிக்கை ஒழிப்பு மாநாட்டினை வெகுசிறப்பாக நடத்தினர்.

அதில் பல புரட்சிகர தீர்மானங்கள் இரண்டாம் நாள் நிறைவேற்றினார்கள்.

அப்படி நிறைவேற்றப்பட்ட 10 தீர்மானங்களில் ஒன்று,

‘‘ஒருவன் மனைவி மற்றொருவனை விரும்புவது என்பதைக் குற்றமாக்கப்படக்கூடாது’’ என்ற ஒரு வாக்கியத் தீர்மானம் ஆகும்.

மகளிர் உரிமை என்பது ஆணுக்குள்ள உரிமை அத்தனையும் பெண்ணுக்கும் உண்டு; கற்பு என் பதோ, காதல் என்பதோ ஒருதலைப்பட்சமாக இருக்கக் கூடாது.

விரும்பாத நண்பனை விட்டு விலகுகிறோம் - வேண்டாத எஜமானனிடமிருந்துகூட வேலை செய்ய விரும்பாது வெளியேறுகிற உரிமை உடை யவர்கள் நாம்.

அப்படி இருக்கையில், திருமணம் என்றால், கொத்தடிமையை விலைக்கு வாங்குவது போன்று, பெண்ணை வெறும் போகப் பொருளாய், வேலைக் காரியாய், சமையற்காரியாய், பிள்ளை பெறும் போகக் கருவியாய் எண்ணி, கணவன் ஆதிக்கம் செலுத்த முயன்றால், அந்நிலையிலிருந்து அப் பெண் விடுதலைபெற விரும்பி வேறு ஒருவனை விரும்பினால், (மனைவியை) குற்றவாளியாக்கக் கூடாது என்பது மகளிர் உரிமையை மனதிற் கொண்டே தந்தை பெரியார் நிறைவேற்றிய அதிர்ச்சி வைத்திய தீர்மானம்.

ஏற்கெனவே இ.பி.கோ.வில் உள்ளதுதான் இது.

இதை வெளிப்படையான தீர்மானமாக வடிவம் கொடுத்தார் பெரியார் அம்மாநாட்டில்.

1971 தேர்தலில் தி.மு.க.வைத் தோற்கடிக்க தீவிரமாக கச்சை கட்டிக் கொண்டிருந்த ஏடுகள், எதிர்க்கட்சிகள் இதனை ஒரு வாய்ப்பாகக் கொண்டு தவறான பிரச்சாரத்தை நாடு முழுவதும் கட்ட விழ்த்து விட்டார்கள்.

யார் மனைவியை யார் வேண்டுமானாலும் அபகரிக்க, சேலம் தீர்மானத்தின்மூலம் பெரியார் கூறி,  சமூக ஒழுக்கத்தையே பாழ்படுத்துகிறார்; அவர் ஆதரிக்கும் தி.மு.க.வுக்கா உங்கள் ஓட்டு என்று திசை திருப்பி விட்டனர்!

‘இந்து’, ‘தினமணி’, ‘எக்ஸ்பிரஸ்’ ஏடுகள் இதில் தீவிர முனைப்புக் காட்டின.

‘இந்து’  (இங்கிலிஷ்) வெளியிட்ட செய்தியிலும், அதில் வந்த ‘ஆசிரியருக்குக் கடிதங்களிலும், ஆங்கி லத்தில் தீர்மானத்தை திரித்துப் போட்டு’ எழுதினர்.

ஆங்கில வாசகம், ‘‘Coveting another man’s wife should not be a crime’ 
என்று பெரியார் இயக்கமான திராவிடர் கழகம்,  தீர்மானம் நிறைவேற்றியது.

மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் பேரா சிரியர் தி.வை.சொக்கப்பா, வக்கீல் நோட்டீஸ் அனுப் பியும், திருத்திப் போடாமல் திரும்பத் திரும்ப அதையே எழுதினர்.

உடனே அய்யாவின் அனுமதியோடு, நான் கழகப் பொதுச்செயலாளர் என்ற முறையில் வழக்குப் போட்டேன். பிறகும் அதை எழுதிய பிறகு நீதிமன்ற அவமதிப்பு வழக்காக்கி, மன்னிப்பு கேட்க வழக்காடினோம்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.வீராசாமி, வி.வி.ராகவன் (அய்யர்) ஆகியோர் அடங்கிய அமர்வில் நான் மதியம் வழக்கெடுக்க (Lunch Motion) அனுமதி பெற்று, வழக்கை நானே நடத்தினேன்.

தலைமை நீதிபதி அவர்கள் என்னிடம், சரியாகத்தானே ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்கள். நீங்கள் தமிழில் படித்த தீர்மானத்திற்கும், ஆங்கில வாசகங்களுக்கும் பெரிய வேறுபாடு இல்லையே என்றார்.

பிறகு நான் தலைமை நீதிபதி அவர்களிடம் கனம் தலைமை நீதிபதி அவர்களே தீர்மானத்தின் அடிப்படை மாற்றப்பட்டுள்ளது ஆங்கில வாசகத் தில். Desiring விரும்பினால் என்பது மனைவியின் உரிமை பற்றிய கருத்தாக்கம். அவர்கள் வெளி யிட்டதோ ‘Coveting another man’s wife’ என்பது கணவனின் சட்ட விரோதச் செயலை.

முந்தைய தீர்மான வாசகம் மனைவியைப் பற்றியது.

இவர்கள் வெளியிட்டது கணவனின் துர் ஆக்கிர மிப்புச் செயல் - நேர் எதிரிடையானது என்று விளக்கினேன்.

உடனே தலைமை நீதிபதி , மற்ற நீதிபதி ஆகியோர் விளங்கிக் கொண்டு, நோட்டீஸ் அனுப்பிய பிறகு,  ‘இந்து’ ஆசிரியரிடம் விளக்கம் கேட்டனர். மறுபடியும் அப்படிப் போடலமா? என்று கேட்டு வருத்தம் தெரிவிக்கச் சொன்னார். ‘தி இந்து’ சார்பில் கோர்ட்டில் வருத்தம் தெரிவித்தார் அதன் ஆசிரியர் கோபாலன் (என்று நினைவு).

பிறகு இந்து (இங்கிலீஷ்) நாளேடு வழக்கு 17.2.1971 இல் தலைமை நீதிபதி அமர்வு முன்வந்த உடன்,

இந்து பத்திரிகை சார்பில் உண்மையான நிபந் தனையற்ற வருத்தத்தை தெரிவித்து மன்னிப்புக் கோரியதை விண்ணப்பதாரர் (கே.வீரமணி) ஏற்றுக் கொண்டதால், வழக்கைத் திரும்பப் பெற கோர்ட் டார் அனுமதித்து தீர்ப்பளித்தனர். (இது 17.2.1971 இல் நடந்த நிகழ்வு).

இப்படிப்பட்ட வரலாறு, பலருக்கும் அதிர்வலை களை ஏற்படுத்தியது.

தலைமை நீதிபதிக்கும் மற்ற நீதிபதிக்கும் சற்று மயக்கத்தையும், குழப்பத்தையும் அவ்வாசகங்கள் ஏற்படுத்தியதை நல்ல வண்ணம் தெளிவுபடுத்திய தால், நீதி நிலை நாட்டப் பெற்று உண்மை வென்றது.

எனவே, உரிய வகையில் அணுகினால் நம்மீது வீசப்படும் சகதியையும், சந்தனமாக்கி விடலாம்  - அது நமது அணுகுமுறையில்தான் உள்ளது என்பது அவ்வழக்கு தந்த பாடமாகும்!

- கி.வீரமணி

- விடுதலை நாளேடு1,2.12.17

திங்கள், 4 டிசம்பர், 2017

முதுமை எய்திய முதுகுடியினருக்குச் சில வேண்டுகோள்!



நம் பிள்ளைகளோ, உறவுகளோ, குடும்பத்தவரோ நம்மை மிகவும் மதிக்கவில்லையே, அலட்சியப்படுத் துகிறார்களோ  என்ற அவசரப்பட்ட முடிவிற்கு வந்து மனதை அலை பாய விட்டு, வருத்தம் - வேதனையை 'குதிரையாக்கி' அதன்மீது 'சவாரி' செய்யாதீர்கள்!

இன்றைய வாழ்க்கை முறையில், வீட்டில் மகன், மகள், மருமகள் இவரின் பேரப் பிள்ளைகள் உட்பட, பலரும் படிப்பு, பணிகள் என்பதில் சுறுசுறுப்பாக இருப்பதாலும், அவர்களது மனநிலை (Mindset) பழைய கூட்டுக் குடும்ப  நிலைப்பாட்டிலிருந்து மாறுபட்டு, வேலையில்லாது எப்போதும் வீட்டுக்குள் இருந்த கார ணத்தால், அப்போது நெருக்கம் இருந்திருக்கலாம்; இப் போதுள்ள காலச் சூழ்நிலை, நேரம், கைத்தொலைபேசி யுகம் - இவைகளைக் கணக்கிட்டுக் கொண்டால் முதியவர்கள் சங்கடப்பட வேண்டியதில்லை.

ஆனால், அலட்சியத்தோடு செல்பவர்களாகும் இளைஞர்களை நாம்  ஏற்க முடியாது.

குறைந்த தேவைகளும், எவருடனும் இணைந்து சற்று விட்டுக் கொடுத்த - தன்முனைப்பில்லாத வாழ்க்கை முறை நாம் எந்த வயதிற்கு ஏறினாலும் நமக்கு ஒருபோதும் ஏமாற்றத்தைத் தராது. எதிர்பார்ப்பு எங்கே அதிகமோ ஏமாற்றமும் அங்கேதான் அதிகம், மறவாதீர்!

அண்மையில் முதுகுடி  மக்களுக்கான உலக நாள்.

இதையொட்டி நமது மூத்த மருத்துவ நண்பர் ஒருவர் அனுப்பிய முக்கிய எச்சரிக்கைத் தொகுப்புகள் சில.

அமெரிக்காவில் 51 விழுக்காடு முதுகுடிமக்கள் படிக்கட்டுகளில் ஏறும் போது விழுந்து விடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இப்படி விழுந்து மரணமடைவோர் எண்ணிக்கை கூடிய வண்ணமே உள்ளது.

60 ஆண்டுகளை கடந்த முதிய வர்கள் 10 செயற்பாடுகளில் மிக்க கவனம் தேவை.

இவைகளை அறவே தவிர்ப்பது நல்லது.

1.            படிக்கட்டு ஏறாதீர்கள்; அப்படி ஏறித்தான் தீர வேண்டுமெனில், பக்கத்தில் உள்ள சுவர் அல்லது பிடிப்புகளைப் பிடித்துக் கொண்டே ஏறுங்கள்.

2.            உடனடியாக உங்கள் தலையைச் சுற்றாதீர்கள் - திருப்பாதீர்கள்; முதலில் உங்கள் முழு உடலையும் நின்று நிதானித்து பிறகு திருப்புங்கள். (Warm up your whole body)

3.            கீழே உள்ள கட்டை விரலைத் தொடுவதற்காக உடலை வளைக்காதீர்கள். மேலே சொன்னபடி - அதற்கு முன் உங்கள் முழு உடலை நிதானித்துக் கொள்ளுங்கள்.

4.            உங்கள் கால்சட்டைகளை (Pants)  காலில் மாட்டிக் கொள்ள முயலும்போது,  நின்று கொண்டு போடா மல், பக்கத்தில் அமர்ந்த - உட்கார்ந்த நிலையில் போடுங்கள். அதுவே பாதுகாப்பானது. தடுக்கி கீழே விழுந்து விடாமல் அம்முறை நம்மை 'தடுத்தாட் கொள்ளும்.'

5.            மல்லாந்து படுத்துள்ள நிலையில், முகம் மேலே பார்க்கும் நிலையில் உடனே (திடீரென்று) எழுந் திருக்காதீர்கள். மெதுவாக ஒருபுறம் திரும்பி - இடதுபுறம் அல்லது வலதுபுறம் உடலைத் திருப்பி பிறகு எழுந்திருக்கப் பழகுங்கள்.

6.            உடற்பயிற்சிக்கு முன் உங்கள் உடலைத் திருப்பி வளைக்காதீர்கள் - உடலை நின்று நிதானித்து கொண்ட பின்பே திருப்பிட முயலுங்கள்.

7.            பின் பக்கமாக நடக்க முயலாதீர்கள். பின்பக்கம் விழுந்தால் அதனால் ஏற்படும் அடியும், காயமும் மிகப் பெரியவை ஆகலாம்; மறவாதீர்!

8.            மிகவும் கனமான பொருள்கள் - பெட்டி சாமான்களை தூக்கிட அப்படியே இடுப்பை வளைக்காதீர்கள். முதலில் உங்கள் முழங்கால்களை வளைத்து, பாதி அமர்ந்தது போன்ற நிலையில் அவைகளைத் தூக்கிடுங்கள்.

9.            படுக்கையிலிருந்து தடால் என்று வேகமாக எழுந்து விடாதீர்கள். சில நிமிடங்கள் அமர்ந்த பிறகு, மெது வாக எழும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

10.          மலங் கழிக்கும்போது அதிகமாக 'முக்கி' முயற்சி செய்யாதீர்கள்; அது இயல்பாக வருகிற போது வரட்டும். அதுவே உங்களை ஒரு நேரத்தில் கதவைத் தட்டி அழைக்கும்; கவலைப்படாதீர்கள்.

கவனிக்க: அருள்கூர்ந்து இந்த வாழ்வியல் கட்டுரையை உங்களின் மூத்தகுடி முதிய நண்பர் களுக்கும் அனுப்பிடுங்கள் அல்லது விவாதத்தில்  பேசு பொருளாக கவனஞ் செலுத்துங்கள்!

நாம் எவ்வளவு காலம் வாழுகிறோம் என்பதைவிட, பிறருக்குத் தொந்தரவு, தொல்லை தராத 'சுதந்திர வாழ்வு' வாழுவதே முக்கியம்! அப்போதுதான் நம்மீதும் எவருக்கும் சலிப்போ, வெறுப்போ, சங்கடமோ ஏற் படாது - இல்லையா?

- கி.வீரமணி
- விடுதலை நாளேடு,17.11.17

செவ்வாய், 21 நவம்பர், 2017

இளைஞர்களுக்கான இனிப்பும் - கசப்பும்!

நேற்று (15.11.2017) உலக நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி அதைத் தடுக்கும் நாளாகும்.

இந்தியா உலகத்தின் நீரிழிவு நோயின் தலைமை நாடு என்பதோ, தமிழ்நாடும் இதில் முன்னணி பங்கு வகிக்கிறது என்பதோ பெருமைப்படத்தக்கதா? வேதனையுடன் கூடிய பதில் இல்லை என்பதே!

நான் ஏற்கெனவே பல முறை இப்பகுதியில் எழுதியுள்ளதைப் போன்று, இந்த நோய் - சர்க்கரை நோய், ஒரு முறை நமக்குள் படையெடுத்து இடம் பிடித்து விட்டால், பிறகு என்ன செய்தாலும் அதை முழுவதும் விரட்டி அடித்து விடவோ, ஓட்டி விடவோ முடியாது - இன்று வரை, நாளை எப்படியோ!

வயது முதிர்ந்தவர்களை மட்டுமே  தாக்கி, படை யெடுத்து ஆக்கிரமித்துக் கொண்ட இந்த ஆட் கொல்லி - மெல்ல மெல்ல பல உறுப்புகளைப் பழுதாக்கி தாக்கிக் கொல்லும் நோய் இந்நோய் ஆகும்! அதனால் தான் டாக்டர்கள் இதை ஒரு சந்திப்பு நிலைய நோய் (Junction Disease) என்று பொருத்தமாக வர்ணிக்கிறார்கள் போலும்!

ஆம்! இந்த சந்திப்புத் தொடர் வண்டி நிலையத் திலிருந்து பல தொடர் வண்டிகள் புறப்படுவது போல, அதன் தாக்குதல் கண்களை நோக்கி  இருக்கும். விழித்திரைகளைப் பாதித்து, குளுக்கோமா என்பதன் மூலம் படிப்படியாக பார்வையை இழக்கும் தண் டனையை - அது நமக்கு அளிக்கும் (இத்தண்டனைக்கு மேல் முறையீடு -  அப்பீல்கள் - கிடையாது என்பதை நாம் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்!)

கால் விரல்கள் - புண்கள், பிறகு 'கேங்கரின்' மூலம் கால்களையோ, விரல்களையோ வெட்டி விடும் நிலை.

இதய நோய் அதிகமாகி முக்கியமாக நம்மை மரணபுரியை நோக்கி அழைத்துச் செல்லும்; சாவின் சாகாத தூதுவன் ஆகவும் இருக்கும்.

'ஸ்ட்ரோக் (Stroke) என்ற பக்கவாத நோயையும் அளிக்கும் கொடுமையை இந்நோய் அளிக்கலாம்!

இப்படி எத்தனை எத்தனையோ...

இவை உங்களை பயமுறுத்த அல்ல. தக்கப் பாதுகாப்புடன் - வருமுன்னர் காத்து நீங்கள் - ஏன் நாம் - வாழ வேண்டும் என்பதற்காக!

தடுத்துக் கொள்ள - அடிக்கடி ஆண்டுக்கு ஒரு முறை அல்லது  இரு முறை உடற்பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

"முதியோர்கள் - அல்லது 70, 80 வயது தாண்டிய முதுகுடி மக்கள்தான் இப்படிப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்  - நாங்கள் இளைஞர்கள்,  வாலி பர்கள் தானே! நாங்கள் எதைச் சாப்பிட்டாலும் செரிமானம் ஆகக் கூடிய வயதுதானே" என்ற அலட்சிய பதிலைக் கூறாதீர்கள், இளைஞர்களே!

இக்காலத்தில் உங்கள் வயதினரும் அதிகம் பாதிக்கப்பட்டு, சிறுநீரகம் பழுதடைந்து வாழ்நாளின் பல்வேறு வாய்ப்புகள், இன்பத் துய்ப்புகளைக்கூட இழந்திடும் பரிதாப நிலை ஏற்பட்டு விடும்.

மருத்துவச் செலவை பின்பு பல்லாயிரக்கணக்கில் செய்து, வேதனையை, வலியை, இழப்பை அனுப விப்பதற்குப் பதில் 'வருமுன்னர் காத்தல்' அறி வுடைமை அல்லவா?

இளைஞர்கள் பலரும் நம் வீடுகளில் கவலை யோடும், பொறுப்போடும் சமைக்கும் நம் அம்மாக் களின் உணவை அலட்சியப்படுத்தி விட்டு, வெளி  நாட்டு உணவகங்களின் - வேக உணவுகளை (Fast Food) தின்பது, Coke - கொக்கோகோலா மற்றும் சுவையூட்டப்பட்ட போத்தல் குடிநீர்களை - அவை களின் தற்காலிக சுவைக்காக, நிரந்தர உடல் வலிமையை விலைபேசி வீணாவதைப்பற்றிக் கவலைப்பட மறுக்கின்றனரே!

எப்போதோ ஒரு முறை சாப்பிடுவதை நாம் தடுக்கவில்லை; அன்றாடம் - அனுதினமும் இந்த வெளிநாட்டு வேக உணவுகளைக் கொண்டு வயிற்றை நிரப்புவது - பரோட்டா, முட்டை பரோட்டா, கொத்து பரோட்டா என்று மைதா என்ற உடல் நலனைப் பாழ்படுத்தும் வகையறாக்களை உண்ணும் வாடிக்கை என்றால் அதன் விளைவு வருங்காலத்தில் 'தீராத நோயாக' நமக்குத் திரும்பி வந்தே தீரும்!

எனவே உணவால் எச்சரிக்கை, நாக்குக்கும், மூளைக்கும் (ஏன் பற்பல நேரங்களில் வயிற்றுக்கும் கூட) ஏற்படும் மனப் போராட்டத்தில் நாக்கு(ச்சுவை)தான் வெற்றி பெறும் தற்காலிகமாக!

'இறுதிச் சிரிப்பு' போல இறுதி வெற்றி மூளைக் குத்தான் நண்பர்களே, மறவாதீர்! காலந்தாழ்ந்து உணர்ந்து, வருந்தி என்ன பயன்?

எனவே உணவில் மிகுந்த கவனத்துடன். கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து, வளமை என்பது பணம் சம்பாதிப்பதில்லை; நோயற்ற வாழ்வில்தான்  உள்ளது என்ற 'குறைவற்ற செல்வம்' அதுவே என்பதை உணருங்கள்!

இனிப்புச் சுவையை எப்போதும் தள்ளிட வேண்டாம் - அன்றாடப் பழக்கமாக்கிக் கொள்ளாமல் உடல் நலம் பேணுங்கள்!

 

-கி வீரமணி, வாழ்வியல் சிந்தனைகள்

-விடுதலை நாளேடு, 16.11.17

வியாழன், 9 நவம்பர், 2017

அம்பேத்கர் - 'புத்தப் பிரியர்' மட்டுமல்ல; புத்தகப் பிரியரும்கூட! (11)&(12)



டாக்டரின் பல்லாயிரக்கணக்கான புத்தகங்களைக் கவனித்து ஒழுங்குபடுத்தியும், அவரது மிகப் பெரிய வீட்டு நூலகத்தை -  டில்லியில் அவரது குடியிருப்பிலும் சரி, பம்பாயின் இராஜ கிருகம்' என்ற அவரது சொந்த வீட்டிலும் சரி, வீடு முழுவதும் புத்தகங்களே இருக்கும். தேவிதயாளுக்கு அதனை அடுக்குவது, அவர் விரும்பும் அதே இடத்தில் மாறாமல் வைப்பது, அவர் எழுதிக் கொண்டோ, சிந்தித்துக் கொண்டோ இருக்கும் போது திடீரென்று தேவைப்படும் புத்தகங்களையோ, பாதுகாக்கப்பட்ட பத்திரிக்கை துணுக்குகளையோ (Press Cuttings) 
உடனுக்குடன் எடுத்துத் தர வேண்டிய மிக கடினமானப் பொறுப்பு - இவைகள்தான் முக்கியப் பணியாக இருந்தது.

எனவே அவருடைய தேவையைக் குறிப்பறிந்து இவர் செய்வார்; அவர் அம்பேத்கரின் வீட்டு நூலகம் பற்றிக் குறிப்பிடுகையில்,

"நம் எல்லாருக்கும் வீடு - நம் வசதிக்காக; ஆனால்  டாக்டருக்கோ, புத்தகங்களுக்காகத்தான் வீடு; பிறகே இவரது வசதிக்காக என்று இறுதி வரை வாழ்ந்தவர்" என்று கூறிவிட்டு, தேவிதயாளிடம் பாபாசாகேப் ஒரு முறை தனியே இருக்கும்போது கூறினாராம் - ஓர் உரையாடலில்.

"நான் மிகவும் ஏழை. எனது தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு எனக்குத் தாராளமான வருவாய் இல்லை. எனது முதுமைக் காலத்தில் என் நிலை எப்படி இருக்கும் -எனக்கு ஆதரவு வசதிகளுக்குரிய வருவாய் இல்லை.

எனக்கு வரும் வருமானத்தில் பெரும் பகுதியை; நான் புத்தகங்களுக்கே செலவழித்து விடுகிறேன். என்னால் அதைத் தவிர்க்க முடியாது. மாற்றிக் கொள்ள முடியாது.

எனது  இந்த நூலகத்தை - கிடைத்தற்கரிய  நூல் களையெல்லாம் நான் சேகரித்து வைத்துள்ள இந்த நூலகத்தினை தனியார் யாருக்காவது கொடுத்தால் 5 லட்சம் ரூபாய் (அப்போது  அது பெரிய தொகை என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுவோம்) ஆனால் அப்படிச் செய்ய எனக்கு விருப்பமில்லை; நான் இந்த நூலகத்தை சித்தார்த்தா கல்லூரிக்கு (டாக்டர் துவக்கிய கல்லூரி) அளித்துவிட முடிவு செய்து விட்டேன்" என்று உருக்கத்துடன் தனது நிலையைப் பகிர்ந்து கொண் டுள்ளார்! அவரது மிக நெருக்கமான பல நண்பர்கள் தேவிதயாளிடம்  கூறுவார்களாம்! "என்ன டாக்டர் தனக்கு 100 ரூபாய் கிடைத்தால் அதில் 50 ரூபாய்க்குப் புத்தகம் வாங்கிவிடுகிறார், 200 ரூபாய் என்றால் அதில் ரூ.100க்கு புத்தகம் வாங்கி விடுகிறாரே!" என்று கவலையுடனும், வியப்புடனும் கூறுவார்களாம்.

புத்தகங்களை - அவை விலை உயர்ந்தவைகளாக - அப்போது 150 ரூபாய் 200 ரூபாய் விலையுள்ளவை மிக அதிக விலையுள்ள நூல்கள்; அதுபற்றிக் கவலைப்படாமல் அவர் புத்தகங்களுக்கே 'துணிந்து' செலவழித்து விடுகிறார் என்பார்களாம்.

தேவிதயாள் மேலும் கூறுகிறார்: "எனது சக்திக்கு அப்பாற்பட்டதாகவும்கூட அந்த நூலகப் பராமரிப்பு பற்பல நேரங்களில் இருந்ததை நானே உணர்ந்துள்ளேன். மிகவும் கடினமான பணி. அந்தந்த நூல்களை டாக்டர் எந்த இடத்தில் வைத்தாரோ, அவை எடுக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்பட்ட பிறகுகூட, குறிப்பிட்ட அதே இடத்தில் அதே வடிவத்தில் இருக்க வேண்டும் என்றுதான் டாக்டர் விரும்புவார்!

சுமார் 4 ஆண்டுகள் நான் டில்லி வீட்டில், புத்தகம் பராமரிப்பு, மேற்பார்வை என்ற பணிகளைச் செய்த போது பெற்ற அனுபவங்கள் சிற்சில நேரங்களில் கடுமையாக அமைந்ததும் கூட உண்டு.

அவர் கேட்டவுடனேயே சிறிது தாமதம்கூட இல்லாமல் உடனடியாக குறிப்பிட்ட அந்த புத்தகத்தை அவருக்கு எடுத்துத் தர வேண்டும். ஒரு நிமிடத்திற்கு மேல் தயக்கம் என்றால், எனக்கு ஏராளமான 'திட்டுகள்' டாக்டரிடமிருந்து சரசரவென்று வந்து வெடித்து விழும்!

ஒரு குறிப்பிட்ட கட்டுரையைக் கேட்கிறார்; தேடு கிறேன்; உடனே கிடைக்கவில்லை டாக்டர் என்னைப் பார்த்து, உன்னால் உடனே அதனை எடுக்க முடிய வில்லையா? "நீ இத்தனை ஆண்டுகள் இதனைப் பராமரித்து வைத்துள்ள லட்சணமா இது?" என்று கேட்டு அவரே குறிப்பிட்ட நூல் அல்லது கட்டுரை இருக்கும் இடத்தையும் குறித்து தனது குறையாத நினைவு  ஆற்றலைப் புரட்டி விட்டுச் சொல்வார் 'அங்கிருக்கும் எடுத்து வா' இந்த வண்ணத்தில் இந்த மூலையில் இருக்கும் என்று 'லொக்கேஷனோடு' (Location) கூறுவார்.

பிறகு அவரது வசைமொழிகள் மழைத் துளிகளைப் போல கொட்டும்.

"முட்டாள் கழுதை' நீ இருந்து என்ன பயன்?"

சில நேரங்களில் எல்லை தாண்டிய கோபத்தில் எனக்கு அறைகள் விழுந்ததும் உண்டு. காரணம் அவரது சிந்தனை ஓட்டத்தின் வேகம் குறையாமல் - பணிகளை நடத்திட்ட பாங்கு; அதற்கு நான் இப்படி பயன்பட்டதுண்டு!

அப்போதுள்ள அவருக்குரிய புத்தகக்காதல், புத்தக உலகத்திலேயே மூழ்கித் திளைத்தவர் அவர் என்பதை அறிந்ததால் நான் அதற்காக வருந்தியதில்லை.

தாங்க முடியாத கால் வலி - பல நேரங்களில் டாக்டருக்கு வந்தால், அவர் அதைப் போக்கிக் கொள்ள மருத்துவ டாக்டரிடம் செல்லுவதற்குப் பதிலாக, மருந் தினைத் தேடி எடுத்துக் கொள்ளுவதற்குப் பதிலாக, சில புத்தங்களை எடுத்துப் படிக்க ஆரம்பித்து விட்டு, பிறகு சொல்வர்; புத்தகப் படிப்பு எனக்கு வலி தெரியாமல் செய்து விட்டது என்று புத்தகம் அவருக்கு நன் மருந்தாம்! என்னே ஆர்வம் - அதிசயம்!

டாக்டர் அம்பேத்கரின் புத்தக உதவியாளர் தேவி தயாள் அவர்கள் டாக்டருக்கு உடல்வலியைக் கூட மறக்கச் செய்வது இந்த புத்தக வாசிப்புதான் என்று குறிப்பிட்டுள்ளார். அதை ஒரு உரையாடலில் டாக்டரே தன்னிடம் கூறியதைப் பதிவும் செய்துள்ளார்.

‘‘ஒரு நாள் காலை நான் அவர் அறைக்குச் சென்று நேற்றிரவு கால் வலி பற்றிக் கூறினீர்களே, அது இப்போது எப்படி இருக்கிறது’’ என்று விசாரித்தேன். அதற்கு டாக்டர், ‘‘நேற்றிரவு அவ்வலி 12.30 மணி யளவில் ஆரம்பித்தது; என்னால் தூங்கவே முடிய வில்லை. ஒரு புத்தகத்தை எடுத்தேன். அதை விடியற் காலை 5 மணிவரை தொடர்ந்து படித்துக் கொண்டே இருந்தேன். வலியே தெரியவில்லை’’ என்றார்.

தேவிதயாள் அசந்து போய்விட்டார்!

என்னே விசித்திரமான மருத்துவம்!!

‘‘கவலையை மறப்பது நாட்டியக் கலையே!’ என்று ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் ‘சிவகவி’ என்ற ஒரு திரைப்படத்தில் பாடியதை எனது இளமைக் காலத்தில் கேட்டுள்ளேன். ஆனால், தேவி தயாளின் இந்த டாக்டர் கூறியது கேட்டு,

‘‘வலியை மறப்பது புத்தக வாசிப்பே’’ என்ற புதிய பாட்டு வரியை எழுதவேண்டும் போலும்! புத்தக வாசிப்பில் அவர் ஈடுபட்டால் வேறு எதுவும் அவ ரைப் பாதிக்காது என்பது இதிலிருந்து புரிகிறதல்லவா?

டாக்டர் அம்பேத்கரின் உதவியாளர் நானக்சந்த் ராட்டு (1922-2002) என்பவர் டாக்டருக்கு தனிச் செயலாளராகவும், டைப்பிஸ்ட்டாகவும், டாக்டர் எழுதிய பலவற்றை ஒழுங்குபடுத்தி, தொகுத்து, புத்தக வடிவத்திற்குரிய வகைப்படுத்துதல் போன்ற பல பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டு இறுதிவரையில் டாக்டருக்கு நிழல்போல் இருந்தவர்.

‘புத்தமும் தம்மமும்‘, ‘இந்து மதத்தின் புதிர்களான இராமன் - கிருஷ்ணன்’ போன்ற டாக்டரின் அரிய கருத்துக் கருவூலங்களை ஒழுங்குபடுத்திய உதவி யாளர்.

‘அம்பேத்கரின் கடைசி சில ஆண்டுகள்’ (1995), ‘அம்பேத்கர்பற்றிய பலரும் அறியாத பல்வேறு வாழ்க்கை அம்சங்கள்’ (1996), ‘நினைவுகளும், நிகழ்வுகளும் அம்பேத்கர் பற்றியவை’ (1996) என்ற பல நூல்களை அவர் எழுதியுள்ளார்.

ராட்டு அவர்கள் எழுதுகிறார்:

‘‘பல நாட்கள் தொடர்ந்து தனது அறையை - புத்தக நூலக அறையை விட்டு டாக்டர் வெளியே வராமலேயே - வெளியுலகின் வெளிச்சமே படாம லேயே புத்தகப் படிப்பு - எழுதும் பணியில் அலுப்பு, சலிப்பின்றி ஈடுபடுவார்! நான் அப்போது அவருக்குக் காலை உணவு, பகல் உணவு, தேநீர், காஃபி, இரவு உணவு இவைகளை அங்கேயே கொண்டு போய்க் கொடுத்து வந்துள்ளேன்!

அவரது மெயின் வராண்டாவின் ஒரு பகுதியான நூலகம், அவரது வாசிப்பு அறை - படுக்கை அறை இதில்தான் அவர் தன்னை ‘சிறைப்படுத்திக் கொண்டு’ தொடர்ந்து படிப்பதோ, எழுதுவதோ ஆகியவற்றில் ஈடுபட்டார்’’ என்பது அதிசய மானதல்லவா?

முக்கிய பார்வையாளர்கள் வந்துள்ளார்கள் என்பதை நாங்கள் தெரிவித்த நிலையில், அவர் களைப் பார்த்து, ஓரிரு வார்த்தைகளே பேசி, உடனே வழியனுப்பி விட்டு, தன் பணியைத் தொடர்வார். பல பார்வையாளர்களுக்கு இது வருத்தத்தைத் தருவதானாலும்கூட, பிறகு அவர்களே, ‘டாக்டரை அவரது மும்முரமான எழுத்து அல்லது வாசிப்புப் பணியில் நாம் குறுக்கிட்டு இருக்கக் கூடாது’ என்று உணர்ந்தவர்களும் உண்டு!

அதில் பலர், ‘அம்பேத்கர் வாழ்க’ என்று முழக்க மிட்டு விடைபெற்றுக் கொள்வது வாடிக்கைதான்!

தனது புத்தக வாசிப்புக் காதல் - கடமைபோல, மக்களிடம் சென்றால்தான் - அனைவரும் நூல் களைப் பயன்படுத்தினால்தான் மனித குலம் முன்னேறும் என்ற அவரது கருத்து, அவரது இளமைக் காலத்தில் - மாணவப் பருவத்திலேயே அவரைப் பற்றிக்கொண்ட ஒன்று என்பதை டாக்டர் அம்பேத்கரின் அரிய தோழர், சீடர்களில் ஒருவரும், மகராஷ்டிரா அரசு வெளியிட்ட அம்பேத்கரின் எழுத்தும், பேச்சும் - பல தொகுதிகளின் மூல ஆசிரி யருமான வசந்த்மூன் அவர்கள் மராத்தி மொழியில் தனது சுய சரிதையில் குறிப்பிட்டுள்ளார். அதனை திருமதி.கெயில் ஆம்வெட் அவர்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து, ‘Growing up untouchable in India A Dalit Autobiography’’ (2001) என்னும் நூல் வெளிவந்துள்ளது!

தனது 24 வயதில் டாக்டர் அம்பேத்கர் தனது எம்.ஏ., படிப்பை முடித்து, பிஎச்.டி. ஆய்வினை அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் மேற்கொண்ட நிலையில், பாம்பே கிரானிக்கள் (‘Bombay Chronicle’)  என்ற பிரபல நாளேட்டிற்கு எழுதிய ஒரு கடிதம், அவர் எத்தகைய புத்தகப் பிரியர் என்பதற்குச் சான்று ஆவணமாகும்!

பிரபலமான பம்பாய் பிரமுகர் சர் பெரோஷ் மேத்தா அவர்கள் மறைந்தார் என்ற செய்தி வந்தது. அதையொட்டி பம்பாயில் அவருக்குச் சிலை ஒன்று நிறுவிட வேண்டுமென அவ்வேட்டில் பலர் எழுதி யிருந்தனர். அதனைப் படித்த டாக்டர், அவ் வேட்டிற்கு ஒரு கடி தம் எழுதினார்; அதில் அவருக்குச் சிலை எழுப்புவதைவிட, அவர் பெயரால் ஒரு தலைசிறந்த நூலகம் ஒன்றை பம்பாயில் ஏற்படுத் தினால், அது சமூக முன்னேற்றத் திற்குப் பெரிதும் துணை புரியக் கூடும்.

பம்பாயில் பெரிய ஆய்வுகளுக்கு உதவக்கூட பெரிய பொது - அரசு நூலகம் இல்லை. பல தனியார், சிறு நூலகங்கள்தான் உள்ளன. இப்படி ஒரு பொது நூலகம் அமைந்தால், அது பொதுமக்களுக்கும், கல்வியாளர்களுக்கும் பெரிதும் பயன்படும் என்று ஆசிரியருக்குக் கடிதத்தை  நியூயார்க்கிலிருந்தபடியே 1916 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளிநாட்டில் மாணவராக இருந்தபோதே எழுதினார்.

இது பாபா சாகேபின் புத்தகக் காதலும், புத்தகங்களால்தான் அறியாமை இருள் மறைந்து, அறிவொளி பரவிட முடியும் என்ற கருத்தும் எத்தகைய உறுதி வாய்ந்த ‘சீரிளமைத் திறன்’ கொண் டவை என்பது புரிகிறதல்லவா?

- விடுதலை நாளேடு,7,8.11.17