பக்கங்கள்

வெள்ளி, 30 அக்டோபர், 2015

இந்த ஏழிசை கேட்டு உயர்வோம்!

அமெரிக்காவில், இலியனாய் மாநிலத்தில் (சிகாகோ உள்ள மாநிலம்) பிரபல கல்வி வள்ளல்களில் ஒருவரும், மிகச்  சிறந்த கொடையாளியுமான 104 வயது வரை வாழ்ந்தவர் டாக்டர் அர்னால்ட் பெக்மென் என்பவர். கருமான் என்ற கொல்லுப் பட்டறைத் தொழிலில் மிக எளிமையாகத் தன் வாழ்வைத் தொடங்கியவர்.
தெளிந்த சிந்தனை, தீர்க்கமான முடிவு, கடும் உழைப்பு - இவைகளாலும் அவரது கண்டு பிடிப்புகள் மூலம் தாமஸ் ஆல்வா எடிசன், அலெக்சாண்டர் பெல் - ஆகியோர் வரிசையில் வைத்து மிக உயர்வான அறிவியல் தொழில் நுட்ப மேதைகளில் ஒருவராக இன்றும் கருதப்படுகிறார்!
இலியனாய் மாநிலத்தில் சிறிய விவசாயப் பண்ணை ஒன்றைத் துவக்கினார். அதில் பல கருவிகளை தனது நுண்ணறிவின் திறத்தால் கண்டுபிடித்து, உலகம் பயன்படுத்திக் கொள்ளுமாறு செய்து புகழும் பொருளும் சம்பாதித்தார்!
ரசாயன அறிவியலில் பி.எச்.மீட்டர் என்ற ஒரு கருவியைப் பயன்படுத்திட Analytical chemistry -க்கு பெரிதும் உதவிடும் வாய்ப்பான கருவியை கண்ட றிந்து, ஏராளமான விருதுகளை அக்கண்டுபிடிப்பு களுக்காகப் பெற்றார்!
இவரது தொழில் திறமை, அறிவியல் தொழில் நுட்பச் சாதனைகளைத் தாண்டி, இவரது புகழ் நிலைத்த புகழாக வரலாற்றில் நிற்பதற்கு மற்றொரு மிக முக்கிய காரணம் இவர் ஒரு தலை சிறந்த கொடை வள்ளல் என்பதனால் ஆகும்!
டாக்டர் பெக்மென் அவர்களது தனித்த, படைப்பாற்றல், அறிவியல் நுண்மாண் நுழைபுலம் இவரது வாழ்வை வளப்படுத்தினால் மட்டும் போதாது: தன் பெண்டு, தன் பிள்ளை, தன் வீடு, குடும்பம் என்ற சின்ன கடுகு உள்ளத்தை விரட்டிவிட்டே தொல்லுலக மக்கள் எல்லாம் எம்மால் பயன்பெற்று வாழ பணி செய்வதே தனது கடன் என்று எண்ணி, 1977-இல் இவர் சுமார் 40 கோடி டாலர்களை ஒதுக்கி தனது வாழ் விணையர் மேபல் என்ற அம்மையாரும் இணைந்த அர்னால்ட் அண்ட் மேபல் பெக்மேன் பவுண்டேஷன் என்ற ஒரு பொது அறக்கட்டளைத் துவக்கினார்.
இலியனாய் பல்கலைக் கழகத்திற்கு 4 கோடி டாலர் நன்கொடை அளித்து மிக   பிரம்மாண்டமான 3,13,000 ச.அடி உள்ள மாபெரும் கட்டடம் ஒன்றை கட்டிடக் கொடுத்து, உலகம் முழுவதிலும் இருந்து ஆராய்ச்சி யாளர்கள் வந்து ஒன்றுக்கொன்று தொடர்புடைய அறிவியல் (Inter-disciplinary research) ஆராய்ச்சி நடைபெற உதவியுள்ளார்!
ஈதல் இசை பட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு!         (குறள் - 231)
என்ற குறளுக்கேற்ப அவரது வாழ்க்கை அமைந்து விட்டது! நாம் எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பதால் பெருமை வராது;
நாம் எவ்வளவு புகழ், பெருமைக்குரிய அறிவாளியாய் உயர்ந்துள்ளோம் என்பதாலும் உண்மையான சிறப்பு வராது; மாறாக, நாம் உலகத்திற்கும் சமுதாயத் தொண்டறத்திற்காகவும் எவ்வளவு  உதவினோம் என்பதைப் பொறுத்ததே நிலைத்த புகழும் பெருமையும்!
அத்தகைய மாமனிதர்தம் வாழ்க்கையில் அவர் கையாண்டு உயர்ந்தமைக்குக் காரணமாக அமைந் தவை அவரால் கூறப்பட்ட ஏழு விதிகள்!
நம்மைப் பொறுத்தவரை நமக்கு அவை ஏழிசைகளாகவே இன்பத்தைப் பாய்ச்சுகின்றன!
பெக்மேன் அவர்கள் கூறுகிறார்:
1. எந்தக் கால கட்டத்திலும் நேர்மையையே(integrity) கடைப்பிடித்து ஒழுகுதல்.
2. எந்தப் பணியை எடுத்துக் கொண்டு செய்தா லும், அரை மனதோடு அதில் ஈடுபடாமல், முழு விருப்பத்தோடு செய்யவே பழக வேண்டும்.
எதில் முழுதாய் ஈடுபட முடியாதோ அதை ஏற்காமல் வெளியேறிட வேண்டும்.
விருப்பத்துடன் உள்ளே அல்லது விருப்ப மில்லா விட்டால் வெளியே என்பதே தம் கொள்கையாக இருக்க வேண்டும்.
3. பிறருக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய எதையும் செய்யாமல் இருப்பது முக்கியம்.
4. எந்தக் காரியத்தைச் செய்தாலும் பின்னால் அதனால் பிறகு அவமானம் ஏற்படக் கூடிய எதனையும்  செய்ய முனையவே கூடாது.
5. எதையும் மிக நேர்த்தியுடன் (Excellence) (மற்றவர் மிக மிக விரும்புவதே நேர்த்தி) அதற்கு வேறு மாற்று கிடையவே கிடையாது!
6. எதிலும் தன்னடக்கமும் நிதானமும் கடைப் பிடித்தல் மிக நன்று.
(சிற்சில நேரங்களில் இது சற்று கூடுதல் ஆனாலும் பரவாயில்லை)
7. உங்களை நீங்கள் எப்போதும் பெரிய ஆளாக எண்ணி இறுமாறாதீர்கள்!
இப்படி இந்த ஏழு இசைகளை இசைத்த இந்தப் பெருமகனாரின் படத்துடன் அக்கட்டடத்தில் அவரது வாழ்வு : பிறப்பு: 10.4.1900 மறைவு: 18.5.2004 என்று செதுக்கப்பட்டுள்ளது.
இவைகளை நாமும் பின்பற்றலாமே!
(சிகாகோவிலிருந்து இதை அனுப்பிய திருமதி அருள்பாலுவுக்கு என் நன்றி!)
- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி
-விடுதலை,20.3.15

வியாழன், 29 அக்டோபர், 2015

இதோ ஒரு மகிழத்தக்க மாமனிதம்!


மருத்துவத்துறையில் ஏற்பட்டுள்ள நம்ப முடியாத வளர்ச்சி மனித ஆயுளைப் பெருக்கும் மிகப் பெரிய உதவியைச் செய்கிறது மனித குலத்துக்கு!
மருத்துவ அறிவும், கணினி தொழில் நுட்பமும் இணைந்து செய்து வரும் அமைதிப் புரட்சி மிகவும் வியக்கத்தக்கதாக இருக்கிறது!
முன்பெல்லாம் அறுவை சிகிச்சை என்றால் பெரும் அளவுக்கு நம் உடலில் உள்ள ரத்தம் வெளியேறுவது தவிர்க்க இயலாததாகயிருந்தது. ஆனால், இப்போதோ, டிஜிட்டல் (கணினி) புரட்சி மூலம் - லேசர் என்ற ஒளிக் கற்றைத் தொழில் நுட்பம் மூலமும் எந்தப் பகுதியில் அறுவை சிகிச்சை தேவையோ, அதனைத் துல்லியமாய்க் கண்டறிந்து, அந்தப் புள்ளியையே அடையாளம் வைத்து மார்க் செய்து கொண்டு, அதனை நோக்கி அறுவை சிகிச்சை நடத்துகின்றனர், அறுவை சிகிச்சையாளர்களான மருத்துவர்கள். இதில் சிந்தும் ரத்தம் - முந்தைய நாட் களின் அளவோடு ஒப்பிட்டுப் பார்த் தால் வெகு வெகுக் குறைவு என்றே சொல்ல வேண்டும்!  அது மட்டுமா? இங்கு அறுவை சிகிச்சை மேசைமீது நோயாளியைக் கிடத்தி வெளி நாடுகளில் உள்ள பிரிட்டன் - அமெரிக்காவின் பிரபல மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு, இங்கே அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக வீடியோ காட்சி உதவி யோடு - செய்து முடிக்கிறார்கள்!
இன்று வந்துள்ள ஒரு மகிழத்தக்க மனிதநேயச் செய்தி.
கடந்த இரண்டு மூன்று நாள்களுக்கு முன் திருச்சியில் நடைபெற்ற சாலை விபத்தில் விபத்துக்குள்ளானவர் திருச்சி காவேரி மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு பரிசோதனை செய்யப்பட்டார்; மூளைச் சாவு நிகழ்ந்துள்ளது என்பதை மருத்துவர்கள் கூறினர். இறந்தவரின் மனைவி, குழந்தைகள் - எல்லோரும் இவரது உடல் உறுப்புகளை மற்றவர்களுக் குப் பயன்படும் வகையில் கொடையாக அளிக்க விரும்பி ஒப்புதல் தந்தனர்!
மேற்கு வங்க மாநிலம் சிலுகுரி பகுதியிலிருந்து 56 வயதுள்ள நரேஷ் சர்மா என்ற நோயாளிக்கு கல்லீரல் கெட்டுப் போய் மதுரை அப்போலோ மருத்துவமனையில் வந்து கல்லீரல் சிகிச்சைக்காகச் சேர்ந்துள்ளார்!
இவரது உடலில் கல்லீரல் மாற்று சிகிச்சை நடத்த முடிவு செய்தால் ஒழிய இவர் பிழைக்க வாய்ப்பில்லை என்று அப்போலோ மருத்துவர்கள் கருதி - அதற்கான ஏற்பாட்டை செய்த நிலையில், திருச்சியிலிருந்து கல்லீரல் (Liver) உறுப்புக் கொடை அந்த நோயாளிக்குக் கிடைத்தது!
அந்நாள் அவரது வாழ்வின் பொன் னாள். திருச்சி காவேரி மருத்துவமனையில் இந்த நோயாளியின் கல்லீரல் (Organ Harvesting) உறுப்புக்கள் அறுவடை தொடங்கியது!
காலை 5 மணிக்கு அவரது கல்லீரல் உறுப்பு எடுக்கப்பட்டு, உடனடியாக திருச்சி மருத்துவமனையிலிருந்து 90 நிமிடங்களில் காவல்துறையினரின், சாலை ஒத்துழைப்போடும் ஒருங்கிணைப் போடும் மதுரைக்குக் கொண்டு செல்லப் பட்டு காலை 9.45 மணிக்கு அறுவைச் சிகிச்சை தொடங்கி பிற்பகல் 3.30 மணிக்கு முடிந்தது!
இந்த கல்லீரல் மாற்று உறுப்பு பொருத்தப்பட்ட மேற்கு வங்க சர்மாவை தமிழ்நாடு காப்பாற்றியுள்ளது!
இறந்தவர்களின் உறுப்புகள் எப்படி பயன்பட்டுள்ளன பார்த்தீர்களா? - செத்தவர் வாழுகிறார்!
இதில் உறுப்புக் கொடை வள்ளல் களும், மருத்துவர்களும், காவல்துறை யினரும் - அனைவரும் நம் பாராட்டுக் குரியவர்கள் ஆவார்கள்!
எல்லாவற்றையும் விட இதில் பொதிந்துள்ள மற்ற சில முக்கிய அம் சங்களும் - மனிதநேயக் குறிப்புகளும் சுட்டிக் காட்டப்பட வேண்டியவை களாகும்!
மேற்குவங்கமும் தமிழ்நாடும் - மனிதநேயத்தினால் ஒன்றாகி உள்ளது!
ஜாதி, மதம், மாநிலம் - எந்தப் பேதங்களும் குறுக்கிடவில்லையே!
கவுரவக் கொலை காட்டு மனி தர்கள் இதனைக் கண்ட பிறகாவது புத்தி பெறுவார்களா?
மனிதம் வெல்லட்டும்! காட்டுமிராண்டி மனப்பான்மை செல்லட்டும்!
-விடுதலை,24.10.15

பாடையது ஏறினும் ஏடது கைவிடேல்!


புத்தகங்களைப் படித்தாலும்கூட அதனை மீண்டும் மீண்டும் படிக்கும் போதுதான் முழுப் பொருள் நமக்குக் கிடைக்கும். மேலெழுந்த வாரியாகப் படித்துப் போடுவது சாதாரண பொழுதுபோக்குக் கதைகள் அல்லது சில ஊடகங்களில் வரும் துணுக்கு களுக்கு மட்டுமே பொருந்தும்.
சிறந்த நூல்களை திரும்பத் திரும்பப் படிக்கும்போதுதான் அதன் சுவையும், நயமும் கருத்து வலிமை யின் தெளிவும் நமக்குக் கிடைக்கக் கூடும்.
நவில்தொறும் நூல்நயம் போலும்     பயில்தொறும்
பண்புடை  யாளர் தொடர்பு (குறள் 783)
பழுத்த கனிகளைக்கூட அப் படியே லபக்கென்று விழுங்கி விடுவதோ அல்லது அவசர அவசர மாக சாப்பிட்டு விடுவதோ அதன் முழுச் சுவையை அனுபவித்து சுவைத்து மகிழும் அரிய வாய்ப்பை, உண்போருக்குத் தராது; மாறாக, மெல்ல நிதானமாக நன்றாக சுரந்த உமிழ்நீருடன் கலந்து அதனை உண்ணும்போதுதான் முழுச் சுவை நமக்கு நல்லதோர் அனுபவத்தை ஊட்டும்!
இதுபற்றி நமது மகாகவி என்ற பெருமை படைத்த பகுத்தறிவுக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர் கள், உலகப் புத்தக நாளையொட்டி பெரியார் திடலில் ஆற்றிய பேருரை யில் (22.4.2013) தந்துள்ள முத்தான கருத்துகள் இதோ:
இப்படி, இந்த வரிசையில் வைத்து எண்ணத்தக்கதுதான் பாடை யது ஏறினும் ஏடது கைவிடேல் என்பதும். ஒரு நூலிலுள்ள கருத்து, அது சொல்லப்பட்டுள்ள முறை ஆகியன ஒருமுறை படித்தோ, இருமுறை, மும்முறை படித்தோ மனப்பாடமாக ஏறி நின்றுவிடக் கூடும். மனப்பாடம்தான் ஆகி விட்டதே! இனி எதற்கு நூல் என்று தூக்கி எறிந்துவிடக் கூடாது. எனவே, நூல் நிலைய நோக்கம் உட்பொதிந்த நிலையில் உள்ள இந்தப் பழமொழி ஆக்கம் மிக்கது. வடமொழியில்கூடக் கைக்கு அழகு, கையில் வைத்திருக் கும் புத்தகம் என்ற கருத்துண்டு. புஸ்தகம் ஹஸ்த லட்சணம் என் பார்கள். சிலர் படிக்காவிட்டால் கூடக் கைகளில் புத்தகங்களோடு காட்சி தருவார்கள். கற்றவர் என்ற பெருமை வராதா என்ற கனவு. அறிவில்லா மலே செய்யும் ஓர் அறிவு மிரட்டல்!
என்னுடைய நண்பர் ஒருவர், தொடக்கப் பள்ளியில் என்னோடு படித்தவர். எப்பொழுது பயணத்தில் கண்டாலும் பத்துப் பதினைந்து புத் தகங்களோடு கூடிய தோள் பையோடு தென்படுவார். வண்டியில் உட்கார்ந்த கொஞ்ச நேரத்தில் வெளியே எடுத்துப் பக்கத்தில் வைத்துக் கொள்வார். கொஞ்சமாக நூல்களைப் புரட்டுவார். அதிகமாகப் பேசுவார். திடீரென்று எழுதுகோல் எடுத்து வரிகளிடையே பிடித்துக் கொண்டு போவார். மூன்று நான்கு முறை அதே காட்சி. அதே புத்தகங்கள். ஆர்வத்தை அடக்க முடியாமல் ஒருமுறை கேட்டுவிட் டேன்: இன்னுமா அதே புத்தகங்கள்? படித்து முடிக்கவில்லையா? இவர் சொன்னார்: இதோ பாருப்பா! உனக்குத் தெரியாததல்ல.
நம்மிடம் இருக்கும் பணத்தை இப்படி வெளியே எடுத்து வைக்க முடியாது! அது பெரிய அறிவாளி என்னும் மரி யாதையைத் தராது! புத்தகம் என் றால் படித்தவன் என்கிற கவுரவம்.
நீயே கேட்கிறாய் இல்லையா! என்றான். கனக்க கனக்க, சுமந்து வருவது உனக்குத் தொல்லையாய் இல்லையா? என்றேன். வீட்டில் வைத்து விட்டு வந்தால், எடைக்குத் தூக்கிப் போட்டுவிடுவாள் மனைவி; என்ன செய்வது என்றான். அதில் தப்பே இல்லை என்றேன் நான்.
எப்படி என்று கேட்டான். படிக்கா மலே போலிப்பெருமைக்காக இப் படிச்சுமந்து திரிவதைவிட எடை போட்டு இரண்டுபடி அரிசி வாங்கி னால் என்ன தப்பு என்றேன். பேசவில்லை அவன்.
எனவே, புத்தக விரும்பிகளே, படியுங்கள் - அடுக்கி வைத்து அழகு பார்க் காதீர்கள்! அடுத்தடுத்து எடுத்துப் படித்துப் படித்து மகிழுங்கள் - பிறருடன் பகிர்ந்து கொள்ளுங்கள் - செய்வீர் களா?
-விடுதலை,27.10.15

பாருக்குள்ளே நல்ல நாடு?


ஒரு சிறந்த கவிஞன் என்பவன் அவனது சமுதாயத்தை எக்ஸ்ரே கண்கொண்டு பார்த்து, அதன் புண்களுக்கு தக்கதோர் அறுவை சிகிச்சைக்கு ஆயத்தப்படுத்தும் ஒரு முன் மருத்துவப் பணியாளன்!
தன்னுடைய கவித்துவத்தை உலகு மெச்சவேண்டும் என்று புகழ் என்னும் போதை மருந்துக்கு அடி மையாக, தன்னைத் தொலைத்து, பிறருக்கு - குறிப்பாக சமூக விரோத பிற்போக்குத்தனங்களுக்கு முக வராக மாறிவிடக்கூடாதவர்.
இப்படிப்பட்ட தனிச் சிறப்பு - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர் களுக்கே உண்டு.
பாரதி தமிழை எளிமையான கவிதை நடையில் வீறுகொண்ட படைப்புக்களாக்கியவர் என்பது உண்மைதான் என்றாலும், புரட்சிக் கவிஞரைப் போல் அவர் முழுப் பகுத்தறிவுவாதியோ, தனித்த சிந்தனையாளரோ கிடையாது.
புரட்சிக்கவிஞரின் சமுதாயப் பார்வை பரவலாக எங்கும் எதிலும் இருந்தது!
அவரது உலகப்பன் பாட்டு, அவர் எப்படிப்பட்ட தத்துவவாதி என்பதையும்,
சித்திரச் சோலைகளே பாட்டில் பாட்டாளித் தோழர்கள் எத்தனைப் பேர் இரத்தம் சொரிந்து இச்சோலை உருவாக்கப்பட்டது என்று பேனா வைச் சொடுக்கிக் கேட்டது - அவரை அவர்தாம் புரட்சிக்கவிஞர் பார்! என்று உலகுக்குக் காட்டியது!
கவிதையில் குழைத்துத் தந்த அவரது சுயமரியாதைச் சூரணங்கள், சமூகத்தின் ஜாதி, மூடநம்பிக்கை, பெண்ணடிமைத்தன்மை போன்ற நோய்களை விரட்டும் மாமருந்து கள் அல்லவா?
அதனால்தான் அவர் மக்கள் கவிஞர் என்று பாராட்டப்படுகிறார்!
அந்த மக்கள் கவிஞர் வரிசையில் இந்தத் தலைமுறைக் கவிஞர்களில் பவள விழா கொண்டாடிய கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களும் மிக முக்கியமானவர்.
அவர்தம் சமுதாய அக்கறை எப்படிப்பட்டது?
இதோ ஒரு அற்புதமான பேனா நர்த்தனம்!
கவிக்கோ கவிதைகள் என்ற நூல் ஓர் அருமையான கவிதைத் தொகுப்பு - அதில் 10.10.1987 இல் எழுதிய பாருக்குள்ளே நல்ல நாடு என்ற தலைப்பில், ஓர் கவிதை:
அவர்களைச் சிறையில் சந்தித்தேன்.
என்ன குற்றம் செய்தீர்கள்?
என்று கேட்டேன்.
ஒவ்வொருவராகச் சொன்னார்கள்:
எங்கள் வீட்டில் திருடிக்கொண்டு
ஒருவன் ஓடினான். திருடன், திருடன்
என்று கத்தினேன். அமைதிக்குப்
பங்கம் விளைவித்ததாக என்னைக்
கைது செய்துவிட்டார்கள்!
என் வருமானத்தைக் கேட்டார்கள்
நான் வேலையில்லாப் பட்டதாரி, என்றேன்.
வருமானத்தை மறைத்ததாக வழக்குப்
போட்டுவிட்டார்கள்.
நான் கரிமூட்டை தூக்கும் கூலி,
கூலியாகக் கிடைத்த ரூபாய் நோட்டு
கரி பட்டுக் கறுப்பாகிவிட்டது. கறுப்புப்
பணம் வைத்திருந்ததாகக் கைது செய்துவிட்டார்கள்.
என் வயலுக்கு வரப்பெடுத்துக் கொண்டிருந்தேன்
பிரிவினைவாதி என்று பிடித்துக்கொண்டு வந்து
விட்டார்கள்.
அதிகாரி லஞ்சம் வாங்கினான்; தடுத்தேன்.
அரசுப் பணியாளரை அவருடைய கடமையைச்
செய்யவிடாமல் தடுத்ததாகத் தண்டித்துவிட்டார்கள்.
அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படச்
சுவரொட்டியை ஒட்டிக்கொண்டிருந்தேன்.
சட்டமன்ற உறுப்பினர்களை அவதூறு
செய்ததாக அழைத்துக்கொண்டு வந்து
விட்டார்கள்
ஊழல் பேர்வழிகளை நாடு கடத்தவேண்டும்
என்று எழுதினேன், கடத்தல்காரன் என்று
கைது செய்துவிட்டார்கள்.
நான் பத்திரிகை ஆசிரியன். தலையங்கத்தில்
உண்மையை எழுதினேன், நாட்டின்
ஸ்திரத் தன்மையைக் குலைத்ததாகக்
கொண்டு வந்துவிட்டார்கள்.
சுதந்திர தின விழாவில் ஜன கண மன பாடிக்
கொண்டிருந்தார்கள். நான் பசியால் சுருண்டு
படுத்துக்கொண்டிருந்தேன். எழுந்து நிற்க
முடியவில்லை. தேசிய கீதத்தை அவமதித்ததாகச்
சிறையில் அடைத்துவிட்டார்கள்.
அக்கிரமத்தை எதிர்த்து ஆயுதம் ஏந்தச்
சொன்னான் கண்ணன் என்று யாரோ கதா
காலட்சேபத்தில் சொல்லியிருக்கிறார்கள்.
என் பெயர் கண்ணன். பயங்கரவாதி என்று
என்னைப் பிடித்துக் கொண்டு வந்துவிட்டார்கள்.
நான் வெளியே வந்தேன்
சட்டம் ஒழுங்குப் பிரச்சினை எதுவும்
இல்லாமல் நாடு அமைதியாக இருந்தது.
28 ஆண்டுகளுக்குப் பிறகும் நம் நாட்டில் இதே நிலைதானே இன்றும்?
இதை மாற்றி புதியதோர் சமூகம் படைக்க நம்முடைய பங்குதான் என்ன? சிந்திக்கவேண்டாமா?
பாருக்குள்ளே நல்ல நாடாம் இது? என்று இடித்துக் கூறிடும் எள்ளல்களுக்குள் ஒரு சமூகப்புரட்சிக்கான வித்து உறங்கிக் கொண்டிருப்பது தெரியவில்லையா?
-விடுதலை,28.10.15

வெள்ளி, 2 அக்டோபர், 2015

பயணங்களும் - ஏற்பாடுகளும்!


அடிக்கடி பயணங்கள் மேற்கொள் ளும் நண்பர்கள் அல்லது சுற்றுலாவுக் காகச் செல்லும் பயண ஏற்பாடுகள் - இவைகளில் முக்கியப் பங்குவகிப்பது, ஆயத்தங்களில் முதன்மையானது மூட்டை முடிச்சைக் கட்டுவது - தேவையானவற்றைத் திட்டமிட்டு சேகரித்து, அவற்றை தூக்கக் கூடிய ஒரு பெட்டி - கைப்பெட்டி - அல்லது சற்று நீண்டகால பயணம் எனில் பெரிய தொரு பெட்டி இவைகளில் அவை களை அடுக்குவது என்று எதையும் உரிய காலத்தில் செய்தால், கடைசி நேரத்தில் தவிக்காமல், பயணங்கள் எளிதாகும்.
முன்பெல்லாம் நம் நாட்டில் காசி, இராமேசுவரம் யாத்திரைதான் மக்களுக்குத் தெரியும்!
பலர் காசிக்குச் சென்றால் கடைசி யாக விடை பெற்றுக் கொண்டே முதிய வர்கள் செல்வார்கள். இப்போது அப்படியா?
இப்போது அறிவியலும் தொழில் நுட்பமும் வளர்ந்தோங்கிய நிலையில், பேருந்து தொடர்வண்டி, வானூர்தி இவைகளினால் பயணங்கள் எளிதில் விரைவில் சென்று திரும்ப உதவுகிறதே!
பயங்கரவாதம் தலைதூக்கியுள்ள தால் விமான நிலையங்களில், ரயில் நிலையங்களில் பெட்டிகளையும், நமது பைகளையும் காவல்துறையினர் ஆழ்ந்து சோதித்து அனுப்பிட முன் கூட்டியே செல்லவேண்டியுள்ளது என்பது தவிர்க்க முடியாத ஒன்றே!
எடுத்துக்காட்டாக, சென்னையி லிருந்து விமானம்மூலம் திருச்சி செல்ல 45 மணித்துளிகள் அல்லது ஒரு மணி நேரத்திற்குள்தான் ஆகிறது. அதற்கு விமான நிலையத்திற்குள் நாம் சுமார் ஒன்றரை மணி, இரண்டு மணி நேரத் திற்கு முன்பாகவே சென்று, பாதுகாப்புச் சோதனை கட்டங்களில் தேறி, பிறகு விமானம் ஏறியாகவேண்டும்.
என்ன செய்வது - அது பயணி களான நமது பாதுகாப்புக்குத்தானே செய்யப்படுகிறது!
இப்போது ரயில் நிலையங்களில் குண்டு வெடிப்புகள் காரணமாக அங்கும் கடுமையான பரிசோதனை - மனித குலத்தின் அறிவு நல்ல வழியில் சென்றதால், தொடர் வண்டி - விமானம் எல்லாம் கிடைத்தன.
தவறான வழியில் அறிவு சென்றால், மனித வெடிகுண்டுகள் போன்ற சமூக விரோத நடவடிக்கைகள் உலகம் முழுவதும் உலுக்கி விட்டுள்ள கொடுமை அன்றாட நிகழ்வுகள்; அத னால் கடுமையான சோதனைகளும், முன்கூட்டிய ஆயத்தங்களும் தேவை தானே!
அப்படி வெளிநாடுகளுக்குச் செல்லுவோர் பயணங்களுக்கான தங்களது டிக்கெட்டுகளை ஆன்-லைன் என்பதிலேயே - இணைய வாய்ப்பு வந்ததால், வீட்டில் இருந்த படியே பதிவு செய்து - இருக்கைத் தேர்வு உள்பட - முடித்து விடுகின்றனர்.
எல்லாவற்றிலும் பிளஸ்களிலும், மைனஸ்களும் உண்டல்லவா?
அதுபோலவே, ஆயத்தங்களில் அப்படி பயணம் செய்யும் நண்பர்களின் தவறால், பெட்டிகளில் சமான்கள் துருத் திக் கொண்டு அடுக்காமல், அளவுக்குக் குறைவாக அடுக்கிவிடுவது நல்லது.
எடை நிர்ணயம் அங்கே உண்டே! கூடுதல் கட்டணம் அல்லவா கடைசி நேரத்தில் செலுத்தவேண்டியிருக்கும்.
தவிர்க்க முடியாத குறைந்த உடை களையே எடுத்துச் சென்றால், வெளி நாடு சலவையும் அல்லது புதியதும் வாங்கிப் பயன்படுத்தலாம்.
பயன்படும் மருந்து வகைகளைக் கட்டாயம் உடன் எடுத்துச் செல்லுதல் முக்கியமாகும். அறையில் உள்ள போது எளிய உடைகளில் இருப்பது; வெளியே செல்லும்போது அணியும் உடைக்கு மாற்றாக இருக்கும்.
புத்தகங்கள் பயணங்களில் அரிய நண்பன் என்பதைச் சொல்லவேண் டியது இல்லை - ஒரு கைத்தொலைப் பேசி - அது இருந்தால் அதைவிட பெரிய துணை வேறு ஏது?
முதலுதவி மருந்துகள் சிலவும் வழக்கமாகச் சாப்பிடும் மாத்திரை, மருந்துகளுக்கு அப்பாற்பட்டு இருப்பது - பஞ்சு உள்பட நல்ல பயன்தரும் ஆபத்துக்கு உதவும்.
வாழ்க்கையில் பயணங்கள் தவிர்க்க முடியாதவை. பயணத்தின்போது எதை மறந்தாலும் உங்கள் அடையாள அட்டை அல்லது கடவுச் சீட்டு (பாஸ் போர்ட்) மிகமிக மிக முக்கியமானது.
சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பே புரட்சிக்கவிஞர் (முதல் கவிதைத் தொகுப்பில்),
யாத்திரை போகும்போது என்ற தலைப்பில்,
யாத்திரை 1938 வாக்கில் அவர் கவிதை சொல்வது,
சீப்புக் கண்ணாடி, சிறு கத்தி, கூந்தல் எண்ணெய்
சோப்புப் பாட்டரி விளக்கு தூக்குக் கூஜா தாள்,
பென்சில், தீப்பெட்டி கவிகை சால்வை, செருப்புக் கோவணம் படுக்கை
காப்பிட்ட பெட்டி கைக்கொள்க யாத்திரைக்கே!
என்று நம்மை ஆயத்தப்படுத் தினார்களே!
-விடுதலை,21.7.15