பக்கங்கள்

வியாழன், 29 அக்டோபர், 2015

பாருக்குள்ளே நல்ல நாடு?


ஒரு சிறந்த கவிஞன் என்பவன் அவனது சமுதாயத்தை எக்ஸ்ரே கண்கொண்டு பார்த்து, அதன் புண்களுக்கு தக்கதோர் அறுவை சிகிச்சைக்கு ஆயத்தப்படுத்தும் ஒரு முன் மருத்துவப் பணியாளன்!
தன்னுடைய கவித்துவத்தை உலகு மெச்சவேண்டும் என்று புகழ் என்னும் போதை மருந்துக்கு அடி மையாக, தன்னைத் தொலைத்து, பிறருக்கு - குறிப்பாக சமூக விரோத பிற்போக்குத்தனங்களுக்கு முக வராக மாறிவிடக்கூடாதவர்.
இப்படிப்பட்ட தனிச் சிறப்பு - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர் களுக்கே உண்டு.
பாரதி தமிழை எளிமையான கவிதை நடையில் வீறுகொண்ட படைப்புக்களாக்கியவர் என்பது உண்மைதான் என்றாலும், புரட்சிக் கவிஞரைப் போல் அவர் முழுப் பகுத்தறிவுவாதியோ, தனித்த சிந்தனையாளரோ கிடையாது.
புரட்சிக்கவிஞரின் சமுதாயப் பார்வை பரவலாக எங்கும் எதிலும் இருந்தது!
அவரது உலகப்பன் பாட்டு, அவர் எப்படிப்பட்ட தத்துவவாதி என்பதையும்,
சித்திரச் சோலைகளே பாட்டில் பாட்டாளித் தோழர்கள் எத்தனைப் பேர் இரத்தம் சொரிந்து இச்சோலை உருவாக்கப்பட்டது என்று பேனா வைச் சொடுக்கிக் கேட்டது - அவரை அவர்தாம் புரட்சிக்கவிஞர் பார்! என்று உலகுக்குக் காட்டியது!
கவிதையில் குழைத்துத் தந்த அவரது சுயமரியாதைச் சூரணங்கள், சமூகத்தின் ஜாதி, மூடநம்பிக்கை, பெண்ணடிமைத்தன்மை போன்ற நோய்களை விரட்டும் மாமருந்து கள் அல்லவா?
அதனால்தான் அவர் மக்கள் கவிஞர் என்று பாராட்டப்படுகிறார்!
அந்த மக்கள் கவிஞர் வரிசையில் இந்தத் தலைமுறைக் கவிஞர்களில் பவள விழா கொண்டாடிய கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களும் மிக முக்கியமானவர்.
அவர்தம் சமுதாய அக்கறை எப்படிப்பட்டது?
இதோ ஒரு அற்புதமான பேனா நர்த்தனம்!
கவிக்கோ கவிதைகள் என்ற நூல் ஓர் அருமையான கவிதைத் தொகுப்பு - அதில் 10.10.1987 இல் எழுதிய பாருக்குள்ளே நல்ல நாடு என்ற தலைப்பில், ஓர் கவிதை:
அவர்களைச் சிறையில் சந்தித்தேன்.
என்ன குற்றம் செய்தீர்கள்?
என்று கேட்டேன்.
ஒவ்வொருவராகச் சொன்னார்கள்:
எங்கள் வீட்டில் திருடிக்கொண்டு
ஒருவன் ஓடினான். திருடன், திருடன்
என்று கத்தினேன். அமைதிக்குப்
பங்கம் விளைவித்ததாக என்னைக்
கைது செய்துவிட்டார்கள்!
என் வருமானத்தைக் கேட்டார்கள்
நான் வேலையில்லாப் பட்டதாரி, என்றேன்.
வருமானத்தை மறைத்ததாக வழக்குப்
போட்டுவிட்டார்கள்.
நான் கரிமூட்டை தூக்கும் கூலி,
கூலியாகக் கிடைத்த ரூபாய் நோட்டு
கரி பட்டுக் கறுப்பாகிவிட்டது. கறுப்புப்
பணம் வைத்திருந்ததாகக் கைது செய்துவிட்டார்கள்.
என் வயலுக்கு வரப்பெடுத்துக் கொண்டிருந்தேன்
பிரிவினைவாதி என்று பிடித்துக்கொண்டு வந்து
விட்டார்கள்.
அதிகாரி லஞ்சம் வாங்கினான்; தடுத்தேன்.
அரசுப் பணியாளரை அவருடைய கடமையைச்
செய்யவிடாமல் தடுத்ததாகத் தண்டித்துவிட்டார்கள்.
அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படச்
சுவரொட்டியை ஒட்டிக்கொண்டிருந்தேன்.
சட்டமன்ற உறுப்பினர்களை அவதூறு
செய்ததாக அழைத்துக்கொண்டு வந்து
விட்டார்கள்
ஊழல் பேர்வழிகளை நாடு கடத்தவேண்டும்
என்று எழுதினேன், கடத்தல்காரன் என்று
கைது செய்துவிட்டார்கள்.
நான் பத்திரிகை ஆசிரியன். தலையங்கத்தில்
உண்மையை எழுதினேன், நாட்டின்
ஸ்திரத் தன்மையைக் குலைத்ததாகக்
கொண்டு வந்துவிட்டார்கள்.
சுதந்திர தின விழாவில் ஜன கண மன பாடிக்
கொண்டிருந்தார்கள். நான் பசியால் சுருண்டு
படுத்துக்கொண்டிருந்தேன். எழுந்து நிற்க
முடியவில்லை. தேசிய கீதத்தை அவமதித்ததாகச்
சிறையில் அடைத்துவிட்டார்கள்.
அக்கிரமத்தை எதிர்த்து ஆயுதம் ஏந்தச்
சொன்னான் கண்ணன் என்று யாரோ கதா
காலட்சேபத்தில் சொல்லியிருக்கிறார்கள்.
என் பெயர் கண்ணன். பயங்கரவாதி என்று
என்னைப் பிடித்துக் கொண்டு வந்துவிட்டார்கள்.
நான் வெளியே வந்தேன்
சட்டம் ஒழுங்குப் பிரச்சினை எதுவும்
இல்லாமல் நாடு அமைதியாக இருந்தது.
28 ஆண்டுகளுக்குப் பிறகும் நம் நாட்டில் இதே நிலைதானே இன்றும்?
இதை மாற்றி புதியதோர் சமூகம் படைக்க நம்முடைய பங்குதான் என்ன? சிந்திக்கவேண்டாமா?
பாருக்குள்ளே நல்ல நாடாம் இது? என்று இடித்துக் கூறிடும் எள்ளல்களுக்குள் ஒரு சமூகப்புரட்சிக்கான வித்து உறங்கிக் கொண்டிருப்பது தெரியவில்லையா?
-விடுதலை,28.10.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக