பக்கங்கள்

செவ்வாய், 21 ஜூலை, 2015

மருந்து வேண்டாம் - எப்போது?


இன்று இளைய சமுதாயத்தினரான நமது இளை ஞர்கள் பலரும் நன்கு படிக்கின்றனர்.
உலகைத் தங்களின் விரல் நுனியில் வைத் துள்ளதில் பெருமிதம் கொள்ளுகிறார்கள்!
சூரியனின் கீழ் உள்ள அத்துணை செய்திகளையும் தமது இணையத்தின் மூலம், கைத்தொலைபேசி என்ற தகவல் களஞ்சியத்தின் குதிர்களிலிருந்து எப்போது வேண்டுமானாலும் அள்ளி நொடிப்பொழுதில் தரு கின்ற ஆற்றல் உடைய திருவினராக உள்ளனர்!
வேலையில்லாத் திண்டாட்டம் ஒரு புறம் இருந் தாலும், மறுபுறம் வேலைக்குச் சென்றவர்கள் கைநிறைய சம்பாதித்து, ஆடம்பர வாழ்வும் வாழுகின்றனர்!
இவ்வளவு சிறப்புகள் ஒருபுறம் இருந்தாலும், இளைஞர்கள் தங்களது உடல் நலத்தில் மிகுந்த கவலையும், அக்கறையும் செலுத்தாமல் வயிறு முட்ட - கண்ட தீனிகளையும், விரைவு உணவுகள் என்ற பெயரால் வெளிநாட்டு உணவுக் கடைகளில் உள்ள வைகளையும், உள்நாட்டுப் பரோட்டா போன்றவை களையும், குளிர்பானங்களாகிய பல கேட்டினை அழைத்து உடலுக்குள் தங்க வைக்கும் சுவை நீர் களையும் அருந்தி, நோயுற்ற (நோயற்ற வாழ்வுக்கு விடை கொடுத்து)  வாழ்வினை வர வழைத்து, கொழுப்பினால் அவதியுறு கிறார்கள்!
பலர் வாய்க் கொழுப்பினால் கெட்டுப் போவ தைப்போலவே, உடற்கொழுப்புப் பெருக்கத்தால் இளம் வயதில் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற பலவித நோய்களால் தாக்குண்டு தனது வாழ்நாளைச் சுருக்கிக் கொள் ளும் கொடுமை நாளும் அதிகரித்தே வருகிறது!
வேதனைப்பட வேண்டிய செய்தி இது!
மருத்துவம் பார்க்கச் சென்றாலே கொள்ளைச் செலவு.
பக்க விளைவுகளையும் சேர்த்து ஏற்படுத்தும் பல மருந்துகளை வாங்கி உட்கொள்ளவேண்டிய கட்டா யத்திற்கு ஆளாக்கப்படும் கொடுமை மறுபுறம்!
சிற்சில நேரங்களில் மருந்துகளே கூட நோய்க் கொல்லியாக இராமல், ஆட்கொல்லியாக மாறிடும் வேதனையும் நிகழவே செய்கிறது!
இதற்கு மாற்று வழி என்னவென்பது இப்போது சமூக ஆர்வலர்கள், தொண்டறப் பணிபுரிவோர் ஆராய்ந்து பல கருத்துகளைக் கூறுகின்றனர்!
அத்தகையோர் ஆய்வதற்கு வள்ளுவர் தரும் மருந்து என்னவென்பதைப் படித்தால், திருக்குறளில் மருந்து என்ற அதிகாரத்தில் உள்ள அரிய, எளிய, எவரும் பின்பற்ற இலகுவான கருத்துகளை அறிந்து கொள்ள முடியும்.
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே நம் தமிழ் அறிஞர் பெருந்தகை இவ்வளவு தெளிவான சிந்தனையை உலகுக்கு அறவுரையாக - அறிவுரை யாக அளித்துள்ளார் என்பது எத்தகைய சிறப்பும், பெருமையும் தமிழ் உலகிற்குக் கிடைத்துள்ளது!
முதல் விதி:
1. மருந்தே உங்களுக்குத் தேவையில்லை - எப்போது?
நீங்கள் உண்ட உணவு, சரியானபடி செரிமானம் ஆயிற்றா என்று அறிந்து, பின் மறுபடி உணவை உட்கொள்ளும் பழக்கம் நமக்கு ஏற்பட்டால், நோய் வராது - மருந்து தேவைப்படாதே!
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு  அருந்தியது அற்றது போற்றி யுணின்    (குறள் 942)
தான் முன்னர் உண்ட உணவானது நன்கு செரித்துப் போய்விட்ட தன்மையைத் தெளிவாகத் தெரிந்து கொண்ட பிறகு, ஒருவன் தக்க அளவு உணவு உட்கொள்வானேயானால், அவனுடைய உடம்புக்கு மருந்து என்ற ஒன்று வேண்டியதில்லை.
அதுபோலவே, அடுத்து ஒரு குறள்:
அற்றா லளவறிந் துண்க வஃதுடம்பு
பெற்றா னெடிதுய்க்கு மாறு  (குறள் 943)
இதன் கருத்து
ஒருவன், தான் முன்பு உண்ட உணவு செரித்த பிறகு, செரிக்கக் கூடிய அளவினை ஒருவன் அறிந்து கொண்டு உண்ணவேண்டும். நல்ல உடம்பினைப் பெற்றுள்ள ஒருவன், நீண்ட காலம் அவ்வுடம்பினைக் காப்பாற்றி வாழக்கூடிய வழியும் அதுவேயாகும்.
எனவே, பசித்து உண்ணுங்கள் - ருசிக்காக உண்ணாதீர்கள். எனவே, நாகாக்க என்பது வெறும் பேச்சுக்கு மட்டும் தடையல்ல நண்பர்களே, உணவுக்கும், உடல்நலப் பாதுகாப்புக்கும் சேர்த்தே என்றும் புரிந்து கொள்ளுங்கள்.

- கி.வீரமணி - வாழ்வியல் சிந்தனைகள்

வாழ்வின் அனைத்துத் துறைகளிலும், எப்படிப் பட்ட துன்பமும் தொல்லையும் நோயும் மனிதர்களை வருத்தும் என்பதை அறிந்து, ஆராய்ந்து, அவற்றை நீக்கத் தேவையான அறிவுரைகளை அறவுரைகளாக வழங்கும் வள்ளுவரின் மருந்து, மருத்துவம் பற்றிய நுண்மாணுழைபுலம் மிகவும் வியக்கத்தக்கது அல்லவா?
மருத்துவ முறையையே நான்கு வகைப்படுத்தி வள்ளுவர் தனது குறளில் கூறும் கருத்துக்கள் அவர் எத்தகைய தலைசிறந்த பகுத்தறிவுக் கண்ணோட்ட முடையவர் என்பதை நன்கு விளக்கக் கூடியதாக இருக்கிறது என்பதற்கு இக்குறள் ஒரு அருமையான சான்று அல்லவா?
உற்றவன் தீர்ப்பான், மருந்துழைச் செல்வான் என்று
அப்பால் நாற்கூற்றே மருந்து               (குறள் (950)
இதன் பொருள்: 1.  நோயாளி, 2. நோய் தீர்க்கும் மருத்துவன், 3. மருந்து, 4. நோயாளிக்கு அருகில் இருந்து உதவி புரிபவன் என்று நான்கு வகைப் பாடுகளை உடையதே மருத்துவ முறையாகும்.
என்னே அருமையான ஆய்வு! மருத்துவத்தையே அறுத்து நான்கு கூறுகள் முக்கியம் என்கிறாரே!
இன்று நமது மருத்துவர்கள் கண்டறிந்துள்ள நோய்க்கு மூலமான ஒன்று ஒவ்வாமை (Allergy) என்பதாகும்.
வெளிப்புறத் தூசியினால், மருந்தினால், உணவி னால் இத்தகைய ஒவ்வாமை பலருக்கு ஏற்படுகிறது!
ஆனால், அதன் காரணம் இதுதான் என்று புரிந்து கொள்ளாமல், வேறு எந்தெந்த மருந்துகள் - மருத் துவப் பரிசோதனைகள் - மருத்துவ சிகிச்சைகளை நாம் மேற்கொண்டு அவதியுறுகிறோம் பற்பல நேரங்களில் (எனக்குக்கூட பல ஆண்டுகளுக்குமுன்பு இத்தகைய கசப்பான, வேதனையான அனுபவம் ஏற்பட்டு, இறுதியில்தான் மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங் களில் இடம் பெற்ற தலை சிறந்த தொண்டற டாக்டர் தம்பையா அவர்கள் கண்டுபிடித்து, எளிய மருத்துவத் தைக் கூறி என்னை உபாதையிலிருந்து விடுவித்தார்!)
திருவள்ளுவர் இந்த ஒவ்வாமை நோயை அறிந்து, புரிந்து, மிகவும் துல்லியமாக இரண்டு குறள்களில் கூறுவது நம்மை வியப்புக் கடலில் தள்ளுகிறது!
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து                     (குறள் 944)
இக்குறளின் பொருள் இதோ: ஒருவன், தான் முன்பு உண்ட உணவு செரித்து உள்ளதை அறிந்து கொண்டு, உடம்பிற்கு மாறுபாட் டினை உண்டாக்காத உணவைக் குறியாகக் கொண்டு, மிக நன்றாகப் பசித்த பிறகே உண்ண வேண்டும்.
உணவு உடம்பில் மாறுபாட்டினை உண்டாக்குவது தான். ஒவ்வாமை - அதனை அவாமையே நம்மைக் காப்பாற்றும் இல்லையா?
சில உணவுகள் சிலருக்கு ஒவ்வாதனவாக இருக்கக் கூடும். இதை அறியாமல் அதை உண்டு, உயிர்க்கு இறுதியாகி விடும் பேராபத்தும்கூட அதனால் ஏற்படுவது உண்டு.
காய்கறிகளை விரும்பிச் சாப்பிடும் ஒருவர், முருங்கைக் காயை உணவில் எடுத்துக் கொண்ட பிறகு மிகப் பெரும் போராட்டத்திற்குப் பிறகே மீண்ட நிகழ்வுகள் அறிவேன்.
அதுபோலவே, மீன், இறைச்சி, இறால் உணவு களை உண்ணுவோரில் சிலருக்கு இறால் வகை, அல்லது குறிப்பிட்ட இறைச்சி வகை உண்ட சில மணித்துளிகளுக்குப் பிறகு - உடம்பெல்லாம் தடித்து, முகம் வீங்கி - மூச்சு விடுவதற்கேகூட ஆபத்து என்று ஆகும் நிலையும் ஏற்படுவது உண்டு.
இதைத்தான் வள்ளுவர் - உடம்பிற்கு மாறுபாட் டினை உண்டாக்காத உணவைக் குறியாகக் கொண்டு - உண்ணுக - அதுவும் நன்கு பசி வந்த பிறகே உண்ணுக என்று அறிவுறுத்துகின்றார்!
இன்னும் தெளிவாக, அடுத்த குறளில் ஒவ்வாமை பற்றி விளக்குகிறார்!
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.             (குறள் 945)
கருத்து:
உடம்பிற்கு மாறுபாடு ஏற்படுத்தாமல், ஒத்துப் போகக் கூடிய உணவாக இருந்த போதிலும் அது அளவுக்கு மீறிப் போகாமல் தடுத்து நிறுத்தி, செரிக்கும் அளவிற்கு மட்டுமே ஒருவன் உண்டால், அவனுடைய உயிர் வாழ்க்கை நோய்களினால் துன்பம் ஏற்படுவது இல்லை.
எனவே, செரித்தபின் உண்ணுங்கள்.
நமது உடல் அமைப்பில் முக்கிய பணிகள் - செரிமானக் கருவிகளால் தத்தம் கடமையைத் தவறாது செய்து நம்மை வாழ வைக்க உதவுகையில், நாம் அவற்றின் பணிக்கு உதவிட வேண்டாமா?
அதுதான் அளவறிந்து உண்ணுதல்,
செரித்தபின் உண்ணுதல்
ஒவ்வாதனவற்றை நீக்கி உண்ணுதல்
இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம் என்ற ஆசை உங்களைத் தூண்டும்போது, அந்த ஆசைக்குப் பலியாகாமல் உடனே இலையை விட்டு எழுந்து விடுங்கள். அந்த கொஞ்ச நேரம் - வாழ்க்கையில் நீங்கள் பிறருடன் நீண்ட காலம் கொஞ்சி வாழ வகை செய்யுமே! புரிந்து செயல்படுக!

- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி
-விடுதலை,29,30.1.15

.

ஞாயிறு, 12 ஜூலை, 2015

சர்க்கரை நோய்பற்றிய சில புரட்டுகளும் உண்மைகளும்!

      

உலகத்தின் சர்க்கரை நோய்க்கான தலைநகரமாக இந்திய நாடு மாறி முதல் இடம் வகிக்கிறது என்று மருத்துவ உலகம் கூறுவது, நமக்குப் பெருமை அளிப்பதாகாது.
முன்பெல்லாம் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வரும் சர்க்கரை நோய் (Diabetes)
இப்போது இளம் வயதுள்ள இளைஞர்கள், வாலிபப் பருவத்தினருக்குகூட வந்து வதைக் கும் நிலை ஏற்பட்டுள்ளது மிகவும் வேதனைக்குரிய உண்மையாகும்!
இளைஞர்கள் வேக (துரித) உணவு (Fast Foods)   என்ற பெயரால் கண்டபடி கொழுப்பும், அளவுக்கு மீறிய மாவுச் சத்தும் இன்னும் சுவைக் காக எத்தனையோ கேடான ரசாயனக் கலவைகளும் கலந்த உணவுகளை அதிக விலை கொடுத்து வாங்கி கண்ட படி, கண்ட நேரத்தில் உண்ணுதல் அதன் காரணமாக ஊளைச் சதையைத் தூக்கிச் சுமப்பதோடு, காசு கொடுத்து சர்க்கரை வியாதியை இலை போட்டு அழைத்து வந்து உடலுக்குள் நுழைக்கிறார்கள்!
இப்போதுள்ள மருத்துவ முறைப் படி, இந்த நோய், ஒரு முறை நம் உடலுக்குள் படையெடுத்து ஆக்கிர மித்தால், அதனை வாழ்நாள் முழுவதும் விரட்டவே முடியாது; மாறாக, மருத்துவம், உடற்பயிற்சி, பின்னால் பின்பற்றபடும் உணவுக் கட்டுப்பாடுகள் மூலம் - ஓரளவு அல்லது பெரும் அளவுக்குக் கட்டுப்படுத்தலாமே தவிர, அறவே நோயின்றி நீங்கி விட முடியாது.
புற்றுநோய்கூட உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, தகுந்த சிகிச்சை மூலம் குணப்படுத்திட முடிகிறது; மீண்டும் அது வராமல் பார்த்துக் கொள்ள முடிகிறது.
ஆனால், இந்தக் கொடுமையான சர்க்கரை நோய் ஒரு முறை வந்து விட்டால் அது Type II 
மிமி  என்ற இரண்டாம் வகை  மருந்து உட்கொள்ளும் நிலை யில்கூட அறவே குணப்படுத்திவிட முடியாது.
காடு வரை பிள்ளை
கடைசிவரை யாரோ
என்ற கவிஞர் கண்ணதாசன் பாட்டில் கூட திருத்தம் செய்து,
கடைசி வரை சர்க்கரை நோய் என்று மாற்றித்தான் ஒப்பாரிப் பாட்டுப் பாட வேண்டும் போலும்!
இந்த நோய் ஒரு கொடுமையான சந்திப்பு  நோய்  (Junction Disease) என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்
இது கண் பார்வையைப் பறிக்கும்! அல்லது சிறுநீரகத்தைப் பழுதாக்கிப் பறிக்கும், ரத்தக் கொதிப்பை அதிகப் படுத்தி, பக்கவாதம் (stroke)  முதலிய வற்றையும் தரலாம்.
காங்கிரன் என்பதை நுழைத்து, கால், கை, விரல்களை வெட்டுமாறுச் செய்யும் என்ற கொடுமைகளோடு மாரடைப்பு  - இதய தாக்குதலுக்கும் (Heart Attack) மூல காரணமாக அமைதல் கூடும். எனவே மிகவும் கவனத்தோடும், பொறுப்போடும் சர்க்கரை நோய் வந்தவர்கள் அலட்சியப் படுத்தாமல் சிகிச்சைகளையும், கட்டுப்பாட் டினையும் காத்திடுதல் மிகவும் இன்றிய மையாததாகும்.
இதுபற்றி சில தவறான புரட்டுகளும்  (Myths) பரப்பப்படுகின்றன. அவை உண்மையல்ல என்பதையும் சர்க்கரை நோயாளிகளான நண்பர்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
புரட்டு எண்: 1
சர்க்கரை சாப்பிடுவதால்தான், சர்க் கரை நோய் வருகிறது.
உண்மை என்னவென்றால், பல்வேறு அம்சங்களின் கூட்டால்தான் இச்சர்க்கரை நோய் தாக்குதல் ஏற்படுகிறது. பிறவிக்கூறு (தாய் தந்தையர் பரம்பரை நோய் வழி).
டைப் 2 (Type 2) வகையிலும் சுற்றுச் சூழலான வாழ்க்கை முறையின் இணைப் பினாலும்தான் (Life Style) இது ஏற் படுகிறது.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் அறவே இனிப்பை நீக்க வேண்டிய தில்லை; அளவுடன் உண்டால் - கட்டுப் பாட்டுக்குள் வைத் தால் அது கேடு செய்வதில்லை. அந்த அளவு இனிப் புச் சாப்பிடும்போது மற்ற உணவை - அரிசி, சப்பாத்தி வகைகளைக் குறைத்து, ரத்தச் சர்க்கரை அளவுக்குள் இருக்கும்படிச் செய்தால் அது எதிர் மறை விளைவை ஏற்படுத்தாது!
புரட்டு எண்: 2
சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாக் லெட்களையோ, இனிப்புகளையோ சாப்பிடவே கூடாது.
உண்மை: அப்படிப்பட்ட பத்தியம் தேவை இல்லை; சாக்லெட்டோ, இனிப்போ சாப்பிடலாம் - அது அளவுடன் இருப்பது உடல் நலக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் வரம்புக்கு உட்பட்டும் இருக்க வேண்டும்; அறவே கூடாது என்று தடுத்தால், அதன்மீது ஆசை அதிகம் வரும் - மனோ தத்துவப்படி!
கட்டுப்பாட்டை தளர்த்தி விட்டால் ஆசை ஆவியாய் நீராவியாய் மறைந்து விடக் கூடும்.
புரட்டு எண்: 3
சர்க்கரை நோய் உள்ளவர்கள் தனியே ஒரு வகை அதற்கென பிரத்தியேகமான உணவையே சாப்பிட வேண்டும்.
உண்மை: அப்படி அல்ல; ஆரோக் கியமான உணவை - மற்றவர்களைப் போலவே சர்க்கரை நோய் உள்ளவர் களும் உண்ணலாம்; தனி  Special Mealsஎன்று ஏற்பாடு செய்தாக வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை. நார்ச்சத்து உண வுகள், குறைந்த நல்ல வகை கொழுப் புள்ள (Low Saturated food) மற்றும் நல்ல முழு தானிய வகை உணவுகளை (Whole Grain Foods) உண்ணலாம்.
புரட்டு எண்: 4
சர்க்கரை நோய் ஒரு தொத்து நோய் - பக்கத்தில் உள்ளவர்களையும் தொற்றக் கூடும்!
உண்மை: தவறான கருத்து. அது தொற்று நோய் அல்ல; அருகில் உள்ளவர்களுக்கோ, வீட்டாருக்கோ, நண்பர்களுக்கோ அது தொற்றி விடாது - ஒரு போதும். Genetic  என்பது குடும்ப பாரம்பரியம் காரணமாக தாய் தந்தை வழியில் சர்க்கரை நோய் வரக்கூடும்; அது வேறு; இரண்டையும் குழப்பிக் கொள்ளக்கூடாது.
புரட்டு எண்: 5
ஜனங்களில் சிலருக்கு சர்க்கரை நோயின் தொடுதல் போன்ற (Touch of Diabetes) நிலை உண்டு.
உண்மை: சர்க்கரை நோயில் மென்மையானது மெதுவானது (Mild Diabetes)
என்றெல்லாம் கிடையாது; எப்போதும் அது சீரியசான வியாதி தான்; இதைச் சரிவர   கண்காணித்து சிகிச்சையை உடனடியாக மேற் கொள்ளா விட்டால் ஆபத்துதான்.
நாம் மேலே சொன்ன பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகக் கூடும்!
எனவே சர்க்கரை நோய் பற்றிய மூடநம்பிக்கை புரட்டுகளிலிருந்தும் நாம் நம்மை விடுவித்து எச்சரிக்கை யுடன் நமது வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்வது மிகவும் விரும்பத்தக்கது!
சர்க்கரை நோய் வந்தவர்கள் இடிந்து, மனம் ஒடிந்து உட்கார்ந்து விடத் தேவையில்லை; அதிகமான கவலையால் நிலை குலைய வேண் டியதில்லை -
அதனைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்தால் எவ்வளவு காலத்திற்கும் வாழலாம், அலட்சியமும் காட்டாமல், சுவைக்கு அடிமையாகாமல் இருக்க வேண்டும்.
நா காக்க என்பது - தவறான சுடுசொல்லைச் சொல்லாமல் இருப்பது என்பது மட்டும் பொருளன்று; இந்த புது யுகத்திற்கேற்ற பொருள் - நா காக்க என்றால், சுவைக்காக கண் டதைச் சாப்பிட்டு சர்க்கரை நோய் கட்டுப்பாட்டை இழக்காதீர்கள் என்றும் பொருள் கொள்ள வேண்டும் போலிருக்கிறது! வருமுன்னர் காப்போம்

-விடுதலை,25.5.15

ஞாயிறு, 5 ஜூலை, 2015

மவுனம் அமைதி (Silence) யின் விழுமிய தேவையும் பயனும்!




புத்தம் என்ற அறிவு மார்க்கம்தான் முதன் முதலில் அறிவின் முக்கியம் பற்றியும், மூச்சுப் பயிற்சி பற்றியும் அமைதியான சிந்தனைமூலம் பலவற்றை ஆய்ந்து முடிவு செய்து, உண்மைகளை நாம் புலப்படுத்திக் கொள்ள முடியும் என்று கூறியது; அதனை உணர வைத்தவர் புத்தர் - சித்தார்த்தன் - புத்தர் ஆனது அதனால் தான். (இதற்கு எவ்வளவோ கட்டுக்கதைகள் பிறகு இணைக்கப் பட்டன)
திபேத்தியர்கள் பவுத்தத்தினை ஒரு வகையான மதமாக்கிப் பின்பற்றி வருகின்றவர்கள் என்றாலும், வாழும் முறையில் அவர்களைப் புரிந்து பல்வேறு வெளிநாட்டு அறிஞர்கள் பல அரிய நூல்களை எழுதியுள்ளார்கள்.
அதில் ஒரு அருமையான நூல் கிறிஸ்டோபர் ஹேன்சார்டு  Christopher Hansard
என்பவர் எழுதிய “The tibetan art of living”  என்பதாகும்.
அதைப் படித்தேன்.  உடல் நலம் - உள்ள நலம் - புத்திக் கூர்மையான வாழ்வியல் பற்றி அதில் பல செய்திகள் மிக எளிய நடையில் விளக்கியுள்ளார்.
Wise Body -   புத்திசாலித்தனமான உடல்
Wise Mind - புத்திசாலித்தனமான மனம்
Wise Life -  புத்திசாலித்தனமான வாழ்க்கை
என்ற தலைப்புகளில் பல செய்திகள்!
அதில் ஒன்று - மவுனம் - அமைதி - Silence என்பதன் அவசியம் நம் வாழ்வில் எவ்வளவு முக்கியமானது என்பதற்கான அரிய விளக்கம் நமக்கு மிகப் பெரிய பாடமாக அமைந்துள்ளது!
அமைதி (Silence) என்பது ஏதோ ஒரு ஒலியின் தொடர் விளைவு அல்ல. (Silence is a Process not of Sound) அதைப் புரிந்து கொள்ள நாம் முயற்சி எடுக்க வேண்டும் - பாடுபட்டுக் கற்றுக் கொள்ள வேண்டும்.
மனிதக் கூறுகளின் அறிவுத் திறனில் இது முக்கியமான அம்சமாகும்! நமது அறிந்து செயல்படும் முயற்சியைக் கூர்மைப்படுத் துவது அமைதி என்ற கருவி! புரிந்து கொள்வோம். அமைதியாய் இருந்து கேட்டுச் சிந்திப்பவர்கள் நொய் யரிசிகளாக கொதி பொறுக்காதவர்களும் பக்குவமடைந்த பகுத்தறிவாளர்களாக மாறுவர்!
நமது மனத்தில் படிந்த மாசு, மருக்களை அகற்றும் தூய்மைப்படுத்தும் துப்புரவுப் பணியை அமைதியாய் இருந்த பின் அவ்வமைதி அதைச் செய்கிறது!
எதிலும் குழப்பம் நீங்கி, தெளிவு பிறக்கிறது. நம்முடைய நட்பு என்பதை பெற்றுள்ளதா? அல்லது உள்ளம் இருக்கும் இடத்தில் பள்ளமும் கள்ளமும் இருக்கின் றனவா என்பதை அந்த அமைதி நமக்கு ஆசானாகி போதிக்கும் - பிறகு சாதிக்க வாய்ப்பை ஏற்படுத்தும்.
எவ்வளவுக்கெவ்வளவு நாம் இந்த அமைதியோடு நம் காலத்தைச் செல வழித்துப் பயணிக்கிறோமோ அவ்வளவும் பயன்தரும்; நமது அறிவுத் திறன், உடற் கூறுகளை மேலும் விரும்பத்தக்க மாற்றத் திற்கு வழிவகை செய்யும்.
நாம் வளருவதற்கு இத்தகைய அமைதியாக இருந்து அதை அனுபவித்துப் பயன் பெறக் கற்றுக் கொள்ளுவதற்கு இந்த அமைதி பற்றிய அறிவு நுணுக்கம் மிக மிக அவசியமாகும்.
எப்படி ஒரு புயலின் சீற்றத்தின் அளவும், பரிமாணமும் அதனுள் அடங்கியுள்ள அமைதியின் வாயிலாக வெளிப்படக்கூடும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்! எவ்வளவு சிறப்பாக மவுனத்தின் (அமைதியின்) தேவைபற்றி நாம் அறிந்து கொண்டு நடைமுறை வாழ்க்கையில் கடைப்பிடிக்கிறோமோ, அவ்வளவு சிறப்பாக நமக்குப் பொறுமையாக கேட்கும் பண்பும், பழக்கமும் பெருகும். அது நமது பேச் சையும், சிந்தனையையும் செம்மைப் படுத்தப் பெரிதும் உதவி செய்யும்!
வாழ்க்கையில் நாம் பல்வேறு செய்தி களை அனுபவித்து அறிவதைப்போல, அமைதிப் பழக்கத்தைக் கடைப்பிடித்து ஒழுகுதல் மிகவும் இன்றியமையாத தாகும்.
நீங்கள் அமைதியாக இருப்பதை விட அமைதி உங்களிடம் ஆட்சி செய்ய வேண்டும்.
அமைதியின் தேவையைப் புரிந்து கொண்டு அனுபவித்துச் சுவைக்கப் பழகிக்கொள்ளல் - பல்வேறு வகை களில் நமக்குப் பயன் தருவதாக அமையக் கூடும்.
எப்போது இடைவிடாத ஆரவாரத் திலேயே கழிந்து விடும் நமது வாழ்க் கைக்கு இந்த அமைதியின் பாடம் மிகவும் தேவையே! அன்றாட வாழ்க்கை அமைதி குலைந்த ஆரவார வாழ்க்கை யாகத் தானே நம்மால் பலருக்கும் அமைந்து விடுகிறது?
இந்த அமைதியைக் கடைப் பிடித் தல் மனதை ஒரு நிலையில், எதிர்மறைச் சிந்தனைகளிலிருந்து திருப்புவதற்குப் பெரிதும் வழிகாட்டும் நெறியாக - வாழ் வின் கலங்கரை விளக்கமாக அமையக் கூடும்!
மவுனம் மகத்தான சக்தி வாய்ந்த மொழியாகும். ஒவ்வொரு நாளும் எழுந்தவுடன் படுக்கையில் அமர்ந்த வண்ணம் 15 மணித்துளிகள், இரவில் படுக்கைக்குப் போகுமுன் 15 மணித்துளி இத்தகைய அமைதியைப் பழகுங்கள் - பயன் உணரக் கூடும்.

-விடுதலை,26.5.15

கிளாக்கோமா என்றால் என்ன?



வழக்கமான கண் பரிசோதனைக்காக கோவை சத்தியன் கண் மருத்துவ மனைக்கு நான் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுக்கு ஒரு முறை செல்வதுண்டு. அதனை மிக அருமையாக, நோயாளிகளின் நலப் பாதுகாப்பையே தொண்டாக நடத்திடும் டாக்டர் சத்தியன் அவர்களிடம் பரி சோதித்துக்கொண்டு வருவது வாடிக்கை.
அம்மருத்துவமனை நடத்தும் பிரபல கண் டாக்டர் சத்தியன் அவர்களை, நம்முடைய பெரியார் மருத்துவ மிஷ னின் இயக்குநர், டாக்டர் இரா.கவுதமன் அவர்கள்தான் எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தவர்.
வசதி படைத்த கோவை பெருங் குடும்பங்களில் ஒன்றிலிருந்து படித்து, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை போன்ற பலவற்றிலும் பழுத்த அனுபவம் பெற்ற, (நடுத்தர வயதுக்காரர்) டாக்டர் சத்தியன் அவர்களும், அவரது வாழ் விணையரும் (அவரும் இத்துறை வல் லுநர்) மருத்துவ சேவையை இவருடன் இணைந்து நடத்தி வருபவர்.
இனிய பண்பாளர்கள் இருவரும்! அவரது நிர்வாகத்தில் இயங்கும் அக் கண் மருத்துவமனையில் பணிபுரியும் உதவியாளர்கள், மற்ற மருத்துவர்கள் - செவிலியர்களான சகோதரிகள் அனை வருமே சிகிச்சையை நாடி வருவோரி டம் பரிவுடன் கேட்டு, எவ்வித ஆர வாரமும் இன்றி தத்தம் கடமையைச் செய்யும் பக்குவத்தால் கனிந்துள்ளனர்.
நோயாளிகள் பரிசோதனைக்காக காத்திருக்கையில், புத்தகக் குவியல் ஒன்று அருகில் இருக்கும் - பலதரப்பட்ட கருத்துகளைக் கொண்ட நூல்கள் அவை. காலம் நகருவது - காத்திருக் கிறோம் என்ற அயர்வினைப் போக் கிடும் - அவை இளைப்பாறிட அரிய உறுதுணை!
நல்ல சிந்திக்கக்கூடிய மருத்துவ அறிவுரைகள், ஆக்கபூர்வ வாழ்வியல் சிந்தனை கருத்துரைகள் ஆங்காங்கு அலங்கரிக்கின்றன!
நான் இம்மாதிரி செய்திகள் எங்கே கிடைத்தாலும், தேனை பறந்து, பறந்து மலர்களில் இருந்து சேகரிக்கும் தேனீ போலச் சென்று குறிப்புகளை எழுதி வைத்து பலருக்கும் பரப்பிடுவதில் சுவை காண்பவன்.
டாக்டர் என்னை பரிசோதனை செய்யும் இடத்தில் கிளாக்கோமோ (ரீறீணீநீஷீனீணீ) கண்நோய் பற்றிய குறிப்பு களைத் தொங்க விட்டிருந்தார். படித் தேன், எழுதத் தொடங்கினேன்.
அதை விரிவாக தமிழில் விளக்கி, கேள்வி - பதில் ரூபத்தில் ஒரு சிறிய தகவல் வெளியீட்டினைத் தந்தால், அதுபற்றி எழுதினால் பலருக்கும் - குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்குமே என்ப தால், அதை அப்படியே தருகிறோம்:
கெட்ட வாய்ப்பாக, பெரும்பாலான நோயாளிகள் கிளாக்கோமாவை தாம தமாகவே உணர்கிறார்கள், அந்நேரம் கிளாக்காமோ ஆனது 40%க்கு மேல் உருவாகியிருக்கும். அதைத் தவிர்ப்ப தற்கு, உரிய நேரத்தில் நோயைக் கண் டறிவதும் உடனடியாக சிகிச்சையைத் துவங்குவதும் கிளாக்கோமா மேலும் அதிகரிப்பதைத் தவிர்ப்பதற்கு அவசிய மாகும். உங்களுக்கு கீழ்கண்ட கண் சொட்டு மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டு உள்ளன. அவற்றை அறிவுறுத்தியது போல தவறாமல் ஒவ்வொரு நாளும் கண்ணில் போட்டுக்கொள்ள வேண்டும்.
நோயாளி: டாக்டர், இந்த நோயின் தீவிரத் தன்மையை நான் புரிந்து கொண்டேன். இருப்பினும் இதன் அறி குறிகளை நான் அனுபவிக்கவில்லை மற்றும் எனது பார்வையில் எந்த பிரச்சினையும் இல்லை. அப்படியானால் கிளாக்கோமா போன்ற ஒரு தீவிரமான நிலையால் நான் பாதிக்கப்பட்டிருக் கிறேன் என்று ஏன் நீங்கள் கூறு கிறீர்கள்?
கண் சிறப்பு நிபுணர்: சுவையான கேள்வி: உண்மையில் கிளாக்கோமா என்பது பார்வைத் திறனை அழிக்கும் ஒரு சப்தமில்லாது தாக்கும் கொலை யாளி ஆகும். ஆரம்பத்தில் பெரும் பாலான நோயாளிகள் பிரச்சினைகள், எதையும் உணர்வதில்லை. எனவே தான் அந்த நோயாளிகள் அந்த நிலையை சீரியஸ் ஆக எடுத்துக் கொள்வதில்லை. கிளாக்கோமா ஆனது நோயாளியை முற்றிலும் குருடாகும் நிலைக்கு நோயாளியைப் படிப்படி யாகத் தள்ளுகிறது. கரையான் போன்று பார்வையைப் படிப்படியாக அரித்து விடுகிறது. எனவேதான் நமது அனைத்து முயற்சிகளும், இருக்கும் பார்வையைத் தக்க வைத்துக் கொள்வதை நோக்க மாகக் கொண்டுள்ளது. ஏனென்றால் ஏற்கனவே நீங்கள் இழந்த பார்வையை மீண்டும் பெறுவதற்கு ஒன்றும் செய்ய இயலாது. விசுவல் ஃபீல்ட்டெஸ்ட் மற்றும் கோனியோஸ்கோப்பி போன்ற நவீன கருவிகளால் இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து விட லாம். பரிந்துரைக்கப்பட்ட கண் சொட்டு மருந்துகள் மற்றும் பிற மருந்துகளை ஒழுங்காக எடுப்பது, நோயாளி குரு டாவதில் இருந்து தடுக்கிறது. கிளாக் கோமா பற்றியும் அதற்கான மருந்து பற்றியும் அறிந்திராத அல்லது அலட்சி யப்படுத்தும் நோயாளிகளே, குருடா வதற்கு வாய்ப்புள்ளது.
நோயாளி: டாக்டர் இந்த மருந்து களை ஒழுங்காக நான் எடுத்துக் கொண்டிருக்கும் பொழுதும் கூட எனது பார்வையில் மேம்பாட்டினை என்னால் கவனிக்க முடியவில்லையே.
கண் சிறப்பு நிபுணர்: ஆமாம், நன் றாகக் கவனித்துள்ளீர்கள், கெட்ட வாய்ப் பாக கிளாக்கோமா உள்ள நோயா ளியாக நீங்கள் அறியப்பட்டுள்ளீர்கள். முற்றிலும் பார்வையிழப்பு என்ற நிலையை நோக்கி நீங்கள் சென்று கொண்டிருக்கின்றீர்கள். மேலும் இந்த மருந்தானது அதைத் தடுத்திடும். நிலையை மேலும் மோசமடையச் செய்யாது. பரிந்துரைக்கப்பட்ட மருந்து களை நீங்கள் உபயோகிக்காவிட்டால் நீங்கள் தொடர்ந்து பார்வையை இழப்பீர்கள்.
நோயாளி: டாக்டர் மருந்தை எடுக்க நான் மறந்து விட்டால் என்ன நேரும்?
கண் சிறப்பு நிபுணர்: நான் பரிந் துரைத்த மருந்தை தினந்தோறும் மறக்காமல் அல்லது தவறாமல் எடுப்பது மிக முக்கியம் ஆகும். பரிந்துரைத்த மருந்து டோஸினை எடுக்கத் தவறுவது கண்ணைக் சேதமடையச் செய்யும்.
நோயாளி: சிறிது காலம் கழித்து இந்த மருந்து எனது கிளாக்கோமாவை குணப்படுத்துமா?
கண் சிறப்பு நிபுணர்: ஏற்கனெவே நான் சொன்னதைத் திரும்பச் சொல் கிறேன். நீரிழிவு நோய் அல்லது உயர் ரத்த அழுத்தம் போன்று கிளாக் கோமாவையும் குணப்படுத்த இயலாது. ஒழுங்காக மருந்தை எடுத்துக்கொள்வது அதைக் கட்டுப்பாட்டில் வைக்க மட் டுமே செய்யும். மருந்தை எடுப்பதற்கான நோக்கம் என்ன என்றால், ஏற்கெனவே இருக்கும் காணும் திறனை / பார்வைத் திறனை தக்க வைத்துக்கொள்வதும் அது மேலும் மோசமடையாமல் வைத்திருப் பதும் ஆகும்.
நோயாளி: டாக்டர் இந்த மருந்து களின் விலை பற்றி கூறுங்கள் அவை விலை உயர்வானவையா?
கண் சிறப்பு நிபுணர்: நல்ல கேள்வி கிளாக்கோமோ சிகிச்சைக்கான மருந்து கள் மலிவானவையும் உள்ளன.
விலை மதிப்பு மிக்கவையும் உள்ளன. பழைய மருந்துகள் மலிவானதாக இருக்கலாம். ஆனால், அவற்றில் ஒரு சில தீவிரமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். உங்கள் நுரையீரல்கள் மற்றும் இதயம் பாதிக்கப்படக்கூடும். புதிய மருந்துகள் விலை உயர்ந்ததாக இருந்தாலும் அவை உங்களது நுரை யீரல்கள் மற்றும் இதயத்தைப் பாதிப்ப தில்லை. உங்கள் கண்களை மட்டும் கவனத்தில் எடுத்துக்கொண்டு மருந்து களை நான் பரிந்துரைக்கவில்லை. உங்களது ஒட்டுமொத்த உடல் நிலை யைக் கணக்கில் எடுத்துக்கொள்கிறேன். கிளாக்கோமோவுக்கான பழைய மருந்து களை எடுத்துக்கொண்டு அதனால் நேரும் சிக்கல்களுக்காக பெரும் அளவில் பணம் செலவழிப்பதை நான் விரும்பவில்லை.
நோயாளி: ஒரு வேளை சிறிது காலம் கழித்து இந்த மருந்தை நான் நிறுத்தி விட்டால் என்ன நேரும்?
கண் சிறப்பு நிபுணர்: நீங்கள் விவேகமுள்ளவர் என நான் நம்பு கிறேன். இந்த கேள்விக்குப் பதிலளிப் பதற்கு ஒரு பரிசோதனை செய்து பார்ப்போம். 15 நிமிடங்களுக்கு உங்கள் கண்களை மூடிக் கொள்ளுங்கள். உங் களைச் சுற்றியுள்ள இருளானது உங் களை அச்சமூட்டி 5 நிமிடங்களுக்குள் ளேயே, மூடிய உங்களது கண்களைத் திறக்க வைத்திடும். இந்த காரிருள் உங்கள் வாழ்க்கையில் நிரந்தரமாகச் சூழ்ந்திடும் வகையில் ஒரு பொழுதும் செயல்படாதீர்கள். நீங்கள் யார் தயவும் இல்லாமல் சுயமாக நடமாடும் வகையில் உங்களது கண்களுக்கு அதிக முக்கியத் துவம் தாருங்கள்.
நோயாளி: மருந்து போடும் பொழுது ஒன்றைக்கவனித்ன். கண் சொட்டு மருந்துகளைப் போட்டதும் என் கண்கள் சிவப்பாகி விடுகின்றன. ஏதேனும் பிரச்சினையா? என் கண்களுக்கு என்ன நேர்ந்திருக்கிறது?
கண் சிறப்பு நிபுணர்: நல்ல கேள்வி, சில நவீன மருந்துகள் ஆரம்பத்தில் கண்களைச் சிவப்பாகச் செய்கின்றன. அது பற்றி மிகையாகக் கவலைப்பட வேண்டாம். அந்த சிவப்பு நிறம் பின்னர் மறைந்து விடும். இப்படி சிவந்து போவது தீங்கானது அல்ல.
*****
கடுமையான சர்க்கரை நோய் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். அதில் ஒன்று இந்த கிளாக்கோமா. எனவே,  சர்க்கரை நோயாளிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் கடைப்பிடித்தால் கவலையில்லை. நன்கு வாழலாம்.

-விடுதலை,17.6.15

அஞ்சுவதற்கல்ல முதுமை; அனுபவப் பகிர்வுக்கே!

      


அமெரிக்க குடிஅரசுத் தலைவர் களில், மிகுந்த பண்பாளர்களில் ஒருவ ராகத் திகழ்ந்த மிக நல்ல ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் அவர்கள்!
அப்போதே இந்திய நாட்டை மிகவும் நேசித்து, நல்லறிவுடன் இருந்த குடிஅரசுத் தலைவர். இவர் விவசாயி களின் பிரதிநிதியாவார். இவருக்கு மற்றொரு செல்லப் பெயரே - பதவி வகித்தபோது ‘Peanut President’ - வேர்க்கடலை ஜனாதிபதி என்பதாகும்!
சில ஆண்டுகளுக்குமுன் அமெ ரிக்கா சென்றிருந்தபோது நான் வாங்கிப் படித்துச் சுவைத்த அவரது அறிவுச் செல்வ நூல் ஒன்று, ‘‘The Virtues of Aging’’(வயதாவது - முதுமை என்ற பெரும் நன்மைகளுக்கான வாய்ப்பு) என்ற நூல்.
மறுமுறை இப்போது படித்தேன் - சுவைத்தேன்!
இவர் 56 வயதிலேயே பதவி வாழ்க் கையிலிருந்து ஓய்வு பெற்று, மக்களி டையே தொண்டறத்தை மேற்கொண்ட வர்.
அமெரிக்காவில்  65 வயது அல்லது அதற்கு மேலும் என்ற வயது முதுகுடி மக்கள் என்ற தகுதி முத்திரையைப் பொறிக்கக்கூடியதாகும்.
எந்த வயதை அடைந்தால் நாம் முதியவர் (வயதானவர்) என்ற நிலையை அடைகின்றோம்? என்ற கேள்விக்கு அவர் அந்த பொத்தகத்தில் சிறப்பாக விடையளிக்கிறார்:
அது வெறும் வயதின் கூட்டலினால் வருவதல்ல; ஒவ்வொரு நபருக்கும், இடம் பொறுத்து மாறுகிறது. உதாரணத் திற்கு அமெரிக்காவில் இது சராசரியாக 73 வயதாகிற நிலையில், முதியவர் என்ற பட்டத்திற்குத் தயாராகிறார்கள்.
ஒருவர் எப்போது வயதானவராக முதுமை அடைந்தவராக - கருதப்படு கிறார்? என்ற கேள்விக்கு அருமை யான இலக்கணம் கூறுகிறார்! நம்மில் அவர் எப்படி சிந்திக்கிறாரோ அதைப் பொறுத்தே அதற்கு விடை கிடைக் கிறது! நகர முடியாத குந்தியே இருக்கும் நிலை, மற்றவர்களின் உதவியைப் பெரிதும் நாடியே வாழும் சூழ்நிலை, குறிப்பிடத்தக்க அளவு நம்முடைய உடல், உள்ள இயக்கத்தின் அளவு குறைந்துவிட்டது என்ற உணரும் நிலை, நாம் சந்தித்து உரையாடிடும் நண்பர் களின் எண்ணிக்கை குறையும்போது - அந்தப் பருவம் - நிலை நம்மைத் தொடுகிறது என்று கருதலாம்.
எத்தனை ஆண்டுகள் வாழுகிறோம் என்பது வயதுடன் இணைந்த ஒன்றல்ல. வயதுக்கும், இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதே நடைமுறை உண்மை யாகும்.
நம்முடைய ஆயுள் குறைவதோ, நீளுவதோ, நம் இளமைக்கால நடவடிக் கைகளின்போது ஏற்படும் உடல்நலப் பாதுகாப்பைப் பொறுத்த ஒன்றேயாகும்.
அமெரிக்காவின் 6 குடிஅரசுத் தலை வர்கள் (வாஷிங்டனில் தொடங்கி ஜான்குன்சி ஆடம்ஸ்வரை) சராசரி வயது 76 ஆண்டுகள் ஆகும்.
கடைசி 6  குடிஅரசுத் தலைவர்கள் (பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் முதல் ரிச்சர்ட் நிக்சன்வரை) வாழ்ந்த சராசரி வயது 70 ஆண்டுகளே; கென்னடியைத் தவிர்த்து விட்டுக் கணக்கிட்டால், மற்ற வர்கள் சராசரி வயது 74.8 ஆண்டுகளே என்று விவரிக்கிறார்!
ஜிம்மி கார்ட்டர் அவர்கள் பதவியை விட்டு விலகி ஓய்வுக்குத் தயாராகும் போது, அவர்பற்றி பல அரிய தகவல் களைத் திரட்டி எழுதிய பார்பாரா வால்டர் என்ற எழுத்தாளர், இவரைப் பேட்டி கண்டு ஓர் அருமையான கேள் வியைக் கேட்டார்!
மிஸ்டர் பிரசிடெண்ட், நீங்கள் எவ்வளவு பரபரப்பான, சவால் விடுத்த பணிகளையெல்லாம் எதிர்கொண்டு பணியாற்றியுள்ளீர்கள். எது உங்களுக்கு மிகவும் சிறப்பான ஆண்டுகள், விளக்குவீர்களா? என்று கேட்டார்.
சிறிது நேர யோசனைக்குப்பின், ஜிம்மி கார்ட்டர் கூறினார்:
(இது) இப்போதுதான் சிறப்பான ஆண்டு எனக்கு.
அந்த கேள்வியாளருக்கு வியப்பு. காரணம் கூற முடியுமா? என்று கேட்கிறார்.
சிறிதுநேரம் மீண்டும் யோசிக்கிறார் ஜிம்மி கார்ட்டர்; பிறகு பதிலளிக்கிறார்:

எனக்குப் பல்வேறு விஷயங்களைப் பற்றி நிதானமாக, முன்பு எதிரொலித்த சிந்தனைகளையும், எனது குடும்பத்த வருடன் மேலும் அதிகநேரம் செலவிட வும், எனது முந்தைய தவறுகளை நான் திருத்திக் கொண்டு வாழும் வாழ்க்கையை நடத்த அரிய வாய்ப்பு - இந்த நிலையில்தான் என்று கூறுகிறார்.
எவ்வளவு நேர்த்தியான பதில் - அறிவார்ந்த விளக்கம்!
முதுமையில் நம்மை மகிழ்ச்சியுடன் வைத்திருப்பது நாம் சேர்த்த செல்வம் அல்ல; அனுபவித்த பதவியல்ல; முன்பு சுவைத்த ஆடம்பரங்கள் அல்ல.
நல்ல ஆதரவுள்ள அன்பு பொழியும் - வழியும் - நல்ல குடும்பத்தவர். நண்பர் கள் வட்டம்.
புதுப்புது திட்டங்கள் - தொண்டறப் பணிகள் நம்மை என்றும் சீர் இளமை யாகவே வைத்திருக்கும். முதுமை என் பது பயந்து ஓடவேண்டிய ஒன்றல்ல; மகிழ்ந்து ஏற்றுக்கொண்டு, வாழ்க்கை யில் முன்பு கிடைக்காததற்கு வருத்தப் படாமல், கிடைத்தவைகளை மகிழ்ச்சியாக ஏற்று, அனுபவித்துள்ள மகிழ்ச்சியை அசை போட்டு வாழுவதே முதுமையின் நற்பயன்கள்!
இளமையில் கிட்டாத வாய்ப்பு - முதுமை என்ற அனுபவக் களஞ்சியத் தின் தொகுப்பு என்பதாகும். அதைப் பகிர்ந்தளித்து நாளும் மகிழ்வுடன் வாழுவோம்.
எதுவும் நம் மனதின் எண்ண ஓட்டத்தைப் பொறுத்ததே!
நன்றும் தீதும் பிறர் தர வாரா! - இல்லையா?

-விடுதலை,18.6.15