பக்கங்கள்

திங்கள், 30 நவம்பர், 2015

முதுமையாளர்களின் முழு கவனத்திற்கும் செயற்பாட்டுக்கும்!


நமக்கு வயதாகிறது என்று கவலைப் படும் முதுமையாளர்களான நண்பர்களே!
ஏதோ இனி நம் உடல் நிலை என்ன வாகுமோ, நமக்கு யார் பாதுகாப்புத் தரப் போகிறார்களோ என்று எண்ணி முதுமையைத் துன்பத்தின் துவக்கம் என்பதுபோல கற்பனைக் குதிரைமீதேறி சவாரி செய்யும் அருமைப் பெரியோர்களே.
வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவங்களை நீங்கள் புரிந்து கொண்டால், நீங்கள் வருத்தப்படாத வாலிபராகவே என்றென்றும் வாழ்ந்து காட்ட முடியும்!
கடைப்பிடிக்க வேண்டிய பத்து கட்டளைகள் அல்ல   - நெறிகள் இதோ:
கருத்தூன்றிப் படித்து, களிப்புடன் வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.
1. முதலாவது நெறி: எனக்கு வயதாகி விட்டது என்று ஒரு போதும் அலுப்பு, சலிப்புடன் கூறாதீர்கள். அப்படிப்பட்ட எண்ணத்தை, உங்கள் மனதிலிருந்து விரட்டியடியுங்கள்!
காரணம் மூவகை வயது ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. மறவாதீர்! முதலாவது ஆண்டுக் கணக்கில் வயது
(Chronological Age)
இரண்டாவது பிறப்பு, உறுப்பு  அடிப்படையில் வயது
(Biological Age)
மூன்றாவது  மனதில் நாம் எண்ணும் வயது - மனோ தத்துவ வயது(Psychological Age)
முதலாவது:  நமது கட்டுப்பாட்டிற்குள் வராது கொண்டு வர முடியாது என்பது உண்மை.
இரண்டாவது: நமது உடல் நலத்தைப் பொறுத்தது நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம் என்பதன் அடிப்படையில் அமைந்த வயது. நாம் எப்படி வாழ்க்கையை அமைத்து நலம் காக்கிறோமே அதைப் பொறுத்தது.
மூன்றாவது: (உணவு முறை உட்பட) முதலாம் நெறி (பாட வழி) எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பது, ஆக்கபூர்வ சிந்தனை ஓட்டம், (Positive Attitude) எதிர்மறை சிந்தனைக்கு இடம் தராது, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசிடும் மனமில்லாத உயரிய - இரட்டை அல்லாத திறந்த ஒற்றை மன - மகிழ்ச்சி தரும் வாழ்வு - நமது இளமைக்குப் பால் வார்க்கும்! சீரிளமைத் திறன் அதன் மூலம் வாய்க்கும்!
2. இரண்டாவது நெறி:
உடல் நலத்தைவிட சிறந்த செல்வம் - உண்மைச் செல்வம் வேறு ஏதுமில்லை. எனவே உடல் நலப் பாதுகாப்பை அலட்சியம் செய்யாமல், அன்றாடம்  உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, மீதூண் தவிர்த்தல் இவைகளுக்கு முன்னுரிமை.
மருந்துகள் எடுத்தலை தவிர்க்காத ஒழுங்குமுறை அவசியமாகும்.
நல்ல மருத்துவக் காப்பீடு திட்டம் பயன் தரும் - (ஆனால் இதை நன்கு ஆராய்ந்து  தேர்வு செய்தல் அவசியம் - குடும்ப உறுப்பினர்களுக்கும் செய்தால், நோய் வந்தபோது சிகிச்சைச் செலவு என்ற பாரம் - சுமை குறையக் கூடும்).
3 மூன்றாவது நெறி: பணம் அவசியம்(Money) நமது தேவைகள், செலவுகளுக்கு நியாய வழிகளில் - ஈட்டும் பொருள் - சம்பாதித்த பணம் மிகவும் முக்கியம்.
பணத்தைச் சம்பாதிப்பதைவிட சேமிப்பது மிக மிக முக்கியம்.
எளிமை, சிக்கனம், ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்தல், தேவைக்கு மட்டுமே செலவழித்தல், டம்பாச்சாரத்தை அறவே கை விடுதல் எல்லாம் பணம் சேர உதவிடும்.
ஆகாறு அளவிட்டிதாயினும் கேடில்லை
போகாறு அகலாக்கடை      (குறள்-478)
வரும் வருமானம் அதிகமாக இல்லையே என்று கவலைப்படாதீர்கள். அதைப் பெருக்க திருவள்ளுவரும் தந்தை பெரியாரும் அருமையான வழி முறை கூறியுள்ளனர்!
செலவைச் சுருக்குதலே, வருவாய் பெருக்குதலுக்கு வாய்ப்பேற்படுத்தித் தரும் என்பது உண்மை.
பணம் சம்பாதிப்பதில் கவனம் செலுத்தும் எவரும் பணப் பேராசைக்கு அடிமையாகி விடக் கூடாது. அது உங்கள் எஜமானன் ஆனால் ஆபத்து; அதை உங்கள் பணியாளராகவே வைத்து வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.
(மற்றவை நாளை)
- கி.விரமணி
-விடுதலை,30.11.15

முதுமையாளர்களின் முழு கவனத்திற்கும், செயற்பாட்டுக்கும்! (2)

முதுமையை விரட்டி, என்றும் சீரிளமைத் திறத்தோடு உள்ளோம் என்று முதுகுடிமக்கள் வரை - மனப்பாங்கைப் பெற பின்பற்ற வேண்டிய பத்து நெறிகளில் மூன்று நெறிகளை முன்னர் விளக்கினோம். அதன் தொடர்ச்சியே இவை:
4. நான்காம் நெறி: இளைப்பாறுதலும் (Relaxation)
பொழுது போக்கில் திளைத்தலும்
(Recreation)
நமது மனப்பாங்கு வளமை,இளமை பெற மிகவும் இளைப்பாறுதல் தேவை -கோடையிலே இளைப்பாறுதல் என்ற வடலூர் வள்ளல் பெருமானின் பாட்டு உங்களுக்கு நினைவுக்கு வருமே!
ஆங்கிலச் சொல்  Relexation என்பதற்கு வடலூரார் தந்த வளம் மிக்க செம்மொழியாம் எம் மொழியான தமிழ் மொழியில் உள்ள சொல் இளைப்பாறுதல் - களைப்பைப் போக்கும் செலவில்லா மாமருந்து!
வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்! - இல்லையா?
கலைவாணர் என்.எஸ். கிருஷ் ணனின் பொருள் பொதிந்த நகைச்சுவை துணுக்குகளை ஒலி நாடா மூலமாகவோ, அல்லது ஞிக்ஷிஞி என்ற ஒளி வட்டத் தகடுகள் மூலமோ வீட்டில் கேட்டு மகிழலாமே!
அதுபோல தற்போதுள்ள காமெடி சேனல் என்ற நகைச்சுவைத் துணுக்குப் பகுதிகளைப் பார்த்து வாய் விட்டுச் சிரியுங்கள் - பல ஆழ்ந்த பொருள் உள்ள நகைச்சுவை அல்லவென்றாலும்கூட!
நல்ல இசையைக் கேட்டு ரசியுங்கள் - உங்களை மறந்து அதில் லயித்து, புத்துணர்வைப் பெற அதன் உதவியை நாடுங்கள்; நாதஸ்வரம், வயலின், வீணை (பழைய யாழ் இல்லையே இப்போது) இவைகளால் ஒரு மீட்டுருவாக்கத்தை உங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ள முயலுங்கள்.
துன்பம் நேர்கையில், யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா கண்ணே?
என்று அன்பு மகளைப் பார்த்து புரட்சிக் கவிஞர் கேட்டதன் உள்ளார்ந்த கருத்து இதுதானே!
பொழுதுபோக்கு (recreation) என்பவை புத்தகப் படிப்பாகவோ, விளையாட்டுகளாகவோ, பிடித்த நண்பர் களுடன் கலகலப்பாக உரையாடுதல் நல்ல ஓவியங்கள், சிற்பங்களைக்கூட கலை நயக்கண் கொண்டு பார்த்து அதில் உள்ளத்தைப் பறி கொடுத்தோ எப்படியேனும் இருக்கலாம் அதன் மூலம் புத்தாக்கத்தைப் பெருக்கலாம்!
என்றாலும் இந்தப் பொழுது போக்கு அம்சம் குறித்த ஒரு எச்சரிக்கையும் தேவை!
இது உணவில் உப்பைச் சேர்ப்பது போல இருக்க வேண்டுமே தவிர, உப்பே உணவாகும் கீழ் நிலைக்குச் சென்று விடக் கூடாது. திரைப்படம், தொலைக்காட்சி பார்ப்பதை பொழுது போக்கு எனக் கூறும் நண்பர்கள் முதுமையாளர்கள் இதை மனதில் ஆழமாகப் பதிவு செய்து கொள்ளல் நல்லது.
5. காலத்தை மிகவும் மதித்து, திட்டமிட்டு வாழ்தல் என்பது அய்ந்தாம் நெறி.
காலத்தை உங்கள் கட்டுப்பாட்டில் ஒரு குதிரையின் லகானைப் பிடித் துச் சவாரி செய்பவரைப்போல கட்டுப்பாட்டில் வைத்து வாழ்தல் அவசியமாகும்.
ஒவ்வொரு நாளும் நாம் புதிதாய் பிறக்கிறோம். நேற்று என்பது கொடுக்கப்பட்ட (கிழிக்கப்பட்ட செக்) பணவோலைத் தாள்(paid Cheque) போன்றது.
நாளை என்பது பிராமி சரி நோட் - புரோநோட் போன்றது!
இன்று என்பது கையில் உள்ள ரொக்கம்   (Ready cash)
மறவாதீர்!
இதை லாபகரமாகச் செலவழிக்க வேண்டாமா? அதைவிட முக்கியம், ஒவ்வொரு விநாடியும் திரும்பி வராதவை என்பதால் திட்டமிட்டு உங்களை மிகவும் சுறுசுறுப்பாக்கி உழைப்பது, நடப்பது, படிப்பது, எழுதுவது முதலிய பலவற்றையும் அட்டவணைப்படுத்தி வாழ்ந்தால் சாதிக்கும் செயல்கள் எண்ணற்றவை.
முடியாதோ என்பவைகளும், விடியாதோ என்ற கவலைகளும், பறந்தோடும் - துணிவுடன் மேற்கொண்டால்
இவ்வளவு எளிதா? நான் ஏன் இதை பெரிய மலை என்று தவறாக எண்ணினேன் என்று பிறகு எளிதில் நீங்களே உணர்வீர்கள்!
(நாளை மற்றவை)
- கி.வீரமணி
-விடுதலை,1.12.15

ஞாயிறு, 15 நவம்பர், 2015

மன நலம் - மன வளம் - முக்கியம்!

இன்று உலக மன நல நாள். (அக்டோபர் 10) நமது உடல் நலம் எவ்வளவு முக்கியமோ அதைவிட மிக மிக முக்கியம் உள்ள நலம் - உள்ள வளம்.
நம் உடல் நலம்கூட உள்ள நலத்தைப் பொறுத்தே அமைகிறது.
எடுத்துக்காட்டாக, நம் உடல் நலம் நல்ல நிலையில் உள்ளது; நான் நலத்துடன் இருக்கி றேன். நான் நலம் பெற்று வருகிறேன்; நான் விரைவில் நலம் பெற்று வழமை யான சகஜ வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறேன் என்று படுக்கை யில் இருக்கும் நோயாளிகள் -  சதா எண்ணிக் கொண்டும் மனதிற்குள் சொல்லிக் கொண்டும் இருந்தால் உடல் உபாதைகளிலிருந்து, வெளிப்பட இது ஒரு அருமையான மன - மருந்து ஆகும்!
இதன் அடித்தளம் - அடிநாதம் - தன்னம்பிக்கை தான். எந்த நிலையிலும் மனிதர்கள் தன்னம்பிக்கையை இழக் கவே கூடாது!
தன்னம்பிக்கையை இழக்காத வர்கள் எவரும் எத்தகைய துன்பம், துயரம், சோதனைகள், வேதனைகள், இழப்புகள் ஏற்பட்டாலும் ஒருபோதும் சோர்ந்து, மூலையில் முடங்கிவிட மாட்டார்கள்.
தடை ஓட்டப் பந்தயத்தில் ஓடும் ஒருவனுக்கு ஒன்றிரண்டு தடுத்தாலும்; அதையும் தாண்டி, மற்ற போட்டியாளர் களைத் தாண்டி இலக்கில் முதலில் சென்று முதற் பரிசைத் தட்டிச் செல்லும் நிலை நம் கண் முன்னே நிகழ்கிறதே!
மனிதர்களை விடுங்கள்; குதிரைகள் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கூட இத்தகைய தடை ஓட்டப் பந்தயத்தில் தாண்டித் தாண்டி வெற்றியின் இலக்கை அடைகிறதே! வியப்பானதல்லவா? பயிற்சி தானே காரணம்?
ஆறறிவு இல்லாத, அய்ந்தறிவுப் பிராணியான குதிரை அதை எப்படிச் செய்தது?
அதன் மனதில் - பயிற்சி - தொடர் பயிற்சி காரணமாக ஏற்பட்ட முயற்சியின் முத்திரைதானே இந்த வெற்றியை அதற் குக் கொணர்ந்து கொடுத்தது! இல்லையா?
சின்ன துன்பங்களாயினும், பெரிய துயரங்களாயினும் மனிதர்கள் காற்றில் அலைக்கழிக்கப்பட்ட வாழை இலை களைப் போல் கிழிந்து விடவோ, அல்லது வாழைகள் சாய்ந்து விழுந்து விடுவது போலவோ ஆகி விடாமல், எவ்வளவு சூறாவளியிலும் வளைந்து, நெளிந்து அதனை எதிர் கொண்டு வெற்றி பெற்று, வீழாமல் நின்று, வென்று காட்டும் நாணலைப் போல மூங்கில் மனப்பாங்கு டன் - நீக்குப் போக்கு தேவைப்படின், அத னையும் பெற்று, நின்று நிலைத்துக் காட்டு வதே வாழ்வின் வெற்றிக்கு அடையாளம்.
மனித மனம் என்பது  எல்லைகள் அற்றவை;பரந்து விரிந்தவை; ஆழ் கடலினும் அதிகமான ஆழம் உடையது. அது ஒரு சிமழ் அல்ல; அது ஒரு புழு அல்ல. மனோவேகம் அளக்க முடியாதது அல்லவா?
அது ஒரு கம்பீர கர்ச்சனை புரியும் சிங்கம் போன்றது! சிங்கம் சிலிர்த்து கர்ஜனை எழுப்பி, இரைத் தேடிடப் போகும் முன் எதிரில் கிடைப்பவை நிலை என்னவாகும்?
சிங்கம் பின் வாங்குமா? அதுபோல பிரசசினைகள் ஆயிரம் வந்தாலும் எதிர் கொண்டு, நின்று வென்று காட்டுவேன் என்ற வைராக்கியத்தினை எண்ணி பாறைபோல் நின்று - பனி போல் உருகி ஓடாமல் - வென்று காட்டுவேன் என்று உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்!
அய்யோ இப்பிரச்சினையிலிருந்து இனி நான் எப்படி மீளப் போகிறேன் என்று கலங்கி, கசங்கி, குப்பைத் தொட்டி களை உங்களை நீங்களே உறைவிட மாக்கிக் கொள்ளாதீர்கள்!
தீர்க்க முடியாத பிரச்சினைகளே உலகில் கிடையாது. மனிதனின் பகுத் தறிவு வெறும் கூர்மை ஆயுதம் மட்டு மல்ல; பல கோணத்திலும் பயன்படும் பல்வகை பரிமாணப் போர்வாள். அதே போர்வாள் சில நேரங்களில் கேடய மாகவும் மாறும்; மாற வேண்டும்.
வாழ்க்கையில் பிரச்சினை இல்லாத வர்கள் எவரும் இல்லை; அலை இல்லாத கடல் உண்டா? ஆசையில்லாத மனிதருண்டா? அன்பு மலராத காதல் உண்டா? விடை இல்லாத கணக்கு உண்டா?
எல்லாம் எங்கே இருந்து புறப்படு கின்றன? ஊற்றுக்கும் சரி நாற்றுக்கும் சரி அடித்தளம் மண் தரை - நிலம் அல்லவா?
அதுபோல மனம் - நிலம் போன் றது! அகழ்வாரையும் தாங்க வேண்டும் அது! இகழ்வாரையும் பொறுக்க வேண்டும் அது! ஆனால், புகழ்வாரி டம் எச்சரிக்கையுடன் இருக்க வேண் டிய தடுப்பணையையும் கட்டிக் கொண்டே அது தொய்வின்றி, தொடர் பணி ஆற்ற வேண்டும்.
இந்த மனம் தொட்டுக் காட்ட முடியாத ஒன்றுதான்; ஆனால் விளங் கிக் கொள்ள முடியாத புதிர் அல்ல!! மூளை என்ற நம் உடலின் முக்கிய உறுப்புதான் இதற்குமூலம்!
உனக்கு மூளை இருக்கா? என்று கேட்டால் ஏன் மனிதனுக்குத் தீராத் திடீர்க் கோபம் வெடிக்கிறது? புத்தி - அறிவு, உள்ளம் எல்லாம் அங்கிருந்தே முகிழ்க்கின்றன; முத்திரை பதிக்கிறது!
(மேலும் திங்களன்று)-விடுதலை,11.10.15
மனவளம் என்பது பொருள் வளத்தைவிட மேலானது; தேவை யானது - அடிப்படையானது.
நம் உடலின் மூளை என்ற கருவியே இதன் மூலமாகும்.
சிலர் இல்லாதவைகளையும் கற்பனைகளையும் காட்டி மக்களை இன்றும் குழப்பிக் கொண்டுள்ளனர்!
சிந்தனை எப்படி எதன் மூலம் சிறகடித்துப் பறக்க முடிகிறது? மூளை யின் பலத்தாலும், பழுதுபடாத செயலி லும்தானே!
மனநலம் குன்றியவர்கள், மனநலம் பாதித்தவர் என்பது எதைப் பொறுத்துக் கூறப்படுகிறது? எதனை அடிப்படையாகக் கொண்டு மனநல மருத்துவர்கள் மருத்துவம் செய்ய முனைகின்றனர்?
மூளை! மூளை!! மூளை!!!
மூளையின் முடங்காத பணி, முற்றாகி விடாது மூளை நன்கு உள்ளவரை; இது மருத்துவ இயல்.
மூளைச்சாவு (Brain Death)என்ற ஒன்றுபற்றி இப்போது அடிக்கடி ஏடுகளில் வருகின்றதே, அதன்படி மற்ற உடல் உறுப்புகளையெல்லாம் பயன்படுத்த உடல் உறுப்புக் கொடை தரும் மனிதநேயர்கள் பலர் வரலாறு படைக்க எது அடிப்படை?
அத்தகைய மூளையை வளப் படுத்தி, பலப்படுத்திட வேண்டும்; விண்வெளி ஆய்வு போலவே மூளை ஆய்வும் - அது பயன்படும் முறையும், அதன் பரப்பில் எவ்வளவு சிந்தனை யால் உழுது பயன் விளைவிக்கப்பட்ட பகுதி; எஞ்சிய பரப்பும் அதன் எதிர் காலமும் எப்படி அமையும் என்பதை மூளை ஆராய்ச்சி அறிவியலாளர்; மனோ தத்துவ நிபுணர்கள் மருத்துவர்களின் ஆய்வு ஓர் தொடர் கதை;  அது முடிந்து விட்ட சிறுகதை அல்ல!
மூளை சிறந்த முறையில், நல்ல வழியில் நேர்கோட்டில் செல்லும்போது, மிகு பயன் உருவாகிறது!
அதே மூளை சிந்தனை ஆக்கபூர்வ மற்று, தீய வழியில், வெறும் உணர்ச்சி களுக்கு அடிமைப்பட்டு, தனது அறிவுப் பாதைப் பயணத்தை மாற்றிக் கொள்ளும் போது, அது தற்காலிக மகிழ்ச்சியையும், நிரந்தரத் தோல்வியையும் நமக்குப் பரிசாக வழங்குகிறது!
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்பது இலக்குக்காக மட்டும் வள்ளுவர் கூறியது என்பதை விட, அது நம் மூளைக்குச் செலுத்தும் நல்ல நல வாழ் வுக்கான பாதுகாப்பும்கூட என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
எதிர்மறை எண்ணங்கள் இதன் மூலம் விரட்டியடிக்கப்படுகிறது!
வாழ்க்கையின் வெற்றி - தோல்வி, இன்ப - துன்பம் எல்லாம் இதன் விளை வாகவே முகிழ்த்துக் கிளம்புகின்றன! முத்தெடுக்க மூழ்குவோர் முழுக் கடலின் அடியிலே சென்று விட்டதாக முடிவு செய்து விட முடியுமா?
ஆழ் கடல் - கீழ் கடல் எல்லாம் தொட்டுத் துருவி விட்டுத் திரும்பி விட் டார் என்று அறுதியிட்டுக் கூற முடியுமா?
எனவே மனவேகம் போலவே, மன ஆழமும் எளிதில் அளந்து கூற இயலாத ஒன்று. இன்றுவரை (நாளை என்னவோ! அறிவியல் நுழையாத பகுதிதான் அனைத்து அண்டங்களிலும் ஏது)
புறந்தூய்மை நீரான், அமையும் அகந் தூய்மை
வாய்மையால் காணப் படும்               - குறள் 298
இதன் பொருள்: ஒருவனின் உடம்பு தூய்மையாக ஆதல் என்பது, தண்ணீரால் ஏற்படும். அவனது உள்ளம் தூய்மையாக ஆதல் என்பது, அவன் வெளிப்படுத்தும் உண்மையால் உணரப்படும்.
ஏன் நமக்குக் குளியல் தேவைப் படுகிறது? குளிப்பது என்பது சடங்கா? சம்பிரதாயமா? நிச்சயம் இல்லை. அழுக் கினைப் போக்கி உடலைக் கழுவிய வுடன் நமக்கொரு புத்துணர்ச்சி, புது மகிழ்ச்சி உண்டாகிறதே!
அதுபோல ஏற்கெனவே அழுக் காறு, அளவுமீறிய ஆசை, குறுக்கு வழிகளில் பொருளையும் புகழையும், பதவிகளையும் ஈட்டிட முயற்சி, எல்லையற்ற சுயநலம் - இவைகளால் அழுக்கேறிய மனத்தை தூய்மைப் படுத்துதல் எதன் மூலம்?
வாய்மை மூலம்!
வாய்மை என்பது வெறும் உண்மை மட்டுமல்ல. சிற்சில தேவைப்படும் நிலைமைகளில் பொய்மையும் கூட இணைந்தாலும், பொன்னகை  செய்ய சேர்க்கப்பட்ட மற்ற தங்கத்தைவிட மாற்றுக் குறைவான உலோகங்களின் சரி நிகர் கலவைபோல - ஒளி வீசப் பயன்படும்.
ஆனால், அதைவிட முக்கியம் - தம் நெஞ்சம் அறிந்த உண்மைகளை - சுயநலம் கருதி - மாற்றிக் கூறும் பொய் ஒருபோதும் - மன அழுக்கினைப் போக்காது என்கிறார் வள்ளுவர்!
பகுத்தறிவுவாதிகள் விளைவுகளை ஏற்கத் தயங்காத வீரர்கள். எனவே அவர்கள் அகராதியில் வாய்மை எனப்படுவது அறிவு நாணயம் தான்.
தன் நெஞ்சு அறிவதை  ஒளிவு மறைவு இன்றி ஒப்புக் கொண்டு சொல்லல். வரும் அல்லல் கருதி மறைத்துப் பிழைக்கத் தெரியாதவர்கள் அவர்கள்.
(மேலும் சில செய்திகள் நாளை)
மனம் என்பது மூளை செய்யும் பணியின் உருவகச் சொல்தான். அறி வுக்கே முன்னிடம்; உணர்ச்சியை நல்ல மனத்தவர் - மனதை ஆள்பவர்கள்  கட் டுக்குள் கொண்டு வரும் ஆற்றலா ளர்கள் ஆவார்கள்.
மனமது செம்மையானால்
மந்திரம் ஜெபிக்க வேண்டாம்
என்ற சொலவடை எதை விளக்குகிறது?
சிந்தனையில் சீர்மையும், நேர்மை யும் முரணற்ற தன்மையும் அமைந்து - குறுக்கு வழிகளில் ஈடுபடாமல், தன்ன லத்தையும் ஓர் கட்டுக்குள் அடக்கி, பொது நலத்திற்குப் பெரிதும் முக்கியத் துவம் அளிக்கும் மனித வாழ்வு - மனிதன் சமூகத்தில் வாழும் பிராணி - சமூகத்தின் ஓர் அங்கம் என்பதால், அவன் தன்னைத் தவறிழைத்த நிலையிலிருந்து தண்டனைக்குத் தப்ப, மந்திரங்கள் ஜபிக்க வேண்டாம்; யாக யோகங்களைச் செய்ய வேண்டாம்; பாவ மன்னிப்பைத் தேட வேண்டாம்! இவைகளால் பயனில்லை என்பது வேறு செய்தி!
தூய மனதின் தொய்வில்லாச் செயல் அவனைக் காக்கும்; உயர்த்தும்; தடுக்கும். எல்லாவற்றையும்விட அவனை, படுத்தவுடன் தூங்கி, புத்துணர்வுடன் விழிப்புறச் செய்யும்!
இன்றேல் புரண்டு புரண்டு படுத்தும் தூக்க மாத்திரை தேடும்  அவலம் தானே மிஞ்சும்! மன நோயாளிகள் - உடல் நோயாளிகளைப் போலவே இருக்கிறார்கள்!
அவர்களிடம் இரக்கம்) (Sympathy) காட்டினால் போதாது; அவர்களை  அறிய ஒத்தது அறிவானாக (அவர்கள் நிலைக்கு மாறி நம்மை வைத்து) அவர் துன்பம் அறியும் நிலைக்கு  இறங்கி, இரங்கி இரக்கத்தினும் மேலான பண்பான உணர்வைப் (Empathy)
பெற வேண்டும்.
பலருக்கு மன உளைச்சல் அதிகமாகி அவர்கள் மனநோயாளிகளாவதற்கு எவை எவை காரணம் என்று மருத்து வர்கள் மனோதத்துவ ரீதியிலும் உணர்ந்து, நோய் நாடி நோய் முதல் நாடும் போக் கினைக் கடைப்பிடிப்பது ஒரு நல்ல எடுத்துக்காட்டு ஆகும்! சீரிய முன்னோடி முயற்சி!!
இதோ ஒரு மனிதநேய மருத்துவ உதவியைப் பாரீர்! தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளிலேயே முதல் முறையாக தோல்வி நிலையில் உள்ளவர் களுக்கான சிகிச்சைப் பிரிவு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தொடங்கப் பட்டுள்ளது! செய்தி இதோ:
தோல்வி நிலை சிகிச்சைப் பிரிவு' ஸ்டான்லியில் தொடக்கம்: தமிழகத்திலேயே முதல்முறை தமிழகத்தில் அரசு மருத்துவ மனை களிலேயே முதல் முறையாக, தோல்வி நிலையில் உள்ளவர்களுக்கான சிகிச்சைப் பிரிவு சென்னை ஸ்டான்லி அரசு மருத் துவ மனையில் தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவமனையின் மனநல சிகிச்சைத் துறையின் கீழ் இந்தப் பிரிவு செயல்படும். மனநல சிகிச்சை: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள மனநல சிகிச்சைத் துறைக்கு ஒரு நாளைக்கு 250 புறநோயாளிகள் சிகிச்சைக்காக வருகின் றனர். இதில் 50 பேர் புதிய நோயாளிகள் ஆவார்கள். 40 உள்நோயாளிகளுக்கான படுக்கைகளும் உள்ளன.
இந்தத் துறை யின் கீழ், வயதானவர்கள் தொடர்புடைய மனநலப் பிரச்னைகளுக்கான புறநோ யாளிகள் பிரிவு ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை செயல்படுகிறது.  எண்ணச் சுழற்சியால் அதாவது ஒரு காரியத்தை ஒரு முறை செய்து திருப்தியடையாமல் மீண்டும் மீண்டும் செய்வது. இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுக் கான புறநோயாளிகள் பிரிவு ஒவ்வொரு புதன்கிழமையும் செயல்படுகிறது.  போதைப் பழக்கத்துக்கு அடிமையான வர்களுக்கான புறநோயாளிகள் பிரிவு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் செயல் படுகிறது. தோல்வியால் மனநலம் பாதித் தோருக்கு சிகிச்சை: இந்த நிலையில், தோல்வி நிலையில் உள்ளவர்களுக்கான சிகிச்சைப் பிரிவு அண்மையில் தொடங் கப்பட்டுள்ளது.
தேர்வு, காதல், திருமண வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் தோல்வி அடைந்து, மன அழுத்தத்துக்கு ஆளானவர்களுக்கான சிகிச்சை அளிப்பதற்காக இந்தப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து ஸ்டான்லி மருத்துவ மனையின் மனநல சிகிச்சைப் பிரிவுத் தலைவர் டாக்டர் அலெக்ஸாண்டர் ஞானதுரை கூறியது: தமிழகத்திலேயே முதன்முறையாக அரசு மருத்துவ மனையில் இந்த சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட் டுள்ளது. பல்வேறு சந்தர்ப்பங்களால் தோல்விக்கு ஆளானவர்கள் தங்கள் சுயகவுரவம் பாதிக்கப்பட்டு விட்ட தாகக் கருதி மன அழுத்தத்துக்கு ஆளாவார்கள். இந்த நிலைக்கு முறை யாக சிகிச்சை அளிக்காவிட்டால் அவர்கள் மனஅழுத்தம், வன்முறை, ஆக்ரோஷம் உள்ளிட்ட நிலைகளுக் குச் சென்று விடுவார்கள். சிலருக்கு தற்கொலை எண்ணங்களும் எழக் கூடும். இதுபோன்று தோல்வி நிலை யில் உள்ளவர்கள் ஒரு வாரத்துக்கு 15 முதல் 20 பேர் சிகிச்சைக்காக வருகின் றனர். ஆரம்பத்திலேயே இதனைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் மருந்துகள், ஆலோசனைகளிலேயே இவர்களைக் குணப்படுத்தி விட முடியும் என்று அவர் தெரிவித்தார். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை இந்த சிறப்புப் பிரிவு செயல்படும். இந்தப் பிரிவில் 6 நிபுணர்கள் கொண்ட குழுவினர் பணியாற்றுவார்கள்.
(தினமணி 12.10.2015)
மனதின் துன்பங்களும், துயரங் களும் எப்படி, பல்வேறு அவதாரங் களை எடுக்கின்றன என்று பார்த் தீர்களா?
மனம் என்பது உடலின் மூளை யோடு இயைந்தது என்பதற்கு இதை விடச் சிறந்த ஆதாரம் சான்று - வேறு என்ன தேவை?
அஞ்சுவதற்கு அஞ்சுதல் என்பதை யும் அஞ்சாமையையும் பலர் குழப்பிக் கொள்ளுகிறார்கள் அது தேவையற்றது.
அஞ்சுவதற்கு அஞ்சுவது ஓர் எடுத்துக்காட்டு மின்சாரக் கம்பியில் கை வைத்து வீரம் காட்ட முனைய லாமா? விளைவு என்னவாகும்?
பேய், பிசாசு மற்றும் பல மூடநம் பிக்கை சடங்கு, சம்பிரதாயங்களை எல்லாம் கண்டு, எதை எடுத்தாலும் அஞ்சி அஞ்சிச் சாவார்; இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே; என்று கூறுவது அஞ்சக் கூடாத கற் பனைகளை மூலையில் தள்ளுவதற் குப் பதில் மூளையில் பத்திரப்படுத்தி வைப்பது நியாயமா? தேவையா?
அகவாழ்வு - நம் உள்ளத்தைத் தூய்மையுடன் வைத்தல் மூலம் பல ஆக்கச் சிந்தனைகள், தானே மலரும்; எதிர்மறை எண்ணங்கள் (Negative Thougts)
நமக்கு ஏற்படாமல் தடுத்துக் கொள்ளும் வாய்ப்பு நிச்சயம் நமக்குக் கிட்டும்.
மன அழுத்தம் (Stress)  என்பது எத்தனைப் பேர்களை - அவர்கள் இளையர்களாக இருப்பினும் - நடுத்தர வயதானவர்களாயினும் திடீர் மாரடைப்பு ஏற்படக் காரணமாக அமைகிறது! எங்கே மன இறுக்கம் - மனதில் சதா தொடரும் மன உளைச்சல் - இவை தூக்கத்தைக் கெடுக்கிறது; பசியைத் தடுக்கிறது. ரத்த அழுத்தம் அளவுமீறி ஏற்பட்டு அதுவே மாரடைப்பாக, சீரகத்தின் பழுதாக ஆவதற்கு மூல காரணமாக அமைகிறது!
எனவே மன அமைதி, மனதில் எவரையும் தாழ்த்தி எண்ணுதல் - அவரிடம் நேரில் புகழ்ந்து நாமாவளி பாடி விட்டு, பிறகு அவர் நகர்ந்தவுடன், புறம் கூறிப் பொய்த்துயிர் வாழும் போக்கு மற்றவர்களை அழிக்குமுன் இத்தகைய மனம் - உள்ளம் படைத்தோரையே அதிகம் பாதிக்கும்!
எவரிடத்திலும் குறைகண்டால் - தவிர்க்க முடியாத நிலை என்றால், -உரிமை எடுத்துக் கொள்ளக் கூடிய நண் பர்கள், அல்லது உறவினர்கள் என்றால் மட்டும் முகத்துக்கு நேரே மிகுந்த நயத் தக்க சொற்களால் சுட்டிக் காட்டுங்கள், இன்றேல் - புது அறிமுகம் என்றால் புரிந்து கொண்டு அத்தகையவர்களிட மிருந்து ஒதுங்கி விடுங்கள்.
உங்களை நோக்கி சிலர் ஆதார மில்லாத குற்றச்சாட்டுகளை - பொய்ப் புகார்களை அள்ளி விடும்போது; உங்கள் மனம் படாதபாடுபடும்; சிலர் கொதித் தெழுவார்கள். அதுகூட உடனே அப்படி பதிலடி கொடுக்கத் தான் வேண்டுமா? என்று ஒரு முறை அல்ல பல முறை யோசியுங்கள்.
பதில் கூறத்தான் வேண்டும் என்ற நிலை - விடை கிடைக்குமேயானால், அதை சற்று நேரம் ஆறப் போட்டு செய்தால் அதன் மூலம் நம் உடல், உள நலம் பாதிக்காமல், எதிர்பார்க்கும் பலனும் அதன் மூலம் கிடைத்தே தீரும்!
புத்தர் பற்றி ஒரு நிகழ்வு சொல்லப் படுவது உண்டு.
ஒருவன் வசைமாரிப் பொழிந்தான்; புத்தர் பிட்சை கேட்க  போன போது, புத்தர் புன்னகையடன் இருந்தார்; அவ னுக்கு மேலும் மேலும் கோபம் - ஆத்திரம் எரிச்சல் புத்தர் மீது பொங்கியது! அமைதியாகச் சொன்னாராம் புத்தர்; நீங்கள்  கொடுக்கும் இந்த உணவை நான் ஏற்காமல் போனால் அது யாரிடம் இருக்கும் - உங்களிடம்தானே? அது போல உங்கள் வசவு மொழிகளை நான் ஏற்கவில்லை; அது உங்களுடன்தான் தங்கிவிடும்!
அதுபோல் உங்கள் வசவு களை, நான் ஏற்கவில்லை. என்றார் மிக அமைதியாக. வெட்கத்தால் தலை குனிந்தவன் மனம் மாறி நல்ல மனிதன் ஆனான்! எனக்கேகூட ஒரு குறை - நான் உணர்ந்து திருத்திக் கொள்ள முயலும் குறை - எனக்கு நூற்றிற்கு நூறு சரியென்று பட்டதை - ஆதாரம் உள்ள செய்திகளை  - பிறர் மறுத் தாலோ, தவறாகச் சொன்னாலோ, அடித்துச் சொல்லும் பாணியில் உரத்த குரலில் பதில் சொல்லும் பழக்கம்.
இது தவறான ஒன்று என்று உணருகிறேன். ‘Aggressive tone’ தேவையில்லை. அழுத்தம் கருத்தில் இருந்தால் போதாதா? ஏன் குரலில் இருக்க வேண்டும்?
சிலருக்கு இது மனப்போக்கு. மாற் றிக் கொள்ள வேண்டியதும் ஆகும்!
குறை இருப்பது இயல்பு; அதைக் கண்டறிந்த பின்பு, அதை மாற்றிக் கொள்ளுவது தான் சீரிய பகுத்தறி வுள்ள மனிதரின் கடமை!
என்னே மனம் என்ற மூன்று எழுத்து - எப்படி நலம் என்ற மற் றொரு மூன்று எழுத்து கொண்டு நம்மை வாழ வைக்கிறது என்பதை உணர்ந்து,
மனத்துக்கண் மாசிலனாக வாழ்ந்து, மனிதம் படையுங்கள். மாமனிதத்திற்கு உயர முயற்சியுங்கள்!
(நிறைவு)
வியாழன், 15 அக்டோபர் 2015 விடுதலை

சனி, 14 நவம்பர், 2015

இதோ ஒரு எளிமை - இனிமை - மண வரவேற்பு விழா!


20.9.2015 அன்று காலை வந்த நாளேடு ஒன்றில், கர்நாடக அரசு, திருமணங்களை எளிமையாக நடத் துங்கள் - விவசாயிகள் கடன் தொல் லையாலும், ஏழ்மை, வறுமை, எதிர் பார்த்த வருவாய் இன்மையாலும், விரக்தியடைந்து தற்கொலைகளில் ஈடுபடுகிறார்கள். வறட்சி அவர்களை வாட்டுகிறது.
இந்நிலையில் விவசாயிகளே ஆடம்பரமாகத் திருமணங்களை நடத் தாதீர்கள்; கடன் வாங்கி திருமணங் களை நடத்தாதீர்கள் என்று சுற்றறிக்கை விடுத்துள்ளது!
இது வரவேற்கத்தக்க ஒன்றாகும். திருமணங்களும், வரவேற்புகளும், ஏராளமான தடபுடல் செலவில், ஆடம் பரம் வழிந்தோடும் வகையிலும், செல்வத்தின் செல்வாக்கு, சமையல் விருந்தில் காலையிலேயே 3 இனிப் புகள், பகல் இரவு விருந்தில்  4 இனிப் புகள் (அய்ஸ்கிரீம் உட்பட) இத்தியாதி! இத்தியாதி!!
அழைப்பிதழ்களை விதவிதமாக, ஒலிகளை உள்ளடக்கி நேரில் அழைப் பது, நாயன இசை உள்பட எத்தனையோ விதம், ரூபாய் 100-க்கு மேலாகக் கூட இதற்கு (ஒரு அழைப்பிற்கு இவ்வளவு செலவு என்ற டம்பாச்சாரித்தனம்!) ஆகியிருக்கலாம்.
அழைக்கப்படுபவர்கள் எவரும் அழைப்புகளை கண்ணாடிச் சட்டம் போட்டு நிரந்தரமாகத் தங்கள் வீடுகளில் தொங்க விடவா செய்கிறார்கள்? இல் லையே, பின் ஏன் இந்த வீண் ஜம்பம்? செல்வச் செருக்கின் வெளிச்சம்!
தந்தை பெரியார் அவர்கள் சிக் கனத்தின் அவசியம்பற்றி பேசியவர் மட்டுமல்ல, செயலில் செய்து காட்டியவர்; அவரது வாழ்வு நெறியே எளிமையும், சிக்கனமும், பகுத்தறிவும் தானே!
19.9.2015 அன்று மாலை  பிரபல மூத்த கம்யூனிஸ்ட் தலைவர், முதுபெரும் கொள்கை வீரர், தோழர் ஆர். நல்ல கண்ணு அவர்களது பெயரன் பொறியாளர் ப.சதிஷ்குமார் M.E. அவர்களுக்கும், பொறியாளர் ர. பாலபாரதி M.E. அவர் களுக்கும் நடைபெற்ற மணவிழா வரவேற்பு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன்!
அங்கே கண்ட காட்சி எளிமையின் இனிமையாக அமைந்திருந்தது!
சென்னை சைதாப்பேட்டை தாடண் டர் நகரில் உள்ள மாநகராட்சியின் கலைஞர் திருமணக் கூடத்தில் மாடியில் நிகழ்ச்சி; கீழே உணவுக் கூடம். எவ்வித ஆடம்பரமும் இன்றி, வழி நெடுக கம்யூனிஸ்ட் கட்சிக் கொடிகள், வழிகாட்டி வருவோருக்கு உதவின!
இரவு சுமார் 7.15 மணிக்கு நான் சென்றேன். எளிய மேடை இருபுறமும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சியின், கொடி களும், பதாகைகளும்.
மணமக்கள் கற்ற பொறியாளர்கள், பொருத்தமான வாழ்விணையர்கள்! இரு வரும் பொறியியல் (முதுநிலை) பட்டதாரிகள்.
சுமார் 700 பேர் (ஆண் பெண் இரு பாலரும்) வந்திருந்து உண்மை அன் புள்ளத்தோடு வாழ்த்திச் சென்றனர். தோழர் ஆர்.என்.கே. அவர்களைப் போலவே எளிமை இந்த வரவேற்பிலும் எல்லோரையும் ஆட் கொண்டது! பின் பற்ற வேண்டியது!! பெண்கள் உட்பட தோழர்கள் வந்தோரை, தோழர் முத் தரசன் கீழே நின்று நுழைவு வாயிலில் வரவேற்று அழைக்க,
அங்கே தோழர் அய்யா நல்ல கண்ணு, தோழர் தா. பாண்டியன், சி.மகேந்திரன், வீரபாண்டியன், ஏழுமலை போன்ற தோழர்கள் அழைத்துச் சென்று, மண மக்களுக்கு வாழ்த்துச் சொல்ல உதவினர்.
திரும்பும்போது எல்லோருக்கும் நன்றி கூறும் ஒரு கையடக்கப் பை! அதில் புரட்சி சின்னம் உள்ளே  ஆலன் உட்ஸ் எழுதிய சோசலிசம் என்ற நூலும், ஒரு எழுதுகோல் மணமக்கள் பெயர் பொறித்தது.
எத்தனையோ திருமண வரவேற் புகள் என்ற ஆடம்பரப் பாலைவனத் தில், எளிமையே இனிமை - எடுத்துக் காட்டு என்ற ஒயாசிஸ் இந்த மண வரவேற்பு!
நூல் அளிப்பதை சுயமரியாதை இயக்கம் திராவிடர் கழகம் முன் னோடியாக இருந்து தாம்பூல முறை யில் புரட்சி செய்தது; தோழர்களும் இப்படிப்பட்ட முறையைக் கடைப் பிடித்தது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது!
வசதியிருந்தாலும் வாரி இறைக்க வேண்டுமா என்ன? அதை கல்வி, மருத்துவத் தொண்டறத்திற்கு உதவி மணமக்கள் பெயரைப் போடலாமே!
வாழ்க மணமக்கள் - வருக இந்த எளிமை இனிமை.
-விடுதலை,21.9.15

வெள்ளி, 13 நவம்பர், 2015

இளைஞர்களே, இணையதளம் முகநூல் பிரியர்களே! கவனிக்க


13 வயது முதல் 19 வயது வரை  உள்ள இளையர்களுக்குக் கூட இப்போது ரத்தக் கொதிப்பு (B.P) வருகிற கொடுமை நிகழ்கிறது!
இளையர்களுக்கும் மிகக் குறை வான வயதுடைய இளைஞர்களுக்கும் கூட மாரடைப்பு - இருதய நோய் ஏற்படுவது இப்போது அன்றாடச் செய்தியாகி வருகிறது, இதைவிட வேதனையும் கவலையும் அடையத் தக்கச் செய்தி வேறு உண்டா?
அது போலவே அதே வயதுள்ள இளைஞர்களுக்கு சர்க்கரை நோயும் கூட இருப்பதை மருத்துவர்கள் கண் டறிந்து, எச்சரிக்கும் நிலையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் பெருகி வருகிற அவலமும் கண்கூடு!
இவை ஏற்பட, இத்தனை இள வயதில் ஏற்படக் காரணம்  என்ன?
மற்ற வயதானவர்கள், பெரும் நிர்வாகச் சுமையாளர்கள் போன்று அடிக்கொரு முறை ஏற்படுவதற்கு மன அழுத்தம் - மன உளைச்சல் ஒரு போதும் காரணமாக இருக்க முடியாது. பின் என்ன?
நாமறிந்தவரையில் இளைஞர் களின் உணவுப் பழக்கம்தான் வீட்டில் சமைப் பது  ஆரோக்கியமான உணவு; ஆனால் அதை உண்ணாமல் Fast Foods என்ற துரித உணவை நுகர்வோர் கலாச் சார நோயால் பாதிக்கப் பட்டவர்கள் கால நேரம் கருதாமல்  சாப்பிடுவதேயாகும்!
பர்கர், பிட்சா, கெண்ட்டக்கி, மெக் டானல்டுஸ், பிட்சா ஹட், டொமெனி யாஸ் - இவைகளில் மொய்க்கின்றனர். இவைகளின் சேவை!? 24 மணி நேரம் பல ஊர்களில்!
என்னதான் கண்காணிப்பு - கலப்படம் தடுத்தல் இருந்தாலும், சுவை அதிகமாக இருந்து இளைஞர்களைக் கவர எத்தனை சேர்ப்புக்கள்! கொழுப்பு! கொழுப்பு! கொழுப்பு! இதோடு சேருகிறது பணக் கொழுப்பும்! பிறகு கேட்கவா வேண்டும்?
கூடுதல் எடை, ஊதிய பலூன், உப்பிய மகோதரம் போன்ற உடல்வாகு, இத்தியாதி! இத்தியாதி!!
கொழுப்பு  இதயக் குழாய்களில் அடைப்பு - ரத்த ஓட்டம் தடைபடுத்தப் படல், மாவுச் சத்து அதிகமாகி இன்சுலின் சுரப்பிகள் செயலிழந்து, ரத்தச் சர்க்கரை கிரியாட்டின் என்று சிறுநீரில் இருக்க வேண்டிய உப்பின் அளவு எல்லை தாண்டிய நிலை!
இதில் மேலும் கொடுமை, பெப்சி கோலா, கொக்கொகோலா என்ன வென்னமோ - குடிக்க!
(டாஸ்மாக்கிலும் இளைஞர் பட்டாளம் படையெடுப்பு   மிக மிக வேதனை தரும் வெட்கப்பட வேண்டிய யதார்த்தம்!)
இதோடு சதா சர்வ காலமும் மனித உறவைப் புறக்கணிக்க  கணினிக் காதல், கணினியோடே இணைந்த செயல்பாடு மிக்க தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கை!
கழிப்பறையில் தான் முன்பு தனிமை கிடைக்கும்; இப்போது கைத் தொலை பேசி வந்த பிறகு அதுவும் போச்சு!
8.10.2015 அன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளேட்டில் ஒரு முக்கிய தகவல்: அதிகமாக இணையத் தினைப் பயன்படுத்திடும் இளைஞர் களுக்கு - அதாவது 14 மணி நேரம் (ஒரு வாரத்தில்) என்ற அளவில் கணினி இணையதளத்தோடு இழைந்தால் அவர் களுக்கு அதிகமான ரத்தக் கொதிப்பு Hypertension ஏற்படுகிறது என்று வாஷிங்டன் ஆய்வாளர்கள் கண்டறிந் துள்ளனர். 148 இளையர்கள் - இணை யத்தை அதிகம் பயன்படுத்தியோரில் 26 பேருக்கு இந்த Hypertension இரத்தக் கொதிப்பு நோய்  மிக அதிகமாக  ஏற்படுகிறது என்று கண்டறிந்துள்ளனர்.
இதன் விளைவு...? மாரடைப்பு, சிறுநீரகப் பாதிப்பு முடக்குவாதம், மூளை நோய் Heamoscope  போன் றவை ஏற்பட வாய்ப்பு மிக அதிகம்.
ஹென்றி போர்டு நிறுவனம் ஒரு தனி ஆய்வுத் துறையை அமைத்தது! Health Sciences Department  அதன் முக்கிய அதிகாரி ஆண்ட்ரிகேசடி பர்ரோ - இப்படி ஆய்வில் கண் டறிந்து எச்சரித்துள்ளார்!
இணையத்தின் பயன் மேலானது தான், இணையம் அவசியம்தான்!
எதையும் அளவறிந்து வாழ வேண்டும் என்பதால் கட்டுப்படுத்தி - தேவைக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
உதவிக்கு வந்தது உயிர்க் கொல்லி யாக மாறலாமா?
எச்சரிக்கை! எச்சரிக்கை!!
-விடுதலை,16.10.15

ஞாயிறு, 8 நவம்பர், 2015

எளிமை + பண்பு + பல்திறன் = அறிஞர் அண்ணா


அறிஞர் அண்ணா அவர்கள் தந்தை பெரியார் அவர்களை தமது வாழ்நாள் தலைவராகக் கொண்டு இறுதிவரை வாழ்ந்து காட்டியவர்.
அய்யா பெரியார் அவர்களிடத்தில் இருந்த - தொண்டு புரிந்த காலத் தையே தமது வாழ்வின் வசந்தம் என்று முதல் அமைச்சர் ஆன பிறகும் நிலை நாட்டி உறுதிபடக் கூறியவர் அறிஞர் அண்ணா.
தந்தை பெரியார் அவர்களுடன் இருந்து ஈரோட்டுக் குருகுல வாச முன்னோடியான அவர், எப்போதும் எளிமையான பழக்க வழக்கங்களைக் கொண்ட மாமேதை.
பதவி அவரை அதிகார போதை யில் தள்ளாடச் செய்யவில்லை; மாறாக; இவ்வளவு பெரிய பொறுப்பை மக்கள் நம்மீது - இத்தேர்தல் முடிவு மூலம், சுமத்தி விட்டார்களே என்ற கவலை அவரை ஆட் கொண்டது. மேலும் தன்னடக்கத்தின் தாயகமாகத் தன்னை ஆக்கிக் கொண்டார்!
அருமை நண்பர் கவிவேந்தர் கா. வேழவேந்தன் அவர்களின் தித்திக்கும் தீந்தமிழ் என்ற தலைப்பில் பல கட்டுரைத் தொகுப்பாக ஒரு நூலைத் தொகுத்து, மணிவாசகர் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளார்கள்.
அந்நூலை எனக்கு அனுப்பி அதுபற்றி கருத்து எழுதும்படிக் கேட் டுக் கொண்டார்.
மகிழ்ச்சியோடும், மனநிறை வோடும் எழுதுகிறேன்.
நூலைப் படித்தேன் - நவில் தோறும் நயம் அதில் மலரின் தேன் போல் இருந்தது! படித்தேன் - சுவைத்தேன்.
அறிஞர் அண்ணாவின் சிந்தனைச் செழுமை என்ற தலைப்பில், ஒரு அரிய கட்டுரை. (பக்கம் 112 - 118 வரை) பல்வேறு செய்திகளை மருந்துக் குப்பி (சிணீஜீறீமீ) போன்று அடக்கி எழுதப் பட்டுள்ளது.
இன்றைய தலைமுறையும் தலை வர்களும் தங்களுக்கு அதனை வழி காட்டியாக, கலங்கரை வெளிச்சமாக கொண்டால் அவர்களுக்கு நல்லது.
அந்த பக்கங்களில் உள்ள செய்திகள்:
அண்ணா தம் வாழ்க்கையின் தொடக்க முதலே, பொது வாழ்க்கைக்கு இலக்கணம் வகுப்பவராக எளிமை யோடும், பொருளாசை இன்றியும் வாழ்ந்து காட்டினார்.
நீதிக்கட்சியும் அவர் ஆற்றலுடன் இயங்கியதைக் கண்ட முத்தையா செட்டியார் அவர்கள், அண்ணாவை அணுகி, உங்களுக்குக் கை நிறைய ஊதியமும், தனி வீடும், தனிக் கார் வசதியும் தருகிறேன்; என்னிடம் பணிக்கு வந்து விடுங்கள் என்று கூறியபோதும், பெரியாரின் குருகுல வாழ்க்கையை விட்டு வர மாட்டேன் என்று, சொற்பச் சம்பளத்தில் தந்தை பெரியாரின் விடுதலை இதழில் தொண்டாற்றினார் அண்ணா. தாம் எம்.ஏ. படித்திருந்தாலும், அய்யாவின் அறிவியக்கத்தின் தன்மானக் கொள்கையால் ஈர்க்கப்பட்ட அண்ணா இறுதிவரை, நான் கண்டதும், கொண் டதும் ஒரே தலைவர் தந்தை பெரியார் தாம் என்றார்.
1949இல் இராபின்சன் பூங்காவில் பெரியாரிடமிருந்து பிரிந்து, திராவிட முன்னேற்றக் கழகம் எனும் தனி இயக்கம் கண்ட போதும், மேடையின் மத்தியில் ஒரு காலி நாற்காலியிட்டு, இது தந்தை பெரியாருக்கே உரிய தலைவர் நாற்காலி; தி.மு.கழகத்திற்குத் தனித் தலைவர் கிடையாது. என்றைக்கு இருந்தாலும்  தந்தை பெரியார்தாம் தலைவர் என்று, தந்தைபெரியாரிடம் பக்தியும் பாசமும் காட்டியவர் அண்ணா.
1967இல் மக்கள் அண்ணாவை முதல் அமைச்சர் ஆக்கியவுடன், முதல் வேலையாகத் திருச்சிக்கே சென்று, அங்கே தங்கியிருந்த தந்தை பெரியா ருக்கு மாலை அணிவித்து, அமைந்தி ருக்கும் மந்திரி சபையே தந்தை பெரியா ருக்குக் காணிக்கை என்று கூறி, அய் யாவை நெகிழ வைத்தார். தாம் கடுமை யாக எதிர்த்துப் பிரச்சாரம் செய்தாலும், தனயன் அண்ணா காட்டிய உயரிய பண் புணர்வு, தந்தை பெரியாரைச் சிலிர்க்க வைத்தது.
தமிழக மக்கள் படிப்பாற்றல் பெற்றவர் களாகவும், நூலறிவு மிக்கவர்களாகவும் திகழ வேண்டுமென்று, அண்ணா கனவு கண்டார். ஏனெனில், அவரே எளிய ஓட்டு வீட்டில் பிறந்தாலும் ஏராளமான நூல்களை இராப் பகலாகப் படித்து, மாமேதையாக விளங்கியதால், புத்த கங்களே மக்களுக்குப் புத்தறிவு ஊட்டக் கூடியவை என்று, திடமாக நம்பினார்.
ஓர் எழுத்தாளர் சங்க மாநாட்டில் அறிஞர் அண்ணா, இப்படி முழங்கினார்: பாருங்கள்! நம் நண்பர் ஒருவரின் புதுமனை புகுவிழாவிற்குச் சென்றால், அவர் பெருமிதத்துடன் தாம் புதிதாகக் கட்டிய வீட்டின் திண்ணைகளைக் காட்டுவார்; கூடத்தைக் காட்டுவார்; வர வேற்பு அறையைக் காட்டுவார்; சமையல் அறையைக் காட்டுவார்; சாப்பிடும் அறையைக் காட்டுவார்; படுக்கை அறை யைக் காட்டுவார்; கடவுள் அறையை காட்டுவார். ஆனால் இதுதான் நான் படிக்கும் படிப்பறை என்று, ஒன்றைக் காட்டுகிறாரா? அப்படி வீட்டுக்கு வீடு நூலக அறை திகழும் நாள்தான், அறிவுப் புரட்சிக்கு வழிவகுக்கும் திருநாள்!
எத்தனை சிந்தனை ஆழத்துடன் அண்ணா அவர்கள் உதிர்த்த சொற்கள் இவை!
அதேபோல் தமிழ் மாந்தர், அறி யாமைச் சேற்றிலிருந்தும் வைதிகச் சகதியிலிருந்தும் வெளியே வந்தால் தான் அறிவார்ந்த விஞ்ஞான முன் னேற்றம் காண முடியும் என்று, திட்ட வட்டமாக எண்ணினார் அண்ணா.
அவர் ஒருமுறை அழுத்தத்து டனும், சிந்தனைச் செழுமையுடனும் கூறினார்; கடிகாரத்தின் நொடி முள்ளும், மணிமுள்ளும் நகர்வதைக் கவனித்து, வாழ்க்கையை வேகமாக நகர்த்திக் கொண்டிருக்கும் மேனாட் டார், எங்கோ உயரத்திற்கு முன் னேறிப் போய்க் கொண்டிருக்கி றார்கள். ஆனால் இன்னமும் பஞ்சாங் கத்தைப் பார்த்து, நவக்கிரகங்கள் நகர்வதைப் மட்டுமே சார்ந்து செயல் படும் நாம், பின்னேறிக் கொண்டே இருக்கிறோம்
அறிவுப் பாதைக்கு நம்மை ஆற்றுப் படுத்திட அண்ணாவின் சிந்தனையோட்டம் எப்படியெல்லாம் செயல்பட்டது.
அறிஞர் அண்ணா முதல் அமைச் சரான பிறகுகூட ஒரு விருந்து ஏற்பாடு நாகரசம்பட்டியில் திரு என்.எஸ். சம்பந்தம் வீட்டில். அப்போது முதல் வரை தனக்கு அருகில் அமர்த்திட வேண்டுமென அய்யா  - விரும்பி ஜாடை காட்டினார் எங்களிடம்.
அண்ணாவோ மிகுந்த கூச்ச சுபாவம் உள்ளவர். அவர் தயங்கி சில இலைகள் தள்ளி என் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார். இதற் கிடையில் அய்யாவுக்குப் பக்கத்தில் ஒரு அதிகம் பேசும் தொணதொணா ஒருவர் அந்த இலையை ஆக்கிர மித்துக் கொண்டார்! அய்யாவுக்கு வந்த கோபத்தை எங்கள்மீது பார் வையில் காட்டி பிறகே உணவு உண்டார்!
ஈரோட்டில் விடுதலை ஆசிரிய ராக இருந்தபோது எப்படி அய்யா விடம் இருந்தாரோ - நடந்தாரோ - அதே பயபக்தி யுடன் முதல் அமைச் சரான அண்ணாவும் இருந்தார்.
அத்தகையவர்களை இனி எளி தில் எங்கே சந்திக்கப் போகிறோம்?
கவவேந்தர் கா. வேழவேந்தனின் மற்ற கட்டுரைகளும் நல்ல தகவல் களஞ்சியங்கள் ஆகும்.

- கி.வீரமணி - வாழ்வியல் சிந்தனைகள்
-விடுதலை,27.6.15

வளர்த்த கிளியும், பெற்ற கிளியும்!


மனிதர்களின் ஆறாம் அறிவு காரணமாக பாசமும், பகுத்தறிவும் அவர்களுக்கு இயல்பானது!
அய்ந்தறிவுள்ள மிருகங்களுக்கோ, அதைவிடக் குறைந்த அறிவுள்ள பட்சி பறவைகளுக்கோ பாசம் இல்லையா? அதன் குஞ்சுகளை வளர்க்கவில்லையா என்று நீங்கள் கேட்பது என் காதில் விழாமல் இல்லை.
அவை தம் குஞ்சுக்கு மட்டுமே கூடு கட்டும், இறக்கை முளைத்ததும் தானே பறந்து விடும் பிறகு நீயாரோ நான் யாரோ தான் (பெரியார் படப் பாட்டு மாதிரி).
ஆனால், மனிதர்களின் உறவு பாசம் - அப்படிப்பட்டதல்ல! பகை வந்த போதிலும் மனதுக்குள் புகையாய் இருக்கவே செய்யும். எளிதில் மறந்து போகாது.
பாசத்தைச் செலுத்த தங்களுக்குப் பிள்ளைகள் பிறக்கவில்லையே என்று கவலைப்படுகிறார்கள் மனிதர்கள்! வைதிக மனப்பான்மையும், மன இறுக்கமும் கொண்ட குடும்பத்தவர்கள் பலர் குழந்தைபெற்றுக் கொள்ளாத பெண்களைக் கரித்துக் கொட்டி வறுத்து எடுக்கும் வன்கொடுமையையும் வாழ்த்து மடலாக வாசிக்கத் தவறுவதே இல்லை பல குடும்பங்களில்.
இதற்காகவே இப்போது மழை காலத்துக் காளான்களைப் போல ஆங்காங்கு குழந்தைப் பண்ணை விளைநிலத்தைப் பக்குவப்படுத்தும் மருத்துவ வியாபாரங்கள் ஓங்கி வளர்ந்து வருகின்றன!
தந்தை பெரியார் அவர்கள் ஒரு முறை அழகாகக் கூறினார். மனிதன் தனக்கே குழந்தை பிறக்கு வேண்டு மென்று பிடிவாதமாக இருப்பது, தனியார் சொத்துரிமைக் கருத்து ஆட்சி செய்த பிறகே தான். பாசம் காட்ட குழந்தைதான் வேண்டுமென்றால் வேறு ஒரு குழந்தை - அதிகம் பெற்று காப்பாற்ற முடியாமல் திணறுகிறார்களே அப்படிப்பட்ட ஒரு குழந்தையை தத்து - வளர்ப்புக் குழந்தையாக்கி பாசம் காட்டி மகிழலாமே! அதுகூட வேண்டாம்; பலர் நாய், பூனை, கிளி போன்ற பல்வேறு வகை மிருகங்கள் பட்சிகளையும்கூட வளர்த்து பாசம் காட்டி, மகிழ்ச்சியை அடைகிறார்களே அது போல செய்யலாமே என்பார்!
சிங்கப்பூரில் நான் தங்கியிருக்கும் கவிதாமாறன் இல்லத்திற்குச் செல்லும் மின்தூக்கி (லிவீயீ) ஒன்றில் ஒரு நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது!
பக்கத்து பிளாக்கில் வசிக்கும் ஒருவர் வளர்த்த கிளி திடீரென காணாமற் போய் விட்டிருக்கிறது. அக்கிளிக்கு இவர் சிகிச்சை தந்து கொண்டிருந்தார். அந் நிலையில் காணாமற் போன அக்கிளியைக் கண்டுபிடித்து  தந்தால் அந்த நபருக்கு 5000 சிங்கப்பூர் டாலர்கள் பரிசு என்று அந்த நோட்டீஸில் குறிப்பிட்டிருந்தார்.
நம்ம இந்திய பணத்திற்கு இது சுமார் இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் 2,40,000 ரூபாய் ஆகிறது! அவரது பாசமும், பரிவும் தான் எத்தகையது! அக்கிளி பற்றிய வர்ணனை அதை வளர்த்துள்ளவர்களின் மனிதநேயத்தையும் - பாசத்தையும் உறவையும்கூட காட்டும் வகையில் அதற்கு சிகிச்சை அளித்துக் கொண் டுள்ளோம். பல மருந்துகளைத் தந்து குணப்படுத்தும் நிலையும் உள்ளது என்று சோகத்தையும் கொட்டியுள்ளார் அந்த அறிவிப்பில்:
அந்த படம் (தனியே காண்க).
பொதுவாக அமெ ரிக்க, அய்ரோப்பிய நாடுகளில் மனிதனாகப் பிறப்பதற்குப் பதிலாக நாயாக, பூனையாக, பிறந்தால்  (றிமீ கிஸீவீனீணீறீ) பெரிய வாய்ப்பு!
அவனைத் திட்டி னால்கூட அலட்சியம் செய்து விடுவான்; ஆனால், அவர்களு டைய நாயை, பூனையைத் திட்டினால் படுகோபத்துடன் சண்டை போடவும் தயங்க மாட்டார்கள்!
இவைகளுக்கு என்னே சொகுசு -வாய்ப்பு! சில நாள் களுக்கு முன் ஆந்திரா வில் மூன்றாவது ஒரு பெண் குழந்தை பிறந்தது என்று வெறுப்படைந்த கணவர் தனியார் மருத் துவமனைக்கு வரவே இல்லை என்றும், மருத் துவமனை பணம்(பில்) கட்ட 25 ஆயிரம் ரூபாய்க்கு அந்தக் குழந் தையை யாரோ ஒருவருக்கு விற்று விட்டு, இந்தப் பெண் வீடு திரும்பி அழு திருக்கிறாள்!
வளர்த்த கிளிக்கு வருத்தம் அங்கு!
பெற்ற கிளியையே விற்ற கொடூரம் இங்கு!
இதுதான் நம்நாட்டில் பாசம் படும்பாடு!
-vsodlnr,29.6.15