பக்கங்கள்

புதன், 19 ஜூலை, 2017

பெரியாரைப் புரிந்து கொள்ள இதோ இரண்டு வெளிச்சங்கள்!




தந்தை பெரியார் என்ற பகுத்தறிவுப் பகலவன் பற்றி இப்போது ஏராளமான நூல்கள் வெளிவருகின்றன.

பல நூல்கள் பெரிதும் வணிக நோக்கத்தோடு வந்தாலும்கூட, சில அரிய நூல்கள் அய்யாவின் அறிவார்ந்த சுயமரியாதை, விஞ்ஞானத்தின் விளக்க ஏடுகளாக விவரங்களும், விவேகமும் உள்ளடக்கமான நூல்களாக வெளிவந்துள்ளன!

தந்தை பெரியார் என்ற ஒப்பாரும் மிக்காருமான சுயசிந்தனையாளர் பற்றி வெளிவரும் நூல்களை மூன்று வகைகளாகப் பகுக்கலாம்!

1. தந்தை பெரியாரைத் தெரிந்து கொள்ளுதல் - நூற்கள் வகையறா,

2. தந்தை பெரியாரை அறிந்து கொள்ளும் நூல்கள் பட்டியல்!

3. தந்தை பெரியார் பற்றிப் புரிந்து கொள்ளும் அரிய நூற்கள்!

மூன்றாவது (பட்டியலின்படி) - புரிந்து கொண்டு, மகிழ வேண்டிய வாய்ப்புள்ள நூல்கள் இரண்டு அண்மையில் வெளிவந்துள்ளன.
ஒன்று நீடாமங்கலம் தோழர் 'நீலன்' அவர்களால் தொகுக்கப்பட்ட "பெரியாரைத் தெரியுமா?" என்ற நூல்.

மற்றொன்று அண்மையில் 16.7.2017 அன்று திருவாரூரில் நடைபெற்ற திருவாரூர் மண்டலக் கழகக் கலந்துரையாடலின்போது, தோழர் ஞான.வள்ளுவன் அவர்களால் மேடையில் என்னிடம் தரப்பட்ட நூல்.

முன்னே குறிப்பிட்ட தோழர் 'நீலன்' அவர்களது நூலை, தோழர் கவிஞர் கலி.பூங்குன்றன் மூலமாக அதன் தொகுப்பாசிரியர் நீடாமங்கலம் தோழர் நீலன் அவர்கள் எனக்கு அளித்த சில நாள்களில் (2 வாரங்கள் முன்பு) படித்தேன். சுவைத்தேன். ஆம். அது ஒரு தேன்கூடு - தெவிட்டாத

கருத்துக் கொம்புத் தேன்!

முகவுரையில் தொகுப்பாசிரியர் நீலன் கூறுகிறார் கேளுங்கள்.

"இந்நூல் தந்தை பெரியாருடைய வாழ்க்கை வரலாற்று நூல் அல்ல. அவர் வாழ்க்கையில் நடைபெற்ற, கடைப்பிடித்த கொள்கைகளின், சித்தாந்தங்களின் வெளிப்பாடுதான் இந்நூல்! பெரியார் அவர்களின் சமுதாயம், அரசியல், பொருளாதாரம், கலை இலக்கியம், விஞ்ஞானம் போன்ற தலைப்புகளில் எடுத்துச் சொல்லிய உயர் கருத்துக்களின் தொகுப்பே இந்நூல். இதில் நம்முடைய சொந்தக் கருத்து எதுவும் இல்லை".
500 பக்கங்கள் - 300 ரூபாய். இன்றைய காலகட்டத்தில் இதை அதிக விலை என்று கூறிட முடியாது. பெரியார் பற்றி புரிந்து கொள்ள பெரிதும் உதவும் அரிய கருவூலம் இந்நூல்.

அதுபோலவே அரசு ஊழியத்திலிருந்து ஓய்வு பெற்ற தோழர் ஞான.வள்ளுவன், வைத்தீசுவரன் கோயில் என்ற ஊரைச் சேர்ந்த கழக வீரர்! ஆசிரியர் ஞானசம்பந்தம் அவர்களின் கொள்கை விழுது (மகன்). தந்தையாரும், தந்தை பெரியாரும் இவரைச் செதுக்கியுள்ளனர் சிறப்பாக என்பது அவர் தனித்துவத்தினைக் காட்டுகின்றது. தந்தை பெரியார் பெயரில், பெரியார் 95 என்ற தலைப்பில் 95 தலைப்புகளில் எழுதியுள்ள இந்நூல் தந்தை பெரியார் பற்றி மட்டுமல்ல (அவரது இளமைக்காலம், வாழ்வு பற்றி மட்டுமல்ல) - அவரது இயக்கம், பங்கேற்ற போராட்டங்கள், பல்வேறு தோழர்கள் - தொண்டர்கள் - அன்னை மணியம்மையாரின் தொண்டறம், அவரது அரிய முடிவான தீர்க்கங்கள், அவர் சந்தித்த துரோகங்கள் உள்பட, நயத்தக்க நாகரிகத்துடன் உண்மைகளை களபலியாக்காமல், படிக்க ஏதோ ஒரு புதினம் போல எழுதியுள்ளார் அவர்.

நமது இயக்க நூல்கள் - வரலாறு - போராட்டங்கள் இவைகளின் ஒரு பிழிவு (Digest) என்ற பாணியில் இந்நூல் சுவைபட அமைகிறது.
மாலை 7.30 மணிக்குத் தந்தார் திருவாரூரில், அறைக்குச் சென்று ரயிலுக்கு வருமுன்னரும், வந்த பின்னர் தொடர் வண்டியில் இரவு தூக்கத்திற்கு முன்பும் படித்தேன், சுவைத்தேன்!

இவ்விரு நூல்களும் குறிப்பாக இளைய சமுதாயத்தினர் அய்யாவைப் புரிந்து கொள்ள பெரிய வழிகாட்டி (Guide) நூற்கள் போல அமைந்துள்ளன! இந்நூல் 454 பக்கங்கள் - 300 ரூபாய் விலை.

நவில் தொறும் நூல் நயம் பொங்கி வழிகின்றன!

வாங்கிப் படியுங்கள்; இதில் உள்ள பல அரிய கருத்துக் கருவூலங்களை, Whatsapp, Twitter, Facebook போன்றவற்றில் சிறிது சிறிதாக எடுத்துப் போட்டுப் பரப்பவும் செய்யுங்கள்.

அவரவர்கள் தொண்டறப் பணியாகட்டும்!

நூல்: பெரியாரைத் தெரியுமா?, தொகுப்பாசிரியர்: உ.நீலன், அருள் பதிப்பகம், 6, வினாயகம் பேட்டை தெரு, சைதாப்பேட்டை, சென்னை - 15. தொலைபேசி: 044-24355052

நூல்: பெரியார் 95, ஆசிரியர்: ஞான.வள்ளுவன், இனியன் பதிப்பகம், தந்தை பெரியார் இல்லம், 55/24, வடக்குத் தேர் தெரு, வைத்தீசுவரன் கோயில் - 609 117. சீர்காழி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம். கைப்பேசி: 94439 85889.

. -விடுதலை,19.7.17

திங்கள், 3 ஜூலை, 2017

மலரும் மனங்களும்



திருமதி. சுந்தரிவெள்ளையன் 86 வயது வரை வாழ்ந்து மறைந்த ஒரு பெண் பொறியாளராக - அக்காலத்தில் சென்னை கிண்டி எஞ்சினியரிங் கல்லூரியில் (பிறகுதான் அது அண்ணா பல்கலைக் கழகமாகப் பெரிதாய் உருவெடுத்தது) பெரிதும் ஆண்கள் மாணவர்கள்தான் பொறியியல் (B.E.) பட்டப் படிப்புப் படிப்பவர்; பெண்களை அதற்கு பெற்றோர்கள் அனுப்புவதே இல்லை.

அக்காலத்தில் மூன்றாவது 'செட்டாக' (Third Set)  பெண்கள் இணைந்து படிப்பதில், வகுப்பில், அதிகம்பட்சம் 3 பெண்கள்தான் படிப்பார்கள்!

முதல் 'செட்டில் (அணி) மே ஜார்ஜ் என்ற கேரளப் பெண்மணி அம்மையாரும், ஒரு சிலரும் படித்து அவர் பிறகு தலைமை எஞ்சினியர் வரை பதவியில் இருந்து ஓய்வு பெற்றார் என்று நினைவு.

திருமதி. சுந்தரி வெள்ளையன் அக்காலத்தில் வியப்புடனும், கேள்விக் குறியுடன் பலரால் பார்க்கப் பட்ட ஒரு பெண் பொறியாளர் ஆவார்!

அவர் அனைத்திந்திய வானொலியில் பொறி யாளர், திருமணமான பிறகு சில ஆண்டுகள் கழித்து, மாநிலப் பணிக்குத் தேர்வு பெற்று,  அடையாறு அரசினர் மகளிர் பாலிடெக்னிக்கின் முதல்வராகப் பொறுப்பேற்றார். (அன்றைய முதல் அமைச்சர் நமது கலைஞர் அதற்கு இந்தி எதிர்ப்புப் போர் வீராங்கனை டாக்டர் தருமாம்பாள் மகளிர் அரசு பாலிடெக்னிக் என்று பிறகு பெயர் சூட்டினார்).

வானொலியில் இருந்தபோது, மாநிலக் கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியராக உயர்ந்த பகுத்தறிவாளர் சி. வெள்ளையன் அவர்களை மணந்தார்.

பத்தாண்டு காலம்தான் அவர்களது மண வாழ்க்கை; பிறகு பேராசிரியர் சி. வெள்ளையன் அவர்கள் திடீரென 1973இல் மாரடைப்பால் மறைந்தார்.

அப்போது இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள், எல்லாம் 9,7,5 வயதுள்ள பெண் குழந்தைகள்!

இந்த தாங்கொணாத சோகத்தை - இழப்பை துணிவுடன் எதிர் கொண்டு தம் மகள்களை நன்றாக வளர்த்து, ஒரு பொறியாளர், இரண்டு டாக்டர்கள் என்பது போல படிக்க வைத்து, தக்க வாழ்க்கை முறையையும் அமைத்துக் கொடுத்தவர் முதல்வர் சுந்தரி வெள்ளையன்! அது மட்டுமல்லாமல் மற்ற உறவு, ஊர் பிள்ளைகளையும் கூட தனது இல்லத்தில் வைத்து ஒரு 'விடுதி' போல நடத்தித் தொண்டறம் நடத்தியவர் அவர்!

'கணவனை இழந்தார்க்குக் காட்டுவது இல்' என்பது சிலப்பதிகாரத்தின் வரிகள் ஆகும்.

முற்றிலும்  அதனைப் பொய்யாக்கி, வாழ்ந்து காட்டுகிறேன் பாருங்கள்; வளர்த்து ஆளாக்குகிறேன் பாருங்கள் என்று நல்ல நிலையில் இன்று இரண்டு பேர் அமெரிக்கா, ஒருவர் இங்கிலாந்து என்று மன நிறைவுடன் வாழுகிறார்கள்.

மறைந்த சுந்தரி வெள்ளையன் அவர்கள் யாருக்கும் வரிந்து கட்டிக் கொண்டு உதவிகள் செய்வார். மற்றவர்களுக்காக துணிந்து யாரிடமும் வாதாடி உதவிகளைப் பெற்றுத் தருவதில் இவர் ஒரு தனித் தன்மையானவர்.

'தம்மின் தம் மக்கள் அறிவுடமை' என்பதைப்போல, அந்த மூன்று மகள்களும் தனது தாயாருக்கு  ஆற்ற வேண்டிய இறுதிக் கடமைகளை ஆற்றினரே! நாளை அவர்கள். (அமெரிக்காவில்) சான் ஓஸ்(Sanjose) இல்லத்தில் நினைவு இரங்கல் நிகழ்ச்சி நடத்திட ஓர் அறிவிப்புச் செய்துள்ளனர்.

அதில் ஒரு புதுமையான அறிவிப்பு; "வருகிறவர்கள் அருள்கூர்ந்து, மலர்களைக் கொண்டு வராமல், பெண் கல்வி தழைக்க, உதவிடும் வகையில் அப்பணத்தை அன்பளிப்பாக அளித்தலே சிறப்பு" என்பதுதான் அவ் அறிவிப்பு!

எவ்வளவு அருமையான பாராட்டு அறிவிப்புப் பார்த்தீர்களா?

பூக்கள் மலர்க் கொத்துகளை செலவழித்து வாங்கி அவற்றைக் குப்பை கூடையில் போடுவதால் யாருக்கு என்ன இலாபம்?

இதுதான் சரியான பகுத்தறிவு மனிதநேய அணுகுமுறை.   சென்ற ஆண்டு சுயமரியாதை வீரான திருமதி. ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம் அம்மையார், "தன் மறைவில், யாரும் பூக்கள், மலர் மாலைகளைக் கொண்டு வராமல், திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அந்தப் பணத்தை உண்டியலில் போட்டு அனுப்புங்கள். அதுவே எனக்குக் காட்டும் அன்பு கலந்த இறுதி மரியாதை" என்று  எழுதி வைத்தாரே! சென்னை பெரியார் திடலில் அவரது உடல் அருகே உண்டியலில் பலரும் பணம் போட்டனர்.  மாலைகள் வாங்கிய ஒரு சிலர்கூட எடுத்துச் சென்று விட்டனர்!

இப்படிச் செய்தல் - மாற்றங்கள் முக்கியம் - தேவையும்கூட!

மலர்களைத் தூவுவதைவிட

மனங்களைத் தூவுங்கள்! - மன உணர்வுகளே முக்கியம்.

அதுவே  வரவேற்கத்தக்கது.



-விடுதலை,3.7.17