பக்கங்கள்

வெள்ளி, 23 நவம்பர், 2018

இளைஞர்களே, இதோ ஒரு ஒளிக்கீற்று!



"அந்தி மழை" - அருமையான தமிழ் தாளிகைகளில் ஒன்று. பல்வேறு பொருள்கள் அடங்கிய ஒரு சிறிய இலக்கிய அங்காடி; அதன் நிறுவன ஆசிரியர்களில் ஒருவரான சீரிய எழுத்தாளர் - கருத்தாளர் நண்பர் பி. இளங்கோவன் அவர்களும், அருமைத் தோழர், எழுத்துலக எழுச்சி வீரர் ப. திருமாவேலன் அவர்களும் என்னை 20.11.2018 மாலை பெரியார் திடலில் சந்தித்தனர் - அப்போது அந்தி மழையும் பெய்து கொண்டிருந்தது!

நண்பர் பல அருமையான நூல்களைத் தந்தார்.

இவரும், மற்றொரு நிறுவன ஆசிரியருமான நண்பர் அசோகனும் இணைந்தே இந்த 'பத்திய' முயற்சிப் பத்திரிக்கைகளை தொடர்ந்து நடத்த பல பத்தியங்களைக் கடைப்பிடித்துக் கரை சேர வேண்டுமல்லவா? இருவருமே - கால்நடைத் துறை மருத்துவர்கள் - அந்தத் தொழிலில் வருவாய் கண்ணோட்டம் பார்க்காது - கால்நடைகளைவிடக் கேவலமாக மதிக்கப்படும் தமிழ்நாட்டு மக்களின் புத்தாக்கச் சிந்தனையைத் தூண்ட தங்கள் எழுதுகோல்களைப் பயன்படுத்தும் வகையில் லாபம் சாரா எழுத்துப் பணியில் அலுப்பு, சலிப்பின்றி ஈடுபட்டு வெற்றிகரமாக தங்களின் ஏட்டினை நடத்தி வருகிறார்கள்!

'அந்தி மழை' விடாமல் பெய்கிறது - காய்ந்த  நிலங்களை கனத்த ஈரத்திற்குள்ளாக்க!

அவர் தந்த ஒரு நூல் 'கரன்ஸி காலனி' 'சிக்ஸ்த்சென்ஸ்' பதிப்பக வெளியீடு.

படித்தேன் - சுவைத்தேன். அதன் முன்னுரையே, தொழில் தொடங்கவிருக்கும் - விழையும் - இளைஞர்களுக்கு வழிகாட்டும் நுழைவு வாயிலாக உள்ளதால் அதனை அப்படியே தருகிறேன். படியுங்கள்.

"அப்போது நான் குஜராத் மாநிலத்திலுள்ள பரோடாவில் வசித்து வந்தேன். உத்திரபிரதேசம், பீகார் பகுதிகளில் வேலை நிமித்தமாக பயணம் செய்துவிட்டு திரும்பி வந்திருந்த நாள். எங்கள் தெருவில் வசிக்கும் அந்தப் பெண்மணி வீட்டிற்கு அழைப்பிதழோடு வந்தார். தனது மகனின் புதிய கடையின் திறப்புவிழா விற்கு கண்டிப்பாக வரவேண்டுமென்று அழைத்தார். பத்தாம் வகுப்பு பெயிலான பத்தொன்பது வயது பையனின் சிறு கடை நண்பர்கள் சுற்றம் சூழ திறக்கப்பட்டது. அன்று எனக்கு மூன்று சம்பவங்கள் நினைவிற்கு வந்தன.

படிப்பை நிறுத்திவிட்டு தொழில் செய்ய விரும்பு வதாக  நான் கூறிய போது, "படிப்பறிவில்லாமல் தொழில் செய்தால் பெரிய அளவிற்குப் போக முடியாது. படித்து பட்டம் வாங்கி விட்டு தொழில் செய்." என்றது குடும்பம். அப்போது எனக்கு வயது 16.

கால்நடை மருத்துவத்தில் பட்டம் பெற்ற பின் தொழில் தொடங்க விரும்பிய போது ,"இந்த படிப்பிற்கு அழகான வேலை கிடைக்கும் ,ராஜா மாதிரி வாழலாம். அனுபவம் இல்லாமல் ஏன் தொழில் தொடங்கி கஷ்டப்படனும்" என்று தடை  போட்டது குடும்பம். தொழில் நுட்பப் பட்டம் பெற்று பத்தாண்டுகள் அனுபவம் பெற்ற பின் தொழில் தொடங்க முற்பட்ட போது ,"கிரக நிலை சரியில்லை" என்றது குடும்பம். என் குடும்பத்தைப்  போலவே, பெரும்பாலான இந்திய குடும் பங்கள் மிகுதியான  அன்பின்  காரணமாக, தொழில் தொடங்க தடை விதிக்கின்றன. நஷ்ட மடைந்து விட்டால், தோற்றுப் போய் தெருவிற்கு வந்து விட்டால்.... என்று நிறைய பயங்கள்.

குஜராத், ராஜஸ்தான் , மகாராஷ்டிராவில் வாழும் சில சமூகங்களில் மட்டுமே தொழில் தொடங்க குடும்பமே அடித்தளமாக அமைகிறது. இந்தியாவில் பெரு நிறுவனங்களில் பெரும்பாலானவை இவர் களுக்குச் சொந்தமானவைதான்.

தொழில் நடத்துவது மலையேறுவது போல்தான். "எல்லா மலைகளின் மீதும் ஒரு பாதை இருக்கிறது. ஆனால் அது சமவெளியில் இருந்து பார்த்தால் தெரி யாது" என்கிற  அமெரிக்க கவிஞர் தியோடர் ரோத்கி (Theodore Rothke)யின் வார்த்தைகளை அடிப்படை யாகக் கொண்டு கரன்ஸி காலனியை எழுதியுள்ளேன்.

தொழிலுலகை ஆளும் குடும்பங்கள் தங்களது இளைய தலைமுறைக்கு கிசுகிசுப்பான குரலில் தொழில் என்ற மலைப்பாதையின் சூட்சமங்கள் பற்றி என்ன போதிக்கிறதோ, அதை கதைகளாலும், சம்பவங்களாலும் 'கரன்ஸி காலனி' உரக்க பேசுகிறது.

ஏற்கனவே தொழில் நடத்துபவர்கள் 'கரன்ஸி காலனியை' படித்தால் அடுத்த கட்டத்திற்கு நகரலாம். எனக்காக திரட்டப்பட்ட அனுபவங்களின் தொகுப்பு தான் 'கரன்ஸி காலனி'. இதன் ஒவ்வொரு அத்தியாயத்தையும் என் வாழ்வில் பயன்படுத்தி வெற்றி பெற்ற பின் தான் புத்தக வடிவில் வெளியிட முனைந்துள்ளேன். இந்த புத்தகத்தை வெளியிடும் 'சிக்ஸ்த்சென்ஸ்' புகழேந்தி அவர்களுக்கும், அவரது குழுவிற்கும் எனது அன்பும் நன்றியும்.

கரன்ஸி காலனியின் பக்கங்கள் ஒவ்வொன்றும் தொழில் முனைவோரின் மனங்களை பொன் விளையும் பூமியாக மாற்றும்.

என்றும் உங்கள்... அந்திமழை ந.இளங்கோவன் பெங்களூரு, 30/9/2016."

தஞ்சை பெரியார் மணியம்மை தொழில் நுட்ப (நிகர்நிலை) பல்கலைக் கழகத்தில் அது கல்லூரியாக இயங்கியதிலிருந்து  - பட்டதாரியாகி வெளியேறும்  காலத்தில்  ஒரு முழக்கம் என்ன தெரியுமா?

"நாங்கள் வேலை கேட்க மாட்டோம்

நாங்கள் மற்றவர்கட்கு வேலை கொடுப்போம்"

இதை நமது மேனாள் மக்கள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள் அதை வெகுவாகப் பாராட்டி மற்றவர்களுக்கும் செல்லுமிடங்களெல்லாம் கூறி மகிழ்ந்தார்!

இளைஞர்கள் தன்மானம், தன்னம்பிக்கையுடன், துணிந்தால் தன்னறிவே கதவைத் தட்டும் புதுவாழ்வு! புரிகிறதா?

- விடுதலை நாளேடு, 23.11.18

புதன், 21 நவம்பர், 2018

புயல் - பூகம்பம் - சுனாமி போதிக்கும் பாடங்கள்!



கஜா புயல் என்ற திடீர் இயற்கைப் பேரிடர் பற்றிய நெஞ்சைப் பிளக்கும் துன்பச் செய்திகளைக் கேட்டும், காட்சிகளைப் பார்த்தும் உள்ளம் வேதனையில் வாடுகிறது.

இயற்கைச் சீற்றங்கள் தவிர்க்க முடியாதவை. இயற்கையை சீண்டும் மனித குலத்துக்கு அது அவ்வப் போது தக்க பாடங்களைக் கற்பித்துக் கொண்டே வருகிறது! ஆனால் மனிதர்கள் தான் உரிய பாடங்களைக் கற்றுத் திருந்தி வாழ ஏனோ மறுக்கிறார்கள்!

என்றாலும் மனித நேயம் இந்த வாய்ப்புகளில் பெருக்கெடுத்தோடவும் தவறுவதே இல்லை; கட்சி, ஜாதி, மதம், வட்டாரம் என்ற குறுகிய வட்டங்களி லிருந்தும், பொந்துகளிலிருந்தும், கூடுகளிலிருந்தும் மனிதர்கள் வெளியே வந்து அனைவரும் உறவாக யாவரும் கேளிர் என்று செயல்படுவது, பாலைவனத்தில் ஒரு சோலை ஊற்று போலல்லவா?

பூகம்பமும், புயலும், மழை வெள்ளமும், கடல் சீற்றமும் - இயற்கையின் சோக உற்பாதங்கள் அனைத்துமே மனிதர்களைப் பிரித்துப் பார்க்காமல், அனைவருக்கும் அனைத்துத் துன்பங்களையும் பிரித்தே வழங்குகிறது என்று துணிந்து கூற முடியாது. ஏழைகளின் குடிசைகளைத் தூக்கும் காற்று, பணக்காரர்களின் மாட மாளிகையிடம் நெருங்கவே  அஞ்சுகிறதே! பெரு முதலாளி கண்டு பல அரசுகளும் தான் அஞ்சுகின்றனவே!ஆனால் துன்பத்தை அவர்களுக்கு அளிக்கவில்லையே என்பதற்காக நாம் இதனை எழுதவில்லை; மாறாக அவர்களுக்கு அவர்கள் பல வழிகளில் - குறுக்கு வழிகள் உட்பட சம்பாதித்த செல்வம் - வீடு நிரந்தரம் அல்ல - இந்த செயற்கையான, நிலையற்ற, சொத்து சேர்ப்பை இயற்கையாகிய யான் நீதி வழங்கி உங்களை ஒரே நாளில் 'அனாதைகளாக' ஆக்கிவிட முடியும் என்ற பாடத்தைப் போதிக்கக்கூட ஏன் அவர்களை நெருங்க முடியவில்லை என்று கேட்கிறோம், அவ்வளவுதான்!

பல "மல்டி மில்லியனர்கள்" கோடீசுவரர்கள் உட்பட அனைவருக்கும் பாடம் போதிக்கும் வன்மையும், ஆற்றலும் எனக்குப் புயல் காற்றைவிட அதிகம் என்று கூறாமல் கூறுகிறது பூகம்பம்!

ஆம். பூகம்பம் கட்டடங்களை உள்வாங்கி, தக்க முன்னெச்சரிக்கையையும் - அதிர்வுகள் மூலம் - தந்து, மனிதர்களே வெளியேறி விடுங்கள்; இவை  நிரந்தரப் பாதுகாப்பு என்று நினைத்து சொத்துக்களைக் குவிக்கும் பைத்தியக்காரராக ஒரு போதும் இருக்காதீர்கள் என்று போதிக்கிறது  - தன்னுடைய பெருஞ்சினத்தால் - இல்லையா?

'சுனாமி' ஆழிப்புயல் அதற்கெல்லாம் பெரியண்ணன். இயற்கையைச் சுரண்டியே வாழும் மனிதகுலம், பாதுகாக்கத் தவறி, அலட்சியத்தாலும், அகம்பாவத் தாலும் இயற்கை வளங்களை சீரழித்து சின்னா பின்னமாக்கி, வெப்ப சலனத்திற்கு "சிவப்புக் கம்பளம்" விரிக்கும் இந்த மனித குலத்தினை ஏன் கட்டடங் களிலிருந்து மரங்கள் - பயிர்களிலிருந்து வேறுபடுத்தி பாரபட்சம் காட்டுகிறாய் என்று பூகம்பத் திடம் கேள்வி கேட்பது போல அனைத்தையும் மனிதன், மிருகம், செடி, கொடி, வீடு வாசல் எல்லாவற்றையும் அழித்து கோரத்தாண்டவம் ஆடி நமக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறதே - கற்றுக் கொண்டோமா?

தொலைக்காட்சி ஒன்றில் ஓலமிடுகிறார் ஒரு பரிதாபத்திற்குரிய இழப்பாளர்; "அய்யா, நான் வளர்த்த மரமே என் வீட்டின்மீது விழுந்து குடும்பத்தாரின் உயிர் பறிப்புக்குக் காரணமானதே!" என்ற வற்றாத கண்ணீ ருடன், கட்டிய வீடே சரிந்து விழுந்து அந்தக் குடும்பத் தினரின் மரணத்திற்கு எழுதப்பட்ட மரணவோலையாகி விட்டதே என்று அழுது புலம்புகிறார் மற்றொருவர்.

இந்த இழப்புகள் மறைமுகமாக என்ன பாடம் புகட்டுகின்றன தெரியுமா? கற்றுக் கொள்ளத் தவறாதீர்கள்.

முதலாவது, நம்முடைய இயக்கங்கள், குடும்பங்கள், நிறுவனங்கள் நம்மால் வளர்க்கப்பட்டவர்களாலேயே நமது வளர்ச்சிக்கும், வாழ்வுக்கும், தாழ்ச்சியும், வீழ்ச்சியும் ஏன் சில நேரங்களில் வீட்டுச் சுவரே குடும்பத்தவர்களைக் கொன்று தீர்த்ததுபோல் ஆகலாம்; ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட ஒரே காரணத்திற்காக, நயவஞ்சக நாடகம் ஆடி, சுமந்து  பெற்ற தாயும், தந்தையும்கூட தனது வயது வந்த மகளை - படித்து புதுவாழ்வு பெற்ற மகளை கூலிப்படையைக் கொண்டும் கொலை, எரித்துக் கொலை செய்யும் வெறித்தனத்தனத்தைப் போன்றது அல்லவா?

இரண்டாவது பாடமும் உண்டு!

எதற்குச் சேர்ப்பது, நம்முடன் வராத ஒன்றுக்கு என்று எண்ணாமல், நமது சந்ததியினரை சோம்பேறி களாக்கவும், அகம்பாவ ஆணவக்காரர்களாக்கவும் பயன்படுகின்ற செல்வம் - "வீடுமனை, காடு, தோட்டம், துரவு, நகை நட்டுகள்" எல்லாம் நமக்குக் குடிக்கத் தண்ணீரும், பசித்தவயிற்றுக்கு உணவும் இதுபோன்ற புயல், பூகம்பம், சுனாமி காலங்களில் ஒருபோதும் உதவாது. மீண்டும் இயற்கையின் சொத்து இயற்கைக்கே போய் சேரும்.

ஆதலால் மனிதர்களே, மனிதர்களே ஈதல் இசைபட வாழுங்கள்.

தேவைக்கு வைத்துக் கொண்டு, ஆடம்பரத்தைத் துறந்து, தொண்டறப் பணிகளில் ஈடுபடுங்கள்.

வாங்குவதைவிட கொடுப்பது நம் சுமையைக் குறைத்து, சுகத்தை வாழ் நாள் முழுவதும் வழங்கும். மகிழ்ச்சி ஊற்றும், மனநிறைவு எருவும் நம் வாழ்க்கையை வளர்த்து, ஈடிலா இன்பம் பெற்றவர்களாக உங்களை ஆக்கும்!

கொடுப்பதில் இன்பம் சுரக்கும்!

காப்பதால் துன்பச் சுமை இறுக்கும்!

- விடுதலை நாளேடு, 20.11.18

செவ்வாய், 13 நவம்பர், 2018

அறிக - 'அறிக - அறிவியல்' சார்ந்த உடல் நலம்பற்றி!



தவத்திரு. குன்றக்குடி அடிகளார் என்ற தமிழ் மா முனிவர் அறஞ்செய விரும்பிய அறத்துறவியர் ஆவர்! பக்தி குளத்தில் பூத்த பகுத்தறிவு மலர், இனமான உணர்வின் இலக்கணமானவர்! தந்தை பெரியாரை என்றும் பல்வேறு தடங்களில் தனது வழிகாட்டியாகக் கொண்ட, தமிழ்த்திரு ஆதின கர்த்தர்!

அவர்  அந்தத் துறையில் செய்த அறிவியல் பரப்பிடும் பணி அநேகம்.

அதில் ஒன்று "அறிக அறிவியல்" என்ற திங்கள் தாளிகை நடத்தி வரும் ஒரு சிறந்த தொண்டறம்.

அறிவியலைப் பரப்ப வேண்டிய வானொலி, தொலைக்காட்சிகள் மூடநம்பிக்கையை மொத்த வியா பாரிகளாக நின்று செலாவணி செய்யும் இக்கால கட்டத்தில், அறிவியல் நெறியைப் பரப்பிட 'அறிக அறிவியல்' தாளிகையை அடிகளார் தம் அடுத்த வாரிசு - தவத்திரு. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்களும் சிறப்பாகத் தொடருகிறார்.

அதில் பல அருமையான சிந்தனை விருந்து திங்கள்தோறும் படைக்கப்படுகிறது. அதில் "அக்டோபர்" இதழில் ஒரு அருமையான கட்டுரை; உடல் நலம் பேண மூளை முக்கியமல்லவா? 'உணவே மருந்து' என்ற தலைப்பில் வந்த அந்த கட்டுரையைத் தருகிறோம், படித்து, செயல்படுத்துங்கள்!

"எண்ணம், பேச்சு, செயல்பாடு, உடல் உறுப்புக்களின் இயக்கம் என அனைத்துக்கும் காரணமாக இருப்பது நமது மூளையே! தலைப் பகுதியில் இயற்கையாகவே பாதுகாப்பாக அமைந்துள்ள இதில் பெருமூளை (Cerebrum), சிறுமூளை (Cerebellum), முகுளம் (Medulla oblongata) என மூன்று முக்கிய பாகங்கள் உண்டு. இதைத் தவிர பிரைசஸ்டம், தண்டுவடம் என்ற பகுதிகளும் உண்டு.

எழுதுதல், பேசுதல், எண்களை நினைவு கொள் ளுதல், உடல் இயக்கம் போன்றவற்றை மூளையின் இடது பக்கமும், கலை, இயக்கம், உணர்தல் ஆகிய வற்றைக் கண்காணிக்கும் பணியை வலது பக்க மூளையும் செய்கின்றன. மூளையைச் சுற்றியுள்ள பகுதி மண்டை ஓடு, பெரு மூளை, மூளையின் பெரிய பகுதியாகும். உடல் உஷ்ணம், இயக்கம், பார்வை, கேட்பது, தொடுதல், கற்றுக் கொள்ளுதல், முடிவெடுப்பது, பிரச்சினை தீர்வுக்கு வழி காண்பது உள்ளிட்ட முக்கிய பணிகளை இது கவனிக்கிறது. உடல் அசைவு, சுய உணர்வு போன்றவற்றை சிறுமூளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.

உணவின் பங்கு


நினைவாற்றல், உணர்ச்சி வசப்படுதல், மனச்சோர்வு, முரட்டுத்தனம் இவைகள் அனைத்தும் நாம் சாப்பிடும் உணவுகளில் உள்ள கார்போஹைடிரேட், புரதம் மற்றும் கொழுப்புச் சத்துக்களைச் சார்ந்தே உள்ளன. அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடந்த ஆய்வில், ஆரோக்கியமாக உள்ள ஒருவருக்கு சத்துக்கள் குறைந்த உணவைக் கொடுத்தபோது அவரின் மூளை செயல்பாடு வேகம் குறைந்து காணப்பட்டது. அதே நபருக்கு சத்தான உணவுகளைக் கொடுத்தபோது மூளை மீண்டும் வீரியத்துடன் செயல்பட்டது கண்டறியப்பட்டது.

இதற்குக் காரணம் சில ரசாயனப் பொருட்களை நரம்பியல் கடத்திகள், செல்கள் வழியாக மூளைக்குக் கடத்திச் சென்றது கண்டறியப்பட்டது. இதற்குத் தேவையான கச்சாப் பொருளாக சில உணவுப் பொருட்கள் பயன்படுகின்றன. இதனை முன்னோடி (Precursor) என்பர். நாம் உண்ணும் உணவு பல்வேறு வேலைகளைச் செய்யும் கடத்திகளை உண்டாக்குகிறது.

புரத உணவில் டிரிப்டோபென் என்னும் அமினோ அமிலம் உள்ளது. இது மனதை சாந்தப்படுத்தி, நல்ல உறக்கத்தைத் தரும். டைரோசின் என்ற அமினோ அமிலத்திலிருந்துதான் டோபாமைன் மற்றும் நார் எபிநெபிரின் மூளைக்குப் புத்துணர்வு, ஆபத்து குறித்த எச்சரிக்கை உணர்வைத் தரும். அதே நேரத்தில் கார்போஹைடிரேட் மூளையின் செயல்பாட்டைக் குறைக்கிறது.

எனவே, சர்க்கரை, அய்ஸ்கிரீம், அரிசி சோறு, மாமிசம், இனிப்பு, கேக் இவைகளை உணவில் அதிக அளவில் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். கீரை, பச்சைக் காய்கறிகள் மூளையின் செயல்பாட்டை அதிகப்படுத்துவதும் இல்லை, குறைப்பதும் இல்லை. போன்னிபிரிஸ் எனும் மனநல மருத்துவர் கார்ப்போ ஹைடிரேட் உருவாக்கும் மந்த நிலையை மாற்றவே புரதம் உதவுகிறது என்கிறார்.

காபி


தொடக்கத்தில் மூளையைத் தூண்டும் சக்தி கொண் டது என்பதால், அய்ரோப்பாவில் 1,600 ஆம் ஆண்டு களில் மருந்துக் கடைகள் மூலமே காபி வழங்கப்பட்டு வந்தது. காபி அருந்துவதால் மூளை தூண்டப்படுகிறது என்பது உண்மைதான். இதனால் மூளை செல்கள் எப்போதும் துடிப்புடன் இருக்கும். ஆனால் தொடர்ந்து அதிக அளவில் காபி குடிப்பதால் மூளையில் உள்ள செல்கள் பாதிக்கப்படலாம். ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கப் காபி மட்டுமே அருந்தலாம்.

போரான் எனும் அரிய தாதுப் பொருள் மூளையில் மின்சார செயல்பாட்டை உருவாக்கும். நாம் சாப்பிடும் உணவில் போரான் அளவு குறைந்தால் மூளையின் செயல்பாட்டில் சரிவு ஏற்படும். தினமும் 3 மி.கி. போரான் சத்துள்ள உணவு சாப்பிடுவதால் மூளை அலையின் வேகம் அதிகரிப்பதை மூளை வரைவு (EEG) மூலம் தெரிந்து கொள்ளலாம்.

வால்நட், பாதாம்பருப்பு, தண்டுக்கீரை, புரோகோலி, ஆப்பிள், திராட்சை, பேரிக்காய் - இவற்றில் போரான் அதிகம் உள்ளது. 3.5 அவுன்ஸ் நிலக்கடலைப் பருப்பு, ஓர் ஆப்பிள் சாப்பிடுவதால் 3 மி.கி. போரான் நமது உடலில் சேருகிறது. ஈரல், பால், பாதாம், தானியம் இவற்றில் ரிபோபிளவின் இருப்பதால் நினைவாற்றல் அதிகரிக்கும். தையமின், கரோடின், இரும்புச் சத்து, ரிபோபிளவின் போன்ற சத்துக்கள் வயதானவர்களுக்கு நினைவாற்றலைத் தக்க வைத்துக் கொள்ள உதவும்.

கரோடின் கரும்பச்சை காய்கறி, கீரை, ஆரஞ்சு நிறம் கொண்ட பழங்கள், மற்றும் கேரட்டில் கரோடின் உள்ளது. ஈரல், மீன், பச்சைக் காய்கறிகளில் இரும்புச் சத்து உள்ளது.

துத்தநாகம்


மீன், தானியங்கள், முழுப் பருப்பு, பசலைக் கீரை இவற்றில் அதிக அளவில் துத்தநாகம் உள்ளது. நினை வாற்றலை அதிகரிக்கும் தன்மை வாய்ந்தது.

தாய்ப்பால்


தாய்ப்பால் குடித்து வளர்ந்தவர்களைவிட புட்டிப் பால் குடித்து வளர்ந்தவர்களிடம் மூளையின் செயல் பாடு குறைந்து காணப்படும். காரணம் தாய்ப்பாலில் உள்ள சில அரிய பொருட்கள் மூளை செயல்பாட்டிற்கு உதவுகிறது என கண்டறியப்பட்டுள்ளது. புட்டிப்பால் குடித்த குழந்தைகளிடம் அய்.கியு., (I.Q.) 93.1 சதவீதமும், தாய்ப்பால் குடித்த குழந்தைகளிடம் 103.7 சதவீதமும் இருந்தது ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மது வேண்டாமே


மது அருந்துவதால் மூளை பழுதடையும். தொடர்ந்து மது அருந்துபவர்களிடம் எம்ஆர்அய் (MRI), பிஈடி (PET)  சோதனை மூலம் ஆய்வு மேற்கொண்டதில், அவர்களின் மூளை சுருங்கி, பெருமூளையில் பாதிப்பு, வளர்சிதை மாற்றக் குறைபாடு காணப்பட்டது. 30 வயது 'குடி' மகனின் மூளை, 50 வயது உள்ளவரின் மூளை போல காட்சி அளித்தது. எனவே மது அருந்துவதைத் தவிருங்கள். நமது அன்றாட செயல்பாட்டில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் மூளை சிறப்பாகச் செயலாற்ற சத்தான உணவுகளைச் சாப்பிட்டு, தேவையற்ற சிந்தனைகளை ஒதுக்கி ஒளிமயமான வாழ்க்கை வாழ்வோம்."

எனவே நண்பர்களே,

உணவு முறையை மாற்றி நல்ல உடல் நலத்தோடு வாழுங்கள்.

மருந்தே உணவாக்கி வாழாதீர்கள்; உணவே மருந்தாகட்டும் - விருந்தாகட்டும்!

-  விடுதலை நாளேடு, 13.11.18

வெள்ளி, 9 நவம்பர், 2018

தோட்டம் என்ற வகுப்பறை எடுக்கும் பாடம்!

வகுப்பறை" என்பது பள்ளிக்கூடங்களில் மட்டும் தானா உள்ளது?

உலகெங்கும் உள்ளதே, ஓ மனிதா - அவற்றை நீ ஏன் சரியாகப் பயன்படுத்திப் பாடங்களை கற்க ஏனோ தவறி விடுகிறாய்?

இயற்கை மனிதனைப் பார்த்துக் கேட்கிறது!

நம்மைச் சுற்றியுள்ள சமூகத்தில் அன்றாடம் நிகழும் பல்வேறு நிகழ்வுகள் - செய்திகள் மூலம் நாம் பாடம் கற்க வேண்டாமா? அவைகளையும் நமது வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டிய வகுப்பறைகளாக மாற்றிக் கொள்ள வேண்டாமா?

"தமிழகத்தின் முதல் பேராசிரியர் தந்தை பெரியார்; அவரது பொதுக் கூட்டங்களே மாலை நேரக் கல்லூரிகளாக,  வகுப்பறைகளாக மாறி, 3,4 மணி நேரம் மக்களுக்கு வகுப்பெடுப்பார்கள்" என்றார் அவரது தலைமைச் சீடர் அறிஞர் அண்ணா அவர்கள்! உண்மைதானே!

சிறைச்சாலைகள்கூட சிறந்த வகுப்பறைகள்தான் என்பது சிறைக்குச் சென்று திரும்பிய நல்லவர்களுக்குத் தெளிவாகத் தெரியும்! - அந்த வகுப்பறை கற்றுத் தரும் பாடங்கள் ஏராளம்!

"செய்யாத குற்றத்திற்கு 14 ஆண்டு தண்டனையா அய்யோ கிருஷ்ணா உனக்கா?" என்று நெஞ்சம் குமுறி படிப்போரைக் கண்ணீர் கடலுக்குள் தள்ளும் இலக்கியம் போன்ற 'குடிஅரசு' வார ஏட்டில் தலையங்கம் தீட்டிக் குமுறினாரே தந்தை பெரியார்; அதன் பிறகு மேல் முறை யீட்டின் காரணமாக விடுதலை  அடைந்தாரே  நகைச் சுவை அரசர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், (எம்.கே. தியாகராஜபாகவதரும்கூட) அவர்கள்; அவருக்கு  விடுதலையானவுடன்  முதன் முதலாக கடலூர் மஞ்சள்நகர் மைதானத்தில் மாபெரும் மக்கள் வரவேற்பினைத் தந்தோம் - கழக ஏற்பாட்டில்!

அப்போதுதான் அவர் - உடுமலை நாராயணக் கவி அவர்கள் எழுதிய 'ஜெயிலுக்குப் போய் வந்த சிரேஷ்டர்  மக்களை சீர்திருத்துவாங்கோ' என்று  சிறை அனுபவம் எப்படி வகுப்பறை அனுபவமாகவே இருந்தது   என்பதைப் பாட்டுப்பாடி - மக்களுக்கும் அதுபற்றி ஒரு  அறிய - அரியதோர் வகுப்பெடுத்தார்!

"உடம்புக்கு ஒண்ணுன்னா உடனே டாக்டர் ஓடியாந்திருவாங்கோ!" என்றெல்லாம் வரிசைப்படுத்திப் பலதையும் பாடி  முத்தாய்ப்பு வரிகளையும் முத்திரை யாக வைப்பார்.

"கோயில் இல்லிங்க - அங்கே

கோயில் இல்லிங்க - அது

ஒரு குறையா சொல்லுங்க?"

என்று கேட்பார்.

அன்றாட நடைப்பயிற்சியை தோட்டங்களில் நாம் மேற்கொள்ளும்போது, அத்தோட்டத்தில் பூத்துள்ள பூக்களும் காய்த்துப் பழுத்துள்ள பழங்களும்கூட மனிதர்களுக்குப் பாடங்கள் போதிக்கும் சிறந்த இயற்கை என்னும் பேராசான் எடுக்கும் வகுப்பறைப் பாடங்கள் என்பதை நம்மில் பலரும் புரிந்து கொள்ள வேண்டும்!

விதைகளைப் போட்டு; செடிகளாக வளருவதற்கு நாம் தண்ணீர் விடுகிறோம்; சிற்சில நேரங்களில் உரமுமிடுகிறோம்.

அவற்றைப் பெற்று வளர்ந்த அந்த செடிகளும், கொடிகளும், மரங்களும்  எத்தகைய நன்றியை தனது வாழ்வு முடியும் வரையிலோ, அல்லது புயல், வெள்ளம் என்ற இயற்கைப் பேரிடர்கள் நிகழ்வதாலோ ஏற்படும் விபத்துக் காரணமாக வீழும் வரையிலோ - பருவம் தோறும் பூக்களையும், பழங்களையும் தொடர்ந்து தந்துகொண்டே உள்ளன!

சிறு உதவி பெற்று அவற்றை பெரும்பயனாக பூக்களாக, காய்களாக, கீரைகளாக, பழங்களாக மனிதர்களுக்குத் திருப்பித் தந்து நன்றியைக் குவிக்கிறது!

ஆனால் நாம் வளர்க்கும் நமது பிள்ளைகளேகூட, பல குடும்பங்களில், இறக்கை முளைத்தவுடன் பறந்து செல்லும் குஞ்சுகளாகின்றன, தாய்ப் பறவைகளும் தனது கடமை முடிந்து விட்டது என்றே திருப்தி கொண்டு வாழுகின்றன. மனிதர்களைப் போல, பிள்ளைகள் தங்களைக் கவனிக்கவில்லையே என்று குறை கூறி வருத்தம் கொள்ளுவதும் இல்லையே! தோட்டங்களின் வகுப்பறைத் தரும் பாடங்கள் - பல.

தோட்டங்களிலிருந்து நாம் பெற்றுக் கொள்ளத்தான் தெரிந்திருக்கிறோமே தவிர கற்றுக் கொள்ளத் தெரிந்திருக்கிறோமா? புரிந்திருக்கிறோமா? இல்லையே!

இயற்கை நமக்கு சிறந்த ஆசானாக இருந்து வகுப்பெடுக்கிறது!

பூக்களோடு சரி சில செடிகள், பூத்துப் பிறகு காய்த்து கனியாகி சுவை தருவது சிலவகை மரங்கள்!

வண்ணங்களை ரசிக்க ஒரு வகை!

பழங்களை ருசிக்க மற்றொரு வகை!

அடாடா என்னே சிறப்பு - எல்லாப் பழங்களும்கூட ஏற்றுக் கொள்ளக் கூடியவையா? இல்லை.

மனிதர்களில் எல்லா மனிதர்களும் நல்லவர்களா? இல்லையே அதுபோலவே -

எட்டிப் பழுத்து யாருக்கென்ன லாபம்?

விஷ மனிதர்களைப்போல விஷச் செடிகளும்கூட உண்டே!

நமது கரியமில வாயுவை அவை உண்டு, நடை பயிலும் நமக்கு நல்ல  மூச்சுக் காற்றையும் (பிராண வாயு) நமக்குத் தருவதற்கு நாம் அவைகளை வெட்டி வீழ்த்தும் வெட்டி வேலையில் ஈடுபடுவதுதான் பதிலுக்கு நாம் காட்டும் நன்றியா?

1962இல் குடியேறிய எங்கள் வீட்டில், முன்பிருந்தவர் ஒரு பக்தியாளர்; ஒரு துளசிச் செடி நட்டு சிமெண்ட் தளத்தை வீட்டின் முன் வைத்தார்.

நாங்கள் அதைப் பயன்படுத்தாமல் வைத்திருந்து, அதில் ரோஜாச் செடிகளை நட்டோம்; ரோஜா மலர்கள் பூத்துக் குலுங்கி புத்துணர்ச்சியூட்டுகின்றன! மகிழ்கிறோம்-

துளசி தொட்டியிலும் ரோஜாக்கள் முளைக் கின்றனவே!

ஒட்டு மாங்கனிகள்தானே தனிச் சுவையைத் தருகின்றன.

பின் ஏன் மனிதா நீ மட்டும் ஜாதி ஜாதி என்று வெறி பிடித்து ஆணவக் கொலைக்காரனாக அலைந்து காட்டுமிராண்டியாய் ஆகின்றாய்?

- இப்படிக் கேட்காமல் கேட்கிறது! இந்த தோட்டத்தை நோட்டம் விட்டு, வாட்டம் போக்க வாரீர்களா நம்முடன் என்று சொல்லாமல் சொல்லி பாடம் எடுக்கிற இந்த வகுப்பறை களிலிருந்து மனிதர்களே! ஏன் கற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள்?

-  விடுதலை நாளேடு, 9.11.18