பக்கங்கள்

சனி, 28 மார்ச், 2020

"21 நாள்கள்" - வீட்டுக்குள் - எப்படி? எப்படி?

21 நாட்கள் வீட்டுக்குள்ளேயே இருப்பது - மிக வேகமாக உலகெங்கும் பரவிவரும் கரோனா வைரஸ் நம்மைத் தாக்குவதைத் தடுக்கவேயாகும். தனிமைப்படுதல், ஒதுங்கி வாழ்தல், சுயக்கட்டுப்பாடு மூலம் தொற்று பரவாமல் இருக்க முடியும்; இல்லை யெனில் அது மிகவும் வேகமாகப் பல மடங்குப் பெருகி நம் மக்களை அழித்து "அல்லற்பட்டு ஆற்றாது அழுது கண்ணீர் வடிக்கும்" அவலத்திற்கு ஆளாக்கி விடக் கூடும்!

முன்கூட்டியேகூட, ஒரு மாதம் முன்னால்கூட இதைச் செய்திருக்க வேண்டும் என்பது மருத்துவ அறிவியலாளர்களின் கருத்து. என்றாலும் "Better Late than Never" என்பதுபோல, இப்போது நாம் தடுக்காவிட்டால் - இந்த முறையில் நம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டு  இருப்பதைத் தவிர விடியலுக்கு வழியே இல்லை.

இதனை மத்திய அரசோ, மாநில அரசோ அவர்களுக்காகச் செய்யவில்லை; நம் பாதுகாப்புக்கு, நமது நலத்திற்கு - மறந்து விட வேண்டாம்!

எத்தனையோ ஜோதிட சக்ரவர்த்திகள் இருந்தும் கரோனா வைரஸ் வரும் என்று எவராவது சொன்னார்களா?  எல்லாரும் இவ்வாண்டு சுபீட்சம் பொங்கும் - வழியும் ஆண்டு என்றுதான் அளந் தார்கள்! சமூக வலைத்தளங்கள் இதனை நன்கு ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தியுள்ளார்கள். என்றாலும் நம்மாட்களுக்கு ஜோதிடப் பைத்தியம் எளிதில் தீராது; ராசி  பலன் போட்டு, காசு பலன் தேடும் ஏடுகளுக்கு நாட்டில் பஞ்சமே இல்லை!

"நாய் விற்ற காசு குரைக்காது!

கருவாடு விற்ற காசு நாறாது!"

என்பதுபோல - ஜோதிடம் வேண்டும்; இப்படி ஒரு பிரமை!

வானவியல் (Astronomy) என்பதும், ஜோதிடம் என்பதும் (Astrology)  வெவ்வேறு; நேர் எதிர்துருவங்கள்.

ஒன்று விஞ்ஞானம் - அறிவியல்; மற்றொன்று போலி விஞ்ஞானம் - போலி அறிவியல்.

21 நாட்கள் வீட்டுக்குள் இருப்பதை, குடும்ப உறுப்பினர்களோடு இருக்கும் நல் வாய்ப்பாகக் கருதுங்கள்.

எது தவிர்க்க முடியாததோ அதை ஏற்கப் பழகுதல் இனிமை தரும்!

பலவீனத்தையே பலமாக்குவதும், எதையும் நம் பக்கம் சார்பாகப் பயன்படுத்திக் கொள்ளுதல் தான் முழுப் பகுத்தறிவு.

தந்தைபெரியாருக்கு 'பல்செட்' கட்டினார்கள். சிறீரங்கம் (திராவிட) முத்து இன்னும் இருக்கிறார். கருப்புச் சட்டைக்காரரான அவரும், மற்ற பல் டாக்டர்களும் உயர்ந்த பல் செட்டைத் தயாரித்துத் தந்தை பெரியாருக்கு தந்தார்கள் - பொருத்தி பார்த்தனர்.

தந்தை பெரியாருக்குப் பிடிக்கவில்லை. தூக்கி வைத்து விட்டார்!

பல்லில்லாமலே பேசினார் - பல ஆண்டுகளாக வெண்கல நாதக் குரலில்!

'பல்லுபோனால் சொல்லுப்போச்சு'

பொய்யாகியது பெரியார் விஷயத்தில் - அது மட்டுமா?

ஆட்டுக்கறி - மிளகு அரைத்து பக்குவமான 'கருப்புக்கறி'  - அன்னை ஈ.வெ.ரா. மணியம்மை என்ற செவிலித்தாயின் அன்றாடத் தயாரிப்பை சுவைத்து - மென்று சுவைத்துச் சாப்பிட்டார். அய்யா எப்படி தனது ஈறுகளை (Gums) யே பற்களாக்கிக் கொண்டார்!

"அதுபோல இந்த 21 நாள்களை நமது பல 'பாக்கிகளை' தீர்த்து வைக்கப் பயன்படுத்தி மகிழுங்கள். எதற்கும் மறுபயன்  - Recycling உண்டு. இதற்கும் கூடத்தான் - யோசியுங்கள்.

நான் எனது நீண்ட நாள் பாக்கியான முக்கியமாகச் சேர்த்த வீட்டு நூலகப் புத்தகங்களை ஒழுங்குபடுத்தி பேரப் பிள்ளைகளின் உதவியால் கணினிமயப்படுத்தி வரிசைப்படுத்தும் பணி பயனுள்ளதாக அமைந்தது!

அடுத்து "பெரியார்தம் டைரிக் குறிப்பு" என்ற ஆழ் கடலுள் மூழ்கி மூழ்கி முத்துக்களை எடுத்து சேகரித்து வருகின்றேன் - "உங்களுக்காக - வருங்கால வாசக சந்ததிக்காக!"

மறுபயன் - Recycling, 21 நாளும் தேவைதான் - ஓய்வு, இளைப்பாறுதல் என்பது வேறு பணிக்கு நம்மை மாற்றுவதே தவிர, தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது அல்ல. அதற்காக தூக்க நேரத்தையும் குறைக்க வேண்டாமே!

- விடுதலை நாளேடு, 26.3.20

வியாழன், 5 மார்ச், 2020

"வைக்கம் போராட்டம்" என்ற நூலின் வைர ஒளி! (5)&(6)

பெரியார் வைக்கம் சென்றது:

சத்தியாகிரகிகளான குரூர் நீலகண்டன் நம்பூதிரி, ஜார்ஜ் ஜோசப், டி.ஆர். கிருஷ்ணசாமி அய்யர் ஆகியோர் அழைப்பின் பேரிலேயே பெரியார் வைக்கம் போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றார். வந்த அழைப்புகளைத் தெளிவாகத் தேதிகளுடன் பெரியார் தெரிவித்துள்ளார். 'இந்த நிலைமையைத் தானே வலுவில் விரும்பியதாக நினைக்க வேண்டாம். அத்தகைய எண்ணம் இல்லாமல் தடுக்கும்பொருட்டே நான் மேற்கண்ட சமாசாரத்தை வெளியிட்டேன்' எனப் பெரியாரே அச்சூழலை அறிவித்தார் (சுதேசமித்திரன், 15 ஏப்ரல் 1924).

தலைவர்கள் சிறைப்படுத்தப்பட்டதால் தலைவர்கள் இல்லாமல் தவித்துக்கொண்டிருந்தது சத்தியாகிரகம். போராட்டத்தின் மூளையெனக் கருதப்பட்ட ஜார்ஜ் ஜோசப், காந்தியிடமும் இராஜாஜியிடமும் தலைவர்களை வேண்டினார். பெரியாரைத் தந்தி மூலமும் தூதுவர் மூலம் கடிதம் அனுப்பியும் வரவழைத்தார். இந்த இக்கட்டான சூழலில் தக்க நேரத்தில் சென்று சரிந்த போராட்டத்தைத் தாங்கிப் பிடித்தார் பெரியார். பெரியாரைத் தொடர்ந்து வரதராஜுலுவையும் வந்து பொறுப்பேற்க அழைத்தனர். பின்னர் எஸ். இராமநாதன் அப்பொறுப்பை வகித்தார். தமிழ்த் தலைவர்களிடம் கேரளக் காங்கிரசுக்காரர் வைத்திருந்த மதிப்பை இது காட்டுகிறது.

கேரள அழைப்பை ஏற்று பெரியார் வைக்கம் சென்றதற்குக் காரணம், அடிப்படையில் தீண்டாமை ஒழிப்பு நோக்கம் தான். அடுத்தது, அவருக்கே உரிய போராட்ட குணம். மூன்றாவது, தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டித் தலைவராக இருந்தது. தானே தலைவராக இருந்ததால் யார் உத்தரவுக்கும் காத்திருக்காமல் அவரால் புறப்பட முடிந்தது. தலைவர் வேலையை இராஜாஜியைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி எழுதி வைத்து விட்டு அவர் கிளம்பினார். பெரியார் 'சொந்த முறையிலேயே' என்று குறிப்பிடுவதற்குப் பொருள், யார் அனுமதிக்கும் காத்திருக்காமல், தன் முடிவில், விருப்பத்தில் கிளம்பினேன் என்பதே யாகும்.   Personal Capacity என்பதல்ல பொருள். காங்கிரசுக் கமிட்டித் தலைவர் என்ற அந்தஸ்திலேயே அவர் சென்றார். அதனால்தான் பெரியார், இரண்டாம் முறை கைதானபோது அறிக்கை வெளியிட்ட இராஜாஜி பெரியாரை 'நமது தலைவர்' என்றே குறித்தார். கட்சியின் பணம் ரூ. 1000 தலைவர் பெரியார் பொறுப்பிலேயே வைக்கம் சென்றது.

பெரியார் வைக்கம் போராட்டத்தைக் கட்சியின் ஒரு செயல்பாடாக மட்டும் பார்க்கவில்லை. தாழ்த்தப்பட்டவர்களுக்கு உழைக்கக் கிடைத்த வாய்ப்பு என்றே கருதினார். இப்போராட்டத்துக்கு இராஜாஜி முதலில் முன்னுரிமை கொடுக்க விரும்பவில்லை. ஜார்ஜ் ஜோசப் தலைவர்களை அனுப்பக் கோரியபோது இராஜாஜியின் மறுப்பே அதற்கான சான்று. பெரியாரின் முன்னுரிமையைச் சுட்டவே இராஜாஜியைக் குறிப்பிட நேர்ந்தது. தவிர இராஜாஜியை விமர்சிப்பதல்ல இங்கு நோக்கம். முக்கியஸ்தர்களைக்கூட அனுப்ப மறுத்த இராஜாஜி பின்னர் தானே செல்ல நேர்ந்தது வேறு.

வைக்கத்தில் செயல்பாடு:

வைக்கம் சென்ற பெரியார் சத்தியாகிரகம் வெற்றி பெறப் பல வழிகளிலும் செயல்பட்டார். பிரசாரம் அவரது முதல் செயலாக இருந்தது. வைக்கம், சேர்த்தலை, ஆலப்புழை, திருவனந்தபுரம், நாகர்கோயில், தக்கலை, கொல்லம், செங்கணாச்சேரி முதலிய இடங்களில் அவர் பேசியதற்கான பத்திரிகை, அரசு ஆவணங்கள், காவல் துறை அறிக்கை ஆதாரங்கள் கிடைக்கின்றன. இதைத் தவிரவும் வைக்கத்தின் சுற்றுவட்டாரக் கிராமங்களில் பேசினார் என்று சொல்லப் பத்திரிகையாளர் டி.எஸ். சொக்கலிங்கம், சங்கரலிங்க நாடார் போன்றவர்களின் குறிப்புகள் பயன்படுகின்றன.

தீண்டாமை விலக்குக் குழு கூட்டத்திலும், சத்தியாகிரக ஆசிரமத்தில் நடந்த ஆலோசனைக் குழு கூட்டங்களிலும் அவர் கலந்துகொண்டார் (13 ஏப்ரல் 1924; 21 ஏப்ரல் 1924) என்பதற்கும், திவானையும் பிறரையும் கண்டு சமாதானம் பேச அமைக்கப்பட்ட குழுவில் பெரியாரைச் சேர்த்திருந்தனர் என்பதற்கும் ஆதாரங்கள் இருக்கின்றன.

சத்தியாகிரக ஆசிரமம் சார்பில் வைக்கம் தடைசெய்யப்பட்ட வீதியில் வழமையாக நடைபெற்றுவந்த முதன்மைச் சத்தியாகிரகத்திற்கும் பெரியார் தலைமை தாங்கினார் (14 ஏப்ரல் 1924; 22 ஏப்ரல் 1924). பண வசூலிலும் இறங்கியிருக்கிறார். சிறைக்குப் போவதற்கு முதல் நாள்கூட ரூ. 300 பெறுமான அரிசியை ஆசிரமத்துக்குக் கொச்சி வியாபாரிகளிடமிருந்து பெற்று வந்தார்.

இங்ஙனம் ஆசிரமத் தலைமைப் பொறுப்பு, பிரசாரம், ஆலோசனை, சத்தியாகிரக ஊர்வலத் தலைமை, பண வசூல் எனப் பலவிதங்களில் செயலாற்றிச் சத்தியாகிரகம் தொய்வடையாமல் பார்த்துக்கொண்டார். பெரியாரால் இயக்கம் புதிய உயிர் பெற்றது என வைக்கம் ஆவணங்கள் பறைசாற்றுகின்றன.

வைக்கம் பயணங்களும் சிறைவாசங்களும்

இதுவரை விவரிக்கப்பட்ட பெரியாரின் செயல்பாடுகள் அவரது பல பயணங்களின் விளைவுகள் ஆகும். பயணத்தின் விளைவுகள் செயல்பாடுகள் என்றால், தீவிரச் செயல்பாடுகளின் விளைவுகள் சிறைவாசம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. பெரியாரின் வைக்கம் பயணங்களையும் சிறை வாசங்களையும் பின் வருமாறு தொகுத்துச் சொல்லலாம்.

(நூலின் பக்கம்:418-420)

(தொடரும்)

- விடுதலை நாளேடு 4.3.20

"வைக்கம் போராட்டம்" என்ற நூலின் வைர ஒளி! (6)

முதல் பயணம்

இப்பயணத்தில், பெரியார் ஏப்ரல் 13, 1924 அன்று ஈரோட்டிலிருந்து புறப்பட்டு, திருச்சூர் வழியாகக் கொச்சியை அடைகிறார். அங்குத் தீண்டாமை விலக்குக் குழுக் கூட்டத்தில் ஆலோசனை கலந்துவிட்டு, அன்று இரவே வைக்கம் அடைகிறார். 14 காலை வந்தடைந்தார் என்றொரு கருத்தும் உண்டு (காலக்கண்ணாடி, ப. 21). 1924 ஏப்ரல் 13 இரவு முதல் மே 5 வரை வைக்கத்தில் சத்தியாகிரகத்தின் பல்வேறு பணிகளைக் கவனித்து வந்தார். ஆக முதல் பயணம் 22 நாள். இதற்கிடையில் ஏப்ரல் 29, 1924ஆம் தேதி திருவாங்கூர் சமஸ்தானத்தில் பேசுவதற்குத் தடை வேறு விதிக்கப்பட்டது. தான் கைது செய்யப்படலாம் என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டு வந்த இந்த வைக்கம் முதல் பயணத்தில் அவர் கைதாகவில்லை.

இரண்டாவது பயணம்

மே 5ஆம் நாள் ஈரோடு திரும்பிய பெரியார், பத்து நாள் கழித்து மனைவி நாகம்மையுடன் மீண்டும் வைக்கம் வந்திறங்கினார். இந்த இரண்டாவது பயணம், மே 15 தொடங்கிக் கைதாகும் வரை நீடித்தது. சமஸ்தானத்தில் பேசுவதற்கான தடையை மீறியதால் மே 22ஆம் தேதி கைது செய்யப்பட்டார். ஒரு மாதம் வெறுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. மே 22 முதல் 29 வரை, ஏழு நாள் வைக்கம் காவல் நிலை யத்தில் வைக்கப்பட்டிருந்தார். பிறகு 29ஆம் தேதி இரவு ஆறுக்குட்டிக்குக் கொண்டு செல்லப்பட்டார். 1924 மே 22 முதல் ஜூன் 21 வரை ஒரு மாதம் சிறை யிருந்த அப்பயணத்தில் 15 முதல் 21 மே முடிய வெளியில் ஏழு நாள்களையும், மே 22 முதல் ஜூன் 21 முடிய சிறையில் 31 நாள்களையும் பெரியார் கழித்தார்.

மூன்றாவது பயணம்

ஜூன் 21இல் சிறையிலிருந்து வெளியில் வந்ததும் வழக்கமாய் எல்லோரும் எதிர்பார்ப்பது போல் (ஈரோடு) வீட்டுக்கு வராமல் பெரியார் நேராகப் போராட்டத்தில் தொடர்ந்து பங்கேற்கப் பிரவேசத் தடை அமலில் இருக்கும் நிலையிலேயே வைக்கம் சென்றார். 22 ஜூன் 1924 முதல் இரண்டாவது முறை கைதான 18 ஜூலை 1924 வரை வைக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார். இடையில் ஜூலை 4ஆம் நாள் ஈரோடு சென்றதாகத் தெரிகிறது (காலக் கண்ணாடி, ப. 24). பிரவேசத் தடையை மீறி வைக்கத்தில் நுழைந்ததற்காய் விசாரிக்கப்பட்டு 19 ஜூலை 1924இல் சிறைக்கு அனுப்பப்பட்டார். இரண்டாவது தடவையாக தடையை மீறியதற்காக இம்முறை நான்கு மாதம் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது.

ஜூலை 28ஆம் தேதி (காலக் கண்ணாடி, ப. 25) கோட்டயத்திற்கு அழைத்துச் செல்ல இயற்கை தடை யாய் அமைந்ததால் வைக்கம் காவல் நிலையச் சிறையில் முன்போலவே சிலநாள்கள் வைக்கப்பட்டு, பின் திருவனந்த புரம் மத்திய சிறைக்கு அனுப்பப் பட்டார். சிறையில் ஒன்றரை மாதம் போல இருந்தார்.

பின் 30 ஆகஸ்ட் 1924இல் விடுதலையானார். இந்த மூன்றாம் வைக்கம் பயணத்தில் வெளியே 26 நாளும் (22 ஜூன் முதல் 18 ஜூலை முடிய), சிறையில் 43 நாளும் (19 ஜூலை முதல் 30 ஆகஸ்ட் முடிய) இருந்தார் பெரியார்.

நான்காவது பயணம்

சித்திரைத் திருநாள் பட்டம் ஏற்றதையொட்டி, நல்லெண்ண நடவடிக்கையாகத் திருவனந்தபுரம் மத்திய சிறையிலிருந்து 30 ஆகஸ்ட் 1924 விடுதலை யான பெரியார், மறுநாள் ஆகஸ்ட் 31 முதல் வீடு திரும்பிய 9 செப்டம்பர் 1924 வரை திருவாங்கூரில் இருந்தார். நாகம்மையார் பெரியார் விடுதலையான தேதி செப்டம்பர் 1 எனக் குறிக்கிறார் (நாடார்குல மித்திரன், 29 செப்டம்பர் 1924). நெடுங்கணா (செப். 5), நாகர்கோயில் (செப். 6) போன்ற இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டது தெரிகிறது. முன்போலவே இம்முறையும் சிறையிலிருந்து வெளியே வந்ததும் நேரே வீட்டுக்குப் போகவில்லை பெரியார். ஈரோடு திரும்பும்வரை ஒன்பது நாள் (ஆகஸ்ட் 31 முதல் செப். 8 முடிய) வெளியே திருவாங்கூர் சமஸ்தானத்தில் சத்தியாகிரகப் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். ஈரோட்டில் 1924 செப்டம்பர் 11இல் வேறு வழக்கு காரணமாகப் பிரிட்டிஷ் இந்திய அரசு அவரைக் கைது செய்தது வேறு.

அய்ந்தாவது பயணம்

டிசம்பர் 1924இல் வைக்கம் சென்று பெல்காம் காங்கிரசு மாநாட்டுச் சமயம் பெரியார் திரும்பி வருவார் என்று தமிழ்நாட்டு காங்கிரசுக் கமிட்டி மேலாளர் தெரிவித்திருந்தார் (நாடார்குல மித்திரன், 22 டிசம்பர் 1924). இதிலிருந்து பெரியார் டிசம்பர் 1924இல் வைக்கம் சென்றிருக்கலாம் என்று யூகிக்கலாம். தவிர இப்பயணத்தில் எவ்வளவு நாள் வைக்கத்தில் இருந்தார் என்பதற்கு ஆதாரங்கள் கிடைக்கவில்லை. மேலாளர் அறிவித்திருந்தவாறு வைக்கம் சென்றாரா என்பதுமே உறுதி செய்ய முடியவில்லை. வே.ஆனைமுத்து உருவாக்கிய 'காலக்கண்ணாடி'யிலும் குறிப்புகள் இல்லை.

ஆறாவது பயணம்

1925 மார்ச் 10 முதல் 18 வரை திருவாங்கூர் வந்திருந்தார் காந்தி. சத்தியாகிரகிகள், வைதிகர்கள், மகாராணிகள், நாராயண குரு, திவான், காவல்துறை ஆணையர் ஆகியோரைச் சந்தித்து விட்டுத் திரும்பினார். அப்பயணத்தில் பெரியார், வர்க்கலை, சிவகிரி, திருவனந்தபுரம் ஆகிய இடங்களுக்கு காந்தி யுடன் சென்றிருந்ததற்கு ஆதாரங்கள் கிடைக்கின்றன.

1925 மார்ச் 12 அன்று சிவகிரியில் காந்தியுடன் நாராயண குருவைச் சந்தித்தார் பெரியார். உடன் இராஜாஜி, வ.வே.சு. அய்யர் ஆகியோர் இருந்தனர். மறுநாள் திருவனந்தபுரத்தில் காந்தியுடன் பெரியார் பேசியதாகப் பெரியாரே பலமுறை தெரிவித்துள்ளார். வேறு நூல் ஆதாரங்களும் தரப்பட்டுள்ளன. ஆக இவ்விரண்டு நாள்களில் பெரியார் திருவாங்கூரில் இருந்தது உறுதியாகிறது அந்நிகழ்வுகளுக்கு முன்பின் னாகத் திருவாங்கூரில் தங்கிய நாள்கள் குறித்த விவரம் இதுவரை கிடைக்கவில்லை. இப்போது கிடைக்கும் ஆதாரப்படி வெளியே கழிந்த இரண்டு நாள்களாக அவரது ஆறாவது பயணத்தைச் சுருக்கக் கணக்கிடலாம்.

ஏழாவது பயணம்

சத்தியாகிரகத்தின் தொடர்பில் பெரியாரின் நிறைவான வைக்கம் பயணம் இது. வைக்கம் சத்தியாகிரக வெற்றிவிழாப் பொதுக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கச் சென்ற பயணம். விழாவில் கேரளத்துக்கு வெளியிலிருந்து கலந்துகொண்டவர் பெரியார் மட்டுமே. வெற்றிவிழாவிற்கு நாகம்மை யுடன் பெரியார் சென்றார். தீண்டாதார் மற்றும் ஏழைகளுக்காகக் கல்வி கற்பிக்கச் சேலத்தில் ஏற்படுத்தப்பட்ட ஸ்ரீ தியாகராய நிலையத்தின் முன்னரே திட்டமிடப்பட்ட திறப்பு விழாவைத் தள்ளிவைத்து விட்டு வெற்றிவிழாவிற்குப் பெரியார் சென்றார் ("குடிஅரசு"  29 நவம்பர் 1925). அவ்விழாவில் கேளப்பன், டி.கே.மாதவன், மன்னத்து பத்மநாபன் ஆகியோருடன் கலந்துகொண்டார். இம்முறை எத்தனை நாள் பெரியார் வைக்கத்தில் இருந்தார் என்று தெரியவில்லை.

ஆக இவ்வேழு பயணங்களில் பெரியார் திருவாங்கூரில் வெளியே (22+7+26+9+0+2+1) 67 நாள்களும், சிறையில் (0+31+43+0+0+0+0) 74 நாள்களும் தங்கியிருந்து வைக்கம் போராட்டத்தில் பங்கேற்றார் எனலாம். ஆக மொத்தம் 141 நாள். இவை உறுதியாகத் தெரிந்த பத்திரிகை ஆதாரங்களின் படியான கணக்கு. புதிய ஆதாரங்கள் கிடைக்குமானால் மேலும் எண்ணிக்கை கூடும். 1924 ஜூலை 4இல் வைக்கத்தி லிருந்து ஈரோடு சென்ற பெரியார் எப்போது திரும்பினார் எனத் தெரியவில்லை. அந்த வகையில் மட்டும் வைக்கத்தில் இருந்த நாள்களில் சில குறையலாம். காந்தியின் வருகையின்போது இருந்த நாள்களில் சில கூடவும் செய்யலாம்.

(நூலின் பக்கம்:420-423)

(தொடரும்)

விடுதலை நாளேடு 4.3.20



செவ்வாய், 3 மார்ச், 2020

"வைக்கம் போராட்டம்" என்ற நூலின் வைர ஒளி! (3),(4)

'வைக்கம் போராட்டம்' என்ற ஆராய்ச்சி வரலாற்று ஆவணம்  - 10,12 ஆண்டு கால உழைப்பு, தேடல்கள் மூலம் பழ. அதியமான் பெற்றெடுத்த அரிய  நூலின் (பக்கங்கள் 646) வைர ஒளியின் வீச்சில் சில பகுதிகள் இதோ!

தந்தை பெரியாரின் வாதத் திறமை, சொல்லாற்றல், அறிவும், செறிவும், மறுக்க முடியாத ஆணித்தரமான விளக்கங் களும் எப்படிப்பட்டவை என்ப தற்குப் போதிய சான்றாக 'வைக்கம் வீரர்' என்று தமிழ்த் தென்றல் திரு.வி.க.வினால் பெருமைப்படுத்தப் பட்டதற்குரிய - போராட்ட காலத்தில் அவர் நிகழ்த்திய பேருரைகளே அமைந்துள்ளன. அவைகளில் சில நமது இளைய தலைமுறை யினரின் அறிவுப் பசிக்கான அமுதமாக இதோ:

"வைக்கம் சத்தியாகிரகம் என்ற போர் அரசாங்கத்துக்கு எதிரானதல்ல, மதச் சண்டை அல்ல, வகுப்புச் சண்டையும் அல்ல. இது பொது நலனுக்கான செயல். சமத்துவத்தை நிறுவும் நோக்கம் கொண்டது. இந்தப் பணியில், நாம் நல்ல நிலையில் இருக்கும் எவரையும் நம்பி இருக்கக் கூடாது. வேகமாக மறைந்து வருகிற மற்ற மதங்கள் எல்லாம் மக்கள் தொகையில் 5, 10, 15 சதவீதம் வளர்ந்து வருவதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன, இந்து மக்கள் தொகை 6 சதவீதம் குறைந்து விட்டது கடந்த 10 ஆண்டுகளில். இது இந்துக்கள் கல்யாணம் செய்து கொள்ளவில்லை, குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளவில்லை என்பதைக் காட்டு கிறதா? இந்துக்களில் ஒரு பகுதியினரை நடத்தும் மோசமான முறை அவர்களை மற்ற மதங்களில் சேரத் தூண்டுகிறது. இந்த நிலைமை நீடிக்குமானால் இந்துக்கள் இல்லாமல் போய் விடுவர். ராஜ பக்திக்கு எதிராக இருப்பினும் மத பக்தி கடைப்பிடிக்கப்படவேண்டும்.

ஒரு இந்து மற்ற ஒருவரைத் தீண்டாதவர் எனக் கருதுகையில், முகமதியர்களும் கிறித்தவர்களும் அவர்களது மதத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரையும், அவர்கள் அம்மதத்தில் பிறந்திருந்தாலும் மாறியவராக இருந்தாலும் சமமாக கருதுகின்றனர்.

அரசாங்கம், சமாதானத்துக்காக அளித்த பல்வேறு யோசனைகளும் ஒப்புக்கொள்ளத் தக்கவை அல்ல. அதில் ஒன்று, சாலைகள் கோயில் சொத்து என்பது. மகாராஜாவுக்கு ஏதாவது சொத்து இருக்கிறதா? முழு ராஜ்யமே ஸ்ரீ பத்மனாபனுக்குச் சொந்தமானது என்பதால் இராஜ்யமே கோயில் சொத்துதான். இது அவரது தாத்தாவின் சொத்தல்ல. முகமதியர்களையும் கிறித்தவர்களையும் அச்சாலைகளில் நுழைய விடாமல் தடுத்துவிட்டால் உங்களுக்குத் திருப்தியா என்று கேட்கிறது? இது ஒரு அரசரின் கட்டளை போல உள்ளது. அரசர் ஒருமுறை, பொருளை அளக்கும் .......... என்று ஆணை யிட்டார். கீழ்ப்பகுதி, நேராக அளக்கும்போது பிடிக்கும் அளவைவிட குறைவாகப் பிடிக்கிறது என்று மக்கள் புகார் சொன்னார்கள். நிலை மையைச் சமாதானம் செய்த அரசர், படியைப் பக்கவாட்டில் அளக்கும்படி ஆணையிட்டார். இதனால் கீழ்ப்பகுதியைக் கொண்டு அளக்கும் போது கிடைத்ததும் இழக்கப்பட்டது, வைக்கத்தில் அளிக்கப்படும் சமாதானத்தை இதற்கு ஒப்பிடமுடியும்.

நாங்கள் பசியாக இருக் கிறோம் என்று சொன்னால், பசியாக இருக்கிறோம் என்று நீங்கள் ஏன் சொல்கிறீர்கள் என்றால் மற்றவர் சாப்பிடு வதை நீங்கள் பார்க்கிறீர்கள் என்று அரசாங்கம் சொல்கிறது! சாப்பிடும் மற்றவர் உணவைப் பறித்து விடுகிறோம் என்கிறது!!

திருவாங்கூருக்கு வரும் போது பிரிட்டிஷ் அரசாங்கம் மோசமான அரசாங்கமாக இருக்கிறது என்ற எண்ணத்தில் இருந்தேன், ஏனெனில் அவர்கள் நோக்கத்தை அடைய பொய் சொல்லவும் தந்திரத்தைக் கையாளவும் தயங்க மாட்டார்கள். இந்த நாட்டு நடைமுறைகளைப் பார்க்கும்போது பிரிட்டிஷ் அரசாங்கம் தேவ லாம் என்று நினைக்கிறேன். பிரச்சினைக்குரிய சாலையின் ஓரத்தில் நின்றிருக்கும் மரங்களில் எழுதப்பட்டிருந்த  PWD என்ற எழுத்துகளை இந்த அரசாங்கம் நீக்கியுள்ளது. இது மோசடி இல்லையா? இந்த அரசாங்கத்தை நம்பினால் நமது நோக்கத்தை அடைவது சாத்தியமா?

வருணங்களின் இருப்பை மதிக்கும் ஒருவர் என இவ்வரசர் பேசப்படுகிறார். அரசின் உயர் பதவிகளுக்கு தாழ்ந்த சாதியினர் என்று சொல் லப்படுபவரை நியமிக்கும் போது இத்தகைய எண்ணங்களைக் கொண்டிருக்கிறாரா? ஒரு தீயர் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்படுகிறார் - அவரது ஏவலர்கள் பிராமணர்கள். இது வரு ணாசிரம தருமத்திற்கு எதிரானது இல்லையா? வருணாசிரம தர்மத்தை மதிப்பவர் என்று மகாராஜாவை எப்படி கருத முடியும்? சில இந்துக்கள் சில குறிப்பிட்ட வேலையைச் செய் வதால் தீண்டத்தகாதவராகி விடுவர் என்பது உண்மையா? வலது கை சாப்பிடுவது போன்ற குறிப்பிட்ட நோக்கங்களுக்காகப் பிரித்து வைக்கப்பட்டிருக்கிறது. உடம்பின் கழிவுகளைச் சுத்தப்படுத்துவது போன்ற குறிப்பிட்ட பணி களுக்காக இடது கை இருக்கிறது. ஒவ்வொரு கைக்கும் தனித் தந்தை தாய் உண்டா? இடது கையைத் தொடும்போதெல்லாம் வலதுகை குளித்து முழுக வேண்டும் என்று நினைக்கிறதா? நாம் கடவுளைத் தொழும்போது வலதுகையுடன் மட்டும் செல்கிறோமா? கோயிலுக்குச் செல்லும் போது நமது இடதுகையை விட்டுவிட்டுச் செல்கிறோமா? வலது பக்கம் இடது பக்கத்தை விட உயர்வானது என்றால் இடது கண்ணால் நம்மைப் பார்ப்பவரைக் குற்றம் சொல்லு கிறோமா? அல்லது வலது காலால் உதை படும்போது சந்தோஷப்படுகிறோமா?

வெவ்வேறு வேலைகளைச் செய்தாலும் சமத்துவமாக அல்லவா எல்லா விரல்களையும் கருதுகிறோம். அதுபோலவே ஒவ்வொரு இந்துவும் சமத்துவமாக நடத்தப்பட உரிமை உடையவர்கள். அவர் பிராமணனாக இருக் கட்டும், புலையராக இருக்கட்டும். இறந்த கால்நடைகளை அறுக்கும் பறையர் தீண்டத்தகாதவர் எனில், மனித உடலை அறுக்கும் பிராமண டாக்டர்களிலும் நாயர் டாக்டர்களிலும் எவ் வளவு அதிகமான தீண்டத்தகாதவர் உள்ளனர்?

கள்ளை இறக்குவதால் தீயர் தாழ்ந்த ஜாதி யினர் எனப்படுகிறார் எனில் அதைக் குடிப்பவர் எந்த அளவு மோசமானவர்? கள்ளை இறக்க மரங்களை வாடிக்கை விடுபவர் இவர்களை விட எந்த அளவு கூடுதல் மோசமானவர்? கள்ளிலிருந்து வருவாயை அதிகரிக்கும் அரசாங்கம் இவர்களை எல்லாம் விடக் கூடுதல் மோசமானது அல்லவா. உயர்வு என்பது ஒருவர் செய்யும் வேலையிலா இருக்கிறது? கையூட்டு பெறும் காவல் அதிகாரியும் தவறான சாட்சியம் சொல்லும் வக்கீலும் பிறப்பினால் உயர்ந்தவர்கள் என்று எந்த சாஸ்திரம் சொல்லுகிறது?

சத்தியாகிரகிகளின் வெற்றிக்குச் சில நல்ல குணங்கள் அவசியமாகின்றது. தம்மை உயர்ந் தோர் என்று கருதிக் கொள்பவரிடம் சம அந்தஸ்து கோருவோர் முதலில் தம்மை விட 'கீழ் உள்ளோர்' என வகைப்படுத்தப்பட்டவருடன் சமம் என்று கருதவேண்டும். வைசியன், சூத்திரனுடன் தன்னைச் சமமாக கருதாத ஒரு க்ஷத்திரியன் பிராமணனுடன் சமத்துவம் கோர முடியாது. நாம் அஹிம்சைவாதியாக இருக்க வேண்டும். சிறிய வன்முறைகூட நம் முயற்சி களை வீணாக்கி விடும். யாராவது ஒருவர் வன்முறையை உபயோகித்தால் மகாத்மா காந்தி சத்தியாகிரகத்தை நிறுத்திவிட தந்தி கொடுத்து விடுவார். காவல் அதிகாரிகளின் சிரித்த முகங் களாலும் அன்பான வார்த்தைகளாலும் நாம் ஏமாந்துவிடக் கூடாது. சிறிய அளவு வன்முறை கூட துப்பாக்கிகளையும் மற்ற கருவிகளையும் கொண்டுவந்து விடும். திருவாங்கூர் அரசாங்கம் இந்த நிலைமையை வெற்றிகரமாகச் சமாளிக்க வில்லையெனில், பிரிட்டிஷ் படை விமானங் களுடன், யந்திர துப்பாக்கிகளுடன் உதவிக்கு வந்துவிடும் --- அப்போது நாம் நிராதரவாக நிற்போம். சிறிய வன்முறைகூட நமது போராட்டத்துக்கு முழுத் தோல்வியைக் கொண்டு வந்து விடும். எனவே நம்முடைய ஆயுதமாக தர்மத்தையும் பொறுமையையும் மட்டுமே கொள்ள வேண்டும்.

எடபாடம் என்றொரு காங்கிரசின் வேலைகள் முழுமையாக வெற்றி அடைந்த ஊர் இருக்கிறது. அங்கே இருக்கும் கள்ளுக் கடைக்குப் போலீஸைத் தவிர போவார் யாருமில்லை. அனைவரும் கதர் அணிகிறார்கள். அகிம்சையே அங்கு முழுவதும் நிலவுகிறது. நிர்வாகத்தினருக்கு நிலைமையைச் சமாளிப்பது கஷ்டமாகிவிட்டது. ஒரு சண்டைக்கார உதவி காவல் ஆய்வாளரை நியமித்தது. அவர் வந்ததும் ஊரின் வம்புக்கார மனிதரிடம் போய் சண்டை போட்டார். அம்மனிதன் அமைதி இழந்து அவரை அடித்து நொறுக்கிவிட்டார். செய்தி பரவி, ஆயுத போலீஸ் வந்து ஊரை முழுவதும் தாக்கிவிட்டது. சௌரி சௌராவிலும் இதே மாதிரிதான் நடந்தது. அகாலி சம்பவம் முழுவெற்றி பெற்றதற்கான அடையாளம், அமைதி மற்றும் அகிம்சையின் வெற்றி. நாம் பிறந்தால் ஒரு நாள் இறப்போம் என்பது தெரிந்த ஒன்று. நல்ல நோக்கத்துக்காக நமது உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கவேண்டும்."

[1 மே 1924 அன்று கே.ஜி. குஞ்சுகிருஷ்ண பிள்ளை தலைமையில் திருவனந்தபுரத்தில் நடந்த கூட்டத்தில் பெரியார் பேச்சின் சாரமாக அரசு ஆவணம் பதித்து வைத்திருப்பது இது - பக்கம் 380-383].

(தொடரும்)

- விடுதலை நாளேடு, 2.3. 20

"வைக்கம் போராட்டம்" என்ற நூலின் வைர ஒளி! (4)

வைக்கம் போராட்டத்தின் போக்கில் திருப்பத்தை ஏற் படுத்திய ஓர் இயற்கை நிகழ்வு, பெரியாரின் சிறைவாசக் காலத் தில் 7 ஆகஸ்ட் 1924இல் நிகழ்ந் தது. திருவாங்கூர் மகாராஜா ராமவர்மா, தன் 67ஆவது வயதில் காலமானார். இந்த நிகழ்வு நாடகீயமான முறையில் வைக்கம் வரலாற்றுத் தமிழ் நூல்களில் கட்டாயம் இடம் பெற்றிருக்கும். பெரியாரே அந் நிகழ்வைச் சுவையாகப் பின்னாளில் விவரித்தார்.

"...சத்தியாகிரகத்தை நிறுத்துவதற்காகவும் எங்களை அழிப்பதற்காகவும் என்று நான் ஜெயிலில் இருக்கிற சமயத்தில் இந்த நம்பூதிரிப் பார்ப்பனர்களும் சில வைதிகர்களும் சேர்ந்து கொண்டு 'சத்ரு சங்காரயாகம்' ஒன்றை வெகு தடபுடலாக ஆயிரக்கணக்கான ரூபா செலவு செய்து நடத்தினார்கள். ஒருநாள் நடுச்சாமத்தில் தொடர்ந்து வேட்டுச் சத்தம் கேட்டது. நான் ஜெயிலில் விழித்துக் கொண்டி ருந்தேன். ரோந்து வந்தவனைப் பார்த்துக் கேட்டேன். என்ன செய்தி? இப்படி வேட்டுச் சத்தம் கேட்கிறது? இந்தப் பக்கம் ஏதாவது பெரிய திருவிழா நடக்கிறதா என்று கேட்டேன். அதற்கவன் சொன்னான். 'மகாராஜாவுக்கு உடம்பு சவுக்கியமில்லாதிருந்தது; மகாராஜா நேற்று இரவு திருநாடு எழுந்து விட்டார்' என்று. அதாவது 'இராஜா செத்துப் போனார்' என்று சொன்னார். அவ்வளவுதான். மகாராஜா செத்தார் என்றவுடன் எங்களுக்கு ஜெயிலுக்குள் ளாகவே ரொம்ப பெருமை வந்துவிட்டது. அவர்கள் செய்த யாகம் அங்கேயே திரும்பி மகாராஜாவைக் கொண்டுவிட்டது என்றும், அந்த யாகம் சத்தியாகிரகத் தலைவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை என்றும் மக்களி டையே ஒரு தனி மதிப்பை ஏற்படுத்திவிட்டது" (பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள், பக். 100 - 111).

கோட்டயத்திலிருந்து பெரியார் திருவனந்த புரச் சிறைக்குக் கொண்டு செல்லப்படும்போது இடைப்பட்ட 102 மைல் தூரத் தையும் அவர் நடந்து கடக்க உத்தேசித்திருக்கிறார் என்று ஒரு குறிப்பு (நவசக்தி, 8 ஆகஸ்ட் 1924) வெளியாகி யுள்ளது. எண்ணம் ஈடேறிய தாகத் தகவல் இல்லை.

பெரியார் சிறை சென்றபிறகு இராஜாஜி வெளியிட்ட இரண் டாவது அறிக்கையில் சிறையில் பெரியார் நடத்தப்படும் முறை குறித்து தன் கண்டனத்தை வெளி யிட்டார். அதனால் பயன் ஒன்று மில்லை எனினும், பெரியாரின் சமூக மதிப்பை உலகமும் அர சாங்கமும் அறிந்துகொண்டன. அந்த அறிக்கையி லிருந்து சில வரிகள்:

"தற்போது திருவனந்தபுரம் மத்திய சிறையில் சத்தியாகிரக கைதியாய் இருக்கும் இ.வி. ராமசாமி நாயக்கர் உணவு, தங்குமிடம் போன்ற விஷயங்களில் சாதாரண தண்டனைக் கைதியாக நடத்தப்படுவதாக நம்பகமான தகவல்கள் எனக்கு வருகின்றன. சிறை உடையை அவர் அணிகிறார்; இரும்பு விலங்குகள் போடப்பட்டிருக்கிறார்; தனிமைச் சிறையில் மற்ற சத்தியாகிரகச் சிறைவாசிகளிலிருந்து ரொம்ப தூரத்தில் வைக்கப்பட்டிருக்கிறார் என்றும் தெரி கிறது. இவ்வளவுக்குப் பிறகும் நாயக்கர் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறார் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. அவருடன் நன்றாகப் பழகியி ருக்கிறேன். அவருடன் பல காலம் சேர்ந்து வாழ்ந்திருக்கிறேன்; எனக்கு அவரைத் தெரியும். அவர் ஒரு தளர்வுறாத ஆன்மா. செல்வ வளத்தின் மகிழ்ச்சிகளையும் பதவிகளையும் வெறுத்து ஒதுக் கித் தள்ளிவிட்டு கடினமான இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்து வந்துள்ளார். பெரும்பாலான நம்மைப்போல அல்ல உண்மையிலேயே. தம்மைத் தூய்மைப்படுத்தும் இந்தச் செயல்களை அவர் வரவேற்கிறவர். எனவே பெரிதும் நாம் வருந்த வேண்டியதில்லை.

உயர்ந்த பதவியும் அந்தஸ்தும் கொண்ட வர்களை இப்படிக் கடுமையாகத் திருவாங்கூர் அரசாங்கம் நடத்த விரும்பாமல் இருக்கலாம். ஆனால் பதவியும் அந்தஸ்தும் என்பது ஆங்கி லேயர் என்பதாயும், பெயருக்குப் பின்னால் ஒட்டிக் கொண்டிருக்கும் பட்டங்களாலுமே அது கணக்கீடு செய்யப்படுகிறது...

அவரைக் கடுங்காவல் சிறைத் தண்டனையில் வைத்திருப்பதும், இரும்பு விலங்கிட்டிருப்பதும் அவருக்குச் சிறை உடை அணிவித்திருப்பதும், மற்ற சத்தியாகிரக கைதிகள் சரியாகப் பெற்றுள்ளவற்றை அவருக்கு மறுப்பதும் சிறிதும் நியாயப்படுத்த முடியாதவை. சிறையிலிருக்கும் தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் தைரியமிக்கத் தலைவருக்கு என் பாராட்டுகள்" ('தி இந்து', 27 ஆகஸ்ட் 1924). (இதே அறிக்கை 'சுதேசமித்திர'னில் 28 ஆகஸ்ட் 1924 இதழில் வெளியானது.)

உடன் சிறையிருந்த கேரளக் காங்கிரசுத் தலைவர் கே.பி. கேசவமேனனும் பெரியாரையும் வேறு இரண்டு பேரையும் சிறப்புக் கைதிகளாக வைக்காமல் இருந்ததைப் பற்றித் திருவிதாங்கூர் அரசாங்கத்திற்கு நாங்கள் எழுதிய கடிதத்திற்கு விடுதலை செய்வது வரை பதில் கிடைக்கவில்லை என்று எழுதியுள்ளார் (கடந்த காலம், ப. 66).

திரு.வி.க. அறிக்கை

நவசக்தியில் திரு.வி.க. பெரியார் சிறையில் நடத்தப்படும் விதம் குறித்துத் தன் வருத்தத்தைத் தெரிவித்தார்.

"ஸ்ரீமான் (நாயக்கர்) செல்வத்திற் சிறந்த சீமான்; செழித்த நிலையில் வாழ்க்கை நடத்தியவர். அவர் தேசத்தின் பொருட்டு எல்லாவற்றையும் தியாகம் செய்து மிக எளிய வாழ்க்கை மேற்கொண்டு தேச சேவை செய்து வந்தார். அத்தகைய பெருமை வாய்ந்த அவர் திருவனந்தபுரம் சிறையில் இடுப்பில் சிறை உடையோடும் கரத்தில் விலங்கோடும் மற்ற சத்தியாகிரகச் சிறைக் கூட்டத்தினின்றும் பிரிக் கப்பட்டுத் தனி அறையில் உறைகின்றாராம். நாயக்கர் சத்தியாகிரகத் தர்மத்தை உணர்ந்தவ ராதலால், எந்தக் கஷ்டத்தையும் சகிக்கும் சக்தி வாய்ந்தவர் என்பது நமக்குத் தெரியும். ஆனால் திருவாங்கூர் அரசாங்கம் ஒரு சத்தியாகிரகியை இவ்வாறு துன்புறுத்துவது தருமமோ என்று கேட் கிறோம்" ('நவசக்தி', 29 ஆகஸ்ட் 1924).

(நூலின் பக்கம்: 396-398)

(தொடரும்)

-  விடுதலை நாளேடு, 3.3.20


ஞாயிறு, 1 மார்ச், 2020

"வைக்கம் போராட்டம்" என்ற நூலின் வைர ஒளி! (1), (2)

- கி.வீரமணி

அண்மைக் காலத்தில் நான் ஆர்வத்துடன் எத்தனையோ நூல்களை - பசித்தவன் உணவருந்துவதைப் போல் - ஏராளம் வாசித்திருக்கிறேன்.

ஆனால் நண்பர் பழ. அதியமான் அவர்கள் எழுதியுள்ள "வைக்கம் போராட் டம்" என்ற சமூகப் புரட்சி வரலாற்று நூல் போல் எந்த ஒரு புத்தகத்தையும் படித்ததே யில்லை.

வியந்தேன்; மகிழ்ந்தேன்; 'மாந்தி, மாந்தி' அந்த அறிவுக்கு உணவான வரலாற்று ஆவ ணத்தை உண்டு களித்தேன். செரிமானம் செய்து கொண்டு, போராட்ட வீரர்களின் ரத்த ஓட்டத்தைச் சுத்திகரித்து, புது உணர்வோடும், மிடுக்கோடும் கண்கள் ஓட இந்நூல் ஒரு 'செயலூக்கி நூல்' என்றால் மிகையாகாது!

1924-25இல் அதுவும் திருவிதாங்கூர் இராஜ்ஜியத்தில் இன்றைக்கு 96 ஆண்டு களுக்கு முன் நடைபெற்ற - இந்திய வர லாற்றில் நடைபெற்ற முதல் மனித உரிமை களுக்கான அறப்போர் - சத்தியாகிரகம் - வைக்கம் சத்தியாகிரகம் என்ற நிலையில், அதுபற்றி புல்லர்களும், புரட்டர்களும் பொய்களைப் பரப்பி வைக்கத்திற்கும், பெரி யாருக்கும் என்ன சம்பந்தம்  என்று எகத்தாளமாக எழுதி வரும் நிலையில், அவற்றை, இந்த வரலாற்றுத் தரவுகளுடன் கொண்ட ஆய்வு நூல் உடைத்து நொறுக்கி, உண்மையை வெளிச்சத்தில் கொண்டு வந்து நிறுத்துகிறது!

நேற்று நடந்த செய்திகளையே கயிறு திரித்துக் கூறும் கயமை - அரசியலாகவும், பத்திரிகா தர்ம மாகவும் படமெடுத்தாடும் இந்த வெட்ககரமான வேதனைச் சூழலில் 95 ஆண்டு காலத்திற்கு முன் நடந்த போராட்ட வரலாற்று ஆவணங்களை  - தரவுகளை - சேகரிக்க 10, 11 ஆண்டுகள் தனி மனிதர் ஒருவர் தன்னந்தனியே பயணித்து வெற்றி வாகை சூடியிருக்கிறார்.

பொருளாதார ஆதரவோ, பெரும் அமைப்பு களின் பின்புலமோ இல்லையே என்று  சிறிதும் கவலைப்படாமல், அந்நாளைய திருவி தாங்கூர் ராஜ்ஜிய - இன்றைய கேரளப் பகுதி களுக்குச் சென்று - பலரையும் சந்தித்து, பேட்டி கண்டும்,  சில நூல்களைப் பெற, 'ஒற்றைக் கால்' தவம் செய்தும், மனந்தளராமல் - தான் கொண்ட முயற்சியில் முழு வெற்றியடைந்துள்ளது வியப்பினும் வியப்பு அல்லாமல் வேறு என்ன?

அவருக்கு ஆய்வறிஞர், சிந்தனையாளர், பேராசிரியர் முனைவர் ஆ.இரா. வேங்கடா சலபதி அவர்கள்தான் ஒரே ஒரு உற்சாக மூட்டி.

வைக்கம் பற்றி எங்கே எதில் குறிப்புகள் கிடைத்தாலும், அவற்றினைப் பற்றிக் கொண்டு- ஆழ் கிணறுக்குள் வீழ்ந்த குழந்தையை அரும்பெரும் முயற்சியோடு - லாவகமாகவும், பக்குவமாகவும் அதை மேலே உயிரோடு கொண்டு வந்து  பெரியாரின் பெரும் குடும்பத்தவரிடம் புத்தகக் குழந் தையை சேர்த்துள்ளார்.

அதனை உச்சிமோந்து, முத்த மாரி பொழிந்து வரவேற்றுப் பாராட்ட முன்வர வேண்டாமா? 'அப்படியென்ன பிரமாதம்?' கேள்வி எழுகிறதா?

எத்தனை எத்தனை கோணங்களில் இந்த வைக்கம் பற்றிய புதிய வெளிச்சங்கள் - இந்நூலில்!

என்னைப் பொறுத்தவரை அய்யாவின் உறுதிகளும், அன்னை நாகம்மையாரின் தியா கமும் - 95 ஆண்டுகளுக்கு முன் வீட்டுக்குள் அடைக்கப்பட்டு கிடந்த பெண்கள் வீதிக்கு வந்து போராட - அதுவும் வேறு ஒரு மாநிலத்தில் - அந்நாளைய மொழியில் வேறு ஒரு நாட்டில் - மலையாள தேசத்தில் - மொழி தெரியா பூமியில் - வழி அறியா மண்ணில் - "நெறி ஒன்றே போதும், நேர்மை வெல்லும்" என்று பொறி பறக்கப் போராடிய அந்த வீராங்கனைகளின் நினைவிடம் நோக்கி நாம் மகிழ்ச்சிக் கண்ணீர் விட்டு மரியாதை செலுத்த வேண்டாமா?

அந்நூலின் சிறப்பு தொடர் வாழ்வியலாக வரும். நூலை வாங்கிப் படித்துப் பாதுகாருங்கள்! - பரப்புங்கள்!!

- விடுதலை நாளேடு 20 2 20

"வைக்கம் போராட்டம்" என்ற நூலின் வைர ஒளி! (2)

 

மனித உரிமைப் போர் 1924-இல் தென்னாட்டில் திருவி தாங்கூர் சமஸ்தான ராஜ்ஜியத்தில் ஈழவ ஜாதியினரை, வைக்கத்தின் கோயில் மகாதேவர் - சிவன் கோயிலைச் சுற்றியுள்ள தெருக் களில் நடமாடக் கூட அனுமதிக் கவே கூடாது; காரணம் கீழ் ஜாதி யினர் நடந்தால் வைக்கத்தப்பன் தீட்டாகி விடுவார் என்று உயர் ஜாதியினராகிய நம்பூதிரிகளும், மற்றவர்களும் நம்பியதை ஏற்று ஹிந்து ராஜ்ஜியமாகவே மார்த் தாண்ட வர்மன் ராஜா காலத்தி லிருந்து நடந்து வந்த திருவி தாங்கூர் ராஜ்ஜியத்தின் ஆட்சி தடை ஆணை பிறப்பித்துக் காத்து வந்தகொடுமை, மனித உரிமை பறிப்பு அல்லவா?

தந்தை பெரியார் காந்தியாருக்கு எழுதிய கடிதத் தில், 1924-இல் காங்கிரஸ் தலைவராக தமிழ்நாட்டில் இருந்து, சத்தியாகிரகத்தைத் தொடர கேரளத்து மனிதநேயர்களின் வேண்டுகோளை ஏற்றுச் சென்ற போது குறிப்பிட்டார்.

"நாயும், கழுதையும், பன்றியும், தாராளமாக நடமாடும் தெருக்களில் பகுத்தறிவுள்ள மனிதர்கள் மட்டும் அவர்கள் "கீழ் ஜாதியினராக"ப் பிறந்து விட்டனர் என்ற ஒரே காரணம் காட்டி, நடக்கும் உரிமையை (கோயிலுக்குள் நுழைந்து வழிபடும் உரிமைகூட அல்ல) மறுப்பது எவ்வகையில் நியாயம்? பன்றியும், கழுதையும், நாயும் சத்தியாகிரகம் செய்தா அந்த உரிமையைப் பெற்றனர்?  இல்லையே; பின் ஏன் மனித ஜீவன்களுக்கு மட்டும் இந்த இழிவான நிலை?

இஸ்லாத்திற்கோ, கிறித்துவத்திற்கோ மதம் மாறிய ஈழவர் - கீழ் ஜாதியினர் அதே தெருக்களில் நடமாடும்போது, அவர்களுக்கு எந்தவிதத் தடையும் இல்லையே. இவர்களுக்கு மட்டும் ஹிந்துக்கள் என்பதால்தானே இந்தத் தடை? நியாயமா" என்று பெரியார் கேட்ட கேள்விகள், அனைத்து மக்களையும் அங்கே சிந்திக்க வைத்து, போராட்டக் களத்திற்கு அழைத்து வந்து, 20 மாதங்கள் (604 நாள்கள்) தொடர்ந்து அறவழியில் ஓர் போராட்டம் - நடைபெற்று வெற்றி வாகை சூடியது என்பதற்கு இணையான ஒரு 'சத்தியாகிரகம்' அறப்போர் - இந்திய வரலாற்றில்- ஏன் உலக வரலாற்றில்கூட தேடித் தேடி அலைந்தாலும் காண்பது அரிதினும் அரிது!

"நாயக்கர் மட்டும் வக்கீலாகி கறுப்புக் கோட் போட்டிருந்தால்,  பல பிரபல வக்கீல்கள் எல்லாம் தொழி லின்றி திருவோடு எடுக்கவேண்டியே இருக்கும்" என்றார் 'கல்கி' கிருஷ்ண மூர்த்தி.

தந்தை பெரியார் அவர்களின் பங்களிப்பு இதில் மிக அதிகம் என்பதை, தக்க சான்றாவணங்களின் மூலம் நூலாசிரியரின் 10 ஆண்டு காலத்திற்கு மேற்பட்ட கடும் உழைப்பு உலகுக்கு உணர்த்துகிறது!

அய்யா பெரியாரின் வாதத் திறமை, தருக்கமுறை, அவரது ஒவ்வொரு உரையும் ஒரு பாட நூல் பாடமாகவே அமைந்தது. அதில் ஒரு பகுதியைத் தருகிறார் நூலாசிரியர் பழ. அதியமான்.

அடாடா! என்னே வாதத் திறமையின் பல்கோணப் பரிமாணங்கள்!

"வைக்கம் சத்தியாகிரகம் என்ற போர் அரசாங்கத்துக்கு எதிரானதல்ல, மதச் சண்டை அல்ல, வகுப்புச் சண்டையும் அல்ல. இது பொது நலனுக்கான செயல், சமத்துவத்தை நிறுவும் நோக்கம் கொண்டது. இந்தப் பணியில், நாம் நல்ல நிலையில் இருக்கும் எவரையும் நம்பி இருக்கக் கூடாது. வேகமாக மறைந்து வருகிற மற்ற மதங்கள் எல்லாம் மக்கள் தொகையில் 5, 10, 15 சதவீதம் வளர்ந்து வருவதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன, இந்து மக்கள் தொகை 6 சதவீதம் குறைந்து விட்டது - கடந்த 10 ஆண்டுகளில். இது இந்துக்கள் கல்யாணம் செய்து கொள்ளவில்லை, குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளவில்லை என் பதைக் காட்டுகிறதா? இந்துக்களில் ஒரு பகுதியினரை நடத்தும் மோசமான முறை அவர்களை மற்ற மதங் களில் சேரத் தூண்டுகிறது. இந்த நிலைமை நீடிக்கு மானால் இந்துக்கள் இல்லாமல் போய் விடுவர். ராஜ பக்திக்கு எதிராக இருப்பினும் மத பக்தி கடைப் பிடிக்கப்படவேண்டும்.

ஒரு இந்து மற்ற ஒருவரைத் தீண்டாதவர் எனக் கருதுகையில், முகமதியர்களும் கிறித்தவர்களும் அவர்களது மதத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரையும், அவர்கள் அம்மதத்தில் பிறந்திருந்தாலும் மாறியவராக இருந்தாலும் சமமாக கருதுகின்றனர்.

அரசாங்கம், சமாதானத்துக்காக அளித்த பல்வேறு யோசனைகளும் ஒப்புக்கொள்ளத் தக்கவை அல்ல. அதில் ஒன்று சாலைகள் கோயில் சொத்து என்பது. மகாராஜாவுக்கு ஏதாவது சொத்து இருக்கிறதா? முழு இராஜ்யமே ஸ்ரீ பத்மனாபனுக்குச் சொந்தமானது என்பதால் இராஜ்யமே கோயில் சொத்துதான். இது அவரது தாத்தாவின் சொத்தல்ல. முகமதியர்களையும், கிறித்தவர்களையும் அச்சாலைகளில் நுழைய விடாமல் தடுத்துவிட்டால், உங்களுக்குத் திருப்தியா என்று கேட்கிறது? இது ஒரு அரசரின் கட்டளை போல உள்ளது. அரசர் ஒருமுறை, பொருளை அளக்கும் ......... என்று ஆணையிட்டார். கீழ்ப்பகுதி, நேராக அளக்கும்போது பிடிக்கும் அளவைவிட குறைவாகப் பிடிக்கிறது என்று மக்கள் புகார் சொன்னார்கள். நிலைமையைச் சமாதானம் செய்த அரசர், படியைப் பக்கவாட்டில் அளக்கும்படி ஆணையிட்டார். இதனால் கீழ்ப்பகுதியைக் கொண்டு அளக்கும் போது கிடைத்ததும் இழக்கப்பட்டது, வைக்கத்தில் அளிக்கப்படும் சமாதானத்தை இதற்கு ஒப்பிடமுடியும்.

நாங்கள் பசியாக இருக்கிறோம் என்று சொன்னால், பசியாக இருக்கிறோம் என்று நீங்கள் ஏன் சொல் கிறீர்கள் என்றால் மற்றவர் சாப்பிடுவதை நீங்கள் பார்க்கிறீர்கள் என்று அரசாங்கம் சொல்கிறது. சாப்பிடும் மற்றவர் உணவைப் பறித்து விடுகிறோம் என்கிறது."

(நூலின் பக்கம் 380-381)

(தொடரும்)

- விடுதலை நாளேடு 25 2 20