பக்கங்கள்

செவ்வாய், 19 ஜனவரி, 2021

கைபேசி கண்டுபிடித்தவரை கண்டுபிடித்த அறிவியல் கடமையாளர் "இதோ!"

இந்த கரோனா கொடுந்தொற்று - கோவிட்-19 உலக மக்களின் வாழ்வையே தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டது!

முன்பு எப்போதாவது ‘ஊரடங்கு' (Curfew) என்பது மிக மிக மிக அரிதாக, பெரிய கலவரங்கள் கட்டுக்கடங்காமல் சில ஊர்களில் வெடித்துக் கிளம்பும்போது மட்டுமே பயன்படுத்தப்படும் ஒரு வழியாகும்.

ஆனா,ல் இந்தக் கரோனா கொடுந்தொற்று உயிர்ப்பலி கொண்டுள்ள பல லட்சம் உலக மக்களின் அவதி, மிகப்பெரிய பயங்கரம்.

இது யாரைத் தாக்கும், எப்போது தாக்கும், எப்படி தாக்கும் என்பது புதிராக மிகப்பெரிய கேள்விக்குறி யாக இருந்த நிலையில் முகக்கவசம் (Face Mask), அடிக்கடி சோப் போட்டு கைகளைக் கழுவுதல், தனி நபர் இடைவெளி, தேவையின்றி தொட்டுப் பழகுதல் - கை கொடுப்பதைத் தவிர்த்தல் முதலியவைகள் மூலம் தற்காத்துக் கொண்டு - வீட்டுக்குள் முடங்கி கிடப்பது மக்களுக்கு எளிதல்ல. காரணம், மனிதன் ஒரு சமூகப் பிராணி - கலந்து உறவோடும், உரையாடு வோரிடம் காலத்தை செலவிட்டுப் பழகியவன்.

என்றாலும் உயிரும், உடல் நலமும் முக்கிய மல்லவா? எனவேதான், அரசுகளின் கட்டுப்பாடுகள் மதிக்கப்பட வேண்டியவை ஆகின்றன. 

இதிலிருந்து நமக்கு சற்று மாறுதல் - மன அழுத் தத்திலிருந்து விடுதலை அளிப்பவை - அறிவியல் கண்டுபிடிப்பான கைத்தொலைபேசி என்ற செல் போன்கள்தான்!

இதனைப் பயன்படுத்தியே நாடெங்கும் காணொ லிக் காட்சிகளும், கலகலப்பான உரையாடல்களும் ஓரளவு நிலைமையை மாற்றி வருகின்றன.

கைப்பேசியைக் கண்டுபிடித்த அந்த விஞ்ஞானியைப் பற்றி பலரும் சிந்திக்காத வேளையில், சரியாகச் சிந்தித்து அவரை நினைத்துப் பெருமைப் படுத்துதல் நன்றி காட்டும் நற்பண்புகளில் ஒன்றாகச் சேரவேண்டும்!

சென்னை கோட்டூர்புரத்தில் வாழும் ஓய்வுபெற்ற டி.ஜி.பி. (Director General of Police) நண்பர் 

அ.ராஜ்மோகன் அய்.பி.எஸ். அவர்கள் அதை சரியாக செய்து, அறிவியல் மனப்பான்மையை ஒவ்வொரு குடிமகனும் சரியாக வளர்க்க வேண்டும் என்று இந்திய அரசியல் சட்ட அடிப்படை கடமை 

(Fundamental Duties of a Citizen) பகுதி 51Ah  பகுதியில் உள்ளதை நடைமுறைப்படுத்தியதோடு காட்சிப் படுத்தியுள்ளார். அது அவர் எனக்கு எழுதிய கடிதம் மூலம் தெரிய வருகிறது, பாராட்டுகள்!

இதோ அந்த அரிய தகவல் - பலருக்கும் பகிர்ந்தளித்து அறிவை விரிவு செய்து, அறிவியல் வரலாற்றை பாடமாகச் சொல்ல பயன்படுத்திக் கொள்ளலாமே!

கைபேசி (CELL PHONE) குறித்து ஓர் ஆய்வு 

''நான் கோவிட்-19 காலத்தில் வீட்டில் முடங்கிக் கிடந்தபோது கைபேசியைப்பற்றி சிந்தித்துக் கொண்டு இருந்தேன். இதைக் கண்டுபிடித்தவர் யார், எப்போது இந்த வியப்புக்குரிய நிகழ்ச்சி நிகழ்ந்தது என்று பல நண்பர்களிடம் கேட்டேன். யாருக்கும் தெரியவில்லை. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் களிடம் கேட்டேன். அவர்களுக்கும் தெரியவில்லை. பிறகு நானே இணையத்தில் (Internet) அலசிப் பார்த்தேன். எனக்கு வியப்பு காத்திருந்தது.

இதைக் கண்டுபிடித்தவர் மார்ட்டின் கூப்பர் என்னும் அமெரிக்க விஞ்ஞானி ஆவார். அவர் 26.12.1928 இல் பிறந்தார். கைபேசியை 3.3.1973 ஆம் நாள் கண்டுபிடித்தார். அப்போது மோட்டரோலா என்னும் அமைப்பில் பணியாற்றி வந்தார். அவர் 90 வயதைக் கடந்த போதும் இன்றும் தன் இல்லத்தரசி யுடன் அமெரிக்காவில் நலமாக உள்ளார். அவரு டைய புகைப்படமும், அவர் முதல் முதலில் கண்டு பிடித்த கைபேசியும், இணையத்தில் உள்ளன. அந்தப் படத்தில் கைபேசி முழம் அளவுக்கு நீளமாக இருந் தாலும், காலப் போக்கில், கையடக்கமான கருவியாக உருப்பெற்றுவிட்டது! 

இத்தகைய அற்புதமான மனிதருக்கு நம் வீட்டில் ஒரு சிலை வைத்தால் என்ன என்று சிந்தித்துப்பார்த்து, சிலை செய்பவர் ஒருவரிடம் கேட்டேன். கருங்கல்லில் சிலை செய்தால், கறுப்பாக இருக்கும். ஆனால், இவர் அமெரிக்கர் என்பதால் வெள்ளையாக இருப்பாரே என்று சற்று தயங்கினேன். சிலைக்குப் பதிலாக, ஒரு பெரிய படம் - 2 அடி நீளம், ஒன்றரை அடி அகலம் - அளவுக்குத் தயார் செய்தேன். அதற்கு கண்ணாடி போட்டு வீட்டு வாசலில் வைத்தேன். வருவோர் போவோர் எல்லாம் வியப்புடன் படித்துப் பார்த்து மகிழ்கின்றனர். அடுத்த கட்டமாக, 26.12.2020 இல் அவருடைய பிறந்த நாளை நினைவு கூர, நிரந்தரமாக ஒரு கல்வெட்டு தயார் செய்து அதனை எங்கள் வீட்டு மதில் சுவரில் பதித்தேன். 

அதில் கீழ்க்கண்டவாறு பொறிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 காலத்தில், நாம் அனைவரும் வீட்டில் முடங்கிக் கிடந்தபோது, உலகெங்கும் உள்ள மக்களிடம் தொடர்பு கொள்வதற்கு உதவிய, கைபேசியை (Cell Phone) 1973ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி அன்று கண்டுபிடித்த விஞ்ஞானி, திரு. மார்ட்டின் கூப்பர் அவர்களுக்கு நன்றி சொல்வோம். 26.12.1928 இல் பிறந்த இந்த மாமேதை, அமெரிக்காவில் நலமாக உள்ளார். அவர் நீடூழி வாழ்க!

26.12.2020 அ.ராஜ்மோகன் 

இடம்பெயர்ந்து இங்கங்கும் நடக்கின்ற போதும் 

தடையின்றி ஒருவரோ டொருவர் உரையாட 

விடையொன்று கண்டார்  விஞ்ஞானி கூப்பர்.

நெடுநாட்கள் அவர்வாழ வாழ்த்துக்கள் சொல்வோம்!

என்னுடைய வருத்தம் என்ன என்றால் இத் தகைய புரட்சிகரமான கண்டுபிடிப்பு 1973 இல் நடந் தது என்றாலும், இதைப்பற்றி எவருக்கும் தெரிய வில்லை. அதுமட்டுமல்ல. இந்த கண்டுபிடிப்பைப்பற்றி எந்த பள்ளி பாட நூலிலும் ஏன் இடம் பெறவில்லை என்று புரியவில்லை!

மற்றுமொரு வியப்புக்குரிய செய்தி என்ன வென்றால், இந்த விஞ்ஞானி தற்போது மருத்துவ சிகிச்சைக்காகச் செய்யும் மருத்துவ சோதனை குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார். அப்படி என்ன செய்கிறார் என்று பார்ப்போம். 

தற்போது உள்ள நடைமுறையில், நாம் ஒரு மருத்துவரிடம் சென்றால் நமக்கு என்னென்ன மருத்துவ பரிசோதனைகள் (Medical Tests) செய்ய வேண்டும் என்று எழுதிக் கொடுப்பார். அதன்பிறகு நாம் பல்வேறு நிபுணர்களிடம் சென்று சோதனைகள் செய்து அவற்றின்மீது மருத்துவர்கள் குறிப்பு எழுதிய பிறகு, நமக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர், என்னென்ன மருந்துகள் உட்கொள்ள வேண்டும் என்று எழுதித் தருவார். இந்த நடைமுறையில் ஒரு அடிப்படைத் தவறு என்னவென்றால், ஒரு நோயாளியை சோதனை செய்யும்போது, அன்றைய உடல்நிலை மட்டுமே தெரியும். சென்ற வாரம், சென்ற மாதம் எப்படி இருந்தது என்று தெரியாது. 

மார்ட்டின் கூப்பர் தன்னுடைய ஆராய்ச்சியின் பலனாக, உடலில் ஒரு சிறு கருவியைப் பொருத்தி விட்டால், அது தொடர்ந்து இதயம், கல்லீரல், குடல் போன்ற பகுதிகளில் அன்றாடம் என்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்று வெளியே இருக்கும் பதிவு செய்யும் கருவியில் (Tape Recorder) பதிவு செய்யும். இந்தக் கருவியை நோயாளி தன்னுடனோ அல்லது ஒரு மருத்துவமனையிலோ வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும்போது, மருத்துவர் அந்த நோயாளியை சோதனை செய்யும்போது, இந்தப் பதிவு செய்யும் கருவியில் ஏற்கெனவே பதிவான விவரங்களைப் போட்டுப் பார்த்த பிறகு, தன்னுடைய சிகிச்சையைத் தொடரலாம். 

இத்தகைய புரட்சிகரமான ஆராய்ச்சி வெற்றி பெற்றால், இது மக்களுக்கு ஒரு மாபெரும் உதவியாக இருக்கும் என்பதில் அய்யமில்லை. 

இணையத்தில் கூகுள் மட்டுமின்றி, அடியில் கொடுத்துள்ள வலைப் பக்கங்களைப் பார்க்கவும். 

http://simplyknowledge.com/popular/biography/martin-cooper 

Martin Cooper (inventor) - Wikipedia 

Facebook - The father of the cell phone: Martin Cooper at TEDxU Hasselt Salon 

Facebook - TEDxDelMar - Martin Cooper - June 2nd 2010 www.brittanica.com

அ.ராஜ்மோகன் 

2.1 2021

மின் அஞ்சல் - rajmohandgp@gmail.com 

கைபேசி - 9380 63 22 44

தமிழ்கூறும் நல்லுலகத்தின் நன்றி, திரு.

ராஜ்மோகன் அவர்களுக்கு என்றும் உரித்தாகுக!

60-65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் கவனத்திற்கு... 12 அன்பு கட்டளைகள்


                                                      டில்லி ‘எய்ம்ஸ்‘ (AIMS) மருத்துவமனையின் இயக்குநர் சமூக வலைதளங்களுக்குப் பயன் படும் வகையில் அனுப்பியுள்ள, 60 முதல் 65 வயதுக்கு மேற்பட்ட இருபால் (இப்போது முப் பால் என்றும் அழைத்துக் கொள்ள வேண்டும்) அன்பர்களுக்கு முதுமை வாழ்விற்கு பயன்படக் கூடிய சில முக்கியமான அறிவுரைகள்.

இதனை நமது வாசக நேயர்கள் படித்துப் பயன்பெற வேண்டியே ஒரு வாழ்வியல் கட்டுரையாக எழுதுகிறோம்.

1. குளியல் அறைக்குச் செல்லும்போது வீட்டில் (இது கழிப்பறைக்கும் கூடப் பொருந்தும்) கதவை சும்மா சாத்தி வைங்க - தாழ்ப்பாள் போடவேண்டாம்.

2. வீட்டின் தரையை தண்ணீர் கொண்டு மற்றவர்கள் துடைத்து சுத்தப்படுத்தும் பணி நடக்கும் போதோ, அல்லது அந்த ஈரம் காயுமுன்போ அத்தரையில் நடக்க வேண்டாம். அதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.

3. ஸ்டூல், நாற்காலி, பெஞ்ச் போன்றவற்றின் மீது ஏறி, பொருட்களை எடுப்பது, சுத்தம் செய்வது, துணிகளை காயப் போடுவது போன்ற வேலைகளை தவிர்க்க வேண்டும்.

4. கார் இருந்தால் தனியாக ஓட்டவே கூடாது. கூட யாராவது கண்டிப்பாக இருக்க வேண்டும்.

5. மாத்திரை, மருந்துகளை வேளா வேளைக் குத் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும் (கூடுமானவரை அவரவர் எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்து, மாத்திரைகளை அவர்களே வேளை தவறாமல் எடுத்துக் கொள்ளும் பழக் கம் சிறப்பானது. அதுகூட முதுமையில் பல மாத் திரைகளை எடுத்துக் கொள்ள டாக்டர்கள் அறிவுறுத்தியிருப்பார்கள் - வைட்டமின் மாத் திரை உட்பட. அவற்றை தனியே எடுத்து வைத்து, ஒரு முறை சரி பார்த்து, எதுவும் விட்டுப் போகாமல் எடுத்துக் கொள்வது மிகவும் முக்கியம். தனித்தனியே எடுக்கும்போது நமக்கே சிற்சில வேளைகள் எடுத்தோமா இல்லையா என்ற சந்தேகமும், மறதியும் ஏற்படுவதை, மனக் குழப்பத்தைத் தவிர்க்க அது பெரிதும் உதவும்).

6. உங்களுக்கு எது மகிழ்ச்சியைத் தருகிறதோ, அதைச் செய்து மகிழ்ச்சியோடு இருங்கள். அதை யாருக்காகவும், காம்ப்ரமைஸ் செய்ய வேண்டாம்.

7. வங்கிக்கு பணம் எடுக்கச் சென்றால் தனியாகச் செல்ல வேண்டாம். தெரிந்த துணை யுடன் செல்லுங்கள் (புதியவர்கள் உதவ அனு மதிக்காதீர், பாதுகாப்பாகச் சென்று திரும்ப அந்த அறிமுகத் துணை பயன்படும்).

8. வீட்டில் தனியாக இருக்கும் பொழுது அறிமுகமில்லாதோர் யாராவது வந்தால் கூடிய வரை அச்சூழலை தவிர்க்கவும் - அல்லது மிகவும் எச்சரிக்கையுடன் கையாளவும்.

9. கூடியவரை, படுக்கையறை, குளியலறை, கழிப்பறை ஆகியவற்றில் காலிங்பட்டன் (Calling Button) அவசியம். அசாதாரண திடீர் நெருக்கடி - சூழலில் மற்றவரை அழைப்பதற்கு அது பயன்படும்.

10. சைக்கிள் முதல் கார் வரை அனைத்து வாகனங்கள் ஓட்டுவதை முடிந்த அளவு தவிர்த் தல் நல்லது.

11. வாழும் காலத்தில் உடல் நலம், மன அமைதி, உறவின் நண்பர்கள் தொடர்பு மற்றும் துணை போன்றவை மிகவும் முக்கியம். மிக மிக அவசியம். எல்லோரிடமும் இனிமையோடு பழ குங்கள். (எக்காரணம் கொண்டும் பொறுமையை இழக்காதீர்).

12. கடந்த காலம் மற்றும் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் வேண்டாம். நிகழ்காலம் உன்னத மானது. அதை முழுமையாக, மகிழ்ச்சியாக, இனிமையாக அனுபவித்து வாழுங்கள்.

(பிறரின் நிறை - குறை இவற்றில் குறையைப் பெரிதுபடுத்தாமல் நிறையை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். 60 மதிப்பெண் பெற்றவர் முதல் வகுப்பு பெற்றவர் ஆவார். விடுபட்ட 40 மதிப் பெண் பெறவில்லையே என்று கவலைப்பட்டா மகிழ்ச்சியை துறப்பது? அது விவேகம் அல்ல!)

(நன்றி: டாக்டர் எம்.எஸ்.இராமச்சந்திரன்)

அடைப்புக் குறிகளுக்குள் இருக்கும் கருத்து கள் நம்மால் எழுதப்பட்டவை.

வியாழன், 7 ஜனவரி, 2021

புதிய பரமசிவனாரின் அறிவுக்கண் "கறுப்பு" (1) - (5)

புதிய பரமசிவனாரின் அறிவுக்கண் "கறுப்பு" (1)

தமிழ் ஆராய்ச்சி உலகின் தன்னேரில்லாத பேராசிரியர் ஆய்வறிஞர் தொ.பரமசிவன் அவர்கள்!

புராண கால 'பழைய பரமசிவனுக்கு கற்பனையான நெற்றிக்கண் இருந்ததாக எழுதி பரப்புவது வாடிக்கையான வேடிக்கை!

ஆனால், இந்த புதிய தொ. பரமசிவனுக்கோ அறிவுக்கண் - அதில் எப்போதும் பெரியாரின் ஆராய்ச்சி ஒளி வீசிக் கொண்டே இருக்கும்;

புதுப்புது வெளிச்சங்களையும், புத்தாக்கச் சிந்தனைக்கான விருந்துகளும், வாசகர்களுக் கும், தமிழ் இலக்கிய ஆய்வாளர்களுக்கும் வற்றாது கிடைத்துக் கொண்டே இருக்கும்.

நிறங்களால் உலகில் இன்றளவும் நடைமுறை யில் உள்ள ஏற்றத் தாழ்வுகளும், பேதங்களும், அதன் காரணமாக ஏற்படும் கலகங்களும், நாளும் பெருகி வரும் நிலையில், நிறம்பற்றி ஒரு அற்புத மான ஆய்வினை - "கறுப்பு"  என்ற தலைப்பில், எந்த நிறத்தை சற்று மட்டமாகவும், மாற்றுக் குறைந்ததாகவும் மூடத்தனமாக இன்ன மும் உலகத்தில் உள்ள பலரும் - ஏன் மண மக்களைத் தேடுவோரும்கூட கறுப்பு என்றால் முகம் சுளிப்பதும், பிறகு அதே கறுப்பு வண்ணத் தினை பல மணி நேரம், பல ஆயிரம் ரூபாய்கள் செலவில் கறுப்பு அடித்து, முதுமையை மறைத்து, இள மையை நாடி, தேடுகின்ற நிலையும் ஒரு வேடிக் கையான நகை முரண்தான்! ஆய்வறிஞர் தொ. பரமசிவன் எழுதிய பல கட்டுரைகளின் தொகுப்பு "பண்பாட்டு அசைவுகள்" என்ற நூல்.

அதில் 'கறுப்பு' என்ற தலைப்பில் உள்ள கட்டுரை அவரது அறிவுக் கண்ணொளியை நமக் கெல்லாம் பாய்ச்சி, படிப்போருக்கு கருத்தொ ளியை வழங்கி மகிழும் தொ.ப.வின் சிந்தனை கருவூல ஆய்வினை படியுங்கள்!

"இயற்கை பல்வேறு நிறங்களை உடையது. இயற்கையின் நிறங்களில் மனிதன் சுவை, அழகு, பயன் ஆகியவற்றைக் கண்டான். எனவே அவன் படைத்த செயற்கைப் பொருள்கள் பல நிறங்களில் அமைந் தன. இக்காலத்தில் நிறத்தை யும் குறிக்கும் ‘வண்ணம்' என்ற சொல் அக்காலத் தில் அழகு, இசை, ஒழுங்கு ஆகிய பொருள்களை மட்டுமே தந்தது.

எல்லா இயற்கைப் பொருள்களிலும் நிறவேறு பாடு இருப்பது போல, மனித உடம்பிலும் அதாவது, தோலிலும் நிற வேறுபாடுகள் உண்டு. அந்த வேறுபாடுகள் இன்றைய உலகில் வறு மைக்கு அல்லது வளமைக்கு, உயர்வுக்கு அல் லது தாழ்வுக்கு, அதிகாரத்திற்கு அல்லது அடி மைத்தனத்திற்கு, ஒடுக்குமுறைக்கு அல்லது அதற்கு எதிரான போராட்டத்திற்கு உரிய குறி யீடுகளாக மாற்றப்பட்டுவிட்டன. இட ஒதுக்கீட் டுக்கெதிராக ஒரு கருத்தைச் சொல்லும் திரைப் படத்தில் கறுத்த நிறமுடையவன் கல்லூரிக்குச் செல்லுகிறான். சிவந்த நிறமுடையவன் இடங் கிடைக்காமல் வெளியே நிற்கிறான். கருத்தைச் சொல்லுவதற்கு இங்கே தோலின் நிறம் ஒரு குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது. கறுப்பு, சிவப்பு ஆகிய இரண்டு நிறங்கள் கீழ்ச் சாதிக் காரன், மேல்சாதிக்காரன் என்பதைக் குறியீடு களாகச் சுட்டி நிற்கின்றன. சமூக முரண்பாடுகள் மனிதனின் தோலின் நிறத்தைக்கொண்டு வெளிப் படுகின்ற வழக்கம் எவ்வாறு உருவானது? மனி தத்தோலின் நிறத்தையும், அழகையும் இணைக் கும் கோட்பாடுகள் தமிழ்ச் சமூகத்தில் எவ்வாறு வளர்ந்துள்ளன என்பதை விளக்க முயலுவோம்.

இன்றைய சமூக நிகழ்வுகளிலும் அசைவுகளி லும் கறுப்பு நிறம் கீழ்ச்சாதிக்காரன், வறுமைப் பட்டவன், கல்வியறிவு இல்லாதவன் அல்லது நாகரிகமறியாதவன், அழகற்றவன் என்ற பொருள்களிலேயே ஆளப்படுகிறது. திருமணச் சந்தையில் பணம் என்பதைப் போலவே, அதற் குக் குறையாத அழுத்தத்துடன் பெண்ணின் நிறமும் தீர்மானிக்கிற சக்தியாக விளங்குகிறது. அதாவது சாதாரண மனிதனின் அழகுணர்ச்சி யைப் பொறுத்தமட்டில், கறுப்பு என்பது அழகற்ற நிறம் என்று அனைத்து மனிதர்களும் கருது கிறார்கள். அழகுணர்ச்சியில் இந்தப் பாகுபாடு புகுந்த முறை ஆய்வுக்குரிய ஒன்றாகும்.

ஒரு சமூகத்தின் வாழ்க்கை நெறிகளை வரலாற்றுப் போக்கில் அளவிட்டு அறிய உதவும் சான்றுகளில் இலக்கியம் முதன்மையானது. தமிழ்ச் சமூகம் மிக நீண்ட இலக்கிய மரபினை உடையதாக இருக்கிறது. எனவே மனிதத் தோலின் நிறமும் அழகுணர்ச்சியும் பற்றிய மதிப் பீடுகளை அறிய இலக்கியச் சான்றுகளைக் காண்போம். நிறங்கள் மனித உணர்வுகளைப் புலப்படுத்தும் என்னும் செய்தி தொல்காப்பியத் தில் காணப்படுகிறது. ஆனால் இரண்டு நிறங்க ளைப் பற்றியே தொல்காப்பியர் பேசுகிறார்.

கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள

நிறத்துரு உணர்த்தற்கும் உரிய என்ப.

கறுப்பு, சிவப்பு என்பன சினத்தை உணர்த்தும் சொற்களாகவும் வரும் என்பது தொல்காப்பிய இலக்கணமாகும். இந்த இலக்கணம் பிற்கால இலக்கியங்களில் பின்பற்றப்பட்டிருக்கிறது.

கறுத்தின்னா செய்த அக்கண்ணும் மறுத்தின்னா

செய்யாமை மாசற்றார் கோள்

என்ற திருக்குறளில் 'கறுத்து' என்ற சொல் ‘சினந்து' என்ற பொருளைத் தருகிறது.

செருநரை நோக்கிய கண்தன்

சிறுவனை நோக்கியும் சிவப்பு ஆனாவேன்

என்ற ஔவையாரின் புறப்பாடலில் சிவப்பு என்ற சொல் வெகுளி என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது. ஆயினும் இந்தச் சொற்கள் தோலின் நிறம் பற்றிப் பேச வரவில்லை.

சங்க இலக்கியங்களிலும் அதற்குப்பின் வந்த நீதி இலக்கியங்களிலும் சிலம்பு, மேகலை போன்ற காப்பியங்களிலும் ஆண், பெண் இருவரின் உடல் சார்ந்த வருணனைகள் ஏராளமாக இடம் பெறுகின் றன. ஆனால் அவையனைத்தும் மனித உறுப்புகளின் அளவும், வடிவும் சார்ந்தாகவே அமைந்துள்ளன. இந்த வருணனைகளும் அளவு மட்டுமன்றி உறுப்புக்களின் பயன் கருதியதாகவும் அமைந்துள்ளன. பெருத்த முலை என்பது வளமை அல்லது தாய்மையின் குறியீடாகவும் வீரரின் பெருத்த தோள் என்பது வலிமையின் சின்னமாகவும், பாதுகாப்பின் சின்னமாகவும் அமைந்துள்ளன. உயர்வு, தாழ்வு என்ற கருத்தோட்டங்கள் இந்த வருணனைகளில் காணப்படவில்லை. மாறாக, அழகு என்பது உடல் நலம் சார்ந்ததாகவே பேசப்பட்டிருக்கிறது. இவ்வருணனைகளில் ஓரிடம் தவிர ஏனைய இடங்களில் மனிதத் தோலின் நிறம் பேசப்படவே இல்லை. காதலன் அல்லது கணவனைப் பிரிந்த பெண்ணின் உடலில் பொன் நிறத்தில் பசலை பூக்கும், என்னும் ஓரிடத்தில் மட்டுமே "மனிதத் தோலின் நிறம்" பேசப்படுகிறது.

இவை ஒருபுறமாக, மற்றொரு புறத்தில் தெய்வங்களைப் பேசும் இடத்தில் அவற்றின் நிறங்கள் பேசப்படுகின்றன. மாயோன் மலை போன்று நீலநிறத்தில் இருக்கிறான்; பலராமன் (வாலியோன்) அருவி போல வெள்ளை நிறத்தில் இருக்கிறான் என்று ஒரு சங்கப் பாடல் கூறும். திருமாலுக்கும், பலராமனுக்கும் நிறம் சொல்லப் பட்டாலும், முருகன், கொற்றவை போன்ற தெய்வங்களுக்கு நிறம் சொல்லப்படவில்லை. சிவபெருமானின் கழுத்து நஞ்சுண்ட காரணத்தால் கருமையும், நீலமும் கலந்த வண்ணத்தில் அமைந்திருப்பதாக மற்றொரு பாட்டு கூறும்.

(நாளை தொடரும்)

புதிய பரமசிவனாரின் அறிவுக்கண் "கறுப்பு" (2)

பக்தி இலக்கியக் காலந்தொட்டுத் தெய்வங் களுக்கும், மனிதர் களுக்கும் பல்வேறு நிறங்கள் பேசப்படுகின்றன. கடவுள் எல்லாமாக இருக் கிறான் என்று குறிக்க வந்த மாணிக்கவாசகர், “நிறங்களோர் அய்ந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய் எம்பெருமான்” என் கிறார். எனவே நிறங்கள் மொத்தம் அய்ந்து என் பது பழந்தமிழர் கருத்து என்று தெரிகிறது. வெண்மை, கருமை, செம்மை, பொன்மை, புகை நிறம் என அவற்றை உரையாசிரியர் விளக்குகின் றனர். தேவாரம் சிவபெருமானைப் 'பவள வண் ணத்தினர்' என்றும், உமையவளை ‘மரகதக் கொடி' எனப் பச்சை நிறமுடையவளாகவும் குறிக்கின்றது. இருளின் வண்ணமும் அந்தியின் வண்ணமும்கூடச் சிவபெருமானின் வண்ண மெனக் குறிக்கும் மற்றொரு தேவாரப் பாடல். வண்ணம் என்ற சொல் அழகு என்ற பொருளி லும் வழங்கப்பட்டிருப்பதனை ‘வண்ண மார்பில் தாரும் கொன்றை' என்ற சங்கப் பாடலாலும் அறிகின்றோம்.

பக்தி இலக்கியங்களில் நாம் காணும் மற் றொரு செய்தி கறுப்பு அழகுக்குரிய நிறம், அது ஒளி வீசும் என்பது. திருமாலை ஆண்டாள் 'கண்ணன் என்னும் கருந்தெய்வம் காட்சி பழகிக் கிடப்பேன்' என்கிறார். ஆழ்வார்கள் பலரும் திருமாலைக் 'கரிய மாணிக்கம்' என்று பாடியுள்ள னர். இராமனது கரிய உடம்பிலிருந்து ஒளி கிளர்ந்தது என்ற செய்தியை 'வெய்யோன் ஒளி தன் மேனியின் விரிசோதியின் மறைய' என்று கம்பர் பாடுகிறார். கண்ணப்பர் பிறந்தபோது அவரது கறுத்தமேனி ஒளியுடையதாக இருந்தது என்பதனைக் 'கருங்கதிர் விரிக்கும் மேனி காமருகுழவி' என்று பாடுகிறார் சேக்கிழார். தன் மீதுபட்ட ஒளியைப் பளபளப்புடைய கருப்புநிற மனிதத்தோல் 'எதிரொளி' செய்துகாட்டும் என் பது கம்பரும் சேக்கிழாரும் காட்டும் அழகுக் காட்சியாகும்.

நன்னூல் 301ஆம் சூத்திரத்துக்கான விருத்தி யுரையில் அவ்வுரைகாரர் 'கண்' என்னும் வேற் றுமை உருபினை விளக்குகிறார். எடுத்துக்காட் டாகத் தரப்படும் சொற்றொடர் 'கறுப்பின் கண் மிக்குள்ளது அழகு' என்பதாகும். நெருப்பின் உள்ளார்ந்த தன்மை தெறல் (சுடுதல்) என்பது போலக் கறுப்பின் உள்ளார்ந்த தன்மையே அழகுதான் என்பது அக்காலத்தில் நிலவிய கருத்து எனத் தெரிகிறது. அக்காலம் வரை அழகோடு சேர்த்து எண்ணப்பட்ட கறுப்பு நிறம் பின்னர் ஏன் தனது மதிப்பை இழந்தது? அழ கின்மை என்பதற்கு எடுத்துக் காட்டாக அது எப்படி மாறிப் போனது? தாழ்வுக்கும், இழிவுக்கும் உரியதாகக் கறுப்பு நிறம் கருதப்பட்டதன் சமூக வரலாற்றுக் காரணிகள் யாவை? இக்கேள்வி களுக்கான விடையினைச் சமூக அமைப்பில் காண இயலாது. மாறாக அதிகாரம் சார்ந்த அரசியல் அமைப்புக் குள்ளே தேடவேண்டும். அதுவும் தமிழ் அரசுகள் வீழ்ச்சியடைந்த 13ஆம் நூற்றாண்டின் இறுதிக்குப் பின்னரே தேட வேண்டும்.

கி.பி. 1310 முதல் 1323 வரை தமிழ்நாடு இசுலாமியர் படையெடுப் பால் அலைக்கழிந்தது. மீண்டும் 1383இல் விசய நகரப் பேரரசின் தளபதிகளின் படையெடுப்பால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. விசய நகரப் பேரரசு இசுலாமியருக்கு எதிராக வைதிக நெறியை உயர்ந்த இலட்சியமா கக் கொண்டு தோன்றிய அரசமரபாகும். ஆட் சியதிகாரம் விசயநகரப் பேரரசின் தளபதிகளின் கைக்கு மாறியவுடன் தமிழ் நாடு ஒரு பண்பாட்டு நெருக்கடியை எதிர்கொண்டது. அதாவது வரலாற்றில் முதல்முறையாகத் தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரம் பிறமொழி பேசும் ஆட்சி யாளர்களிடம் நிலையாக மாறியது. இந்த ஆட்சி யாளரைத் தொடர்ந்து தெலுங்கு மொழி பேசும் மக்கள் பெருமளவு குடியேறத் தொடங்கினர். பிராமணர் தொடங்கிச் சக்கிலியர் ஈறாக இந்தக் குடியேற்றம் அமைந்தது பிராமணர், பிராமணரை அடுத்த 'மேல் சாதியினரான' புலால் உண்ணாத ரெட்டியார், ராஜுக்கள் இவர்களுக்கு அடுத்த படிநிலைகளில் அமைந்த நாயுடு (வெலமா, கம்மவார், கவர, காப்பு, பலிஜா), இவர்களுக்கும் அடுத்த நிலையில் உள்ள ஆசாரிகள், பெரும் பாலும் புன்செய் நிலத்து விவசாயிகளான நாயக்கர், மிகத்தாழ்நிலையில் உள்ள செருப்புத் தைக்கும் சக்கிலியர், தோட்டி வேலை செய்யும் சக்கிலியா என இவர்களை வகைப்படுத்திக் காணலாம். இவர்களோடு சவுராட்டிரப் பகுதியிலி ருந்து ஏற்கனவே வெளியேறி ஆந்திரத்தில் இருந்த நெசவுத் தொழில் செய்யும் சாதியான சவுராட்டிரர்களும் தமிழகத்தில் வந்து குடியேறி னர். இக்கால கட்டத்தில் தமிழ்நாட்டில் தனித்து வளர்ந்திருந்த சைவ, வைணவ மதங்கள் பின் னுக்குத் தள்ளப்பட்டன. வைதிக நெறியே முன் னிறுத்தப்பட்டது. 'இந்து மதம்' அதிகாரத்தில் அமர்ந்தது. தமிழ் அக்காலத்தில் ஆட்சி மொழி யாக இல்லை. ஆட்சியாளர்களின் மொழியாகிய தெலுங்கு பேணப்பட்டது. அரசியல் அதிகாரத் தில், வைதிக நெறியின் காவலர்களான பிராம ணர்க்கும் சமசுகிருதத்திற்கும் முன்னுரிமை தரப் பட்டது.

இவர்கள் ஆட்சி முடியும் தறுவாயில் கி.பி. 1700க்குப் பிறகு உருது பேசும் வடநாட்டு முசுலிம் கள் அங்கங்கே சில பகுதிகளில் ஆட்சியதிகாரத் தைக் கைப்பற்றினர். மிகச்சில பகுதிகளில் பிரஞ்சுக்காரரும் ஏனைய பகுதிகளில் பிரிட்டிஷ் காரர்களும் ஆட்சியைக் கைப்பற்றினர்.

கி.பி. 14ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதலாகத் தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரத் தைக் கையிலே வைத்திருந்த அனைத்து ஆட்சி யாளர்களும், தமிழர்களின் சராசரி நிறத்திலிருந்து வேறுபட்ட  சிவந்த நிறமுடையவர்கள். அவர் களால் ஆதரிக்கப்பட்ட வடநாட்டில் இருந்து வந்த இசுலாமிய ஞானிகள், அய்ரோப்பியப் பாதிரிமார்கள், பிராமணர்கள் ஆகிய அனை வரும் தமிழர்களைவிடச் சிவந்த நிறம் உடைய வர்கள். எனவே அய்ந்து நூற்றாண்டுக்கு மேலா கத் தமிழ்நாட்டில் அரசியல் அதிகாரமும், அர சியல் சித்தாந்தங்களையும் நடைமுறைகளையும் உயர்த்திப் பிடிக்கின்ற ஆன்மீக அதிகாரமும் சிவந்த நிறமுடையவர்களின் கையிலேயே இருந்தது. எனவே இந்த நிறம் அதிகாரத்தின் நிறமாக, உயர்ந்த ஆன்மீகத்தின் நிறமாக, மேட்டிமையின் சின்னமாக, அழகு நிறைந்ததாகக் காட்டப்பட்டது. சுருக்கமாகச் சொல்வதானால், தமிழ் பேசும் பெருவாரியான மக்கள் கூட்டத் தாரின் மரபுவழி அழகுணர்ச்சி மனிதத் தோலின் நிறத்தைப் பொறுத்தமட்டில் திசைமாற்றம் பெற் றது. எதிர்நிலையில் சொல்வதானால், கறுப்பு நிறமுடைய மக்கள் அழகற்றவர்களாகவும், ஆளப்படுபவர்களாகவும், அதிகாரத்திற்குத் தகுதியற்றவர்களாகவும், இழிவின் சின்னமாகவும் கருதப்பட்டனர். இன்றளவும் இதுவே தொடர் கதையாகி வருகிறது. எனவேதான் தளைகளி லிருந்து தங்களை விலக்கிக் காட்ட விரும்பும் தனி மனிதர்கள், அதாவது தனிவாழ்வின் பொரு ளாதார மேன்மையிலும் அதிகாரத்தின்மீதும் வேட்கை உடையவர்கள் சிவப்புத் தோலை வெறியுடன் விரும்புகிறார்கள். எனவே 'கறுப்பு - சிவப்பு' என்பது வெறும் அழகுணர்ச்சி சார்ந்த பிரச்சினையன்று. அது மரபுவழி அழகுணர்ச்சியிலிருந்து திசை மாற்றப்பட்டவர்களின் அதிகார வேட்கைக்கும் மரபுவழிச் சங்கிலியால் பிணைக் கப்பட்ட எளிய மக்களுக்கும் இடையிலே நிலவி வரும் ஒரு முரண்பாடு ஆகும்."

கறுப்பு, சிவப்பு, - நிறம் எப்படிப்பட்ட கோணத்திலிருந்து இவரது அறிவுக்கண்ணால் பார்க்கப்பட்டு, அந்த கண்ணொளிக் காட்சி இலக்கியச் செல்வமாக செம்மொழிக்குச் சிறப்புச் சேர்த்துள்ளது பார்த்தீர்களா?