பக்கங்கள்

செவ்வாய், 24 நவம்பர், 2020

மதுரை மண்ணின் ஒளிரும் மனிதநேய வைரம்!

 

June 6, 2020 • Viduthalai • வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

மதுரை அண்ணாநகரில் முடிதிருத்தகம் நடத்தும் மோகன் - அவர்களது மகள் நேத்ரா. இவர் தனது மகளின் படிப்புச் செலவுக்காக 5 லட்ச ரூபாயைச் சேமித்து, வங்கியில் வைத்திருந்தார்.

நேத்ரா, அந்தப் பணத்தை கரோனாவினால் பாதிக் கப்பட்ட ஏழை மக்களுக்கு நிவாரணமாய் வழங்கும்படி தனது தந்தையை வற்புறுத்தினார் (8ஆம் வகுப்பி லிருந்து 9ஆம் வகுப்புக்குச் செல்கிறார் நேத்ரா - இவருக்கு 13 வயது).

இவரது தாராளமான - மனிதநேய கொடைச் சிந்தனையைப் பாராட்டி அய்.நா. மன்றத்தின் ஒரு அங்கமான அமைதி மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு வறுமை ஒழிப்புக்கான நல்லெண்ணத் தூதுவராக நியமித்து சான்றிதழ் வழங்கியுள்ளது.

இதன்மூலம் ஜெனிவாவில் (சுவிட்சர்லாந்து) உள்ள அய்.நா. பிரிவு சபையில் வறுமை ஒழிப்பு பற்றி பேசுவதற்கான கவுரவம் வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இந்திய பிரதமர் மோடி, தனது வானொலி உரையில் நேத்ராவின் பண்பைப் பாராட்டி யுள்ளார்.

இந்த சிறப்பு பெற்ற நேத்ரா, "எனது விருப்பம் என்னவென்றால் ஜாதி, மதம் இல்லா உலகம் உருவாக வேண்டும், எல்லோரும் தங்களது ஆடம்பரங்களை குறைத்துக் கொண்டு ஏழை மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். நல்லெண்ணத் தூதராக அய்.நா.வால் நியமிக்கப்பட்ட தனக்கு அவர்கள் தந்த 1 லட்ச ரூபாய் நன்கொடையை நல்ல விஷயத்திற்கு செலவழிப்போம்" என்று கூறியுள்ளார்!

என்னே முதிர்ச்சி, எத்தகைய மனிதநேயம்!

இந்த 'குமரகுருபர'ச் செல்வியின் அறிவுக் கூர்மை மிகவும் வியக்கத்தக்கது என்பது ஒருபுறம் இருந்தாலும், இவர் ஒரு எளிய மிகவும் பிற்படுத்தப்பட்ட முடிதிருத் தும் சமுதாயத்தவரின் மகள் என்பது பெருமைக்குரிய செய்தியாகும்.

"அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்

மக்கட்பண்பு இல்லா தவர்" (குறள் 997)

எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும், மக்களின் தேவை அறிந்து உதவ வருவதுதான் மக்கள் பண்பு என்கிறார் வள்ளுவர்.

 அதைப் பிரதிபலிக்கக் கூடிய இந்த ஏழைப் பெண்ணின் உள்ளம் எவ்வளவு விசாலமானது - மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டானது! தனது கல்விச் செலவுக்கான சேமிப்பு முக்கியமா? அல்லது அல்லற் பட்டு ஆற்றாது அழுது கண்ணீர் விடும் ஏழை, எளிய வர்களுக்கு உதவுவது முக்கியமா என்ற ஒரு கேள்வி எழுப்பினால் - பெரும்பாலோர் தங்கள் சுயநலம் சார்ந்தே - "அய்யய்யோ இந்த கரோனா காலத்தில் - அதுவும் 5 லட்ச ரூபாய், குருவி சேர்த்ததுபோல் சேர்த்த தொகையையா செலவிடுவது?" என்றே நினைப்பர் - அது சராசரி மனிதர்களுடைய நினைப்பு!

ஆனால், நண்பர் மோகன் அவர்களின் அன்பு மகள் நேத்ரா - விழிகள் திறக்காதவர்களுக்கும், வழி தெரியாமல் பணத்தைப் பூட்டி வைத்திருக்கும் பல ‘‘சீமான்கள் - சீமாட்டிகளுக்கு'' உதிக்காத மனித நேயத்தோடு துயர் துடைக்க ஓடோடி உதவிட, தனது தந்தைக்கே 'உபதேசம்' செய்த 'குமரகுருபர'ச் செல் வியை உலகமும், பிரதமரும், மற்றவரும் பாராட்டிப் பெருமை சேர்த்தாலும் அது அக்குடும்பத்திற்கு மட்டுமா பெருமை? மதுரைக்கு மட்டுமா பெருமை? தமிழ்நாட்டிற்கும், தமிழ்ச் சமுதாயத்திற்கும் தனிப் பெருமையாகும்!

அதன் கொடைச் சிந்தனை, வறுமையைப் போக்கு வதில் ஈத்துவக்கும் இன்பம் என்பதைவிட அவருடைய விருப்பம் என்னவென்று கேட்டவர்களுக்கு அவர் கூறிய பதில் - பொறிதட்டும் வகையில் - சமூக நோய் எதுவோ அதை அந்தப் பிஞ்சு உள்ளமானாலும் முதிர்ச்சியால் முற்றிய பக்குவப்பட்ட சிந்தனையை வெளிப்படுத்தியது!

"ஜாதி, மதம் அற்ற உலகம் வர (காண) வேண்டும்" இதில் தந்தை பெரியாரின் கொள்கை வெற்றியின் வெளிச்சம் தெரியவில்லையா? தமிழ்நாடு பெண்களை எப்படிப் பக்குவப்படுத்தி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்!

பெண்களைப் படிக்க வைக்க மறுக்கும் ஜாதி, மத, மனுதர்ம சமுதாயத்தில், இப்படி ஒரு புரட்சி சிந்தனை மொட்டாக மலரும் ஒரு குறிஞ்சி மலருக்கு (பெரியாரின் கொள்ளுப் பேத்திக்கு) நமது வாழ்த்துகள்!

இப்படி வெளியே தெரியாத புதிய இளைஞருலகம் புரட்சியின் பூமராங்காக எங்கெங்கோ நம்மண்ணில் இருக்கவே செய்கின்றன!

வாழ்க, வாழ்க!

நேத்ராவின் பெற்றோர்களுக்கும் நமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் - பாராட்டுகள். 'குமரகுருபர'ச் செல்வி - இளம் வயதில் ஆசிரியை' - பெற்றோருக்கும் கூட என்பதே பொருள்.


கரோனா விளைவித்த மாற்றம்: ஓர் உரத்த சிந்தனை! (1)

 

June 5, 2020 • Viduthalai • வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

கரோனா தொற்றினால் ஊரடங்கு தொடர்ந்த நிலையில், தனி மனித இடைவெளி மிகவும் முக்கியம். இதைத் தடுப்பதற்கு, முகக் கவசமும், அடிக்கடி சோப்பு போட்டுக் கைகழுவலும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெருக்கிக் கொள்ள உடற்பயிற்சி முதல் ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது வரை அவசியமா னது என எங்கும் பிரச்சாரம் செய்யப்படுகிறது; இதனைப் பெரும்பாலோர் தவறாது கடைப் பிடிக்கவும் தவறுவது இல்லை; காரணம் இது ஒவ்வொருவருக்கும் உயிர் காப்புப் பிரச்சினை அல்லவா? நோய் தடுப்பு பாதுகாப்பு அல்லவா? அதனால்தான்.

இதனால், சமூகத்திற்குத் தேவையான சில மாற்றங்கள் - பல ஆண்டுகால பிரச்சாரத்தினால் மெல்ல மெல்ல யோசித்து யோசித்து, தயங்கித் தயங்கி வந்த நடைமுறை மாற்றங்கள் - சீர்திருத் தங்கள் - திடீரென்று ‘சுனாமி' போல் மக்களை பணிய வைத்துவிட்டன!

மற்ற நாடுகளைப் போல அல்லாது நமது நாட்டில் திருமணங்கள் பெரிதும் பெற்றோர் களால் ஏற்பாடு செய்யப்படுபவைகளே; காதல் திருமணங்கள் மிகக் குறைந்த அளவே!

எப்படிப்பட்ட திருமணமாக இருந்தாலும், மண விழாவில் ஆடம்பரங்களும், டம்பங்களும், வெட்கப்படாத பணத் திமிரின் வெளிச்சங்களும் இன்று காணாமற் போய்விட்டன!  இது ஒரு வரவேற்கத்தக்க மாற்றமே! தீமையிலும் ஏற்பட்ட ஒரு நன்மை!

1929ஆம் ஆண்டு செங்கற்பட்டில் தந்தை பெரியார் நடத்திய முதலாவது மாகாண சுயமரியாதை இயக்க மாநாட்டுத் தீர்மானங்களில் ஒன்று:

(இன்றைய இளைய தலைமுறைக்கு இது வியப்பாகவும், வேடிக்கையாகவும்கூட இருக் கலாம்)

"இனி நம் நாட்டில் நடைபெறும் திருமணங் கள் ஒரு நாள் மட்டுமே நடைபெறும் திருமணங் களாக நடத்தப்பட வேண்டுமென்று மக்களை இம்மாநாடு கேட்டுக் கொள்ளுகிறது!" - காரணம் முன்பெல்லாம் ‘கல்யாண சுப முகூர்த்தப் பத்திரிக்கையைப் பிரித்தால் இஷ்டமித்திர பந்து சகிதமாய் ஒரு வாரத்துக்கு முன்பே வந்திருந்து, நடைபெறும் எல்லாவித சடங்குகளிலும் பங் கேற்று  வரன் - வதிகளை ஆசீர்வதிக்க வேண்டு மென்று வேண்டிக் கொள்கிறோம்' என்று இருக்கும்.

அது சுயமரியாதை இயக்கப் பிரச்சாரத்தாலும், காலத்தின் முக்கியத்தை உணர வேண்டிய நெருக்கடி மக்களுக்கு வந்ததாலும் ஒரு நாள் திருமணமாகியதோடு, அதுவும்கூட மாலை வரவேற்பு உட்பட நடைபெறும் அளவு சுருங்கியது; என்றாலும்கூட

ஆடம்பர அழைப்பிதழ் - ஏராளமான செலவு -

மண்டபங்களில் பலவேளை விருந்துகள் - (பசியில்லாமலே கூட!)

இஷ்டமித்திர பந்து சகிதமாய் வேண்டிய சிநேகிதர்கள் (மனுஷாள் உட்பட!)

கடன் வாங்கியாவது ‘பல லட்சங்கள்' கரைந்த நிலை. கரோனா வந்ததினால் 20 பேருக்கு மேல் கலந்துகொள்ளாத நல்ல மாற்றம்!

செரிமானம் ஆக ஜீரண மாத்திரைகளைத் தேட வேண்டிய அவசியமில்லாத விருந்துக ளுக்கு இடமில்லை. வெகு சிலருக்குக் குறிப் பிட்ட அளவு உணவு - அதுவும் பாக்கெட்டுகளில்!

‘‘சொர்க்கத்தில்' திருமணங்கள் நிச்சயிக் கப்படுவதில்லை'' -

கரோனாவின் காரணமாக  ஆன் லைனின் - இணையத்தால் திருமணங்கள் நிச்சயிக்கப் படுகின்றன இப்பொழுது!

'சொர்க்கம்' இப்போது காலியாகவே கிடக் கிறதோ என்னவோ?

ரொக்கத்தில் நிச்சயிக்கப்படும்போதுகூட (உள்ளாந்திரத்தில் எப்படியோ) வெளிப்படை யான ஆடம்பரச் செலவுகள் இப்போது இல்லை.

இது பற்றி பிரபல தமிழ் நாளேடு 'தினத்தந்தி' செய்திக் கட்டுரை வெளியிட்டது சில நாட்க ளுக்கு முன்.

4.6.2020 'தி இந்து' ஆங்கில நாளேட்டின் இணைப்புப் பகுதியில் ஓர் கட்டுரை இதோ:

பிரியாணி பொட்டலம் பார்சல் அல்லது வீட்டில் சமைத்த உணவு - 20 பேர் மட்டுமே முகக் கவசத்துடன் - மணமக்கள் மட்டுமல்ல - மந்திரம் ஓதும் புரோகிதரும்கூட!

புரிகிறதா? மாற்றம் ஒன்றுதான் மாறாதது - இதனை ஏன் நிரந்தரமாகவே ஆக்கிக்கொண்டு, மக்கள் பயன் அடையக் கூடாது? வீண் ஆடம்பரச் செலவுகளை மணவிழாக்களில் தவிர்க்க அறிவுரை சொன்ன பெரியார் கருத்து எப்படியோ செயலுக்கு வந்துவிட்டது!

இது இனிமேலும் ஒரு பழக்கமாக நிலைத்து விட்டால், மக்களுக்கு அதைவிட மிகப் பெரிய சேமிப்பு - சிறப்பு வேறு உண்டா?

உரத்து சிந்திப்போம்!

நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம் - எப்படி இதோ!

 

May 29, 2020 • Viduthalai • வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

எங்கள் அப்பா, அம்மா மறைவு-நினைவுகள், நன்றிகள்!

எங்கள் அப்பா கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் மறைந்தார்கள். எங்கள் அம்மா  2020ஆம் ஆண்டு, மே மாதம் 27இல் மறைந்தார்கள்.

எங்கள் அப்பா, திராவிட மாணவர் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்ட காலத்தில் இருந்து, முரட்டு சுயமரியாதைக்காரராக வாழ்ந்தவர்.

அம்மா அவர்கள், அப்பாவை திருமணம் புரிந்து கொண்டதால், தானும் அப்பாவிற்கு ஏற்ற மாதிரி தன்னு டைய பழக்க வழக்கங்களை மாற்றிக் கொண்டார்கள்.

அப்பாவின் நட்பு வட்டத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அதற்கு ஏற்றார் போல் நடந்து கொள்வார்.  அப்பா அவர்கள், பெரியார் அய்யா அவர் களை அறிந்ததனால்,  அம்மா மற்றும் நாங்கள் நால் வரும் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு பெற்றவர்கள். அதே போன்று பல்கலைக்கழக துணை வேந்தர் சிட்டிபாபு அவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு பெற்ற வர்கள் நாங்கள்.

எங்கள் அக்கா மீனாம்பாள் மருத்துவ கல்லூரியில் சேருவதற்கு தந்தை பெரியார் அவர்களும், ஆசிரியர்    அய்யா அவர்களும்தான் முக்கிய காரணம்.

எங்கள் அம்மா ஏறத்தாழ 60 ஆண்டுகள் உடல் உபாதையால் அவதிப்பட்டவர். இருப்பினும் தன்னு டைய மனதிடத்தினால் அதை வெற்றி கொண்டவர்.

அம்மா அவர்கள் 86 ஆண்டுகள் வரை உயிர் வாழ்ந்தார்கள் என்றால் மூவர் முக்கியமானவர்கள்.

1958-59 ஆண்டுகளில், எங்கள் தாத்தா (எங்கள் அப்பாவின் அப்பா), 1968-69 ஆண்டுகளில் எங்கள் அப்பா, 1979-80 ஆண்டுகளில் இருந்து எங்கள் அம்மா இன்றுவரை உயிர் வாழ்ந்தார்கள் என்றால் எங்கள் அக்கா மருத்துவர் பாலி (மீனாம்பாள்) மற்றும் எங்கள் அத்தான் திரு. சந்திரகுமார் அவர்களையே சாரும். அவர்கள் இருவருக்கும் நன்றிகள் பல.

எங்கள் அப்பா அனைவரிடத்திலும் மிகவும் கண்டிப்பானவர்,

என்னிடத்தில் மட்டும் செல்லம்.

எங்கள் அம்மா அப்படி இல்லை, அனைவரிடத் திலும் கண்டிப்பு.

எங்கள் குடும்பம் நடுத்தர குடும்பத்தை சார்ந்தது. நாங்கள் நால்வரும் படித்து, வாழ்க்கையில் ஒரு நிலையை அடைவதற்கு அவர்கள் இருவரின் தியாக மும் பெரிது.

நான் பள்ளிப்படிப்பில், வகுப்பில் பின் தங்கிய மாணவனாக இருந்த பொழுதிலும் என் மீது நம்பிக்கை வைத்து ஆடிட்டர் படிப்பு படிக்க ஊக்கம் அளித்தவர் எங்கள் அம்மா. ஆடிட்டர் படிப்புக்கு, பி.பி.நாயுடு அலுவலகத்தில், சேர்த்து விட்டது ஆசிரியர் அய்யா அவர்கள். ஆசிரியர் அய்யா அவர்களை நன்றி உணர்வோடு எண்ணிப் பார்க்கிறேன். அம்மா அவர் கள் என் மீது வைத்த நம்பிக்கை பொய்க்கவில்லை.

எங்களது அப்பா, தன்னுடைய கல்விப்பணித் துறையில் மிகவும் மன உறுதியுடன் இருந்து பணியாற்றியவர். ஆனால், உடல்நலத்தில் ஏதாவது சிறிய உபாதையானாலும் பயந்து விடுவார். அப்பா அவர்களையும் 93 ஆண்டுகள் வரை வாழ வைத்தவர் எங்கள் அக்கா, அத்தான் அவர்கள் இருவரும்தான்.

நாங்கள் நால்வரும் ஒவ்வொரு துறையில் இயங்கு வதற்கு எங்களுக்கு கல்வியை தந்த எங்கள் அம்மா, அப்பா இருவருக்கும் நன்றி. அவர்கள் இருவரும் நீண்ட காலம் வாழ வழி வகுத்த எங்கள் அக்காவின் மருத்துவ பணிக்கு நன்றி.

மேலே எழுதியிருப்பது ஆடிட்டர் இராமச்சந் திரன் அவரது குடும்பத்தைப்பற்றிய - உழைப்பால் - பண்பால் - நேர்மையால் - விருந்தோம்பலால் எல்லாவற்றிற்கும் மேலான கொள்கை லட்சிய ஈடுபாட்டால் உயர்ந்த  - நாட்டில் உள்ள தந்தை பெரியாரின் பெருங்குடும்பங்களில் ஒன்று (ஆடிட் டர்) கல்வியாளர் அரங்கசாமி - ராஜம் குடும்பத் தினர் என்பதற்கான பல செய்திகள் - அவை குருதிக் குடும்ப (ரத்த உறவுகள்) உணர்வுகள்.

நாம் அடிக்கடி கூறுவதுபோல, ‘‘ரத்தம் தண்ணீரைவிட கெட்டியானது என்பது ஓர் ஆங்கிலப் பழமொழி; ஆனால், அதைவிட மிகவும் கெட்டியானது நமது (பெரியார்) கொள்கை உறவு!''

அவ்வகையில் குருதி உறவைவிட கெட்டியான எங்கள் குடும்பத்து உறவாடலை இங்கே பதிவு செய்வது பலருக்கும் பயன்படும்.

‘‘நன்றி என்பது பயனடைந்தவர் காட்டவேண் டிய பண்பே தவிர (குணநலன்) - உதவி செய்த வர்கள் எதிர்பார்த்தால், அது சிறுமைக் குணமே யாகும்'' என்று 1935 ‘குடிஅரசு' ஏட்டில் எழுதினார் தந்தை பெரியார். அதன்படியே தனது வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டி, நன்றியை எதிர்பாராத தொண்டறத்து மாமழையானார் தந்தை பெரியார்!

இராஜம் - அரங்கசாமி குடும்பம் என்ற பெரியாரின் சுயமரியாதைக் குடும்பம் - தனது  உன்னத உண்மை உழைப்பினால் உயர்ந்த எடுத்துக்காட்டான ஒரு சிறந்த நடுத்தர குடும்பம்.

‘‘எங்கள் உடன்பிறவா சகோதரி'' என்று நான் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டது அது வெறும் ஒரு ‘சம்பிரதாயச் சொல்' அல்ல; ஒப்பனை இல்லா உண்மையாகும்!

டாக்டர் மீனாம்பாள் - சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்தபோது, பேராசிரியர்கள் வட்டாரத்தில் அவரை - ‘ஆசிரியரின் சகோதரி மகள்' என்றே கூறி, அழைப்பர்;  அவர்மூலம் அறி முகமும் என்னிடம் சிலர் ஆகியும் இருக்கிறார்கள்.

திராவிட மாணவர் கழகத்தவராக திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் ‘கணக்குப் புலியாக' படித்துப் பாய்ந்து, தமிழகக் கல்வித் துறையுனுள்  அதிகாரியாகப் புகுந்தவர் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு கோ.அரங்கசாமி!

கல்வி இயக்குநர்கள் நெ.து.சு. முதல் எஸ்.வி. சிட்டிபாபு, கோபாலன், வெங்கட சுப்பிரமணியன் வரை அத்துணை பேராலும் மிகவும் மதிக்கப் பட்டவர் - அவர் கொள்கையை அங்கும் மறைக்க விரும்பாதவர். தந்தை பெரியார் - அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையாரின் பேரன்பைப் பெற்ற குடும்பம் இது. நம் இயக்கத்தில் அன்பு என்பதும், பாசம் என்பதும், இரு வழிப்பாதைதான், எப் போதும்!

நம்மைப் பொருத்தவரையில், நமது சகோதரி யார் இராஜம் அவர்கள் எங்கள் குடும்பத்திற்கு ஒரு வேதனையான சோதனை ஏற்பட்ட நிலை யில்,  என் வாழ்விணையர் திருமதி. மோகனா  அவர்கள் ஒரு விபத்தினால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஒரு மாதத்திற்குமேல் தங்கி இருந்தாகவேண்டிய சூழ்நிலை!

வீட்டில் (அடையாறு) எங்கள் பிள்ளைகள் அசோக், அன்பு, அருள் போன்றவர்கள் (இது 48 ஆண்டுகளுக்கு முன்பு) சிறு பிள்ளைகள். பள்ளி சென்று திரும்பும் குழந்தைப் பருவத்தினர். நானோ அன்றாடம் ‘விடுதலை' அலுவலகத்திற்குச் சென்று பணியாற்றி வருபவன்.

திரு.அரங்கசாமி - இராஜம் குடும்பத்திலும் ஒரு பெண் பிள்ளை, மூன்று ஆண் பிள்ளைகள்.

எங்கள் குடும்ப  சூழ்நிலையை உணர்ந்து, அவ்விருவருமே தங்களது வீட்டினைப் பூட்டி வைத்துவிட்டு, ஒரு மாதம் எங்களுடனேயே தங்கி, குடும்பத்தினர் அனைவருக்கும் உணவு சமைத்து, பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப, ஏழு பிள்ளைகளையும் ஒவ்வொரு நாளும் கவனித்து, உணவளிப்பு, பள்ளிக்கு அனுப்பும் பணிச் சுமை உண்டு.

இப்படி ஓய்வற்ற குடும்பப் பணிகளை சிறிதும் சலிப்பின்றி, முகம் கோணாது - எப்போதும் சிரித்து, புன்முறுவலோடு  சகோதரி மானமிகு இராஜம் அவர்கள் ஆற்றிய கடமையையும், வடித்துக் கொட்டிய வற்றாத அன்பினையும் எழுதிட வார்த் தைகளே இல்லை - மையால் நிரப்பி இதை எழுத வில்லை நாங்கள் - நன்றிக் கண்ணீரால் துவைத்து எழுதி, அவருக்கு வீர வணக்கம் செலுத்துகிறோம்.

நன்றி என்பது போதுமான சொல் அல்ல.

பிள்ளைகள் அத்துணை பேரும் வேறுபாடின்றி  ஒரே குடும்பத்து உறவுகளாகவே இன்றும் பழ கிடும் அன்பும், பண்பும், கொள்கை உறவு, ரத்த உறவினைவிட கெட்டியானது என்பதை உலகுக் குக் காட்டுகின்றனர் அல்லவா!

எல்லாவற்றிற்கும் மேலாக, அக்குடும்பத்திற்குக் கிடைத்த மூத்த மருமகன் சந்திரகுமார் (பிரபல பேஸ்கட் பால் விளையாட்டு வீரர்) பண்பும், பாசமும், கடமை உணர்வும் அவ்விருவர்களையும்  கடைசிவரை மகிழ்ச்சியுடன் வாழ வைத்தது மிகப் பெரிய அரிய வாய்ப்பு அல்லவா!

அவர்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை, எங்களை கலக்காது எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்கமாட்டார்கள்!

இப்படி சந்திரகுமார் அவர்களைப் பாராட்டுகிற பொழுது, மற்ற குடும்பத்து உறுப்பினர்கள், இணைந்தவர்கள் எவரும் அன்பில், பாசத்தில்  குறைந்தவர்கள் அல்லர்; என்றாலும், தனித்தனியே அவர்களைப்பற்றி எழுதிட இடமில்லை - மனம் உண்டு என்றாலும்.

அத்தனை மருமகள்களும், பேரப் பிள்ளை களும், கொள்ளுப் பேரப் பிள்ளைகளும் (அரங்க சாமி தந்தையாரையும் அறிவேன்!) என அய்ந்து தலைமுறைகளைக் காணுகிறோம். அத்தனை பேரும் புடம்போட்ட தங்கங்கள் - கொள்கை விழுதுகள். நன்றி மறவா, பாசப் பறவைகள் - தனித்தனி கல்வித் தகுதியுடன் கொள்கை வானில் பறக்கும் குடும்பப்  பறவைகள் - இதற்குக் காரணம் சகோதரி இராஜம் - அரங்கசாமி ஆகியோருடைய கடும் உழைப்பு! உழைப்பு!! உழைப்பு!!!

அதனால்தான், இறக்கை முளைத்தப் பறவை கள் விரிந்த வானில் இன்று சுதந்திரமாக  பறந்து கொண்டே உள்ளன!


இணைய வழியும் - சமூக உறவுப் பாலமும்!

 

May 25, 2020 • Viduthalai • வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

உலக அளவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே  வெளிவந்த, ஏராளமாக விற்பனையான நூல்களில் ஒன்று பிரபல வரலாற்று சமூகப் பிரச்சினைகளை எழுதிடும் யுவல் நோவா ஹாராரி என்ற எழுத்தாளருடையது.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் பி.எச்டி. பட்டம் பெற்று, தற்போது  இஸ்ரேல் நாட்டின் ஜெருசெலத்தில் உள்ள ஹீப்ரு பல்கலைக்கழகத்தில், உலக வரலாறுபற்றி ஆய்வுரையாளராக உள்ளார்.

இவர் எழுதி உலக அளவில் முதலிடம் பிடித்த பல நூல்கள் - "சேப்பியன்ஸ் - மனித குலத்தின் ஒரு சுருக்க வரலாறு" A Brief History of Humankind and Homo Deus: "A Brief History of Tommorrow" ஆகியவை. இந்த நூல்கள் சுமார் 12 லட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ளன.

அதைவிட தனிச்சிறப்பு என்ன தெரியுமா? 45 மொழிகளில் இவரது நூல்கள் மொழி பெயர்ப்புச் செய்யப்பட்டு உலகின் பல மொழி வாசகர்களையும் வென்றுள்ளன!

யுவல் நோவா ஹாராரியின் "21 Lessons for the 21st Century -  21 ஆம் நூற்றாண்டின், 21 பாடங்கள்" என்ற நூலில் மனித குலத்தின் பல்வேறு பிரச்சினை களை பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து 21 அரிய கருத்தோவியத்தை இவர் தீட்டியுள்ளார்!

2 ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு இதனை அமெரிக்காவிலிருந்து அப்போது வந்த அசோக் ராஜ் தந்தார். நானும் படித்து எனது படிப்பு வட்ட முக்கிய நண்பர்கள் பலருக்கும் கொடுத்து, அது ஒரு சுற்று வந்து மீண்டும் புத்தக அலமாரிக்குச் சென்றது!

கரோனா கால புத்தகப் படிப்பிற்காக  அதனை மீண்டும் எடுத்து மறு வாசிப்பு செய்து, அறிவுப் பசி தீர்த்துக் கொள்ள முடிந்தது! ‘சமூகம்' Community என்ற தலைப்பில் அவரது 5 ஆவது பாடத்தில்,

ஒரு குட்டித் தலைப்பும் தந்துள்ளார்!

"Humans have bodies"

"மனித இனத்திற்கு உடல்களும் உண்டு" என்று வேடிக்கையாக நினைவூட்டும் வகையில், அண்மைக் கால மின்னணு கணினி யுகத்தில், அந்த அலைகளின் வேகமான வீச்சுக் காரணமாக எங்கும், எதிலும் இயந்திரம், இணையம், மின்னஞ்சல், மின்-புத்தகங்கள், இணையதள தகவல் தொடர்புகள் மூலமே, கடை களுக்கு நேரில் சென்று பொருள்களை பல வகையில் நோட்டம் விட்டு, எங்கே எது குறைந்த விலை, எது முடுக்கான சரக்கு, தரம் குறையாத பொருள் எது என்றெல்லாம் ஆராய்வதற்குப் பதிலாக, இப்போது எல்லாம் - விவரங்களை மின்னஞ்சல் அறிவிப்புகள் மூலமே அறிந்து கொண்டு online order என்று கொடுத்து மின் வியாபாரம் (E-commerce) நடந்து கொண்டுள்ளது பலரும் அறிந்ததே!

பெரும்பாலும் ஒருவருக்கொருவர் நேரில் பேசுவதுகூட இப்போது தவிர்க்கப்பட்டு வருகிறது.

கைத்தொலைப்பேசி (செல்போன்) மூலம் texting அடித்தோ - சுருக்கமாக - ஆங்கிலத்திலோ - தமி ழிலோ அனுப்பி வேகமாக அதுபோய்ச் சேர்ந்ததைக் கூட, குறியீடுகள்மூலமே பார்த்துவிட்டார் சம்பந்தப் பட்டவர் என்பதும் வந்து விடுகிறது!

என்றாலும், இதனால் பலவித நன்மைகள், வேக மான விளைவுகள் ஏற்படினும்கூட, இது மனிதர்களின் தனித்தன்மையான, வாழ்க்கையின் பல இன்றியமை யாத அனுபவிக்கவேண்டிய சுவைகளையும், வாசனை களையும் அறிந்து அனுபவித்து, உண்ணும் ரசனையை வியப்பையும் கூட அது (online மோகம் - பழக்கம் காரணமாக) கணினியிலும், ஸ்மார்ட் ஃபோன்களிலும் மிக ஈடுபாடு கொண்டு, உண்ணும்போதே பலதை எண்ணிக்கொண்டு, ஏதோ அவசர அவசரமாக சாப்பாட்டை முடிக்கிறார் கள். உண்ணுவதை அனுபவித்தோ, சமையலைச் சுவைத்தோ அனுபவிக்க முடிக்க முடியாத நிலை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார் மிக அழகாக முகநூல் அதிபர் சக்கர்பெர்க் (Zuckerberg).

இதை அவரது 2017 பிப்ரவரியில் online சமூகத்தவர் offline என்ற ஆட்களுடன் உறவுள்ள ஒரு சமூக உறவையும் இணைத்து எப்படி ஏற்படுத் துவது என்பதற்கான ஒரு அறிக்கை யைத் (Manifesto) தந்தார் என்றும் குறிப்பிடுகிறார் இந்த நூலாசிரியர்!

இரண்டுக்கும் அடிப்படையில் சில நடைமுறை வேறுபாடுகள் உள்ளன. அதை எளிதில் தீர்க்கிறது. நேரில் உள்ள சமூகங்களையும், அதன் தொடர்பான இணையவழியில் தொலைபேசி, மின்னஞ்சல் போன்றவை மூலமும் ஏற்படுத்துவதற்கும் இடையில் ஒரு பெரும் பள்ளமே உள்ளது!

இதை அவ்வளவு எளிதில் அடைத்துவிட முடி யாதுதான்.

"நான் இஸ்ரேலில் உள்ள எனது வீட்டில் உடல் நலம் குன்றி படுத்திருந்தேன் என்றால், எனது online (இணையவழி) நண்பர்கள் அமெரிக்காவிலிருந்து (கலிபோர்னியா) என்னை அழைத்து, உடல் நலம் விசாரிக்கின்றனர் - ஆனால் அவர்கள் எனக்கு ஒரு கப் டீயோ, சூப்போ போட்டுத் தர முடியாது." (இது offline-ல்தான் சாத்தியம்!).

இதன் பாரதூர விளைவுகள் எவ்வளவு தூரம் சமூக உறவுகளை வெகுவாகப் பாதிக்கிறது என்பதை மிக அழகாக விளக்குகிறார்.

‘சைபர் உலகில்' எங்கோ தொலைதூரத்தில் - என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள நாம் காட்டும் ஆர்வம், நமது தெருவில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதில் காண முடிவதில் லையே!

ஒரு அம்மையார் கூறுகிறாராம் (எழுதுகிறார் இந்நூலாசிரியர்), "நான் சுவிட்சர்லாந்திலுள்ள எனது ஒன்றுவிட்ட சகோதரனுடன் பேசுவது உடனே முடி கிறது; ஆனால், அதே நேரத்தை, காலைச் சிற்றுண்டி பரிமாறிக் கொண்டே எனது வாழ்விணையருடன் பேசிக் கொண்டு மகிழ்ச்சியடைய முடியவில்லை. காரணம் அவர் எப் போதும் அந்த வேகமான தொலை பேசியிலேயே நேரத்தை செலவழித் துக் கொண்டே இருப்பவராயிற்றே!"

சமூக உறவு  இப்படி சிதையும் நிலை. இதனால் ஏற்படுவது மற்றொரு புறம். வீடுகளில் நாம் பார்க்கிறோமே, ஒரு சாப்பாட்டு மேஜையில் நான்கு பேர் குடும்ப உறுப்பினர்களை அமர்த்தி ஹெட் போன் கயிறு உள்ள கைத்தொலைபேசியில் நால்வரையும் நான்கு திசைக்குப் பறக்க விடுகிறோம்.

இதற்கொரு தீர்வு - இணைப்பு - சமூக உறவுப் பாலமும் உருவாக்கிட வேண்டும் என்பதை உணர்ந்து அதற் கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் கள். முகநூல் அதிபர் போன்றவர்களே என்பது மிக நல்ல செய்தி?

காணாமற்போன அல்லது களவு போன நம் சமூக உறவுகள் - குடும்ப உறவுகள் - இந்தக் கரோனா காலத்திலாவது, ஓரளவு சரி செய்யப்பட்டுள்ளது என்ற உண்மை, ‘‘கெட்டதிலும் சில நல்லது; தீமையிலும் சில நன்மைகள்'' என்பது போன்று உள்ளன. இதனை நன்கு பயன்படுத்தி எதற்கு எவ்வளவு இடம் - நேரம் என்பதைப் பகுத்துத் திட்டமிடுவோமா?

யோசியுங்கள்!


கரோனாவும் 'நடத்தை பொருளாதாரமும்!' 1&2

 

May 19, 2020 • Viduthalai • வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

அறிவியல் பிரிவுகளில் மக்களின் நடத்தை களையொட்டியவைகளை ஆய்வு செய்தல் Behavioural Science என்று குறிப்பிடுவதுண்டு.

அதேபோல, பொருளாதாரத்திலும்கூட மக்க ளின் நடத்தையையொட்டியே இப்போது பல வகை பிரிவுகளை பொருளியல் ஆய்வு அறிஞர் கள் பகுத்துக் கூறுகின்றனர். எழுதுகின்றனர்.

அதில் ஒன்று Behavioural Economics  என்ற 'நடத்தை முறைகளையொட்டிய பொருளா தாரம்' என்பதும் ஆகும்.

கரோனா தொற்று உலகத்தை ஊரடங்குக்குள் தள்ளி, ஆட்களின் வெளி உலகச் செயல்களை மட்டுமா முடக்கியுள்ளது? அதோடு கூட, உலக நாடுகளின் பொருளாதாரத்தையும், மக்களின் வாழ்வாதாரத்திற்கே சவால்விட்டு முடக்கியுள்ள வேதனையான நிலையும் வேகமாக மக்களை மிரட்டுகிறது!

இதன் பாதிப்பின் விளைவைச் சந்திக்காத ஜன சமூகமே பெரிதும் இல்லை. தொழில்துறைகளில்கூட தொழில் திமிங்கிலங்கள் முதல் சின்ன மீன் வரை அனைவரையும் கரோனா ஒரு புரட்டிப் போட்டு பதம் பார்க்கத் தவறவில்லை.

ஏழை, எளிய மக்கள் நோய்க்குப் பயந்து வீட் டில் முடங்கினால், பசியும் பட்டினியும் அந்த உழைப்பை நம்பிய மக்களை வாட்டி "வதைத்துச் சோற்றுக்கோ வந்ததிந்த பஞ்சம் - இம்மக்கள் நிலை சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்" என்று குமுறிடும் நிலைதான் கரோனா தந்த பரிசு!

மனிதன் இயற்கையின் சீற்றத்தை எதிர் கொண்டு சமாளித்து வாழப்பழகி விட்டான்.

சுனாமிகளும், பூகம்பமும் போன்ற சொல் லொணா கொடுமைகளை தங்கள் வாழ்வில் அடிக்கடி சந்திக்கும் ஜப்பானிய பெருமக்கள் மனந்தளர்ந்தவர்களாகி விடுவதில்லை.

எவ்வளவு சேதம், இழப்பு என்றாலும் அதையும் சகித்து, ஏற்றுக் கொண்டு, அதிலிருந்து புதுவாழ்வினைத் துவக்குவது எப்படி என்பதை நன்கு அறிந்தவர்கள் - ஆதலால், அதிக வயதின ரையும், சராசரி அதிக வயதுடையவர்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகவும் ஜப்பான் இருக் கிறது!

சுனாமி, சூறாவளி, பயங்கர பூகம்பம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டாலும் அவர்கள் மனதளவில் தன் னம்பிக்கை இழக்காமல் தன்னெழுச்சி கொண்ட மக்களாகி, உழைப்பிலும் பண்பிலும் நல்ல குடி மக்களாக வாழ்ந்து காட்டுகிறார்கள்.

அவர்களது அன்றாட நடத்தைப் பொருளியல் வாழ்க்கை முறை (Behavioural Economics) மூலம் நாம் - இந்த காலகட்டத்தில் கற்றுக் கொண்டு நம்மை நாமே மீட்டெடுப்பதில் முழு கவனம் செலுத்துபவர்களாக மாற வேண்டும்

பூகம்பத்திற்கு பிறகு அந்தத் தீவில் (அங்கே பல தீவுகள் உள்ளன அல்லவா!) சில கடைகள் திறக்கப்படுகின்றன. மக்கள் பொருள்கள் வாங்கி, மீண்டும் ஒரு புதுவாழ்வு 'கணக்குத்திறக்க' முற்படுகிறார்கள். கடைக்குள் நீண்ட 'க்யூ' நிற்கிறது!

ஒரு அம்மையார் 2 பொட்டலம் சர்க்கரையை எடுத்து தனக்கென பில் போட செல்லுமுன் ஒரு கணம் யோசிக்கிறார். அங்கே அப்பொருள் இருப்பு அதிகம் இல்லை என்பதைப் புரிந்து கொண்டு, தான் எடுத்து வந்த இரண்டு பொட்டலம் சர்க்கரையில் ஒரு பொட்டலத்தை திருப்பிக் கொண்டு வந்து வைத்துவிட்டு வருகிறார், கார ணம் பின்னால் வருகிறவர் ஏமாற்றம் அடையக் கூடாதே! என்னே பரந்த மனிதநேயத்தின் மாண்பு அவரிடம் பளிச்சிட்டது!

இந்த சூழலில் மற்ற நாடுகளில் - ஏன் அமெ ரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில்கூட பொருள் கள் பேரங்காடிகளில் (Super Marketகளில்) குவிந்தவை சிலமணிகளில் காலியாகி விட்டச் செய்தி, அள்ளிக் கெண்டு பத்திரப்படுத்தும் அப் பட்டமான தன்னலம் தலைவிரித்தாடுகிற நடத் தையையும் பார்க்கிறோம்.

என்றாலும் ஊரடங்கு, வீட்டுக்குள்ளே இருக் கும் நிலையில், பெரிதும் துரித உணவுக் கடைகள் உட்பட மூடிக்கிடந்தாலும், வீட்டின் அம்மாவின் சமையல் கூடம் 'Mom's Kitchen' மிகவும் சுவைத்தது மட்டுமல்ல - முதல்முறையாக வளர்ந்த பிள்ளைகளுக்கும் கூட.

இதனால் உடல் நலமும் கெடவில்லை; பணச் செலவும் குறைந்தது என்பது ஒரு நல்ல நடத்தைப் பொருளாதார ஏற்றத்திற்கு (Behavioural Economics) வழிவகுத்தது.

அதனை நிரந்தரமாக்கி நீள்பயன் பெறுவோம்!

(நாளை ஆராய்வோம்)

கரோனாவும் 'நடத்தைப் பொருளாதாரமும்!' (2)
May 20, 2020 • Viduthalai • வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

கரோனாவினால் ஏற்பட்ட தீய விளைவுகள்  - உயிர்ப் பலி, பொருளாதாரத்தில் எளிய மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுதல் போன்றவற்றுடன் எதிர் பாராத சில விளைவுகள் ஏற்பட்டுள்ளன என்றும் சமூக ஆர்வலர்கள் கூறத் தான் செய்கின்றனர்!

கங்கை நீரை சுத்தப்படுத்த எத்தனையோ ஆயி ரம் கோடி  ரூபாய் செலவிட்டோம் - இப்போது அது ஊரடங்கு காரணமாக சுத்தமாகி வருகிறது - என்கிறார்கள்!  அதுபோலவே டில்லியில் தொழிற்சாலைகள் இயங்காத காரணத்தினால் காற்று மிகவும் மாசடைந்த நிலை மாறி - அதன் காற்று மாசு வெகுவாகக் குறைகின்றது என்றும் கூறுகிறார்கள் - ஒரு பக்கம் மகிழ்ச்சியையும் தெரிவிக்கிறார்கள்!

இது உண்மையாகவும் இருக்கலாம்; நாம் மறுக்க வில்லை; ஆனால் ஒன்று, இவை எந்த நிலையில்? மோட்டார் கார்கள் ஓடாமல், சாலைகள் வெறிச்சோடி இருக்கும்போது, விபத்துகளே ஏற்பட வில்லை அல்லது எங்கோ சிற்சில விபத்துகள் மட்டுமே நிகழ்ந்துள்ளன என்று கூறி மகிழவா முடியும்?

இயல்பு வாழ்க்கையில் இவை சாத்தியப்பட்டால் தானே அந்த மகிழ்ச்சிக்கு நியாயம் உண்டு.

நெருக்கடி காலத்தில் - 'எமர்ஜென்சி' என்ற காலத்தில் (1976 இல்) "ரயில்கள் சரியாக ஓடின - அலுவலகங்கள் சரியான நேரத்திற்கு இயங்கின - லஞ்சம் வாங்க பயந்தார்கள் - திருமணம் 50 பேருக்கு மேல் நடத்தினால் அபராதம்" என்பது வேலை செய்தது என்று சிலர் கூறி மகிழ்ந்தார்கள். ஆனால், அதற்கு நாடு கொடுத்த விலை? மதிப்பற்ற தனி மனித சுதந்திரமும், கருத்து சுதந்திரமும் பறிபோயிற்று என்பதல்லவா?

நடத்தைப் பொருளாதார மாற்றம் - கரோனா தொற்றின் விளைவாக ஊரடங்கு, வீட்டுக்குள் முடக் கம் - அதன் காரணமாக தாராளமாக வெளியே சென்று இளைஞர்களுக்கு துரித உணவு, பிட்சா, பர்கர் - எல்லாம் சாப்பிடவும், சினிமா கேளிக்கைகளில் கை நிறைய வாங்கும் சம்பளத்தை 'தாம்தூம்' என்று செலவழித்து 'ஜாலி'யாக இருப்பதுமே வாழ்க்கை  என்று நினைத்தவர்களுக்கு - கரோனாவின் விளைவாக சம்பளக் குறைப்பு, வேலை இழப்பு, வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டு வாழுதல் முதலியவற்றைப் பற்றி ஆழமாகச் சிந்தித்து அதற்கேற்ப 'விரலுக்கு ஏற்ற வீக்கத்தை' மட்டும் வைத்துக் கொள்வது எப்படி என்று நினைத்து அசைபோட்டு சிந்தித்தால், எவ்வளவு பெரிய செலவாளியாக இதற்கு முன் நீங்கள் திகழ்ந்திருந்தாலும், உறுதியான, ஆழமான சிந்தனை உங்களை சரியான முடிவு எடுக்கவே தூண்டிவிடும். வாழ்க்கை முறை (Life Style Changes) மாற்றங்கள் தானே - அவசியத்தின் உந்துதல் காரணமாக தானே கருக் கொண்டு உருக்கொள்வது நிச்சயம்!

எங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு திருப்பத்  தையே ஒரு உதாரணமாக்கிட விரும்புகிறேன் - படிப்பறிவைவிட பட்டறிவே பல நேரங்களில் நல்ல பாடங்களைக் கற்றுத் தருகிறது!

சென்னை பிராட்வே சட்டக் கல்லூரி விடுதியில் (Madras University Students Club) என்ற 150 ஆண்டு வரலாற்றைக் கொண்டது அவ்விடுதியில் - இரண்டாமாண்டு படித்தபோது, நண்பர்கள் சாமிதுரை, திண்டுக்கல் சுப்பிரமணியம் மற்றும் நண்பர்கள் சிலர் பிராட்வேயிலிருந்து மாலை நேரம் நடைபயிற்சி போல் நடந்தே வந்து, மாலை 7 மணி அளவில் புகாரி ஓட்டலுக்குள் நுழைவோம். அவரவர்களுக்கு எது விருப்பமோ அதை ஆர்டர் செய்து "அரட்டை" அடித்துக் கொண்டு சாப்பிட்டு முடித்ததும், சுமார் 700 ரூபாய் சராசரி 'பில்' வரும்; நாங்கள் மாறி மாறி அந்த பில்லைக் கொடுப்போம்; இதில் யாரும் கணக்குப் பார்த்தில்லை!

ஒரு நாள், திரும்பி நடந்துவரும்போது நான் நண்பர் களிடம் உரையாடிய நிலையில், ‘‘நாம் ஒவ்வொரு நாளும் இப்படி இவ்வளவு ரூபாயை நமது விடுதி உணவு இருக்கும்போதும் செலவழிக்கின்றோமே - இதே 700 ரூபாய்க்கு வீட்டில் கறி - (இறைச்சி) வாங்கினால் நம் குடும்பத்தில் உள்ள எத்தனை பேர் சாப்பிடுவார்கள்; இந்தச் செலவு - தேவையற்ற ஆடம்பரம் அல்லவா? இது தவிர்க்கப்பட்டால் என்ன?'' என்று கேட்டவுடன் - மற்றவர்களுக்குப் பொறி தட்டியது.

பிறகு வெகுவாகவே அது குறைந்து விட்டது. அதுபோல இப்போதும் ஒரு நல்ல சூழல், 50 நாள் பயிற்சி - உடல் நலம் பேணுவது - சிக்கனம் தானே உருவாவது - வீட்டுச் சமையல், பழம் போன்றவற் றிற்குத் தாராளமாக செலவழித்து, நல்ல சத்துணவு விருந்தாக சாப்பிட, வாய்ப்பு உள்ளவர்கள் சாப்பிடலாமே! (இந்த நிலைகூட குறிப்பிட்ட அளவு மக்களிடம் இல்லை என்பது வேதனைக்குரியதே!)

இதுபோல பல்வேறு அன்றாட வாழ்க்கை நடத்தை களில் மாற்றங்களை உருவாக்கி, எந்த நிலையிலும் ஒருசிறு தொகையையாவது சேமித்தலும் - சேர்த்தலும் மிகவும் தலையாய கடமையாகும்.

கடன் வாங்குவது அரசுகளின் உரிமையாகட்டும்.

தனி மனித வாழ்வில் கூடுமான வரை கடன் வாங்குவதைத் தவிர்த்தால் - தந்தை பெரியார் அவர்கள் கூறுவதுபோல, நமது சுயமரியாதைக்குப் பங்கமோ, இழுக்கோ என்றும் ஏற்படவே ஏற்படாது!

தொழில் செய்ய வங்கிகளிலோ, மற்றபடி நிறுவனங் களிலோ கடன் வாங்கி, நாணயமாய் திருப்பிக்கட்டும் வ(ப)ழக்கம் தவறல்ல. தேவையற்ற ஆடம்பரங்கள் நம்மை அதல பாதாளத்தில் தள்ளி விடும். எளிமை எப்பொழுதும் ஏற்றம் தரும்; புது வாழ்வையே உருவாக்கி மேன் மைப்படுத்தும்!

'சிறுதுளி பெரு வெள்ளம் - நினைவிருக்கட்டும்!'

தந்தை பெரியார்  அவர்கள் கடனும் வாங்க மாட்டார்; எவருக்கும் (எளிதில்) கடனும் கொடுக்க மாட்டார். எனவேதான், அவர் கண்ட இயக்கம் ஒரு பெரும் நிறுவனமாகி, வளர்ந்தோங்கும் வாய்ப்பும், அந்த வருவாய்மூலம் எப்படிப்பட்ட இழப்புகளையும் ஈடுகட்டி கொள்கைப் பிரவாகம் தடையின்றி ஓடவும் வழி ஏற்பட்டுள்ளது! நமக்கு மிகவும் இன்றியமையாத பொருள்களையே வாங்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளுங்கள்.

இன்னும் 18 மாதங்கள் பொருளாதாரச் சிக்கலும், நெருக்கடியும் கரோனா தீர்ந்தும் - தீராத விளைவாக நம்மையே அச்சுறுத்தும். அப்போது நாம் நம்மைக் காப்பாற்றிட, நாம் மானத்தோடு வாழ, இந்த நடத்தைப் பொருளாதார மாற்றம் வெகுவாக கைக்கொடுக்கும் - மறவாதீர்!



கைத்தொலைபேசிகளும், கரோனா தொற்றும் ஓர் எச்சரிக்கை மணி!


May 16, 2020 • Viduthalai • வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

அனைத்திந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனத்தின் (எய்ம்ஸ்) கிளை - மருத்துவமனை சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ளது. அங்கே பணிபுரியும் குடும்ப மருத்துவத் துறை மருத்துவர் கள் அய்ந்து பேர், ஒரு பன்னாட்டு மருத்துவப் பத்திரிக்கை ஒன்றில் (International Medical Journal) கரோனா தொற்றுப் பரவல் பற்றி - எச்சரிக்கை மணியடிப்பது போல் ஒரு முக்கிய தகவலை எழுதியுள்ளனர்.

நாம் பயன்படுத்தும் கைத்தொலைப்பேசி (Cell Phone) மேற்பரப்பு, கரோனா பரவலுக்கு அதிக வாய்ப்பு கொண்டது. செல்போன் பேசும் போது நமது முகம், கண், காது, வாய் ஆகியவற்றை ஒட்டியே வைத்துப் பேசுகிறோம்; இதனால் கரோனா எளிதில் பரவ அதிக வாய்ப்பு உண்டு.

எவ்வளவு தரம் கைகளை முறையாக சோப்புப் போட்டுக் கழுவினாலும் செல்போன் - கைத்தொலை பேசி - கரோனா பரவலுக்கு வழி வகுக்கக் கூடி யதே - கவனமாக இருங்கள்.

ஒரு மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஆய் வில் - 15 நிமிடங்களிலிருந்து 2 மணி நேரத்திற்கு ஒரு தடவை சுகாதாரப் பணியாளர்கள் செல் போனைப் பயன்படுத்துகின்றனராம்!

சுமார் 100 சதவிகிதம் பேரும் கைத்தொலைப் பேசிகளைப் பயன்படுத்தினாலும் அதில் 10 சதவிகிதம் பேர் மட்டுமே அவ்வப்போது தங்களது செல்போன்களைத் துடைக்கின்றனராம்!

சுகாதாரப் பணியாளர்களின் முகக்கவசம், தொப்பி ஆகியவை போல், செல்போனும் உடலு டன் ஒட்டியே இருக்கிறது. ஆனால், முகக்கவசம், தொப்பி ஆகியவற்றைத் துவைப்பது போல் செல் போன்களை துவைக்க முடியாதே! கையின் நீட்சி யாக செல்போன் இருப்பதால் செல்போனில் இருக் கும் எல்லாமே கைக்கு மாறும் வாய்ப்பு அதிகம்.

 மேலும் செல்போன்கள், பாக்டீரியாக்கள் - தொற்றுக் கிருமிகள் - குடியிருக்க வாய்ப்புள்ளவை - கை சுத்தத்தாலும் அவற்றைத் தடுக்க முடியாது.

எனவே, மருத்துவமனைகளில் தகவல் பரிமாற் றத்துக்கு கூடுமான வரை செல்போன்களைத் தவிர்க்க வேண்டும் என்றும், அதற்கு பதிலாக, ஹெட்போன்கள், இன்டர்காம் தொலைப்பேசி ஆகியவற்றைப் பயன்படுத்தலாம் என்றும் அறி வுறுத்தியுள்ளனர் அந்த ஆய்வுக் கட்டுரையில்!

மேலும் செல்போன்களை நாம் பல இடங் களுக்கும் எடுத்துச் செல்வதன் மூலம், கிருமி பரவும் என்பதால், வெளியிடங்களிலும் அதைப் பயன்படுத்துவதைக் கூடுமானவரை தவிர்க்கவும் வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.

மேலும் மற்றொரு முக்கிய எச்சரிக்கை. தயவு செய்து உங்கள் செல்போன் கருவியை யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். கூடுமானவரை மற்றவர் கள் தரும் செல்போனை வாங்கிப் பேசுவதையும், எவ்வளவு அதிகமாகத் தவிர்க்க முடியுமோ அவ்வளவு அதிகமாகத் தவிர்த்துவிட முயலுங்கள்! அதே எண்ணை வாங்கி உங்கள் போனிலிருந்து பேசுங்கள்!

சின்னச் சின்ன விஷயங்கள் என்றாலும், கவனக்குறைவு வேண்டாம் - காரணம் சின்னச் சின்னக் கிருமிதானே கரோனா தொற்று கிருமி - உலகை எப்படி ஆட்டி வதைக்கிறது பார்த்தீர்களா?

கையில் கயிறு - மாந்திரிகம், பக்தி என்பதற்கா கக் பல கயிறுகளை வடகயிறுகள்போல், கட்டியி ருப்பவர்களும் இதன் மூலம் பெற வேண்டிய முக்கியப் பாடம் உண்டே!

ஏற்கெனவே நாம் Microbilogy Department மூலம் - ஆய்வு செய்து - கையில் கட்டியுள்ள கயிறுகளில் கிருமிகள் எப்படி எளிதில் புகுந்து, தங்கி வாசம் செய்து நோய்களை ஏற்படுத்தும் வாய்ப்பு விஞ்ஞானப்படி அதிகம் என்பதை  குழந் தைகள் முகாமில் (தஞ்சையில்) விளக்கியுள்ளோம்!

குழந்தைகள் கேட்டனர்; ஆனால், பெரிய வர்களின் (மூட) நம்பிக்கை அவர்களைத் தொற்றி யுள்ள கிருமிகளாக நின்று தடுத்தால் நாம் என்ன செய்ய முடியும்?

குதிரையை குளத்துக்கு அழைத்துச் செல்ல முடியும் - ‘குடி தண்ணீரை என்று'  அதன் தலையை முக்கியா, தண்ணீர் குடிக்க வைக்க முடியும்?


பசி தீர்ப்பதா! பிணி தீர்ப்பதா! எது முதல் தேவை!

 

May 14, 2020 • Viduthalai • வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

நம் நாட்டில் பட்டிமன்றங்களுக்குப் பஞ்சமே இல்லை. பல பட்டிமன்றங்கள் - கலைஞர் அவர் கள் ஒருமுறை குறிப்பிட்டதுபோல, அவை வெறும் 'பாட்டி மன்றங்களாகவே' நடைபெறுவதும் வாடிக்கை!

இன்னும் சில பட்டிமன்றங்கள் ஏதோ பொழுதுபோக்குக்கும், சிரிப்பாய்ச் சிரிப்பதற்குமே தயாரிக்கப்படும் ஜோக்குகள் - கற்பனை வளம் நிறைந்த ஜோடனைக் கதைகள் இவற்றை வைத்து கைதட்டல்களை மட்டுமே கணக்கிட்டுத் தங்களது வாழ்வாதாரத்தை நடத்தும் ஆஸ்தான நாயகர் களும் பலர் உண்டு.

சிரிப்பும், கைதட்டலும் மிஞ்சும் இவை முடிந்த பிறகு, என்ன சொன்னார்கள் பேசியவர்கள் - தலைமை வகித்தவர் எப்படி அவர்களின் உரையை, கழுவிய மீனிலும் நழுவிய மீனாகவோ அல்லது வெண்டைக்காய். விளக்கெண்ணெய். கற்றாழை எல்லாவற்றையும் கலந்த கலவை போல, 'வழவழா, கொழ கொழாவென்று' அளித்த ''தீர்ப்பையும்'' எதையும் திரும்ப நினைத்துப் பார்த் தால், எதுவுமே யாருக்குமே நினைவுக்கே வராது!

நேரம் சென்றதுதான் ஒரே விந்தை! அப்படி அல்ல இப்போது. கரோனா காலத்தில் மக்களுக்கு சம்பந்தப்பட்ட நிலையில், அவர்களைக் கரோனா நோயின் அச்சத்திலிருந்து வெளியேற்றவும், அவர்கள் பாதிக்கப்படாமல் நோய்த் தொற்றி லிருந்து பாதுகாப்பதும் மத்திய - மாநில அரசுகளின் கடமை - சமூகத்தின் பொறுப்பு. இது ஒரு நாட்டு, ஒரு சமூகத்திற்குரிய பிரச்சினை அல்ல. உலகமே இதன் பிடியில் சிக்கி அலறித் தவித்துக் கொண் டுள்ள உண்மை நிலை!

இதில் நோய்த் தொற்று பரவாமல் இருக்கவும், பாதிக்காமல் இருக்கவும், மருந்தில்லாது - மருத்து வர்களும், செவிலியர்களும், ஆட்சியாளர்களும் இந்த 'கண்ணுக்குத் தெரியாத எதிரி'யுடன் நடத்தும் கரோனா ஒழிப்புப் போரில், ஒரு கட்டத்தில் (அது மூன்றாவது, நான்காவது கட்டமாகவும் இருக்கலாம்!) ''கரோனாவோடு வாழவும் கற்றுக் கொண்டு, அதையே வாழ்க்கை முறையாகவும் ஆக்கிக் கொள்வதைத் தவிர, வேறு வழியே இல்லை'' என்று கைபிசைந்து, வாய் அசைந்து கூறுவதைத் தவிர வேறு வழியில்லாத நிலையில்,

  1. தனி நபர் இடைவெளியுடன் பழகுதல்
  2. முகக் கவசம் தவறாது அணிதல்
  3. தேவையற்று, கூட்டத்தில் கலப்பதைத் தவிர்த்து, தனிமையை இனிமையாக்குதல்
  4. அடிக்கொரு தரம் சோப்பு போட்டு நன்றாகக் கைகளைக் கழுவுதல்.
  5. சத்துணவு, உடற்பயிற்சிமூலமும் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை நாளும் வளர்த்து, அந்நோயை நம் எதிர்ப்புச் சக்தியால் விரட்டி அடித்து, மீளுதல் தவிர வேறு எந்த வழியும் புலப்படவில்லை என்பது உலகம் தழுவிய உபதேசமாக - உபயோகமாக உள்ளது.

கரோனாவில் ஏற்பட்ட விளைவுகள், ஏழை, எளிய நடுத்தர மக்களின் நோய்த் தடுப்புக்காக என்று - ஊரடங்கில் பல மாதங்களாக முடங்கும் போது, அவர்களுக்குரிய வாழ்வாதாரம் குடும்ப உறுப்பினர்களின் பசி போக்கும் வாய்ப்பு - குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்த் தோழர்கள், அன்றாட வேலைகள், தொழில்கள்மூலம் தங்கள் ஜீவனத்தை ஓரளவு கவுரவத்துடன் நடத்தும் தொழிற்கலைஞர்கள், பலரும் பசியிலிருந்து காப்பாற்றப்பட வேண்டியவர்கள் ஆவர்.

பசிதான் மனித குலத்தின் மிகப்பெரிய தேவை!

பசி தீர்ப்பதுதான் மனித குலத்துக்கான மிகப் பெரிய சேவை.

வறுமையும், பசியும் இரட்டைக் குழந்தைகள்!

இதில் ஜாதி, மதம், இனம், மொழி, நாடு என்ற பேதம் - பிரிவினையே மனித குலத்திற்கு - ஏன் உயிரினங்களுக்குக்கூட -  அனைத்துக்குமே கிடையாது!

தந்தை பெரியார் அவர்களது மனிதநேயம் வியக்கத்தக்கது.

1925 ஆம் ஆண்டு (2.5.1925) முதல் பச்சை அட்டைக் 'குடிஅரசு' ஏட்டில் உள்ள ஒரு கவிதை இதோ:

''அனைத்துயிர் ஒன்றென்றெண்ணி

அரும்பசி யெவற்கும் ஆற்றி

மனத்துளே பேதாபேதம்

வஞ்சம், பொய், களவு, சூது

சினத்தையும் தவிர்ப்பாயாகில்

செய்தவம் வேறொன்று ண்டோ

உனக்கிது உறுதியான

உபதேசம் ஆகும் தானே!''

என்ற பாடல் தலையங்கத்திற்குமேல் இடம் பெற்றுள்ளது.

பசி போக்கலா? பிணி தடுத்தலா? இரண்டில் எதற்கு முன்னுரிமை?

இதைத்தான் இன்றைய அரசுகள் - உலகம் முழுவதும் உள்ளவர்கள் உணர வேண்டியது அவசியம்!

திருக்குறள் தந்த பகுத்தறிவுப் புலவர் திரு வள்ளுவர்கூட,

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்

சேராது இயல்வது நாடு (குறள் 734).

உறுபசிக்கே முன்னிடம் தந்துள்ளார் வள்ளுவர் - ஓவாப் பணி அதன் பின்னே - இரண்டும் முக்கியமாகத் தீர்க்கப்பட வேண்டியவைதான் என்றாலும்கூட.

எனவேதான் தந்தை பெரியார் 95 ஆண்டு களுக்கு முன்பே இதனை முக்கியமாய் நோக் கினார் என்பது அறிய அறிய உவப்பும், வியப்புமே மிஞ்சுகிறது!

ஒரு நிகழ்ச்சிக்கு சென்னை பெரியார் திடலுக்கு வந்து, பெரியார் பகுத்தறிவு நூலகத்தில் உள்ள பழைய பச்சை அட்டை 'குடிஅரசின்' இந்தக் கவிதை வரிகளைப் படித்துவிட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான ஜஸ்டிஸ் எம்.எம்.இஸ்மாயில் அவர்கள் மிகவும் ஆச்சரியத்துடன், இந்தக் கவிதையை எழுதியவர் யார் என்ற விவரம் உங்களுக்குத் தெரியுமா? என்று என்னைப் பார்த்துக் கேட்டார்!

எனக்கு அவர் சட்டக் கல்லூரியில் ஆசிரியர். நான் அவர் விரும்பும் மாணவன். மிகுந்த கடவுள் - மத நம்பிக்கையாளராகவும், தேசிய உணர் வாளராகவும் நடுநிலை தவறாத நீதிமானாகவும் வாழ்ந்தவர் அவர்! அவர் உள்ளத்தில் இக்கவிதை ஏற்படுத்திய தாக்கம் தந்தை பெரியாரின் சுயமரி யாதை மனிதநேயம் எவ்வளவு ஆழமானது என்பதை விளக்கி, அன்று நடந்த பொழிவிலேகூட பேசினார்!

எனவே, பசி தீர்ப்பதே முன்னுரிமை. நோயோடு கூட வாழலாம்; வாழ்ந்துவிட முடியும். ஆனால், பசியோடு வாழ முடியாது என்பதை நாம் அனை வரும் உணர்ந்து, மக்களின் பசி தீர்க்க நம்மாலா னதைச் செய்து, மனிதாபிமானம் காப்போம்! வாரீர்! வாரீர்!!


சேவையே, உன் பெயர்தான் செவிலியமா

 

May 12, 2020 • Viduthalai • வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

மனித குலம் பெருமைப்படும் பணிகளில் தலையாயது மருத்துவப் பணி; அப்பணிக்கு மேலும் அடிக்கட்டுமானத்தை வழங்கி, வலிவும் பொலிவும் சேர்ப்பது செவிலியர் சகோதரிகளின் ஒப்பற்ற சேவையாகும்.

மருத்துவர்களும், செவிலியர்களும், மருத்துவ மனைகளும் இல்லாத ஓர் உலகத்தை - கண்ணை மூடிக்கொண்டு - ஒரு கணம் யோசித்துப் பாருங்கள்!

அதிர்ச்சியால் நீங்கள் உறைந்து போவீர்கள்!

அதிலும் செவிலியர்களின் தன்னலமற்ற மருத் துவப் பணிக்கு மானுடம் என்றென்றும் தலை வணங்கக் கடமைப்பட்டுள்ளது.

செவிலியர்களுக்கெல்லாம் ஒரு தனிப்பெரும் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர் புளோரன்ஸ் நைட்டிங்கேல். இன்று (மே 12) அவரது 200 ஆவது ஆண்டு பிறந்த நாளே - செவிலியர் சேவை நாளாகக் கொண்டாடும் நாளாகும்.

இங்கிலாந்து நாட்டில் 1820 ஆம் ஆண்டு மே 12 ஆம் தேதி பிறந்த ஒரு பெண் மகவு, உலகுக்கே தொண்டற வெளிச்சத்தை ஈகையுடன் வழங்கி, பெருமையாக வரலாற்றில் அன்றும் இன்றும் என்றும் வாழுபவர் புளோரன்ஸ் நைட்டிங்கேல்.

மிகப்பெரிய பணக்கார வசதிகள்  அதிகம் படைத்த ஒரு பெரிய குடும்பத்தின் 'பிஞ்சாகப்' பிறந்து வளர்ந்தாலும் - தனது குடும்பத்தினரின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் நோயாளியின் நோய் தீர்க்க உதவும் செவிலியர் படிப்பைப் பிடிவாதமாகப் படித்து,  முடித்து, அவர்களுக்குச் சேவையாற்றுவதே தன் வாழ்க்கையின் இலக்காக அமைய வேண்டும் என்ற திட சித்தத்துடன் உழைத்து, செவிலியர் உலகத்தின் சிறப்புச் சேவைச் செம்மலாக உயர்ந்தார்; ஆபத்துகள் நிறைந்த போர்க் களங்களில் குறிப்பாக, 1853 ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கும் - ரஷ்யாவுக்கும் நடந்த கிரிமியன் போரில் காயமடைந்த போர் வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க - தன் உயிரைத் துச்சமென மதித்துச் சென்றார்; அங்கே ஒருபுறம் காலரா தொற்று; மறுபுறம் டைபாய்ட் விஷ ஜூரம்  பரவியிருந்த நேரத்தில் இணையற்ற ஈகத்தோடு இறங்கினார் சிகிச்சை அளிக்க - எங்கும் இருள்! வெளிச்சம் இல்லை - சிகிச்சை கொடுக்க! ஆனால், அவரோ - அதுபற்றி கிஞ்சிற்றும் கவலைப்படாமல், ஒரு கையில் விளக்கொன்றை ஏந்தி, போர்க்களத் தில் காயம் பெற்ற வீரர்களுக்குச் சிகிச்சை அளித் தும், தொற்று கொடுமையாகி இருந்த நிலையில் அதனை எதிர்த்தும் தொடர்ந்து அலுப்பு சலிப் பின்றி தொண்டறத்தினைச் சுழன்றடிக்கும் சூறா வளிபோல், சுற்றிச் சுற்றி வந்து செய்தார். இதனால் அவர் வரலாற்றில் 'Lady  with the Lamp' - 'விளக்கேந்திய வீரப் பெண்மணி' என்று வர்ணிக் கப்பட்டார்!

உலகம் முழுவதும் ''கரோனா கரோனா'' என்று கொடும் தொற்றால் அவதியும் அல்லலும்படும் இந்த நேரத்தில் ஒரு - புளோரன்ஸ் நைட்டிங்கேல் போல தங்கள் உயிர் முக்கியமல்ல என்று பல்லாயிரக்கணக்கில் பணியாற்றும் அந்த செவிலியர் சேவையாளர்களுக்கும் நமது நன்றி யைக் காணிக்கையாக்குகிறோம்!

உற்றார் உறவினர் செய்யத் தயங்கும், நோயால் ஏற்படும் அருவருப்பு நிறைந்த சிறுநீர், மலம், எச்சில், சளி, வாந்தி எல்லாவற்றையும்கூட முகம் சுளிக்காமல் சிறிதும் சங்கடப்படாமல், சிகிச்சை அளிப்பதோடு, அந்த நோயாளிகளுக்கு மருந்து களைவிட மனிதநேயமும், இதமான இனிய சொற் களும் மிகவும் ஆறுதலளித்து, நோய் தீர்க்கும் மாமருந்தைவிட அரும்பெரும் மருந்தாகவே அமைபவர்கள் மானுடத்தின் ஒப்பற்ற உயர் அங்கமான நம் செவிலியர்கள்.

பல நாடுகளில் சிங்கப்பூர் உள்பட, கேரளத்தில் எத்தனையோ 'புளோரன்ஸ் நைட்டிங்கேல்கள்' செவிலியச் சகோதரிகள் சேவையின் சின்னங்களா கவே என்றும் வாழும் வகையில், நோயாளிகளைக் காப்பாற்றிட கடைசி வரை தமது கடமைகளை - உயிரினும் மேலானதாக உண்மையிலேயே கருதி உழைத்து, தியாகம் செய்து, மறைந்தும் மறையாமல் இன்னும் மக்கள் உள்ளத்தில், வரலாற்றில் வாழுப வர்களாக  பலர் இருக்கிறார்கள்!

கரோனா அச்சம் மனித குலத்தை உலுக்கி குலுக்கி அதிர வைத்துக் கொண்டிருக்கும் இந்த சோகக் காலகட்டத்தில்கூட, நம்பிக்கை ஒளியூட் டக் கூடியவர்கள் மருத்துவர்களும், செவிலியர் களும்; அவர்களுக்கெல்லாம் ஈடாக  எங்கும் உள்ள துப்புரவுப் பணித் தோழர்களும், தாய்மார் களும்தான்!

இன்றைய புளோரன்ஸ் நைட்டிங்கேல் செவிலியர் சேவை நாளில் - இவர்களுக்கு நன்றி காட்டும் நன்னாளாகக் கருதி அவர்கள் தொண்ட றத்துக்குத் தலைவணங்குவோம்.

வயதை ஒரு பொருட்டாக்காமல், இளம் பெண்கள்கூட, முதிர்ச்சியுடன் சேவை தரும் பான்மையும், கருணையும் காலத்தின் அணி கலன்கள் - விளக்கேந்திய வீரப் பெண்மணி தந்த வெளிச்சத்தின் கதிர்கள் -

இவர்களது தொண்டறம் வெல்க! வெல்கவே!

சூழ்நிலைக் கைதியாகாதவரே சுயமரியாதை வீரர்!

 

May 8, 2020 • Viduthalai • வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

கரோனா கொடூரம் காரணமாக நாளும் தொடர்ந்து கொண்டிருக்கும் ஊரடங்கு, வீட்டுக் குள் முடங்கும் பலருக்கு மன இறுக்கத்தை அளிக் கக் கூடும். ஆனால், பகுத்தறிவாளர்களுக்கு அதைத் தவிர்த்துவிட்டு, வழமையான உற்சாகத் தையே வாழ்க்கைப் பாதையாக ஆக்கிக் கொள் ளும் பக்குவம் - நிச்சயம் உண்டு!

நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் வாழ்க்கை நமக்கு எல்லா நிலைகளிலும், வழிக ளிலும், வேளைகளிலும்கூட நல்ல கலங்கரை வெளிச்சம்தானே! அட்டியென்ன அதில்?

தனது சுற்றுச்சார்பு, சூழ்நிலை ஒருபோதும் தன்னைப் பாதித்தது கிடையாது என்பதைத் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையில் மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறார்கள்.

‘‘எனது நண்பர்கள் பலருக்கும் நான் அளித்த  விருந்தில், மதுகூட தந்துள்ளேன் - அவர்களுக்கு அதில் அதிக விருப்பமுண்டு என்பதால்; ஆனால், நான் அவர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும், ஏன் என்னை வலுக்கட்டாயமாகப் பிடித்து, என் முகத்தில் - போதை அளவுக்கு மிஞ்சி அவர்க ளுக்கு ஏறிய காரணத்தால் - ஊற்றியதுகூட உண்டு; நான் முகம் கழுவிக்கொண்டு வெளியேறு வேன். சிகரெட் - ‘Chain Smoker’ என்று கூறும்படி - தொடர்ச்சியாகப் புகை பிடிக்கும் பழக்கம் உண்டு - நினைத்தேன், ஒரே நாளில் நிறுத்தி விட்டேன்." இப்படி அய்யா எழுதினார்.

மனதின் உறுதிதான் வைராக்கியம் எனப்படு வது. நாம் எந்த சூழ்நிலை ஏற்பட்ட போதும், நாம் அதற்கு அடிமையாக வேண்டிய அவசியமே கிடையாது - நம் மனதில் தெளிவும், உறுதியும் இருந்தால் - சபலங்களின் சலனங்கள் நம்மை ஒருபோதும் தீண்டாத அளவுக்கு நம்மை நாமே பக்குவப்படுத்திக் கொள்ளலாம்.

எனது நண்பர்கள் பலரும் பொழுதுபோக்குக் காக மாணவப் பருவத்தில்  ‘சீட்‘ (Playing Cards)டாடுவார்கள் - என்னைப் பழக்கவும் கூட சிலர் முயற்சித்தனர். நான் ஒருபோதும் அதற்கு இரையாகவில்லை; காரணம், அய்யா வழியில் எனது மாணவப் பருவம் - இளமை அமைந்ததே யாகும்!

தந்தை பெரியாரின் மன உறுதி எப்படிப்பட் டது என்பதை அவர்தம் நெருக்கமான பொது வாழ்வு நண்பரான தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள் எழுதிய அவரது ‘வாழ்க்கைக் குறிப்பு கள்’ பக்கம் 356 முதல் 357 வரை எழுதியுள்ள ஒரு பகுதி இதோ:

‘‘வைக்கம் வீரர்க்குப் பலதிற அணிக ளுண்டு. அவைகளுள் ஒன்று வைராக்கியம். 1920ஆம் ஆண்டில் சென்னையிலே கூடிய மகாநாடொன்றுக்கு டாக்டர் வரதராஜூலு நாயுடுவும், இராமசாமி நாயக்கரும் போந்த னர். இருவரும் இராயப்பேட்டை பவானி பாலிகா பாடசாலையில் தங்கினர். இரவில் டாக்டர் சுருட்டுப் பிடித்தனர்; நாயக்கர் சிகரெட் பிடித்தனர். இரண்டு புகையும் என்னை எரித்தன. சிகரெட்டை விட வேண் டுமென்ற உறுதி நாயக்கருக்கு எப்படியோ உண்டாயிற்று. சிகரெட் பயிற்சி நாயக்கரை விட்டு ஓடியது. வைராக்கியம் என்ன செய்யாது?

இராமசாமி நாயக்கர் புலால் உண்பவர். அவ்வுணவை அவர் அவசியமாகவுங் கொள்ளவில்லை; அநாவசியமாகவுங் கொள்ளவில்லை. நாயக்கரும் யானும் பலப்பல நாள் பலப்பல இடங்கள் சுற்றியுள் ளோம். வீரர் மனம் புலால்மீது சென்றதே இல்லை. அவர் புலால் உண்பதை என் கண் இன்னும் கண்டதில்லை.

நாயக்கர் ஜாதி வேற்றுமையை ஒழித் தவர்; அதை நாட்டினின்றுங் களைந்தெறிய முயல்பவர். ஜாதி வைதிகர் எவரேனும் நாயக்கர் வீட்டுக்குப் போதருவரேல், அவர் கருத்து வழியே நடந்து அவருக்கு வேண்டுவ செய்வர். இதை யான் கண்ணாரக் கண்டி ருக்கிறேன்.

இளமையில் யான் பொறுமை காப்பது அரிதாகவேயிருந்தது. பின்னே நூலாராய்ச்சி யும், நல்லோர் கூட்டுறவும் இல்வாழ்க்கையும், இன்ன பிறவும் எனது இயற்கையைப் படிப் படியே மாற்றி வந்தன. காஞ்சி மகாநாட்டிலே நாயக்கருக்கும், எனக்கும் உற்ற கருத்து வேற்றுமை காரணமாக அவர் ‘குடிஅரசு’ எய்த சொல்லம்புகள் பொறுமையை என் பால் நிலைபெறுத்தின. சொல்லம்புகளை யான் தாங்கப் பெருந்துணை செய்தவர் நண்பர் நாயக்கர்.

மயிலை மந்தைவெளியிலே நாயக்கரால் (8.3.1924) நிகழ்த்தப் பெற்ற சொற்பொழிவிலே இராஜ நிந்தனை இயங்கியதென்று அவர் கைது செய்யப்பட்டார். வழக்கு நடந்தது. இராயப்பேட்டையிலே தங்கினார். ஓர் இரவு ‘குகான நிலைய’த்திலே நாயக்கர் ஒரு திண்ணையில் உறங்கினார்; யான் மற்றொரு திண்ணையில் உறங்கினேன். பதினொரு மணிக்கு மழை தொடங்கியது. நண்பரை எழுப்பினேன். அவர் கண் விழிக்கவில்லை. மழை பெருகியது. மீண்டும் நேயரை எழுப்பினேன், கண்கள் மூடியபடியே இருந்தன. நாயக்கரைப் பலமுறை எழுப்பி எழுப்பிப் பார்த்தேன். பயன் விளைய வில்லை. நாலு மணிக்கு மழை நின்றது. ஆறு மணிக்கு வைக்கம் வீரர் எழுந்தார். எனக்குச் சொல்லொணச் சிரிப்பு. ‘மழை பெய்தது தெரியுமா?’ என்று நண்பரைக் கேட்டேன். ‘மழையா?’ என்றார். நாயக்கரைத் தீண்டியுள்ள பாம்பு 124-ஏ! வழக்கு நடப்புக் காலம்! அந்நிலையில் நண்பருக்குக் கவலை யற்ற உறக்கம்! என் எண்ணம் நாயக்கர் மனத்தின்மீது சென்றது. ‘அவர் மனம் பொன்னா? சஞ்சலமுடையதா?’ என்ற ஆராய்ச்சியில் இறங்கினேன்.

1942 ஆம் ஆண்டு இராமசாமிப் பெரி யார் ஜெனரல் ஆஸ்பிடலில் படுக்கையில் கிடந்தபோது அவரைக் காணச் சக்கரைச் செட்டியாரும், சண்முகானந்த சாமியும், ஜானகிராம் பிள்ளையும், யானும் சென்றோம். யான் அவர் கட்டிலிலே நெருங்கி அமர்ந் தேன். நாயக்கர் என் கையைப் பற்றிக் கதறினார். என் குட்டை நனைந்தது. இரு வருங் கருத்து வேற்றுமையுடையவர்; போரிட்டவர். நாயக்கர் கண்கள் ஏன் முத்துக் களை உகுத்தன? அக்காட்சி கண்டவர், ‘இங்கே பலர் வருகிறார்; போகிறார். எவரைக் கண்டும் நாயக்கர் அழுதாரில்லை. இவரைக் கண்டதும் அவருக்கு அழுகை ஏன் பெருகியது?’ என்று ஒருவரோடொருவர் பேசியது என் காதுக்கு எட்டியது. அழு கைக்குக் காரணம் என்ன?’’

எத்தகைய அகநக நட்பு பார்த்தீர்களா?

தம் கொள்கை உறுதி ஒருபுறம் என்றாலும், மற்றவர்கள் மனம் - குறிப்பாக தமது விருந்தி னர்கள், நண்பர்கள் எவராயினும் அவர்களது மன உணர்வுகளை மதிக்கும் நயத்தக்க நாகரிகம்தான் தந்தை பெரியாரிடம் கற்கவேண்டிய தலையாய பாடம்!

சூழ்நிலைகள் நம்மை அடிமையாக்க நாம் ஒருபோதும் இடந்தராமல், எதையும் ஒரு வாய்ப் பாக மாற்றிக் கொள்ளும் பயனுறு அனுபவமே நம்மை உயர்த்தும். கரோனாவினால் நாம் சுயக் கட்டுப்பாடு விதித்தாலும், நாம் மனந்தளராமல் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியூட்டுவதையே கடமை யாகக் கொள்ளுங்கள் - கவலைகள் பறந்தோடி விடும்.