பக்கங்கள்

செவ்வாய், 24 நவம்பர், 2020

கரோனாவும் 'நடத்தை பொருளாதாரமும்!' 1&2

 

May 19, 2020 • Viduthalai • வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

அறிவியல் பிரிவுகளில் மக்களின் நடத்தை களையொட்டியவைகளை ஆய்வு செய்தல் Behavioural Science என்று குறிப்பிடுவதுண்டு.

அதேபோல, பொருளாதாரத்திலும்கூட மக்க ளின் நடத்தையையொட்டியே இப்போது பல வகை பிரிவுகளை பொருளியல் ஆய்வு அறிஞர் கள் பகுத்துக் கூறுகின்றனர். எழுதுகின்றனர்.

அதில் ஒன்று Behavioural Economics  என்ற 'நடத்தை முறைகளையொட்டிய பொருளா தாரம்' என்பதும் ஆகும்.

கரோனா தொற்று உலகத்தை ஊரடங்குக்குள் தள்ளி, ஆட்களின் வெளி உலகச் செயல்களை மட்டுமா முடக்கியுள்ளது? அதோடு கூட, உலக நாடுகளின் பொருளாதாரத்தையும், மக்களின் வாழ்வாதாரத்திற்கே சவால்விட்டு முடக்கியுள்ள வேதனையான நிலையும் வேகமாக மக்களை மிரட்டுகிறது!

இதன் பாதிப்பின் விளைவைச் சந்திக்காத ஜன சமூகமே பெரிதும் இல்லை. தொழில்துறைகளில்கூட தொழில் திமிங்கிலங்கள் முதல் சின்ன மீன் வரை அனைவரையும் கரோனா ஒரு புரட்டிப் போட்டு பதம் பார்க்கத் தவறவில்லை.

ஏழை, எளிய மக்கள் நோய்க்குப் பயந்து வீட் டில் முடங்கினால், பசியும் பட்டினியும் அந்த உழைப்பை நம்பிய மக்களை வாட்டி "வதைத்துச் சோற்றுக்கோ வந்ததிந்த பஞ்சம் - இம்மக்கள் நிலை சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்" என்று குமுறிடும் நிலைதான் கரோனா தந்த பரிசு!

மனிதன் இயற்கையின் சீற்றத்தை எதிர் கொண்டு சமாளித்து வாழப்பழகி விட்டான்.

சுனாமிகளும், பூகம்பமும் போன்ற சொல் லொணா கொடுமைகளை தங்கள் வாழ்வில் அடிக்கடி சந்திக்கும் ஜப்பானிய பெருமக்கள் மனந்தளர்ந்தவர்களாகி விடுவதில்லை.

எவ்வளவு சேதம், இழப்பு என்றாலும் அதையும் சகித்து, ஏற்றுக் கொண்டு, அதிலிருந்து புதுவாழ்வினைத் துவக்குவது எப்படி என்பதை நன்கு அறிந்தவர்கள் - ஆதலால், அதிக வயதின ரையும், சராசரி அதிக வயதுடையவர்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகவும் ஜப்பான் இருக் கிறது!

சுனாமி, சூறாவளி, பயங்கர பூகம்பம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டாலும் அவர்கள் மனதளவில் தன் னம்பிக்கை இழக்காமல் தன்னெழுச்சி கொண்ட மக்களாகி, உழைப்பிலும் பண்பிலும் நல்ல குடி மக்களாக வாழ்ந்து காட்டுகிறார்கள்.

அவர்களது அன்றாட நடத்தைப் பொருளியல் வாழ்க்கை முறை (Behavioural Economics) மூலம் நாம் - இந்த காலகட்டத்தில் கற்றுக் கொண்டு நம்மை நாமே மீட்டெடுப்பதில் முழு கவனம் செலுத்துபவர்களாக மாற வேண்டும்

பூகம்பத்திற்கு பிறகு அந்தத் தீவில் (அங்கே பல தீவுகள் உள்ளன அல்லவா!) சில கடைகள் திறக்கப்படுகின்றன. மக்கள் பொருள்கள் வாங்கி, மீண்டும் ஒரு புதுவாழ்வு 'கணக்குத்திறக்க' முற்படுகிறார்கள். கடைக்குள் நீண்ட 'க்யூ' நிற்கிறது!

ஒரு அம்மையார் 2 பொட்டலம் சர்க்கரையை எடுத்து தனக்கென பில் போட செல்லுமுன் ஒரு கணம் யோசிக்கிறார். அங்கே அப்பொருள் இருப்பு அதிகம் இல்லை என்பதைப் புரிந்து கொண்டு, தான் எடுத்து வந்த இரண்டு பொட்டலம் சர்க்கரையில் ஒரு பொட்டலத்தை திருப்பிக் கொண்டு வந்து வைத்துவிட்டு வருகிறார், கார ணம் பின்னால் வருகிறவர் ஏமாற்றம் அடையக் கூடாதே! என்னே பரந்த மனிதநேயத்தின் மாண்பு அவரிடம் பளிச்சிட்டது!

இந்த சூழலில் மற்ற நாடுகளில் - ஏன் அமெ ரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில்கூட பொருள் கள் பேரங்காடிகளில் (Super Marketகளில்) குவிந்தவை சிலமணிகளில் காலியாகி விட்டச் செய்தி, அள்ளிக் கெண்டு பத்திரப்படுத்தும் அப் பட்டமான தன்னலம் தலைவிரித்தாடுகிற நடத் தையையும் பார்க்கிறோம்.

என்றாலும் ஊரடங்கு, வீட்டுக்குள்ளே இருக் கும் நிலையில், பெரிதும் துரித உணவுக் கடைகள் உட்பட மூடிக்கிடந்தாலும், வீட்டின் அம்மாவின் சமையல் கூடம் 'Mom's Kitchen' மிகவும் சுவைத்தது மட்டுமல்ல - முதல்முறையாக வளர்ந்த பிள்ளைகளுக்கும் கூட.

இதனால் உடல் நலமும் கெடவில்லை; பணச் செலவும் குறைந்தது என்பது ஒரு நல்ல நடத்தைப் பொருளாதார ஏற்றத்திற்கு (Behavioural Economics) வழிவகுத்தது.

அதனை நிரந்தரமாக்கி நீள்பயன் பெறுவோம்!

(நாளை ஆராய்வோம்)

கரோனாவும் 'நடத்தைப் பொருளாதாரமும்!' (2)
May 20, 2020 • Viduthalai • வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

கரோனாவினால் ஏற்பட்ட தீய விளைவுகள்  - உயிர்ப் பலி, பொருளாதாரத்தில் எளிய மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுதல் போன்றவற்றுடன் எதிர் பாராத சில விளைவுகள் ஏற்பட்டுள்ளன என்றும் சமூக ஆர்வலர்கள் கூறத் தான் செய்கின்றனர்!

கங்கை நீரை சுத்தப்படுத்த எத்தனையோ ஆயி ரம் கோடி  ரூபாய் செலவிட்டோம் - இப்போது அது ஊரடங்கு காரணமாக சுத்தமாகி வருகிறது - என்கிறார்கள்!  அதுபோலவே டில்லியில் தொழிற்சாலைகள் இயங்காத காரணத்தினால் காற்று மிகவும் மாசடைந்த நிலை மாறி - அதன் காற்று மாசு வெகுவாகக் குறைகின்றது என்றும் கூறுகிறார்கள் - ஒரு பக்கம் மகிழ்ச்சியையும் தெரிவிக்கிறார்கள்!

இது உண்மையாகவும் இருக்கலாம்; நாம் மறுக்க வில்லை; ஆனால் ஒன்று, இவை எந்த நிலையில்? மோட்டார் கார்கள் ஓடாமல், சாலைகள் வெறிச்சோடி இருக்கும்போது, விபத்துகளே ஏற்பட வில்லை அல்லது எங்கோ சிற்சில விபத்துகள் மட்டுமே நிகழ்ந்துள்ளன என்று கூறி மகிழவா முடியும்?

இயல்பு வாழ்க்கையில் இவை சாத்தியப்பட்டால் தானே அந்த மகிழ்ச்சிக்கு நியாயம் உண்டு.

நெருக்கடி காலத்தில் - 'எமர்ஜென்சி' என்ற காலத்தில் (1976 இல்) "ரயில்கள் சரியாக ஓடின - அலுவலகங்கள் சரியான நேரத்திற்கு இயங்கின - லஞ்சம் வாங்க பயந்தார்கள் - திருமணம் 50 பேருக்கு மேல் நடத்தினால் அபராதம்" என்பது வேலை செய்தது என்று சிலர் கூறி மகிழ்ந்தார்கள். ஆனால், அதற்கு நாடு கொடுத்த விலை? மதிப்பற்ற தனி மனித சுதந்திரமும், கருத்து சுதந்திரமும் பறிபோயிற்று என்பதல்லவா?

நடத்தைப் பொருளாதார மாற்றம் - கரோனா தொற்றின் விளைவாக ஊரடங்கு, வீட்டுக்குள் முடக் கம் - அதன் காரணமாக தாராளமாக வெளியே சென்று இளைஞர்களுக்கு துரித உணவு, பிட்சா, பர்கர் - எல்லாம் சாப்பிடவும், சினிமா கேளிக்கைகளில் கை நிறைய வாங்கும் சம்பளத்தை 'தாம்தூம்' என்று செலவழித்து 'ஜாலி'யாக இருப்பதுமே வாழ்க்கை  என்று நினைத்தவர்களுக்கு - கரோனாவின் விளைவாக சம்பளக் குறைப்பு, வேலை இழப்பு, வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டு வாழுதல் முதலியவற்றைப் பற்றி ஆழமாகச் சிந்தித்து அதற்கேற்ப 'விரலுக்கு ஏற்ற வீக்கத்தை' மட்டும் வைத்துக் கொள்வது எப்படி என்று நினைத்து அசைபோட்டு சிந்தித்தால், எவ்வளவு பெரிய செலவாளியாக இதற்கு முன் நீங்கள் திகழ்ந்திருந்தாலும், உறுதியான, ஆழமான சிந்தனை உங்களை சரியான முடிவு எடுக்கவே தூண்டிவிடும். வாழ்க்கை முறை (Life Style Changes) மாற்றங்கள் தானே - அவசியத்தின் உந்துதல் காரணமாக தானே கருக் கொண்டு உருக்கொள்வது நிச்சயம்!

எங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு திருப்பத்  தையே ஒரு உதாரணமாக்கிட விரும்புகிறேன் - படிப்பறிவைவிட பட்டறிவே பல நேரங்களில் நல்ல பாடங்களைக் கற்றுத் தருகிறது!

சென்னை பிராட்வே சட்டக் கல்லூரி விடுதியில் (Madras University Students Club) என்ற 150 ஆண்டு வரலாற்றைக் கொண்டது அவ்விடுதியில் - இரண்டாமாண்டு படித்தபோது, நண்பர்கள் சாமிதுரை, திண்டுக்கல் சுப்பிரமணியம் மற்றும் நண்பர்கள் சிலர் பிராட்வேயிலிருந்து மாலை நேரம் நடைபயிற்சி போல் நடந்தே வந்து, மாலை 7 மணி அளவில் புகாரி ஓட்டலுக்குள் நுழைவோம். அவரவர்களுக்கு எது விருப்பமோ அதை ஆர்டர் செய்து "அரட்டை" அடித்துக் கொண்டு சாப்பிட்டு முடித்ததும், சுமார் 700 ரூபாய் சராசரி 'பில்' வரும்; நாங்கள் மாறி மாறி அந்த பில்லைக் கொடுப்போம்; இதில் யாரும் கணக்குப் பார்த்தில்லை!

ஒரு நாள், திரும்பி நடந்துவரும்போது நான் நண்பர் களிடம் உரையாடிய நிலையில், ‘‘நாம் ஒவ்வொரு நாளும் இப்படி இவ்வளவு ரூபாயை நமது விடுதி உணவு இருக்கும்போதும் செலவழிக்கின்றோமே - இதே 700 ரூபாய்க்கு வீட்டில் கறி - (இறைச்சி) வாங்கினால் நம் குடும்பத்தில் உள்ள எத்தனை பேர் சாப்பிடுவார்கள்; இந்தச் செலவு - தேவையற்ற ஆடம்பரம் அல்லவா? இது தவிர்க்கப்பட்டால் என்ன?'' என்று கேட்டவுடன் - மற்றவர்களுக்குப் பொறி தட்டியது.

பிறகு வெகுவாகவே அது குறைந்து விட்டது. அதுபோல இப்போதும் ஒரு நல்ல சூழல், 50 நாள் பயிற்சி - உடல் நலம் பேணுவது - சிக்கனம் தானே உருவாவது - வீட்டுச் சமையல், பழம் போன்றவற் றிற்குத் தாராளமாக செலவழித்து, நல்ல சத்துணவு விருந்தாக சாப்பிட, வாய்ப்பு உள்ளவர்கள் சாப்பிடலாமே! (இந்த நிலைகூட குறிப்பிட்ட அளவு மக்களிடம் இல்லை என்பது வேதனைக்குரியதே!)

இதுபோல பல்வேறு அன்றாட வாழ்க்கை நடத்தை களில் மாற்றங்களை உருவாக்கி, எந்த நிலையிலும் ஒருசிறு தொகையையாவது சேமித்தலும் - சேர்த்தலும் மிகவும் தலையாய கடமையாகும்.

கடன் வாங்குவது அரசுகளின் உரிமையாகட்டும்.

தனி மனித வாழ்வில் கூடுமான வரை கடன் வாங்குவதைத் தவிர்த்தால் - தந்தை பெரியார் அவர்கள் கூறுவதுபோல, நமது சுயமரியாதைக்குப் பங்கமோ, இழுக்கோ என்றும் ஏற்படவே ஏற்படாது!

தொழில் செய்ய வங்கிகளிலோ, மற்றபடி நிறுவனங் களிலோ கடன் வாங்கி, நாணயமாய் திருப்பிக்கட்டும் வ(ப)ழக்கம் தவறல்ல. தேவையற்ற ஆடம்பரங்கள் நம்மை அதல பாதாளத்தில் தள்ளி விடும். எளிமை எப்பொழுதும் ஏற்றம் தரும்; புது வாழ்வையே உருவாக்கி மேன் மைப்படுத்தும்!

'சிறுதுளி பெரு வெள்ளம் - நினைவிருக்கட்டும்!'

தந்தை பெரியார்  அவர்கள் கடனும் வாங்க மாட்டார்; எவருக்கும் (எளிதில்) கடனும் கொடுக்க மாட்டார். எனவேதான், அவர் கண்ட இயக்கம் ஒரு பெரும் நிறுவனமாகி, வளர்ந்தோங்கும் வாய்ப்பும், அந்த வருவாய்மூலம் எப்படிப்பட்ட இழப்புகளையும் ஈடுகட்டி கொள்கைப் பிரவாகம் தடையின்றி ஓடவும் வழி ஏற்பட்டுள்ளது! நமக்கு மிகவும் இன்றியமையாத பொருள்களையே வாங்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளுங்கள்.

இன்னும் 18 மாதங்கள் பொருளாதாரச் சிக்கலும், நெருக்கடியும் கரோனா தீர்ந்தும் - தீராத விளைவாக நம்மையே அச்சுறுத்தும். அப்போது நாம் நம்மைக் காப்பாற்றிட, நாம் மானத்தோடு வாழ, இந்த நடத்தைப் பொருளாதார மாற்றம் வெகுவாக கைக்கொடுக்கும் - மறவாதீர்!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக