பக்கங்கள்

செவ்வாய், 12 டிசம்பர், 2017

சேறும் சந்தனமாக மாறும்; மாற்றலாம் - அது நம் கையில்!


நம் வாழ்வில் அவதூறுகள் நம் எதிரிகளால் எளிதில் பரப்பப்படுவது இயல்பு.

அதுவும் பொதுவாழ்க்கையில் உள்ளவர்கள்மீது சேற்றை வாரி இறைப்பது, ஆதாரமற்ற செய்திகளை அள்ளி விடுதல் - இவைகளை வாடிக்கையாகவே கொண்டு வயிறு நிரப்பும் வம்பர்களுக்கு நமது நாட்டில் குறைவே இல்லை.

அதுவும் பெண்கள்பற்றியோ, சொல்லவேண்டி யதே இல்லை!

பயமுறுத்தி காசு பறிக்கும் கயமைக்கு இது ஒரு வழிமுறைபோல் சிலருக்குப் பயன்படும்.

எதையும் எதிர்கொண்டு பழக்கமில்லாதவர்கள், இல்லாத ‘பேய்’க்கு எப்படி மனிதர்களில் சிலர் அஞ்சி அஞ்சி நடுங்குகிறார்களோ, அதுபோலவே இந்த அவதூறு சேறு கண்டும் மிகவும் பலர் அஞ்சுவர்.

பொதுவாழ்க்கை என்ற முள்படுக்கைமீது உள்ள வர்கள் பதில் கூறவேண்டிய - அதாவது - பொருட் படுத்தவேண்டிய அவதூறுகளுக்குத் தக்க பதில் கூறவேண்டும்; இல்லாத பொல்லாப்பு, பொய் மூட்டைகளைப் புறந்தள்ளியே வாழப் பழகிட வேண்டும்.

சிலர் இதன்மூலம் ‘பிரபலம்‘ ஆவதற்கே இந்த அவதூறு பரப்புதலை ஒரு அன்றாடத் தொழி லாகவே செய்வதுண்டு.

எனது  பொதுவாழ்வில் இரண்டு அவதூறு வழக் குகளை நானே போட்டு, இரண்டிலும் உண்மையை நிலைநாட்டுவதில் வெற்றி பெற்று மகிழ்ந்தேன். மற்ற நண்பர்களையும், கழகக் கொள்கைக் குடும் பத்தவரையும் மகிழச் செய்தேன். மனநிறைவடைந் தேன். இளையவர்கள் தகவலுக்காக இது.

அ.தி.மு.க.வின் நாளேடாக நண்பர் ஜேப்பியார் நடத்திய ஒரு ஏடு, நண்பர் கே.ஏ.கிருஷ்ணசாமி நடத்திய ஏடுகளில், ‘நான்’ கலைஞரை அரசியல் ரீதியாக ஆதரித்ததினால், எரிச்சலுற்று, என்னை ‘‘கூவம் காண்ட்ராக்டர்’’ என்று, ‘சுத்தப்படுத்தாத கூவத்தில்’ தங்கள் பேனாக்களை நனைத்து எழுதி னார்கள். நான் பொருட்படுத்தவில்லை, அலட்சியப் படுத்தினேன்!

பிறகு, ‘மக்கள் குரல்’ நாளேட்டில் டி.ஆர்.ராமசாமி அய்யங்கார் (T.R.R.)    வேறு புனைபெயரில் இதே குற்றச்சாட்டை எழுதினார். பிரபல்யப்படுத்தி னார் - ‘கூவம் காண்ட்ராக்ட் புகழ்’ என்று பெயர் போட்டே எழுதியதை எதிர்த்து நான் ‘மக்கள் குரல்’ நாளேட்டின்மீது அவதூறு வழக்குப் போட்டு (Defamation I.P.C. கீழ்) சென்னை நீதிமன்றத்தில் அவ்வழக்கு விசாரணை நடைபெற்றது.

தன்னிடம் உள்ள நாளேடான ‘மக்கள் குரலில்’ கொட்டை எழுத்துகளில், குறுக்கு விசாரணையில், என்னிடம் அவர்களது வழக்குரைஞர்கள் கேட்ட அதீத கேள்விகளை பெரிதாகவும், நான் கூறிய பதில்களை சிறிதாகவும் வெளியிட்டு மக்களைக் குழப்பிட தொடர்ந்து முயற்சி செய்தார்கள்.

அந்த டி.ஆர்.ஆர்., முதலமைச்சராக அன்று இருந்த எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கம். ஈ.வெ.கி. சம்பத் அவர்களது மகன் பொறியாளர் கவுதமன் திருமணம் பெரியார் திடலில், அவரது தலைமையில், திருமதி சுலோச்சனா சம்பத் அவர்கள் நடத்தினார். அதற்கு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். வந்தார். பெரியார் திடலுக்கு முதன்முதலாக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். வருவதால், வரவேற்பது நமது கடமை என்பதால், நான் வரவேற்றேன்.

மேடையில் என்னை அழைத்து அமர்த்தி, அவர் என்னிடம், ‘‘நீங்கள் திராவிட இயக்கத்திற்கே பொதுச்செயலாளர்; எங்களுக்கு வழிகாட்டிடும் இடத்தில் உள்ளீர்கள். உங்கள்மீது இப்படி அவதூறு புகார் கூறியுள்ளதைப்பற்றி நீங்கள் வழக்குப் போட்டுள்ளதால் பரவுகிறதே’’ என்றார்.  ‘‘நீங்கள் ஏன் அவதூறு வழக்குப் போட்டீர்கள்’’ என்று அவர் கேட்ட தொனி, ‘‘வழக்கை வாபஸ் வாங்குங்கள்’’ என்று சொல்லாமற் சொன்னதாகும்!

காதோடு காதாக மேடையில் நாங்கள் பேசிக் கொள்கிறோம் - மற்ற அனைவரும் கவனிக்கின்றனர்.

நான் அவரிடம் சொன்னேன், ‘‘நீங்கள் முதல மைச்சர்; பொதுப் பணித்துறையின் கோப்புகளை வாங்கி, கூவம் சுத்தப்படுத்துவதுபற்றிய கோப்பில் -  நீங்களே உங்கள் செயலாளர்களை விட்டு ஆராய்ந்து பாருங்கள்; அப்படி என் பெயராலோ, என் தம்பி பெயராலோ ஏதாவது உள்ளதா என்று? எனக்குத் தம்பியே கிடையாது’’ என்றேன்.

முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் சிரித்தார். நிகழ்ச்சி முடிந்து திரும்பியதும் அக்கோப்புகளை வரவழைத்துப் பார்த்து ஆய்வும் செய்துள்ளார் என்பது பிறகு தெரிய வந்தது!

வழக்கு பல வாய்தாக்கள் நடந்தது! எனக்குப் பல வங்கிகளில் கணக்கு இருக்கிறது; அவற்றை எல்லாம் ஆராயவேண்டும் என்று ‘மக்கள் குரல்’ சார்பில் எதிர்மனுதாரர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

நான் மகிழ்ச்சியுடன் ஒப்புதல் அளித்து, பட்டியல் தந்தேன். பிறகு ஒவ்வொரு வங்கிக் கணக்கிலும் 100 ரூபாய், 10 ரூபாய், 5 ரூபாய், 20 ரூபாய்தான் இருப்பு இருந்தன. அதனைப் பார்த்த நீதிபதி, ‘‘அதென்ன இப்படி’’ என்று அதிர்ச்சி அடைந்து கேட்டபோது,

‘‘பெரியார் சிலைகளை ஆங்காங்கு நிறுவிட, D.D. -க்களை (டிராப்ட்) என் பெயருக்கு கழகப் பொறுப்பாளர்கள் அனுப்புவதை டிராப்ட் களானபடியால், பற்பல வங்கிகளில் என் பெயரில் S/B 
சேவிங்ஸ் பேங்க் அக்கவுண்ட் திறந்து போடப் பட்ட D.D. தொகையை எடுத்து அவர்களுக்குக் கொடுத்ததுபோக, குறைந்தபட்ச தொகைகளே இருப்புகள்’’ என்றேன்.

இதைக் கேட்டு நீதிபதி எதிர்மனுதாரர்களைப் பார்த்துச் சிரித்தார்! எதிரணி வக்கீலுக்கும் அதிர்ச்சி! வெட்கம்! தனியே என்னிடம் தனது வருத்தத்தை அப்போதே சொன்னார்.

கூவம் சம்பந்தமாக எந்த ஆதாரத்தையும் துளிகூட காட்ட முடியவில்லை; வழக்கு வழக்கம் போல 2 ஆண்டுகள் நடந்து முடிந்து, ‘மக்கள் குரல்’ ஆசிரியர் சண்முகவேல் அவர்களுக்கு சென்னைப் பெருநகர நீதிமன்றம் ஒன்றரை ஆண்டு தண்டனை அளித்தது! பத்திரிகையாளர் தண்டிக்கப் பட்டது அதுவே இங்கே முதல் முறை. அதில் எனக்கு மகிழ்ச்சியில்லை. காரணம், எழுதியவர் வேறு ஒருவர் - தண்டனை வாங்கி உள்ளே போனவர் வேறு ஒருவர். அதுவும் தமிழர்! எனவே, மேல்முறையீட்டில்கூட உயர்நீதிமன்றத்தில் மிகவும் வற்புறுத்திடவில்லை.

அதன் பிறகு என்னை ‘‘கூவம் காண்ட்ராக்டர்’’ என்று எழுதுவதையே பல ஏடுகளும், மேடைகளில் நாக்கில் நரம்பில்லாமல் பேசி வந்தவர்களும் தங்களுக்குத் தாங்களே வாய்ப்பூட்டுப் போட்டுக் கொண்டனர்!

அவதூறுகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம். பிரபல ‘இந்து’ ஆங்கில நாளேட்டின்மீது திராவிடர் கழகம் சார்பில் 1971 இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கினை பொதுச்செயலாளர் என்ற முறையில் நானே நேரில் சென்று  (Party in person) வாதாடி வென்றோம்.

நாளை அதுபற்றி அறிந்துகொள்வீர்!
1.12.17

சேறும் சந்தனமாக மாறும்; மாற்றலாம் - அது நம் கையில்! (2)

சேலத்தில் தந்தை பெரியார் 1971 ஆம் ஆண்டு ஜனவரியில் 23, 24 ஆகிய இரு நாள்களில் மூடநம் பிக்கை ஒழிப்பு மாநாட்டினை வெகுசிறப்பாக நடத்தினர்.

அதில் பல புரட்சிகர தீர்மானங்கள் இரண்டாம் நாள் நிறைவேற்றினார்கள்.

அப்படி நிறைவேற்றப்பட்ட 10 தீர்மானங்களில் ஒன்று,

‘‘ஒருவன் மனைவி மற்றொருவனை விரும்புவது என்பதைக் குற்றமாக்கப்படக்கூடாது’’ என்ற ஒரு வாக்கியத் தீர்மானம் ஆகும்.

மகளிர் உரிமை என்பது ஆணுக்குள்ள உரிமை அத்தனையும் பெண்ணுக்கும் உண்டு; கற்பு என் பதோ, காதல் என்பதோ ஒருதலைப்பட்சமாக இருக்கக் கூடாது.

விரும்பாத நண்பனை விட்டு விலகுகிறோம் - வேண்டாத எஜமானனிடமிருந்துகூட வேலை செய்ய விரும்பாது வெளியேறுகிற உரிமை உடை யவர்கள் நாம்.

அப்படி இருக்கையில், திருமணம் என்றால், கொத்தடிமையை விலைக்கு வாங்குவது போன்று, பெண்ணை வெறும் போகப் பொருளாய், வேலைக் காரியாய், சமையற்காரியாய், பிள்ளை பெறும் போகக் கருவியாய் எண்ணி, கணவன் ஆதிக்கம் செலுத்த முயன்றால், அந்நிலையிலிருந்து அப் பெண் விடுதலைபெற விரும்பி வேறு ஒருவனை விரும்பினால், (மனைவியை) குற்றவாளியாக்கக் கூடாது என்பது மகளிர் உரிமையை மனதிற் கொண்டே தந்தை பெரியார் நிறைவேற்றிய அதிர்ச்சி வைத்திய தீர்மானம்.

ஏற்கெனவே இ.பி.கோ.வில் உள்ளதுதான் இது.

இதை வெளிப்படையான தீர்மானமாக வடிவம் கொடுத்தார் பெரியார் அம்மாநாட்டில்.

1971 தேர்தலில் தி.மு.க.வைத் தோற்கடிக்க தீவிரமாக கச்சை கட்டிக் கொண்டிருந்த ஏடுகள், எதிர்க்கட்சிகள் இதனை ஒரு வாய்ப்பாகக் கொண்டு தவறான பிரச்சாரத்தை நாடு முழுவதும் கட்ட விழ்த்து விட்டார்கள்.

யார் மனைவியை யார் வேண்டுமானாலும் அபகரிக்க, சேலம் தீர்மானத்தின்மூலம் பெரியார் கூறி,  சமூக ஒழுக்கத்தையே பாழ்படுத்துகிறார்; அவர் ஆதரிக்கும் தி.மு.க.வுக்கா உங்கள் ஓட்டு என்று திசை திருப்பி விட்டனர்!

‘இந்து’, ‘தினமணி’, ‘எக்ஸ்பிரஸ்’ ஏடுகள் இதில் தீவிர முனைப்புக் காட்டின.

‘இந்து’  (இங்கிலிஷ்) வெளியிட்ட செய்தியிலும், அதில் வந்த ‘ஆசிரியருக்குக் கடிதங்களிலும், ஆங்கி லத்தில் தீர்மானத்தை திரித்துப் போட்டு’ எழுதினர்.

ஆங்கில வாசகம், ‘‘Coveting another man’s wife should not be a crime’ 
என்று பெரியார் இயக்கமான திராவிடர் கழகம்,  தீர்மானம் நிறைவேற்றியது.

மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் பேரா சிரியர் தி.வை.சொக்கப்பா, வக்கீல் நோட்டீஸ் அனுப் பியும், திருத்திப் போடாமல் திரும்பத் திரும்ப அதையே எழுதினர்.

உடனே அய்யாவின் அனுமதியோடு, நான் கழகப் பொதுச்செயலாளர் என்ற முறையில் வழக்குப் போட்டேன். பிறகும் அதை எழுதிய பிறகு நீதிமன்ற அவமதிப்பு வழக்காக்கி, மன்னிப்பு கேட்க வழக்காடினோம்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.வீராசாமி, வி.வி.ராகவன் (அய்யர்) ஆகியோர் அடங்கிய அமர்வில் நான் மதியம் வழக்கெடுக்க (Lunch Motion) அனுமதி பெற்று, வழக்கை நானே நடத்தினேன்.

தலைமை நீதிபதி அவர்கள் என்னிடம், சரியாகத்தானே ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்கள். நீங்கள் தமிழில் படித்த தீர்மானத்திற்கும், ஆங்கில வாசகங்களுக்கும் பெரிய வேறுபாடு இல்லையே என்றார்.

பிறகு நான் தலைமை நீதிபதி அவர்களிடம் கனம் தலைமை நீதிபதி அவர்களே தீர்மானத்தின் அடிப்படை மாற்றப்பட்டுள்ளது ஆங்கில வாசகத் தில். Desiring விரும்பினால் என்பது மனைவியின் உரிமை பற்றிய கருத்தாக்கம். அவர்கள் வெளி யிட்டதோ ‘Coveting another man’s wife’ என்பது கணவனின் சட்ட விரோதச் செயலை.

முந்தைய தீர்மான வாசகம் மனைவியைப் பற்றியது.

இவர்கள் வெளியிட்டது கணவனின் துர் ஆக்கிர மிப்புச் செயல் - நேர் எதிரிடையானது என்று விளக்கினேன்.

உடனே தலைமை நீதிபதி , மற்ற நீதிபதி ஆகியோர் விளங்கிக் கொண்டு, நோட்டீஸ் அனுப்பிய பிறகு,  ‘இந்து’ ஆசிரியரிடம் விளக்கம் கேட்டனர். மறுபடியும் அப்படிப் போடலமா? என்று கேட்டு வருத்தம் தெரிவிக்கச் சொன்னார். ‘தி இந்து’ சார்பில் கோர்ட்டில் வருத்தம் தெரிவித்தார் அதன் ஆசிரியர் கோபாலன் (என்று நினைவு).

பிறகு இந்து (இங்கிலீஷ்) நாளேடு வழக்கு 17.2.1971 இல் தலைமை நீதிபதி அமர்வு முன்வந்த உடன்,

இந்து பத்திரிகை சார்பில் உண்மையான நிபந் தனையற்ற வருத்தத்தை தெரிவித்து மன்னிப்புக் கோரியதை விண்ணப்பதாரர் (கே.வீரமணி) ஏற்றுக் கொண்டதால், வழக்கைத் திரும்பப் பெற கோர்ட் டார் அனுமதித்து தீர்ப்பளித்தனர். (இது 17.2.1971 இல் நடந்த நிகழ்வு).

இப்படிப்பட்ட வரலாறு, பலருக்கும் அதிர்வலை களை ஏற்படுத்தியது.

தலைமை நீதிபதிக்கும் மற்ற நீதிபதிக்கும் சற்று மயக்கத்தையும், குழப்பத்தையும் அவ்வாசகங்கள் ஏற்படுத்தியதை நல்ல வண்ணம் தெளிவுபடுத்திய தால், நீதி நிலை நாட்டப் பெற்று உண்மை வென்றது.

எனவே, உரிய வகையில் அணுகினால் நம்மீது வீசப்படும் சகதியையும், சந்தனமாக்கி விடலாம்  - அது நமது அணுகுமுறையில்தான் உள்ளது என்பது அவ்வழக்கு தந்த பாடமாகும்!

- கி.வீரமணி

- விடுதலை நாளேடு1,2.12.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக