பக்கங்கள்

புதன், 31 அக்டோபர், 2018

சேமிப்பீர் - சிறப்புறுவீர் (1), (2)

சேமிப்பீர் - சிறப்புறுவீர் (1)

1924ஆம் ஆண்டு - இன்றைய தேதியான அக்டோபர் 30 அய் உலக சிக்கன நாளாகக் கடைப்பிடிப்பதென, இத்தாலி நாட்டின் மிலான் நகரில் நடைபெற்ற முதல் பன்னாட்டு சேமிப்புக் காங்கிரஸ் - மாநாட்டில் முடிவு செய்யப்பட்டு, 94 ஆண்டுகளாக அதை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்!
சிக்கனம் - சேமிப்பு என்பது வாழ்வின் பொருளாதார முன்னேற்றத்தில் முக்கிய தேவையான கூறுபாடுகளில் ஒன்றாகும்!
செலவே செய்யக் கூடாது என்று இதைத் தவறாக யாரும் புரிந்து கொள்ள வேண்டாம்.
தேவையானவற்றிற்குச் செலவழித்துத் தான் தீர வேண்டும் என்பது வாழ்க்கையின் தத்துவம் ஆகும் - 'வரவு' என்ற சொல்லுடன் இணைந்தே வரும் மற்றொரு சொல் 'செலவு' என்பதாகும்!
வரவினைக் கொண்டு செலவழித்தல் ஒரு வகை; செலவிற்காக வரவினைத் தேடுவது இன்னொரு முறை.
சென்ற நூற்றாண்டான 20ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய பொருளாதார வல்லுனரான ஜான் மேண்ட் கீன்ஸ் என்ற பிரிட்டிஷ் பொருளாதார அறிஞர் அழகான ஒரு எளிய தத்துவத்தைக் கூறினார்.
'ஒருவரது செலவு, மற்றவரது வரவு' என்று அவர் கூறினார். (One Man's Expenditure  is another man's income)
பணத்தின் பெருமை - முடங்கிக் கிடப்பதில் இல்லை; மாறாக, நடைமுறை புழக்கத்தில் அது எவ்வளவு பேர்களிடம் கை மாறுகிறதோ (Velocity of Circulation of Money) அவ்வளவுக்கவ்வளவு பொரு ளாதார நடவடிக்கை, வளர்ச்சிக்கு வழிகோலும்!
சிக்கனம் - சேமிப்பு என்பதெல்லாம் கூட பொருளா தார வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதவையாகும்!
சேமிப்பு என்பதில்கூட கூர்த்த அறிவும், மிகுந்த நம்பகத் தன்மையுடைய அமைப்புகளான வங்கிகள், நிதி நிறுவனங்களில்தான் போட வேண்டும்.
செய்திதாள்களைத் திறந்தால், 'டெப்பாசிட் இழந்த வர்கள் சங்கத்தின்' தீர்மானங்களையும், போராட்டங் களையும் பற்றி படிக்கும் போது நம் கண்களில் கண்ணீர் அருவியெனக் கொட்டுகின்றது; காரணம், பல முதியவர்கள், ஓய்வூதியதாரர்கள் கடும் உழைப்பு - பல்லாண்டு கால பணிகள் மூலம் கிடைத்த பணிக் கொடை வரவு - இவைகளை தவறானவர்களை நம்பி, கூடுதல் வட்டி கிடைக்குமே என்ற தவறான ஆசை - ('பேராசை' என்ற சொல் அவர்களுக்குப் பொருந்தாது) காரணமாக உள்ளதை இழந்த, திடீர் பூகம்பம் ஏற்பட்டு உயிருடன் தப்பி, வீதியில் நிற்கும் முன்னாள் பணக்காரர்களைப் போல ஒரே நாளில் மீண்டும் அவர்களை வறுமைத் தேள் கொட்டி, விஷத்தை ஏற்றி விட்டதே என்ற அவல நிலை!
எனவேதான் சேமிப்பினைக்கூட சரியான அடை யாளத்துடன் கொண்ட நாணயம் தவறாத அமைப்பில் பண முதலீடு செய்ய வேண்டும் - விழிப்புணர்வுடன் செய்தல் - அவசியம்.
உங்கள் வாழ்வில் சேமிப்பு - மிச்சப்படுத்தல்பற்றிய இலக்குபற்றி தாளை எடுத்து எழுதுங்கள்.
1. குறைந்த காலத் திட்டம் (Short Term)
2. நடுமை காலத் திட்டம் (Medium Term)
3. நீண்ட காலத் திட்டம் (Long Term)
இதற்குமேல் "எதிர்பாராத செலவுகள்" என்பதற்கு உங்களது  வரவு - செலவுத் திட்டத்தில் ஒரு முக்கிய பங்கை ஒதுக்குங்கள். செலவாகாமல் அத்தொகையில் மீதம் ஆனால் பெரு மகிழ்ச்சியை அதுவே தரும் - இல்லையா?
நம் வருமானத்தில் - வரவில் - ஒரு பகுதியை 10 விழுக்காடு, 15 விழுக்காடு, 20 விழுக்காடு என்று வாய்ப்புக்கும், வசதிக்கும் ஏற்ப ஒதுக்கி, சேமிப்பில் போடுங்கள்.
உண்டியலில் போடும் பழக்கத்தை குழந்தைகளுக் குக்கூட சிறு வயதிலேயே உருவாக்கிவிடுங்கள். அந்த தொட்டிற் பழக்கம் பிறகு "சுடுகாடு"  மட்டும் நீடிக்கும்!
இப்படி ஒழுங்கான, முறையான சேமிப்புப் பழக்கம் - என்பது உங்களது நீண்ட காலத் திட்டத்திற்கு உதவிடும் முதல்படி என்பதை உணருங்கள் - மறக்காதீர்கள்!
முதலில் சிறு தொகையிலிருந்தே ஆரம்பியுங்கள்.
இந்த சேமிப்பை "தற்காலிகமாக" "வசதியாக" மறந்து விடுங்கள்! உங்கள் செலவு பட்ஜெட் அயிட்டங்களில் இதனைக் கணக்கில் கொண்டு வராதீர்கள்!
(நாளையும் தொடரலாம்)
-விடுதலை நாளேடு, 30.10.18
சேமிப்பீர் - சிறப்புறுவீர் (2)
நம்முடைய குடும்பத்திலும் சரி, நிறுவனங்கள், அமைப்புகள் எதுவானாலும் தாமே அவற்றிற்கென ஒரு 'பட்ஜெட்' - வரவு செலவு திட்டம் அமைத்துக் கொண்டே செயல்பட்டால் அது வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பெரிதும் உதவக்கூடும்.
'வரவு எட்டணா - செலவு பத்தணா' என்ற திரைப்படம் ஒன்றில் வந்த பாட்டு வரிகளைப் போலவே,
'கடைசியில் கையில் துந்தனா'தான்!
வரவைப் பெருக்குவது என்பதற்கான முக்கிய வழி அதிகமாகச் சம்பாதிப்பது என்பதன் மூலம் தான் என்றல்ல; செலவுகளைக் கட்டுப்படுத்திக் குறைப்பதும் கூட வருவாய்ப் பெருக்க வழிதானே!
வள்ளுவரே சிறந்த பொருளாதார வல்லுநர் போல் உயர்ந்து சொன்ன ஆழமான அறிவுரையே இதற்குத் தக்க சான்றாகும்.
ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை. (குறள் - 478)
வரவு எப்படி இருந்தாலும் செலவுகளைக் குறைத்தால் அதுவே ஒரு புது வகை வரவு - வருமானம் தானே? இல்லையா? 'பட்ஜெட்' போட்டுப் பார்த்தால் தான் - மனதால் எண்ணுவதைவிட ஒரு தாளையோ அல்லது சிறு 'நோட் புக்கையோ அல்லது டைரி எழுதும் பழக்கமுள்ளோராயின் அதில் ஒரு பக்கத்திலோ எழுதி - வரவுகள் ஒரு புறம், செலவுகள் மறுபுறம் - அதில் குறிப்பாக செலவுகளுக்கு எதெதெற்கு முன்னுரிமை தரவேண்டும், என்று செலவினத்தை (ஜீக்ஷீவீஷீக்ஷீவீவீமீ) முன்னுரிமைப்படுத்திப் பார்த்தால் தான் நமது நிதிநிலைமை பற்றி நமக்கே புரியும்.
பல குடும்பங்களில் வாழ்விணையான பெண் தான் சரியான 'நிதியமைச்சர்' ஆக இருப்பார்கள்.
'மின்னனுப் புரட்சி - தகவல் புரட்சி யுகம்' இது ஆன படியால், அவற்றின் உதவியை நாடினால் இது மிகவும் பயன் அளிக்கும் என்றே சம்பந்தப் பட்டவர்கள் உணர்ந்து கொண்டு செயல்பட்டால் காலம் விரையம் தடுக்கப்படவும் கூடும்!
அடுத்து, நமது அன்றாட செலவுகள் கூட நம்மை சிற்சில நேரங்களில் திண்டாட, திக்குமுக் காடும்படிச் செய்து விடக் கூடும். அன்றாட செலவினைக்கூட இப்படி எழுத்தில் வடித்து வார இறுதியில் பார்த்தால் 'ஓகோ இதெல்லாம் நாம் தவிர்த்திருக்கக்கூடிய செலவுதானே! இச்செலவைத் தவிர்த்து அதைச் சேமித்திருக்கலாமே!' என்றுகூட எண்ணி முடிவு எடுத்து நல்ல முறையில் ஒழுங்கு படுத்தி, சிக்கல் இல்லாத  - தலைநிமிர்ந்த - கடன் வாங்காத "சுயமரியாதை வாழ்வே என்ற சுக வாழ்வு" வாழலாமே!
'ஒரே ஒரு முறைதான் செலவழிக்கிறோம்; இது வழக்கமாக செலவுத் திட்டத்தில் இடம் பெறக் கூடிய செலவு அல்ல' என்ற போதிலும் அதுவும் கூட இடம் பெறல் அவசியம்.
எடுத்துக்காட்டாக, நண்பர்களை அழைத்துச் சென்று ஏதோ ஒரு நாள் ஓட்டல்களில் விருந்து கொடுக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதுவும் கூட அடுத்த மாதச் செலவு - வரவை ஒழுங்குபடுத்திட பெரும் அளவுக்கு உதவக்கூடும்!
சில செலவுகளைச் செய்யும்போது இந்த மாத ஒதுக்கீடு என்ற அளவுக்கு மேல் செலவு செய்துவிட்டோம்; இதை அடுத்த மாத பட்ஜெட்டில் செலவைத் தவிர்த்து 'மிச்சப்படுத்தி' வாழ்க்கையில் துன்பச் சுமை ஏற்படாமல் தவிர்த்துக் கொள்ளலாம்!
நடந்து செல்வதற்குப் பதில் 'டாக்சி' எடுத்தது; அடுத்த மாதம் சரிகட்டலாமே! பேருந்து பயணம் செய்தாலோ அல்லது உடல் நலம் - வலிமை கருதி நடந்து சென்றோ பணத்தை மிச்சப்படுத்தி 'சரி கட்டலாமே!'
சேமிப்பில் - எதிர்பாராத அவசர செலவுகள் என்ற நிலை வாழ்க்கையில் எல்லோருக்கும் ஏற்படும் சூழ்நிலை உருவாவது சகஜம்; அதற்கு நமது வீட்டு - குடும்ப வரவு - செலவுத் திட்டத்தில் கட்டாயம் ஒரு பகுதியை சேமிப்பது மிகப் பெரிய அளவில் நமக்குக் கைகொடுக்கும்!
திடீர் உடல் நலக்குறைவு; ஏற்பட்ட விபத்து காரணமாக எதிர்பாராத மருத்துவச் செலவு - மருத்துவக் காப்பீடு - இன்சூரன்சையும் கூடத் தாண்டி செலவழிக்கவேண்டியதும் வரக்கூடும். அதற்கென தனியே மாதம் ஒரு சிறு தொகை "எதிர்பாராமல் வரும் நெருக்கடிக்கான ஒதுக்கீடு" என்ற செலவினத்தையும் கூட (ஒரு தலைப்பில்) ஒதுக்கி வைத்தால் எப்போதும் நமக்குப் பெரிதும் கைகொடுக்கவும் செய்யும்.
எனவே திட்டமிடல் வாழ்க்கைக்கு உதவும். வெளிநாடு, வெளியூர் சுற்றுலாவுக்கு மேல் நாட்டவர்கள் 2, 3 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சேமித்தே, அதைச் செலவழிக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? - அதையும் பின் பார்க்கலாம்!
-விடுதலை நாளேடு, 31.10.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக