பக்கங்கள்

புதன், 7 டிசம்பர், 2016

அறிவியல் சிந்தனைகள் 14. கேட்கப் பழகுவோம்!

அன்றாட வாழ்விலும், பணிமனை களிலும், நண்பர்களிடமும், உற்றார் - உறவினர்களிடமும் உரையாடல் நிகழ்த்தும் அனுபவம் நம் அனை வருக்கும் ஏற்படுகிறது. அதில் நாம் எப்படிக் கலந்து கொள்ளுகிறோம் என்பதை வைத்தே, நமது பண்பு நலன்கள்-ஒழுக்கம்(Better Listener) இவை களை மற்றவர்  எடைபோடுவர்.

மற்றவர் பேசும்போது நாம் பெரிதும் ‘கவனிப்பாளர்களாக’ அல்லது நல்ல ‘கேட்பாளர்களாக’ (ஙிமீttமீக்ஷீ லிவீstமீஸீமீக்ஷீ) இருப்பது மிகச் சிறந்த பண்புநலன் ஆகும்.

மேலைநாடுகளில், அவர்கள் உரையாடலின்போது, இவ்வொழுக் கத்தைப் பெரிதும் கடைபிடிக்கவே செய்கிறார்கள். குறுக்கிட்டு, இடைமறித்து அதிகம் பேசமாட்டார்கள். அவர்கள் சொல்லவேண்டிய கருத்துக்களை, நமது உரையாடல் முறை முடிந்து நாம் பேசுவதை, முடித்த பிறகே அவர்கள் பேசுவர்! அதுவரை பொறுமையாகக் கேட்டுக்கொள்வர்.

நம்மில் நாம் எத்தனை பேர், அப்படிப்பட்ட ஒரு நடைமுறை ஒழுக்கத்தை  அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்கிறோம் என்பதை நமக்கு நாமே எண்ணிப் பார்த்து, நமது வழமை ‘குறுக்கிடுதல் அடிக்கடி’ என்பதுதான் என்று நமக்குப்பட்டால், நாம் தயங்காமல் நமது முறையை மாற்றிக் கொள்ளுவதே   நல்லது.

நல்ல  நிர்வாகிகள், தலைவர்கள், ஆற்றலாளர்கள் எல்லாம் உருவாக வேண்டுமானால், அவர்களை முதலில் நல்ல ‘கேட்பாளர்களாக’ ஆக்குவது மிகவும் முக்கியம். இதை நாம் நமது குழந்தைகளுக்குச்  சொல்லிக் கொடுத் துப் பழக்க வேண்டும்.

கவனமாகக் கேட்கிறோம் - சொல் லுபவருடைய கருத்துக்களை ஈர்த்துக் கொள்ளுகிறோம் என்ற வகையில் நமது கேட்பு முறை அமைவது அவசியம்.

அவர் பேசிக்கொண்டிருக்க, நாம் நமது மனத்தையும், கவனத்தையும்  எங்கோ விட்டுக்கொண்டிருந்தால், கெட்டிக்காரர்களாக அவர்கள் இருந் தால் நம்மை உடனே அடையாளம் கண்டுவிடுவார்கள். நம்மைப்பற்றிய மதிப்பீடு அவர்களிடம் சிறப்பாக அமையாது.

குறுக்கிடாமல் இருக்கவேண்டும் என்பதால்,அவர்கள்என்னசொன் னாலும், நாம் வெறும் ‘தலையாட் டித் தம்பிரான்களாகவே, ‘கேட்டுக் கொண்டிருக்கவேண்டும்‘ என்பது பொருள் அல்ல.

தேவைப்படின், நாமும் இடையே ஊக்கப்படுத்தியோ, உறுதிப்படுத்தியோ அல்லது மாறுபடவேண்டிவந்தால் குறுக்கீடுசெய்யும்போதுகூடமிகுந்த மரியாதை கலந்த நிலையில் நமது சொற்களை அமைத்து மாறுபடலாம்.

எடுத்துக்காட்டாக, மாபெரும் சிந்தனையாளரான பகுத்தறிவுப் பக லவன் தந்தை பெரியார் அவர்கள், நாம் பேசும்போது இடைமறித்து ஏதாவது சொல்ல விழைகின்றபோது, “அய்யா மன்னிக்கணும்“ என்ற ஒரு பீடிகையோடு தொடங்கித்தான் தனது கருத்தைக் கூறுவார். அவ்வளவு தலை சிறந்த நாகரிகம் பேணியவராகத் தனி வாழ்விலும் திகழ்ந்தார்கள்!

நாம் மற்றவரோடு உரையாடுவதை ஓர் ஒட்டப் பந்தயமாகக் கருதிக்கொண்டு, ஏதோ நாம்தான் முந்திக்கொண்டு வெற்றிப்பதக்கத்தைப் பெற்றவராக வெளிவரவேண்டும் என்பதுபோல நாம் நடந்துகொள்ளுவது சீரிய பண்பு நலன் அல்ல.

சிலர், புகைத்தொடராக சிகரெட் டுகளைப் பற்றவைத்துப் பிடிப்பதுபோல, உடனடியாக இடைவெளியே இன்றி நாம் தொடங்கிடத் தேவையில்லை.

வள்ளுவர் இதுபற்றி எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே,  ‘நாம் சொல்கின்ற சொல்லும் பயனு டையதாக இருக்கவேண்டும்‘ என்று அறிவுறுத்திவிட்டார்!

ஒட்டுக் கேட்பது என்பதை நன்கு கேட்பது என்று தவறாகக் கருதிக் கொண்டு, காதைத் தீட்டிக்கொண்டு, பிறர் மற்றவரிடம் அல்லது அடுத்து அமர்ந்துள்ளவர் அவருடைய நண்ப ருடன் பேசுவதை நாம் ஒட்டுக்கேட்பது ஒரு மோசமான, தவறான பழக்கமாகும்.

எனவே, கேட்கவேண்டும் - கேட்கப் பழகவேண்டும் என்பது ஒட்டுக் கேட்கப் பழகவேண்டும் என்ற பொருளில் அல்ல என்பதைக் கவனத்தில் கொள்ளுவோம்.

கேட்கும் பழக்கம் நம்முடைய மரி யாதையை, மதிப்பை மற்றவரிடம் உயர்த்தும் என்பதுடன்கூட உறவையும் கூட வலுப்படுத்தும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. எனவே, முதலில் கேட்கப் பழகுவோம் - பேசப் பழகுவதைவிட!

பேசுவதைவிடக் கடினம் கேட்கப் பழகுவது என்பது சிந்தித்தால்தான் நமக்கே கூட விளங்கும்!

- கி.வீரமணி
-விடுதலை,6.12.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக