பக்கங்கள்

திங்கள், 21 டிசம்பர், 2020

வெற்றியின் பெருமை புரிய தோல்வியின் சுவை முக்கியம்!



நம்மில் பெரும்பாலோருக்கு - எல்லாம், எப்போதும் எதிர்பார்ப்பதைப் போலவே நடக்க வேண்டும்; அதன் காரணமாக எப் போதும் மகிழ்ச்சியில் திளைக்க வேண்டும், இன்பத்தையே சுவைக்க வேண்டும் என்ற இலக்கிலேயே வாழ நினைப்பவர்கள்தான்.


ஆனால், யதார்த்தத்தில் - நடைமுறை வாழ்க்கையில் இது இயலக்கூடியதா? அன்றாட உலக வாழ்க்கை இதற்கு ஆதர வான காட்சிகளை, அனுபவங்களைச் சுட்டிக் காட்டுவதற்குப் பதிலாக அதற்கு நேர் எதிர் மறையாக, துன்பங்களையும், தோல்வி களையும்தானே பலருக்கு அளித்து அவர் களது வாழ்க்கையை ஒரு ‘மயான காண்ட மாக’ ஆக்கிக் கொண்டுள்ளது என்பது மறுக்க முடியாத கசப்பான உண்மை அல்லவா?


ஒரு நண்பர் - சாதாரண எளிய நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். கடுமையாக உழைத்துப் படித்தார், பட்டம் பெற்றார். கடின உழைப்பு அவரை திட்டமிட்டபடியே உயரத்துக்கு உந்தியது. அமெரிக்காவிற்குப் போய் மேல்படிப்பை முடித்தார்.


சிறப்பான அறிவும், அழகும் (அவரது கண்ணோட்டத்தில் சொல்லுகிறேன்) ஒருங்கே அமையப் பெற்ற படித்த, பட்டம் பெற்ற பெண் தனது வாழ்க்கைத் துணை வியாக அமைய வேண்டும்; அதுபோல இரண்டு குழந்தைகளையும் பெற்று, தமது வாழ்க்கை என்றென்றும் மகிழ்ச்சியில் நனைந்ததொரு வாழ்க்கையாகவே அமைய வேண்டும் என்று அவர் நினைத்தபடி - எல்லாம் திட்டமிட்டபடி சிறப்பாக நடை பெற்று வந்தது. தன் பெண்டு, தன் பிள்ளை என்ற சின்னதொரு கடுகு உள்ளம். அவருக்கு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களில் அதிக மான அல்லது நெருக்கமான நண்பர்களோ கிடையாது!


உற்றார் உறவினர்களுக்கு உதவி அவர்களை வறுமையில் வாடிடும் நிலையில் கைதூக்கி விட வேண்டும் என்ற எண்ணமும் உடையவர் அல்ல!


அவரது உலகம் எல்லாம் நவீன வசதிகளுடன் கூடிய ஆடம்பர பங்களா, விலை உயர்ந்த கார், அருமையான லேட்டஸ்ட் மின்னணு வசதிகளான செல்போன், etc. etc.!


வாழ்க்கை நதி எவ்வித சலனமும் இன்றி ஓடிக் கொண்டிருந்தது!


மகிழ்ச்சி! மகிழ்ச்சி!! மகிழ்ச்சி!!!


திடீரென்று ஒரு இடி மின்னல், பூகம்பம் போன்ற நிலை - அவரது வாழ்வில்! நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்தில் சென்றது - வங்கிகள் கொடுத்த கடனைத் திரும்பப் பெற முடியவில்லை - இவர், இவரது துணைவியாரது வேலைகள் பறிபோயின! வீட்டையும், காரையும் வங்கிக் கடன் தவணை செலுத்த முடியாததால் இழக்கும் நிலை.


இவருக்கு உதவிட நண்பர்கள் எவரும் தேடிப் பார்த்தாலும் கண்ணுக்கெட்டிய தூரத் திற்குத் தெரியவே இல்லை!


வாழ்க்கையின் மற்றொரு முனைக்கு அக்குடும்பம் - வறுமை, ஏழ்மை, கடன் தொல்லை, வேலை இழந்த கொடுமை - இவற்றால் ஏற்பட்ட மன அழுத்தமோ சொல் லும் தரமன்று; வார்த்தைகளில், எழுத்தில் வர்ணிக்க முடியாது!


காட்டுச் செடிகளாக வளர்ந்தால் எவ்வித புயல், மழை, காற்று எதையும் சமாளித்துக் கொள்ள முடியும். வெறும் அழகு குரோட் டன்ஸ் செடிகளாகவே வளர்க்கப்பட்டால் சற்று மிகுந்த காற்று, மழை என்றால்கூட எதிர்கொள்ள முடியாத நிலைதானே ஏற்படக்கூடும்?


அதே நிலை இந்த நண்பரின் குடும்பத் திற்கும்; வேறு வழி எதுவும் தெரியவில்லை.


மற்றவரிடம் உதவி கேட்கவும், அண்ட வும் யாருமில்லை - மனமும் இல்லை.


ஓர் இரவு - கணவரும், மனைவியும் நஞ்சு அருந்தினர்; அதற்கு முன் அவ்விரு பிள்ளை களுக்கும் நஞ்சைக் கொடுத்து சாவை நெருங்கச் செய்தனர். இவர்கள் இருவரும் அதே முறையில் உலகை விட்டு விடை பெற்றனர் - பரிதாபகரமாக!


இவர்களது இந்த திடீர் உயர்வுக்கும் - திடீர் வீழ்ச்சிக்கும் - தற்கொலைகளுக்கும் மூல காரணம் என்னவென்று ஆராய்ந்து பார்த்து, அதிலிருந்து மீளக் கற்றுக் கொள்ள வேண்டியது, சமூகத்தின் கடமையாகும்!


வாழ்க்கை என்பது எப்போதும் ’பிளஸ்’ ஆகவே இருக்காது; வெளிச்சம் - இருட்டு - வெளிச்சம் என்று மாறி மாறியே வரும்!


வெற்றியையே சுவைத்துப் பழகக் கூடாது. தோல்வியையும் எதிர்கொண்டு சுவைத்து மனப்பூர்வமாக அதனை சமா ளித்து, மீண்டும் எழ தன்னம்பிக்கை கொள்ள வேண்டும்; அதையே அடிப்படையாகக் கொண்டு மறுபடியும் புத்தாக்கம், புத்தெழுச்சி கொண்டு, நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கை இருண்ட காலங்களைச் சந்திக்க வேண்டிய மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ளும்.


கட்டாயம் வரவழைத்துக் கொண்ட, அந்த துன்ப அனுபவத்தையும் சலிக்காமல், துவளாமல் எப்படி சமாளித்து, வெற்றிக் கொண்டு மீளுவது என்ற சிந்தனைக்கும், செயல் வடிவம் தருவதற்கும் உங்களைத் தயாரித்துக் கொள்ளுங்கள்.


அறுசுவை உணவை சாப்பிட்டால், சலிப்பு வரும். பசி, பட்டினி - இவற்றையும் அனுபவிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.


பிறகு எந்த உணவும் - எளிய உணவும் கூட அறுசுவை உணவைவிட மிகவும் அற்புதமாகவே உண்ணக் கூடிய உயர்தர உணவாக சுவைக்கும் உங்களுக்கு.


இருட்டில் இருந்தவர்களும் வெளிச் சத்தை நன்கு உணர முடியும்.


வெயிலில் காய்ந்தால்தான் நிழலின் அருமை, பெருமை புரியும் - கற்றுக் கொள்ளுங்கள், அனைவரும்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக