பக்கங்கள்

திங்கள், 21 டிசம்பர், 2020

இருவர் நிகழ்வுகள் - மூன்று பாடங்கள்!



மதுரை மாநகரிலிருந்து ஒரு செய்தி!


27.11.2020 அன்று ஒரு வயது முதிர்ந்த பெரியவர் நடந்து செல்லுகிறார் - கையில் ஒரு செருப்புடன். காரணம், மற்றொரு செருப்பு முந்தைய ஆட்டோவில் பயணம் செய்தபோது மற்றொரு காலிலிருந்து நழுவி வழியில் எங்கோ விழுந்து விடுகிறது! அவர் நடந்து சென்று விழுந்து விட்ட அந்த மற்றொரு செருப்பைத் தேடிக் கண்டுபிடித்தார். காலில் அணிந்து கொண்டே நடந்து செல்லுகிறார்.


ஓர் ஆட்டோ ரிக்ஷாவை ஒருவர் ஓட்டி வரும் போது, நடந்து வரும் இவரைப் பார்த்து, பார்த்த முகமாக உள்ளதே என்று நினைவலைகளை எழும் பச் செய்கிறார். அவர் இரண்டுமுறை எம்எல்.ஏ.வாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் என்.நன்மாறன் என்பது புரிந்துவிட்டவுடன், தனது ஆட்டோ ரிக்ஷாவை திருப்பி -  பானகல் சாலையில் ‘நடந்து வரும் அவர்' அருகே நிறுத்தி ‘அய்யாஇதில் ஏறிக் கொள்ளுங்கள். நான் கொண்டு போய் விடுகிறேன் - கருப்பையூரணிக்கா? கொண்டு போகி றேன், ஏறி அமருங்கள்' என்று கூறுகிறார்!


உடனே அந்தப் பெரியவர் ‘தன்னிடம் ரூபாய் 20 தான் உள்ளது. ஆகவே அதற்கு மேல் தர வாய்ப்பில்லை' என்று தயக்கமின்றி, கூச்சமின்றி - தன்னிலை விளக்கம் தருகிறார்.


‘பரவாயில்லை. நீங்கள் ஏறி உட்காருங்கள் அய்யா' என்றார் ஓட்டுநர்.


தான் ஒரு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் - ஊரறிந்த கொள்கைப் போராளி - என்ற அடை யாளத்தை அவரும் சொல்லவில்லை. இடம் வந்தது. இறக்கி விட்டவுடன், ரூபாய் 20அய் அவர் தர முயலும் போது, ‘அய்யா, நீங்கள் இதைத் திரும்பும் பயணத்திற்கு வைத்துக் கொள்ளுங்கள் - உங்களிட மிருந்து பணம் வாங்க நான் விரும்பவில்லை' என்று அன்பொழுகக் கூறிவிட்டு, அவருடன் ஓர் ஒளிப்படம் எடுத்துக்கொண்டு தனது ஆட்டோவை ஓட்டிச் செல்லுகிறார். அப்போது அந்த ஆட்டோ ஓட்டுநர் சென்னார், ‘இவர் போன்றவர்களுக்கு உதவும் ஒரு வாய்ப்பு எனக்குக் கிட்டியதைப் பெரும் பேறாகக் கருதுகிறேன்' என்றார்.



ஒரு கையில் ஒரு செருப்புடன் மறு செருப்பைத் தேடிக் கண்டுபிடிக்க நடந்து சென்றவர் வேறு யாருமில்லை - இரண்டு முறை சட்டமன்ற உறுப் பினராக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழரும், எளிமையின் சின்னமுமான தோழர் என்.நன்மாறன் அவர்கள்தான்! நகைச்சுவையாகப் பேசி சிந்திக்க வைக்கும் சிறந்த கொள்கை வீரர்!


ஆட்டோவை ஓட்டி அன்பும், பண்பும் காட்டிய தோழர் பெயர் பாண்டி. அவர் சொல்கிறார், ‘கொள்கை ரீதியாக நான் அவரிடமிருந்து மாறுபடு கிறவன். நான் பசும்பொன் தேசிய கழக இளைஞரணி பொறுப்பாளர் என்றாலும், அவரது (நன்மாறன் அவர்களது) எளிமை, நேர்மை மனித நேயம் என்னை ஈர்த்ததால் நான் மனநிறைவுடன் அவருக்கு உதவிடும் அரிய வாய்ப்பைப் பற்றிக் கொண்டேன்' என்று கூறியுள்ளார்.


இச்செய்தி சமூக வலைதளங்களில், ஊடகங்களில் பரவியுள்ளது. (இந்தச் செய்தியை 4.12.2020 ‘இந்து' நாளேட்டில் திரு.சுந்தர் என்ற செய்தியாளரான நண்பர் தந்துள்ளதைப் படித்தே நான் இதை உங்களுக்குத் தரும் வாய்ப்பு ஏற்பட்டது).


இந்த இருவரிடமிருந்து நாம் கற்க வேண்டிய அரிய பாடங்கள் மூன்று:



  1. எளிமை - இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக இருந்த ஒருவர் - கம்யூனிஸ்ட்கள் தங்களது சட்ட மன்ற சம்பளத்தைக் கூட கட்சிக்கே கொடுத்து, அவர் கள் தரும் ஒரு தொகையை மட்டுமே பெறும் அத்த கைய எடுத்துக்காட்டான தோழர்கள். அவரிடம் பையில் 20 ரூபாய் தான் இருந்துள்ளது. அது வெளி யில் கிளம்பி திரும்ப வீடு சேரும் வரையில் செல வுக்கு இருந்த "பெரிய தொகை!"


- இன்றுள்ள டாம்பீக பொதுவாழ்க்கை வாண வேடிக்கை வெளிச்சத்தில் இதை எளிதில் நம்பவே முடியாது பலரால்.


இப்படியும் எளிமையும், நேர்மையும் கொண்ட கொள்கை லட்சிய உணர்வாளர்கள் வாழத்தான் செய்கிறார்கள்.



  1. அதுபோல அந்த ஆட்டோ ஓட்டுநர் நண்பர் பாண்டி போன்ற கருணையும், அன்பும் பொங்கும் வாழ்க்கை நெறியாளர்கள். கொள்கையால் வேறு பட்டாலும், மனித நேயம் அதனினும் பெரிது - தாண் டியது என்பதை அவரது சீரிய நடவடிக்கை மூலம் சமூகத்திற்கு உணர்த்தி இருக்கிறார்.


பாண்டி அவர்களை வெகுவாகப் பாராட்டுகி றோம் - கொள்கைக்கு அப்பாற்பட்டு!



  1. எளிமை, நேர்மை, அன்பு, கருணை என்றுமே மனிதத்திடமிருந்து வற்றி விடாது என்பதே பேருண்மை!


வளரட்டும் இந்தப் பண்பாடு!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக