பக்கங்கள்

திங்கள், 21 டிசம்பர், 2020

ஜோபைடன் என்ற மாமனிதர்! (1)(2)

ஜோபைடன் என்ற மாமனிதர்!  (1)

அமெரிக்க அதிபராக கடும் போட்டிக்கிடை யில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜன நாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோபைடன் அவர்கள் பற்றிய - அரசியலுக்கு அப்பாற்பட்ட அரிய தகவல்கள் - அவர் எத்தகைய சகிப்புத் தன்மையும், பொறுமையும் வாய்ந்த, எந்த கடுஞ்சோதனைகளையும் தாங்கி, தாண்டி வாழ்வில் வெற்றி பெற்று வந்தவர் என்பதை நன்கு விளக்குகின்றன.


வாழ்க்கையில் எதிர்பாராத இழப்புகளையும், அதிர்ச்சிக்குரிய நிகழ்வுகளையும் சந்தித்து, வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாமோ என்ற விரக்தியின் விளிம்புக்கே கூடச் சென்று அந்த கவலையைப் புறந்தள்ளி, அதிலிருந்து மீண்டு, தன்னம்பிக்கையோடு வாழ்க்கையை ஓர் அமைதியும், ஆழமும் நிறைந்ததாகவே ஆக்கிக் கொண்டு எவ்வாறு ஜோபைடன் என்ற அந்த மாமனிதர் முன்னேறினார் என்ற மனித இயல்பு களை உள்ளடக்கிய அவரது வாழ்வின் குறிப்புகள் பற்றிய சில தகவல்கள்  - (அவரது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றியது அல்ல).



1972 இல் சட்டம் படித்து வழக்குரைஞராக வரவேண்டியவரான இவர், தமது மிகக் குறைந்த வயதில்  (31 வயது) செனட் சபை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு அரசியலுக்கு வந்தார் - மகிழ்ந்தார். ஆனால், அந்த மகிழ்ச்சி பெரும் அளவில் நீடிக்க முடியாத அளவுக்கு வாழ்க்கையில் ஒரு சோக நிகழ்வு நடந்தது.


தனது துணைவியார் நீலியா, மகள் ஏமி, மகன்கள் பியூ மற்றும் ராபர்ட் ஆகியவர்களுடன் ‘கிறிஸ்துமஸ் ஷாப்பிங்’ சென்ற போது, இவரது காரின்மீது ஒரு டிராக்டர் மோதி, இவரது துணை வியார் நீலி, 9 வயது மகள் ஏமி கொல்லப்பட்டனர். மகன்கள் பியூ, ராபர்ட் ஆகியோர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப் பட்டு வந்தனர்.


இந்த சோகத்திலிருந்து அவரால் எளிதில் மீள முடியவில்லை; காரணம் இரண்டு தாயற்ற சிறு ஆண் பிள்ளைகளை வளர்க்கும் ‘ஒற்றைத் தந்தை’ நிலைக்குத் தள்ளப்பட்டார்! அவர் அடைந்த துயரம், துன்பம் அளவிடற்கரியது.


ஒரு கட்டத்தில் அவரது மன அழுத்தம் மிக அதிகமாகி தற்கொலை செய்து கொள்ளலாமா என்று கூட யோசிக்கும் அளவுக்குச் சென்று விட்ட நிலைமை!



எனினும் அவர் அதன் பிறகு தெளிவடைந்து “ஏன் நாம் வாழ்க்கையில் நம்பிக்கை இழக்க வேண்டும்? எதையும் எதிர்கொண்டு வாழும் பக்குவத்தைப் பெறுவதுதானே சரியான அறிவு வழி. இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு கடமையாற்றி அந்த துன்பத்திலிருந்து மீளும் வழிகாண வேண்டும்'' என்ற திட சித்தத்துடன் வாழ்க்கையைத் தொடர்ந்தார்!


இரண்டு இளம் மகன்களையும் வளர்க்கும் தந்தை - தாயின் பெருங்கடமையை அவர் ஆற்றிடத் தயங்கவில்லை.


36 ஆண்டுகள் ஒவ்வொரு நாளும் 4 மணி நேரம் AMTRAK - ரயிலில் பயணம் செய்து, தனது பணிகளை முடித்து, வீட்டிற்கு வந்து தனது பிள்ளைகளுக்கு அன்பையும், பாசத்தையும், உணவையும் ஊட்டி வளர்த்தார்; படுக்கையில் அமர்த்திக் கொண்டு பல கதைகளைப் படித்துக் கூறி அவர்களைப் பக்குவப்படுத்தி வளர்த்தார்!



1987ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்த லில் போட்டியிட முடிவு செய்தார் பைடன். அதற்கான பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தபோது அவருக்குத் தலையில் அடிக்கடி கடுமையான வலி ஏற்பட்டது. அவருக்கு மூளையில் இருக்கும் ரத்த நாளங்களில் இரண்டு மிகப்பெரிய வீக்கங் கள் ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக தலையில் அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் எனவும் மருத்துவர்கள் அவரிடம் தெரிவித்தனர்.


மூளை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில், அதனால் ஏற்பட்ட பக்க விளைவாக அவரது நுரையீரலில் ரத்த உறைவு ஏற்பட வழிவகுத்தது. இதனால் மீண்டுமொரு அறுவை சிகிச்சை செய்தாக வேண்டிய நிலைக் குத் தள்ளப்பட்டார் பைடன். எப்போதும் தடை களிலிருந்து மீண்டெழும் குணம் படைத்த பைடன், ஏழு மாத ஓய்வுக்குப் பிறகு மீண்டும் அரசியல் வாழ்க்கையில் நுழைந்தார்.


வாழ்க்கையின் சோக மேகங்களும், இருட் டும் கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங் கின. என்றாலும் வாழ்க்கை என்பது பல எதிர் பாராத அதிர்ச்சித் திருப்பங்களைக் கொண்டது தானே! - இல்லையா? அதை எதிர்பார்க்கத்தானே வேண்டும்!


இவரது மகனுக்கு 46 வயது. மூளைப் புற்று நோய் அந்த பிள்ளையைத் தாக்கியது - அவரை மிகப்பெரிய துன்பக் கடலில் தள்ளியது. அவ ருக்கு சிகிச்சை, மற்றவைகளையும் ஏற்பாடு செய்து தனது அன்பைப் பொழிந்தார்! ஆனா லும், மகன் இறப்பைச் சந்திக்க வேண்டியிருந்தது.



மகன் மரணமடைந்த சோகம் இவரை மீண் டும் தாக்கியது. எதையும் தாங்கும் இதயத்தோடு ஜோபைடன் இந்தத் தாங்க முடியாத இழப்பை யும் ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்று கருதி அதை ஏற்றுக் கொண்டார். தனது பொது வாழ்வுப் பணியை - துணைக் குடியரசுத் தலைவர் பொறுப்பில் சிறப்பாகச் செயல்பட்டு, பராக் ஒபாமா அவர்கள் குடியரசுத் தலைவராக - அதிபராக இருந்தபோது அவரால் பெரிதும் கவரப்பட்டவரானார்!


எவ்வளவு துன்பம், துயரம் தொல்லைகள் தொடர்ந்தாலும் நம்பிக்கையை இழக்காமல் வாழ்வது என்பது பாடம் அல்லவா?


தனது  துணைவி, மகள், பிள்ளைகள் எப் போதும் தன்னுடன் இருக்கிறார்கள் என்ற உணர் வுடன் வாழத் தொடங்கினார், துயரத்தையும் போக்கிக் கொண்டார்.


முன்னாள் அதிபர் பராக் ஒபாமா இவரைப் பற்றி அருமையாகச் சொன்னார். “பாசாங்கு இல்லாது மனிதர்களை நேசிக்கும் அன்பான பண்புள்ளவர்; அவரது தொண்டு தொய்வில் லாதது - தன்னலமற்றத் தொண்டுள்ளம் அவரு டையது” என்று கூறியது சரியான மதிப்பீடு - சிறந்த பாராட்டும்கூட!


அத்தகைய சிறந்த மாமனிதர். எதிர்நீச்சல் அடித்து, அமெரிக்க நாட்டை ஒரு வகையான தனி மனித சர்வாதிகார ஆபத்திலிருந்து மீட் டெடுத்து, ஜனநாயகத்தை - புத்துயிரும் புத்தாக்கமும் தர ஆயத்தமாகியுள்ளார் என்பது  நற்செய்தி அல்லவா?


(ஒரு காணொலியின் மூலம் திரட்டப்பட்ட தகவல் இது!)

ஜோ(ஜோசப்) பைடன் என்ற மாமனிதர் (2)


உலகமே அண்ணாந்து பார்க்கும் அளவில் அமெரிக்க வரலாற்றிலேயே மிக அதிகமான அமெரிக்க வாக்காளர்களின் வாக்கைப் பெற்று, கடும் போட்டியில் வெற்றி வாகை சூடியதோடு, மனித குலத்தின் சரி பகுதியான பெண்ணினத்தின் ஆற்றல், அறிவு, திறமைக் குரிய முக்கியத்துவமும், பங்களிப்பும், வாய்ப் பும் முதல் முறையாக ஒரு பெண்ணுக்கு அதுவும் இந்திய வம்சாவளி, தமிழ் நாட்டுப் பெண்மணிக்கு துணைக் குடியரசுத் தலைவர் பதவிப் பொறுப்பினைத் தந்து வெற்றி உலாவரும் அவர்களைப் பற்றிய அறியாத தக வல்கள் அறிவது அவர்களைப் பெருமைப்ப டுத்த மட்டுமல்ல; வாழ்க்கையில் துன்பமும், துயரமும் நம்மைத் தாக்கும் போதும், மனந் தளராமல், ஒடிந்து நொடிந்து போகாமல், நம்பிக்கையுடன் ‘இது மாறும்', இதை மாற்றி வெற்றி பெற்றிட நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கை சிகரத் தின்மீது ஏறி நின்று முழக்கமிடுவதற்கும், விரக் தியை விரட்டி, மன அழுத்தத்திற்கு அறவே இடந்தராமல், துணிவு கொள்ள ஜோபைடன் போன்றவர்களின் வாழ்க்கை நமக்கெல்லாம் தன்னம்பிக்கை பாடங்களாகவும் பயன்படும் அல்லவா?


மூன்றாண்டுகளுக்கு முன்பே (2017 இல்) டிசம்பரில் எனக்கு அன்பு மகள் அருள் - பாலு ஜோபைடன் பற்றி - அவரது மனிதத்தின் தனிச் சிறப்பு பற்றி விளக்கிக் கூறி, “இந்தப் புத்தகம் உங்களுக்கு மிகவும் பிடிக்கும். அவரது வாழ்க்கை எத்தனை நெகிழ்ச்சிக்குரிய நிகழ்ச்சி களின் தொகுப் பாக அமைந்துள்ளது என்பதை சுவைப்படக் கூறும்'' என்று சிறு அறிமுகத்துடன் தந்தார்.


“Promise Me, Dad” - “எனக்கு சத்தியம் செய்து கொடுங்கள் அப்பா” என்ற தலைப்பு தான் ஜோ பைடன் 2017 இல் எழுதி வெளிவந்த ஆங்கில நூல்!


அதன் தலைப்பு இன்று அதைவிட மிகப் பொருத்தமாக அமையக்கூடிய ஒன்றாகவும் உள்ளது! ‘A year of Hope, Hardship, and Purpose' என்பது அத்தலைப்பின்கீழ் - அப் புத்தகத்தின் முன்பக்க அட்டையில் உள்ள ஆங்கில வாசகம்.


‘நம்பிக்கை, துன்பம், ஒரு குறிக்கோளும் என்பதற்கான ஆண்டு' என்பதே அது!


இவ்வாண்டு ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக அவர் நாட்டிற்கு சேவை செய்ய தன்னை அர்ப்பணித்துக்கொள்ள முன்வந் துள்ள நிலையில் - இந்தத் தேர்தல் ஆண்டும் கூட அம் மூன்றும் அவரைப் பொறுத்தவரை அவரைக் கட்டித் தழுவிய அம்சங்கள்தானே!


புத்தகத்திற்கு வெளியே நின்று பேசிக் கொண்டே இருந்தோமேயானாலும் வாசகர் களின் ஆவல் மேலும் சோதிக்கப்படக் கூடா தல்லவா?


உள்ளே போகலாமா?


2014 ஆம் ஆண்டு நவம்பர், ஜோபைடனின் குடும்ப உறுப்பினர்கள் 13 பேர், ‘நன்றித் திருநாளில்‘, ‘நான் ட்டு கெட்' பகுதியில் கூடி தங்களது குடும்பத்தினரின் 40 ஆண்டு நிறைவு விழாவில் கூடி கொண்டாட முனைகிறார்கள். Thanks Giving என்பது அமெரிக்க வாழ்வில் குடும்ப உறுப்பினர்கள் சந்தித்து மகிழும் நாள் ஆயிற்றே!


தங்கள் குடும்பத்தின் எதிர்காலம் எப்படி அமையக் கூடும் என்பது பற்றியெல்லாம் அவர்களது குடும்பச் சந்திப்பில் - நன்றித் திருநாளின்போது - பேச்சுகள், உரையாடல் நிகழ்ந்தன.  கருத்து பரிமாற்றங்கள் குடும்பங் களில் - சந்திப்புகளின் போது நடைபெற்றால் அது ஆரோக்கியமான அறிவு வழிதானே!


இதற்கு 15 மாதங்களுக்கு முன் ஜோபை டனின் மூத்த மகன் - பீயோ (Beau) வுக்கு மூளைப் புற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலை (46 வயது). அவர் அதிலிருந்து மீண்டு உயிர் பிழைப்பாரா என்பது சந்தேகம் என்ற நிலை இருந்தது!


அப்போது அவரது மூத்த மகன் பீயோ தனது தந்தை ஜோபைடனிடம், “தந்தையே, நீங்கள் எனக்கொரு சத்திய வாக்குத் தரவேண் டும். எனக்கு என்னவானாலும்கூட, நீங்கள் உங்கள் பணியிலிருந்தும், வாழ்க்கையிலிருந் தும் எனக் காக ஒதுங்கிவிடக் கூடாது; நீங்கள் எப்போதும் வழக்கம்போல் சரியாகவே இருக்க வேண்டும்” என்றார்.


கண்களில் நீர்த் ததும்ப, உறுதி அளித்தார் மகனுக்கு, தந்தை ஜோபைடன். அதுபோலவே அவரது மூத்த மகன் நோயினால் 12 மாதங்கள் போராடியும்கூட மீள முடியவில்லை; மரணம் அவர்களைப் பிரித்த கொடுமைக்கு ஆளாகிய நிலையில், மகனுக்குக் கொடுத்த வாக்கு றுதிப்படி நடந்து கொள்ளுவதிலிருந்து தான் மாறிவிடாமல் இருக்க, தனது துணை அதிபர் பொறுப்புகளை - ஏற்பட்ட கடமைகளை - உலகப் பயணங்கள் - பூமிப்பந்தில் யாருக்கெல் லாம் எந்தெந்த வகையில் உதவிட முடியுமோ அப்படியெல்லாம் அவர் கடமையாற்றி துய ரத்தை ஒரு வழியில் துடைத்துக் கொண்டார்!


பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு இப்படி தாங்க முடியாத பிரிவுகளால் துன்பமும், துயரமும் ஏற்படும்போது, அதிலிருந்து வெளியே வர ஒரே வழி, முன்னிலும் அதிக மான அளவு பல மடங்கு உழைத்து, கடமை யாற்றிடுவதன் மூலம் தான் அத்துன்பம் துயரம், சோகத்தை விரட்டியடிக்க முடியும் என்று பலமுறை தந்தை பெரியார் அவர்கள் அறிவுரை கூறியுள்ளார் என்பது இதைப் படிக்கையில் நமக்கு நினைவுக்கு வருகிறது!


தனது கடமைகளாற்றுவது, பாரக் ஒபாமா போன்றவர்களின் அகநக நட்பை பலப்படுத்திக் கொள்வது, உலக மக்களின் பல தீர்க்க முடியாத பிரச்சினைகட்குத் தீர்வு காணும் இடையறாத முயற்சிகள் - எப்போதும் இழக்காத உறுதிமிக்க நம்பிக்கை - இவையே ஜோபைடனை பெரி தும் அதன்பிறகு வாழவைத்து இன்று உலகம் பாராட்டும் புது நம்பிக்கை அளிக்கும் அதிப ராக அவர் உயருவதற்கு அடித்தளமாக அமைந்து விட்டது!


இந்த நூலை அவர் எழுதியுள்ளது துணைக் குடியரசுத் தலைவர் என்ற நிலையினால் அல்ல. ஒரு பாசமிக்க தந்தை, தாத்தா, நண்பர், ஒரு கணவர் என பல நிலைகளில் எப்படிப் பட்ட அனுபவங்கள் அவர் வாழ்க்கையைச் செதுக்கின என்பதை உலகுக்குப் பறை சாற்றிடும் பல்சுவைப் பாடங்களே!


இந்நூல் துவங்குமுன் அவர் தத்துவஞானி, இமானுவேல் காந்த் அவர்களது அறிவு மொழியை அறிமுகப்படுத்துகிறார் - வாசகர் கட்கு!


“Rules for happiness: something to do, someone to love, something to hope for.” - Immanuel Kant.


மகிழ்ச்சிக்குரிய விதிகள் என்பவை எவை தெரியுமா? சிற்சில பணிகளைச் செய்தல், சிற் சிலரை நேசித்து அன்புக் காட்டுதல், நம்பிக்கை யோடு பயணம் தொடர்தல் என்பதே!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக