பக்கங்கள்

திங்கள், 21 டிசம்பர், 2020

இந்தக் குளிர்காலமும் -உடலின் நோய் எதிர்ப்பு சக்திப் பெருக்கமும்! (1)(2)

இந்தக் குளிர்காலமும் -உடலின் நோய் எதிர்ப்பு சக்திப் பெருக்கமும்! (1)

கரோனா - கொடுந்தொற்று (கோவிட் - 19) அண்மையில் தமிழ்நாடு மற்றும் சில தென் மாநிலங்களில் குறைந்து வருகிறது; உயிர்பலியும் வெகுவாகக் குறைந்து வருகிறது என்பது ஆறுதலான செய்தி.


அதே நேரத்தில் டில்லி தலைநகரில் மீண்டும் ஒரு கடுமையான கொடுந்தொற்று பரவுவதும் - ஒரே நாளில் நூற்றுக்கு மேற்பட்டோரின் உயிரிழப்பும் செய்தியாக வருவது மீண்டும் அச்சத்தில் மக்களை ஆழ்த்துகிறது. மொத்த எண்ணிக்கை தற்போது உயர்ந்துள்ளது.


இப்போது குளிர்காலம் - மழைக் காலம் துவங்கி இவை இன்னமும் ஜனவரி மாதத்தின் பாதிக்கு மேல் நீடிக்கக் கூடும்; இந்த காலக் கட்டம் பொதுவாகவே, சளி, இருமல் - காய்ச்சல் வருவது வாடிக்கையான பருவம் உள்ளதாகும்.  இப்போது கரோனா தொற்று அபாயமும் இதோடு இணையும் போது மிகவும் எச்சரிக்கையுடன் வருமுன்னர் காக்கும் வழிமுறைகளில் மக்கள் தீவிர கவனம் செலுத்துவது அவசர அவசியமாகும்.


முதல் அடிப்படைத் தேவை நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity to Disease) வளர்த்துக் கொள்ளும் வகையில் நமது உணவுப் பழக்கம், உடற் பயிற்சி முதலியவற்றை மாற்றி அமைத்துக் கொள்ளுவது மிகவும் இன்றியமையாததாகும்.


ஊட்டச்சத்து நிபுணரான லிசா பீல்ட்ஸ் (Lisa Fields) என்பவர் பல்வேறு அரிய தகவல்களையும், யோசனைகளையும் திரட்டி ஒரு கட்டுரையில் தந்துள்ளார்; அதன் பிழிவு இதோ:


1. நமது அன்றாட உணவில் தாவரங்கள், செடிகள், கீரைகள் கொண்ட உணவை அதிகமாக எடுத்துக் கொள்வது அவசியம்.


பழங்கள், காய்கறிகள், தானிய வகைகள் - கொட்டைகள் (Nuts), கீரைகள் கூடுதலாக உணவில் சேர்த்துக் கொள்வது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவிடக் கூடும்.


நியூஜெர்சி மாநிலத்தின்  நியூவார்க்கைச் (Newark) சேர்ந்த நடேஷா ஃபுஸ்வினா எம்.பி.  அவர்கள் 'இவற்றை உட்கொள்ளுவதன்மூலம் நமது உடலில் ஏற்படும் நெஞ்செரிச்சல், கரோடி னாய்ட்ஸ் (Carotenoids) என்ற ஜி செல்களைப் பாதுகாக்க உதவும். பிளோவனாய்ட்ஸ் (Flavonoids) - இவை எல்லாம் மேலும் பழங்கள், கீரைகள், காய்கறிகளை நாம் உணவாக உண்ணும்போது அது பெரிதும் உதவும்.


2. நமது வயிறு - செரிமானப் பகுதியை (Gut) எப்போதும் ஆரோக்கியத்துடன் வைத்திருப்பது நமது நோய் எதிர்ப்பு சக்திக்குப் பெரிதும் துணை புரியக் கூடும். புரோபயோட்டிக்ஸ் (Probiotics) என்ற என்சைம்களை தினமும் எடுத்துக் கொண்டால் அது நல்ல பாக்டீரியாக்களைப் பெருக்குவதுடன் நமது உடலிலிருந்து அதிகமாக வெளியேறிவிடாமல் அதைப் பெருக்கிடவும் பெரிதும் உதவும். நல்ல தயிர், மோர் போன்ற பால் பொருட்களை அதிகம் சேர்த்தால் செரிமானப் பகுதிக்கு அவை பெரிதும் துணை புரியக்கூடும். கெட்ட கிருமிகள் உடலுக்குள் நுழைவதை எதிர்த்துத் தடுத்து அவை போரிடும் சிப்பாய்களாக நிற்கும்.


உணவுப் பொருட்களின் லேபிள்களில் லேக்டோ பாசிலஸ் (Lactobacillus) (எல்லாம் தயிர் - மோர் வகையறாக்கள்), Acidophilus அல்லது Bifidobacterium Bifidum  என ஒட்டப்பட்டிருக்கிறதா என்று பாருங்கள். இவை தனியாக என்சைமமாகவும் கிடைக்கிறது. தினமும் ஒன்று எடுக்கலாம் என்று வயிறு, குடல் செரிமான மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்!


3. மன அழுத்தம் இல்லாது அல்லது குறைந்த அளவே இருக்கும்படி அன்றாட வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். உடற்பயிற்சி, உடல் நலம் பேணும் முறைகள், மூச்சுப் பயிற்சி, மனதை ஆழ்ந்து செலுத்தும் (Meditation) பயிற்சி மூலம் மன இறுக்கத்தைப் போக்கினால் அது நோய் எதிர்ப்பு சக்தியைப் பெருக்கிட பெரிதும் உதவும்.


4. உடலின் நீர்ச்சத்து (Dehydration) குறையாமல் - அது பெருகும் அளவுக்கு அடிக்கடி தண்ணீர் குடிப்பது இந்த கால கட்டத்தில் மிகவும் தேவையான ஒன்றாகும். நீர் வறட்சி - உடலின் நீர் வெளியேறி வறண்ட நிலை உருவானால் அது மலச்சிக்கல் போன்ற பலவற்றுக்குக் காரணமாகிவிடக் கூடும். உடலிலிருந்து வெளியேற வேண்டிய கழிவுகள், விஷச் சத்துக்கள் (Toxins) உரிய முறையில் வெளியேற போதிய அளவு தண்ணீர் குடித்தல் பெரிதும் உதவும்.


இந்த விஷச் சத்துகளும், கழிவுகளும் வெளியேறாவிட்டால், நோய் எதிர்ப்புச் சக்தியை அவை வெகுவாக பாதிக்கின்றன என்பதோடு, பல களங்களில் போராடும் போர்ப்படை வீரர்களைப் போல, நம் உடலின் நோய் எதிர்ப்புப் போர்ச் சக்திகள் இவைகளோடு ஒருபுறம் - வெளியே இருந்துவரும் கிருமிகளோடு மறுபுறம் என்று தங்கள் சக்தியை சிதறடிக்கக்கூடும்.

இந்தக் குளிர்காலமும் - உடலின் நோய் எதிர்ப்பு சக்திப் பெருக்கமும்! (2)


5. உடற்பயிற்சிகளை நாளும் தவறாமல் அவரவர் வயதுக்கும், உடலுக்கும் ஏற்ப - மருத்து வர்கள் ஆலோசனை - அறிவுரைப்படி செய்து வருவது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை வளர்த்துக் கொள்ள பெரிதும் உதவும் என்கிறார் 'நியூயார்க் டைம்ஸ்' ஏட்டின் நற்சான்றிதழ் பெற்ற உடற்பயிற்சியாளர் ரிக் ரிச்சே (Rick Richey). இப்படி குளிர் காலம் போன்ற பல பருவங்களில் ஏற்படும் உடல் நோய் தாக்கத்தைத் தடுக்க நோய் எதிர்ப்பு (Immunity to Disease) சக்தியைப் பெருக்கிடும் என்றும் கூறுகிறார். இந்த உடற்பயிற்சிகளை பெரிதும் திறந்த (வெளிச்சம் உள்ள) வெளிப் பகுதிகளில் செய்யும்போது மிகு பயன் விளையும் என்றும் அறிவுறுத்துகிறார்!


வைட்டமின் D சூரிய வெளிச்சத்தில் அதிக மாகக் கிடைக்கிறது. வைட்டமின் D நமது நோய் எதிர்ப்பைப் பெருக்க உதவிடும் முக்கியமான ஒன்றாகும். அதிலும் இந்தக் கரோனா  கோவிட் - 19 இல் அதைத் தடுக்க வைட்டமின் D -அய்தான் பெரிதும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். சூரிய வெளிச்சத்தில் - வெளியே அதிகம் கிடைக்க வாய்ப்புள்ளது. அண்மைக் கால ஆய்வுகள் இந்தக் கருத்தை உறுதிப்படுத்தியுள்ளன.


நமது தோல் பகுதி சூரிய வெளிச்சத்தில் போதிய வைட்டமின் D-அய் பெறுவதால் - இந்த வெளிப்பகுதி உடற்பயிற்சியால் சூரிய வெளிச்சம் - வெப்பம் மூலம் அதிகமான பலனை ஏற்படுத்தும் என்பதும் அதே முடிவுகளின் கண்டுபிடிப்புமாகும்!


6. உடலுக்குப் போதிய ஓய்வு (Rest) முக்கியத் தேவையாகும்!


தூக்கம் (8 மணி அல்லது ஏழரை மணி நேரம்) மிகவும் அவசியமாகும். மருத்துவர்கள் நம் உடலைப் பரிசோதிக்கும்போது கேட்கும் மூன்று முக்கிய கேள்விகளில் 'பசி இருக்கா?', 'தூக்கம் போதிய அளவு வருகிறதா?' 'ஏதாவது புதிய அறிகுறிகள் - வழமைக்கு மாறாக உடலில் - போக்கில் உங்களுக்குத் தென்படுகிறதா?' என்பவைதானே!


தூக்கமின்மை பலவற்றிற்கும் அடிப்படை 'செயலூர்தியாகி'விடக் கூடும்! எனவே தூக்கத்தைக் குறைக்காதீர். நமது உடல் கடிகாரம் போல் எப்போதும் இயங்கக் கூடியது. அதைக் கடைப்பிடித்து ஒழுகுவதில் நம்முடைய குறை பாட்டால்தான் அதன் முறைகள் - சீரான ஒரே நேர்கோட்டில் போகாமல் தாறுமாறாகப் போகக் காரணமாக அமைகின்றது.


தூங்கும்போது வெளிச்சத்துடன் தூங்காதீர்! இருட்டை உருவாக்கி - விளக்கணைத்து விட்டுத் தூங்குங்கள்.


'புக்சினோ  (Fuksina) என்ற தூக்க நிபு ணர் கூறுகிறார்: "நீல விளக்கு, ஸ்மார்ட் போன்கள், கணினிகள் 'மெலடோனின்' என்ற முக்கிய ஹார்மோன் பெருக்கத்தை உடலில்  ஏற்படுத்தாமல் இவை தடுத்து விடுகின்றன!" என்கிறார்.


இந்தக் கருவிகளுக்குப் படுக்கைக்குச் சென்று தூங்குவதற்கு ஓரிரு மணி நேரம் முன்பே 'ஓய்வு' கொடுத்து விடுங்கள்! (அதுபோலவே டி.வி. பார்ப்பதைத் தவிர்ப்பது தூங்குமுன் அவசியம்)


7. கைகளை சோப்பு போட்டு அடிக்கடி சரியாகக் கழுவுதல் மிக மிக மிக முக்கியம்.


பாக்டீரியாக்கள், வைரஸ் கிருமிகள், தொற்று நோய்க் கிருமிகள், உங்கள் கைகளில் பற்றி அந்தக் கைகளைக் கொண்டு  மூக்கைத் தொடுதல், கண்கள், வாயைத் தொடுதல் மூலம் எளிதில் கிருமிகள் உடலின் உள்ளே படையெடுத்து நம்மை நோய்த் தொற்றுக்கு ஆளாக்கிவிடக் கூடும் என்பதால், அடிக்கொரு தரம் கை கழுவுங்கள்; நன்றாகக் கழுவுங்கள்.


அதிலும் குறிப்பாக, சமைக்கும் முன்பும், உண்ணும் முன்பும், கழிவறைக்குச் சென்று வெளியே வந்த உடனும், மூக்கைச் சிந்தும் போதும் அல்லது வேறு ஏதாவது பொருளை தொட்டுக் கைகள் அழுக்காகும் நிலை ஏற்படும் போதும், இந்தக் கைகழுவுதல் அடிக்கடி (சோம்ப லின்றி) நடைபெற்றால், ‘நோயை நாம் கை கழு வலாம்'.


கவனத்துடன் செயல்படுங்கள்.


வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்


வைத்தூறு போலக் கெடும். (குறள் 435)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக