பக்கங்கள்

திங்கள், 21 டிசம்பர், 2020

எளிமையில் உதித்த அண்ணாவின் எழுத்தோவியம்! (1)(2)

எளிமையில் உதித்த அண்ணாவின் எழுத்தோவியம்! (1)


அறிஞர் அண்ணாவின் எழுத்துக்கள் - அவர் 1940களில் ‘விடுதலை' ஆசிரியராக இருந்து (ஈரோட்டில்) எழுதிய எழுத்தோவி யங்களானாலும், அதன்பின் 1942இல் காஞ்சி புரத்துக்கே திரும்ப வந்து ‘திராவிட நாடு' என்ற வார ஏடு ஒன்றைத் துணிவுடனும், தந்தை பெரியாரின் ஆசியுடனும், திராவிடர் கழகத் தோழர்களின் ஒத்துழைப்புடனும், அக்காலத்து வசதி படைத்த தோழர்கள் டி.பி.எஸ்.பொன்னப்பா போன்றவர்களின் நிதி உதவியுடனும் - நடத்திட பல்வகைத் தொல்லைகளையும் ‘சோதனை'களையும் சந்தித்து, ‘சாதனை' சரித்திரம் படைத்தவர் அண்ணா.


அண்ணாவின் எழுத்துக்கள் மலரில் உள்ள தேன் என்றால், இளைஞர், மாணவர் வாசகர்களாகிய எம் போன்ற பலரும், தேனீக் கள் ஆவோம்!


அஞ்சல் அல்லது தொடர்வண்டி மூலம் வாரந்தோறும் ‘குடிஅரசு' ஏடும், ‘திராவிட நாடு' ஏடும், நாளும் ‘விடுதலை' நாளேடும் எனது ஆசான் (கடலூரில்) ஆ.திராவிடமணி அவர்களது சொந்தச் செலவில், கடலூர் ‘ராமலிங்க பக்த ஜனசபை' கட்டடத்தில் உள்ள கட்டட வாசக சாலைக்கு (அதுவே ஆசிரியர் ஆ.திராவிடமணி அவர்களது இருப்பிடமும்; எங்களுக்கான கல்விக் கூட பாசறையும் போன்றதாகும்) வரவழைக்கப் பட்ட ஏடுகளாகும்!


திரும்பத் திரும்ப உரத்த குரலில் பல முறை படிக்கச் சொல்வார்; அது அப்படியே படித்து மனப்பாடமாகி விட்டது. கிடுகிடு வென பார்க்காமலேயே அதை எம் ஆசிரி யர் ஆ.திராவிடமணி அவர்கள் முன் ஓசை நயத்தோடு ஒப்புவித்தலே - நல்ல முயற்சி தான்!


அறிஞர் அண்ணாவின் 'திராவிட நாடு' ஏட்டிற்கு நிதியளிப்புக் கூட்டம் 27.6.1943ஆம் ஆண்டில் கடலூர், ஓ.டி. செட்டிக்கோயில் தெரு மைதானத்தில் நடைபெற்றது.


அந்தப் பொதுக் கூட்டத்தில் என்னை மேடைமீது எற்றிப் பேச வைத்து எனது அரங்கேற்றத்தை எனது ஆசிரியர் திராவிட மணி நடத்தினார். அதற்கு சில மாதங்கள் கழித்து - 29.7.1944 அன்று திருப்பாதிரிப்புலியூர் (கடலூர், என்.டி.) முத்தையா டாக்கீசில் தென்னாற்காடு மாவட்ட திராவிடர் மாநாடு - அதில்தான் அண்ணா அவர்கள் அய்யா முன்னிலையில் பேசிய என்னைப் பற்றிக் குறிப்பிட்டபோது,


“இப்போது பேசிய இச்சிறுவன் காதிலே குண்டலம், நெற்றியிலே நீறு, கழுத்திலே ருத்திராட்சம் அணிந்து இப்படிப் பேசியிருந் தால், இவரை இந்தக் கால ஞானப்பால் உண்ட திருஞானசம்பந்தராக ஆக்கியிருப் பார்கள்; இவர் பேசியதிலிருந்து இவர் உண்ட தெல்லாம் ஞானப்பால் அல்ல; பெரியாரின் பகுத்தறிவுப் பால்தான்”


என்று வர்ணித்து - ‘திராவிட இயக்கத்தின் திருஞானசம்பந்தன்' என்று பலரும் குறிப் பிடும் ஒப்பீட்டைச் செய்து பேசினார்!


அய்யாவின் எழுத்துக்கள் ஆழமானவை - கருத்தாழம் மிக்கவை - அலங்காரம் இல்லாதவை.


ஆனால் அண்ணாவின் எழுத்துக்கள் எதுகை மோனையுடன் ஈர்க்கும் சக்தி படைத் தவைகளாக, இளைஞர்களை மயக்கக் கூடியதாகும்.


அறிஞர் அண்ணாவின் தலைப்புகளே தனித்தன்மையானவை - விசித்திரமானவை - சில நேரங்களில் திரைப்பட பாடல்களின் வரிகளையும் கூட கொண்டவைகளாக இருக்கும்!


‘கோடு உயர்ந்தது குன்றம் தாழ்ந்தது!'


‘தீட்சதர் வீட்டில் திருக்கல்யாணம்'


‘இந்து இட்லரிசம்'


‘சீடர் சிலம்பம் எடுக்கிறார்'


இப்படி அற்புதமான எழுத்து ஆற்றல் அண்ணாவுக்கு வளர்ந்தது பற்றி சிந்திக்கும் எவருக்கும் வியப்பே மிச்சமாகும்.


காரணம் அறிஞர் அண்ணா தமிழ் எம்.ஏ.வோ, தனியே புலவர் பட்டத்திற்கோ படித்தவரல்லர்.


மாறாக அவர் பொருளாதார ஹானர்ஸ் படித்து எம்.ஏ. பட்டமும் பெற்றார். தானே விரும்பி இலக்கியம் பயின்றார், எல்லாப் பொருள் பற்றியும் ஆய்ந்து தேறினார்.


அந்த வகையில் அறிஞர் அண்ணா ஓர் அதிசயமான ஆற்றலாளர்.


அந்நாளில் அவர் தனியே ‘திராவிட நாடு' வார ஏடு நடத்த என்ன பாடுபட்டார்; துன்பப்பட்டார் என்பதை அவரே ‘ஆசிரியர் கடிதம்' என்ற தலைப்பில் (இந்த தலைப்பே கூட சற்றே வித்தியாசமானதுதானே!) விவரித் துள்ளார். மற்ற ஏடுகளில் ‘ஆசிரியருக்குக் கடிதங்கள்' வருவதுதான் வாடிக்கை. ஆனால் அண்ணாவோ ‘ஆசிரியர் கடிதம்' என்று துவக்கினார் 1942இல், அதுதான் பின்னாளில் அண்ணாவின், கலைஞரின் கடித இலக்கியங்களாகப் பூத்தன - காய்த்தன - கனிந்தன!


(தொடரும்)

எளிமையில் உதித்த அண்ணாவின் எழுத்தோவியம்! (2)


“தோழர்களே! ‘திராவிடநாடு' பத்திரிகை கொந்தளிப்பிலே முளைத்தது. உமது ஆதர வால் வளர்வது. காலமோ நெருக்கடியானது. விற்பனை நிலவரமோ மனத்தை மருட்டு கிறது. காகித விலையோ நஞ்சாக ஆகி விட்டது. துன்பமோ அதிகம். உதவியோ நானும் இதுவரை கேட்கவில்லை. பரீட்சை யில் இறங்கப் பயந்துதான் கேட்கவில்லை. மாடி வீட்டிலிருந்து கொண்டு, பொழுது போக்குக்காக நான் இப்பணியில் ஈடுபட வில்லை. சூச்சு வீட்டை மச்சு வீடாக்க வருவாய் தேடவுமல்ல. இந்தப் பணியில் நான் இறங்கியது, வேறு ஒன்றும் அறியேன் பராபரமே என்ற நிலையிலும் அல்ல. இதில் குதித்ததன் காரணம், உங்களோடு வாரா வாரம் நேரில் வந்திருந்து பேச முடியாது. ‘திராவிடநாடு’, நம்மைச் சந்திக்கச் செய்கிறது. கட்சிக்கே, இதன் சக்தி.


இதற்கு நீங்கள் கைகொடுக்கவேண்டாமா! சந்தா அனுப்ப வேண்டாமா! விற்பனையை உடனுக்குடன் அனுப்பித் தந்தால் பளு குறையுமே! அதைச் செய்யக் கூடாதா? உமது செல்வாக்கைச் செலுத்தி விளம்பரங் கள் அனுப்பினால், இளைத்த உடலுக்கு டானிக்போல் (சத்து மருந்து போல்) பத்திரிகை வளர்ச்சியடையும், தோழர்களே! அன்பு சில சமயத்தில் பண உருவத்திலே வரவேண்டும். அச்சமயம் இதுதான். என் தோழர் டி.பி.எஸ்.பொன்னப்பன் தந்துவரும் அரிய உதவியே இன்று பத்திரிகையை நடமாடவைக்கிறது. ஆனால், இதையே மட்டும் இறுகப் பிடித் திருக்க இயலுமா? சரியானது தானாகுமா? அவர் இயக்கத்துக்கு செய்யவேண்டிய வேலைகளை இது தடை செய்யுமல்லவா! இவைகளை யோசித்து, இன்றே உங்களா லான, உதவியைச் செய்யுங்கள், உள்ளத்தைக் குளிரச் செய்யுங்கள், ‘திராவிட நாடு' அபயக் குரலிடுவதைக் கேளுங்கள், ஆவன செய் யுங்கள்.


சந்தா - விளக்கம்


தனிப்பிரதி விலை ஒரு அணாவாக இருக்க ஆண்டு சந்தா (கட்டணம்) அய்ந்து ரூபாய் எப்படி? என்று பல அன்பர்கள் கேட்கின்றனர். சந்தாதாரர்களுக்கு, சிறப்பு மலர்கள், ஆண்டு மலர் கிடைக்கும். தனியாக வாங்குவோர், பிரத்தியேக விலைகொடுத்து, மேற்படி மலர்கள் பெறவேண்டும். மலர் களின் விலையையும் சேர்த்தே ஆண்டு சந்தா 5 ரூபாய் என்று குறித்திருக்கிறேன்.


பாரதிதாசன்


கவிபாரதிதாசனைப் பற்றி விசாரித்துப் பல தோழர்கள் கடிதம் எழுதுகின்றது கண்டு மிக்க மகிழ்ச்சி. கனக சுப்புரத்தினம், ‘ஆசிரியர்', புதுச்சேரி என்பது அவர் முகவரி, அரிய தேனினுமினிய ஏடுகள் உள்ளன இப்போதும் அவரிடம். தமிழை உணர்ந்து, புத்தகம் வெளியிடும் அன்பர்கள் தேவை. தமிழகத்திலே, ஒரு நல்ல பதிப்பகம் இருப் பின், கவியின் உள்ள வெள்ளம், நம் வீடெல்லாம் மனமெல்லாம் பாய்ந்து தமிழ் மயமாக்கும், தமிழகத்தின் விசை ஒடிந்திருக் கிறதே என் செய்வது!


திராவிட நாட்டுப் படம்


எல்லை இயல்பு குறித்து திராவிட நாட்டுப் படம் ஒன்று தயாரித்து வெளியிட வேண்டும் என்று தோழர்கள் விரும்புகின்றனர். எனக்கு மிக விருப்பம் அது, திருவாரூர் மாநாட்டிலே நிறுவப்பட்ட குழு அக்காரியத்தைச் செய் வதே பொருத்தமாகும். என்னைப் போன்ற தனி ஆள் செய்வது கூடாது. குழு கூடி எல்லாம் வரையறுத்து, படத்தை வெளியிட வேண்டும்


அழைப்பு


அடுத்த மாதத்திலே தீவிர இளைஞர் மாநாடு காஞ்சியில் நடைபெற இருக்கிறது. காஞ்சிபுரம் தோழர் முனுசாமி, பி.ஏ. அவர்கள் வரவேற்புக் கழகத் தலைவர், தோழர் சி.டி நடராசன் எம்.ஏ.பி.எல். திறப்பு விழா உரையாற்றவும், நெடும்பலம் தோழர் என் ஆர். எஸ். ராமலிங்கம் பி.ஏ., தலைமை தாங் கவும் குறிப்பிட்டுள்ளனர். திராவிட நாட்டுப் பிரிவினையை வலியுறுத்த இம்மாநாட்டில் வேலைத் திட்டம் வகுக்கப்படும். என்னைக் கலந்தாலோசித்தனர். நான் சில யோசனைகள் கூறினேன்.


மாநாட்டிலே திருவாரூர் தோழர் டி.வி. நமசிவாயம், பாரதிதாசனின் திராவிட நாட்டுப் பண்ணைப் பாடவும், லெனின் - பெரியார் படத் திறப்பு விழாக்களை முறையே தோழர்கள் டி.பி.எஸ். பொன் னப்பன், ஏ.கே.டி. சாம்பசிவம் ஆகியோர் நடத்தவேண்டும் என்றும் கூறினேன். மாநாட்டு வேலைகள் பூர்த்தியானதும் அழைப்பு அனுப்புவர். நானும் ஓர் அழைப்பு விடுத்து விடுகிறேன். மாநாட்டுக்கல்ல. திரு மணத்துக்கு, தோழர் ஏ.கே.டி. சாம்பசிவம் (தோழர் ஏ.கே. தங்கவேலரின் திருமகனார்) அடுத்த மாதம், தமிழ் முறையில் திருமணம் நடத்திக் கொள்ளப் போகிறார். பெரியாரும், நாவலர் சோம சுந்தர பாரதியாரும் வர ஏற்பாடு நடக்கிறது. பாகவதர், நமச்சிவாயம், தண்டபாணி தேசிகர் இசைவிருந்து, தங்க வேலர் - ஆதிலட்சுமி அம்மையார் தம் பதிகள் விருந்தோம்பல், இவ்வளவுக்கும் உங்களை அழைக்கிறேன். வருக!”


(சி.என். அண்ணாதுரை,


‘திராவிட நாடு' - 12.07.1942)


இதனிடையில் கடலூரில் அண்ணாவை வரவழைத்து பணமுடிப்பு அளிக்க நடத்திய நிதியளிப்புக் கூட்டத்தில் வழங்கப்பட்ட தொகை - நாங்கள் - எங்கள் ஆசிரியர் திரா விட மணியின் தூண்டுதல் - கழகத் தோழர் களின் கடும் உழைப்பின் மூலம் திரட்டப் பட்டதுதான் அந்தப் பெரிய தொகை!


அந்நாளிலேயே ஒரு பெரும் பொதுக் கூட்டம் போட்டு, அது வழங்கப்பட்டது. அன்றுதான் அண்ணாவையும், அவரது தோழர்கள் டி.பி.எஸ். பொன்னப்பா (காடா கலர் சில்க் ஜிப்பா போட்டிருப்பார்), ‘போட் மெயில்' பொன்னம்பலனார் உட்பட பலரை யும் கண்ட மகிழ்ச்சி ஏற்பட்டது. மா.பீட்டர் பி.ஏ. கலந்து கொண்டார்.


இப்படி பல ஊர்களிலும் பணமுடிப்பு களும், மக்கள் அள்ளி வழங்கிய நன்கொடை களும் அன்பு மழையாகப் பொழிந்தன!


(நிறைவு)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக