பக்கங்கள்

திங்கள், 21 டிசம்பர், 2020

எல்லைக்கோட்டோடு சிரிப்பு - கேலி - கிண்டல் நிற்கட்டும்!



நகைச்சுவை உணர்வு (Sense of Humour) என்பது ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் மிகவும் தேவையான ஒன்றாகும்!


'வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்' என்பது நமது நாட்டுப்புற பழமொழியானாலும், அனுபவ ரீதியாக வெகு மக்கள் கண்டறிந்த  தலைமுறை தலைமுறையாக நமக்குக் கற்றுக் கொடுத்த வாழ்வியல் பாடம்!


கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர் களது நகைச்சுவை இன்றும் ரசிக்கப்படுகிறது - பல தலைமுறைகள் தாண்டியும்! அன்று எவ்வகைச் சிரிப்பையும், சிந்தனையையும் தூண்டியதோ அதே உணர்வு இன்றும் பழைய அவரது நகைச்சுவைத் துணுக்குகளைப் பார்த் தாலும் 'உம்மணாமூஞ்சி' களைக்கூட சிரிக்க வைத்து விடுகிறது!


தந்தை பெரியார் எவ்வளவு பெரிய புரட்சிக் கான சிந்தனைத் தந்தை. அவருக்கிருந்த நகைச் சுவை உணர்வை அருகில் இருந்து அனுபவித்த எங்களைப் போன்றவர்களுக்கு அது மறக்க முடியாத அனுபவமாகும்.


நடிகவேள் எம்.ஆர். இராதா பெரிதும் வில் லன் நடிகராகவே நாட்டுக்கு அறிமுகம்; பிறகு ரத்தக் கண்ணீர் போன்ற நாடகங்கள் நடத்தி, திரைக்கதை 'ஹீரோ'வாக நடித்து வரலாறு படைத்தவர்.


அவரது நகைச்சுவை அனுபவங்கள் நாடகக் கொட்டகையிலும் சரி, திரையரங்கங்களிலும் சரி,  பேச்சு மேடைகளிலும் சரி பெரும் நகைச்சுவை முத்திரை இல்லாது இருக்கவே இருக்காது!


பல்லாயிரக்கணக்கான மக்கள் அவரது நகைச்சுவை வசனங்களைக் கேட்டு குலுங்கு குலுங்கி சிரிப்பதோடு, வெளியேறிய பிறகும் அதைப்பற்றியே பெரிதும் நினைவு கூர்ந்து அசைபோட்டு, சிரித்து மகிழ்வர்!


சிரிப்பு என்பதும், கேலி, கிண்டல் என்பதும் கூட உள்நோக்கமில்லாத வெகுளித்தனத்தின் வெளிப்பாடாக அமைய வேண்டுமே தவிர, மற்றவர்களை எக்காரணம் கொண்டும் குத்திக் காட்டி - புண்படுத்தி - கேவலப்படுத்தி சிரித்து மகிழ்வதாக இருக்கவே கூடாது!


சில நண்பர்களின் சுபாவமே மற்றவரைப் புண்படுத்தி - தேவையில்லாமல்கூட - மகிழ்வது - சிரித்து மகிழ்வது ஒருவகை வாடிக்கையான வழக்கமாகும்!


கேலி, கிண்டல் எல்லாம் உள்நோக்கம் இல்லாமல் செய்யப்பட்டாலும்கூட - சிரித்து மகிழ்வதற்காகச் செய்யப்பட்டாலும்கூட அதற்கென சில எல்லைகள் உண்டு. அந்த எல்லையைத் தாண்டினால் எதிர்வினைதான் ஏற்படக்கூடும்; எனவே அருமை நண்பர்கள் இதனை கவனமாக, எல்லை மீறாமல் - எவரையும் சங்கடப்படுத்தாமல், பாதிக்கப்பட்டவரும் நம்முடன் இணைந்து சிரித்து மகிழ்வதாக அந்த கேலி, நகைச்சுவை, கிண்டல் அமையுமாயின் நிச்சயம் அது சிறப்பு பெறும்!


‘பண்புடைமை' என்ற தலைப்பில் திருவள்ளு வர் மிக முக்கியமான ஒரு அறிவு விளக்கத்தை அளிப்பது நம் அனைவருக்குமான வாழ்க்கைப் பாடம் ஆகும்!


நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்


பண்புள பாடறிவார் மாட்டு. (குறள் - 995)


"விளையாட்டாகக்கூட ஒருவரை இகழ்தல் என்பது, துன்பத்தினைத் தருவதாகும்! உலக இயல்புகளை நன்கு அறிந்து நடக்கும் நல்லவர்களிடத்திலேயே பகைமை உணர்ச்சி தோன்றும் காலத்திலேகூட, இனிய பண்புகள் அவர்களிடத்தில் இருக்கவே செய்யும்!"


தமிழில் பண்பாளர் என்று சொல்லும் போதும், ஆங்கிலத்தில் 'Culture of Person' என்று ஒருவர்பற்றிக் கூறும்போதும் அதன் அளவுகோல் எப்படியிருத்தல் அவசியம் என்பத ற்கான அறிவு விளக்கம் அல்லவா?


நீண்ட காலமாக வளர்ந்த நட்பு - இதுபோன்று சிற்சில நேரங்களில் கேலி கிண்டல் வார்த்தையில் - விளையாட்டாக ஆரம்பித்தது 'வினையாக முடிந்தது' என்று சொல்வதற்கேற்ப ஆகி விடக் கூடும்!


எனவே, சிரிக்க வைப்பது நல்ல சீலம் தான் - மகிழ்ச்சி தரும். ஆனால், எல்லை தாண்டுவது பல கால நட்பு முறிவதற்கும் காரணமாகிவிடும், எச்சரிக்கை! எச்சரிக்கை!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக