பக்கங்கள்

திங்கள், 21 டிசம்பர், 2020

எத்தனை காலம்தான் ஏமாறுவரோ இந்த ‘‘படித்த தற்குறிகள்!''



நம் நாட்டில் ‘படித்த முட்டாள்' என்று ஒரு சொலவடை உண்டு. சற்று கடினமானதும், காரமானதும் ஆன சொல்தான் இது. படிப்பு என்பதே மக்கள் ‘முட்டாள்'களாகக் கூடாது என் பதற்குத்தான் தேவை! ஆனால், இப்படியும்கூட நடக்குமா - இந்த அறிவியல் வளர்ச்சி யுகத்தில் - இதுபோன்ற மனிதர்களும்கூட இந்த பூமிப்பந்தில் வாழுகிறார்களா? என்ற வியப்பு நம் போன்ற பலருக்கும் விலாவைக் குடைவதாக இருக்கிறது!


‘அலாவுதீனும் அற்புத விளக்கும்' என்ற ஒரு கற்பனைக் கதை படிக்க, கேட்க சுவையானது தான். ஆனால், அதை இன்று உண்மை என்று நம்பி, அதுவும் மருத்துவப் பட்டம் பெற்ற ஒரு டாக்டர் ஏமாறுகிறார் என்றால், அதுபற்றி என்னதான் சொல்லுவது? புரியவில்லை.


ஏற்கெனவே உங்களில் ஒரு சிலர் இந்தச் செய்தியை சில ஏடுகளில் படித்திருக்கக் கூடும் என்றாலும்கூட, வாழ்க்கையில் பேராசைக்கு அடிமைப்பட்டு, மனிதர்கள் தங்கள் வாழ்க் கையை வறண்ட பாலைவனமாக ஆக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக ‘விடுதலை' யிலும், மற்ற செய்தித் தாள்களிலும் வந்த செய் தியை அப்படியே தருகிறோம், படியுங்கள்! படித்து, எத்தனை  காலந்தான் ஏமாறுவார்களோ படித்தவர்களான பிறகும்கூட என்று கேட்கவே தோன்றும்!


‘‘உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லாய்க்கஹன்.  இவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் மருத்துவம் படித்துவிட்டு பிறகு இந்தியா வந்து பிரபல மருத்துவமனையில் இதய நோய் சிறப்பு மருத்துவராக பணி புரிந்து வருகிறார்.


சில ஆண்டுகளுக்கு முன்பு இவரிடம்  சமீனா என்ற பெண் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அதன் மூலம் மருத்துவருடன் அவரது குடும்பத்தினர் அறிமுகமானார்கள்.  சமீனாவின் கணவர் இஸ்மாயில் மருத்துவரின் வீட்டிற்குச் சென்று அவ்வப்போது விலை உயர்ந்த பொருட்களை கொடுத்துள்ளார்.


இது குறித்து மருத்துவர் கேட்டபோது, ‘‘எங்கள் குடும்பத்தின் மூதாதையர் அரபு நாட்டில் இருந்து வந்தவர்கள். அப்படி வரும் போது தங்களிடம் இருந்த அலா வுதீன் அற்புத விளக்கையும் கொண்டு வந்துள்ளனர். அதை நாங்கள் மிகவும் கவனமாகப் பாதுகாத்து வருகிறோம். எங்களுக்கு நேரம் இருக்கும்போது அந்த விளக்கைப் பயன்படுத்தி எங்களுக்கு வேண்டியதைப் பெற்றுக்கொள்வோம், அந்த விளக்கின் மூலம் கிடைத்த பொருட்கள் தான் இவை'' என்று கூறி ஏமாற்றி உள்ளார்.


 வெளிநாடுகளில் படித்திருந்தாலும் மூடநம்பிக்கை காரணமாக சிந்திக்காமல் அவரின் பேச்சை அப்படியே நம்பிய மருத்துவர் அதை தனக்கு விலைக்கு கொடுக்க முடியுமா என்று கேட்டுள்ளார். அதற்கு அந்தப் பெண்ணின் கணவர் 10 கோடி ரூபாய் கொடுத்தால் அந்த விளக்கை நான் தருவேன் என்று கூறினார். மேலும் அரபு நாடுகளில் இதை வாங்க நூறு கோடிவரை கொடுக்கத் தயாராக உள்ளனர் என்று ஏமாற்று வார்த்தைகளை இஸ்மாயில் கூறினார்.


தான் 10 கோடி ரூபாய் உடனடியாக தர முடியாது, ஆரம்பக் கட்டமாக 2 கோடி ரூபாய் தருகிறேன் என்று மருத் துவர் கூறியுள்ளார். ஆனால், அதற்கு இணங்கவில்லை. பின்னர் 2 கோடி 50 லட்சத்திற்குப் பேசி முடித்து அந்த  விளக்கினை கொடுத்துள்ளார்.


மேலும் அவரை தங்களின் வீட் டிற்கு அழைத்து விளக்கை காட்டி வேண்டி யதைக் கேளுங்கள் என்று கூறினார். சில நிமிடங்களில் அந்த அறை முழுவதுமே புகையாக பரவியது. பின்னர் பூதம் போன்று வேடம் அணிந்த ஒருவர் அங்கு நின்றுகொண்டு இருந்தார். உடனே மருத்துவர் சில பொருட்களைக் கேட்க அனைத்தும் உங்கள் வீட்டில் வைத்துவிட்டேன் என்று அந்த பூதமாக வேடம் போட்டவர் கூறினார். அதன் பிறகு மீண்டும் புகை தோன்ற அந்த பூதம் வேடமிட்டவர் ஓடி ஒளிந்துகொண்டார்,


இதனை அடுத்து மருத்துவர் விளக்கை வாங்கிக்கொண்டு மீண்டும் தனது வீடு திரும்பினார். தனது வீட்டிற்கு பல எதிர்பார்ப்புகளோடு சென்ற அவர் அங்கே ஒன்றுமே இல்லாதது கண்டு பின்னர் பலமுறை விளக்கைப் பார்த்து ‘பூதமே வெளியேவா?‘ என்று கூறியுள்ளார். ஆனால் பூதம் எதுவும் வரவில்லை. இதனை அடுத்துதான் ஏமாற்றப் பட்டதை மிகவும் தாமதாகத் தெரிந்துகொண்டார்.


இதனை அடுத்து பிரம்மபுரி காவல் நிலையத்தின்கீழ் வரும் கைர்நகர் பகுதி யில் தான் ஏமாற்றப்பட்டது குறித்து மருத் துவர் லாய்க்கஹன் புகார் அளித்தார் 


இந்த புகாரை தொடர்ந்து காவல் துறையினர் சமீனாவின் கணவர் இஸ் மாயில் மற்றும் அவரின் நண்பரைக் கைது செய்துள்ளனர்.  மேலும் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சமீனா  என்ற அந்தப் பெண்ணை தேடி வருகின்றனர்."


இதுதான் அந்தச் செய்தி.


மூடநம்பிக்கைக்கும், பேராசைக்கும் ஜாதி, மதம், நாடு என்ற எல்லையெல்லாம் கிடையாது!


எல்லா நாடுகளிலும் இப்படிப்பட்ட ‘படித்த தற்குறிகள்' பரவலாக இருக்கிறார்கள்!


‘‘உங்களுக்கு இத்தனை மில்லியன் டாலர் பரிசு விழுந்துள்ளது; அதை உங்கள் வங்கிக் கணக்கில் (கிரெடிட் செய்ய) சேர்க்கவேண்டும்; எனவே, உங்கள் வங்கிக் கணக்கு, ஆதார் முதலிய தகவல்களை இந்தத் தொலைப்பேசி எண்ணுக்கோ, மின்னஞ்சலுக்கோ அனுப்புங்கள் என்று வந்தவுடன், அதுபற்றி என்னவென்று தெரியாத அந்த மின்னஞ்சலை நம்பி, ‘நமது வங்கிக் கணக்கு எண்ணைத் தரலாமா?' என்ற பொது அறிவுகூட இல்லாது ‘பெருந்தொகை கனவான்கள்' எப்படி தங்களிடம் உள்ள அத்துணை சேமிப்புகளையும் இழக்கிறார்கள் என்று எண்ணும்போது, எப்படித்தான் இவர்க ளைத் திருத்துவதோ தெரியவில்லை!


எத்தனை காலம்தான் ஏமாறுவார்கள் இது போன்ற படித்த தற்குறிப் பேராசை மன்னன்கள்? புரியவில்லை - பகுத்தறிவு வாழ்க்கையின் எல்லாவித கோணங்களிலிருந்தும் சிந்தித்து செயல்படவேண்டும். எளிதில் ஏமாறக்கூடாது! ஏமாற்றுபவருக்கு அது தொழில்; ஏமாறுபவர் நிலை அப்படி இல்லையே! புரிந்துகொள்ளுங்கள்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக