பக்கங்கள்

சனி, 15 ஆகஸ்ட், 2015

மரணம் தோற்றோடிய மாமனிதர் இதோ!


மரணங்கள் - இன்றைய உலகில் மனிதன் - பிராணி எல்லோருக்கும் இறுதி நிலை.
மனித மரணம் மட்டுமே - மரணத்திற்குப் பின்பும் பாராட்டப்படுகிறது - அவர்கள் செய்த நல்லவைகளுக்காக! தூற்றப்படுகிறது - அவர்களால் சமூகத்திற்கும் மனிதர்களுக்கும் ஏற்பட்ட தீய விளைவுகளுக்காக.
மிருகங்களுக்கு இப்படிப்பட்ட வாய்ப்பு உண்டா?
பெரிய உருவம் யானை - செத்தாலும் ஆயிரம் பொன் என்று சொல்லப்பட்டாலும், ஒரு வாழ்க்கைக் குறிப்பேட்டின் வரவு - செலவுகள் அதற்கு உண்டா?
சிங்கம் காட்டு ராஜா என்றாலும் செத்த பிறகு....?
அது மண்ணில் தானே புதையுண்டு மக்கி அழிகிறது! ஆனால் மனிதர்களில் எவர் உண்மையாகவே மனிதம் பொங்கிய மனிதராக வாழ்ந்து காட்டினாரோ, எவர் பிறர் துன்பம் கண்டு வாடி, அதை நாடி, அதற்குப் பரிகாரமும் தேறுதலும் பாதிக்கப் பட்டோருக்குத் தந்தார்களோ, எவர் சுயநலத்தைப் பின்னுக்குத் தள்ளி, பொது நலத்தை முன்னே நிறுத்தி, தொண்டறம் புரிந்தார்களோ அவர்கள்தான் உண்மை யில் மரணத்திற்குப் பின்பும் வாழும் மனிதர்கள்.
மரணம் அவர்களிடம் தோற்றுப் போகிறது! ஆம்;  அவர்கள் என்றும் வாழுபவர்களாகவே அவர் கொள்கை - லட்சியங்கள் - செய்த தொண்டறப் பணிகள் - சாதனைகள் மூலம் காலத்தை வென்ற கலாம்களைப் போல வாழ்கிறார்கள். வாழ்ந்து கொண்டே இருப்பார்கள்!
மாமனிதர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர் களுக்காக இந்தியத் துணைக்கண்டமே அழுதது; ஆறுதல் பெற முடியவில்லையே என்று ஏங்கியது! இராமேசு வரத்தில் கடந்த இரு நாட்களில் முக்கடல் சந்திப் பாகவே அந்தத் தீவை ஆக்கியது!
ஆம் குமரிமுனையைத் தானே முக்கடல் சங்கமம் என்று கூறுவார்கள்; இவர் என்ன தவறாக எழுது கிறாரே என்று கூட சிலர் கருதலாம் அல்ல, அல்ல முக்கடல் சங்கமம் அங்கே இருந்தது!
ஒன்று, மக்கள் கடல்
இரண்டு, கண்ணீர்க் கடல்,
மூன்று, முன்பிருந்தே இருக்கும் கடல்.
உள்ளத்தாற் பொய்யாது ஒழுகினால் அவர் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் இருப்பார் என்பதற்கு  நமக்குத் தெரிந்த எடுத்துக்காட்டு மாமனிதர் - மற்றவர்களை மதித்து, பதவிப் பெருமையில் உயர்ந்ததைவிட, தொண்டறத்தால் மாமலையாய் உயர்ந்த மனிதருக்கு - எல்லா தரப்பு ஜாதி, மதம், இனம், மொழி, வடக்கு - தெற்கு- கிழக்கு - மேற்கு என்றெல்லாம் இல்லாமல் எட்டு திசை அல்ல; புரட்சிக் கவிஞர் கூறியதுபோன்று அய் இரண்டு திசைமுகத்தும் தன் புகழை வைத்தோன் என்றார்.
எட்டுதிசை - எல்லோருக்கும் தெரியும்
மீதி இரண்டு? என்ன - கேட்கிறீர்
மேலே விண்வெளி
கீழே மண் வளம்
எல்லாவற்றையும் அன்பு  - பண்பு எனும் பிடிக்குள் கொண்டு வந்த ஆற்றலாளர்,  அடக்கத்தின் திருஉருவம் நம் கலாம் அய்யா அவர்கள்!
தென் திசை தந்த எங்கள் தசை அவர்
காலத்தை வென்றதைப் போலவே
அவர் தலைமுறை இடைவெளியையும்
(மாணவர்- இளைஞர் - முதியோர் என்ற)
வென்ற மனிதம் பொங்கிய மாமேதை!
கடலுக்கும் மாமலைக்கும் மரணமில்லை
ஊற்றுக்கும் நாற்றுக்கும் முடிவு இல்லை
அறிவுக்கு எப்போதும் எல்லை இல்லை
அடக்கத்திற்கு தனி இலக்கணம் ஏதும் இல்லை
எல்லாம் இதோ அவர் என்று வரலாற்றின் வைர வரிகள்  அவர் மீட்டிய வீணையின் இசையாய் என்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும்!
அவர் ஒரு எடுத்துக்காட்டு; எனவே வரலாற் றினை உருவாக்கிய அறிவியல் - சரித்திரம் - படைத்த விசித்திர மேதை!
மணம் முடிக்காத அவரின் குடும்பம் - இராமேசு வரத்தில் மட்டுமில்லை - அகிலம் முழுவதும் உண்டு. இதைவிடப் பெரும் பெருமை வேறு என்னதான் உண்டு?  இலட்சியங்களையும் இலக்குகளையும் அவர் கனவு - விழித்தெழுந்து வீறு கொண்டு செயல் பட விதைத்தவர்!
நாம் அறுவடை செய்து அவர் பணி தொடருவோம்!

- கி.வீரமணி
வாழ்வியல் சிந்தனைகள்
-விடுதலை,31.7.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக