பக்கங்கள்

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

முதுமையே போ...! போ...! முதிர்ச்சியே வா...! வா...!


முதுமை என்பது வயதின் வளர்ச்சி என்றாலும், நமக்கு உழைக்கச் சக்தி அளிக்கும் உடல் உறுப்புகளின் தளர்ச்சி யல்லவா!
வாழ்க்கை நீளவேண்டுமென்று விரும்புவோரும் சரி,
வாழ்க நீங்கள் பல்லாண்டு என்று வாழ்த்துவோரும் சரி,
ஒரு முக்கிய கருத்தை மறந்து விடக்கூடாது.
ஆயுள் நீளுவது நல்லது; மிகப் பெரும்பாலோர் விரும்புவது, வேண்டு வது, அதற்காகவே!
ஆனால், உடல்நலம் - உடற்கட்டு - செயல்படும் வகையில் அமைவது அதைவிட முக்கியமானது - அடிப் படையானது!
அறிஞர் அண்ணா கூறினார்: தமிழின் முதுபெரும் வரலாறு மட்டும் பெருமைப்படத்தக்கது அல்ல; அதன் சீரிளமை மிகவும் முக்கியம். அதில் படிந்த பழைமை ஒட்டடைகளையும், பாசிக் குப்பைகளையும் நீக்கி, புதிய இளமைப் பொலிவுடன் தமிழ் என்றும் திகழவேண்டும்; பகுத்தறிவு அடிப்படை யில் பட்டதாரி இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழா வில் ஆற்றிய ஆங்கிலப் பேருரையில் குறிப்பிட்டார். அதற்குப் பழைய கிரேக்கத்து மாஜி கடவுள்களின் கதை களையும் ஒப்பிட்டிருந்தார்!
கிரேக்கக் காதல் கடவுளான பெண் கடவுள், தன் காதலனான மற்றொரு கடவுளின் வாழ்வு எப்போதும் அழி யாததாக - மறையாததான வாழ்வாக இருக்க வரம் கேட்டு வாங்கியதாம்!
Immortality  எப்போதும் இருப்பது - சாவு அண்டாத வாழ்க்கையைக் கேட்டுப் பெற்றார், மகிழ்ந்தார்.
ஆனால், காலம் ஏற ஏற, முதுமை அவரைத் தாக்குவது தவிர்க்க முடியாததாகி விட்டது.
இளமையைத் துறந்து, முதுமையை அடைந்து, வாழும் தொல்லை அப்போதுதான் புரிந்தது! முதுமை அண்டா இளமையை அல்லவா நாம் யாசகமாய் கேட்டுப் பெற்றிருக்க வேண்டும் என்று  தவறுக்காக மிகவும் வருந்தினாளாம்!
இப்படி ஒரு கதை கிரேக்கப் புராணங்களில்!
மேலும் மேலும் ஆயுள் நீள வேண்டும் என்று விரும்பும் நாம், பலருக்குப் பயன்படும் இளமைத் துடிப் புடன் அந்த வாழ்க்கை அமைந்தால் தானே அது விரும்பத்தக்கது?
இன்றேல் உறவுக்கும், ஊருக்கும், உலகத்திற்கும் கூடுதல் சுமைதானே!
முதுமை ஒருபுறம் இருந்தாலும், முதிர்ச்சி - வயது, பல்வேறு கசப்பான - இனிப்பான - துவர்ப்பான - பல்சுவை அனுபவங்கள் காரணமாக கற்ற பாடங்களால் நாம் பெறுகிறோம்.
அதனை பாடப் புத்தகமாக்கி, ஒரு நல்லாசிரியனாகி போதிக்கவேண்டும்; அதன்மூலம் கொடுத்தலின் காரண மாகப் பெறும் மகிழ்ச்சியை பெரு ஊதியமாகக் கருதிப் பெருமிதம் கொள்ளவேண்டும் என்று நினைக் கிறோம்!
தமிழ்ப் பெரியார் திரு.வி.க. பார்வை இழந்த நிலையிலும், முதிர்ச்சி தந்த பாடங்களை டாக்டர் மு.வ. என்று அழைக்கப் பெற்ற மு.வரதராசனார் அவர்களிடம் கூறி, அவர் கேட்டு எழுதிட, இரண்டு நூல்கள் கவிதை வடிவத்தில் வந்தன.
முதுமை உளறல்
படுக்கைப் பிதற்றல்
சிறந்த அறவுரைகள் அவை.
மிகுந்த தன்னடக்கத்தினால் திரு.வி.க. அத்தகைய தலைக்கனமில் லாத் தலைப்புகளை தந்து உயர்ந்தார் - சிந்தனை வள்ளலாக!
அவை,  உளறலும் அல்ல; பிதற்றலும் அல்ல!
தந்தை பெரியார் அவர்கள் 95 ஆண்டுவரை - கடுமையாக உழைத்தார் - பயணித்தார் - பல மணிநேரம் சிங்கமென கர்ஜித்தார்!
சிந்தனை, உரையில், எழுத்தில் எவ்வித தடுமாற்றமும் இன்றி - மறதி நோயே தாக்காமல் - கணினிபோல் செய லாற்றி அதிசய சாதனை படைத்தார்!
அவரது ஆரம்ப கால சிந்தனைகள் அறிவியல் சாதனைகளாகிய செய்தி களை நாங்கள் மேலைநாட்டு ஏடுகளி லிருந்து படித்துக் காட்டியபோது - 1973, டிசம்பர் 19 (இறுதிப் பேருரை ஆற்றிடப் போகுமுன்) வேனில் பயணித்த நிலை யில் என்ன சொல்லி வருந்தினார் தெரியுமா?
நாளை எழுதுகிறேன்.

- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி
வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி
முதுமையே போ...! போ...!   முதிர்ச்சியே வா...! வா...!   (2)
19 டிசம்பர் 1973 அன்று தியாகராயர் நகரில் தந்தை பெரியார் அவர்கள் சொற்பொழிவாற்றப் புறப்படுகிறார் தனது வேனில்!
புலவர் கோ.இமயவரம்பனும், நானும் வேனில் உடன் செல்லுகிறோம்;
அந்த வாரத்தில் வெளிவந்த பிரபல இங்கிலீஷ் வார ஏடான தி இல்லஸ்ட் டிரேடட் வீக்லி ஆஃப் இண்டியா (The Illustrated Weekly of India) இதழில், ஆணின் விந்து வங்கி (Semen Bank) என்ற ஒன்றை, ரத்த வங்கி போல - சேமித்து வைக்க ஆய்வாளர்கள் ஆய் வில் வெற்றி கண்டுவிட்டனர்; இதன்படி ஒரு மனிதனுக்குப் பிள்ளை பேறு, அவன் திடீர் விபத்தினாலோ அல்லது எப்படி மறைந்துபோன பின்புகூட அவ் விந்தைச் செலுத்தி, பிள்ளைப் பேறுக்கு வழிவகை செய்யலாம் (அவனது மகள் அல்லது மகன்) என்று இருந்த அறிவி யல் - மருத்துவவியல் முன்னேற்றம் வளர்ச்சிபற்றிப் படித்துக் காட்டினேன்!
அதுபோலவே, mprint என்ற ஆங் கில மாத இதழ் ஒன்றில், வழக்கமான ஆண் - பெண் சேர்க்கையில்லாம லேயே, பரிசோதனைக் குழாய் (Test Tube Baby) குழந்தை முயற்சி வெற்றி பெற்றது என்பதையெல்லாம் அக் கட்டுரையில் (இத்தாலியில் முதல் குழந்தை பிறந்தது) குறிப்பிட்டிருந் ததைக் கேட்டு, மிகவும் பூரிப்புடன் கைதட்டி, மகிழ்ச்சி பொங்க, நம் சிந்தனைகளின் செயலாக்கத்தை நாமே பார்க்கும் அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்தோங்கி விட்டதே! இன்னமும் எங்கெங்கே, என்னவென்னமோ வெல் லாம்கூட நடக்கும்!
இப்போது நான் யோசிக்கிறேன் - நமக்கு வயதாகிவிட்டதே - ஒரு 10, 20 ஆண்டு கம்மியாக இருந்தால், எவ் வளவு அதிகமாக இன்னமும் பிரச்சாரம் செய்து பகுத்தறிவின் வெற்றிபற்றி மக்களிடம் எடுத்துக் கூறலாமே! வீணாக இந்த முதுமை நமக்கு குறுக்கே வந்து விட்டதே என்று உளப்பூர்வமாக வருந்தினார்!
90 வயதில் உடல்நலம் தளர்ந்து, கழிக்கும் சிறுநீரை ஒரு போத்தலில் பிடித்து, (இணைக்கப்பட்ட இரப்பர் குழாய் வழிவந்த நிலையில்) அந்த கண்ணாடி போத்தலை, ஒரு பிளாஸ்டிக் வாளியில் வைத்து, தன் கையிலே தூக்கிக்கொண்டு, இருபுறமும் இரண்டு பேர்களின் தோள்களைப் பிடித்து எழுந்து நிற்கவும் ஆன நிலையிலும்கூட பயணம் செய்து மணிக்கணக்கில் பேசி அறிவுறுத்திடவும்  அய்யா தவறவில் லையே!
முதுமை வாட்டியும், முதிர்ச்சி பீறிட்டுக் கிளம்பிய வண்ணம் இருந்தது!
அப்படி 19.12.1973 அன்று மாலை பயணம் சென்ற வாகனத்தில் குறிப் பிட்டபோது, அய்யா தந்தை பெரியாரின் உணர்வுகள் எப்படி என்பதை எவரும் புரிந்துகொள்ள முடியும்.
ஆனால், இயற்கையின் கோணல் புத்தி அந்த உரைதான் அவரது இறுதிப் பேருரையாக - மரண சாசனமாக ஆகிவிட்டது!
மேலே எழுதிய பல அறிவியல் கண்டுபிடிப்புகளைப்பற்றி சிலாகித்துப் பேசியது அவ்வுரையில் இடம்பெற்றுள் ளதை அய்யாவின் குரலிலேயே எவரும் ஒலிநாடாவில் இன்றும் கேட்கலாம்!
வயது ஏற ஏற, முதிர்ச்சி நமக்கு ஏற்படவே செய்கிறது. இளமைத் துடிப் புடன் எவரும் எடுத்தேன் - கவிழ்த் தேன் என்று  பேசுவது தவிர்க்கப்படக் கூடும்!
முதுமை முத்திரை - தெரிந்தோ தெரியாமலோ முதிர்ச்சி முத்திரையைப் பதிப்பிக்கவே செய்கிறது.
என்னைப் பொறுத்தவரை எனக்கு ஏற்பட்ட அனுபவம்கூட, பல்வேறு சோதனைகள் வந்தபோது முன்பு இருந்த பதற்றம் - துடிதுடிப்பு இப்போது இருப்ப தில்லையே!
இமயமே இடிந்து நம்மீது விழுந்து விடுவதுபோல பிரச்சினைகள் வந்து விழுந்தாலும், அதை உணர்ச்சிவயப் படாமல், அறிவுப்பூர்வமாக, அணுகி சிந்திக்கவேண்டியவற்றைச் சிந்தித்தும், அறிவுரை கேட்கவேண்டியவர்களிடம் கேட்டும், எதையும் வெல்லும் பகுத் தறிவு அணுகுமுறையை முதிர்ச்சி - முதுமையின் தொடர்ச்சியாக வருகிறது என்பதை (பெரியார் தந்த புத்தி கார ணமாக) உணர்ந்து வருவதால், முதுமை கண்டு அஞ்சாதீர்! முதிர்ச்சியை வர வேற்க ஆயத்தமாயிருங்கள்!
எனவே,
முதுமையே போ! போ!
முதிர்ச்சியே வா! வா! என்று கூவிக் கூத்தாடி குதுகலமாகி வாழ்க்கையை அணுகுங்கள்!
(தொடருகிறது)

முதுமையை முற்றாக முறியடிக்க முடியா விட்டாலும்கூட, முதுமைக்கு ஆளாவோர் பலரும் அதனைத் தள்ளி வைக்க, அதன் தாக்கத்தைக் குறைத்து, தலை நிமிர்ந்து வாழ பல வழிகள் உள்ளன!
நரைமுடியை கறுப்புச் சாயம் அல்லது வேறு ஒரு வகை சாயம் அடித்துக் கொள்வது மட்டுமே வயதைக் குறைப்பதற்கு உள்ள ஒரே வழியென்று கருதி ஓய்ந்து விடக் கூடாது.
(மிகப் பெரிய தொழிலாகவும், வருவாய் வரும் லாபகரமான தொழிலாகவும் இது (சாயம் அடிப்பது) இப்போது அழகுக் கலை நிபுணர் களாலும், நிபுணிகளாலும் நாடெங்கும் - கிராமங்களில்கூட பரவியுள்ளது. நாம் அதைக் குறை கூற விரும்பவில்லை; அதுவும் அவர்களை உள ரீதியாக - டை அடிப்பவர்களுக்கு இளமைப் புத்தாக்கத்தைத் தருமேயானால், அது வரவேற்கத்தக்கதேயாகும்) பல்வேறு வழிமுறைகளும், முதுமையை விரட் டிட உண்டு என்பதை வாஷிங்டனில் உள்ள எனது அருமை நண்பர் சபாபதி தில்லை ராஜா அவர்கள் (அடிக்கடி பல்வேறு அரிய தகவல்களை எனக்குப் பரிமாறிடும் அரிய நண்பர் அவர்) ஒரு கட்டுரை அனுப்பியுள்ளார்!
அதில் பல பயனுறு அறிவுரைகள் உள்ளன.
1. வயது ஆன நிலை என்ற மன நிலையைப் பலர் உடனடியாக வர வழைத்து மனமுடைந்து உட்கார்ந்து விடுகிறார்கள். இந்த உளப்பாங்கு (Mindset) மாறிட வேண்டும்.
சிலர் ரிட்டயர் ஆவதற்கு முன்பே அதைக் கண்டு அஞ்சி அஞ்சி, அய்யோ வந்து விட்டதே என்று நெருப்புப் பரவி நம்மை அணைப்பது போன்ற ஒரு பயத்திற்கு ஆளாவதினால், ஒரு சில வாரங்களில் முதுமை அவர்கள்மீது ஏறி அமர்ந்து சவாரி செய்யத் துவங்குகிறது. அதைத் தவிர்க்க வேண்டும். வயது ஏறினால், வாலிபம் குறைந்தாக வேண்டும் என்பது கட்டாய விதி அல்ல. வாலிபம் என்பது மனோ நிலை. செயல் செய்ய நமது முனைப்பின் துடிப்பு. அது பிறரிடம் இல்லை. நம்முடன் தான் உள்ளது என்பதை முதுகுடிமக்கள் ஏனோ பலர் மறந்து விடுகின்றனர்? 2. வயது  என்பது ஆண்டுக் கணக்கைப் பொறுத்த ஒன்று;
(Functional Age) என்ற - செயல் தன்மையை பொறுத்த வயது என்பது மற்றொன்றும்; 25 வயதுக்காரர் 45 வயது முதியவர்போல சலிப்பு சங்கடம், செயலில் ஆர்வமின்மை உடையவர்கள் உண்டு.
95 வயதானவர் தந்தை பெரியார் போல்,
94 வயதிலும் செயல்படும் பேராசிரியர் போல
91 வயதிலும் கடும் உழைப்பின் உருவமான கலைஞரைப் போல் உள்ள வர்களுக்கு வாலிபம் என்பது வயதல் லவே. உழைப்பின் சலிப்பின்மை தானே!
எனவே, ‘Chronological Age’ என்று ஆண்டு கணக்கு வயதைப் பொருட்படுத் தாது உழைக்க, மகிழ்ச்சியுடன் மற்றவர் களோடு பழக, பழகிக் கொள்ளுங்கள்.
பொதுத் தொண்டு, பொது அமைப் புகளில் உங்களை உறுப்பினராக்கிக் கொள்வது பெரிதும் கை கொடுக்குமே!
3. உடல் நலத்தைப் பேணுதல், உங்கள் முதுமையை விரட்டி, இளமையின் புத்தாக்கத்தை நம்மீது பொழியும்.
நமக்கு ஒரு முறை வந்து விட்டால் நம்மை விட்டுப் பிரியாத நோய் சர்க் கரை நோய் என்பது மருத்துவர் கூற்று.
அதற்காக மனம் உடைந்தால் முதுமை தானே வந்து ஆக்கிரமித்துக் கொள்ளும்.
அதனைக் கட்டுக்குள் வைக்க, நவீன மருத்துவ வசதிகள் ஏராளம் வந்து விட்டனவே! கட்டுப்பாடான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி வயதுக்கேற்ற முறையில், புகை பிடிக் காமை, மது அருந்தாமை, மீதூண் தவிர்த்தல் - இவை கை கொடுக்குமே!
தொலைக்காட்சிமுன் இடித்த புளிகளாக அமர்ந்து சதா காலமும் அதில் வருவதைப் பார்த்தால் - கண் பார்வை பாதிப்புக் கூடி, பிறகு - உடல் பருமன் ஊளைச்சதை கூடி கொலஸ்ட் ரால் - கொழுப்பு கூடி இதய நோய் உட்பட வருமே!
இதைத் தவிர்க்கலாமே!
இளமைதானே அந்நிலை; இல்லையா?
(தொடரும்)



(நேற்றும் இன்றும் வந்த கட்டுரைக் கருத்துக்கள் திருமதி கரோலின் ஹான்சன் என்பவரின் கட்டுரை ஒன்றினையொட்டி இணைத்து நமது கருத்துக்கள் எழுதப்படுபவை ஆகும்)
நவீன மருத்துவத்துறையின் கண்டு பிடிப்புகள் நமது ஆயுள் நீடிப்பி னையும், ஆரோக்கியமான நலவாழ்வு வாழ உதவிடும் வகையிலும் பல மருத்துவ மின்னணுவியல் - டிஜிட்டல் யுகத்தில் வெளிவந்து விட்டன!
நமது உடலின் இதயத் துடிப்பு சீராக இல்லாமல், வேறு வகையாக இருப்பின் அதனைக் காட்டிட ஒரு வகையான (Chips)  சிப்ஸ் ஒன்றினை காலில் அணியும் ஷூக்களிலோ, அல்லது நெஞ்சுப் பட்டையாக அணியும் டையின் ஒரு கிளிப் போலவே இணைத்து விட்டால், இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் (Blood Pressure) முதலியவற்றைக் காட்டி, நமது மருத் துவரின் கணினிக்கு இது தகவல் கொடுத்து விடுமாம்! அவரும் உடனே விரைவார்; அல்லது நாம் அவரிடம் விரைவோம்!
இப்போது அதைவிட ஒருபடி மேலே சென்ற ஒரு செய்தி ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் சார்பில் Tim அவர்கள் Apple Watch விரைவில் சந்தைக்கு வருகிறது.
அதுவே ரத்தச் சர்க்கரை, ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு போன்றவை களை மணி பார்த்து கடியாரத்தில் தெரிந்து கொள்வதுபோல் தெரிந்து கொள்ள முடியும்.
இந்த வசதிகள் - மருத்துவத்தில் தொழில் நுட்பம்  Technology புகுந்ததி னால் ஏற்பட்ட மகத்தான மாறுதல்கள் ஆகும்!
இவைகள் நமது ஆயுளை நீட்டு கின்றன!
4. திட்டமிட்ட அடுத்த கட்ட வாழ்க் கைக்கு நிதி, நேரம், மகிழ்ச்சி, குடும்பத்த வருடன் செலவழிக்க முன்பு தவறிய மைக்கு இப்போது ஈடுகட்டல், பொது அமைப்புகளில் உறுப்பினர் பொதுத் தொண்டராக (Public Volunteer) பணி புரியும் திட்டம் போன்ற பல நிலைகளைத் திட்டமிட்டு வாழ்ந்தால், நாம் நிச்சயம் 100 வயதை எளிதில் எட்டலாம்! அது வித்தையோ விரோதமோ அல்ல!
1950இல் உலக வரலாறு நூறாண்டு கண்ட பெரு மக்கள் 2300 (Centenarians)  கொண்டிருந்தது!
இன்று (2015இல்) 40,000 பேர் (நாற்பதாயிரம்) பேர்கள் நூறாண்டு கண்ட பெரு மக்கள் எண்ணிக்கை.
2050 இது ஒரு 10 லட்சத்தைத் தாண்டும் (இன்னும் 35 ஆண்டு கால வளர்ச்சியில் மருத்துவம் எங்கோ போய் நிற்கும் எட்டிப் பிடிக்க முடியாத வளர்ச்சியை நோக்கி!)
எனவே, முதுமை வந்து விட்டதே என்று அலுத்து சலித்துக் கொள்ளாதீர்கள்!
முதிர்ச்சியைப் பெறுகிறோம் என்று துள்ளிக் குதியுங்கள்!
5. சமூக நோய்களிலேயே மிக மோசமான ஒரு நோய்  எது என்றால் இந்த ரிட்டயர்மெண்ட் நோய் தான் என்கிறார் கரோலினா ஹென்ஸ்மென்.
ஓய்வு பெறுவதைக் கண்டு ஏன் அஞ்சி நடுங்க வேண்டும்?
சாவைக் கண்டே பகுத்தறிவு உள்ள வர்கள் அஞ்சுவதில்லை. அத்தகையவர் களில் சிலர்கூட இந்த ஓய்வு காலம் - பதவியிலிருந்து விடுபடும் காலம் கண்டு ஏனோ அஞ்சி அஞ்சிச் சாக வேண்டும்?
திட்டமிட்டால், அது நமது சுதந்தரம் மீண்டும் நமக்கு கிடைத்த நாள் என்று பெருமித உணர்வுடன் கூடிய மகிழ்ச்சிப் பெருக்கத்தைப் பெற்று கூத்தாட வேண்டாமா?
மில்டன் எழுதிய இரண்டு நூல்களின் தலைப்பு
Paradise Lost (இழந்த சொர்க்கம்)
Paradise Regained (மீண்ட சொர்க்கம்) சொர்க்கம் இருக்கிறதா, இல்லையா, அது வேறு பிரச்சினை அது வெறும் நம்பிக்கையைப் பொறுத்தது.
அது ஒரு உதாரணத்திற்கு அதைச் சுட்டுகிறேன்; அது மாதிரி, இழந்த சுதந்திரம், மீண்ட சுதந்திரம் என்று ஓய்வு பெறுவோர் எண்ணி மகிழ வேண்டும்.
- சரியான பார்வையோடு பார்த்தால் இந்த ரிட்டயர்மெண்ட் மனோபாவம், பலரை லாயக்கற்ற, ஒதுக்கப்பட்ட குப்பை, கூளம், அருதப்பழசு போன்று தேவையின்றி - ஆக்கி விடுவதால் தான் இந்நிலை - இதைத் தவிர்க்க மேலே (4)ல் சொன்னபடி, பொது சேவை செய்ய திட்டமிடுங்கள் புது உற்சாகம் பிறக்கும்!
6) நமது முதுமையின் அடை யாளமாக முன்னே சுட்டிக் காட்டிய படி, முடியில் சாயம் அடித்ததோடு நிறுத்திக் கொள்ளாமல், உருவத்தைக் கூட எவ்வளவு பார்க்க சுறுசுறுப்பும், தோற்றப் பொலிவும் கூட்ட முடி யுமோ அவ்வளவு செய்யலாம் (அதற்காக ஒப்பனை நேரத்தையும், உழைப்பையும், பணத்தையும் செல வழிக்க வேண்டும் என்று தவறாக எண்ணி விடாதீர்!
நீண்ட நாளாக தள்ளிப் போட்ட உடல் ரிப்பேர்களை சரி செய்தல், உடல் அறுவை சிகிச்சைகள் அல்லது சில இளமை ததும்பும் திட்டங்களை செய்தல், எல்லாவற்றையும் விட இளையர்களிடம் அதிகம் வாஞ்சை யோடு பழகி, அவர்களது அனுபவங் களையும் கேட்டுச் சுவைத்த, முது மையைக் கீழே தள்ளுதல் எல்லாம் முக்கியம்தான் - இவற்றால் முதுமை போகும்! முதிர்ச்சி தானே வரும்.
(நிறைவு)
-விடுதலை,14.3.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக