பக்கங்கள்

திங்கள், 3 ஆகஸ்ட், 2015

முதுமை தோற்றோடிய முதிர்வுக் காட்சிகள்!


முதுமை என்பது வயதின் வெளிப்பாடு மட்டும்தானா? மன உணர்வும் கூடத்தான்! வியப்பாக இருக்கிறதா? சில முதியவர்கள் இளைஞர்களைப் போல உழைக்கிறார்கள். சுறு சுறுப்புடன் இயங்குகிறார்கள் - அதிகம் நடமாட முடியாத வயது மிகுந்த நிலையிலும்.
பல இளைஞர்கள் - வயதில் குறைந்தவர்கள் - மிகவும் தளர்வு, சோர்வுடன், எப்போதும் ஏதோ ஒன்றைப் பறி கொடுத்தவர்கள் போலவே காட்சியளிப்பார்கள்!
தந்தை பெரியார் அவர்கள் 95 வயதிலும்கூட தமது சுற்றுப் பயணத்தை இறுதிவரை அதாவது 1973 டிசம்பர் 19ஆம் தேதி வரை தொடர்ந்த வண்ணமே உழைத் தார்கள். பொதுக் கூட்டங்களில் சிங்கமென கர்ஜித்தார்கள்.
இவர்களைவிட பத்து, பதினைந்து வயது குறைவானவர்கள் மறதி நோயால் பாதிக் கப்பட்டு, சுருண்டு படுத்து விடுகிறார்கள்.
ஆனால் அய்யா தந்தை பெரியார் கடைசி வரை நினைவு குன்றாமல் தன் சக தோழர்களிடம்கூட வேலை வாங்கினார்; போராட்டக் களத்தில் 95 வயதிலும் நிற்க ஆயத்தமானார்!
நினைவுடன் எதையும் கேட்பார்கள். சிலருக்கு முதுமையில் பழைய சம்பவங்கள் நன்றாக நினைவில் இருக்கும்; ஆனால் நிகழ்காலத்தில் உள்ளவர்கள் - நடைபெறுவது அடிக்கடி மறந்து போகும். சந்தித்தவர் களிடம் பேசும்போதும்கூட ஒரே கேள்வியை விட்டு விட்டு இடைவெளியில் திரும்பவும் கேட்பார்கள். பழைய நிகழ்வுகள் அவர்கள் மனத்திரையில் அழிபடாமல் எப்போதும் இருக்கும்.
இன்னொரு வகையான தீவிர மறதி நோய் alzheimer’s என்பது யாரையுமே அடையாளம் தெரியாமல் குழந்தைப் பருவத்திற்கே திருப்பி விட்டதைப் போல் அவர்கள் செயல் அவர்களுக்கே தெரியாது எல்லாம் பிறர் தான் செய்து உதவ வேண்டும்.
தந்தை பெரியார் தன் குருகுலவாசத்தின் அருமை மாணவர்களாகத் திகழ்ந்து இன்று 93ஆம் வயதில் நடைபோடும் இனமானப் பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் அண்மைக் காலம் வரை மேடைகளில் நின்று கொண்டுதான் சொற்பொழிவாற்றினார்! பிறகுதான் அண்மைக் காலத்தில் உட்கார்ந்து பேசும் பழக்கத்தை தயக்கத்தோடு பின்பற்றி வருகிறார்.
பேசினால் கருத்துவளமும், சொற்கள் சரளமாக வருவதும் நேற்று (2.8.2015) பெரியார் திடலில்கூட நீர்வீழ்ச்சியெனக் கொட்டியது.
மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞர் அவர்கள் நிகழ்ச்சிக்குப் பெரியார் திடலுக்கு  6 மணிக்கு வந்திறங்கினார். நான் எனது  கடிகாரத்தைக் காட்டி அவரது கடமை உணர்வுக்கும், காலந் தவறாமைக்கும் நன்றி தெரிவிப்பதாக உணர்த்தினேன்.
அவரோ மாலை 4 மணி முதலே நான் புறப்படத் தயாராக இருந்தேன் என்று தனது போர் முழக்கப் போராட்ட வெள்ளப் பிரவாக, உரையில் குறிப்பிட்டு கேட்டோரை வியக்க செய்தார்!
கடும் உழைப்பு, இடையறாத உழைப்பு, தேனீக்களை மிஞ்சும் சுறுசுறுப்பு, (Light  travels fast than sound)
என்று கூறுவர் - அதாவது - ஒளி - ஓசையை விட மிக வேகத்தில் பயணம் செய்கிறது என்பது அறிவியல், இதைப் புரிந்துகொள்ள மின்னல் மின்னும்போது அது முதலில் தெரியும்; அடுத்துதான் இடியோசை கேட்கும்.
அதுபோல அவரது வேகத்திற்கு ஈடு கொடுப்பது என்பது சாதாரணமான தல்ல; சண்முகநாதன் போன்ற அவரது  தனிச் செயலாளரால்தான் முடியும் போலும்!
அதனால் 91 வயது தாண்டும் நிலையிலும் கலைஞரின் எழுத்து, பேச்சு, மக்கள் சந்திப்பு, இடையறாத சிந்தனை - எதிரிகளை, ஈடு இணையற்ற தன் நினைவாற்றலுடன் இணைந்த வாதத் திறமை எல்லாவற்றையும் தாண்டி உயர்ந்து நிற்கும் அவரது நகைச்சுவை உணர்வு அவரை சீரிளமைத் திறத்தோடு செயல்பட வைக்கிறது.
முதுமை இவர்களிடம் தோற்றுவிட்டது!
தந்தை பெரியார்
பேராசிரியர்
கலைஞர்
ஆனால், உழைப்பில் அளந்தால் என்றும் இளைஞர்கள் - காரணம் செழுமையான சிந்தனை முழுமையான செயல் திறன் - பெரியார் திடலில் நேற்று  நடைபெற்ற இன மானப் பேராசிரியர் வாழ்வும் - தொண்டும் என்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் அவர்களது உழைப்பின் பெருமையை - கூடிய நாம் பாடமாகப் பெற்றோம்.
இளைஞர்களே - காலத்தை வீணடிக்காதீர்!
என்றும் போதிக்கும் வகுப்பு நேற்று நடந்தது!
-விடுதலை,3.8.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக