பக்கங்கள்

சனி, 8 ஆகஸ்ட், 2015

“எதிலும் அளவறிந்து” செயல்படல் எவ்வாறு?


எதிலும் வாழ்வில் நிதானம் - ஒரு குறிப்பிட்ட நிறை அளவு தேவை. மீறுதல் தொல்லையில் முடியலாம்.
அளவுஅறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும் - குறள் (479)
இதன் பொருள்: தனக்குள்ள பொருளின் அளவைத் தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப வாழாதவனுடைய வாழ்க்கையானது. முதலில் வசதி உள்ளது போலத் தோற்றமளித்துப் பின்னர் அந்தத் தோற்றமும் இல்லாமல், கெட்டுப் போய் விடும்.
இந்தக் குறள் எந்த தலைப்பில் உள்ளது தெரியுமா? “வலியறிதல்” என்பதில் உள்ளது.
எனவே இதற்கு - அதாவது அளவு அறிந்து வாழ்தல் என்பதற்கு ஒரு குறுகிய அர்த்தம் கூறி செல்வம் - பணம் - சொத்து - செலவு என்பதற்குள் ளேயே நமது உரையாசிரியர்கள் அடக்கி விடலாமா?
பேசும்போதுகூட சற்று ஆர்வம் மிகுதியாகப் (Over-enthusiastically பேசிச் சிலவற்றில் மாட்டிக் கொள்ளுவதுண்டு நாம் - பல நேரங்களில்.
‘மீதூண்’விரும்பி - அளவுடன் நிறுத்திக் கொள் ளாமல் நன்றாக உள்ளது என்று மேலும் மேலும் வயிற்றில் திணித்து, செரிமானக் கோளாறு காரண மாகப் பின்னர் அவதியுறுகிறோம் - அதுவும் தானே அளவறிந்து வாழாத நிலைதானே! - இல்லையா?
உடற்பயிற்சி நமது உடலுக்குத் தேவை என்று கூறும் மருத்துவர்களேகூட, (வயதுக்கு ஏற்பவும்கூட) 20 மணித்துளிகள் முதல் 30 மணித்துளிகள் நடைப் பயிற்சி சிறந்தது. வாரத்திற்கு குறைந்தபட்சம் 5 நாள்கள் நடந்தால் போதும். ஒவ்வொரு நாளும்கூட நடக்கலாம் என்கின்றனர், சரிதான்.
அதற்காக நாமே ஒரு மணி, ஒன்றரை மணி ஏதோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஈடுபட ஆயத்தமாகும்  வீரன் போலவோ, வீராங்கனை போலவோ கடும் பயிற்சி செய்தால் அது அளவுக்கு மீறியதல்லவா?
பலரும் கலந்து பேசும் மேடைகளில்கூட சிலர் தாங்கள் அறிந்த அனைத்தையும் கொட்டித் தீர்க்க இதுவே அரியதொரு வாய்ப்பு என்று கருதி, “பிடித்த ஒலி பெருக்கியை விட”மறுத்துப் பேசிக் கொண்டே இருப்பதும் ‘அளவறிந்து வாழாத - வாழத் தெரியாத நிலைதான்! மறவாதீர்!!
“கெடுப்பது” லஞ்ச லாவண்யம் கையூட்டு இவைகளை ஆங்கிலத்தில் இரண்டு சொற்கள் மூலம் குறிப்பிடுகின்றனர்:
‘Corruption, Bribery’ என்பவை அவை. ஒருவரது பலவீனம் அறிந்து, அதனைப் பயன்படுத்தி அவரைக் “கெடுத்துத்” தாங்கள் லாபம் அடைய முற்படுவதற்கு அதிகாரம்(Power) மிகவும் பயன்படும் ஓர்
கருவி - அதற்குரிய வாய்ப்பு லஞ்சம் என்பது.
இதைப் பற்றிக் குறிப்பிடுகையில்கூட அளவுடன் உள்ள அதிகாரம் ஓரளவு “கெடுக்கிறது.”
அளவுக்கு மீறிய முழு அதிகாரம் (Absolute Power) முழுமையாகக் “கெடுக்கிறது.”
‘Power Corrupts’
‘Absolute power Corrpts Absolutely’
என்று சொல்வதும்,
ஆட்சி அதிகாரம் என்பதை அடைகின்றவர் ‘அளவறிந்து’ வரம்புக்குள் செயல்படாமல் மீறி, போதை தலைக்கேறியவனுக்கும் எதுவும் தெரியாமல் ஏதோ எல்லையில்லாத ராஜ்யம் அவனுடையது என்று கருதி, கெடுவதுபோல அதிகாரப் போதையும் ஆட்சிகளுக்கும் அதனை நடத்துவோருக்கும்கூட அளவு மீறியதாகும் போதுதானே ஆபத்து முளைக்கின்றது!
‘அளவறிந்து’ அதிகாரத்தைப் பயன்படுத்தினால் வீழ்ச்சி விரைவில் ஏற்படாது. அளவுமீறி நடந்ததின் விளைவு - அளவறிந்து ஆட்சி செலுத்தாதவர் ஆட் சியும்கூட, நாளை இல்லாதுபோகும் என்பதுதானே!
‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்’ என்ற எளிய அனுபவ மொழி எவ்வளவு ஆழமானது, பொருள் பொதிந்தது பார்த்தீர்களா?
எனவே, எல்லாவற்றிலும்கூட, நாம் எவ்வளவு அறிவு, ஆற்றல், திறமை, செல்வம், பதவி, அதிகாரம், பெற்றவர்கள் ஆனாலும், அளவறிந்து - எல்லை மீறாமல் அடக்கத்துடன் நடப்பதன் மூலமே நம் நிலை, தலை தாழா நிலையாக என்றைக்கும் ஓர் நிலையில் இருக்கும் என்பதை ‘வலி அறிதல்’ தலைப்பில் உணர்த்தும் குறளை வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுக் கும் பொருத்திப் பாடம் பெறுவோம்; பயன் பெற உழைப்போம்! பாடம் கற்போம்!!
-விடுதலை,8.8.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக