பக்கங்கள்

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

எளிமை + சிக்கனம் + தொண்டறம் + சகிப்புத்தன்மை = அன்னை மணியம்மையார்

இன்று அன்னை ஈ.வெ.ரா. மணியம் மையார் அவர்களின் 37ஆவது நினைவு நாள்.
ஒரு பெண் - இந்தியாவின் சமூகப் புரட்சி இயக்கம் ஒன்றுக்குத் தலைமை யேற்று, அதனைத் திறம்பட நடத்தி வரலாறு படைத்தவர் என்ற பெருமைக் கும் பெருந் திறமைக்கும் எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தவர் நம் அன்னை யார்!
தமது இளமையை, வளமையைப் பெருக்கவோ, வாழ்வை ஆடம்பரம் மூலம் வளர்க்கவோ எண்ணாது, தூய தொண்டறத்தால் முத்திரை பதித்தவர். பாடமானவர்!
வசவுகளையெல்லாம், இசையாகச் சுவைத்து இடுக்கண் மட்டுமல்ல இழிவுப் பேச்சுகளும், இச்சகங்களும் கலந்து தம் மீது வீசப்பட்ட போதெல் லாம், அதை தொண்டுக்குத் தர வேண்டிய கடும் விலை என்று சகித்து அவற்றை தமது இலட்சிய வயலுக் குரிய உரமாக ஆக்கி உயர்ந்தவர்.
ஆடம்பரம் வெறுத்த அய்யாவின் அசல் அச்சு அவர்! எளிமை என்பது இப்படித்தான் இருக்கும் என்று எவரும் புரிந்து கொள்ளும் வகையில் வாழ்ந்து காட்டிய வாழ்வியலின் தனிப்பெரும் இலக்கியம் அவர்!
இன்னா செய்தாரையும் இனிதே வரவேற்று அவர்களை நாணிடச் செய்த நல்லதோர் மானம் பாராத நற்றொண்டர் அவர்!
வசதி - குடும்ப வசதி, அய்யா பெரியார் செய்த பாதுகாப்பு ஏற்பாடு என்ற வகையில் கொடுத்த தனது சொத்து - எல்லாவற்றையும் - தந்தை பெரியாரைப் போலவே, பொது அறக் கட்டளையாக்கி, பல்வேறு தொழில் நுட்பக் கல்லூரி மருந்தியல் கல்லூரி, பல்கலைக்  கழகங்கள் போன்றவை தழைத்தோங்க வழி செய்த தனக்கென வாழாப் பிறர்க்குரியரானவர்!
எல்லாவற்றிற்கும் மேலாக தாயன்பை அதிகம் அறிந்திராத எனக்கு என்னை வளர்த்தவருக்குப் பின் இயக்கத்தில் கொள்கைத் தொட்டிலில் தாலாட்டி வளர்த்த என்னைப் பெறாது பெற்ற என் அன்னை அவர்!
எளிமை பற்றி மற்றவரும் பேசுவோம்; ஆனால் வாழும் போது, உலகியலுக்கு அடிமையாகி விடும் சராசரித் தன்மை நம்முள் எப்படியோ புகுந்து விடும்.
ஆனால், அன்னை மணியம்மையார் உடைகூட ஒரு சிறு பைக்குள் - துவைத் துள்ள மாற்றுச் சேலை, ரவிக்கை, புன்ன கையும் பொறுப்புமே அவர் அணிந்த நகைகளாகும்!
நாட்டிலே தலைவராகத் தெரிந்தாலும் வீட்டிலோ அவரே  சமைத்து எவரையும் விருந்தோம்பல் மூலம் வியக்க வைத்த பணியாளராகவே ஆக்கிக் கொண்டவர்.
1957இல் அய்யா பெரியாருக்கு ஆறு மாதம் சிறை (தண்டனை மூன்று ஆறு மாதங்கள் - அனுபவத்தில் ஏக காலம் என்பதால் 6 மாத சிறை) அப்போது அய்யாவின் ஆணைப்படி நான் அன் னையாருடன் சுற்றுப் பயணம் செய்தேன் - அவர்தம் பாசத்தைப் பரிசாகப் பெற்றேன்.
அப்போது திருச்சி பெரியார் மாளிகை நீண்ட காலம் வெள்ளை அடிக்காமலே இருந்ததை நான் உரையாடியபோது சுட்டியதனால் மாளிகையை வெள்ளை அடித்து அய்யா வரும்போது மிகவும் தூய்மைத் தோற்றத்தோடு எழிலுடன் காட்சியளிக்கச் செய்யலாமே என்று கூறினேன்.
அன்னையாரும் அதனை ஏற்று, சுண்ணாம்பு வாங்கி வந்து வெள்ளை அடித்தார் - பளிச்செனத் தெரிந்தது - பெரியார் மாளிகை (திருச்சி)
அன்னையார் உற்சாக மிகுதியால் செலவுக்கு அனுமதியைப் பெறவும் வழி செய்யவும் - சென்னை பொது மருத்துவ மனையில் (சிறை) இருந்த தந்தை பெரியாருக்கு இப்படி மாளிகைக்கு வெள்ளை அடித்துள்ளோம் இப்போது மாளிகை மிகவும் அழகாகத் தோற்றமளிக் கிறது என்று எழுதியிருந்தார்கள் - குறைந்த செலவு செய்தமைக்கு அனுமதி யையும் கோரி இருந்தார்.
அய்யா அவர்கள் அதற்கு ஒரு கடிதம் பதிலாக அன்னையாருக்கு எழுதி அனுப்பினார்கள்.
அதில் அழகாக மாளிகை இருக்கிறது என்று எழுதியிருந்தீர் மகிழ்ச்சிதான். ஆனால் ஒன்று அழகு என்றால் பணச் செலவு என்று பொருள் எனவே பார்த்துச் செய்யவும் என்று எழுதியிருந்தார்!
நீண்ட காலம் வெள்ளையடிக்கா மலிருந்தமைக்காக சுண்ணாம்பு வாங்கிஅடித்ததற்கே (இப்போது இருப்பதுபோல சுனோசெம் வண்ண வண்ணக் கலவைகள் அன்று) என்ற நிலையில்கூட அய்யாவின் சிந்தனை அப்படி.
அய்யா என்ன சொல்வாரோ என்ற பயம் கலந்த வருத்தம் என்றாலும் ஒன்றும் தவறாக அய்யா சொல்லவில்லை.
உணவில்கூட தந்தை பெரியா ருக்கு ஒரு கறிதான். ஏகப்பட்ட அயிட்டங்கள் - வீட்டில் இருக்காது! மிளகு கலந்த ஆட்டிறைச்சி பக்குவத் துடன் வேக வைத்ததை  உண்ண அன்னையார் அனுமதி கொடுப்பார் - அதை மகிழ்ச்சியோடு நன்றாகவே  உண்பார் அய்யா.
இப்படி சிக்கனம் - எளிமையின் இலக்கணமாகத் திகழ்ந்த இவர்கள் மக்களின் அறிவுத்தாகம், கல்வித் தாகம் தீர ஊருணியாக (பொது நீர் நிலையாக) இந்த பேரறிவாளர்களின் திருவான செல்வம் அமைந்தது!
யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற உறவுகளுக்கு விட்டுச் சென்ற கொள்கைகள்  அசையாச் சொத்து - தொண்டர்கள் அசையும் சொத்து! அவர்தம் நினைவைப் போற்ற எளிமை, சிக்கனம், தொண்டறம் மேற்கொள்ளுவதே நம் மரியாதை.
-விடுதலை,16.3.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக