பக்கங்கள்

திங்கள், 24 ஆகஸ்ட், 2015

சிங்கப்பூர் நாட்டின் தமிழ்ப் புதையல்கள்



சிங்கப்பூர் நாட்டின் தமிழ் மொழி உணர்வும், தமிழ் இலக்கியம் பண்பாடு காக்க, சிங்கைத் தமிழ்ப் பெரு மக்களிடையே பூத்துக் குலுங்கும், புலமை மிக்கோர் ஏராளம். அவர்களது தமிழ் மொழி உணர்வு கெட்டுப் போகவுமில்லை. பட்டுப் போன பழங்கதையாகவும் ஆனதில்லை.
தமிழ் ஆசிரியர்கள் பலரும், தமிழ் எழுத்தாளர்கள், படைப்பாளிகள், இலக்கியத் தேனீக்கள் ஏராளம், ஏராளம்!
சிங்கப்பூர் சிந்தனையாளரும், செந்தமிழ்ப் புலமையாளருமான திருவாளர் சிங்கப்பூர் சித்தார்த்தன் அவர்களது பல அரிய சிந்தனைக் கட்டுரைகளைக் கொண்ட சிறந்த தொகுப்பினை,
மெய்ப்பொருள் காண்போம்
மேனிலை அடைவோம்,
என்ற தலைப்பில் 41 அரிய கருத்துக் கருவூலக் கட்டுரைகளைக் கொண்ட   பன்னூல் பொதிந்த ஒரு நூல் இது! என்ற அறிமுகத் துணைத் தலைப் பையும் அடக்கி வெளியிட்டுள்ளனர் சென்னை நர்மதா பதிப்பகத்தவர்கள். (சிறந்த நூல்களை வெளியிடும் ஒரு நல்ல புத்தக வெளியீட்டாளர்கள் இவர்கள்)
பல்வேறு தலைப்புகளில் பன்முகப் பரிமாணங்களில் பயனுறு கட்டுரைகள் உள்ள நவில்தொறும் நூல் நயம் கொண்ட நூல் இது!
மனிதநேயம் என்கிற தலைப்பில் அருமையான கருத்துக்களை தனது எழுதுகோல் மூலம் சொடுக்கி சாட்டையாகப் பயன்படுத்தியுள்ளார் சிங்கப்பூர் சித்தார்த்தன்.
இனச் சண்டை, பணச்சண்டை, சாதிச் சண்டை, சமயச் சண்டை, இளைத்தவன் - வலுத்தவன், ஏழை - பணக்காரன் என்ற வேறுபாடு - இப்படி எங்கு பார்த்தாலும் போரும், பூசலும், போட்டியும், பொறா மையும், பகைமையும், பழி உணர்ச்சியும், தலைதூக்கி நிற்பதையல்லவா காண முடிகிறது? இவற்றிற்கெல்லாம் காரணம் என்ன? அன்பு அருகி, அருள் குறைந்து, மனிதநேயம் மங்கி விட்டதால் தான் இந்நிலை என்பதைச் சிந்தித்துப் பார்ப்ப வர்கள் உணர முடியும்.
அன்பின் வழியது உயிர்நிலை என்ற வள்ளுவரின் அமுத மொழியை, ஆருயிர்க்கெல்லாம் அன்பு செயல் வேண்டும் என்ற வள்ளலார் வாய் மொழியை ஏட்டில் படித்ததோடு நின்று விட்டோம்; மறந்து விட்டோம்.
இந்த நிலை இனியும் நீடிக்கலாமா? நீடிக்க விடலாமா? கூடாது... கூடாது... அறவே கூடாது... என்று மனித மனம் படைத்தோர் கூறுவது கேட்கிறது!
நமது சிந்தனை செயல்வடிவம் பெறு வதற்குப் புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் வழி காட்டுகிறார்!
என்குலம் என்றுனைத் தன்னிடம் ஒட்டிய மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சி கொள்! அறிவை விரிவு செய்! அகண்டமாக்கு!
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!
அணைந்து கொள்! உன்னைச் சங்கமமாக்கு!
மானிட சமுத்திரம் நானென்று கூவு!
இப்படி பற்பலக் கருத்து முத்துக்கள்.
இப்படி எத்தனையோ அருமை யான அறிவுரைகள் அற உரைகள் - வாழ்க்கையில் ஒளியேற்றும் விளக் கின் வெளிச்சங்களாக விரவிக் கிடக்கின்றன.
தமிழைப் பாழ்படுத்தும் தகாத செயல் என்ற தலைப்பில் நான்கு கட்டுரைகளில், தமிழைப் பாழ் படுத்துவோரை அம்பலப்படுத்தி மீண்டும் தனது எழுதுகோலை வாளாகச் சுழற்றி, வையகத்தினை விழிக்கச் செய்கிறார்.
அந்நூலைப் படியுங்கள் - பயன் பெறுங்கள். மற்றொரு அரிய புதையலாக சில நாள்களுக்கு முன் சிங்கப்பூர் செம்மொழி ஆசிரியர், இலக்கியவாதி நண்பர் இலியாஸ் மூலம் தந்து அனுப்பினார் அறிவிலும், ஆற்றலிலும், ஆட்சித் தலைமைப் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றும் இன்றும் கல்வித் தொண்டைச் செய்வதில் சலிக்காது ஈடுபட்டுள்ள சிங்கப்பூரின் பெருமை மிகுந்த மேனாள் குடிஅரசுத் தலைவர் மேதகு எஸ்.ஆர். நாதன் அவர்களது தன் வரலாறு - தமிழ்ப் பதிப்பு உழைப்பின் உயர்வு என்ற தலைப்பில் 678 பக்கங்களைக் கொண்ட மிக அருமை யான அனுபவக் களஞ்சியமாகத் திகழும் சுவைத் தேனாக உள்ள சிறந்த நூல் ஆகும்.
அதுபற்றி நாளை எழு துகிறேன்.

- கி.வீரமணி

தமிழர்களில் ஆற்றலும் அறிவுக் கூர்மையும், அனுபவங்களின் கட லாகவும் இருந்த இருபெரும் தமிழர்கள் ஒரே நேரத்தில் இரு நாடுகளின் குடிஅரசுத் தலைவர்களாக இருந்து, திறம்பட தமது ஆளுமைகளை சிறப் பாகச் செய்து வரலாறு படைத்தார்கள்.
இந்தியத் திருநாட்டின் குடிஅரசுத் தலைவர் மதிப்பிற்குரிய ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள்; அதுபோல சிங்கப்பூர் குடிஅரசின் தலைவராக - அதிபராக இருந்த மதிப்பிற்குரிய திரு. எஸ்.ஆர். நாதன் அவர்கள் ஆவார்கள்.
1924 ஜூலை 3ஆம் தேதி சிங்கப்பூரில் பிறந்தவர்; இவரது இள வயதில் குடும்பத்துடன் மலேசியா நாட்டுப் பகுதியான ஜோகூர் மாநிலத்தின் மூவாரில் வசித்த குடும்பத்தவர்களாக இருந்தவர்கள் -
அவரது தன் வரலாறு ஆங்கி லத்தில் ‘An Unexpected Journey path of Presidency’  என்ற தலைப்பிட்டு  சில ஆண்டுகளுக்கு முன்பே வெளி வந்தது - அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு.
அப்போதே அதைப் படித்து மகிழ்ந்தேன் இப்போது அதே சுய சரிதை ‘(Autobiography) ‘ உழைப்பின் உயர்வு என்ற தலைப்பில் திருவாளர் ஆர். பழனியப்பன் அவர்களால் தமிழாக்கப்பட்டு, 678 பக்கங்களில் மிக அருமையான கண் - கருத்து - கவர் பதிப்பாக, சிங்கப்பூரின் பாரம்பரியம் மிக்க தமிழ் நாளேடான (ஆசிரியர் தமிழவேள் கோ. சாரங்கபாணி அவர்களால் துவக்கப்பட்டு, சுமார் 80 ஆண்டுகளைக் கடந்து வரும்) தமிழ்முரசு வெளியீட்டகம் சார்பாக சில வாரங்களுக்கு முன் வெளியி டப்பட்டுள்ளது.
என்னிடம் அன்பு பூண்ட மேனாள் அதிபர்  பெருந்தகையாளர் (தற் போதைய பேராசிரியர்) அவர்கள், நண்பர் இலியாஸ் மூலமாக எனக்குக் கையொப்பமிட்டு அந்நூலை அனுப்பி வைத்தார்! அவரது அன்பிற்கும், பண் பிற்கும் எப்படித்தான் நன்றி சொல் வதோ!  - தெரியவில்லை!
பெரியார் - மணியம்மைப் பல் கலைக் கழகத்தின் பணிகளை கேட்டு, படித்து, பாராட்டியவர் சிங்கப்பூர் மேனாள் அதிபர் அவர்கள்.
எந்த நூலையும் எப்படியாவது நேரத்தை ஒதுக்கிக் கொண்டு படித்து விடும் ஒரு பழக்கம் என்பது எனது அன்றாடக் கடமைகளில் ஒன்று. அதன்படி படித்தேன் - நூலோ படி - தேனாகச் சுவைத்தது - அரிய பல்வேறு அரசியல் நிகழ்வுகள் இளமைக்கால நினைவுகளை எழுதும்போதுகூட எதையும் மறைத்தெழுதாத, உண்மை யின் வெளிச்சங்களாகவே உள்ள செய்திகள் எழுதியவரின் அறிவு நாணயம் எவ்வளவு உயர்ந்தது என் பதைக் காட்டுவதாக உள்ளது!
இதோ எடுத்துக்காட்டாக ஒரு சோறு பதம்:
..இளம் பிராயத்தில் எனக்கு நினைவுள்ள நிகழ்ச்சிகளில் ஒன்று - சிங்கப்பூரில் நான் பள்ளிக்கு அனுப்பப் பட்டது
நான் ஓர் இந்துவாக இருந்தாலும் நாங்கள் அனைவருமே பள்ளியில் உள்ள சிறு தேவாலயத்திற்குச் செல் வோம் (அது ஒரு மெதடிஸ்ட் பள்ளி. நாம் யாராக இருந்தாலும் கடவுள் ஒன்றுதான். ஆகவே, அங்கு போய்வா என்றார் என்தாய்) வாய்ப்பாட்டு வகுப்புகளும் இருந்தன, அதனை நடத்தியது எங்கள் இசை ஆசிரியர் குமாரி ரஸ்ஸல். சிறந்த பாடகர்கள் முதல் பிரிவில் இருந்தனர். நான் இரண்டாம் பிரிவில் இருந்தேன் என்று சொல்லத் தேவையில்லை. என் நண்பர் களுடன் நான் ‘God Save the King’ (ஆண்டவன் அரசரைக் காப்பாற்றட்டும்) என்பதற்குப் பதிலாக, ‘’God Shave the King’’ (ஆண்டவன் அரசருக்குச் சவரம் செய்யட்டும்) என்று அப்போதைய தேசிய கீதத்தை மாற்றிப் பாடினேன். அது ஒரு வகையில் நியாயம்தானே - அய்ந்தாம் ஜார்ஜ் மன்னருக்கு மெல்லிய தாடி இருந்தது. ஒரு நாள் குமாரி ரஸ்ஸல் எங்களைக் கையும் களவுமாகப் பிடித்துவிட்டார். எப்படி பாடினீங்க? என்று கோபமாக கேட்டார். “God Shave the King” (ஆண்டவன் அரசருக்கு சவரம் செய்யட்டும்) என்று நான் ஒன்றும் அறியாதவன் போலச் சொன்னேன். இல்லை, இல்லை, அப்படி இல்லை என அவர் அலறினார். அது, save, அதாவது, S-A-V-E!  என்றார். நாங்கள் வேடிக்கையாக சிரித்து மகிழ்ந்தோம்.
இளவயதில் வறுமையை அனுபவித் தவர் இவரும், இவரது குடும்பத்தினரும் - அதை மறைக்காமல் விவரிக்கிறார்!
சிங்கப்பூர் நாடு, மலேசியா பற்றிய பல்வேறு சுவையான அரசியல் நிகழ்வு களின் பதிவுகளின் ஆவணமாகவும் இந்த தன் வரலாறு அமைந்துள்ளது.
நவீன சிங்கப்பூர் நாட்டைச் செதுக்கிப் பாதுகாத்து வளர்ச்சி குன்றா, வளமுள்ள சிறிய நாடாக ஆக்கியுள்ள மேதகு லீக்வான்யூ அவர்கள் இவரை இதனை இதனால் இவன் முடிப்பன் என்றாய்ந்து அதனை அவன் கண்விடல் என்ற குற ளுக்கு ஏற்ப,  அதிபர் பொறுப்பில் அமர, PAP  என்ற  கட்சியின் சார்பில் தேர்வு செய்யப்பட்டு உயர்ந்தார்!
அதைத்தான் இது நான் முற்றிலும் எதிர்பாராத பயணம் - எனது வாழ்வில் எனக் குறிப்பிடுகிறார்!
அந்த மிகப் பெரிய பதவிக்குச் செல்லுமுன் இவர் (திரு S.R.   நாதன்) பல ஆட்சி பதவிகளில் இருந்து சிறப்பான சாதனை புரிந்து, அனுபவக் கொள் கலனாக இருந்துள்ளார்!
முன்பு அவர் வகித்த பதவிகளிலும் ஒன்றில் ஏற்பட்ட சுவையான ஒரு தக வலைக் கூறுகிறார்: கேட்போம். பெரிய பொறுப்பில் உள்ள அதிகாரிகளுக்கு மிக மதி நுட்பம் இன்றியமையாதது என்பதை விளக்குகிறது அச்சம்பவம்.
1970ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பிரதமர் லீ குவான் யூ மேற்கொண்ட விரிவான உலக சுற்றுப்பயணத்தில் நான் அவருடன் சென்றேன்.
அவற்றைத் தொடர்ந்து அமெரிக்காவுக்குச் சென்றோம். (மேலும் முக்கிய அனுபவ பாடம் இதோ)
மூத்த அதிகாரிகளால் முடியாததை
நாங்கள் பயணம் மேற்கொண்ட முதல் நாடு சிலோன், அது இப்போது ஸ்ரீலங்கா என அழைக்கப்படுகிறது. (இந்தி யாவைப் போல) சிலோன், அணிசாரா நாடுகள் இயக்கத்தில் ஒரு செல்வாக்கு மிக்க நாடாக இருந்தது. அந்தச் சமயத்தில் அதற்கு ஒளிமயமான பொருளாதார எதிர்காலம் இருப்பதாகத் தோன்றியது. 1970ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 மாலை கத்துநாயகே விமானநிலையத்தில் நாங்கள் வந்து சேர்ந்த போது, அந்நாட்டு பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயகெ எங்களை வரவேற்க, விழாக்கோல கண்டி மேளதாளம் ஒலிக்க, சிலோன் அரச விமானப்படைப் பிரிவினர் கவுரவ அணிவகுப்பு நடத்தினர். எங்களின் வாகனங்கள் சென்ற வழியில் எல்லாம் ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையாக நின்றனர். ஒரு மணிநேரப் பயணத்தின் பின்னர், பிரதமர் பண்டாரநாயகெயின் அதிகாரப்பூர்வ இல்லமான டெம்பிள் ட்ரீஸ் இல்லத்தை அடைந்தோம். அது காலனித்துவ ஆட்சியின் கீழ் கட்டப்பட்ட பழைய கட்டடம். மரங்கள், செடி கொடிகள் பூத்துக் குலுங்கும் தாவரங்கள் நிறைந்து பரந்த இடத்தில் அது அமைந் திருந்தது.
அரச தந்திர நடைமுறையில் உள்ள மரபுச் சீர்முறை பழக்கங்கள் சார்ந்த பிரச்சினையைத் தீர்ப்பதில் பரிசாரகர்கள் கூட எவ்வளவு முக்கியமானவர்களாக இருக்க முடியும் என்பதை அடுத்த நாள் ஏற்பட்ட அனுபவம் எனக்குத் கற்றுத் தந்தது.
மாலை 4 மணிக்கு பேரணி ஒன்றில் பிரதமர் லீ கலந்து கொள்ள திருமதி பண்டாரநாயகெ ஏற்பாடு செய்திருந்தார். வெயில் கொளுத்திய காலை நேர நிகழ்ச்சிகளுக்கு பின் பிரதமர் ஓய்வு எடுக்க விரும்பினார். எனவே, மதிய உணவிற்குப் பிறகு என்னிடம் மாலை 4 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பேரணியில் தாம் கலந்து கொள்ள முடியாமைக்கு தம்மை பொறுத்தருளு மாறு கேட்டு  கொள்ளும்படி என்னிடம் சொன்னார். நான் அந்நாட்டுத் தலைமை மரபுச் சீர்முறை அதிகாரியை அணுகி னேன். தமது பிரதமர் நேரடியாக அதற்கு ஏற்பாடு செய்திருப்பதால் தான் அதில் தலையிட முடியாது என அவர் உறுதி யுடன் மறுத்துவிட்டார். அதற்குள் மணி 3 ஆகி விட்டது. அதன் பிறகு நான் சிலோன் வெளியுறவு அமைச்சின் நிரந் தரச் செயலாளரை அணுகினேன். பயணத்திற்கு முன்னரே நிகழ்ச்சி நிரல் சிங்கப்பூருடன் கலந்தாலோசிக்கப்பட்டு ஒப்புக் கொள்ளப்பட்டது என்று கூறி அவரும் மறுத்துவிட்டார். அவர் தமது நிலையிலிருந்து அசைந்து கொடுக்க மறுத்து விட்டார். திருமதி. பண்டார நாயகெ வருகையளிக்கும் நேரம் நெருங் கிக் கொண்டிருந்தது. பிரதமர் லீ இன்னும் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். என்ன செய்வது என்ற சிந்தனையோடு நான் வாயிலில் முன்னும் பின்னுமாக நடந்து கொண்டிருந்தேன்.
மூத்த அதிகாரிகளால் முடியாதது கீழ்மட்ட ஊழியரால் முடியும்
டெம்பிள் ட்ரீசுக்குப் பொறுப்பான தலைமைப் பரிசாரகர் நான் எதைப் பற்றிக் கவலைப்படுகிறேன் என்று கேட்டார். கவலைப்பட வேண்டாம், நான் அவருடன் பேசுகிறேன், அவர் புரிந்து கொள்வார் என்று அவர் சொன்னார் அவர் மரியாதைக்காக அவ்வாறு சொல்வதாக நினைத்தேன்.
கடிகார முள் ஓடிக் கொண்டி ருந்தது. திருமதி பண்டார நாயகெ குறிப்பிட்ட நேரத்தில் வந்து சேர்ந் தார். தலைமைப் பரிசாரகர் அவரை வாசலில் வரவேற்பதையும் அவரிடம் சிங்கள மொழியில் பேசுவதையும் என்னால் பார்க்க முடிந்தது. உள்ளே வந்ததும், நமது பிரதமர் பேரணியில் கலந்து கொள்ள இயலாமை குறித்த செய்தியைத் தாம் பெற்றதாகவும் அப்பேரணியில் தாம் மட்டும் தோன் றுவதில் மகிழ்ச்சியடைவதாகவும் நிலைமையை விளக்கிக் கூறுவ தாகவும் திருமதி பண்டார நாயகெ என்னிடம் சொன்னார். திரு லீக்குத் தொல்லை கொடுக்க வேண்டாம் என என்னை அவர் கேட்டுக் கொண்டார். எல்லாம் நல்ல விதமாக முடிந்தது. தலைமைப் பரிசாரகர் நிலைமையைக் கையாண்ட விதம் என் மனதில் பதிந்தது. திருமதி பண்டாரநாயக அங்கிருந்து சென்றதும் அவர் அதை எப்படிச் செய்து முடித்தார் என்று கேட்டேன். பிரதமரிடம் எது முக்கியம் என்று - அதாவது பேரணியா அல்லது அரசு விருந்தாளியா என்று தாம் கேட்டதாக அவர் சொன்னார். அக்கேள்வியை எதிர்கொண்ட சிலோன் பிரதமர், பேரணியில் கலந்து கொள்வதை நமது பிரதமர் தவிர்க்கலாம் என ஒப்புக் கொண்டார்.  இந்தச் சம்பவம் சிறு விஷயமாக இருந்தாலும், கீழ்மட்ட ஊழியர்கள் கூடச் சில சமயங்களில் தங்களின் முக்கிய அதிகாரிகளுடன் அணுக்க மான உறவு வைத்திருப்பார்கள் என்பதையும் அத்தகைய தனிப்பட்ட தொடர்புகள் இல்லாத மூத்த அதிகாரிகளால் செய்ய முடியாததை அவர்களால் செய்ய முடியும் என் பதை தான் உணர்ந்து பாராட்ட அது எனக்கு உதவியது.
இவரது உடன் தோன்றிய மதி நுட்பம் எப்படி இவருக்குக் கை கொடுத்துள்ளது பார்த்தீர்களா?
இதுபோல சுவைபடச் சொல்லும் நிகழ்வுகள் பற்பல.
இந்த புத்தகம்  தமிழ் இலக்கிய வரலாற்றில் சிங்கப்பூர் தமிழ் எழுத் தாளர், படைப்பாளிகளின் செறிந்த கருத்துவளம் தமிழாக்கம் போலவே படிப்பவருக்கு அது மொழிபெயர்ப்பு என்று தெரியாத அளவுக்கு சுவை குன்றா ஆற்றொழுக்கு நடை உள்ளது இந்த அரிய  களஞ்சியத்தில்!
தமிழில் அளித்த தமிழ் முரசு குழுமத் தலைவர் திரு சந்திரதாசும் பொறுப்பாசிரியர் இராஜேந்திரனும் தமிழ் கூறும் நல்லுலகத்தின் நன்றிக் குரியர். சிங்கப்பூர் பிரபல பல்கலைக் கழகங் களின் பேராசிரியராக இன்றும் உழைப் பின் உருவமாய் உள்ள மேனாள் அதிபர் திரு. எஸ்.ஆர். நாதன் அவரது வாழ்விணையரான திருமதி ஊர்மி நாதன் அவர்களும் பாராட்டத்தக்க நமது வாழ்த்துகளுக்கும் உரியவர் ஆவர்!

- கி.வீரமணி - வாழ்வியல் சிந்தனைகள்
-விடுதலை,2,3.10.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக