பக்கங்கள்

சனி, 15 ஆகஸ்ட், 2015

சீனாவின் சிக்கன நடவடிக்கை: சுயமரியாதை சுகவாழ்வு


8.8.2015 அன்றைய தமிழ்நாளேடு ஒன்றில் சீனாவில் நடப்பதுபற்றி வந்துள்ள செய்தி இதோ: 
70 வயதுக்கு உட்பட்டவர்கள் பிறந்தநாள் விருந்தளிக்கக் கூடாது: சீன மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு
70 வயதுக்கு உட்பட்டவர்கள் பிறந்தநாள் விருந்தளிக்கக் கூடாது என்று சீனாவின் டோங்ஜியாங் மாவட்ட நிர்வாகம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
70 வயதுக்கு மேற்பட்டவர்கள் கூட 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் தங்கள் பிறந்த நாள் கொண் டாடட்டத்தில் ஈடுபட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சீனாவில் பிறந்தநாளின்போது உறவினர்களுக்கும், நண்பர்களுக் கும் விருந்தளிக்க வேண்டும் என்ப தும், அதற்குப் பதிலாக அவர்கள் பரிசுப் பொருட்களை அளிக்க வேண்டும் என்பதும் கட்டாயம் என்பது போன்ற கலாச்சாரம் பரவி யுள்ளது. இது மக்களுக்கு தேவையற்ற செலவுகளை ஏற்படுத்துகிறது. பணக்காரர் களுக்கு இது பெரிய பிரச்சினை இல்லை என்றாலும், நடுத்தர மக்கள் பலர் இதற்காக கடன் வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப் படுகின்றனர்.
மேலும் பிறந்த நாள் கொண்டாட்டம் என்பதை பலர் தங்கள் செல்வாக்கை காட்டும் வகையில் ஆடம்பர நிகழ்ச்சி யாக நடத்தி வருகின்றனர். மது விருந்து, அதிரடி இசை நிகழ்ச்சி போன்றவற்றால் நிம்மதி கெட்டு சமூகத்தில் பிரச்சினை ஏற்படுகிறது. எனவே பிறந்தநாள் விருந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவுக்கு எதிர்ப்பும், வரவேற்பும் ஒரு சேர கிடைத்துள்ளது. பிறந்த நாளின் போது ஒருவரை வாழ்த்தி பரிசளிப்பதும், அதற்கு பதிலாக அவர் விருந்தளிப்பதும் பல ஆண்டு காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எனவே இதற்கு தடை விதிப்பது தவறானது என்று எதிர்ப்பாளர்கள் கூறியுள்ளனர்.
‘தி இந்து’ - 8.8.2015 பக்கம் 13
மக்களில் பலரும் பிறந்த நாள் விழாக்கள் என்ற பெயரில் ஆடம்பர விருந்துகள், அலங்காரங்கள் - கேளிக்கைக் கூத்துக் கொண்டாட்டம் நடத்துவது இப்படிக் கண்காணிக்கப்படுவது. சமூக வளர்ச்சிக்கும், பொது ஒழுக்கச் சிதைவைத் தடுப்பதற்கும் பெரிதும் பயன்படுவதாகும்!
தந்தை பெரியார் திருமணங்களில் நடைபெறும் வீண் ஆடம்பரச் செலவு  (Lavish Expenditure)  தடுக்கப்படல் வேண்டும் என்பதை  1929-லேயே தீர்மானமாக முதலாவது செங்கற்பட்டு சுயமரியாதை மாகாண மாநாட்டில் போட்டார்!
“பல நாள் திருமண ஆடம்பரங் களைத் தவிர்த்து, ஒரு நாள் திருமணமாக நடைபெறுதல் வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றினார்!
இப்போதைய தலைமுறையினருக்கு இது வேடிக்கையாகக் கூட இருக்கும்.
முன்பெல்லாம் ஏழைகள்கூட 3 நாள் திருமணம் - “இஷ்டமித்ர பந்துக்களுடன்’’ முன்னதாகவே வந்து ‘டேரா போடுதல்’ முறை இருந்தது. இப்போது மாறி விட்டது; ஒரு நாள் என்று சுருங்கி விட்டது என்றாலும், தேவையற்ற வீண் ‘டம்பாச்சாரித்’தனம் - பல நாள் செய்த திருமணச் செலவு ஒரே நாளில் பல கோடிகள் - செலவு உட்பட ‘கூச்ச நாச்சமின்றி’ நடைபெறும் ‘அருவருப்பு’ அன்றாட நிகழ்வுகளாகின்றன!
நெருக்கடி காலத்தில் 50 பேர் களுக்கு மேல் விருந்து அளிக்கக் கூடாது என்று தாக்கீது - ஆணை போடப்பட்டு, கண்காணிக்கப்பட்டது.
திருமணச் செலவேகூட ஒருவரின் 10 நாள் வருமான அளவுக்கு மேல் போகக் கூடாது என்று தந்தை பெரியார் கூறினார்.
பிறந்த நாள் மற்றும் பல்வகை ஆடம்பர விருந்துகள் மிகவும் கட்டுப்படுத்தப்படுதல் அவசியம், அவசரமுங்கூட!
சீனாவின் சிக்கன நடவடிக் கையை சீரான சுயமரியாதை சுக வாழ்வின் புதிய வடிவமேயாகும்.
-விடுதலை,10.8.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக