பக்கங்கள்

திங்கள், 10 அக்டோபர், 2016

ஆப்பிரிக்க பாட்டி சொன்ன கதை!


நமது வேர்களின் பெருமை,பாரம் பரியம், பண்பாடு, மொழி,வாழ்க்கை முறை இவற்றை நமது இளந்தலை முறையினர் அறிந்து கொள்வது மிகவும் இன்றியமையாதது. வேர்கள் பழுதுபடாதிருந்து விழுதுகளுக்கு அவற்றை விளக்கிட வேண்டும்.

அதிலும் வீழ்ந்த இனம் எழுந்து எழுச்சியுடன் நடைபெற, இத்தகைய வரலாற்று அறிவு மிகவும் தேவை - இந்த நோக்கங்களை உள்ளடக்கி  அலெக்ஸ் ஹேலி  என்பவரால் ஒரு புதினமாக எழுதப்பட்ட நூல் ‘ஏழு தலைமுறை!’ என்று தமிழாக்கம் செய்து வெளியிடப்பட்டுள்ள ஆங் கில மூலாக்கமான ‘ரூட்ஸ்’ (Roots) என்ற பிரபல நூலாகும்!
தமிழில் அந்நூல் நான்காவது பதிப்பாக வெளிவந்துள்ளது.

கறுப்பினத்தின் பெருமைமிகுந்த பண்பாடும், நாகரிகமும் - மூத்த நாகரிகம் - அவர்களை ‘நீக்ரோ’ என்று கொச்சைப்படுத்தி, அடிமைகளாக்கிய கொடுமைபற்றிய வரலாற்று நிகழ்வு களை மய்யப்படுத்திய இந்நூல், மிகப்பெரிய மனப்புரட்சியை  விதைத்த ஒரு நூலாகும்!

அதில் ஒரு பாட்டி சொன்ன கதை வருகிறது; அந்த கறுப்பின முஸ்லீம் பாட்டி, அங்குள்ள குழந்தைகளை ‘கதை கேளுங்க பசங்களா!’ என்று அழைத்து சுவையான கதைகளைக் கூறுவாராம். இதோ ஒரு கதை தமிழ் நூலில் உள்ளபடியே தருகிறோம்:

‘நியோ போட்டோ’ பாட்டி கதை சொல்கிறேன் என்றதுமே வாண்டுக் கூட்டம் பூராவும் அவளைச் சுற்றிலும் உட்கார்ந்துகொண்டது.
‘‘ஒரே ஒரு ஊராம்! அந்த ஊரிலே ஒரு சுட்டிப்பயல், அவனுக்கும் உங்கள் வயதே!’’

‘‘ஒரு நாள் அவன் ஆற்றங்கரைக்கு நடந்துபோனான். அங்கே ஒரு வலை கட்டப்பட்டிருந்தது. அதிலே ஒரு முதலை சிக்கிக் கொண்டிருந்தது. சிறுவனைக் கண்டதும் அது, ‘என் னைக் காப்பாற்று!’ என்று பரிதாபமாக வேண்டிக் கொண்டது.’’

‘‘ஊகூம் நான் மாட்டேன், நீ என்னைக் கொன்று விழுங்கிடுவே’’  என்று பயத்துடன் சொன்னான் அவன்.

‘‘என் கண்ணில்லையா நீ, உனக் கோர் அபாயமும் இல்லை. என் கிட்டே வா’’ என்றது முதலை.

‘‘அதன் பேச்சை நம்பி பையன் முதலையின் அருகே சென்றான். அது உடனே தன் பெரிய வாயைப் பிளந்து ரம்பம் போன்ற பற்களால் அவனைப் பற்றிக் கொண்டது.’’

‘‘பார்த்தாயா, நீ உன் பாழும் புத்தியை விடவில்லை’’ என்று சிறுவன் கத்தினான்.

‘‘தம்பி! இந்த உலகத்தின் நியதியே இப்படித்தான்’’ என்று கூறியது முதலை.

‘‘நான் உன் பேச்சை நம்பமாட்டேன் போ!’’ என்றான் பையன். அம்முதலை என்ன சொல்லிற்று தெரியுமா? அந்த வழியே போய்க் கொண்டிருக்கும் மூன்று சாட்சிகள் சொல்வதைக் கேட்கும்வரை சிறுவனுக்கு எவ்விதத் தீங்கும் இழைப்பதில்லை என்று அது உறுதி  சொல்லியது.’’

‘‘அப்போது அந்த நதிக்கரை வழியே ஒரு கிழட்டுக் கழுதை மெல்ல நடந்து வந்தது. சிறுவன் அதைத் தடுத்து நிறுத்தி, முதலை சொன்ன வார்த்தை உண்மைதானா எனக் கேட்டான்.’’

‘‘தம்பி! நான் இப்போது கிழமாகி விட்டேன். அதனால் எனது எசமான் நீ எங்கேயாவது போய் புலிக்கிரையாகி செத்துத் தொலை! என்று அடித்து விரட்டிவிட்டான்’’ என, தன் கதை யைக் கூறியது.

‘‘பார்த்தாயா!’’ என்று முதலை ஒத்து ஊதியது.

பிறகு ஒரு கிழட்டுக் குதிரை அந்த வழியே வந்தது. அதனிடமும் சிறுவன் முதலையின் வார்த்தையைக் கூறினான். அதுவும் கழுதை சொன் னதையே சொன்னது. இப்போதும் முதலை பையனைப் பார்த்துக் கண் சிமிட்டியது.

குதிரை போய்விட்ட பின்னர் அவ்வழியே நன்கு வளர்ந்து சதை பிடித்த முயலொன்று தாவிக் குதித்துக் கொண்டே வந்து சேர்ந்தது. அதற்கும் சிறுவன் முதலையின் கூற்றைத் தெரிவித்தான்.

‘‘முதலை மாமா! முதலை மாமா! முதலிலிருந்து நடந்ததை என் கண்ணால் பார்க்காமல் என்னால் ஒன்றும் சொல்ல முடியாது’’ என்றது முயல். நடந்ததைச் சொல்ல முதலை வேண்டா வெறுப்பாகவே வாய் திறந்தது. அவ்வளவுதான்! பையன் அதன் வாயிலிருந்து, தன் காலை விடுவித்துக் கொண்டு கரைக்கு ஓட்டம் பிடித்தான்.

‘‘தம்பி முதலைக் கறி என்றால் உனக்கு விருப்பம்தானா? எனக் கேட்டது முயல்.

‘‘ஓ’’ என்றான் பையன்.

‘‘உன் அப்பாவுக்கும், அம்மாவுக் கும்கூட விருப்பம்தானா?’’ என்று மேலும் கேட்டது.’’

‘‘பின் தாமதம் எதற்கு? சமைக்க முதலை தயாராயிருக்கிறது?’’ எனக் கூறியது முயல்.

சிறுவன் உடனே கிராமத்திற்குள் ஓடிச் சென்று தன்னுடன் பெரியவர் களை அழைத்து வந்தான். அவர் களுடன் கூடவே அவர்களின் வேட்டை நாயும் வந்தது. அது முய லைக் கண்டவுடனே அதன்மேல் பாய்ந்து அதைப் பிடித்துக் கொன்று விட்டது.

‘‘ஆகவே, இந்த உலகத்தின் நியதியே இவ்வளவுதான்! முதலை சொன்னது உண்மைதான்!’’ என்று பாட்டி கதையை முடித்தாள்.
கதை முடிந்ததும் பாட்டிக்கு ‘ஜே’ போட்டார்கள்.

இதில் கூறப்படும் ‘‘இந்த உலகத் தின் நியதியே இவ்வளவுதான்’’ என்பதில்தான் எத்தனை உள்ளடக்கப் பாடங்கள் புதைந்துள்ளன பார்த் தீர்களா?

ஆதிக்கம் செலுத்துவோர், ஏமாந்தவர்களை தமக்கு இரையாக்கிக் கொள்ளுவர் என்பதை பிஞ்சு உள்ளங்களுக்குள் புகுத்தினால்தான் அவர்கள் தங்கள் வாழ்வில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பார்கள் - இருக்கவேண்டும் என்பதைத்தானே அக்குட்டிக்கதை நமக்கெல்லாம் போதிக்கிறது - இல்லையா?
-வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி
-விடுதலை,20.7.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக