பக்கங்கள்

வியாழன், 28 நவம்பர், 2019

அமெரிக்கா காங்கிரஸ் நூலகத்தில்.... (3)&(4)

மேலும் சில புத்தகங்கள் ஈர்த்தன; என்றாலும், புத்தகச் சுமை, ஏற்கெனவே அதிகம்; மேலும் ‘மகிழ்ச்சியுடன்' பாரத்தைச் சுமக்க விரும்ப வில்லை.

தாமஸ் பெயின் (1737-1809) அவர் களின் ‘‘The Age of Reason'' என்ற நூல் மிகப்பெரிய புரட்சியை உருவாக்கிய ஒரு சிந்தனை ஏவுகணையாகும்!

அதுபோலவே அவரது மற்றொரு நூல் பிலடெல்பியா நகரில் வெளியிடப்பட்டது (14.2.1776). அது 'Common Sense' என்ற நூலாகும்!

அந்த நூலை நமது பொருளாளர் தோழர் வீ.குமரேசன் அவர்கள் அமெரிக்காவிலிருந்து திரும்புகையில் எனக்கு வாங்கி வந்து தந்தார்!

தாமஸ் பெயின் ஒரு சிந்தனைப் புரட்சியாளர். பொது அறிவு - பட்டறிவு என்பது எப்படியெல்லாம் பயன்படுத்தப்பட்டால் தக்க விளைவு ஏற்பட்டு, சமூகம் மாறுதலை அடையக்கூடும் என்பதை விளக்குவதாக இருக்கும் நூல்! (இன்னும் முழுமையாகப் படித்து முடிக்கவில்லை).

அந்நூலை அந்த அமெரிக்க நூலகத்தின் விற்பனையகத்தில் வாங்குவதற்குப் பதிலாக ஆபிரகாம் லிங்கனின் வரலாற்றுப் புகழ் வாய்ந்த பிரபலமான உரையான ‘கெட்டீஸ் பர்க் பேருரை' ('The Gettysburg Address') புத்தகம் என் உள்ளத்தைப் பறித்து, ஆக்கிரமித்துக் கொண்டது! அதனால் அதை நானே வாங்கினேன்.

இந்த பிரபலமான - புகழ் வாய்ந்த - கெட்டீஸ் பர்க் பேருரை என்பது ஆபிரகாம் லிங்கன் (ஜனாதிபதி) அவர்களால் நவம்பர் 19, 1863 இல் நிகழ்த்தப் பெற்ற ஓர் உரையாகும்.

அமெரிக்காவில் அடிமை முறை ஒழிப்புக்கு எதிராக ஏற்பட்ட போரில் அதிபர் ஆபிரகாம் லிங்கனின் கட்டளையை ஏற்று, உயிர்த் தியாகம் செய்த இராணுவ வீரர்களின் நினைவுக் கல்லறைத் தோட்டம் (பென்சில்வேனியா) போர்க்களம் அருகில் அமைந்த தேசிய இராணுவ வீரர்கள் நினைவகம் அருகேதான் கெட்டீஸ்பர்க் சண்டை யும் நடைபெற்றதாம். ஜூலை 1 ஆம் தேதிமுதல் 3 ஆம் தேதிவரை 1863 இல் நடைபெற்று  வெற்றியை ஈட்டியவர்களுக்கு வீரவணக்கம் செலுத்து வதற்காக அக்கல்லறைத் தோட்ட நினைவகம் அமைக்கப்பட்டது.

டேவிட்வில்ஸ் என்பவரின் ஆணைப்படி

17 ஏக்கரா பூமி - போர்க்களம் நினைவகமாக கல்லறைத் தோட்டம் அமைப்பதற்கு 32 வயதான வழக்குரைஞர் ஆண்ட்ரூ கர்ட்டின் என்பவர் - பென்சில்வேனியா கவர்னராக நியமிக்கப்பட்டவர் அந்த இடத்தைத் தேர்வு செய்து ஒப்புக்கொண்டார். அழுகிய இராணுவ வீரர்களின் உடற்பாகங்களை எல்லாம் அப்பகுதி மக்கள் தேடிக் கண்டுபிடித்து - திரட்டி - இந்த நினைவுக் கல்லறைத் தோட்டத்தை உருவாக்கினர்!

இதனைத் திறப்பதற்காக ஆரம்பத் தில் நிர்ணயித்த தேதி செப்டம்பர் 23 (1863), நமது மாநாட்டுக்கு அடுத்த நாள் - இப்புத்தகம் அன்றுதான் வாங்கினேன். வேடிக்கை யான எதிர்பாராத நிகழ்வு இது!

எட்வர்டு எவரெட் என்ற பிரபல பேச்சாளரை - நினைவேந்தல் உரை நிகழ்த்த ஏற்பாடு செய்திருந்தனர். (இவர் முன்னாள் அமெரிக்க வெளி யுறவு அமைச்சர் ஆவார்) மசாசுசெட்ஸ் மாநிலத்தின் கவர்னரின் பிரதிநிதியாவார். பிரபல ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் தலைமைப் பொறுப்பாளி - மிகப்பெரிய நிர்வாகி; அதனால் தான் அவரை அந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்வுக்கு சிறப்புப் பேச்சாள ராக அழைத்து ஏற்பாடு செய்திருந்தனர்.

அன்றுதான் அந்த இராணுவ உயிர்த் தியாகி களின் கல்லறைத் தோட்டத்தை நாட்டுக்கு அர்ப் பணிப்பு  செய்வதை அந்த விழாவில் நடத்திட ஏற்பாடு செய்திருந்தனர்.

ஆனால், இத்தேதி தள்ளி வைக்கப்பட்டது! நவம்பர் 19 ஆம் தேதிக்குத் தள்ளி வைக்க அப்பிரபலப் பேச்சாளராகிய அவர் கேட்டுக் கொண்டார். காரணம், முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று உரையாக அது அமையவேண்டும் என்பதனால், கால அவகாசம் - அதனைத் தயாரிக்கத் தேவை என்றார் எட்வர்ட் எவரெட்.

ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் அவர்களையும் அந்த அர்ப்பணிப்பு நிகழ்வு - வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த ஒன்றாகையால், அவரையும் அழைக்கலாம் என்று முடிவு செய்து, அவரை விட்டே அர்ப்பணிப்பை நிகழ்த்துவது பொருத்தம் என்று கருதி அழைத்தார்கள், வந்தார். அதற்குப் பின் நடந்த நிகழ்வு சுவாரஸ்யம் வாய்ந்தது!

(தொடரும்)

விடுதலை நாளேடு 21 11 19

அமெரிக்கா காங்கிரஸ் நூலகத்தில்.... (4)

அமெரிக்க குடியரசுத் தலை வரான ஆபிரகாம் லிங்கன் அவர்கள், ஏற்கெனவே அர்ப் பணிப்புப் பணி செய்ய குழுவினர் விடுத்த அழைப்பை ஏற்று கெட்டீஸ் பர்க் பகுதிக்கு ரயிலில் புறப்பட்டு இரவே வந்து தங்கினார். அடுத்த நாள் அவர் வெறும் ரிப்பனைக் கத்தரிக்கும் பணியைத்தான், குடியரசுத் தலைவர், அதிபர் என்ற முறை யில் செய்யவிருக்கிறார்!

நவம்பர் 18 ஆம் தேதி இரவு வந்தவர், டேவிட் வில்ஸ் அவர் களது விருந்தினராக அவரது இல்லத்திலேயே தங்கினார்;  அங்கு வந்து தங்கியவர் ஏற்கெ னவே அவர் வாஷிங்டன் தலைநகரிலிருந்து புறப்பட்டு வந்து தங்கிய நிலையில், அடுத்த நாள் ஆற்றப் போகும் உரையை வாஷிங்டனில் தொடங்கியவர் இங்கு வந்து தொடர்ந்து எழுதி முடித்தார்.

ரயிலில் வரும்போது, ஒரு அஞ்சல் உறைமீது அந்த உரையை அவர் எழுதி வந்துள்ளார் என்று நம்பப்பட்டு கூறப்பட்ட கருத்து உண்மை அன்று.

சுமாராக 15,000 பேர்கள் கூடுவர் அங்கே என்று எதிர்பார்க்கப்பட்டது.

எட்வர்ட் எவரட்டின் உரைதானே சிறப்பு உரை (அதற்காகத்தான் அவர் சிறப்புப் பேச்சாள ராக அழைக்கப்பட்டார்) - மொத்தம் 13,607 வார்த் தைகளைக் கொண்டது; இரண்டு மணிநேர உரை அது!

ஆபிரகாம் லிங்கன் உரையோ வெறும் 272 வார்த்தைகளை மாத்திரமே கொண்ட வரலாற் றுப் புகழ் பெற்ற லிங்கனின் கெட்டீஸ் பர்க் உரை யாக அமைந்துவிட்டது!

வரலாற்றை விவரித்தார் அந்த 272 வார்த்தை களில் ஆபிரகாம் லிங்கன்! 1787 ஆம் ஆண்டைய அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தின்படி "பல மாநிலங்களிலும் ஏற்படவேண்டிய ஒற்றுமை இறுக வேண்டும்; சுதந்திரமும், சமத்துவமும் பூத்துக் குலுங்க வேண்டும்" என்பதை அவ்வுரை யில் அழகாகக் குறிப்பிட்டார்!

அவ்வுரையை பல்வேறு விதமான வார்த்தை களைப் போட்டு பலவிதமாக அக்காலத்திய செய்தித்தாள்கள் வெளியிட்ட போதிலும், அவ் வுரையின் சரியான வடிவமும், அமைப்பும், சொற்கள் ஜொலிக்கும் வண்ணமும்  வரைவாக லிங்கன் நினைவிடத்தில்,‘Bilits Version' என்ற தலைப்பில் அமைக்கப்பட்டுள்ளது!

பல்வேறு வகைகள் - கதைகள் கூறப்பட்டாலும், ரத்தின சுருக்கமாக உரை அமைந்தாலும்கூட, அது வரலாற்றில் நீடித்து நிலைத்த உரையாக இன்றும் ஒளிருகிறது!

இவ்வுரையாற்றப்பட்ட பின், ஆபிரகாம் லிங்கன் இதைத் திருத்தி, தனது சிந்தனைகளை முறையாகவே அமைப்பதில் கவனம் செலுத் தினார்! அவருடைய கையொப்பத்துடன் கூடிய அந்த உரைதான் அதிகாரப்பூர்வ  வார்த்தைகளைக் கொண்ட பிரபல 'கெட்டீஸ் பர்க்' உரையாகும்.

இதுதான் அந்த 272 வார்த்தைகளைக் கொண்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரை; கிடைத்தற்கரிய பொக்கிஷம் அது!

அந்த ஆங்கில உரையை அப்படியே தந்து தமிழாக்கத்தையும் தருகிறேன். அது எப்படிப்பட்ட சாசன உரையாக உள்ளது என்பதை உணரும் போது நம் மெய் சிலிர்க்கிறது!

‘‘Four score and seven years ago our fathers brought forth on this continent, a new nation, conceived in Liberty, and dedicated to the proposition that all men are created equal.
Now we are engaged in a great civil war, testing whether that nation, or any nation so conceived and so dedicated, can long endure. We are met on a great battlefield of that war. We have come to dedicate a portion of that field, as a final resting place for those who here gave their lives that, that nation might live. It is altogether fitting and proper that we should do this. But, in a larger sense, we cannot dedicate - we cannot consecrate - we cannot hallow- this ground. The brave men, living and dead, who struggled here, have consecrated it, far above our poor power to add or detract. The world will little note, nor long remember what we say here, but it can never forget what they did here. It is for us the living, rather, to be dedicated here to the unfinished work which they who fought here have thus far so nobly advanced. It is rather for us to be here dedicated to the great task remaining before us - that from these honored dead we take increased devotion to that cause for which they gave the last full measure of devotion - that we here highly resolve that these dead shall not have died in vain - that this nation, under God, shall have a new birth of freedom -and that government of the people, by the people, for the people, shall not perish from the earth.

இதன் தமிழாக்கம்:

"நம் நாடு எண்பத்தேழு ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர்கள் இந்தக் கண்டத்தில் உருவாக் கித் தந்த ஒரு புதிய நாடு. சுதந்திரமே நம் நாட்டின் அடிப்படைக் கொள்கை. சமத்துவமே இதன் மகத்துவம். இவற்றை நிலை நாட்டும் பணிக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட நாடு இது.

இப்படி உருவாகி தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட ஒரு நாடு நிலைத்து நிற்குமா என்று சோதித்துப் பார்ப்பது போல், இன்று நம் நாட்டில் உள்நாட்டுப் போர் மூண்டு நம்மைப் போராட வைத்துள்ளது. அந்தப் போர்க்களத்தில் தான் இன்று நம் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இந்த நாடு நீடூழி வாழ தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ள நம் போராளிகளின் உடல்கள் அமைதிகாண இந்தப் போர்க் களத்தின் ஒரு பகுதியை அர்ப்பணிக்க வந்துள்ளோம் நாம். இதை நாம் செய்தே தீர வேண்டும்.

எனினும் வேறொரு விதத்தில் பார்த்தால், இந்த பூமியை அர்ப்பணிப்பதோ புனிதப்படுத் துவதோ இயலாத பணி என்றே தோன்றுகிறது. காரணம்? இங்கே போராடி உயிர் பிழைத்தவர் களும், உயிர் துறந்தவர்களும் இந்த மண்ணை தங்கள் ரத்தத்தால் ஏற்கெனவே புனிதப்படுத்தி விட்டார்களே! இந்தப் புனிதத் தன்மையை கூட்டவோ குறைக்கவோ இனி எவரால் முடியும்?

இந்த உலகம் நாம் கூறுவதை பொருட் படுத்தாமல் போகலாம். பொருட்படுத்தினாலும் வெகு விரைவில் மறக்கவும் செய்யலாம். ஆனால் நம் வீரர்கள் இங்கே புரிந்த சாதனையை மட்டும் இந்த உலகம் ஒரு நாளும் மறுக்கவும் முடியாது. மறக்கவும் முடியாது.

இவ்வளவு தூரம் கடந்து வந்து, இயன்ற வரை போராடி மறைந்த வீரர்கள் விட்டுச் சென்றுள்ள பணிகளை நிறைவேற்ற, உயிர் வாழ்ந்து கொண்டி ருக்கும் நாம் நம்மையே அர்ப்பணித்துக்  கொள்ள வேண்டிய தருணம் இது. நாம் எதிர் கொண்டுள்ள மிகப் பெரிய கடமைக்கே நம்மை அர்ப்பணித்துக் கொள்வோம்.

மறைந்த பெரும் வீரர்களின் தியாகமே நம் நாட்டுப் பற்றை மேலும் அதிகரிக்கச் செய்யட்டும். எந்த மகத்தான நோக்கத்திற்காக அவர்களுடைய தேசப் பற்று இறுதி வரை அவர்களைப் போராட வைத்ததோ, அதே நோக்கத்திற்காக நாம் நம்மையே அர்ப்பணித்துக் கொள்வோம்.

நம் வீரர்களின் உயிர்த் தியாகம் வீணாகப் போய்விடக் கூடாது என்று நாம் உறுதி கொள் வோம். கடவுளின் அருளால் நம் நாட்டில் சுதந்திரம் மீண்டும் புதிதாய்ப் பிறக்கட்டும்!

மக்களுக்காக, மக்களால் இயங்கும் மக்களாட்சி இந்த பூமியிலிருந்து என்றுமே அழிந்து விடாதபடி பாதுகாக்க நாம் அனைவரும் உறுதி கொள்வோம் வாருங்கள்!"

இந்த கெட்டீஸ் பர்க் உரை 5 விதமான வரைவு களாக பதிவாகியுள்ளது.

1. நிக்கோலே வரைவு

2. ஹே வரைவு

3. பாங்க்கிராட் காப்பி

4. எவரெட் காப்பி

மற்றும் 3 வித வரைவுகள். இதில் 5-ஆவது இறுதிவரைவுதான் ‘ஙிவீறீவீts க்ஷிமீக்ஷீsவீஷீஸீ' என்பது. இதில் மட்டும்தான் ஆபிரகாம் லிங்கனின் கையொப்பம் உள்ளது.

வாசகர்களே, இதைப் படித்தவுடன் எப்போதும் சுருக்கிப் பேசுங்கள் என்று என்னை சதா வற் புறுத்தும் எனது வாழ்விணையரின் அறிவுரையே நினைவுக்கு வந்தது!

வெகுகாலம் எடுத்த 1,300 வார்த்தைகளைக் கொண்ட சிறப்புரை எவரெட்டுடையது எடுபட வில்லை.

வெறும் 274 வார்த்தைகளைக் கொண்டு முதலில் ரயிலிலும், இரவு தங்குமிடத்திலும் ஆபிரகாம் லிங்கன் தயாரித்த அந்த உரை ஜனநாயகத்திற்கே விளக்கம் அளித்து காலத்தால் அழியாத கருவூலமாக உள்ளது!

(இனிமேல் சுருக்கிப் பேசவே முடிவு எடுத் தாலும்,  எல்லோரும் லிங்கனாக ஆக முடியாது என்றாலும்கூட).

உரையின் நீளம் முக்கியமல்ல நண்பர்களே! முத்தாய்ப்பும், உள்ளத்தில் பதியும் உணர்வுப் பெருக்கை உருவாக்கி, நிலைக்க வைக்கும் அழி யாத நினைவுச் சின்னமாக, அமெரிக்க வீரர் களுக்கு வீரவணக்க உரையாகிவிட்டது அவ்வுரை.

இந்த நூலில் மட்டுமே இத்தனை சுருக்கத்தில் கொள்ளைத் தகவல்கள்.

நல்ல நூல் நயம் இதுவல்லவோ!

அமெரிக்க நூலகத்தில் செலவழித்த நேரம் எவ்வளவு பயனுறு நேரம் பார்த்தீர்களா?

- விடுதலை நாளேடு 21 11 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக