பக்கங்கள்

செவ்வாய், 26 நவம்பர், 2019

நூற்றாண்டில் வாழும் மனிதநேயர்கள்! (2)

1900-க்கும், 2000-க்கும் இடையில் நூற்றாண்டு தாண்டி வாழுபவர் எண்ணிக்கை 51 விழுக்காடு, லு மடங்குக்கு மேல் - அதிகமாகியுள்ளது; காரணம் பகுத்தறிவு வளர்ச்சியின் பயனான மருத்துவ இயலால் ஆகும். பல சக்தி வாய்ந்த மருந்துகள் கண்டுபிடிப்பு, நோய் தடுப்பு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, உடல் நலம் பேணும் அரிய கரிசனம், மந்திரவாதிகளையும், தலைவிதியையும் மட்டுமே நம்பியவர்கள் - மருத்துவர்களையும், மருத்துவத்தையும் நம்புவது, மூடநம்பிக்கைகளி லிருந்து விடுதலை பெறுவது போன்ற இத்தியாதியான பல காரணங்கள் ஆகும்.

அமெரிக்காவில் சராசரி மனித ஆயுள் 78.8 விழுக்காடு அளவுக்கு அண்மையில் உயர்ந் துள்ளது!

வாழ்க்கை முறைகளை மாற்றும் தன்மைகளே(Changes in Life Style) இதற்கு - ஆயுள் நீட்டிப்புக்குப் பெரிதும் உதவுகிறது.

புகை பிடித்தல் தீது என்ற பிரச்சாரம் ஓங்கி யுள்ளது ஒருபுறம்; மற்றொருபுறம் புகைபிடிக்கக் கூடாத இடங்களாக பறக்கும் விமானம், ஓடும் ரயில், பேருந்து, அலுவலகங்கள் முதலியவற்றை அறிவித்ததினால் இப்படி ஆயுள் இரட்டிப்பு மயம் - குடிப்பதும் நிதானமாக மட்டுப்படுத்தல் மற்றொரு காரணம் ஆகும் என்கின்றனர் ஆய்வாளர்கள்!

உடற்பயிற்சியை அவரவர் (முதுமையில்) வயதுக்கேற்ப நாளும் தவறாமல் செய்து வருவது -  ஏறும் வயதிற்கு  எதிர் மறையாக்கிட முக்கிய காரணம் ஆகும்.

வாரத்தில் 5 நாள்கள் சிறு சிறு உடற்பயிற்சியை மூத்த குடி மக்கள் செய்து வருவது மிகவும் அவசியமாகும்!

நீண்ட நேரம் வெறுமனே உட்கார்ந்தே இருப்பது மரணத்திற்கு விரைந்த அழைப்பாகும்.

இருபாலான அவர்களில் பலர் நாற்காலியில் அல்லது சாய்வு நாற்காலியில் அவித்த உருளைக்கிழங்குபோல் உட்கார்ந்து இருப்பது இதயத்தின் இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட வழி வகுக்கக் கூடும் என்கின்றனர் இதய நிபுணர்கள்.

வீட்டுக்குள்ளேயாவது விட்டு விட்டு நடந்து கொண்டு இருக்கும் நடைப்பயிற்சி நல்லதும் கூட!

எவ்வளவு தூரம் உடற்பயிற்சி செய்தோம்? எவ்வளவு நேரம் நடைப்பயிற்சி, அமர்ந்து எழுதுதல், பேசுதல் என்பதை அன்றாடம் ஒரு குறிப்பேட்டில் பதிவு செய்தல் நல்லது என்பது மருத்துவர்கள் கருத்தாகும்.

மற்றொரு முக்கிய காரணம் செயல்களைக் குறைத்துக் கொள்ளாமல் - முடிந்த வரை சுறு சுறுப்புடன் அன்றாட வாழ்க்கையில் சோம் பலுக்கு இடம் தராமல் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளுதல் வயது நீட்சிக்கும், ஆரோக்கிய வாழ்வுக்கும் பெரிதும் உரமிட்ட தாகவே அமைந்து மகிழ்ச்சியைப் பெருக்கும்!

எல்லாவற்றையும் விட மேலான சக்தி வாய்ந்த மருந்து எது தெரியுமா? நெருக்கமான நல்ல நட்பு வட்டம்! அவர்களுடன் கலகலப்புடன் பழகி வர வேண்டும். கருத்துப் பரிமாற்றம், உரையாடலை உறைவிடமாகவே மாற்றிடுவது, அடிக்கடி பயணம் செய்து உயிருக்குயிரான நண்பர்களுடன் உலா வருதல் முதல் உயிர்ப் பிரச்சினைகள் வரை மனந்திறந்து விவாதிப்பது,  நம் நீண்ட ஆயுளுக்கு உதவி - வளர்க்கவும் செய்யும்.

காது கொடுங்கள்; காசு கொடுக்கிறார்களோ இல்லையோ  அவர்களுக்காக உங்கள் காது களைக் கொடுங்கள் - "கூறியது கூறல் குற்றம்" என்று கூடப் பார்க்காதீர்கள். சுற்றம் போன்ற நட்பு வட்டம் பின்னால் குறுகிவிடும்!

-  விடுதலை நாளேடு, 16.11.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக