பக்கங்கள்

ஞாயிறு, 29 மே, 2016

உணவெனும் உற்ற மருத்துவர்!



நல்ல உடல் நலம் காக்க, அடிப்படையாக கவனம் செலுத்த வேண்டியது, நமது உணவு முறைபற்றியே!
ரத்த அழுத்தம் (Blood Pressure)  பற்றி பலர் போதிய அக்கறை கொள்வதில்லை.

மாரடைப்பு, இதய வலி, சிறுநீரக பாதிப்பு போன்ற பலவற்றிற்கும் இந்த இரத்த அழுத்தம் கூடுதலாகி, ரத்தக் கொதிப்பாகி மாறிவிடுவதும் முக்கிய காரணம் அதோடு சர்க்கரை நோயும் இணைந்து கொண்டால் உடல் உபாதைகள் - வலிகள் - நோய்கள் அதிகமாகும்.

எனவே அவ்வப்போது, குறைந்தபட்சம் 50 வயதுக்குட்பட்டவர்களும்கூட - ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ, ஓராண்டிற்கு மூன்று முறையோ  கூட மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது வருமுன்னர் காக்கும் சரியான வழியாகும்!

‘மருந்துகளை எடுத்துக் கொள்வது ஒரு பக்கம் இருந்தாலும்  சரியான உணவு முறையை அமைத்துக் கொள்வதே’ சாலச் சிறந்ததாகும்.
சத்தான உணவியல் மருத்துவர் ஒருவரின் கூற்றுக்களை இங்கே சுருக்கித் தருகிறோம். பயன் பெறுக - நடைமுறைப்படுத்தி.

(I) உணவுக் குறிப்புகளை எழுதி வைத்துப் பார்க்க.

- உண்ணும் உணவை வகைகளை (வேளை தோறும்) எழுதி ஒரு டைரிக் குறிப்பாக வைத்து, என்ன உணவினால் என்ன மாறுதல் விளைவுகள் உடலில் ஏற்படுகிறது என்பதை ஆய்வு செய்ய அது பெரிதும் உதவும்!

சில உணவுகள் ஒவ்வாதவைகளாகக் கூட (Allegery) இருக்கலாம்;  அவைகள்தான் என்று கண்டறிவது இதன் மூலம் (டைரிக் குறிப்பு மூலம்) எளிதாக்கலாம்.
1) நிறைய பழங்களை - உங்கள் உடல் நிலைக்கேற்ப, சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும். பழங்களிலும் இனிப்பு இருக்கும் அல்லவா? ஆகவே விழிப்பு தேவை, தேர்வு செய்து உண்ணுங்கள்.

2) காய்கறி வகையறாக்களைக்கூட, சிறு தீனிக்குப் பதிலாக எடுத்துக் கொள்ளலாம்!

3) தவிர்க்கக் கூடிய கொழுப்பு உள்ள உணவுகளை, அறவே சேர்க்காதீர்கள்.

4) உப்பு அதிகம் உள்ள பதப்படுத்தப்பட்ட உணவுகள் (ஊறுகாய், சிப்ஸ்) போன்றவைகளை தவிர்ப்பது மிகவும் பாதுகாப்பானது!

5) தானிய வகைகள், (நார்ச்சத்துள்ள உணவு வகைகளை) கூடுதலாகச் சேர்த்துக் கொள்ளுங்கள். பருப்பு வகைகளும் இதில் அடக்கமே!

(II) எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள். இயங்குங்கள் சோம்பலாகவே இருப்பது, சதா டி.வி. அல்லது சின்ன திரை, பெரிய திரை சீரியல்களில் மூழ்கி விடுவது சுறுசுறுப்பான அடையாளம் அல்ல!

எடையை அடிக்கடி சரி பார்த்து, கண்காணித்து அதைக் கட்டுக்குள் வைத்திருங்கள். (Body Mass Index (BMI) 
என்று குறிப்பிடுவதை எளிமையாக மருத்துவ நண்பர்களிடம் அறிந்து கொள்ளுங்கள்!

(III)  எக்காரணம் கொண்டும் புகை யிலை என்ற நச்சின் பக்கமே தலை வைத்துப் படுக்காதீர்.

பீடி, சிகரெட், பொடி- இத்தகைய புகையிலைப் பொருட்களை நேரிடை யாகவோ, மறைமுகமாகவோ பயன் படுத்தாதீர்கள்!

இதய ரத்தக் குழாய்களில் அவை பெரிதும் அடைப்புகளை ஏற்படுத்தும்; கூடுமான வரை வெளியில், உணவு விடுதிகளில், பொது ஆடம்பரத் திருமண பந்தி உணவுகள் போன்றவற்றைத் தவிர்க்க முயலுங்கள்!

எளிய உணவானாலும், வீட்டில் சமைத்த உணவுக்கே முன்னுரிமை கொடுத்து, உண்ணப் பழகுங்கள்!

காசும் மிச்சம்; உடல் நலக் கேடும் தவிர்க்கப்படக் கூடும் - இந்த விதியைக் கடைப்பிடித்தால்!

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தினால் எத்தகைய வெற்றிகரமான வாழ்க்கையை நாம் அடைவோமோ, அதுபோல, ருசி - நாக்கு ருசிக்கு அடிமையாகி, உடல் நலத்தையும் “மணிபர்ஸ்” வளத்தையும் குறைத்துக் கொள்ளாதீர்கள்.

ருசித்த உணவா? ஆரோக்கிய உணவா? என்றால், ஆரோக்கிய உணவுக்கே உங்கள் முன்னுரிமை என்று அமையட்டும்!

அதுவே நம் வாழ்வை நீட்டும்; வளப்படுத்தும் - இல்லையா?

- கி.வீரமணி
-விடுதலை,30.4.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக