பக்கங்கள்

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026

டாக்டர் அம்பேத்கர் கடிதமும், புதிய வெளிச்சமும்! (1)(2)

 

‘ஒரு புரட்சியாளரின் கடிதங்கள்’ – ‘Letters of Revolutionary’ என்ற தலைப்பில் வெளியாக்கப்பட்டுள்ள இந்த கடிதத் தொகுப்பில் பல கடிதங்கள் – இடம் பெற்றுள்ளன என்றாலும், சிலவற்றை அறிந்து கொண்டால் பலரைப் பற்றியும் அவர்களது சிந்தனைகளும், செயலாக்கங்களும் பற்றிய வரலாற்று நிகழ்வுகள் நமக்கு ஒரு புதிய வெளிச்சத்தைத் தரும். தெரிந்த தலைவர்கள்; அவர்களைப் பற்றித் தெரியாத – மற்றவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள், கண்ணோட்டங்கள்  பற்றித் தெரிந்தால் ‘ஒப்பனை’ இல்லாத உண்மைகளை நாம் புரிந்து ஒரு தெளிவான மதிப்பீட்டினைப் பெற முடியும் என்பதை இக்கடிதங்கள் காலக் கண்ணாடியாக நமக்குக் காட்டுகின்றன.

எடுத்துக்காட்டாக, டாக்டர் அம்பேத்கர் அவர்களது வரலாற்று முக்கியத்துவமுள்ள  எழுத்துகளைக் கொண்ட  ‘‘அரிய, பெரிய ஒரு நூல்’’ (Magnum Opus) என்று பலராலும் பாராட்டப்படும் நூல்தான் ‘Buddha and His Dhamma’ – ‘‘புத்தமும் – தம்மமும்’’ (புத்தரும் அவரது கொள்கை நெறியும்) என்ற அற்புதமான ஆய்வு ஆவணம் போன்றதொரு நூல். அந்த நூலை அவர்கள் வெளியே கொண்டு வந்து மக்களுக்குச் சேர்க்க இறுதியில் அப் புத்தகத்தை அச்சிட்டு வெளிவர அவர் பட்ட பாடுகள் எவ்வளவு?

‘‘அச்சுச் செலவு  20  ஆயிரம் ரூபாய் என்பது எனக்கு மிக அதிகமான தொகையாகும். எல்லாப் பகுதி (நண்பர்கள் மூலம் நிதி உதவி) உதவியையும் நாடி முயற்சி செய்கிற நிலையில் – அந்த அளவுக்குச் செலவிட என்னிடம் நிதி இல்லை என்பதால் தங்களிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.

இந்திய அரசாங்கம் எனது அந்தப் புத்தகத்தை 500 பிரதிகள் வாங்கி, நூல் நிலையங்களுக்கும், முக்கியப் பிரமுகர்களுக்கும், கல்விமான்களுக்கும் அனுப்பினால் புத்தரின் 2500ஆம் ஆண்டு விழாவை கொண்டாடவிருக்கும் இந்திய அரசுக்கு, அது ஒரு சிறப்பான அம்சமாக அமையும். பவுத்தத்தினைப் பற்றி உங்களது ஆர்வத்தை நான் நன்கு அறிவேன்.

அதனால் உங்களை நாடுகிறேன்.

நிச்சயம் தாங்கள் உதவிடுவீர்கள் என்று நம்புகிறேன்.’’

தங்கள் உண்மையுள்ள

பி.ஆர். அம்பேத்கர்

(ஆங்கிலக் கடிதத்தின் தமிழ் மொழியாக்கம்)

மேற்காட்டிய கடிதத்தைப் படித்தவுடன் என் கண்களில் நீர் கசிய ஆரம்பித்தது.

பொது வாழ்வில் 40 ஆண்டுகளுக்கு மேல் உள்ளவர்; வெளிநாடுகளில் படித்துப் பட்டம் பெற்று, பல பெரும் பதவிகளை வகித்த ஓர் உலகமகா அறிஞரான  டாக்டர் அம்பேத்கரின் இறுதிக் கால நிதி நிலை எப்படி இருந்தது என்று பார்த்தால், பொது வாழ்வில் அவரது நேர்மை, தூய்மை, தனக்கென வாழாமல் பிறருக்காக – தொண்டறச் செம்மலாக, தந்தை  பெரியாரைப் போல வாழ்ந்துள்ளார் என்பதை, இன்றைய படாடோபத்தினை  விரும்பும் அரசியல் தலைவர்கள், பதவியாளர்களுடன்  – இவரை ஒப்பிட்டுப் பார்த்து ‘உண்மையின் கதி இதுவா?’ என்ற கேள்வியினைக்  கேட்டு, அதுதான் அவர் வாழ்க்கை ஒளி என்றே வரலாறு அவரை உச்சத்தில் மெச்சிக் கொண்டாட வைக்கும்.

அதற்குப் பிரதமர் நேரு பதில் என்ன? நாளை பாருங்கள்.

(வளரும்)

- விடுதலை நாளேடு, 19.08.26



பிரதமர் பண்டித நேரு அவர்கள் டாக்டர் அம்பேத்கருக்கு எழுதிய பதில் கடிதம் இதோ:

ஆங்கிலத்தின் தமிழ் மொழியாக்கம்:

எண். 2196-PMH/56

புது தில்லி

செப்டம்பர் 15, 1956

அன்பார்ந்த டாக்டர் அம்பேத்கர்,

‘‘செப்டம்பர் 14ஆம் தேதியிட்ட தங்களின் உங்கள் கடிதம் கிடைத்தது. நீங்கள் கேட்டுக் கொண்டபடி உங்கள் நூலின் அதிக எண்ணிக்கையிலான பிரதிகளை வாங்குவது எங்களால் இயலுமா என்பதில் எனக்குச் சந்தேகமே உள்ளது. புத்த ஜெயந்தி விழாவையொட்டி வெளியீட்டிற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை நாங்கள் ஒதுக்கியிருந்தோம். அந்தத் தொகை தீர்ந்துவிட்டது, மேலும் உண்மையில் அதிகமாகி விட்டது. நாங்கள் நிதியுதவி அளிக்க இருந்த பவுத்தம் தொடர்பான சில நூல் திட்டங்களைக்கூட நிராகரிக்க வேண்டியிருந்தது. எனினும், உங்கள் கடிதத்தை புத்த ஜெயந்தி குழுவின் தலைவரான டாக்டர் ராதாகிருஷ்ணனிடம் அனுப்பி வைக்கிறேன்.

வெளிநாடுகளிலிருந்து பலர் வருகை தரும் புத்த ஜெயந்தி விழாக் காலத்தில், டில்லியிலும் மற்ற இடங்களிலும் உங்கள் நூலை விற்பனைக்கு வைக்கலாம் என நான் பரிந்துரைக்கிறேன். அப்போது அது நன்கு விற்பனையாகக் கூடும்’’.

தங்கள் உண்மையுள்ள,

ஜவஹர்லால் நேரு

டாக்டர் பி. ஆர். அம்பேத்கர், எம்.பி.,

26, அலிபூர் சாலை,

சிவில் லைன்ஸ், டெல்லி.

 

இவ்வாறு நிதி உதவிட வாய்ப்பில்லை என்றுகை விரித்தார் நேரு!

2500 புத்த ெஜயந்தி கொண்டாட்டங்களை நடத்தி, உலகிற்கு வெளிச்சம் காட்டிட இந்திய அரசின் கஜானாவில் அதுவும் பல லட்சங்களை அப்போது ஒதுக்கி ‘2500 Years of Buddha’ போன்ற (டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களின் முன்னுரையுடன் வெளியிடப்பட்ட  நூல்) ஒன்றிய  அரசு நூல் வெளியீடு என்று நடத்தியது. ஆனால் இந்த ரூ.20 ஆயிரம் தொகையைப் பெற டாக்டர் அம்பேத்கரின் நூல்களை  நூலகங்களுக்கு அனுப்பி உதவிட ஏனோ நேருவால் முடியவில்லை?

இதைப் பணமில்லை என்று நம்ப முடியுமா? அதைவிட மிக மிகக் கசப்பான உண்மை – ‘‘மனமில்லை’’ என்பதுதானே சரியானதாக இருக்க முடியும்.

முற்போக்காளர் நேருவின் இந்த நடவடிக்கைக்கு   அரசியல் காரணமா அல்லது வேறு கண்ணோட்டமா என்பது  புரியவில்லை

அதைவிட சிரிப்பு வரக்கூடிய அதில் ஒன்று என்ன தெரியுமா?

புத்த ஜெயந்தி கமிட்டியின் தலைவர் இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு டாக்டர்  அம்பேத்கரின் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளேன் என்று  பிரதமர் நேரு கூறியதுதான்!

உங்கள் புத்தகங்களை விற்பனையாளர்களுக்கு அனுப்புங்கள். டில்லி விழாவிற்கு உலகின் பல பகுதிகளிலிருந்தும் விழாவிற்கு வருகிறவர்கள் பலரும் வாங்கக்கூடும் என்பது ஒரு இலவச அரியதொரு (கருத்து தானம்) வழி கூறி, சோஷலிசம் பேசிய பண்டித நேரு இப்படி பதில் எழுதினார்.

அதற்குப் பின்னே இருப்பது எதுவோ! வாசகர்களே தீர்மானிக்கட்டும்.

எவராலும் இதை நியாயப்படுத்த முடியுமா?

- விடுதலை நாளேடு, 20.08.26

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக