பக்கங்கள்

புதன், 2 செப்டம்பர், 2026

உணவு நிறுவன வரலாறு – உழைப்பின் மேன்மைக்கு ஒரு வழிகாட்டி நூல் (1)

 

சுவாசிக்கும் உயிர்க் காற்றும், ( பிராண வாயும்)  உண்ணும் உணவும், இயற்கை தரும் ஊக்கமும் மனித வாழ்வின் உடல் நல பாதுகாப்புகள் ஆகும்!

இன்றைய அதிவேக வாழ்க்கை முறையிலும், குடும்பங்களில் ஆண், பெண் அனைவரும் பணிகளுக்குச் செல்லும் வளர்ச்சி நிலை வாழ்வு காரணமாகவும், வீட்டிலேயே சமைத்து உண்ணும் உணவுப் பழக்கம் பெரிதும் மாறி வருகிறது!

இப்படி வெளியில் உணவுப் பண்டங்களை –  உணவகங்களில் வாங்கி சாப்பிடும்போது அது நமது உடல் நலத்திற்கு கேடு செய்யாத வகையில்அமையும் உணவுகள், சிற்றுண்டி, பேருண்டி, நொறுக்குத் தீனி எவையானாலும் உணவகங்களில் வாங்கிச் சாப்பிட வேண்டிய  நிர்பந்தம் தவிர்க்க முடியாதவைகளாக உள்ளன.

அதற்கு நல்ல சுகாதார முறையில் தயாரிக்கப்பட்ட, சுவைகுன்றாமல் எப்போது தயாரிக்கப்பட்டது, எது நாள் வரை அவற்றைப் பயன்படுத்தினால் உடல் நலத்திற்கு ஊறுநேராது என்பதுபோன்ற தகவல்களை, விற்கப்படும் பொருள்மீதே அச்சிட்டு வழங்குவது, அன்றாடம் தயாரிப்புகளிலும் மிகவும் கவனம் செலுத்தி வளர்ந்தோங்கியுள்ள ‘‘பிரபல’’ புகழ் வாய்ந்த உணவகங்களில் முதன்மை வரிசையில் முன் நிற்பது ‘அடையாறு ஆனந்தபவன்’ என்ற மிகச் சிறந்தஉணவுத் தயாரிப்பு நிறுவனமாகும்.

நம் நாட்டு எல்லையைத் தாண்டி உலகத்தின் பல்வேறு முக்கிய பெரு நகரங்களில் இந்தஉணவகம், உண்ணுவோரின் சிறப்பான வரவேற்பைப் பெற்றிருக்கின்றன என்பதைக் கடந்த சுமார்  2 ஆண்டுகளாக அறிந்து, வியந்து, மகிழ்ந்து ஒன்றாக ‘அடையாறு ஆனந்தபவன்’ என்ற ‘மாடல் உணவகம்’ அமைத்து காட்சி அனுபவத்தையும்,  சுவையும், சுகாதாரமும் இரண்டும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டு வாடிக்கையாளர்களை வரவேற்று உபசரிப்பதை நேரில் கண்டு, உண்டு, உணர்ந்தேன்.

ஆஸ்திரேலியாவின் முக்கிய பெரு நகரங்களான ‘சிட்னி’ (Sydney)  ‘மெல்பேர்ன்’ (melbourne) ஆகிய உலகப் புகழ் வாய்ந்த நகரங்களில் அந்தந்த கிளைகளுக்கே தோழர்களுடன் சென்று பசியாறி திரும்பியபோது  பெருமிதம் கொள்வேன். காரணம் நானும் அடையாறு வாசி அல்லவா!… சுமார் 60 ஆண்டுகளுக்குமேல்! என்பதால் மட்டுமல்ல, எளிய நிலையில் இருந்து கடும் உழைப்பால் பல சோதனைகளையும், வேதனைகளையும் தாண்டி, வாழ்வில் ஏற்பட்ட இடுக்கண்கள், தடைகளைத் தாண்டி  தளராத தன்னம்பிக்கை, தயங்காத தொடர் உழைப்பாக, வெற்றியோடு தன்னடக்கம், உணவில் புதிய புதிய ஆய்வு முறைகளைப் புகுத்தி, வாடிக்கையாளர்களை ‘சுண்டி’ இழுக்கும் வழக்கமான தொழில் முறையையும் தாண்டி, புதுப்புது ‘உத்திகளை ஆய்வு நோக்கில் செய்து, தொழிலில் வெற்றி மேல் வெற்றி என்பதைக் கண்டு வரும் உலகம் வியக்கும் அந்த உழைப்புக் குடும்பத்தின் சாதனைகளை, தொழில் தொடங்குவோர், தொழிலில் பல சோதனைகளையும், இக்கட்டுகளும், இடர்களும் சுழன்றடிக்கும் ‘சுனாமிகள்’ போல் வந்தாலும் மனந்தளராது, தொடர்ந்து முயற்சி, விடா முயற்சி என்ற பந்தயக் குதிரைகள் மீதேறி சலிப்பற்று சவாரி செய்து ‘இலக்கு ஒன்று மட்டுமே எமது குறி’ என்று உழைப்புத் தேனீக்களாக அடையாறு ஆனந்தபவன் நிறுவனத்தின் –  அந்த ஆலமரத்தின் வெற்றிக்கு வேராகவும், விழுதாகவும்  உள்ளவர்கள்பற்றி அறிந்தால், அதுவே இன்றைய, நாளைய இளைய சமூகத்தின் தொழில் தொடங்கி நடத்துவதில் வெற்றியடைவது எப்படி என்று ‘தவிக்கும்’ பலருக்கும் வழிகாட்டும் கலங்கரை வெளிச்சம்போல், அந்த நிறுவனங்கள் போற்றுதலுக்குரிய மதிப்புறு, தமிழ்த்திரு கே.எஸ்.ஆனந்தராஜா அவர்களைப் பற்றிய ஒரு நூலை – ‘இனிப்பின் வெற்றி’என்ற தலைப்பில் எழுத்தாளர் லட்சுமி பிரபா அவர்கள் எழுதியதை படித் தேன் – மகிழ்ந் தேன். இது பலரும் கற்க வேண்டிய ஒரு தொழில் உலகத்திற்கான பாட நூல், ‘எழுத்துத் திலகம்’ என்ற பட்டம்  இந்த நூலாசிரியருக்கு மிகவும் பொருத்தம் என்பதை மறுக்க வொண்ணாத ஒன்று.

‘தந்தை மகற்காற்றும் நன்றி’ –

‘மகன் தந்தைக்காற்றும் உதவி’

என்ற குறளாசானின் குறிப்புகளுக்கு  ஏற்ப அவரின் தந்தையை தமது வழிகாட்டி, ஆசான் எனக் கொண்டு, தந்தை சொல் மிக்க ‘மந்திர’மில்லை என்று நடந்ததோடு, தடம் மாறாது; ‘தம்மின், தம் மக்கள், அறிவுடைமை’ என்பதற்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் அவரதுஅன்பு மகன்கள் – பெருமைமிகு உழைப்புத் தேனீக்களான கே.டி. சீனுவாசராஜா, கே.டி.வெங்கடேசராஜா ஆகியோர்தம் ஆளுமை   அறிவும், செறிவு நிறைந்த துணிவும், கனிவும் பாராட்டிப் போற்றத்தக்கவை.

மேலும் பல செய்திகள் நாளை.

(தொடரும்)

-விடுதலை நாளேடு, 2.9.26

வாழ்வில், குறிப்பாக பொதுத் தொண்டில் கற்க வேண்டிய பாடம் இதோ!

 

கடந்த 26.8.2026 அன்று மேனாள் அமைச்சரும், சட்டப் பேரவைத் தலைவருமான க. இராசாராம் அவர்களின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. திராவிட இயக்கத்தில் வளர்ந்து (கடைசியில் அவர் திசைமாறிப் போய்) வைதீக உணர்வுக்கு ஆளானவர் என்ற நிலை – பழைய ‘திருவாசக மணி’யான கே.எம்.பாலசுப்ரமணியன், சொ. முருகப்பா போன்ற சிலரது பட்டியலில் சேர்க்க வேண்டியவராகி விட்டாரே
க. இராசாராம் அவர்கள் என்ற வருத்தம், அவரைப் பற்றியது என்றாலும், கடந்த கால அவரது தொண்டு – நற்தொண்டு என்ற நிலையில், அவரது விழாவில் கலந்துகொண்டோம். அவர் தந்தை பெரியாரிடம் நெருக்கமாக இருந்து கற்றுக் கொண்டதை ‘ஒரு சாமானியனின் நினைவுகள்’ என்ற அவரது நூலில் அவர் பதிவு செய்துள்ளார்.

அந்தத் தலைப்பே அவர் தந்தை பெரியாரிடம் கற்றுக் கொண்ட பாடத்தின் விளைச்சல் என்றே சொல்ல வேண்டும்.

அதில் சில முக்கியப் பதிவுகளாகியுள்ளவை என்றும் அய்யாவின் அரிய சிந்தனை எப்படி எல்லா தலைமுறை பொது வாழ்வுக்கும் பயனளிக்கும் பாடம் என்பதால் இன்றைய ‘வாழ்வியல் சிந்தனைகள்’ தொடரில் அதைப் பதிவு செய்கிறேன்.

lll

‘‘இருட்டறையில் உள்ளதடா உலகம்!

சாதி  இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே!’’

என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

‘இருட்டிலே வாழும் தமிழர்களை வெளிச்சத் துக்குக் கொண்டு வர வேண்டும்’ என்பது தான் தந்தை பெரியாரின் கொள்கை.

கப்பலில் அய்யாவுடன் பயணம் செய்யும்போது ‘‘உங்கள் முயற்சி நம் நாட்டில் சுலபமாக ஏற்க மறுக்கப்படுகிறது; அதே நேரத்தில்  அய்ரோப்பா கண்டத்தில் மாறுதல்கள் சுலபமாக நடந்து விடுகிறதே!’’ என்று கேட்டேன்.

‘‘அய்ரோப்பா கண்டத்தில் புரட்சிகள் ஏற்படுவ தற்குக் காரணம் அது பாறை போன்ற ஒரு பூமி. அங்கே ஒரே மதம் – சாதிகள் இல்லை. எனவே, மக்கள் மத்தியில் எந்தக் கட்டடத்தையும் சுலபமாக அஸ்திவாரம் அதிகம் இல்லாமல் கட்டிவிட முடிகிறது.

நமது பூமி களிமண் பூமி போன்றது – சாதிகளால் பிளவுபட்டது.

இவர்களை முதலில் நாம் ஒன்று சேர்க்க வேண்டும். இப்படி நிறைய வேலைகள் இருக்கின்றன. அதனால்தான் இங்கு புரட்சி எதையும்  சுலபமாக உருவாக்க முடியவில்லை.

நம் அளவுக்கு இந்த முயற்சியில் வேறு யாரும் வேகமாக இறங்கவில்லை. நம்மால் ஆனவரை முயல்வோம்.’’ என்றார்.

lll

‘‘தந்தை பெரியாருடன் பயணித்தவர்கள் ஏதாவது ஒரு கருத்து வேற்றுமையால் பிரிந்து போய் இருந்தார்கள். இதற்கான காரணங்களைக் கப்பலில் அய்யாவிடம் கேட்டேன். கருத்து வேற்றுமைக்கான காரணங்கள் மிகவும் சாதாரணமானவை.

உதாரணத்திற்கு பெரியார் – ‘‘பொது வாழ்வுக்கு வருபவர்கள் எவரும் தன் சொந்த வசதிக்கு மேல் வாழாமல், ஊரான் உழைப்பில் வாழும் சுகத்தையும் விரும்பாமல் இருக்க வேண்டும்.

பொதுவாக மற்றவர்கள் பார்த்து பொறாமை கொள்ளும்படி வாழக் கூடாது. மூட்டை சுமப்பதைக் கூட சுமக்க முடியாததால்தான் தூக்காமல் விடுகிறேனே தவிர, அதை இழிவாகக் கருதி அல்ல’’ (‘‘மூட்டை தூக்கும் போது பாரத்தினால் கஷ்டப்பட்டு இருக்கிறேனே தவிர, நான் ஒரு போதும் வெட்கத்தினால் கஷ்டப்பட்டது இல்லை.’’) என்று சொல்பவர்!

எவ்வளவு அருமையான வாழ்வியல் பாடம்! பொது வாழ்விற்கு வருகிறவர்களுக்கு சிறந்த கலங்கரை வெளிச்சம்!

தந்தை பெரியாரின் இந்த ‘பத்தியத்தை’ கடைப்பிடிக்க முடியாதவர்கள் பலரும் பயணத்தி லிருந்து பாதை மாறி, வசதி என்ற வசந்தத்தை நோக்கி தேன் குடிக்கச் செல்லும் வண்டுகளாகி விடுகின்றனர்.

அவர் வைத்த கடினமான பத்தியங்களில் தேறியதால்தான் பயணம் முழுவதும் எந்தப் பிரச்சினையும் இன்றி தேறினேன்.’’

lll

‘‘அய்யாவிடம் பணியாற்றியதில் நான் பொது வாழ்வுக்கான பயிற்சி முழுவதும் பெற்றேன்.

  1. வருபவர்களை மதித்து வரவேற்றல்.
  2. மனந்திறந்து பேசுதல்.
  3. முடிந்த உதவிகளை உடனடியாகச் செய்தல்.
  4. ஒருவரது ஆற்றலைக் கண்டு, மனந்திறந்து பாராட்டுதல்.
  5. பொது வாழ்வில் நீண்ட காலம் இருப்பதற்கு சிக்கன வாழ்வு – ஆடம்பரமற்ற வாழ்வு தேவை என்பனவற்றையெல்லாம் அய்யாவிடம் கற்றேன்.

தந்தை பெரியார் சிறைப் பறவை. அநீதியைக் கண்டு சீற்றம் கொள்ளும் தன்மை கொண்டவர்.

அரசியல், சமுதாயக் கருத்துகளில் தனக்கெதிரான கருத்துக் கொண்டவர்களை நாகரிகத்தோடு எதிர்ப்பவர்.

தனக்கு நண்பராக இருந்தாலும் தன் சமுதாயத் திற்குக் கேடு செய்கிறார் என்று உறுதியாகத் தெரிந் தால், நட்பைக்கூட ஒதுக்கி வைத்து, துணிச்சலாக எதிர்ப்பவர். அதற்காக அவர் யாருடனும் விரோதியானதும் இல்லை.

அவரோடு தமிழ்நாடு முழுவதும் பலமுறை சுற்றியபோது இந்தப் பாடங்களை அவரிடம் கற்றேன்.

பிரதமரோ, முதலமைச்சரோ அல்லது நீதிபதியோ, அவர்களின் பதவிபற்றி அஞ்சாமல் அவர் தன் கருத்துகளைக் கூறி வந்ததை நான் அருகில் இருந்து பார்த்துப் பார்த்து பலமுறை வியந்து போய் இருக்கிறேன்.’’

lll

‘‘ராஜாஜி என்றழைக்கப்படும் திரு.சி. இராஜ கோபாலாச்சாரியாரிடம் க. இராசாராம் நன்கு பழகியவர். அவரது  (இராஜாஜி) மகன் சி.ஆர். நரசிம்மனை நாடாளுமன்றத் தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் தோற்கடித்தவர் க. இராசாராம் என்பதை மறந்து ஆச்சாரியார் தன்னிடம் காட்டிய அன்பைப் பெருமையுடன் கூறும் அவர் ஓர் அருமையான செய்தியைக் குறிப்பிடுகிறார்.

‘‘பலரைப் பற்றி என்னிடம் (ராஜாஜி) மனந் திறந்து பேசினார். தன் நண்பர் தந்தை பெரியாரைப்பற்றிச் சொல்லும்போது, ‘ அவரிடம் சேரும் ஒவ்வொரு காசும் பொதுவுக்குத்தான் சேருமே தவிர, சொந்தத்துக்கு வைத்துக் கொள்ள மாட்டார். பண விஷயத்தில் என் நண்பர் நாயக்கரைப் போல் நாணயமானவர்களைக் காண்பது அரிது’ என்று சொன்னது கல்லால் அடித்து வைத்த சாசனம் போல் இருந்தது!’’

இப்படி பல்வேறு அறிய வேண்டிய அரிய செய்தி களையும்,  கற்க வேண்டிய பாடங்கள் – அனைத்து பொதுத் தொண்டறங்களையும் பின்பற்றினால் எப்படி இருக்கும்? என்று சிந்தித்துக் கொண்டே இக்கட்டுரையை முடிப்போம்!

-விடுதலை நாளேடு, 29.8.26

நாராயணகுரு குறித்த புதிய ‘திறவு’கள்!

 

இந்திய நாட்டின் சமூகப் புரட்சியின் முதன்மை யானவர்கள்

  1. ஜோதிபா பூலே (மராத்திய மாநிலம்)
  2. சத்ரபதி சாகுமன்னர்
  3. ஆசான் நாராயண குரு
  4. தந்தை பெரியார்
  5. பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர்.

(முதன் முதலில் இப்படி வரிசைப்படுத்தியவர் பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனரும் என்றும் தடம் மாறாத தனிப் பெரும் அரசியல் சமூகப் புரட்சியாளருமான நண்பர் கான்ஷிராம் அவர்கள்)

இதில் இந்த அய்ம்பெரும் புரட்சியாளர்களில் தந்தை பெரியார் ஒருவர்தான் மதம் எதிலும் சாராது, மதங்களையும் எதிர்த்தவர் என்பது முக்கியமாகச் சிந்திக்க வேண்டியது.

ஜோதிபா பூலே அவர்கள் முன்னோடியாக,  சமூகநீதிப் போராளியாக ஒடுக்கப்பட்டோருக்கு  முதல்  அறிவூட்டிய மாமனிதர் ஆவார்.

அவரது சிறப்பினை இவ்வாண்டு நவம்பரில் நாம் சிறப்பாக நடத்தவிருக்கிறோம்.

அய்வரில் ஒருவர் கேரளத்து அமைதிப் புரட்சியாளர் சிறப்புமிகு ஆசான் நாராயணகுரு.  ஒடுக்கப்பட்ட மக்கள், குறிப்பாக அவர் சார்ந்த  ஈழவ மக்கள் உரிமை பறிக்கப்பட்டதையும், கல்வி சமத்துவ வாய்ப்புகளையும் அவர்களுக்கு அறவே மறுத்தும் வந்ததையும் கோயிலுக்குச் சென்று கடவுளை கும்பிட உரிமை இல்லை என்றும், அவர்களைத் தீண்டாமை, நெருங்காமை, பார்க்காமை என்ற காட்டுமிராண்டி காலத்திலும் காண முடியாத ஒரு பெரும் பேத – ஜாதிப் பிரிவை உண்டாக்கி செய்ததையும் ‘வாயில்லா ஜீவன்களாக’ அடங்கி ஏற்றுக் கொண்ட மலையாள நாட்டுப் பகுதியில், அதை எதிர்த்துப் புரட்சி வெடி வைத்தவர் கேரளத்தில் ஆசான் நாராயண குரு அவர்கள்!

அவர்கள் பற்றியும் அவர் துவக்கி வளர்த்துள்ள ‘தர்மபரிபாலன சபை’ அமைப்பு பற்றியும், அதை வார்த்த அவர்தம் அருமைச் சீடர்கள் டாக்டர் பல்பு, குமரன் ஆசான் ஆகியோர் பற்றியும் இதுவரை எத்தனையோ நூல்கள் வந்திருந்தாலும் அண்மையில் ‘தெற்கின் புத்தர் – ஆசான் நாராயண குரு’ என்ற ஓர் ஆய்வு நூலை – மதுரை திருவாளர் தமிழன் இளங்கோ அவர்கள் மிக மிக ஆர்வத்துடன், இதுவரை பலரும் அறிந்திராத, அரிய தகவல்களைத் திரட்டி 724 பக்கங்களில் அருமையான ஒரு சமூக வரலாற்று நூலாக எழுதியுள்ளார். அனைத்து சமூக  நீதியாளர்களும் நூலாசிரியரைப் பாராட்டிப்  பெருமைப்படுத்த வேண்டும்.

இதற்காக அவரது கடும் உழைப்புக்கும், திரட்டிய தகவல்களுக்கும் ஓர் ஆய்வு முனைவர் பட்டமே தரலாம்.  தரத் தகுதியான ஆய்வு நூல். ‘கேரளம்’ ஆகியுள்ள அந்த மாநிலத்தில் பல கிராமங்கள் உட்பட சென்று தரவுகளைத் திரட்டி, பலரையும் பேட்டி கண்டு, தனி ஒரு மனிதராக இதனைச் செய்ய முடியுமா என்றால் ‘முடியும் – முயன்றால்’ என்பதை விடையாகத் தந்துள்ளது – இந்த அறிவு ஒளி வீச்சு!

பகுத்தறிவாளர்கள், சுயமரியாதை எழுத்தாளர்கள், பகுத்தறிவுப் பாலவர் கவிஞர் அறிவுமதி, தவத்திரு பால பிரஜாபதி அடிகளார், ‘கலைஞர் செய்திகள்’ தொலைக்காட்சியின் செய்திப் பிரிவுத் தலைவர் ‘செறிஞர்’ (செறிவான கருத்துகளை எழுதுபவர்) ப. திருமாவேலன், முற்போக்குச் சிந்தனையாளர் வாலாசா வல்லவன் ஆகியோரது அறிவுரைகள், அணிந்துரைகள், கருத்துரைகள், பாராட்டுரைகள் கொண்ட இந்த நூலை ஒரு சமூக வரலாற்று நூலாக எழுதி, நாராயண குருவை முற்றிலும் ஒரு சமூகப் புரட்சியாளராக, சரியானபடி  இந்நூலில் தமிழன் இளங்கோ சிறப்புடன் காட்டியுள்ள  பாங்கு அவரது தனித்த சிறப்புமிகு சிந்தனை ஓட்டத்தையே காட்டுகிறது.

மதத் தலைவர், மடங்களில் வாழும் – பூசை புனஸ்காரங்கள் நிலைக்கு மாறுபட்டு, எழுத்தோவியத்தில் பல தகுந்த தரவுகளுடன் பயணத்தில் பலரை சந்தித்துத் திரட்டிய செய்திகளை வைத்து எழுதியுள்ளார்.

‘திறவுகள்’ என்று தலைப்பிட்டு ஏழு பிரிவுகளில் அரிய தகவல் களஞ்சியமாகியுள்ளார்.

‘திறவு 3’இல் வைக்கம் போராட்டம் துவக்கி தந்தை பெரியார், காமராசர் பலவற்றை அவர் ஒரு வகை தனித்த பார்வை திரட்டித் தரும் கருத்துகள் மிக குறிப்பிடத்தக்கவையாகும். அரிய முக்கியத்துவம் வாய்ந்த மற்ற வரலாற்றலாளர்கள்பற்றி மறந்தோ மறைத்தோ விட்ட செய்திகள் அவை.

‘‘நூலைப்படி, நூலைப்படி’’ என்று ஆணையிட்ட நமது புரட்சிக் கவிஞர் ஆணையை ஏற்று இந்த அரிய நூலைவாங்கிப் படிப்போம் – அக்கருத்தொளியை அனைவருக்கும் சேர்ப்போம்.

மிகுந்த பாராட்டுகள் – நூலாசிரியர் மானமிகு தமிழன் இளங்கோ அவர்களுக்கு!

-விடுதலை நாளேடு, 28.8.26