
கடந்த 26.8.2026 அன்று மேனாள் அமைச்சரும், சட்டப் பேரவைத் தலைவருமான க. இராசாராம் அவர்களின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. திராவிட இயக்கத்தில் வளர்ந்து (கடைசியில் அவர் திசைமாறிப் போய்) வைதீக உணர்வுக்கு ஆளானவர் என்ற நிலை – பழைய ‘திருவாசக மணி’யான கே.எம்.பாலசுப்ரமணியன், சொ. முருகப்பா போன்ற சிலரது பட்டியலில் சேர்க்க வேண்டியவராகி விட்டாரே
க. இராசாராம் அவர்கள் என்ற வருத்தம், அவரைப் பற்றியது என்றாலும், கடந்த கால அவரது தொண்டு – நற்தொண்டு என்ற நிலையில், அவரது விழாவில் கலந்துகொண்டோம். அவர் தந்தை பெரியாரிடம் நெருக்கமாக இருந்து கற்றுக் கொண்டதை ‘ஒரு சாமானியனின் நினைவுகள்’ என்ற அவரது நூலில் அவர் பதிவு செய்துள்ளார்.
அந்தத் தலைப்பே அவர் தந்தை பெரியாரிடம் கற்றுக் கொண்ட பாடத்தின் விளைச்சல் என்றே சொல்ல வேண்டும்.
அதில் சில முக்கியப் பதிவுகளாகியுள்ளவை என்றும் அய்யாவின் அரிய சிந்தனை எப்படி எல்லா தலைமுறை பொது வாழ்வுக்கும் பயனளிக்கும் பாடம் என்பதால் இன்றைய ‘வாழ்வியல் சிந்தனைகள்’ தொடரில் அதைப் பதிவு செய்கிறேன்.
lll
‘‘இருட்டறையில் உள்ளதடா உலகம்!
சாதி இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே!’’
என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.
‘இருட்டிலே வாழும் தமிழர்களை வெளிச்சத் துக்குக் கொண்டு வர வேண்டும்’ என்பது தான் தந்தை பெரியாரின் கொள்கை.
கப்பலில் அய்யாவுடன் பயணம் செய்யும்போது ‘‘உங்கள் முயற்சி நம் நாட்டில் சுலபமாக ஏற்க மறுக்கப்படுகிறது; அதே நேரத்தில் அய்ரோப்பா கண்டத்தில் மாறுதல்கள் சுலபமாக நடந்து விடுகிறதே!’’ என்று கேட்டேன்.
‘‘அய்ரோப்பா கண்டத்தில் புரட்சிகள் ஏற்படுவ தற்குக் காரணம் அது பாறை போன்ற ஒரு பூமி. அங்கே ஒரே மதம் – சாதிகள் இல்லை. எனவே, மக்கள் மத்தியில் எந்தக் கட்டடத்தையும் சுலபமாக அஸ்திவாரம் அதிகம் இல்லாமல் கட்டிவிட முடிகிறது.
நமது பூமி களிமண் பூமி போன்றது – சாதிகளால் பிளவுபட்டது.
இவர்களை முதலில் நாம் ஒன்று சேர்க்க வேண்டும். இப்படி நிறைய வேலைகள் இருக்கின்றன. அதனால்தான் இங்கு புரட்சி எதையும் சுலபமாக உருவாக்க முடியவில்லை.
நம் அளவுக்கு இந்த முயற்சியில் வேறு யாரும் வேகமாக இறங்கவில்லை. நம்மால் ஆனவரை முயல்வோம்.’’ என்றார்.
lll
‘‘தந்தை பெரியாருடன் பயணித்தவர்கள் ஏதாவது ஒரு கருத்து வேற்றுமையால் பிரிந்து போய் இருந்தார்கள். இதற்கான காரணங்களைக் கப்பலில் அய்யாவிடம் கேட்டேன். கருத்து வேற்றுமைக்கான காரணங்கள் மிகவும் சாதாரணமானவை.
உதாரணத்திற்கு பெரியார் – ‘‘பொது வாழ்வுக்கு வருபவர்கள் எவரும் தன் சொந்த வசதிக்கு மேல் வாழாமல், ஊரான் உழைப்பில் வாழும் சுகத்தையும் விரும்பாமல் இருக்க வேண்டும்.
பொதுவாக மற்றவர்கள் பார்த்து பொறாமை கொள்ளும்படி வாழக் கூடாது. மூட்டை சுமப்பதைக் கூட சுமக்க முடியாததால்தான் தூக்காமல் விடுகிறேனே தவிர, அதை இழிவாகக் கருதி அல்ல’’ (‘‘மூட்டை தூக்கும் போது பாரத்தினால் கஷ்டப்பட்டு இருக்கிறேனே தவிர, நான் ஒரு போதும் வெட்கத்தினால் கஷ்டப்பட்டது இல்லை.’’) என்று சொல்பவர்!
எவ்வளவு அருமையான வாழ்வியல் பாடம்! பொது வாழ்விற்கு வருகிறவர்களுக்கு சிறந்த கலங்கரை வெளிச்சம்!
தந்தை பெரியாரின் இந்த ‘பத்தியத்தை’ கடைப்பிடிக்க முடியாதவர்கள் பலரும் பயணத்தி லிருந்து பாதை மாறி, வசதி என்ற வசந்தத்தை நோக்கி தேன் குடிக்கச் செல்லும் வண்டுகளாகி விடுகின்றனர்.
அவர் வைத்த கடினமான பத்தியங்களில் தேறியதால்தான் பயணம் முழுவதும் எந்தப் பிரச்சினையும் இன்றி தேறினேன்.’’
lll
‘‘அய்யாவிடம் பணியாற்றியதில் நான் பொது வாழ்வுக்கான பயிற்சி முழுவதும் பெற்றேன்.
- வருபவர்களை மதித்து வரவேற்றல்.
- மனந்திறந்து பேசுதல்.
- முடிந்த உதவிகளை உடனடியாகச் செய்தல்.
- ஒருவரது ஆற்றலைக் கண்டு, மனந்திறந்து பாராட்டுதல்.
- பொது வாழ்வில் நீண்ட காலம் இருப்பதற்கு சிக்கன வாழ்வு – ஆடம்பரமற்ற வாழ்வு தேவை என்பனவற்றையெல்லாம் அய்யாவிடம் கற்றேன்.
தந்தை பெரியார் சிறைப் பறவை. அநீதியைக் கண்டு சீற்றம் கொள்ளும் தன்மை கொண்டவர்.
அரசியல், சமுதாயக் கருத்துகளில் தனக்கெதிரான கருத்துக் கொண்டவர்களை நாகரிகத்தோடு எதிர்ப்பவர்.
தனக்கு நண்பராக இருந்தாலும் தன் சமுதாயத் திற்குக் கேடு செய்கிறார் என்று உறுதியாகத் தெரிந் தால், நட்பைக்கூட ஒதுக்கி வைத்து, துணிச்சலாக எதிர்ப்பவர். அதற்காக அவர் யாருடனும் விரோதியானதும் இல்லை.
அவரோடு தமிழ்நாடு முழுவதும் பலமுறை சுற்றியபோது இந்தப் பாடங்களை அவரிடம் கற்றேன்.
பிரதமரோ, முதலமைச்சரோ அல்லது நீதிபதியோ, அவர்களின் பதவிபற்றி அஞ்சாமல் அவர் தன் கருத்துகளைக் கூறி வந்ததை நான் அருகில் இருந்து பார்த்துப் பார்த்து பலமுறை வியந்து போய் இருக்கிறேன்.’’
lll
‘‘ராஜாஜி என்றழைக்கப்படும் திரு.சி. இராஜ கோபாலாச்சாரியாரிடம் க. இராசாராம் நன்கு பழகியவர். அவரது (இராஜாஜி) மகன் சி.ஆர். நரசிம்மனை நாடாளுமன்றத் தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் தோற்கடித்தவர் க. இராசாராம் என்பதை மறந்து ஆச்சாரியார் தன்னிடம் காட்டிய அன்பைப் பெருமையுடன் கூறும் அவர் ஓர் அருமையான செய்தியைக் குறிப்பிடுகிறார்.
‘‘பலரைப் பற்றி என்னிடம் (ராஜாஜி) மனந் திறந்து பேசினார். தன் நண்பர் தந்தை பெரியாரைப்பற்றிச் சொல்லும்போது, ‘ அவரிடம் சேரும் ஒவ்வொரு காசும் பொதுவுக்குத்தான் சேருமே தவிர, சொந்தத்துக்கு வைத்துக் கொள்ள மாட்டார். பண விஷயத்தில் என் நண்பர் நாயக்கரைப் போல் நாணயமானவர்களைக் காண்பது அரிது’ என்று சொன்னது கல்லால் அடித்து வைத்த சாசனம் போல் இருந்தது!’’
இப்படி பல்வேறு அறிய வேண்டிய அரிய செய்தி களையும், கற்க வேண்டிய பாடங்கள் – அனைத்து பொதுத் தொண்டறங்களையும் பின்பற்றினால் எப்படி இருக்கும்? என்று சிந்தித்துக் கொண்டே இக்கட்டுரையை முடிப்போம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக