பக்கங்கள்

திங்கள், 26 மார்ச், 2018

நன்றியை எதிர்பார்க்காதீர்!

வாழ்க்கையை தனக்காக மட்டும் வாழாமல் பிறர்க்காக வாழ்ந்து, தொண்டறத்தின் தூய்மையின் எல்லைக்குச் சென்ற  - செல்லும் எவரும் நன்றியை எதிர்பார்க்க மாட்டார்கள், எதிர்பார்த்து ஏமாறவும் தேவையில்லை.

1933இல் 'குடிஅரசு' தலையங்கம் ஒன்றில் - தந்தை பெரியார் எழுதிய சில வரிகள் - காலத்தாலும் அழிக்கப்பட முடியாத கருத்துரைப் பெட்டகமாகும்!

"நன்றி என்பது பயனடைந்தவர் காட்ட வேண்டிய பண்பே தவிர, உதவி செய்தவர்கள் எதிர்பார்க்கக் கூடாத ஒன்று ஆகும்; எதிர்பார்ப்பது சிறுமைக் குணமேயாகும்!" - தந்தை பெரியார்

அதை தனது இயக்கத்திற்கான நடைமுறைக் கோட்பாடாகவே தந்தை  பெரியார் அவர்கள் ஆக்கி, நமது இயக்கம் நன்றியை எதிர்பார்க்காத தொடர் பணி Thankless Job - என்ற தத்துவத்தை உட்கொண்டு இயங்குவது என்று  கூறினார்.

இது இன்றும் உண்மை என்பதற்கு ஒரு சாதாரண  இரண்டு எடுத்துக்காட்டுகள்!

1.  தந்தை பெரியார் அவர்களால் 83 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப் பெற்ற பகுத்தறிவு சுயமரியாதை நாளேடு  'விடுதலை!' "உலகின் பகுத்தறிவு நாளேடு 'விடுதலை'தான்" என்று உலக மனிதநேயர் அமைப்பின் தலைவராக இருந்த, நார்வே நாட்டினைச் சேர்ந்த லெவிபிராகல்  அவர்கள் உரையாற்றும்போது குறிப் பிட்டாரே!

அந்நாளேடு இன்று பல லட்சக்கணக்கில் அச்சிட்டு செல்ல வேண்டும் - தமிழர்களுக்கு நன்றி உணர்வு இருந்தால்!

'தமிழன் இல்லம்' என்பதற்கு அடையாளம் 'விடுதலை' அந்த வீட்டில் இருப்பதே என்றார் தவத்திரு. குன்றக்குடி அடிகளார் முன்பு!

'விடுதலை'யால் - பெரியாரால் -இயக்கத்தால் நேரிடைப் பயன் அடைந்தவர்கள் மட்டும் வாங்கி னால்கூட, இந்நேரம் அது பல லட்சம் பிரதிகள் - இப்போது இருப்பதுபோல 'பல ஆயிரங்கள்' என்ற நிலை மாறி உயர்ந்திருக்குமே!

அதுபோலவே பெரியார் இயக்கத்தினால், தொண்டறத்தால் பயன் பெற்றவர்கள், மாதா மாதம் ஒரு சிறு சதவிகிதம் - ஒன்றிலிருந்து மூன்று சதவிகிதம் நன்கொடை அளித்து வந்தாலே, அதன் நட்டத்தை ஈடு செய்ய முடியுமே!

பாதிக்கப்பட்டவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவை நாடுவதுபோல - பயனடைவதுபோல - வந்து, நோய் குணமானதும்  'பறந்தே' விடுவர்!

சுய காரியப் புலிகள், இருப்பதை நிலைக்க வைத்த வர்கள் முக்கியமல்ல; பறப்பதற்குக் குறி வைக்கும் பரம பத ஏணிகள் தான் முக்கியம் என்பவர்களே உலகில் எங்கும்!

தேடித் தேடிப் பார்த்தாலும் 'ஒயாசிஸ்' போல நன்றி சொல்வோர், படர்ந்துள்ள பாலையில் சிலருண்டு!

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு                           குறள்-110

2. மேலை நாடுகளில் குழந்தைகளுக்கு - 'பிஞ்சு களுக்கு' அய்ந்து ஆங்கிலச் சொற்களை கட்டாயம் மிகச் சிறு வயதிலேயே - மொழிப் பாடத் துவக்கம் போல சொல்லிக் கொடுப்பதில் 'ஜிலீணீஸீளீ' - 'நன்றி' என்று எப்போதும் தவறாது சொல்ல வேண்டும் யார்உ.தவி செய்தாலும் என்பதாகும்.

குழந்தைப் பருவப் பாடங்கள் - - Good Morning 
தொடங்கி Thanksவரை முக்கிய சொற்கள்!

பரிசு வழங்கும் நிகழ்ச்சிகளில்கூட நான் கூர்ந்து கவனித்த ஒன்று;  பரிசு பெறும் இருபாலருள்ளும்  'நன்றி' என்ற சொல்லை பயன்படுத்துபவர்கள் வெகுக் குறைவு!

நன்றி காட்டுவது தமிழனுக்கு நஞ்சு! என்றும் சொன்ன பெரியார் மக்களை எப்படித் தன் அறிவுத் தராசில் சரியாக எடை போட்டுள்ளார், பார்த்தீர்களா!

 - கி.வீரமணி

- விடுதலை நாளேடு, 26.3.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக