பக்கங்கள்

வியாழன், 17 மே, 2018

பாம்பின் விஷத்தை விடக் கொடியது மூடநம்பிக்கை!



பாமர மக்கள் எவ்வளவு எளிதில் மூடநம்பிக்கை களுக்கு ஆளாகி தங்களது வாழ்க்கையையே பலி கொடுத்துக் கொண்டுள்ளனர்.

நாட்டில் அறிவியல் பாடம் சொல்லிக் கொடுக்கப் படுகிறதே தவிர, அறிவியல் மனப்பாங்கு (scientific temper) மக்கள் மனதில் ஆழமாக வேரூன்றிட எந்த முயற்சியும் செய்யாததோடு, பழைய கந்தல் புராணப் புளுகுகளுக்கெல்லாம் அறிவியல் முலாம் பூசிடவும் முயற்சிகளை இப்போதுள்ள பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். கட்சியினர் செய்து,  உலக விஞ்ஞானிகளையே அதிர்ச்சியும், அருவருப்பும் ஏற்படுத்தி தலைகுனியச் செய்து வருவது இன்னும் மோசம்.

குதிரை, கீழே தள்ளியது மட்டுமின்றி குழியும் பறித்ததை  போன்று உள்ளது இந்த பழமைக்கு பொருத்தமில்லாத மேல் பூச்சுப் பூசுவது!

நேற்றைய  'தின இதழ்' நாளேட்டில் வெளிவந்துள்ள ஒரு செய்தி. மனிதநேயம் உள்ள அனைவரது உள்ளங்களையும் நோகடிக்கும் செய்தி. அப்படியே தருகிறோம்.

"பாம்பு கடித்த பெண்ணின் உயிரைப் பறித்த மூடநம்பிக்கை!" என்ற தலைப்பில் வெளிவந்துள்ள முழுச் செய்தி:

"நாளுக்கு நாள் மக்களின் மூட நம்பிக்கைகளுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது. குறுக்கு வழியில் நடக்க வேண்டும், உரிய காலத்திற்கு, முன்னரே நமக்கு கிடைக்க வேண்டும் . ஓவர் நைட்டி ல்  ஒபாமா   ஆகிட  வேண்டும் என்று  நினைப்பவர்களை மனதில் வைத்துக் கொண்டு புரளிகளை கிளப்பி விட்டு சம்பாதிப்பதற்கென்றே சிலர் உலா வரு கிறார்கள். அவர்களிடமிருந்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது மட்டுமல்ல, சற்று விழிப் புணர்வுடன் இருக்க வேண்டியதும் அவசியமாகும். அவர்களை கண் மூடித்தனமாக நம்பினால் நீங்கள் உங்களுடைய உயிரைக்கூட பலிகொடுக்க நேரிட லாம். கோமியத்தில், மாட்டுச் சாணத்தில் ஏராளமான சத்துக்கள் இருக்கிறது. அதைக் குடித்தால் சர்வரோக நிவாரணியாக செயல்படும் என்ற பில்டப்புகளை நம்பி இங்கே ஒருவர் தன் மனைவியையே பறிகொடுத்திருக்கிறார்....

உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த முகேஷ். என்பவருக்கு தேவேந்திரி என்ற மனைவியும் அய்ந்து குழந்தைகளும் இருக்கி றார்கள். கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். அவ்வப்போது தேவேந்திரியும் தன்னால் இயன்ற வேலைகளை செய்து பொருளீட்டி வந்திருக்கிறார். விறகடுப்பினை தான் முகேஷ் வீட்டில் பயன்படுத்துவார்கள். அன்று முகேஷ் வேலைக்கு கிளம்பிட, அடுப்பெரிக்க விறகு வேண்டும் என்று சொல்லி. வீட்டிற்கு அருகில் இருந்த முள் காட்டிற்குள்   விறகு வெட்டி வர சென்றிருக்கிறார் தேவேந்திரி.

விறகினை வெட்டி  வெட்டி  கட்டி தலையில்  தூக்கி  வைக்கும் சமயத்தில் எங்கிருந்தோ வந்த கரும் பாம்பு ஒன்று தேவேந்திரியை கொத்தியிருக்கிறது. அதைப்  பார்த்து  பதறிப் போன  தேவேந்திரி விறகினை அங்கேயே  போட்டு  விட்டு உயிரை காப்பாற்றிக் கொள்ள ஓடியிருக்கிறார்.

முதலில் யாரிடம் சொல்வது என்று தெரியாமல் வீட்டிற்கு ஓடியவரை இடைமறித்த கணவர், எங்கே இப்படி அவசரமாக ஓடுகிறாய் என்று கேட்டிருக்கிறார், கதையைச் சொல்ல.... மருத்துவமனைக்குச் செல்ல லாம் என்றிருக்கிறார் மனைவி.

இல்லை. அதெல்லாம் வேலைக்கு ஆகாது, பாம்பின் விஷத்தை எடுக்க பாம்பாட்டி தான் சிறந்தவர். அதனால் நாம் உடனடியாக இப்போது செல்ல வேண்டியது மருத்துவரிடம் அல்ல, பாம்பாட்டியிடம் என்று சொல்லி அவ்வூரின் பாம்பாட் டியான முராரேவிடம் சென்றிருக்கிறார்கள். பாம்பு கடித்து இவ்வளவு நேரம் ஆகிவிட்டதா? அப்படியென்றால் விஷம் பரவியிருக்குமே என்கிறார் முராரே...

இருவருக்கும் பயம்.... இப்போது என்ன செய்ய வேண்டும் சொல்லுங்க, என் உயிரைக் காப்பாற்ற வழியே இல்லையா என்று கெஞ்சுகிறாள் தேவேந்திரி. சிறிது நேரம் யோசித்த பாம்பாட்டி முராரே... இருக்கிறது. இதற்கு ஒரே வழி தான் இருக்கு. இதைச் செய்தால் உடலில் கலந்திருக்கும் பாம்பின் மொத்த விஷத்தையும் எடுத்துவிடலாம் என்கிறார்.

இருவருக்குமே  மிகுந்த சந்தோஷம்.

இதன்  பிறகு அந்த விபரீதமான செயலில் இறங்குகிறார்கள். பாம்பாட்டி முராரேவை அழைத்துக் கொண்டு தன் வீட்டிற்கு வருகிறார் முகேஷ்.

அங்கே வாசலில் மனைவி படுத்துக் கொள்ள தொழுவத்தில் இருக்கிற மாட்டுச் சாணத்தை எடுத்து வந்து மனைவியின் உடல் முழுவதும் பூசி மூடுகிறார் முகேஷ்.

மக்கள் கூட்டம் கூடிவிட்டார்கள்... என்னாச்சு? என்ன செய்கிறாய் நீ.... என்ன நடந்தது என்று ஆயிரம் கேள்விகள்... சிலருக்கு பதில் சொன்னார். சிறிது நேரத்தில் தேவேந்திரி உடல் முழுவதும் மாட்டுச் சாணத்தால்  மூடப்பட்டிருந்தது.

இப்போது அதன் அருகில் வந்து அமர்ந்த பாம்பாட்டி முராரே மந்திரங்களை சொல்ல ஆரம் பித்தார்.

சுமார் 75 நிமிடங்கள் மந்திரங்கள் சொல்லி விட்டு இப்போது இந்த சாணத்தை கலைத்துவிட்டுப் பார்.

உன் மனைவி துள்ளியெழுந்துவிடுவாள் என்று சிரித்திருக்கிறார் முராரே.

முகேஷும் அவசர அவசரமாக மனைவி உடல் மீது அப்பிய மாட்டுச் சாணத்தை எல்லாம் கலைத்துப் பார்த்திருக்கிறார்.

தட்டி எழுப்பியிருக்கிறார், தண்ணீர் தெளித் திருக்கிறார் ஆனால் தேவேந்திரி எழுந்திருக்கவே யில்லை. பிறகு தான் தெரிந்தது, மாட்டுச் சாணத்தை வைத்து மூடிய போதே மூச்சுத் திணறி தேவேந்திரி இறந்துவிட்டார்.

இந்த மருந்தை அரைத்துக் கொடுக்கிறோம், அதை குடிக்கச் சொல், இறுக்கமாக கயிரை முதலில் கட்டு, ஆம்புலன்ஸுக்கு போன் செய்... என்று நாங்கள் எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம். ஆனால் முகேஷ் கேட்கவேயில்லை என்கிறார்கள் அதை வேடிக்கை பார்த்த மக்கள். இப்படி நடக்கும் என்று எதிர் பார்க்கவேயில்லை, தேவேந்திரி பிழைத்துக் கொள்வார் என்று தான் நினைத்தேன். ஆனால் இப்படி நடந்துவிட்டது என்று எஸ்கேப் ஆகிவிட்டார் முராரே.

இப்போது தேவேந்திரியின் அய்ந்து குழந்தை களும் தாயை இழந்து அனாதைகளாகி விட்டார்கள்." என்பதுதான் அந்த செய்தி!

பாம்பின் விஷத்தைவிட, மூடநம்பிக்கையின் விஷம் எவ்வளவு ஆபத்தானது பார்த்தீர்களா? திராவிடர் கழகமும், பகுத்தறிவாளர் கழகமும் தமிழ்நாட்டில் செய்து வரும் மூடநம்பிக்கை எதிர்ப்பு - ஒழிப்புப் பிரச்சாரம் எவ்வளவு தேவையானதொரு பிரச்சாரம் என்பதை இப்போதாவது எண்ணிப் பாருங்கள் - முடிந்தவரை மூடநம்பிக்கைகளின் முதுகுத் தோலை உரியுங்கள்!

'நாகராஜா' என்று பால் வார்க்கும் பக்த சிரோன் மணிகளும் இதைப் படித்து உய்த்து உண்மையை உணர்வார்களாக

- விடுதலை நாளேடு, 14.5.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக