பக்கங்கள்

வெள்ளி, 11 மே, 2018

அருகிலேயே அந்த ஏழு அதிசயங்கள்!



ஒரு வகுப்பறை - அதில் ஆசிரியர் மாணவர்களிடம் கேள்வி கேட்கிறார்.

உலகின் ஏழு அதிசயங்கள் என்ன? எவை எவை?

மாணவர்களில் பலரும் உடனே பட்டியலிட்டு விடையளிக்கிறார்கள். விவாதமும் தொடங்கியது.

1.  எகிப்தின் 'பிரமிடு'கள்

2. தாஜ்மகால்

3. தி கிராண்ட்கேரியன்

4. பனாமா கால்வாய்

5. சீனப் பெருஞ்சுவர்

6. பாரிசில் உள்ள மாதா கோயில் (பாசிலிக்கா)

7. எம்பயர் ஸ்டேட் பில்டிங் (நியூயார்க்)

இப்படிப் பலரும் பதில் அளித்துப் பட்டியலிட்டனர்.

இதில் சில சில மாறுபட்ட கருத்துகளும் அங்கே இருந்தன.

ஒரே ஒரு மாணவி மட்டும் இத்தகைய பட்டியல் - 7 அதிசயங்கள் பற்றிய கலகலப்பு வாதத்தில் கலந்து கொள்ளாமல் அமைதியாக அமர்ந்திருந்தார்.

இதை கவனித்த ஆசிரியர், அம் மாணவியிடம் வந்து, 'ஏனம்மா நீங்கள் மட்டும் இந்த விவாதத்தில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியது போல உள்ளீர்கள்' என்று கேட்டார்.

அமைதியாக அமர்ந்திருந்த அந்த மாணவி தனது மவுனத்தைக் கலைத்தார். 'அய்யா இவர்கள் தந்த உலகின் ஏழு  அதிசயங்கள் என்ற இந்தப் பட்டியலில் எனக்கு உடன்பாடில்லை'.

"எனது சிந்தனை ஓட்டம் வேறுவிதமாக உள்ளது!" என்றார்.

"அப்படியா உங்களுக்கு அதில் உடன்பாடில்லையா? பரவாயில்லை. நீங்கள் ஏதாவது தனித்தப் பட்டியலைப் பற்றிச் சிந்தித்துள்ளீர்களா? அப்படியானால் அதனை இந்த வகுப்பில் தாராளமாகச் சொல்லலாம்; மாறுபட்ட கருத்தானாலும் பரிசீலிக்கலாம்; தாராளமாக அதை இந்த வகுப்பில் கூறலாமே" என்றார்!

"என்னைப் பொருத்தவரை ஏழு அதிசயங்களுக்காக உலகத்தைச் சுற்றிச் சுற்றி ஓடி, தேடிட வேண்டாம்.

சரியாக யோசித்தால் நம் ஒவ்வொரு மனிதருள்ளும் அந்த ஏழு அதிசயங்கள் நிலை கொண்டுதான் இருக்கின்றன! எடுத்துக்காட்டாக, -

1. தொடுதல் (to touch)

2. சுவைத்தல் (to taste)

3. பார்த்தல் (to see)

4. கேட்டல் (to hear)

5. உணர்தல் (to feel)

6. சிரித்தல் (to laugh)

7. நேசித்தல் (to love)

இவைகள் எல்லாம் மனிதர்களுக்கு அவர்களிடமே உள்ள ஏழு அதிசயங்கள்தான்!

தொலை தூர நாடுகளுக்கும், நகரங்களுக்கும் நாம் அலைந்து திரிந்து, பறந்து ஏன் சுற்றுலா செல்ல வேண்டும்!

எதுவுமே அருகில் இருந்து எளிதில் கிடைத்தால், அதன் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொண்டு மகிழாமல் புறந்தள்ளி விடுகிறோம்.

எனவே வேகமாக ஓடாதீர்கள், மெல்ல நடங்கள் - நின்று யோசித்து, உணர்ந்து, கண்டு கேட்டு, உண்டு உயிர்த்து, சிரித்து மகிழ்ந்து, அன்பும், நேசமும் அனைவரிடமும் காட்டுங்கள்"

என்னே தெளிவான, துணிவான பதில்!

அருகில் இருப்பதால் எவரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள்.

எளிதில் கிடைப்பதால் அரிதானதல்ல என்று எண்ணாதீர்கள்!

எளிமையாக இருப்பவர்களை ஏளனப் பார்வையால் கொன்று விடாதீர்கள்!

கள்ளங்கபடமற்ற சிரிப்பால் நோயை விரட்டுங்கள்!

எல்லாவற்றிற்கும் மேலாக இத்தனை "அதிசயங் களையும்" உங்களுக்குள்ளேயே வைத்து தனிமைப் படுத்தி  விடாமல், ஊர் நலம், உலக நலம் ஓம்பப் பயன்படுத்தி அறத்தால் வரும் இன்பத்தை அள்ளிப் பருகுங்கள்; தள்ளிப் போடாதீர்!

(இணையத்தில் வந்த ஒரு துணுக்கை வைத்து எழுதப்பட்டது).

-   விடுதலை நாளேடு, 10.5.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக