பக்கங்கள்

திங்கள், 21 அக்டோபர், 2019

நொறுக்குத் தீனி தேவையே - ஆனால்...!

நமது  நல்வாழ்வுக்கான அறிவுரை கூறுவோர் பலரும் உணவு எடுத்துக் கொள்ளுவது குறிப் பிட்ட நேரத்தில் என்பதை ஒரு முக்கிய பழக்கமாக்கிக் கொள்ளுவது அவசியம் என்று அறிவுரை கூறுவார்கள்.

எனது (மறைந்த) நண்பர் புலவர் பேராசிரியர்

ந. இராமநாதன் கையில் குடையோடு திடலிலிருந்து மதிய உணவுக்குச் செல்லுகிறார் எனில் பகல் மணி 12 என்று பொருள்.

அதுபோலவே தலைமைப் பொறியாளராக இருந்து (நெடுஞ்சாலைத்துறையில்) ஓய்வு பெற்று அதன்பின் பெரியார் திடலில் மூதறிஞர் குழுவின் செயலாளராக நீண்ட  காலம் தொண்டாற்றி, நமக்குப் பெரிதும்  தோன்றாத் துணையாக இருந்த பேராசிரியர் அய்யாசாமி அவர்கள் சரியாக மணி 12.40க்குப் புறப்பட்டு, வீட்டில் சரியாக 1 மணிக்கெல்லாம் மதிய உணவு சாப்பிடுவார்.

அதிகாரிகளாக இருக்கும் பெருமக்களுக்கு அது எளிதாக அமையக் கூடும்; ஆனால் பொது வாழ்வில் இருக்கும் நம்மைப் போன்றவர்களுக்கு அது அவ்வளவு சாத்தியமாகாது; காரணம் பலரும் நம்மைச் சந்திக்க வரும்போது நம்மைப் போன்ற பொதுத் தொண்டர்கள் கடிகார முள் ளினைக் காட்டிவிட்டு கிளம்பிவிட முடிய தல்லவா? 'குடி செய்வார்க்கில்லை பருவம்'  - இல்லையா?

இந்த உணவு நேரங்களுக்கு இடையில் - காலைச் சிற்றுண்டி, பகல் உணவு, மாலைத் தேநீர், இரவு உணவு - இவைகளுக்கு இடையே சிறு தீனி கூடாது; அது உடலைப் பருக்க வைத்து, நோய்த் துன்பங்களுக்கு ஆட்படுத்துகிறது என்று கூறுகிறார்கள்.

ஆனால் அண்மைக் காலத்தில் இடை நேரங்களில் பசியுடன் இருக்க வேண்டிய அவசியமில்லை; சிறு தீனிகள்  - நொறுக்குத் தீனிகள் (Snacks) சாப்பிடுவது உடல் நலத்தைக் கெடுக்காது; மாறாக பாதுகாக்கவும், வளர்க் கவுமே செய்யும் என்ற கருத்தை வலியுறுத்தி பிரபல மாத ஏடான 'ரீடர்ஸ் டைஜெஸ்ட்'  (Reader's Digest) ஏட்டில் ஒரு கட்டுரையை அமெரிக்காவில் டாக்டர் சோம இளங்கோவன் - சரோஜா வாழ்விணையரின் இல்லத்தில் படித்தேன். சுவைத்தேன்.

'பேலியோ டையட்'  ('Paleo diet') என்றெல் லாம் - கார்ப்போ அய்ட்ரேட் என்ற மாவுச் சத்து தவிர்க்கும் உணவெல்லாம்கூட இப்போது பிரபலமாகி வருவதோடு, நமது தோழர்களில்கூட பலர் அதனைக் கடைப்பிடித்து, தங்களது எடையைக் குறைத்து நலமாக வாழுகிறார்கள்.

உணவுமுறை அவரவர்கள் உடல் நலம், வசதி வாய்ப்பு, எண்ணத் தெளிவு, துணிவினைப் பொறுத்தது. எனவே மருத்துவர்களைக் கேட்பது முக்கியம்தான் என்றாலும் உங்கள் உடலுக்கேற்றவாறு அவை ஏற்கிறதா மாற்றங்களை - ஆம் என்றால் சரி. இல்லை என்றால் உங்கள் முடிவு எப்படியோ அப்படி + மருத்துவ ஆலோசனை!

சிறு தீனி - நொறுக்குத் தீனி - நமது எடையைக் குறைக்கவும்கூட உதவுகிறது என்கிறார் கட்டுரையாளர் டான்யேனேக்.

உங்கள் உடலைக் கேளுங்கள் என்கிறார் பிரபல மருத்துவ நிபுணர் ராபர்ட் கிரஹாம் MD., MPH.

இந்த மருத்துவர் கூறுகிறார்.

மூன்று தடவை உணவும், இடைவேளைகளில் இரண்டு முறை நொறுக்குத் தீனிகளும் (Snacks) எடுத்துக் கொள்ளுவது உடல் நலத்தைப் பலப் படுத்தும் என்கிறார் இந்த மருத்துவ நிபுணர்.

பழைய சிறு தீனி களை, சிப்ஸ் (Chips), குக்கீஸ் (Cookies) என்ற கேக்குகள் வகை ரத்தச் சர்க்கரையை அவை கூட்டும் என்ப தால் அவற்றைத் தவிர்த்து விடுங்கள்.

Fibre - rich foods  என்ற நார்ச்சத்து கலந்த தீனி வகையறாக்கள் நமக்குப் பெரிதும் உடல் நலத்திற்குத் துணை நிற்கின்றன. இதில் புரதச்சத்து, மெக்னீஷியம், கால்சியம் போன்றவைகளும் கூட கிடைக் கின்றன. நல்ல கொலஸ்ட்ரால் (Good Cholesterol) இதனால் கூட வாய்ப்பு உண்டு. தயிர் நல்ல சத்துணவு; Greek Yogurt, Cheese  வகைகள்  மறதி நோயினைத் (Alzheimer's) தடுக்க உதவுகின்றன. புது வகை காய்கறிகள், அவகேடோ, அவித்த முட்டை, பிளாக் பெர்ரிஸ்,   பாதாம் கொட்டைகள் வால்நட்ஸ் போன்ற வகையறாக்களை இடைத் தீனியாகப் பயன் படுத்துங்கள். ஆனால் ஒன்றை மறந்துவிடா தீர்கள்; அதுவும் அளவோடுதான் இருக்க வேண்டும்!  அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சுதானே!

நடு இரவில், பிரிட்ஜ்ஜைத் திறந்து சிறு தீனிகளைத் தேடி உண்ணும் பழக்கம் இருந்தால் அதை மட்டும் நிறுத்திக் கொள்ளுங்கள். கூடுமான வரை இரவில் எழுந்து சிறுநீர் கழிக்க கழிப்பறை சென்று திரும்புகையில், பிரிட்ஜ்  - குளிர் சாதனப் பெட்டி பக்கம் திரும்பாமல், தண்ணீர் - வெந்நீரை - படுக்கை பக்கத்தில் வைத்துக் கொண்டு குடித்து விட்டு மீண்டும் படுத்து உறங்கி எழுந்திருக்கும்போது உடல் லேசாக இருக்கும். அது மலங் கழிவதற்கு துணை நிற்கும்.

மலச்சிக்கல் இல்லையானால் மனச் சிக்கலும் இல்லைதானே! என்ன...?!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக